Sunday, July 19, 2009

படம் பாரு கடி கேளு - 35


சார், இடது கால் சுண்டி விரலில் நமநமன்னு அரிக்குது. லேசா சொரிஞ்சு விடறீங்களா? நான் இது மேலிருந்து இறங்கி வரும் வரை தாங்காது போலிருக்கு ப்ளீஸ்.....

Saturday, July 18, 2009

தவளை நேர்த்திக் கடன்

சமீபத்தில் பிள்ளையாண்டான் ஏதாவது ஊர்வதையோ நீர்நில வாழ்வியையோ ( reptile or amphibian) ஒரு மாதம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நேர்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு ஊர்வன என்றால் கொள்ளைப் பிரியம். நீங்களே பாருங்கள் ஒரு பாம்பை வைத்துக் கொண்டு பு(ள்)ளகாங்கிதம் அடைவதை...



அந்தப் பாம்புக்கும் இவனை ரொம்பப் பிடித்து விட்டது.



சரி ஒரு பாம்பு வளர்க்கலாம் என்று பார்த்தான். சரி வாடா மேலிடத்தில் சொல்லி வாங்கித் தருகிறேன் என்றேன். இந்த சோளப் பாம்பு (corn snakeகுங்க) ரொம்ப அழகு.  ஆபத்தும் கிடையாதாம். மேலிடத்தில்  வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆபத்து இல்லாத பாம்பு என்ன வேண்டிக்கிடக்கிறது....

அவனுடைய நண்பன் ஒரு பல்லியையோ தவளையையோ தருகிறேன் என்றான்.  ஒரு மாதம் நேர்த்திக் கடன் முடிந்தவுடன் திரும்ப கொடுத்துவிடலாம் என்று மேலிடத்தில் சிபாரிசு பண்ணி வைத்தேன். நண்பனிடம் கேட்டு வைத்துக் கொள்ளடா என்ன எல்லாம் வேண்டும் என்று சொல்லியிருந்தேன். நமக்கு எல்லாம் கடைசி நிமிஷ ஆயத்தம்தானே. ஒன்றும் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் வீட்டில் இல்லாததால் தொலைபேசியில் தகவல் வைத்திருக்கிறேன் என்றான். நண்பனின் தந்தைக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்கள் வெளியூருக்குப் போயிருப்பதாகவும் திரும்பும் நாள் வந்து தவளை எடுத்துக் கொள்ளலாம் என்று பதில் வந்தது.

ஒரு நாள் காலை அவர் அழைத்தார். ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கிறாராம். ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவோம், நீங்கள் இரவு சுமார் எட்டு எட்டரைக்கு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்றார். அவ்வளவு நேரம் கழித்து வந்தால் பரவாயில்லையா என்றேன். இல்லை ஒரு எட்டு எட்டரைக்குத்தான் தவளை எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கும் என்றார்.

என்னது!!?? வெளியே வர ஆரம்பிக்குமா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடாஇது என்றேன் பிள்ளையாண்டானிடம். தெரியாது என்று வழக்கமான தோள்குலுக்கல் பதில் வந்தது.

தொலைபேசியில் அவரிடம் நான் என்ன கொண்டு வரலாம் என்று கேட்டேன். ஏதாவது பாட்டிலோ டப்பாவோ கொண்டு வாருங்கள், உங்களுக்கு வேண்டிய மட்டும் பிடித்துக் கொண்டு போங்கள் என்றார். நான் ஏதோ அந்தப் பையன் வளர்க்கும் செல்லப் பிராணியை ஒரு மாதம் கடன் கொடுக்கிறான், நாம் போய் அவன் வைத்திருக்கும் டெரேரியம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் வீடு ஒரு பண்ணைநிலத்தில் இருக்கிறது. வீட்டு பின்னால் ஒரு குளம், ஆறு என்று இயற்கையோடு ஒன்றிப் போயிருக்கிறவர்கள். அவர்களிடம் போய் எனக்கு ஒரு பல்லியோ, தவளையோ வேண்டும் என்று கேட்டால்?  என்ன சொல்வார்கள் - வந்து எத்தனை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு போங்கள்.

அன்று மாலை போய் அவர்களின் அழகான வீட்டின் பின்னால் ஒரு அழகான செயற்கைக் குளம். அதில் என் பிள்ளை சைஸுக்கு அழகான ஒரு koi மீன். குளத்தில் எல்லாம் குளிக்க மறுத்துவிட்டு அவர்கள் பிடித்துக் கொடுத்த  நான்கு மரத்தவளைகளை (tree frog) கொண்டு வந்து அவைகளுக்கு நித்தம் நீர் தெளிப்பது, இலை,கிளை வைப்பது, கிரிக்கெட்பூச்சித்தீனி வைப்பது என்று விரதம் போய்க்கொண்டு இருக்கிறது.  ஒரு மாதம் தாங்குமாடா என்றேன். இவை செத்து விட்டால் என்ன, போய் இன்னும் நாலு பிடித்துக் கொண்டு வந்தால் போச்சு என்றான். ஒரு மாதம் தவளை பார்த்துக் கொள்வதுதான் கணக்காம். அதே தவளைகளை என்று சொல்லவில்லையே.... :-)

டி.கே.பட்டம்மாள் - அஞ்சலி

இசைமேதை டி.கே. பட்டம்மாள் ஜூலை பதினாறாம் தேதி சென்னையில்  காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே பாடலை இவரை விட அருமையாக யாரும் பாடமுடியாது... கானா பிரபாவின் தளத்தில் நீங்களே கேட்டுப் பாருங்கள்.... 

 

படம் பாரு கடி கேளு - 34


ஒட்டகம்: என்ன இருந்தாலும் வீட்டுக்கு தெரியாம நாம ஓடி வந்தது எனக்கு பயமாயிருக்கு
பன்றி: நீ எதுக்கும் கவலைப்படாதே! நான் உன்னை கண்கலங்காம காப்பாத்துவேன். வழியிலே சில பேர் சொன்னதை கேட்டியா? நம்ம ஜோடி தான் டாப்!

Sunday, July 12, 2009

மீனாவுடன் மிக்சர் - 8 {அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?}

சிலரோட பேச்சில் தேன் ஒழுகும் அப்படீன்னு சொல்லி கேட்டுருக்கேன். இரண்டு நாட்கள் முன்னாடி சன் டீவியில் ஒரு பெண்மணி குழந்தை வளர்ப்பு பற்றி அப்படித்தான் ரொம்ப அழகாக, இனிமையாக, தெளிவாக பேசினாங்க. குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் அன்பாக பேசி நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னாங்க. இன்று பல அம்மாக்கள் கொத்தனார் சிமென்ட் பூசுவது போல் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதை பார்த்தால் நாம் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்குன்னு வருத்தத்தோட சொன்னாங்க. இன்னும் குழந்தை வளர்ப்பு பற்றி ஆச்சரியத்தக்க விஷயங்கள் நிறைய சொன்னாங்க. இவங்களை மட்டும் நான் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமா காலில் விழுந்திடுவேன். அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு.

தினமும் இருபத்து நாலு மணி நேரத்தில் எப்படியாவது ஒரு எட்டு மணி நேரமாவது நான் என் குழந்தைகளைத் திட்டாமல் இருக்க முயற்சி செய்வேன். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இரவு எட்டு மணி நேரம் அவங்க தூங்கரதாலே இது முடியறது. மீதியுள்ள நேரமெல்லாம் வாளும், அம்பும் இல்லாத போர்களம் போல் அமர்க்களப்படும் எங்கள் வீடு. பீஷ்மரும், துரோணரும் மறுபிறவி எடுத்து வந்தால் கலியுக குருக்ஷேத்ரம்னு எங்க வீட்டு வாசல்லதான் தேரோட வந்து நிப்பாங்க. பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை எழுப்பி தயாராக சொல்லி கழிவறைக்குள் தள்ளி விட்டு சமையலறைக்குள் நான் வந்த பத்தாவது நிமிடம் சங்கு ஊதாமலே போர் தொடங்கி விடும் எங்க வீட்டில்.

"மணி ஆறு அம்பது. Breakfast ready. சீக்கிரம் வாடா கண்ணம்மா கீழே."

"-----------------------------"

"ஏழு பத்து. பல் தேச்சாச்சா இல்லியா? நான் வரட்டா மாடிக்கு?"

"--------------------------------"

"ஏழு பன்னண்டு. மாச மசன்னு என்னடீ பண்ணிண்டு இருக்க அங்க? "

"இன்னிக்கு Spirit wear டே அம்மா. என் ஸ்பெஷல் ஷர்ட் எங்கே?"

"எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கேக்கற? இன்னும் அரை மணி கழுச்சு கேக்கறது தானே? கழுதை. நேத்து ராத்திரி என்ன பண்ணின இத பாத்து எடுத்து வச்சுக்காம?"

"----------------------------------"

"வாயில் என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லேண்டி."

இப்படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் ஒரு சாதாரண நாள் இரவு நாங்கள் படுக்கும் முன் என்னை ராட்சசியாக ஆக்கி விட்டு தான் முடியும். பொறுமையை மட்டும் கவர்மென்ட் ரேஷனில் கொடுத்தால் முதல் நாளே போய் படுத்து க்யூவில் இடம் பிடித்து ஒரு பத்து கிலோ அதிகமா வாங்கிடுவேன் நான். எங்க வீட்டில் அரியதொரு பண்டம் அது தான். சிரித்த படியே குழந்தைகளை கண்டிக்கும் முறை அறிந்த தாய்மார்கள் போர்ட் மாட்டி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தால் ரெஜிஸ்டர் பண்ண நான் தயார். ஆனால் நரசிம்ம அவதாரம் போல் காட்சி கொடுத்து பழகிய நான் பழக்கமில்லாமல் சிரித்து அன்பா பேசினால் என் குழந்தைங்க திடுக்கிட்டு போய் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. இந்த அஹிம்சா முறை குழந்தை வளர்ப்பை படிப்படியா தான் செயல் முறைல காட்டணும்னு நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் குழந்தை வளர்ப்பு எப்படீ? அஹிம்சை முறையா? மீனா முறையா? சும்மா சொல்லுங்க.

-மீனா சங்கரன்

Wednesday, July 08, 2009

ரிச்மண்டில் பூகம்பம்!

ஆறாம் தேதி நள்ளிரவில் வீட்டுப் பின்னால் ஏதோ மரம் விழுந்தது மாதிரி ஒரு சத்தம். தரையும் அதிர்ந்தது. பின்னால் எட்டிப் பார்த்தால் எந்த மரமும் விழுந்திருக்கவில்லை. இடியாய் இருக்கவும் வாய்ப்பில்லை. யோசனையுடன் தூங்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் வேலையில் பிரயாணம் செய்யவேண்டியிருந்ததால், தோட்டத்தை நன்றாகப் பார்த்துவிட்டு, கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் நாராயணன் சென்னையில் இருந்து ஃபேஸ்புக்கில் விஷயம் அனுப்பியிருந்தார் நம்ம ஊரில் சின்ன்ன்னன நிலநடுக்கம் என்று. உள்ளூர் செய்தித்தாளில் விஷயத்தை நுனிப்புல் மேய்ந்து விட்டு அலுவலகம் செல்லும்போது இன்னொரு நண்பனின் வாய்ஸ்மெய்ல் வந்தது. உங்க தெருவில் பூகம்பமாமே - எல்லோரும் நலமா என்று...

பார்த்தால் என் வீட்டுக்கு நேர் பின்னால் பூகம்பம்! நல்லவேளை - ரிச்டர் கணக்கில் 2.3 அளவே ஆன நிலநடுக்கம். தப்பித்தோம்!
செய்தி விரிவாக இங்கே...  குல்லாவை கழட்டிவிட்டு பேட்டிக்கு வாங்கய்யா.. மூஞ்சே தெரியல... இந்த ஆளு எங்க தெருவான்னு சந்தேகமா இருக்கு.

இது தொடர்பான பக்கங்கள் இங்கே பார்க்கலாம்.... பிங் தேவர் இன்னும் நம் ஆண்டவர் கிட்ட கூட வரவில்லை இந்த விஷயத்தில்.

Monday, July 06, 2009

வாத்து


வெள்ளை நிற வாத்து
பனிமழையின் நிறம் கொண்ட வாத்து
அமைதியின் வண்ணம் கொண்ட வாத்து
அழகோ அழகு இந்த அற்புதமான வாத்து

கண்டேனே போன வருடம் ஒன்று
இன்று கரைக்கு வந்ததோ ஐந்து
மனம் மகிழ்ச்சி கொண்டது அதைப் பார்த்து!

பாலின் நிறம் கொண்ட வாத்து
புத்துணர்ச்சி தருகின்ற வாத்து
இறைவனின் படைப்பில் ஒன்று
தூய்மையான தும்பைப்பூ நிறம் கொண்ட இந்த வாத்து !

கிராமத்து வீடு

தாத்தா பாட்டி கட்டின வீடு
அத்தை மாமா ஆண்ட வீடு
பேரன் பேத்தி விளையாடிய வீடு
கொள்ளு பேரன் பேத்தி தவழ்ந்த வீடு
அன்று மூன்று தலைமுறை பார்த்த வீடு
இன்று பதிமூன்று லட்சத்திற்கு விற்ற வீடு
மலரும் நினைவுகளை பதித்த வீடு !!!

வலை வலம்

உங்க வீட்டில் மீன் அல்லது பூண்டு குழம்பு வைத்த பாத்திரம் ஒரு வாரம் கழுவிய பின்னும் அந்த வாசம் போகவில்லையா? உங்கள் காலனிகளில் தார் பட்ட கறையை எடுக்க வேண்டுமா? இதுபோல பல கேள்விகளுக்கு நல்ல உபயோகமுள்ள டிப்ஸ் இந்த வலை தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளனர். மேலும் இந்த தளத்திற்கு நீங்கள் டிப்ஸ் வழங்கி அது பதிவானால், Clean Water Fund என்ற பயனுள்ள அமைப்பிற்கு இவர்கள் இருபத்தி ஐந்து சென்ட் (கால் டாலர்) டோனஷனாக வழங்குகிறார்கள். இந்த தளத்தை பாவிக்க எந்த கட்டணமும் இல்லை, உங்கள் ஈமெயில்-ஐ-டி-யும் கொடுக்க வேண்டியதில்லை. இதுபோல மற்றொரு தளம் http://www.ehow.com . இது போல உங்களுக்கு தெரிந்த உபயோகமுள்ள தளங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நம்மில் பலரும் அமெரிக்க நிறுவனங்களின் தொலைபேசிவழி செவகர்களுக்காக பல

மணி நேரங்கள் காத்திருந்து நேரத்தை வீணடித்திருப்போம். பல சமயம் இணைய வழி நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தகவல்களையெல்லாம் http://gethuman.com/ என்ற தளத்தில் விரிவாக தொகுத்து வழங்குவதுடன், விரைவாக மனித செவகர்களை அடைய வழிகளையும் கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஐ-போன் வைதிருப்பவரானால், அதில் பாவிக்கவும் இவர்கள் ஒரு மென்பொருளை கொடுக்கின்றனர்! என்னோட ஐ-போனில் இதை ஏற்றி வைத்துள்ளேன், சமயத்திற்கு உதுவும் நண்பன்!

உங்க வீட்டில் திருடன் கதவு/சன்னல் உடைத்து நுழைய முற்பட்டால் என்ன செய்வீர்கள்?

சில வீடுகளில் ஹோம் அலாரம் போன்ற சந்தா கட்டிய செக்யூரிட்டி அமைப்புகள் வைத்திருந்தால் அது உடனே அந்த நிறுவனத்தை அலர்ட் செய்யும். நம்மில் பலருக்கு இந்த வசதி வீட்டில் இருக்காது. திருடன் நுழைய முற்படுவதை நீங்கள் பார்த்துவிட்டால் உடனே 911 அழைத்தால் போலீஸ் வந்துவிடும். ஆனால் வரும் வரை திருடனை சமாளிக்க வேண்டுமே! சரி

உங்கள் தொலைபேசி வேலை செய்யாவிட்டால் இதுவும் சாத்தியமில்லை (எங்க வீட்டினுள் செல்லிடை தொலைபேசி சில சமயம் வேலை செய்வதில்லை). உங்க வீட்டில் காரில் பொதுவாக "keyless entry /alarm" சாவி வைத்திருந்தால் அதை வைத்து திருடனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம். அதிலுள்ள "Panic" சிவப்பு பொத்தானை அமுக்கினால் உடனே உங்கள் காரில் இருக்கும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கும். இது காரின் பேட்டரி சாகும் வரை சத்தம் கொடுக்கும். இதை காணும் திருடன் உடனே இடத்தை காலி செய்து ஓட வாய்ப்புகள் அதிகம். அதற்குள் போலீஸ் வந்துவிடும் சாத்தியம் உள்ளது. அது தவிர உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொடரும் பெரும் சத்தத்தை கேட்டு போலீஸ்சை அழைத்துவிடுவார்கள். திரும்ப "Panic" பொத்தானை அமுக்கி சத்தத்தை நிறுத்திவிடலாம். ஒரு சின்ன விஷயம், உங்களுக்கு அருகில் காரின் சாவியை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்! இது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதைபோல பல நல்ல சேமிப்பு ஐடியாக்களை http://www.wisebread.com/ என்ற தளத்தில் காணலாம்.

Sunday, July 05, 2009

மீனாவுடன் மிக்சர் - 7 { கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்)

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

குறுகிய சந்நிதி தெருவில் நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , எப்படியோ நாலு கார்கள், அஞ்சு ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் ஒரு பத்து மாடுகளோடு போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.

---------------------------------

-மீனா சங்கரன்