Tuesday, June 02, 2009

மீனாவுடன் மிக்சர் - 1

தொலைக்காட்சியில் 'அனுவுடன் காப்பி' (அதாங்க Koffee with Anu) என்று ஒரு தொடர் வருகிறதாமே? கேள்விப்பட்டேன். அனுவோட காப்பி குடிக்கரச்ச மீனாவோட மிக்சர் சாப்பிட கூடாதா? அப்படி நினைச்சு தான் இப்படி ஒரு பேர் வச்சிருக்கேன். ர்ய்மிங்கா வேற இருக்கு.

இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டு கொண்டே மேற்க்கொண்டு படிங்க.

---------------------------------------------------------------------------------------------
சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

எல்லாருக்கும் கனவுகளும் ஆசைகளும் உண்டு. கண் மூடி கனவுகளில் திளைக்கையில் சிலருக்கு வைர வைடூரியங்கள் தெரியலாம். சிலருக்கு எழுபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டி தெரியலாம். சிலருக்கு சமீபத்தில் வெளி வந்த புது மாடல் செல் போன் தெரியலாம். இன்னும் சிலருக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களை கழிப்பது போல தெரியலாம். எல்லாமே வெளியே சொல்லி கொள்ளும்படியான அழகான கனவுகள்.

எனக்கு கனவில் தெரிவதெல்லாம் ஒரு கிண்ணத்தில் சாம்பார் வடை தான். அதுவும் சரவண பவன் ஹோட்டல் சாம்பார் வடை. சின்ன வெங்காயம் வாசனை மூக்கை துளைக்க (சத்தியமாக எனக்கு கனவில் வாசனை வருதுங்க), மின்னும் எவர்சில்வெர் கிண்ணத்தில் மேலே பொடிப்பொடியா நறுக்கின வெங்காயமும் கொத்தமல்லியும் மிதக்க சரவண பவனோட சாம்பார் வடை சமீப காலமாக என் கனவில் வந்து என்னை ரொம்ப தொல்லை செய்கிறது. யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? "ஐயோ பாவம், பல வருடங்களாக பட்டினி போல இருக்கு" என்று நினைக்க மாட்டார்களா? இந்த கனவை எப்படியாவது மாற்றி ஆக வேண்டும் என்று நேற்று இரவு படுக்க போவதற்கு முன் மனக்கண்ணில் அழகான பட்டு புடவைகளும் ஜொலிக்கும் நகைகளையும் கொண்டு வந்து பார்த்து விட்டு படுத்தேன். நாலு பேரிடம் சொல்லி கொள்வது போல் ஒரு கனவு வர வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி விட்டு தூங்கினால் என்ன கனவு வந்தது சொல்லுங்கள்? அதே கிண்ணம், அதே வடை, அதே சாம்பார்.

இன்னும் பதிமூன்றே நாட்களில் இந்தியாவில் இருப்பேன். இன்றிலிருந்து இரண்டாவது திங்கள் விடிகாலை மூன்று மணியளவில் விமானம் சிங்காரச் சென்னையில் இறங்குகிறது. விமானத்தளத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சரவணபவன் ஹோட்டலில் இறங்கி சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்று நான் கேட்டதற்கு வீட்டில் கீழ்ப்பாக்கத்தில் வேண்டுமானால் நிறுத்தி விட்டு செல்லலாம் என்று சொல்கிறார்கள். என் மூளை மிகப்பெரியது இல்லை தான். ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மூளைக் கோளாறு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையா? இது கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை?

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இவர்களை எல்லாம் நம்பினால் என் சரவண பவன் சாம்பார் வடை ஆசை படு குழியில் தான் விழப்போகிறது. என் காலே எனக்குதவி என்று ஊருக்கு சென்ற மறுநாள் ஒரு ஆட்டோ பிடித்து சரவணபவனுக்கு போய் சாம்பார் வடைக்கு ஒரு சலாம் போட்ட பிறகு தான் தங்கமாளிகை பக்கம் நகை வாங்க செல்லுவேன். சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

ஹையா(யோ) இந்தியா போறோம் (மூன்றாம் பாகம்)

பயண நாள் நெருங்கி விட்டது (ஒரு மாதமே உள்ளது)

ஒரு காலத்துல இந்த நாள் வருவதற்கு முன்னமே பெட்டிகள் எல்லாம் தூசு தட்டி பரத்தி வைத்து, ஒவ்வொன்றிலும் ஒரு 15% பாக்கிங் முடிந்திருக்கும். அப்போதெல்லாம் ஹையா இந்தியா போறோம் என்கின்ற உணர்ச்சி. இப்போ என்னடான்னா இன்னும் அந்த உணர்வு கூட இல்லை, நாள் நெருங்குகின்றதே என்று.

ஆனால் இந்தியாவிற்கு வாங்கி செல்ல வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையும், அந்தப் பட்டியல்களும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஒரு யூகம் செய்தாலே நம்முடைய பெட்டிகளின் எண்ணிக்கை கூடுகின்றதை உணர முடிகிறது. எங்களது சபதம் #1, #2, #3 நிறைவேற்ற முடியாது என்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட துவங்கியுள்ளது. இதன் கூடவே இன்னும் ஒரு பட்டியலும் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதாங்க, நாம் இந்தியாவில் இருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள்.

இங்கிருந்து போகும் பொருட்களில் பல விதம். (நான் அவசியம், அனாவசியம் என்ற வாதத்திற்குள் நுழைய போவதில்லை). எல்லாமே ஒவ்வொரு விதத்தில் நியாயம்தான்.
  1. இந்தியவில் இருந்து வரும் பட்டியலில் உள்ள பொருட்கள்.
  2. நாம், அங்கிருப்பவர்களுக்கு தேவையுள்ளதாக இருக்கும் என்றோ, அன்பளிப்பாகவோ, தயாரிக்கும் பட்டியலில் உள்ளது. இந்த வகை தான் என்னை குழப்பத்தில் ஆழ்த்தும் . மீண்டும் மீண்டும் அதே பொருட்கள்தான். பாதாம், ஜிப் லாக், சோப்பு, சீரியல், ஓட்மீல், ரெய்சின்....இதெல்லாம் நுகரும் பொருட்கள். ஓரிரு மாதங்களில் தீர்ந்ததும், இந்தியாவில் இருப்பவர்கள் அங்கு கிடைக்கும் பொருட்களுக்கு திரும்பி போய்விடுவார்கள். ஏன் தான் எடுத்து செல்கிரோமொன்னு தோணும். அங்கு கிடைக்காத பொருட்களை எடுத்து சென்றாலாவது பயன் உண்டு. அனால் நம்ம திருந்தவே மாட்டோம்.
  3. நாம் அங்கிருக்கும் பொழுது நம்முடைய உபயோகத்திற்கென்று எடுத்து செல்வது.
  4. இங்கிருக்கும் நமது நண்பர்கள் அவர்களது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நம் மூலம் குடுத்தனுப்பும் பொருட்கள்
இந்த பட்டியல்கள் குவிந்த வண்ணம் இருக்க, இன்னும் ஷாப்பிங் பண்ண தொடங்கவில்லை என்று நினைத்தால் தலை சுற்றுகிறது. இத்தொடரின் நாலாம் பாகத்திலாவது இந்நிலை மாறியிருக்குமா?

பொறுத்திருந்து பாருங்கள் வேடிக்கையை.
நாராயணன்

இனிவரும் பாகங்கள்:
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார்.
அதற்குப் பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

Monday, June 01, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (இரண்டாம் பாகம்)


டிக்கெட் வாங்கும் படலம்:


இந்திய போவதென்பது உறுதி ஆகிவிட்ட நிலையில் அடுத்து வரும் தலை வலி, பயண டிக்கெட் வாங்குவது. இதிலென்ன சார் பெரிய கஷ்டம் இருக்க முடியும்னு நீங்க நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமா என்ன? எங்கள் வீட்டில் என்றுமே இது எளிதில் சாதித்த ஒரு விஷயம் அல்ல.


பயணம் செய்யும் தேதி ஓரளவிற்கு யூகம் வந்த உடன், எங்களுக்கு தெரிந்த டிராவல் எஜன்ட் நம்பர் எல்லாம் தூசு தட்டி எடுத்து ஒரு பட்டியல் போட்டோம். எமக்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்த ஏஜன்ட் நம்பர்களையும் அதில் சேர்த்து ஒவ்வொரு ஏஜண்டாக கூப்பிட்டு எல்லோரிடமும் எங்களுடைய பயண திட்டத்தை அறிவித்து டிக்கெட் தேடும் பணியை அவர்களுக்கு குடுத்தோம். அனால் குழ்ப்பம் என்னவென்றால் ஒவ்வொரு ஏஜண்டும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். தலையே சுற்றுகிறது.


ஒரு வழியாக முடிவுக்கு வந்து டிக்கெட் வாங்கியதும் இந்த தலை வலி முடிந்தது என்கிறீர்களா? இல்லை. இப்போ தான் நமக்கு தெரிந்தவர்கள் பலர் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கிடைத்த விலையை சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவர்.


போனால் போகட்டும் போடா என்ற பாடலை நினைவிற்கு கொண்டு வந்து தேர்த்திக்கொள்ள வேண்டியது தான்.


இந்தியாவிலே இருக்கும் உறவினர் எல்லோருக்கும் நமது பயணத்தை பற்றிய விவரங்கள் அறிவித்த உடன் அதோட நிற்காமல் அவர்களுக்கு இங்கிருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதன் பட்டியல் போட்டு அனுப்ப சொல்கிறோம்.


ஆஹா..இப்போ தான் காமெடி ஆரம்பம்.


மேலும் அடுத்த பாகத்தில்...

நாராயணன்


Sunday, May 31, 2009

மட்டை தேங்காய் தெரபி

என்னை மறை கழண்ட கேஸ்னு அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. அடிக்கடி டென்ஷன் ஆகற ஆளா இருந்தீங்கன்னா நீங்க கூட இந்த தெரபியை முயற்சி பண்ணலாம். அது என்ன மட்டை தேங்காய் தெரபி ன்னு கேக்கறீங்களா? அதை ஒரு கதை மூலம் உங்களுக்கு சொல்லறேன். தமிழ் சினிமாவில் flash back காமிக்க வட்டமா ஒரு சக்கரம் சுழன்று சுழன்று போகும் பாத்திருக்கீங்களா? இப்போ உங்க மனக்கண்ல அத பாத்துகிட்டே இந்தக் கதையை கேளுங்க. இது ஒரு உண்மை சம்பவம்.

------------------------------------------------------------------------
"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் சமையல் கடையை முடியுங்கோ." பெரியப்பா சொல்லிட்டு பரண் மேல் ஏறி மட்டை தேங்காய்களை இறக்க ஆரம்பித்தார். அப்பா பூஜை அறையில் கணீர்னு ருத்ரம் சொல்லறது கேக்கறது. கடிகாரத்தை பார்த்தேன். இன்னிக்கு தினத்தை விட அப்பா ரொம்ப நேரமா பூஜை பண்ணறா. காரணம் எல்லோருக்கும் தெரியும். அது தான் இன்னும் அரை மணில ஆரம்பிக்கப் போறதே.

"ஸ்கூல் ஹோம்வர்க் எல்லாம் முடிச்சாச்சா? இன்னும் அரை மணியில ஆரம்பிச்சிடும். அப்புறம் உங்க யாரையும் பிடிக்க முடியாது. இப்பவே முடுச்சு வச்சுண்டா உங்களுக்கு தான் நல்லது" அம்மா அங்கலாய்ச்சிண்டே சமையல் அறைக்கு போறா. "இன்னிக்கு மைசூர் பாக் கிண்டிப் பார்ப்போம். சமையலோ சீக்கிரம் முடிஞ்சுடும். என்ன சொல்ற?" பெரியம்மா அம்மாவிடம் கேட்பது காதில் விழுந்தது. "இன்னும் அரை மணியுல இவாள்ளாம் பிசியாயிடுவா. நம்பள யாரும் புடுங்க மாட்டா. அப்போ ஸ்வீட் கிண்டலாம்." அம்மாவும் பெரியம்மாவும் சர்க்கரைப்பாகு எந்த பதத்துல இருக்கணும்னு வாதம் பண்ணறது கோடியாத்து வரைக்கும் கேட்டிருக்கும்.

"வாசல்ல தாழ்பா திறக்கற சத்தம் கேக்கறது. யாருன்னு பாருங்கோ." பெரியப்பா உள் அறையிலேர்ந்து சத்தம் போடறா. எட்டிப் பார்த்தேன். எதிர் ஆத்து மாமா வந்துண்டு இருந்தார். பூஜையை முடிச்சிண்டு அப்பா அப்போ தான் வெளியே வந்தார். "வாங்கோ கோபாலகிருஷ்ணன் சார். பூஜை இப்ப தான் முடிச்சேன். பிரசாதம் எடுத்துக்கோங்கோ." அப்பா தட்டை நீட்டினார். "ஒ இன்னிக்கி ஸ்பெஷல் பூஜையா? வெரி குட் வெரி குட். God is great. கடவுள் துணை நமக்கு இன்னிக்கு ரொம்ப வேணும் சார். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. சரியான நேரத்துல எங்காத்துல கரண்ட் போயிடுத்து. மாப்பிள்ளைகள் ரெண்டு பெரும் வேற இதுக்குன்னே இன்னிக்கு வந்திருக்கா." மாமா குரல் கவலையில் கனத்திருந்தது. "அதுக்கென்ன, எல்லாரையும் அழைச்சுண்டு இங்கே வந்துடுங்கோ." அப்பா சொல்ல கூடத்துல நுழைந்த பெரியப்பாவும் ஆமோதித்தார். "இதோ போய் எல்லோரையும் கூட்டிண்டு வந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ் சார்." மாமா வேக வேகமா சொல்லிட்டு கிளம்பினார்.

நாலு நாற்காலியையும் பின்னால் தள்ளி விட்டுட்டு கூடத்தில் மூணு பாயை தரையில் விரித்து போடும் போதே பக்கத்தாத்துலேந்து என் தோழி ஷோபா வந்து சேர்ந்தாள். அடுத்த பத்து நிமிஷத்தில் அப்பா, பெரியப்பா, நான், என் அக்கா, தங்கை, ஷோபா, எதிராத்து மாமா, ரெண்டு அக்காக்கள், அவங்க கணவர்கள், குழந்தைகள்னு கூடத்துல இருபது பேர் ஆஜரானோம். டீவியை ஆன் பண்ணிட்டு பெரியப்பா உட்கார்ந்தார். ரொம்ப டென்ஷனா இருந்தார். இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் மேட்ச் அப்படின்னாலே அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் டென்ஷன் தான்.

டாஸ் ல இந்தியா பேட் செய்ய வேண்டி வந்தது. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் தான் ஆரம்ப மட்டையாளர்கள். ஸ்ரீகாந்த் வழக்கம் போல பெவிலியன்லேந்து வரும் போது அண்ணாந்து சூரியனை பார்த்துண்டே மைதானத்துக்குளே வந்தார். சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அப்பா ஏதோ சுலோகம் முனுமுனுத்துண்டே பூஜை அறைக்குள் போவது தெரிந்தது. ஆட்டம் ஆரம்பிக்கரத்துக்குள்ள இப்படி டென்ஷன் படராறேன்னு நான் நினைக்கரச்சையே எதிர் ஆத்து மாமா "முருகனின் நாமத்தை சொல்லேண்டா; அந்த முகுந்தன் மருகனை வேண்டினேண்டா; சரவண பவனை கூப்பிடடா; அந்த கார்த்திகேயனை கேளேண்டா" அப்படின்னு பாட ஆரம்பிச்சார். பெரிய முருக பக்தர் அவர். சகலத்துக்கும் முருகனை கூப்பிடுவார்.

ஸ்ரீகாந்த் முதல் பந்தில் ஆறு அடித்து அமர்க்களமாக ஆரம்பிக்கிறார். எங்க எல்லோர் முகத்திலேயும் பரம சந்தோஷம். திடீர்னு எதிர் ஆத்து அத்திம்பேர் ஒரு கையளவு வெங்கடாசலபதி படத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து டீவீயில் ஸ்ரீகாந்த் முன் காமிக்கிறார். பாகிஸ்தான் பௌலேர் படம் டீவியில் வந்தவுடன் சடக்குன்னு வெங்கடாச்சலபதி படத்தை மறைச்சுட்டார். ரொம்ப தீவிர கிரிகெட் பிரியர்னு புரிஞ்சிண்டேன். ஸ்ரீகாந்த் இரண்டாவது பந்தை சுழன்று அடித்து நாலு ரன்கள் குவித்தார். திரும்பிப் பார்த்தேன். பெரியப்பா துண்டால் நெத்தி வேர்வையை துடைக்கறது தெரிந்தது. அடுத்த பந்தை தட்டி விட்டுட்டு ஒரு ரன் ஓட பார்த்து ரன் அவுட் ஆகத் தெரிந்தார் ஸ்ரீகாந்த். நல்ல காலம் மயிரிழையில் தப்பித்தார். டென்ஷனில் முகம் சிவக்க எழுந்த பெரியப்பா தனக்கு தெரிந்த இரண்டு கெட்ட வார்த்தையால் ஸ்ரீகாந்தை திட்டியபடி வேக வேகமாக சமையல் அறைக்கு சென்றார். பரணில் இருந்து காலையில் இறக்கிய மட்டை தேங்காய் ரெண்டை எடுத்துண்டு கொல்லைபுரத்துக்கு சென்று வெறி வந்தது போல அரிவாளால் தேங்காய் உரிக்க ஆரம்பித்தார். சமையல் அறை ஜன்னல் வழியா பார்த்த அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். ராத்திரி அவியலுக்கு தேங்காய் இல்லைன்னு கவலையா இருந்தா. இந்த கிரிகெட் மேட்ச் முடியரதுக்குளே பத்து தேங்கயாவது நிச்சயம் உரிச்சிடுவான்னு சந்தோஷத்துல வேலையை கவனிக்க போனா. தேங்காய் உரிச்சு முடிச்சதும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த பெரியப்பா மறுபடியும் கூடத்துக்கு சென்று உட்கார்ந்தார்.

-----------------------------------------------

அவ்ளோ தாங்க கதை. மட்டை தேங்காய் தெரபி புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா பரவாயில்லை விட்டுருங்க. அப்படி ஒண்ணும் தலை போற விஷயமில்லை.

-மீனா சங்கரன்

படம் பாரு கடி கேளூ - 29


மேஜர் புறா: சே! சே! சே! அது என்னய்யா உன் "boot" ல வெள்ளை வெள்ளையா "spots"? சரியா பாலீஷ் பண்றதில்லே?
வீரர்: அது வந்து.. வந்து.. நீங்க தான் சார்.. மேலே பறக்கும் போது அப்படியே என் "boot" மேலே...
மேஜர் புறா: என்ன மேலே கீழே? நிறுத்துய்யா! அந்த காலத்துல இருந்து நாங்கள்ளாம் இப்படியா? பறந்து பறந்து 'delivery' பண்ணினோம் (லெட்டர்களை). டிப் டாப்பா இல்லேன்னா டிஸ்மிஸ் பண்ணிடுவேன்!

முடி யாது? முடியாது

நானும் ஒரு பேரு வச்சுக்கலாம்னு யோசிச்சு ஒரு பேரு கண்டு பிடிச்சு வச்சுக்கிட்டேன். பெயரைப் பற்றி அலசாமல் என் படைப்புகளை அலசவும்.

என் பேர் வேதாந்தி.

வேலை இல்லாதவன் தான் வேதாந்தம் பேசுவான். ஒரு வகையில் எனக்கும் அது பொருந்தும்.



முடி யாது? முடியாது. - அர்த்தம்


என் மகளுக்கு தான் முடி மேல் எவ்வளவு ஆசை.
முடி வெட்ட மறுக்கும் அவளுக்கும்
முடியாது என மறுக்கும் என் மனைவிக்கும் தான் தெரியும்.
இங்கே பிறந்தது என் வேதாந்தம்.
என்னால் முடிந்தது அவ்வளவு தான்
என் கொஞ்ச முடி மேல் ஆசையால் வேதாந்தம் எழுத ஆரம்பித்தேன்.
முடி மேல் யாருக்கு தான் ஆசை இல்லை
முடி சூடா மன்னருக்கும்
முடியே இல்லாத வழுக்கையருக்கும்
முடி யாது என்று எண்ணும் வேதாந்திக்கும்
முடியாது என்று மறுக்கும் என் மகளுக்கும்
வரலாறு சொன்னதோ முடியால் தொல்லை
முடியாத மொகலாயர் செய்தனர் கொலை
முடி யாது என்று ஆராய்ந்தால் இல்லை ஓர் எல்லை
முடி மேல் யாருக்குத்தான் ஆசை இல்லை
அன்று அரசன் தான் அலைந்தான் முடி சூட
இன்று அரசியல்வாதி அலைகிறான் முடி சூட
அன்றைய மங்கையர் முடிந்தால் முடி அழகு
இன்றைய மங்கையர் முடியாமல் முடி அழுக்கு
இது தான் இன்றைய இழுக்கு என்பார் வழக்கு பேசுபவர்
அது தான் இன்றைய இலக்கு என்பர் மறுசாரார்

ஒரு முடியை தேடினான் வராகன்
மறு முடியை தேடினான் நான்முகன்
முடியில் இருந்து விழுந்தாள் தாழ் முடியாள்
முடியை பார்த்தேன் என்றதால் இழந்தாள் முடியை
முடியால் எவ்வளவு தொல்லை

எனக்கோ எப்படி முடிப்பது என்பது தான் எல்லை
அதனால் முடிக்கிறேன் என் சொல்லை
உங்களுக்குத் தான் எவ்வளவு தொல்லை
முடியாது என்று சொல்லாமல் நீங்க்ளும்
முடி யாது என்று வேதாந்தம் பேச வாருங்கள் என்னுடன்.

வேதாந்தி

Saturday, May 30, 2009

"வேலை" இல்லாத நேரத்தில் நான் அறிந்தது, கற்றது, சாதித்தது

'வேலை' போய் 3 மாதம் ஆகிவிட்டது. வேலை தேடும் படலம் தொடரும் வேளையில், என்னடா இத்தனை நாட்களில் என்னதான் சாதித்தோம் என்ற எண்ணம் சில நேரங்களில் வந்து அலைகழிக்கும். நேற்று அந்த எண்ணம் மிக அதிகமாக, உடனே ஒரு வெள்ளை தாளை எடுத்து இந்த நாட்களில் நான் அறிந்தவைகள், கற்றவை மற்றும் சாதித்தவைகளை பட்டியலிட்டேன். எனக்கே ஆச்சரியம்! பட்டியல் நீண்டு கொண்டே போனது.

சிறிது காலமாக தமிழில் எழுத இருந்த ஆசையினால், இன்று அந்த பட்டியலில் இருந்தவைகளை உங்களுடன் ஒவொன்றாக பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றவே - இந்த முயற்சி. சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்!

பாகம் ஒன்று : காய்கறி தோட்டம்
நீண்ட நேரம் கணணி முன் உட்கார பிடிக்காத எனக்கு, வேறு பொழுது போக்கு தேவைப்பட்டது. மேலும் செலவை குறைக்க வழிகளை யோசிக்கையில் இந்த வருடம் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை நாமே பயிரிடலாமே என்று உதிக்க, சிறிது சிறிதாக ஆரம்பித்தேன். காய்கறி வளர்ப்பு முறைகளையும் அதன் பயன்களையும் பற்றி இணையத்திலும் நுலகத்திலும் நிறைய படித்தேன். பல காய்கறிகள் செடியில் இருந்து பறித்த 24 மணி நேரத்தில் நிறைய சத்துக்களை இழந்து விடுவதாக அறிந்தேன். உதாரணத்துக்கு மக்காசோளம், பீன்ஸ் போன்றவை பறித்த சில மணி நேரங்களில் 50 சதவீதம் சர்க்கரை சக்தியை இழந்து விடுகிறது. ஏன்டா இத்தனை நாளாக பெண்டாட்டி சமையலை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று மண்டைக்கு விளங்கியது.

இப்போது தோட்டத்தில் முள்ளங்கி, கீரை, மக்காசோளம், காரட், பீன்ஸ், மிளகாய், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, வேண்டை, வெந்தயகீரை, பூசணி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி, தக்காளி, கத்தரிக்காய், அவரைகாய், வெங்காயம் என்று செடிகள் அழகாக வளர்ந்து கொண்டு வருகிறது.

சக்தான ருசியான காய்கறி கிடைப்பது மட்டுமில்லாமல், செடிகள் வளருவதை பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு எல்லாம் மேலாக நான் எதிர்பார்க்காத சில பயன்கலை உணர ஆரம்பிக்கிறேன். என்னுள் பொறுமை வளர்ந்துள்ளது - என் பெண்டாட்டி கிட்ட தான் இதை நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ளணும். செடி வளர்ப்பில் நாட்டம் உள்ள நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளர்கள். தோட்டத்துக்கு நிறைய அழகான பறவைகள் வருகின்றன. இயற்கையை இன்னும் அதிகமாக ரசிக்க ஆரம்பித்துள்ளேன். வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் என்ன செய்வது என்ற எனது நீண்ட நாள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது!!

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடு மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடு மனிதற்கு மொழியே தேவையில்லை"

இதை படிக்கும் உங்களில் காய்கறி மற்றும் புசெடி வளர்ப்பதில் ஆர்வம் இருப்பின், ஏதேனும் உதவி தேவையெனின் தெரிவிக்கவும்.

உங்களால் முடியும் - உதவ நான் தயார்!!

ஹையா(யோ) இந்தியா போறோம் (தொடர் - முதல் பாகம்)

ஒவ்வொரு முறையும் இந்தியா போகலாம்னு ஒரு யோசனை வந்த ஒடனே மட மடன்னு சில எண்ணங்கள் விரைந்தோடி வருகிறது. சென்ற முறை இங்கு வந்திறங்கியதும் எடுத்த சில சபதங்கள் நினைவிற்கு வருகின்றது. நம்முள் சிலர்/பலர் எங்களின் இதே ஆதங்கங்களை அனுபவத்திருக்க கூடும். மறுமொழிகளின் மூலம் பகிர்ந்து கொள்ளவும்.

1. அடுத்த முறையாவது குறைந்த பட்ச எண்ணிக்கை(அவசிய பட்ட அளவு) பெட்டிகளை எடுத்து செல்ல வேண்டும். ஏன் தான் இப்படி முக்கி மொணகி எடுத்து செல்கின்றோமோ?

2. அடுத்த முறை இந்தியாவிலேயே கிடைக்கின்ற சாமான்களை அள்ளி செல்வதை தவிர்த்தால் இதை நம்மால் சாதிக்க முடியுமே.

3. இரோப்பாவில் நாம் சற்று நேரத்திற்காக (transit) வந்திறங்கும் விமான தளங்களில் ஒரு மூலயிலிரிந்து இன்னொரு மூலைக்கு நாம் கையில் எடுத்து செல்லும் பெட்டிகளை (hand luggage) மூச்சு திணற திணற இழுத்து செல்லும் அவலம் எண்ணியாதும் இனிமேலாவது இந்த எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று எடுத்த சபதம்.

4. அடுத்த முறையாவது எடுத்து செல்லும் பேட்டிகள் அனைத்தும் சற்று சிறியதாக இருக்கட்டும். சென்ற முறை பயணத்தில் அடிபட்ட/இடிபட்ட சில பெட்டிகளுக்கு  ஒய்வு குடுத்து வாகும் பெட்டிகளை சற்றே சிறியதாக வாங்க வேண்டும் என்ற கனவு/நினவு.




5. இம்முறையாவது நிறைய சுற்றுலா இடங்களை பார்க்கவேண்டும்.

6. முடிந்த வரை எல்லா விதமான மாம்பழங்களும் ஆசை தீருமளவிர்ற்கு தின்று மகிழவேண்டும்.


7. எல்லா உறவினர்களையும் கண்டு அவர்களுடன் சிறிது நேரமாவது பொழுது கழிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு அந்த உறவுகளையெல்லாம் உணர்வு படுத்தவேண்டும்.

8. சிறு வயதில் நம்முடன் விளையாடிய, பள்ளிக்கு சென்ற நண்பர்களை எல்லாம் சந்திக்க வேண்டும்.

9. நிறைய இசை நிகழ்ச்சிகளுக்கும், சினிமா படங்களுக்கும் சென்று மகிழ வேண்டும்.

10. இதுபோல் பல பல

இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம்  குறிப்பிடத்தக்கது என்னவென்றால் , எமது பயணங்களின் நடுவே யாரெல்லாம் இந்திய செல்வதாக அறிவித்திருக்கிரார்களோ அவர்களுக்கெல்லாம் எங்களுடைய மேல் குறித்திருக்கும் ஞான திருஷ்டியை போதனை வடிவில் குடுத்திருக்கிறோம் (அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும்).

இந்த எண்ணங்களையெல்லாம் நினவு கூர்ந்து இம்முறை முடியுமா என்ற கேள்விக்கு இனி வரும் பாகங்களில் பதில் சொல்கிறேன். ஒரு யூகம் வந்திருக்கும் உங்களுக்கு. இருந்தாலும் பொறுத்திருங்கள், பதில் அறிய.

இனிவரும் பாகங்கள்:

இரண்டாம் பாகம்: டிக்கெட் வாங்கும் படலம்/அவலம்
மூன்றாம் பாகம்: பயண நாள் நெருங்குகின்றது (ஒரு மாசமே உள்ளது)
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார். (இரண்டே நாட்கள் உள்ளன)

பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

நாராயணன்

Friday, May 29, 2009

துப்பறியும் சாம்பு இப்பொழுது எங்கே?

ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாட்டாலும் என்னை யாரும் இது வரை சோம்பேறின்னு சொன்னது இல்லைங்க. அடிக்கடி துடைச்சு துடைச்சு சுத்தம் பண்ணாட்டாலும் வீட்டுக்கு நாலு பேர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சா உடனே வாழும் அறையில் (living room) இறைஞ்சு கிடக்கிற பத்து விளையாட்டு சாமான்கள், அரை டஜன் நாய் பொம்மைகள், ஐந்தாறு அழுக்கு காலணி உறை, நாலு தலையணை, இரண்டு கதை புத்தகங்கள் மற்றும் பற்பல கலர் ரிமோட் கண்ட்ரோல்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு போய் பக்கத்து அறையில் போட்டு கதவை இழுத்து தாளிட்டு சுத்தம் செஞ்சிடுவேங்க. வீட்டுக்கு வர்றவங்க மூக்கில் விரல் வச்சு ஆச்சர்யப்படுவாங்க. என் நல்ல பேருக்கு பங்கம் வராமல் என்னுடைய நாய் பக்கத்து அறை வாசலில் உட்கார்ந்து யாரையும் உள்ளே போக விடாமல் காவல் இருக்கும். இப்ப நானே அந்த அறைக்குள் போக பயந்து போறதில்லைங்க.

அப்படிப்பட்ட நான் வீடு நிறைய கூடைகளில் தோய்த்து மடிக்காமல் துணி மணிகளை அப்படியப்படியே போட்டு வைத்திருப்பதை பார்த்து நீங்க ஆச்சர்யப்படறது எனக்கு புரியுது. என்னை மட்டும் இல்லை. எல்லா வீட்டு தலைவிகளையும் கேட்டு பாருங்க. அதுக்கு ஒரு காரணம் தான் சொல்லுவோம். முடிவேயில்லாத ஒரு வேலையை எப்படீங்க செய்ய முடியும்? ஒரு வழியா ஐந்தாறு கூடை துணிகளையும் வாஷிங் மஷினில் போட்டு துவைத்து, காய வைத்து, மடித்து அலமாரியில் வைத்து விட்டு திரும்பினால், எங்கிருந்தோ இன்னும் ரெண்டு கூடையில் அழுக்கு துணி வந்து உட்கார்ந்து என்னை பார்த்து கை கொட்டி கெக்கலிக்குதுங்க. பல வருஷங்களா 'நீயா நானா பார்ப்போம்' அப்படீங்கற வீராப்பில் நான் அழுக்கு துணியுடன் தனியாக போட்ட குஸ்தியை பார்த்து பரிதாபப்பட்டு என் கணவர் என்னை ஒதுங்கச் சொல்லி இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார்.

சில வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஆர்வத்துடன் துணி துவைச்சு மடிச்சு வெப்பேங்க. எதையும் சாதிக்க முடியும்னு நம்புகிற வயசு அப்போது. ஆனால் இப்பல்லாம் பெருகி வரும் அழுக்கு துணிகளை வெல்ல எனக்கு சக்தி இல்லைன்னு ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டது. இந்தப் பக்குவம் வந்ததால தான் "துவைத்த துணியை மடிச்சு அலமாரியில் வைத்து என்ன செய்ய போகிறோம்? நம் தலை அந்தப்பக்கம் திரும்பியவுடன் அது குதித்து அழுக்கு கூடையில் உட்கார போகிறது. அதனால் மடிக்காமல் கூடையிலே இருக்கட்டும்" னு விட்டுட்டேன்.

ரொம்ப காலமாவே ஒரு சந்தேகம் எனக்கு. நான் தான் எங்க வீட்டில் துணிகள் வாங்குவேன். அளவாத்தான் வாங்குவேன். அப்படி இருக்கையில் ராத்திரியோட ராத்திரியாக எப்படியோ துணிமணித்தொகை வீட்டில் பெருகிக் கொண்டு வருகிறது. நாலு துணி இருந்த அலமாரியில் இருபது துணி இருக்கிற மாதிரி தோன்றுகிறது. இந்த மர்மத்தை துப்பு துலக்க எனக்கு நேரமும் இல்லை. புத்திசாலித்தனமும் பத்தாதுங்க. இந்த வேலைக்கு துப்பறியும் சாம்புவைத் தான் கூப்பிடலாம்னு இருக்கேன். அவர் தொலைபேசி எண் உங்ககிட்ட இருக்கா?

-மீனா சங்கரன்

பின் குறிப்பு: தமிழ் சங்கம் தளத்துல அழுக்கு துணிக்கு என்ன வேலைன்னு முகம் சுளிப்பவங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் "மன்னிச்சிடுங்க.....எத்தனை யோசனை பண்ணியும் வேறு விஷயம் கிடைக்கலை" :-)