Saturday, December 19, 2009

படம் பாரு கடி கேளு - 44



நாக்க முக்கா நாக்க முக்கா அட்ராட்ரா நாக்க முக்கா
மனுஷன் செத்தா மாடு தின்னா
தோல வெச்சு மேளம் கட்டி
அட்ராட்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

இது எப்டி இருக்கு?

Tuesday, December 15, 2009

மீனாவுடன் மிக்சர் - 16 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - நாலாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். பயணிகள் களைப்பாறும் தனி அறை.)

{முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த பச்சையில் சிகப்பு கோடு போட்ட சின்னாளம்பட்டு புடவையில் ரெண்டு ஜப்பானிய சூமோ விளையாட்டு வீரர்கள் கால் நீட்டி உட்காரக்கூடிய அளவு பெரிய வட்ட சோபாவின் நடுவில் குஞ்சம்மா சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அறைக்குள் 'குஞ்சம்மா, உனக்கு காப்பி போட தெரியுமாம்மா?' என்று கேள்வியுடன் வேகமாக நுழைந்த செந்திலின் பின்னால் மைதிலி ஓட்டமும் நடையுமாக வருகிறாள்.}

குஞ்சம்மா: யோவ், இன்னாத்துக்கு இந்த ஓட்டம் ஓடற? காந்தி தாத்தான்னு நெனப்பா ஒன் மனசுல? ஒங்க ஊட்டம்மா பாவம்யா. மலை மேலேந்து உருட்டி விட்ட கல்லாட்டமா எப்படி உருண்டுகிட்டு வருது பாரு. யக்கா, இப்படி குந்து நீ மொதல்ல.

மைதிலி: (மூச்சிரைக்க கையால் நெஞ்சை நீவி விட்டபடி) குந்தறேம்மா குந்தறேன்.

செந்தில்: அது ஒண்ணும் இல்லை குஞ்சம்மா. எனக்கு ரெண்டு வேளை காப்பி சாப்பிடலைனா உடம்பும் மூளையும் லேசா மரத்து போயிடும். இவ கிட்ட நாளை காப்பிக்கு இன்னிக்கே ஆர்டர் பண்ணியாகணும். அதான் உனக்கு காப்பி போட தெரியுமான்னு கேக்க ஓடி வரேன்.

குஞ்சம்மா: காப்பியா? அந்த கண்ணராவியயா நீங்கல்லாம் குடிக்கிறீங்க? அதுக்கு ஒரு கப்பு எலி மருந்த குடிச்சுட்டு போய் கட்டய நீட்டுங்களேன்.

செந்தில் மற்றும் மைதிலி: (அதிர்ச்சியோடு) என்னது?

குஞ்சம்மா: பின்ன காப்பீல இன்னாயா சத்திருக்கு? ஊர்ல என் தங்கச்சி குப்பம்மா இப்படி தான் காப்பி காப்பின்னு அலைஞ்சிகிட்டு குடிக்கும். இன்னா ஆச்சு? ஒரு நாள் சோர்வு சாஸ்தியாயி மயக்கம் போட்டு விழுந்திருச்சு. ஊட்டாண்ட இருக்கிற ஒரு நர்சம்மா வந்து பாத்து காப்பி குடிச்சு குடிச்சு குப்பு ஒடம்புல ரத்தத்துக்கு பதில கழனி தண்ணி தான் ஓடுதுன்னு சொல்லிட்டு போயிருச்சு.

மைதிலி: அய்யய்யோ அப்புறம்?

குஞ்சம்மா: அப்புறம் இன்னா, காப்பிய கடாசிட்டு நாங்க குடும்பத்தோட பாதாம்கீர்ல எறங்கிட்டோம். ஆனா எனக்கு இந்த பவுடர் பாதாம் பாலெல்லாம் தொண்டை குழிககுள்ள எறங்காதுக்கா. காலைல நல்லா ஒரு பிடி பாதாம் பருப்ப ஊற வச்சு, அரைச்சு, சூடா ஒரு தம்ளர் பால்ல கரைச்சி குடிக்கணும். இல்லைனாக்க ஒரு வேலை ஓடாது. நல்லா லண்டன் பாதாமா வாங்கி வச்சிருக்கா எனக்கு. அமரிக்கா ஆப்பரிக்கா பாதாம்லாம் சொத்தை. என் ஒடம்புக்கு ஆவாது.

மைதிலி: அதுக்கென்ன வாங்கிட்டா போறது குஞ்சம்மா.

செந்தில்: நாங்களாவது காப்பி குடிக்கலாமா குஞ்சம்மா? இல்ல உனக்கு அதுவும் ஒத்துக்காதா?

குஞ்சம்மா: தோ பாருயா. நெருப்பு சுடும்னு தான் சொல்ல முடியும். இல்ல குளுருது, நான் தீக்குளிச்சு தான் தீருவேன்னு நீ அடம் பிச்சா நா இன்னா செய்ய முடியும், சொல்லு? நீயே போட்டு குடிப்பென்னா அந்த கண்ணராவிய தாராளமா குடிச்சுக்க.

மைதிலி: குப்புவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல? இனிமே வீட்டுல யாருக்கும் காப்பி கிடையாது. நம்மளும் பாதாம்கீரே குடிக்கலாம்.......................... அய்யய்யோ ஏன் கால் செருப்பை கழட்டறீங்க?

செந்தில்: சும்மா உள்ள சங்கை ஊதி கெடுத்தானாம்னு கூட்ஸ் வண்டி வேகத்துல வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டுருந்ததை நானே அநியாயமா கெடுத்துண்டேனே, அதை மெச்சிக்க என் மூளையைநானே நாலு சாத்து சாத்திக்கலாம்னு பாக்கறேன்.

மைதிலி: ஏர்போர்ட்ல வந்து அச்சுபிச்சுன்னு ஏதாவது பண்ணாதீங்க.

குஞ்சம்மா: அக்கா, அண்ணே ஏதோ சொல்லிட்டு போவட்டும், விட்டிரு. ஒன் பாதாம்கீர் சூப்பரா இருந்திச்சுக்கா. அதான் தேர்வுக்கு கூட்டியார சொன்னேன். ஒரு நாலஞ்சு முக்கியமான விஷயத்த பேசிட்டோம்னா ஊட்டுக்கு கிளம்பிரலாம். எது இருக்கோ இல்லையோ, மொதல்ல எனக்கு ஒரு laptop குடுத்துருங்க என்ன? MAC இருந்திச்சுனா ரொம்ப நல்லது. இல்லேனா அதுக்குன்னு டென்சன் ஆவாதீங்க. PC வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். இன்டர்நெட் ஸ்பீட் மட்டும் ஒரு 120 mbps இருக்கணும். தெனமும் Facebook ல தங்கச்சி குப்பு, என் ஆயா செல்லாயி, சித்தி மவளோட ஓரவத்தி ராசாத்தி எல்லாரையும் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதனால காலையில நான் வேலைக்கு வர கொஞ்சம் லேட்டாவும். நாஷ்டா சாப்பிடாம எனக்காக குந்தியினு இருக்காதீங்க. நான் தப்பால்லாம் நெனைக்க மாட்டேன், சரியா? பாதாம் பால் பண்ணி ஒரு லோட்டாவுலஎனக்கு விட்டு வச்சிட்டு ஒங்க ஜோலியை பாத்துக்குனு போய்கினேயிருங்க. பால் சூடா இல்லேன்னா நோ டென்சன். நா வந்து சுட பண்ணிக்குவேன்.

செந்தில்: பாத்தியா மைதிலி? எவ்வளோ நல்ல மனசு குஞ்சம்மாவுக்குன்னு. அவளே சுட பண்ணிப்பாளாம்! உன் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்ச்சுட்டான் பாரு. குஞ்சம்மா இருக்கறப்போ இனிமே என்ன கவலை உனக்கு?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Monday, December 07, 2009

பார்

"செல்லம் குடுக்காதே குடுக்காதேன்னு சொன்னா கேட்டியா"

வேலையிலிருந்து வந்த உடனே பாய்ந்தாள் அம்மா. "இன்னைக்கு என்னாச்சு அம்மா", என்றேன் சிரித்துக் கொண்டே.

அமெரிக்காவில் வளரும் பேரனுடன் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் என் அம்மாவுக்கு தினசரி குருஷேத்திரம்தான். இவர்களின் சுதந்திரமும்,பேச்சும் அவர்களின் வாழ்க்கைமுறையும் எப்போதும் ஒத்துப் போவதில்லை. என் அப்பாவாவது பரவாயில்லை. எங்களை சுதந்திரமாக வளர்த்தவர். அம்மாவுக்குத்தான் பேரனின் கேள்விகளும், நடைமுறையும் சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை.

"உன் பையன் என்ன பண்ணினாலும் கண்டிக்காம இப்ப எங்கியோ போயிண்டிருக்கு பாரு", என்றாள் அம்மா. "அவன் என்ன பண்ணினாலும் சிரிச்சிண்டே இரு. நாளைக்கு ஊரே சிரிப்பா சிரிக்க போவுது."

"ஊர் சிரிக்கப் போவுதுன்னு பாத்தா நீ இங்கே எதுவும் பண்ண முடியாதும்மா. இப்ப என்ன ஆயிடிச்சு".

"அன்னைக்கி அப்படிதான் பர்த்டே பார்ட்டின்னு பசங்களும், பொண்ணுங்களும் ஒண்ணா ரா முழுக்க கூத்தடிச்சதுகள்." என்று ஆரம்பித்தாள் அம்மா.

"முதல்ல இப்பத்திய கதைய சொல்றியா?", என்றேன்.

நம்ப கண்ணு முன்னாடிதானே இருந்ததுகள் குழந்தைகள். சென்னைல சீதாவோட உத்தம புத்திரன் சனிக்கிழம அன்னிக்கு வீட்டுக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு வந்தானாம். அதுக்கு என்ன சொல்றே... நம்ம ஊர் எங்கியோ போயிட்டு இருக்கு. நீ இந்த ஊரப் பத்தி சொல்ல வந்துட்டே.

மகளின் பையனை இழுத்ததால், அம்மாவுக்கு பொத்துக் கொண்டு வந்தது. "அந்த ராயனும் சரியில்லை. அவன் கூட சேந்து நம்ம குமார் குட்டிச்சுவரா போவப்போறாண்டா", என்றாள் அம்மா.

"ரயன் நல்ல பையனம்மா. அவன என்னமோ உனக்கு பிடிக்கல. விடேன். சரி இன்னைக்கி என்ன ஆச்சு".

"ஆமாம் நீதான் மெச்சிக்கனும் அந்த ராயன. அவன் பாருக்கு போறானாம். இவனை அழைச்சானாம். இதுவும் போய்தான் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்குது. நீயே கூட்டிட்டு போய் உன் செலவிலேயே விஸ்கியும், பியரும் வாங்கிக்குடு".

"இந்தப் பசங்க இன்னும் ஹைஸ்கூல்கூட போகலே. நானே கூட்டிட்டுப் போனாலும் உள்ளே விடமாட்டாங்க. உன்னை ஏதோ கிண்டல் பண்ணியிருக்கானுங்க இந்த பசங்க ரெண்டு பேரும்."

"இல்லடா. இன்விடேஷனே அடிச்சி கொண்டாந்து குடுத்தான் அந்த பையன். இதோ இங்க தானே இருந்தது. ஆ... நான் பாருக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு அதட்டினேன். உன் புத்திர சிகாமணிக்கு கோபம் பொங்கிடிச்சி. இந்த ஊர் பத்தி எனக்கு புரியலை அது இதுன்னு கத்திட்டு அவன் ரூமுக்கு கொண்டு போயிட்டான். நீயே போய் கேளு", என்று என்னை ஏற்றிவிட்டாள் அம்மா.

எனக்கு கோபம் வரவில்லை. இது என்ன கதை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் அதிகமானது. போய் விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு குமாரின் அறைக்குள் நுழைந்தேன்.

ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன் சிரித்துக் கொண்டே.

"அம்மா. ரயன் கூப்பிட்டிருக்கிறது வெறும் பார் இல்லை. ரொம்ப ஸ்பெஷலான பார். நம்ம ஊர்ல பசங்களுக்கு பூணுல் போடறமாதிரி, ஜூஸ் - அதாம்மா யூதர்கள் - அவங்கள்ல  பண்ற பங்க்ஷனுக்கு பேரு பார் மிட்ஸ்வா"!

மீனாவுடன் மிக்சர் - 15 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - மூன்றாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

{வரவேற்ப்பு அறையின் நடுவில் மைதிலி, செந்தில் தம்பதியினர் அமெரிக்காவுக்கு வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் ஆட்களுக்கு முன்னால் கை கட்டி பணிவாக நிற்கிறார்கள்.}

மைதிலி: உங்க எல்லோருக்கும் வணக்கம். விமான பிரயாணம் முடிஞ்சு நீங்க ரொம்ப களைச்சிருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் உங்களுக்கு இந்த ஐஸ் பாதாம்கீர் கொண்டு வந்திருக்கேன். எல்லோரும் முதல்ல இதை கொஞ்சம் குடிங்க (ஒரு பெரிய கூலரையும் பேப்பர் கப்புகளையும் விநியோகம் செய்கிறாள்).

செந்தில்: அடேங்கப்பா ஐஸ் போதுமா? முறைக்காதே, பாதாம்கீர்ல ஐஸ் போதுமான்னு தான் கேட்டேன்.

மைதிலி: வீட்டுக்கு போய் எப்படா படுப்போம்னு அலுப்பா இருக்கா உங்களுக்கு? எங்களை தேர்ந்தேடுத்தீங்கன்னா உங்களை வீட்டுக்கு கூட்டிகிட்டு போக Honda Podpuller பறக்கும் காரை கொண்டு வந்திருக்கோம். ஆட்டோ போல அலுங்கல் குலுங்கல் எல்லாம் இல்லாம சுகமா பறந்து போயிடலாம். அது மட்டுமா? பிரயாண களைப்பு போக இன்னிக்கு ராத்திரி நீங்க "சூசூசீசீ" கம்பனியின் புது கண்டுபிடிப்பான 'மிதக்கும் மெத்தையில்' படுத்து தூங்கலாம். புது டிசைனர் விரிப்பெலாம் கூட போட்டு வச்சுட்டு வந்திருக்கேன். உங்க களைப்பெல்லாம் பஞ்சா பறந்து போயிடும்.

செந்தில்: உங்களுக்கு வேணும்னா இவ நல்லா கால் கூட பிடிச்சு விடுவா. அதை சொல்ல மறந்துட்டயேம்மா மைதிலி.

மைதிலி: (செந்திலின் காதுக்கு மட்டும் கேட்கும் படி) வீட்டுக்கு வாங்க உங்களை நான் பிடிக்கிறேன். எங்கே இப்ப ஒரு அம்பது தோப்புக்கரணம் போட்டு இவங்களை சந்தோஷப்படுத்துங்க பார்ப்போம்? ஒண்ணு, ரெண்டு.....

(சத்தமாக) கால் தானே, பிடிச்சு விட்டா போச்சு! அப்புறம் நான் வெஜிடரியன் புட் மணக்க மணக்க நல்லா சமைச்சு போடுவேன். உங்களுக்கு அதிக சிரமம் குடுக்க மாட்டேன். சமைக்கும் போது பாதி பாத்திரம் நானே தேயச்சுடுவேன். மிச்சத்தை நீங்க தேய்ச்சா போதும். துணிமணி தோய்ப்பதை பத்தி கவலைப்படாதீங்க. இதோ என் வீட்டுக்காரர் நல்லா தோய்ப்பார். அவர் தோச்சது போக மீதி ஏதாவது இருந்தா நீங்க தோச்சா போதும். உங்களுக்கு அதுவும் ரொம்ப அலுப்பாக இருந்தா சொல்லுங்க. நாங்களெல்லாம் வாரத்துக்கு ஒரே ஒரு துணியையே போட்டுக்க பழகிக்கிறோம். ஒண்ணும் பிரச்சனையே இல்லை.

செந்தில்: ஐயோ கப்படிக்குமே? சரி பரவாயில்லை விடு. சென்ட் அடிச்சுக்குவோம்.

ஏஜன்சி அதிகாரி: உங்கள் நேரம் முடிந்து விட்டது. அடுத்ததாக சுஷ்மா, சுரேஷ் குடும்பத்தை அரங்கத்தின் நடுவில் வந்து பேச அழைக்கிறோம்.

மைதிலி: (அவசர அவசரமாக) அறை சுவர் அடைக்கறா மாதிரி ரூமுக்கு ஒரு பெரிய டி.வி இருக்கு எங்க வீட்டுல. கிட்டத்தட்ட 500 channel ல படங்கள் வரும். வாரத்துல மூணு நாள் விடுமுறை தருவோம். நல்ல டிசைனர் துணிமணி வாங்கி ........

செந்தில்: போதும் வா. விட்டா நீ சொத்தையே இந்த வேலையாளுக்கு எழுதி வச்சிடுவியோன்னு எனக்கு இப்போ பயம்மா இருக்கு. அந்தப் பக்கம் போய் தரைல உக்காரணும் போல இருக்கு. வா போகலாம். ஆ...

மைதிலி: என்ன ஆச்சு?

செந்தில்: என்ன ஆச்சா? என் இடுப்பு கடோத்கஜன் கடுச்சு துப்பின கரும்பு சக்கையாட்டம் ஆச்சு. பிள்ளையாருக்கே தோப்புக்கரணம் போடாம டிமிக்கி கொடுத்துட்டு இருந்த என்னை இன்னைக்கு இப்படி டிங்கு வாங்கிட்டீங்களே! (இடுப்பை பிடிச்சுகிட்டு முனகறார்)

ஏஜன்சி அதிகாரி: வாழ்த்துக்கள், நீங்கள் தேர்ந்தெடுக்க பட்டிருக்கீங்க. உங்களை தேர்ந்தெடுத்த பணியாளர் குஞ்சம்மா உங்களை தனியாக நேர்முக தேர்வு செய்ய ரெடியாக இருக்கிறார். என்னோடு இந்த பக்கம் வாங்க.

மைதிலி: (சந்தோஷத்தில் கண் பணிக்க) எனக்கு தெரியும் என் முருகன் என்னை கைவிட மாட்டான்னு. வேலும் மயிலும் தான் நமக்கு துணை. வேகமா வாங்க, குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாது. ஏன் நின்னுட்டீங்க?

செந்தில்: குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாதா? என்ன அநியாயம்! தினம் ஆபீஸ் போயிட்டு வந்து நான் ஒரு கப் காப்பிக்கு ஒரு யுகம் வைட் பண்ணறேனே, அது மட்டும் பரவாயில்லையா? எனக்கு ஒரு சந்தேகம் மைதிலி. அது எப்படி தினம் சாயந்திரம் ஆறு மணி ஆச்சுன்னா சொல்லி வச்சா மாதிரி உனக்கு உன் தோழிங்க கிட்ட இருந்து புடலங்காய் மாதிரி நீள நீளமா போன் கால்கள் வருது?

மைதிலி: அது வேற ஒண்ணும் இல்லைங்க. எங்க லேடீஸ் க்ளப்ல சமீபத்துல 'கணவர்களுக்கு தினம் ரெண்டு கப் காப்பி அவசியமா?" அப்படீன்னு பட்டிமன்றம் நடத்தினோம். நடுவர் 'அவசியம் இல்லை' ன்னு தீர்ப்பு கொடுத்திட்டார். அதான் எல்லோரும் இப்ப கொஞ்சம் பிசியா 'கணவர் காப்பி கட்' அப்படீன்னு ஒரு petition தயார் பண்ணி கூப்பர்டினோ பெண்கள்கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டிருக்கோம்.

செந்தில்: லேட்டா வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டு இருந்தது. அதுக்கும் ஆப்பு வச்சிட்டீங்களா? சரி மசமசன்னு நிக்காதே. குஞ்சம்மா கிட்ட முக்கியமா ஒரு விஷயம் கேக்கணும் எனக்கு.

(விறுவிறுன்னு நடந்தபடியே செந்தில்) குஞ்சம்மா.........காப்பி போட தெரியுமாம்மா உனக்கு?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Thursday, December 03, 2009

மீனாவுடன் மிக்சர் - 14 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

ஒலிபரப்பியில் ஆங்கில அறிவிப்பு: ஜெட் ஏர்வேஸ் விமானம் 985 வந்து இறங்கியுள்ளது. பிரயாணிகள் கஸ்டம்ஸ் ..........

மைதிலி: (பரபரப்புடன்) அதோ வராங்க அதோ வராங்க. நீங்க கொஞ்சம் பேனரை தூக்கி பிடிங்க. (கண் மூடி முணுமுணுக்கிறாள்) காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க...........

செந்தில்: நீ வேணா பாரு, உன் தொல்லை தாங்காம அந்த முருகன் கூடிய சீக்கிரத்துல ஒரு நாள் ஓடி போய் லேக் டாஹோ (Lake Tahoe) பனிமலைல ஏறி ஐசாண்டவனா உக்காந்துக்க போறார். பின்ன என்ன? வீட்டுல பாத்ரூம் flush பண்ணலை, ஏசி ரிப்பேர், கார்பெட்ல கறை - இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?

மைதிலி: இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! Benz car வாங்கி தருவோம்னு பேனர் எழுத சொன்னா அதை கோட்டை விட்டுட்டீங்க. அந்த குடும்பத்தை பாருங்க Hawaaii cruise டிக்கெட் வாங்கி தருவோம்னு அம்சமா பேனர் எழுதிண்டு வந்திருக்காங்க. நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா.

சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி அதிகாரி: (கையில் பெரிய மைக்ரோபோனில்) வணக்கம் பெண்கள் மற்றும் சாதுஆண்களே (Ladies and gentlemen)! சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னும் சற்று நிமிடத்தில் உங்கள் தேர்வு தொடங்கி விடும். எங்கள் வேலையாட்கள் அறையின் இந்த பக்கத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். ஒவ்வொரு குடும்பமாக வந்து அவர்கள் முன் பேனருடன் 5 நிமிடங்களுக்கு நின்று உங்களை பற்றிய சில வார்த்தைகள் பேசலாம். பணிவோடு கைகட்டி நிற்பது, தோப்புக்கரணம் போடுவது, மரியாதையுடன் பேசுவது போன்ற விஷயங்கள் தேர்வில் உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நேரம் முடிந்தவுடன் அறையின் ஓரத்தில் போய் தரையில் உட்காரவும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலையாளுடன்ஸ்பெஷல் நேர்முக தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

செந்தில்: அடடா முக்கியமானதை கொண்டு வர மறந்து போயிட்டேனே!

மைதிலி: என்னத்தை மறந்துட்டு வந்தீங்க?

செந்தில்: சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்டி. நிச்சயம் வேலைக்கு ஆள் கிடைச்சிருக்கும் நமக்கு. அவங்கல்லாம் நாற்காலி நாமெல்லாம் தரையா? சபாஷ் சபாஷ்.

மைதிலி: ஷ்ஷ்..யார் காதுலயாவது விழப்போறது, சும்மா இருங்க. அப்புறம் அவங்க முன்னாடி நிக்கரச்ச கொஞ்சம் இடுப்பு வளைஞ்சு பதவிசா நில்லுங்க, சரியா?

ஏஜன்சி அதிகாரி: செந்தில், மைதிலி குடும்பம் இப்பொழுது அரங்கத்தின் நடுவில் வந்து பேசலாம்.

மைதிலி: நம்பள தான் கூப்பிடறாங்க, வாங்க போகலாம். இதோ வந்துட்டோம்...(பீ.டி. உஷா போல ஓடுகிறாள்)

-தொடரும்

---------------------------------------------------------------------------


-மீனா சங்கரன்

Thursday, November 26, 2009

படம் பாரு கடி கேளு - 43


தூரத்தில் நிற்கும் இருவரில் ஒருவர்: என்ன மாடசாமி அது யாரு நடு வயலில் வயலின் வாசிக்கிறது?
மற்றவர்: யோவ் முனுசாமி, அது வயலின் இல்லைய்யா அது மிருதங்கம்.
அவரு ஏதோ வாசிச்சு பயிர் வளர்க்கறேன்னு சொன்னாரேன்னு நம்ம வயலில் இடம் கொடுத்தேன். அவரு வாசிக்கிறாரு வாசிக்கிறாரு நிறுத்தவே மாட்டேங்கிறாரு. அறுவடை மேல் அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். பரவாயில்லை. நல்ல வருமானம் தான்.

Monday, November 23, 2009

மீனாவுடன் மிக்சர் (அறிவிப்பு)

'கூப்பர்டினோவில் குஞ்சம்மா' எந்த நேரத்தில் எழுத ஆரம்பித்தேனோ தெரியலை, அந்த விமானம் பாவம் இன்னும் தரையை தொட்ட பாடு இல்லை.

ரெண்டாவது பாகம் ஏன் இன்னும் வெளியிடலைன்னு நிறைய பேர் கேக்கறாங்க. வேலை பளு அதிகம்னு கதை விடலாம்னு பார்த்தா உம்மாச்சி கண்ணை குத்திடுமோன்னு வேற பயம்மா இருக்கு. கற்பனை ஊற்று வத்தி போய் பாளம் பாளமா வெடிச்சிருக்கும் பாலைவனம் போல இருக்கு. இது தாங்க உண்மை. நிலைமை கொஞ்சம் சரியாகி எங்க வீட்டு நாயாவது சிரிக்கிற மாதிரி எழுத வந்தா உடனே அடுத்த பாகத்தை எழுதி வெளியிட்டுடுவேன், சரியா? சூளுரைத்து சொல்லறேன், இது என் அடுத்த சபதம். (ஒரு நாளைக்கு நாலு சபதம் போட்டா, இது தான் பிரச்சனை. இது எத்தனாவது சபதம்னு நியாபகம் வர மாட்டேங்குது. நல்ல காலம் Excel spreadsheet ல எழுதி வச்சிருப்பதால தப்பிச்சேன்.)

-மீனா சங்கரன்

Wednesday, November 18, 2009

சந்தைக்கு போவணும், ஆத்தா வையும், எஸ்.எம்.எஸ்ஸ நிப்பாட்டு....

ஏர்-டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளின் சில மாதிரிகள்....

உண்மையான சம்பவங்களா, இல்லை நக்கலடிக்கும் அழைப்புகளா என்று தெரியவில்லை.....

இங்கே கேட்கலாம்....

Sunday, November 15, 2009

படம் பாரு கடி கேளு - 42


Camera Man: அட சீ ஒத்துய்யா! உன் கிட்டே "close up shot" எடுக்கிறேன்னு சொன்னது தப்பா போச்சே! Camera உள்ளேயே போயிடுவே போலிருக்கே.

Tuesday, November 10, 2009

சங்கீதத் துறை மாற்றங்கள்

தமிழ் நாட்டில் நல்ல் இசை நிகழ்ச்சியை கேட்பதெல்லாம் அரிதாகிவிட்டது. சென்னை நகரத்தில் ஆண்டு இறுதியில் ஒரே காலத்தில் பல மன்றங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. மற்ற நகரங்களில் இத்தகைய மன்றங்கள் சரியாக செயல்படவில்லை. முன்பெல்லாம் திருவிழா காலங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சிகள் கூட வேறு வகையாக போய்விட்டது.

நகரங்களில் பல விழா காலங்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் திரைப்படப் பாடல்களே இடம் பெறும் இந்த மெல்லிசை நிகச்சிகளில் இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

20ம் நூற்றாண்டுக்கு முன்பு கர்நாடக சங்கீதத்திற்கு என்று தனியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. ஹரிகதா பாணியில் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு இடையில் கர்நாடக பாணியில் கீர்த்தனைகள் பாடப்பட்டன. முழுவதுமாக கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களுடன் பாடும் வகையில் நிகழ்ச்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கின.

மெல்லிசை வகையில் சேரக்கூடிய ஜனரஞ்சகமான பாடல்கள், தெருக்கூத்து, நாடகம் ஆகிய மேடைகளில் பாடப்பட்டன. திரைப்பட வளர்ச்சி பெரிய அளவில் நிகழ்ந்த பிறகு மெல்லிசைக்கான தனி மேடை அமைந்தது. பெரும்பாலும் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் அந்த மேடைகளில் பாடினார்கள்.

மேடைகள் தனியாக அமைந்து நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்டது போலவே பக்க வாத்தியங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம்.

கர்நாடக சங்கீத மேடையின் நிலைமை வேறு. அதிகமான எண்ணிக்கையில் பக்க வாத்தியங்கள் கொண்ட கச்சேரிகள் இப்பொழுதெல்லாம் அநேகமாக நடைபெறுவதில்லை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் இப்படி எல்லா பக்க வாத்தியக் கலஞர்களுக்கும் தொகை கொடுப்பது சற்று கடினமானதாகப் போய்விட்டது முக்கிய காரணம்.

இப்பொழுது பெரும்பாலும் இரண்டே பக்க வாத்தியங்களுடன் நிகழ்ச்சி அமைவது வாடிக்கையாகி விட்டது. சிக்கனமான நிகழ்ச்சிக்கு வயலின் மிருதங்கம் இவை இரண்டும்தான் பிரதான இசைக் கருவிகள் என்ற நிலை வந்து விட்டது.

ஒரு காலத்தில் ஹார்மோனியம் என்ற இசைக் கருவி கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இன்று அந்த இசைக் கருவி கர்நாடக இசை மேடையை விட்டு இறங்கி விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் பாட்டு வாத்தியார் ஹார்மோனியத்துடன்தான் முதல் பாட்டைத் தொடங்குவார். ஆலந்தூர் விசுவநாதய்யர் என்ற சங்கீத வித்வானுடைய ஹார்மோனியம் வாய்திறந்து பேசுவது போல இருக்கும்.

மெல்லிசை நிகழ்ச்சி மேடைகளில் ஹார்மோனியம் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. நாடக மேடைகளிலும் இன்றும் அது உண்டு.

1930, 1940 களில் உறையூர் காதர் பாட்சா என்ற ஹார்மோனிய இசைக் கலைஞர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்தார். விளம்பர நோட்டீஸ்களில் நாடகத்தின் பெயரை எந்த அளவில் அச்சடிக்கிறார்களோ அந்த அளவில் பெரிதாக காதர்பாட்சாவின் பெயரை அச்சிட்டு விளம்பரம் செய்வார்கள். இரண்டு காட்சிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவருடைய ஹார்மோனியம் தன் இசையால் ரசிகர்களை கட்டிப் போடும்.
ஆனால் என்ன காரணமோ, பல சங்கீத வித்வான்கள் ஹார்மோனியத்தை கை கழுவி விட்டார்கள். பாரதியார்கூட ஹார்மோனியத்தை நல்ல சங்கீதத்தின் விரோதி என்று எழுதியிருக்கிறார். வானொலி நிலையங்களில் ஹார்மோனியம் அனுமதிக்கப் படுவதில்லை.

வயலின் ஒரு ஐரோப்பிய இசைக் கருவி. இன்று கர்நாடக இசை மேடையில் வயலின் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்து விட்டது. மிகக் குறைந்த பக்க வாத்தியம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் ஒரு இடம் வயலினுக்கு நிச்சயமாக உண்டு.

சமீபத்தில் காலமான திரு. குன்னக்குடி வைத்தியநாதனுடைய வயலின் இசையை இந்த தலைமுறையினர் கேட்டிருக்கலாம். அவருடைய வயலின் வாய் திற்ந்து பேசும், பாடும், அழும், சிரிக்கும், அவர் மட்டும்தான் அசுர வாத்தியமான தவில் மேளத்தை பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால் சில சுத்த கர்நாடக சங்கீத ரசிகர்கள் குன்னக்குடியின் இசையை கர்நாடக பாணியாக ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படி எல்லா துறையிலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் ஏற்படும் மாற்றங்களை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய அம்சங்கள் தலையெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களெல்லாம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மொழி தொடர்பான விஷயம் கர்நாடக சங்கீத உலகில் பெரிய விவாதத்தை தொடங்கி வைத்து அது இன்றளவும் முழுமையாக முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.

அந்த விவாதம் தான் தமிழ் இசை தொடர்பான விவாதம்.
19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் கர்நாடக இசையில் பெரிய எழுச்சி ஏற்பட்டது அதுதான் தியாகராஜ சுவாமிகளின் பிரவேசம். அவருடைய கீர்த்தனைகள் சங்கீத உலகத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான அவருடைய சாகித்யங்கள் தெலுங்கு மொழியின் அழகோடும் சங்கீத இலக்கணம் முழுவதுமாக பொருந்தி பாவத்தோடும் நெஞ்சைத் தொடும் பக்திப் பரவசத்தோடும் பாடுவதை எல்லோரும் ஈடுபாட்டோடு கேட்கத் தொடங்கினார்கள்.

அவருடைய கீர்த்தனைக்ள் பெருமளவில் பாடத் தொடங்கிய பிறகுதான் இசை நிகழ்ச்சிக்கு என்று தனி மேடை அமைந்தது என்று கூட சொல்லலாம். காலப்போக்கில் தியாகைய்யரின் கீர்த்தனைகளே இசை மேடையின் முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மற்றபடி தீட்சிதர், புரந்தரதாசர் பாடல்கள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெற்றன. தெலுங்கு, வடமொழி கீர்த்தனைகளுக்கு இடையில் இசைக் கலஞர்கள் தமிழ் மொழி கீர்த்தனைகளை மறந்தே போய் விட்டார்கள். தமிழ் மொழியில் அருணாசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் ஆகியோர் பாடிய, இயற்றிய கீர்த்தனைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

தியாகைய்யருடைய மேன்மையான கீர்த்தனைகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழ்நாட்டிலேயே தமிழ் இசை பாடல்களை பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டது. கர்நாடக இசை மேடையில் தமிழ் மொழிப்பாடல்களுக்கு இடம் கொடுக்காத நிலை பற்றி நியாயமான வருத்தம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய சங்கீதத்துக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு மாநாடு பரோடா நகரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இசைக் கலைஞர்களும், இசைத் துறை ஆய்வாளார்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தைத் தெரிவித்தனர்.

1916ம் ஆண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் செர்ந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கலந்து கொண்டார். ஆபிரகாம் பண்டிதர் ஏற்கனவே கர்நாடக இசை, தமிழ் இசை, பண் வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் பழங்காலத்திய பண் வகைகளைப் பற்றி தெளிவான விளக்கம் கொண்டதாக உள்ளது. தன்னுடைய கருத்துக்களை எடுத்து சொல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகா ஜன சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார். அந்த அமைப்பு மூலம் பல தமிழ் கீர்த்தனைகளை எழுதி இசை அமைத்து கர்நாடக பாணியில் பாடும் முறைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

நாட்டு விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை இந்தியாவில் பல கலைகள் புத்துயிர்ச்சி பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது. குறிப்பாக இந்தியாவின் இசை பாரம்பரியம் காக்கப்படுவது பற்றி பலர் ஆர்வம் காட்டினார்கள். 1927ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபை வருடாந்திர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு மாநாட்டுச் செலவு போக மீதம் இருந்த தொகையை நிதி உதவியாக கொடுத்தது. அதை மூலதனமாக கொண்டு மியூசிக் அகாடெமி என்ற அமைப்பை உருவாக்கினர். மியூசிக் அகாடெமி ஆண்டு தோறும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் இசைத் துறை தொடர்பான ஆராய்ச்சி நடக்கவும், இசைப் பயிற்சி கொடுத்து இளைய தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்குவதிலும் செயல் பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள கீர்த்தனைகளை பாடவேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் நிறைவேறவில்லை. பலர் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

உ.வே. சாமிநாதய்யர் தமிழர்கள் இசையும், இசைக் கருவிகளும் என்ற தலைப்பில் சென்னையில் ஒரு ஆராய்ச்சி சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவில் பழைய தமிழ் பண்களுக்கு சமமான கர்நாடக இசை ராகங்களை எடுத்து விளக்கி அவற்றில் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

சி.ஆர். சீனிவாச அய்யங்கார் என்ற அறிஞர் மியூசிக் அகாடெமி ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கான கோடைக்கால இசைப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்துப் பேசினார். தன் உரையில் தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்ற வாதத்தை மறுத்து தன் இளமைப் பருவ காலத்தில் மேடைகளில் பாடப்பட்ட அருணாசல கவிராயர், கவி. குஞ்சர பாரதி பாடல்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேன்மையை விளக்கினார்.

செட்டிநாட்டரசர் ராஜா அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கல்லூரியில் சங்கீதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

சங்கீதத்திற்கு மொழி கிடையாது. சங்கீதமே ஒரு தனி மொழி. ஆகையால், கர்நாடக சங்கீதத்தில் மொழிப் பிரட்சினையை எழுப்பக் கூடாது என்று சிலர் வாதம் செய்தனர். சில சமயங்களில் தமிழ் இசைக் கோரிக்கைகளுக்கு ஜாதி வர்ணம் பூசும் முயற்சியும் நடந்தது. ஆனால் பல முன்னணி இசைக் கலைஞர்களும், கல்கி போன்ற பத்திரிகையாளர்களும் தமிழிசை வளர்ச்சியின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தினார்கள். கல்கி தன்னுடைய பத்திரிகையில் தமிழிசை பற்றி தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார். நாமக்கல் கவிஞர் போன்ற இலக்கியத்துறை சார்ந்தோரும் வலியுறுத்தினர்.

பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் ஆகியோர் புதியதாக பல நல்ல தமிழ் கீர்த்தனைகளை எழுதினர். பாபநாசம் சிவன் எழுதிய சில திரைப் படப் பாடல்களும் தமிழ் இசை நிகழ்ச்சி மேடைகளில் பாடத்தக்க அளவில் தகுதியானவையாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் தமிழிசைக்கு சரியான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழிசை சங்கங்கள் வைத்தது. தமிழ் மொழி ஆர்வலர்களும், இசை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதால் இன்று கர்நாடக இசை மேடையில் தமிழிசை ஓரளவுக்கு இடம் பெறத் தொடங்கி விட்டது. கர்நாடக இசைத் துறையில் கடந்த பல ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இசைக் கருவிகளில் மாற்றம், ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் மென்மையான செல்வாக்கு, இப்படி எவ்வளவோ மாற்றங்களும் ஏற்படுத்தாத சலசலப்பை சங்கீத உலகில் தமிழ் இசை பற்றிய விவாதம் ஏற்படுத்தி விட்டது.

இதற்கு முக்கியமான காரணம் சங்கீத உலகத்திற்கு அப்பாற்பட்ட சமூக காரணங்கள். அந்த பிரச்சனையில் நுழைவது நம்முடைய நோக்கமல்ல, அதற்கான நேரமும் இல்லை.

மு. கோபாலகிருஷ்ணன்.