Friday, September 24, 2010

எந்திரன் திரைப்படம்: ரிச்மண்ட்'ல் - Enthiran Premiere Show in Richmond!!!

Enthiran Movie will be Screened in Richmond!!

ரிச்மண்ட் தமிழ் சங்கம் எந்திரன் திரைப்படத்தை ரிச்மண்ட்'ல் திரையிடவுள்ளது!!








Tickets will be available online on 09/25/10 at  
Fandango.com  or Carmike.com or 

You can purchase At the Box Office.





For Other Details Contact: 804-502-8771 Or 804-502-8068 Or 804-303-6416

Wednesday, September 08, 2010

பித்தனின் கிறுக்கல்கள் - 38

பல மாதங்களுக்குப் பிறகு கிறுக்கத் துவங்குவதால் சமீபத்தில் நடந்த சில தமாஷ்களைப் பற்றி எழுதி இந்தப் பதிவை சற்று லைட்டாக வைக்கலாம் என்றிருக்கிறேன்.

டமாஸ் நெ.1:

உலகச் செம்மொழி மாநாடு:

இது ஒரு கால விரயம் என்றும், பண விரயம் என்றும் பலர் எழுதி குவித்துவிட்டார்கள். இந்த மாநாட்டினால் என்ன பயன் என்று எதற்காக இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் அவரை கூப்பிடவில்லை, இவரைக் கூப்பிடவில்லை, அவருக்கு மரியாதை செய்யவில்லை, இவருக்கு மரியாதை செய்யவில்லை என்று புகார்கள் வேறு வந்து கொண்டேயிருக்கிறது. நடந்தது ஒரு அதிகார மமதையில் இருக்கும் ஒரு கழகத்தலைவரின் சுயதம்பட்டத்திற்காக நடத்தப் பட்ட கூத்து. பக்க வாத்தியமாக பல விதூஷகர்களை வைத்து நட்த்தப்பட்ட ஒரு டமாஸ், இதில் காரண காரியத்தை தேடுவதுதான் முதல் கால விரயம். இந்த டமாஸ்களையும் மீறி ஒரு சில நல்ல தமிழ் ஆய்வுகளும், சில கருத்தரங்கங்களும் நடந்தது என்றும் தெரியவருகிறது. இவைகள் இப்படி ஒரு டமாஸுக்காக காத்திருக்காமல் வருடந்தோரும் நடந்து வருகிறது என்பதும் சில வலைப் பதிவிலிருந்து தெரியவருகிறது.

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Wednesday, June 23, 2010

வாழ்க தமிழ்!

இன்று செம்மொழி மாநாடு ஆரம்பம்
ஏதாவது செய்ய வேண்டுமே?
உறங்கிய சிங்கம்  (சொல்லவே இல்லை...)  சிலிர்த்து எழுந்தது..
நாமும் பங்களிக்க வேண்டாமா?
கவிதையா? கட்டுரையா? கதையா
என்ன செய்யலாம்?
வரலாற்று நிகழ்வில் நம் பதிவு - நல்ல வாய்ப்பு..
நழுவ விடலாமா?
கவிதையா? கட்டுரையா? கதையா
முடிவு செய்வதற்குள் மாநாடு தொடங்கி.... முதல் நாள் முடிந்தது!
கருவை முடிவு செய்து... கருத்தாக்கம் செய்துவிடலாம்
அவசரம் வேண்டாம் - இன்னும் மூன்று நாட்கள் உள்ளன...
எப்படியும் எழுதிவிடுவேன்
அதுவரை...
மகிழ்ச்சி தொடரட்டும்!
சோகம் வேண்டாம் !!

(சென்னையிலிருந்து என் அண்ணன் முகுந்தன் எழுதியது)

Monday, June 07, 2010

வீண் வழக்குகள், வெட்டி செலவுகள்

சென்ற 27-5-2010 தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி அதன் சாரம் இதுதான்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் கருட வாகனம் புறப்படும் தினத்தன்று கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள்(ஒரு தென்கலை வைணவ ஆச்சாரியார்) சன்னதியில் கருட வாகனத்தை நிறுத்தி அவருக்கு (மணவாள மாமுனிக்கு ) சடாரி மரியாதை நடைபெறுகிறது. இந்த வழக்கம் நீண்ட நாட்களாக அமுலில் உள்ளது.
இந்த சடாரி மரியாதை மனவாள மாமுனிக்கு செய்யக்கூடாது, அது வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று கூறி காஞ்சிபுர நீதிமன்றத்தில் வடகலை பிரிவை சேர்ந்த சீனிவாசராகவன் என்பவர் 1991-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார்.
காஞ்சிபுர நீதிமன்றம் வழக்கை விசாரித்துவிட்டு அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. . அவரும் வடகலை வைஷ்ணவ சம்பிரதாய சபை என்ற அமைப்பும் சேர்ந்து காஞ்சிபுர நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். உயர்நீதி மன்றமும் இவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உடனே அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர்.

19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியிருக்கிறது. .மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது மட்டும் அல்லாமல் கீழ் நீதிமன்றத்து தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியிருக்கிறது.

மணவாள மாமுனிக்கு சடாரி மரியாதை செய்யும் வழக்கம் சரியானதே என்றும் அது எந்த வகையிலும் வைணவ சம்பிரதாயத்துக்கு எதிரானது அல்ல என்றும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. மேலும் வழக்காடியவர்களின் குறுகிய நோக்கத்தையும் தீர்ப்பில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

மணவாளமாமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தென்கலை வைணவ பிரிவின் முக்கிய ஆசாரியர்களில் ஒருவர்.

இன்றும் வைணவர்கள் தினசரி துதிக்கும் நித்யானுசந்தானம் என்ற நூலில் உள்ள உபதேச ரத்னமாலை என்ற பாசுரங்களையும் திருவாய்மொழி நூற்றந்தாதி முதலிய பாசுரங்களையும் இவர்தான் இயற்றினார், யதிராஜவிம்சதி என்ற வடமொழி நூலையும் இவர் இயற்றியிருக்கிறார். சில தொகுத்து வெளியிட்டிருக்கிறார். சில முக்கிய வடமொழி நூல்களுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்.

சில கால இல்வாழ்க்கைக்கு பிறகு துறவறம் பூண்ட மணவாளமாமுனிகள் பல திருக்கோயில்களை புதிப்பித்து ,சமயப்பிரசாரம் செய்து வாழ்ந்து எழுபதாவது வயதில் அமரர் ஆனார். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள அழ்வார்த்திருனகரியில் பிறந்த மணவாள மாமுனிகள் ஆந்திராவில் திருப்பதிக்கு வடக்கே சென்று நான்கு வைணவ மடங்களை தோற்றுவித்தார். தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பல சமூகத்தினர் வைணவத்தை தழுவ வழி செய்தார்.

இவர் போன்ற பல ஆசாரியர்களுக்கு திருவிழா நாட்களில் சடாரி மரியாதை செய்யும் முறை பல வைணவ தலங்களில் வழக்கில் உள்ளது.
வைணவ ஒரு பிரிவினர் குறிப்பிட்ட ஆச்சாரியார் மாற்று பிரிவை சேர்ந்தவர் என்பதற்காக அந்த முறையை எதிர்த்து 19 ஆண்டு காலம் வழக்காடியுள்ளதை பார்க்கும்போது நாம் என்ன நினைப்பது? இந்த வழக்கில் எவ்வளவு பேருடைய பணமும் காலமும் விரயமாகி இருக்கிறது என்று எண்ணி பார்த்தால் வியப்பாக இருக்கும்.

பொதுவாக இத்தகைய விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு செல்பவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். பலர் ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள். பலர் வழக்கறிஞர்கள். டாக்டர்கள். மற்ற பல துறைகளில் உள்ள பணக்காரர்கள். இவர்களுக்குத்தான் இது போன்ற மத விஷயங்களில் நேரத்தை செலவிடவும் சிறு வேற்றுமையை கூட பெரிது படுத்தி அதை பூதாகாரமாக ஆக்கி ஊரை இரண்டுபடுத்தி விளையாட நேரம் உண்டு. இவர்களில் பலர் இதைத்தான் ஆன்மீகம் என்று நம்புகிறார்கள்.

இந்த விவகாரங்களில் காஞ்சிபுரம் பேர் போன ஊர். கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது, எந்த சன்னதியில் எந்த பிரிவினருக்கு முதல் தீர்த்த மரியாதை போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கடந்த காலத்தில் நீதிமன்றம் போய்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது போன்ற சில வழக்குகள் லண்டனில் உள்ள பிரிவிகௌன்சில் வரை சென்றதுண்டு.
இந்த சம்பிரதாய முறைகள் பற்றி காலும் தெரியாமல் தலையும் தெரியாமல் வெள்ளைக்கார நீதிபதி கொடுத்த தீர்ப்பை சொல்லி தர்மம் ஜெயித்தது என்று தனக்கு தானே மகிழ்ந்து போனார்கள். இவர்களெல்லாம் வெள்ளைக்கார துரைமார்களுக்கு அடிமை சேவகம் செய்யவே அவதாரம் எடுத்தவர்கள். இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு வைணவம் விழி பிதுங்கிக்கொடிருக்கிறது.

வைணவ சமயத்தின் இரு பிரிவுகளுக்கு காரணமான தத்துவம் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. இவர்களில் பலர் முரட்டு பக்தர்கள், ஆனால் ஞான சூன்யங்கள். .வெறும் அடையாளத்தையும் குறியீடுகளையும் வைத்து சண்டையிடும் படித்த பேதைகள். தான் என்ற அகம்பாவம் இவர்களிடம் பல உருவங்களில் மதமாக சாதியாக, சாதிப்பிரிவாக வடிவெடுத்து இருக்கிறது.

இந்த படித்த மேதைகள் பத்து பேர் எங்காவது கூடினால் ஒரே வீடிக்கைதான் . அன்றைய ஹிந்து நாளிதழில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தங்களுக்கு தெரிந்த அரசியல் பேசுவார்கள், அரசியல்வாதிகளை எல்லாம் திட்டித் தீர்ப்பார்கள், காலம் கெட்டுப் போச்சு என்று அங்கலாய்த்து கொள்வார்கள். ஆங்கிலம் கலந்த தமிழில் யார் உயர்ந்த குரலில் பேசுகிறாரோ அவரே வாதத்தில் வெற்றி பெற்றதாக நினைத்து மகிழ்ந்து போவார்.

எங்கு பார்த்தாலும் வளர்ந்து விட்ட வன்முறையைப்பற்றி சொல்லி எல்லாவற்றுக்கும் ஒசாமா பின் லேடன் தான் காரணம் என்பார்கள், உண்மையில் இவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு பின்லேடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

மற்ற மதத்தாரை அழிப்பதற்கு துப்பாக்கி ஏந்தும் துணிவு பின்லேடனுக்கு இருக்கிறது. இவர்களுக்கு அந்த துணிவு இல்லை, இதுதான் வித்தியாசம்.

இவர்களெல்லாம் எப்படியாவது தொலையட்டும், இது விஷயமாக நமக்கு தோன்றும் ஒரு முக்கிய கேள்வி இதுதான். இந்த குப்பை வழக்கில் தீர்ப்பு கொடுக்க 19 ஆண்டு கால அவகாசம் தேவையா? எத்தனையோ வழக்குகளை அனுமதிக்கும் போதே தள்ளுபடி செய்யும்போது இந்த வழக்கு எப்படி உச்சநீதி மன்றம் வரை அனுமதிக்கப்பட்டது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பொன்னான நேரத்தை இந்த குப்பை வழக்குகளில் செலவிட வேண்டிய அவசியம் என்ன?அவர்களுக்கு வேறு உருப்படியான வேலை இல்லையா என்று கேட்க தோன்றுகிறது

உச்ச நீதிமன்றத்திலும் பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் பலஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. 20 வருடங்களுக்கு மேலாக தீர்ப்பு ஆகாமல் நிலுவையில் உள்ள வழக்குகளே உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக பத்திரிகை செய்தி வருகிறது.

இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு நினைவுக்கு வருகிறது. டெல்லியில் திலக்நகர் பகுதியில் உபகார் என்ற சினிமா தியட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் இறந்து போனார்கள். இறந்தவர்களில் பலர் இளம் தம்பதியினர், மற்றும் குழந்தைகள். .
அந்த அரங்கத்தின் மின்சார சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணை அறிக்கை கூறியது.

உண்மை என்னவென்றால் டெல்லி மின்சார வாரியம் இந்த அரங்கின் மின்சார அமைப்பு முறையை சோதனை செய்து விட்டு திருப்திகரமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. அதனால் தியேட்டரில் படம திரையிடப்படுவதை தடை செய்து மின்சாரவாரியம் உத்திரவு போட்டது. .வாரியத்தின் உத்திரவை எதிர்த்து தியேட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வாரியத்தின் உத்திரவுக்கு இடைக்கால தடையும் தியேட்டர் நிர்வாகம் பெற்றது. வழக்கு தொடர்ந்தது. 13 ஆண்டு காலமாக வழக்கு நிலுவையில் இருந்தது.

ஒரு நாள் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 50 உயிர்களை பலி கொண்டது. .

13 ஆண்டு காலமாக ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை உத்திரவை மறுபரிசீலனை செய்யக்கூட நேரம் ஒதுக்கவில்லை. இதன் விளைவாக 50 உயிர்கள் பலியாக நீதிமன்றத்தின் தாமதம் காரணமாக அமைந்தது.

JUSTICE DELAYED IS JUSTICE DENIED என்பது மட்டுமல்ல. தாமதமான நீதிமன்ற நடவடிக்கைகள் உயிர் பலியில் முடியும் என்பதற்கு இந்த வழக்கு நல்ல உதாரணம். தாமதத்தால் ஏற்படும் விபரீதங்கள் பல சமயங்களில் தெரியாமல் போய்விடுகிறது.

இப்படி பல வழக்குகள் தாமதம் ஆவதற்கு காரணம் நேரடியாக குப்பையில் சேர்க்கப்படவேண்டிய பல சாதிவெறி மனுக்களுக்கு மரியாதை கொடுத்து அதை வழக்கு ஆவணமாக மாற்றி அதன் மீது வருடக்கணக்கில்
விவாதங்களை அனுமதித்துக் கொண்டிருப்பதுதான் என்று கூறலாம்.

- மு.கோபாலகிருஷ்ணன்

Sunday, May 30, 2010

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்

செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்:




பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரி தமிழ்பாடலுக்கு ஆங்கிலப் பாணியில் இசையமைத்து ஒவ்வொரு கையிலும் இரண்டு, மூன்று விரல்களை நீட்டிக்கொண்டு பாடினால், தமிழே மறந்துவிடும் போலிருக்கிறது.  மீசைக்காரரே  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று சொல்லியிருக்கிறார், நீ என்னடா மடிசஞ்சி என்கிறீர்களா? அதுவும் சரிதான். இது மாதிரி எல்லாம் விரல் நீட்டிக்கொண்டு பாடுவார்கள் என்று தெரிந்திருந்தால், மீசைக்காரர் சேரநாட்டிளம் பெண்களுடன் நிப்பாட்டியிருப்பார் :-) அவர் சொன்னதுக்காத்தானோ கர்நாடக சங்கீதத்தில் சுந்தரத் தெலுங்கை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதெல்லாம் போகட்டும்... செம்மொழி என்றால் என்ன? :-)

மாநாட்டு தீம் சாங்'காம். தீம் சாங்குக்கு செம்மொழித் தமிழில் என்ன? கடைசியில் கலைஞரைக் காண்பிக்காமல் இருந்தால், விட்டிருப்பார்களா? :-)

ஒரு தமிழ் பில்ட்- அப்புக்காக சுடிதாரைத் தவிர்த்திருக்கக்கூடாதா?  (முரளிக்கு தமிழ் நுணுக்கமான மொழின்னு பின்னூட்டம் போட ஒரு பிட் இங்கே. மற்றவர்களுக்கு புரிகிறதோ?)

தாவணியில் போனால், கம்ப்யூட்டர் கம்பெனியில் உள்ளே விடுவார்களோ?? 

Tuesday, May 25, 2010

மீனாவுடன் மிக்சர் - 21 {நல்ல செய்தியா? கிலோ என்ன விலை?}

வர வர காலையில் எழுந்து செய்திகளை பார்க்கவே பயம்மா இருக்கு. படுக்கையிலிருந்து எந்தப் பக்கமா எழுந்தாலும், முக்கியமா என் முகத்தை முதல் வேலையா காலையில் கண்ணாடியில் பாக்கறதை ஞாபகமா தவிர்த்தாலும் கூட தலைப்பு செய்திகள்ல ஏனோ ஒரு நல்ல விஷயம் கூட பார்க்க முடியறதில்லை.

பூகம்பம், சுனாமின்னு இயற்க்கை ஒரு பக்கம் ஆக்ரோஷ தாண்டவம் ஆடினா, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்னு சின்ன குழந்தைகளிலேர்ந்து பெரியவங்களோட மனசு வரை விஸ்வரூபமா ஆக்ரமிச்சிருந்த ஒரு மனிதன் திடீர்னு உஜாலா விளம்பரத்துல போட்டியிடும் எதிர் கம்பெனியின் துணி போல சாயம் வெளுத்து தான் ஒரு சராசரி மனிதனுக்கும் கீழ் தான்னு சர்வநிச்சயமா நிரூபிக்கிறார். மனசு வெறுத்து போய் அடுத்த சேனல் மாத்தினா மத வெறி கொண்ட தீவிரவாதிகள் நாலு பேர் தாங்க செய்யற அராஜகத்தை மார் தட்டி உலகத்துக்கு அறிவிக்கிறாங்க. கிளிக், கிளிக், ரிமோட் வஞ்சனை இல்லாமல் தன் பாட்டுக்கு தினந்தோறும் கெட்ட சேதிகளை நம் பக்கமா சும்மா அள்ளி தெளிக்குது.

சரி, செய்திகளும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு பொழுது போக்குக்கு டிவியில் வர்ற தமிழ் சீரியல்களை சந்தோஷமா பார்ப்போம்னு ஒரு எண்ணத்துல உக்காந்தீங்கன்னா, மனிதன் இயல்பில் நல்லவன் தான் அப்படீங்கற உங்க எண்ணத்தில் ஒரு லாரி மண் விழறது நிச்சயம். அவ்வளவு வில்லத்தனம் இந்த தமிழ் சீரியல் கதாபாத்திரங்களுக்கு. தான் நல்லா இருப்பது அவங்க வாழ்க்கையோட குறிக்கோள் இல்லை. சுத்தி உள்ளவங்க நல்லா இல்லாம இருந்தா போதும், அதுவே அவங்க பிறந்த பயனை அனுபவிச்ச மாதிரி. வீட்டு மருமகள் அழ அழ பெருக்கெடுக்குற சந்தோஷத்தில் அவங்க திக்கு முக்காடி வயத்துல பால் வார்த்து ஈ கூட மொய்க்க விட்டிடுவாங்க. அவ்வளவு தீசத்தனம்!

சுபீட்சமா நாலு விஷயம் இனி காதில் விழும் ங்கர ஆசை நிராசையாகி காந்தித் தாத்தாவின் குரங்குகள் மாதிரி இனி கண்ணையும், காதையும் இழுத்து பொத்த வேண்டியது தான்னு பலரைப் போல நீங்களும் நினைக்க தொடங்கியிருந்தீங்கன்னா நிச்சயமா மேற்கொண்டு படிங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு உண்மைக் கதையை உங்களுக்கு இப்ப சொல்லறேன்.

இன்ஜினியரிங் காலேஜ்ல ஒண்ணா படிச்சு முடிச்சு வெளியேறிய ஒரு பத்து நண்பர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியே பிரிஞ்சு போய் வாழ்க்கையை ஆரம்பிச்சு இன்னிக்கு ஒரு பதினெட்டு வருஷம் ஆச்சு. (ஏதுடா சமீபத்துல வந்த ஆமீர் கான் படத்து கதை மாதிரி தெரியுதேன்னு யோசனை பண்ணறவங்களுக்கு நான் சொல்ல விரும்பரதெல்லாம் 'வைட்டீஸ் ப்ளீஸ்'.)

ஒரு சராசரி மனிதனோட வாழ்க்கையில கல்யாணத்துக்கு பின்னாடி நடக்கற எல்லாமே - குழந்தைகள், அவங்களுக்கான சேமிப்பு திட்டங்கள், பேங்க் புண்ணியத்தில் வாங்கற அழகான வீடு, குழந்தைகளை பாட்டு, கராத்தே வகுப்புகளுக்கு அழைத்து போய் வர நல்ல ஒரு கார் - இவங்க எல்லோர் வாழ்க்கையிலும் நடந்தது.

காலேஜை விட்டு வெளிய வந்து பிசியா அவங்கவங்க ஒவ்வொரு பக்கம் சம்சார சுழல்ல சிக்கி சுத்திகிட்டிருந்த போதும் விடாம யாஹூ மற்றும் கூகிளாண்டவர் புண்ணியத்துல பதினெட்டு வருஷமா தங்கள் நட்பை விடாமல் அடவு காத்து வராங்க இந்த நண்பர் குழு. வருஷத்துக்கு ஒரு முறை இவங்கள்ல ஏழு, எட்டு பேராவது தத்தம் குடும்பங்களோட தீபாவளியை ஒட்டி சந்தித்து லூட்டி அடிப்பது இப்போ ஒரு வழக்கமா ஆயிட்டுதுன்னே சொல்லலாம்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி இவங்களிலே ஒருத்தருக்கு ரத்த புற்று நோய்ன்னு செய்தி வந்த போது ஆடிப் போய் இந்த குழு உட்கார்ந்தது கண் சிமிட்டும் நேரம் தான். நெஞ்சை அழுத்திய சோகத்தை சமாளித்து நிமிர்ந்தவங்க நண்பனுக்கு எப்படி உதவலாம்னு அதில் தீவிர யோசனைல இறங்கினாங்க. வைத்திய செலவுக்கு பணம் திரட்ட வேண்டிய அவசியம் புரிஞ்ச போது அவங்கவங்க சேமிப்பிலேர்ந்து ஒரு பெருந்தொகையை நண்பனுக்காக ஒதுக்கியதோடு இல்லாம இந்த நண்பர் குழு தெரிந்தவங்க தெரியாதவங்கன்னு ஒருத்தரை விடாம எல்லோர் கிட்டயும் உதவிக்கு கையேந்தினாங்க. அதை விட முக்கியமா மனைவிமார்களோடு சேர்ந்து எல்லோரும் எலும்பு மஞ்சை தானம் செய்ய தாங்க பதிவு செய்துகிட்டதோட தெரிந்தவங்க எல்லோரையும் பதிவு செய்ய தூண்டினாங்க. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்னு நீங்க கேட்டீங்கன்னா ரொம்ப கரெக்ட். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தான். ஏன்னா பல வருஷங்களாக பழகியிருக்கும் ஒரு நண்பனுக்கு துன்பம்னா இது போல உதவி யாரா இருந்தாலும் செய்வாங்க தானே?

நான் சொல்ல வந்த விஷயமே வேற. இந்த நண்பர் குழுவில் ஒரு நாலு பேர் எங்க ஊரை சேர்ந்தவங்க. இவங்க தங்கள் நண்பனுக்கு உதவி தேவைன்னு ஊர்ல கேட்டாங்களோ இல்லையோ, முகம் அறியா அந்நியர்களான ரிச்மன்ட்வாசிகள் பலர் பிரியத்தோடு முன்வந்து நிதி உதவி செய்ததோடு எலும்பு மஞ்சை தானம் (bone marrow donation) செய்யவும் உடனடியா அவங்கவங்க குடும்பங்களோட வந்து பதிவு செய்துகிட்டாங்க. நோயுற்று படுத்திருந்தவருக்கு இவங்கல்லாம் யாரு? எதனால அவருக்கு இவங்க உதவினாங்க? கட்டபொம்மன் பாஷையில 'மாமனா மச்சானா?' முகம் அறியா ஒருவரிடம் ஏனிந்த வாஞ்சை?

மூணு வருஷம் நோயோடு கடுமையா போராடி வெற்றி பெற்று இன்று தன் குடும்பத்தோடு நல்ல படியாக வாழும் அந்த நண்பரின் வாழ்க்கை மனித நேயத்துக்கும், நமக்கெல்லாம் உள்ளோடிருக்கும் கருணைக்கும், மனிதாபிமானத்துக்கும் ஒரு சான்றிதழ்னு நான் நினைக்கிறேன்.

'தங்கம்', 'தென்றல்' சீரியல்லாம் பார்த்து அடுத்த முறை பிழிய பிழிய அழும் போது இந்த கதையை மறக்காம நினைச்சுக்கங்க.

-மீனா சங்கரன்

Wednesday, May 19, 2010

உஷார் உஷார் - திருடர்கள் ஜாக்கிரதை

I'm sorry I didn't inform you about my traveling. I am presently in Glasgow, Scotland, United Kingdom and I'm stuck here.

I was mugged on my way to the hotel and my money,credit cards,phone and other valuable things were taken off me at gun point.

I need you to lend me some money , I need to sort out my hotel bills and get my tickets straightened out .

I would be glad if you can help me and I promise to pay you back Immediately I get back home .

Waiting to hear from you.

Thanks

மேற்கண்ட மின்னஞ்சல் சமீபத்தில் நமது ரிச்மண்ட் வாழ் அன்பர்களுக்கு வந்தது நினைவிருக்கலாம். அப்போது இது ஒரு திருட்டு கும்பலின் கைவரிசை என்று எல்லோரும் சற்று அசிரத்தையாக இருந்து விட்டோம். இந்த வாரம் எனது நண்பரின் நண்பர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்கிழமை) மதிய உணவிற்கு எனது நண்பருடன் ஒரு உணவகத்திற்கு செல்லும் வழியில் அவர் "என் ஃப்ரெண்டோட கசினோட கணவர், லண்டன்ல சஸ்ஸெக்ஸ் ங்ர ஒரு இடத்திற்கு பொயிருக்காரு அங்க அவரை அடிச்சு அவர் கிட்ட இருக்கரத எல்லாம் சுருட்டிட்டு ஓடிட்டாங்களாம், என் ஃப்ரெண்டுக்கு அவர் ஈ-மெயில் போட்டு பணம் கேட்டு இருக்கார், எப்படி எல்லாம் நடக்குது பாருங்கன்னு" சொன்னார். எனக்கு உடனே மேற்கண்ட மின்னஞ்சல் நினைவுக்கு வர, அவருக்கு அதைச் சொல்லி நண்பர் கிட்ட சொல்லி பணம் எதுவும் அனுப்ப வேண்டாம், அந்த உறவினரிடம் பேசிய பிறகு மத்ததை செய்யலாம்னு சொல்ல அவர் உடனே நண்பரை அணுகி பணம் அனுப்புவதை தடுத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு லண்டனில் இருந்த உறவினருடன் தொடர்பு கொண்டு அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதை உறுதிப் படுத்தி கொண்டுள்ளார்.

உங்கள் யாருக்கேனும் இப்படி ஒரு மின்னஞ்சல் வரும் பட்சத்தில், நன்கு விசாரித்த பிறகே செயலில் இறங்கவும்.

கடைசித் தகவல்: இந்த போலியான தகவலைத் தந்து பணம் கறப்பவர்கள் இந்தியாவில் மஹாராஷ்ட்டிரத்திலிருந்து இயங்குவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பின்குறிப்பு: இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தவுடன் பணம் அனுப்பியே தீருவேன் எனறு குதிப்பவர்கள் பணம் அனுப்பிய கையோடு நமது தமிழ் சங்கத்திற்கும், நமது கோவிலின் கட்டுமானப் பணிக்கும் கொஞ்சம் பணம் அனுப்பினால் சந்தோஷம்.


முரளி.

Tuesday, May 18, 2010

செம்மொழி மாநாடு சில சிந்தனைகள்


 
            உலகத்தமிழ்  செம்மொழி  மாநாடு வருகிற  ஜூன் 22   தொடங்கி ஐந்து  நாட்கள் கோயம்புத்தூர்  நகரில் நடைபெறவிருக்கிறது . அதையொட்டி சில சிந்தனைகளை  பதிவு  செய்ய வேண்டியிருக்கிறது .
 
              நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு அரசியல்  சாயம் அதிகமாக பூசப்படும்  என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது . ஏற்கனவே ஆளும்  கட்சியின் சுவரொட்டிகளும்  பிரசுரங்களும்  தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும்  தெருக்களை அலங்கார (அலங்கோல)படுத்திக்கொண்டிருக்கிறது . மாநாடு சம்மந்தப்பட்ட எல்லா பிரசுரங்களிலும்  தமிழ்நாட்டு அரசியலுக்கே  உரித்தான  தனி நபர்  துதிபாடல் மேலோங்கி  நிற்கிறது .ஜூன் மாதம் முதலமைச்சர்  பிறந்த நாள் வருகிறது  என்பது எல்லோருக்கும்  தெரியும்.  அதையொட்டியே மாநாடு ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள் .
 
            நமக்குள்ள கவலையெல்லாம் எந்த தனிநபருக்கு துதி உச்சஸ்தாதியில் பாடப்படுகிறது என்பதல்ல.
 
         தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  அதன் செம்மொழி அந்தஸ்துக்கும் கடந்த காலத்தில் குரல் கொடுத்த எல்லா தனி நபர்களும்  இந்த மாநாட்டு நேரத்தில் நினைவு கொள்ளப்படுவர்களா என்பதுதான் .அவர்களுக்கு துதி பாட வேண்டியதில்லை . தமிழ் வளர்ச்சியில்  அவர்களுடைய 
பங்களிப்பு கறாரான  முறையில் மதிப்பீடு செய்யப்படுமா  அவர்கள் நினைவில் கொள்ளப்படுவர்களா  என்பதுதான் நம்முடைய கேள்வி.
 
         அப்படியானால் தமிழ் மொழியை  முதல்முதலாக  செம்மொழி என்ற வார்த்தையால் அலங்கரித்து தமிழ் தனித்து இயங்கும் வல்லமை பெற்ற மொழி என்று 
கூறிய பரிதிமாற்கலைஞர் நினைவில் கொள்ளப்படவேண்டிய  பலரில்  ஒருவர்.  தமிழ்ப்பற்று காரணமாக சூரியநாராயண  சாஸ்த்ரி  என்ற தன் பெயரையே  பரிதிமாற்கலைஞர்  என்று மாற்றிக்கொண்டவர் அவர். .தனித்தமிழ் இயக்கத்தின்  முன்னோடி என்று கூட அவரை
குறிப்பிடலாம்.
 
          இன்று தனித்தமிழ் இயக்கம் என்ற பெயரால்  மொழி புராணங்களை  அடிப்படையாகக்கொண்ட  மூட நம்பிக்கைகளை மொழித்துறையில் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும் பகுத்தறிவுவாதிகளை  ஒதுக்கிவிடலாம்.  ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழின் பெருமையை அதன் நியாயமான  இடத்தை உறுதி செய்ய தனித்தமிழ் இயக்கம் தேவைப்பட்டது.  அந்த இயக்கம் மற்ற மொழிகளின் மீது வெறுப்[பை வளர்க்காமல்  தமிழ் மொழியின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியிருந்தது  ஆனால் இன்று தனித்தமிழ் இயக்கம்  வடமொழி எதிர்ப்பு  கூட்டமாக  சுருங்கிப்போய்விட்டது .மொழி  வைதீகம் பேசுவதையும்  மற்றமொழிகளை  தீட்டு  மொழியாக கருதி அந்த தீட்டு  படாமல் தமிழை வளர்ப்பதாக  பாசாங்கு செய்கிறது .தமிழ் மொழி வரலாற்றில் மற்ற மொழிகளின் பங்களிப்பை நிராகரிப்பது என்ற பாதையில் திசை மாறி  போய்க்கொண்டிருக்கிறது.                .
 
        வேகமாக உலகமயமாக்கல்  என்ற இன்றைய  உலகச்சூழலில்  தமிழ் மட்டுமல்ல , உலகத்தில்  எந்த மொழியும் தனித்து  இயங்க முடியாது என்பதுதான்  உண்மை.
 
          ஆனால் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழின் பெருமையை மீட்டு எடுக்க அத்தகைய இயக்கம் தேவைப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
 
            அன்றைய நிலையில் தமிழ் மொழியின்  பெருமையை முழங்கியவர் பரிதிமாற்கலைஞர்  பல தமிழ் நாடகங்களை எழுதி மேடை ஏற்றினார்..பல ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
 
       அன்று தமிழ் மொழி  கல்லூரிகளில் பாடமொழியாகக்கூட இடம் பெறவில்லை. அந்த நிலையில் உயர்கல்வியின்  ஒரு பகுதியாக தமிழ் மொழி கல்லூரி பாடத்திட்டத்தில்  இடம் பெற வேண்டும் என்று சொல்வதற்கு கூட 1920 களில்ஒரு சிலரே  இருந்தனர் .
 
    அந்த நிலையில் கல்லூரிகளில் தமிழுக்கு இடம் வேண்டும் என்று குரல் கொடுத்து பேசியபடியே தன் உயிரை கொடுத்தார் ஒருவர்.
 
     அவர்தான் மாதவய்யா என்ற  எழுத்தாளர். பத்மாவதி சரித்திரம் என்ற நாவலை எழுதியவர் என்ற செய்தி மட்டுமே மாதவைய்யவைப்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு
தெரியும்.. எழுத்து துறையில் ஈடுபடுவதற்கு முன் இவர் மத்ய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தார்,  அந்த பதவியை விட்டு விலகி பத்திரிகை துறையில் இறங்கினார்.சென்னை பல்கலை கழகத்தில் செனெட் உறுப்பினராக இருந்தார். .இவர் உணர்ச்சி மிக்க பேச்சாளர்.
 
       கல்லூரி பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு தகுதியான இடம் வேண்டும் என்று பல காரணங்களை கூறி செனெட் கூட்டத்தில் விளக்கமாக நீண்ட நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
 
   பேசிவிட்டு  உட்கார்ந்தவுடன் அவருடைய  உயிர் பிரிந்தது. ..இறக்கும்போது அவருடைய வயது  53.
 
    உண்மையில் தமிழுக்காக உயிரை  கொடுத்தார் என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும். .தமிழ் நாவல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக  போற்றப்படும்.மாதவையா பல நாவல்களை எழுதியிருக்கிறார் . தமிழ் மொழியில் முதல் சரித்திர நாவலான விஜயமார்தாண்டன் என்ற நாவலையும் இவர்தான் எழுதினார்.
 
    ஷேக்ஸ்பியர் நாடகமான ஒதேல்லோவை தமிழில்  மொழி பெயர்த்தார். .இவருடைய நாவல்கள் வெறும் பொழுதுபோக்குக்காக  இல்லாமல் அன்று பேசப்பட்ட  பல சமுகப்பிரசினகளை பற்றிய பல கருத்துக்களை விவாதிப்பதாக அமைந்திருந்தது.
 
             தமிழ்நாட்டில் கல்வி வளர்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார்.  பால்ய விவாகத்தை  எதிர்த்தும்  விதவைப்பெண்கள் மறுமணத்தை ஆதரித்தும் தன்னுடைய பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையில் எழுதினார்.பெண்கள் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
 
      தமிழ் மொழி ஆராய்ச்சியில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம்  கொடுக்காமல் பல சாதனைகளை புரிந்த எஸ்.வையாபுரி பிள்ளை நினைவில் கொள்ளப்படவேண்டிய மற்றொரு தமிழ் அறிஞர் .
 
   பிள்ளையவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு படித்துவிட்டு தமிழ் ஆராய்ச்சியை முழுமையான தொழிலாகவும்  தொண்டாகவும் மேற்கொண்டார். இந்திய மொழிகளில் இதுவரை எந்த மொழிக்கும் கலைச்சொல் அகராதி தொகுக்கப்படவில்லை.  இந்த நாட்டில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படும் இந்தி மொழிக்கும் அதுதான் கதி. ஆனால் தமிழ் மொழிக்கு கலைச்சொல் அகராதி தொகுத்து வெளியிட்ட பெருமை வையாபுரி பிள்ளைக்கு உண்டு. இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அவருடைய   வயது  36. பத்தாண்டுகளில் அந்த பெரும் வேலையை செய்து  முடித்தார்.
 
       பன்மொழி அறிஞரான பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியிருக்கிறார்.
 
     தனித்தமிழ் இயக்கத்தவர்கள் முன் வைத்த பல கருத்துகளை நிராகரித்து விட்டு துணிவோடு தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள உறவு பற்றி விஞ்ஞான அடிப்படையிலான கண்ணோட்டத்தில் பல முடிவுகளை தெரிவித்தார். இதனால் குறுகிய நோக்கம் கொண்ட தமிழ் பற்றாளர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.
 
       தமிழ்மொழியின் நீண்ட நெடும் வரலாற்று காலத்தில் கலந்த பிறமொழிச்சொற்களை பற்றி  விளக்கியிருக்கிறார். பிறமொழிச்சொற்கள் ஒரு மொழியில் கலப்பதற்கான காரணங்களை விளக்கினார். .அவசியமானால் மற்ற மொழிகளிலிருந்து சொற்களை ஏற்றுக்கொள்ளும் முறை பற்றி தொல்காப்பியத்தை ஆதாரம் காட்டி விளக்கினார்.
 
   கண்மூடித்தனமான பிறமொழி வெறுப்போடு  கூடிய தமிழ்பற்று மொழியின் தேக்கத்தில் முடியும் என்று வாதிட்டார். தமிழ்பற்று என்ற பெயரில் தமிழ்நாட்டு இளைஞர்களை கிணற்று தவளைகளாக்கும்செயலிலிருந்து அவர்களை காக்க வேண்டும். என்றார் பிள்ளை.
 
  இத்தகைய தமிழ் அறிஞர்களுடைய பங்களிப்பு பற்றி பரிசீலனை செய்யும் வாய்ப்பை உலகத்தமிழ் மாநாடு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.  
 
     தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்த நல்லறிஞர்கள் பட்டியல் மிகப்பெரியது..இங்கே உதாரணத்துக்கு மட்டுமே சில பெயர்களை குறிப்பிட்டேன். அவர்கள் அனைவரையும் நினைவில் கொள்ளும் நல்ல நேரமாக உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அமையும் என்று உளமார நம்புகிறோம்.
                                                           
                                                                                                                 - மு .கோபாலகிருஷ்ணன்

Saturday, May 15, 2010

ரிச்மண்ட் தமிழ் சங்க புத்தாண்டு விழா

தமிழ் சங்கத்தின் புத்தாண்டு விழாவில் இருந்து சில வீடியோக்கள். இருட்டில் எனது செல்பேசியில் யூஸ்ட்ரீம் மென்பொருளால் எடுத்தது - அதனால் வீடியோக்களின் தரம் மிகக்குறைவுதான்... அனைத்து நிகழ்ச்சிகளும் சரியாக வரவில்லை. முக்கியமாக பேச்சு, பாட்டை ரசிக்கலாம்.

பேச்சுப்போட்டியின் தலைப்பு: 
திருமணத்திற்கு பிறகு சுதந்திரத்தை அதிகம் இழப்பது ஆண்களா, பெண்களா

பெண் தரப்பில் லாவண்யா:
 

 ஆண் தரப்பில் நடராஜ மூர்த்தி:
 

 ஆண்கள் தரப்பில் சத்தியவாகீஸ்வரன்:



பெண்கள் தரப்பில் வெங்கட்:






பெண்கள் தரப்பில் பார்கவி:





ஆண்கள் தரப்பில் சத்தியவாகீஸ்வரன்:





நடுவர் முத்துவின் தீர்ப்பு:



ரவி, பரத், லாவண்யா வழங்கிய பாட்டுக்குப் பாட்டு போட்டி: