Tuesday, May 12, 2009

வலை வலம்.

அமெரிக்க வீடுகளில்  தபால் பெட்டியில் வைக்கப்படும் ஜங்க் மெயில் எனப்படும் "குப்பை" விளம்பர காகிதங்கள் மிக அதிகமாகி விட்டன. வருடத்திற்கு சுமார் ஆயிரம் பக்கம் விளம்பரங்கள் உங்கள் வீட்டை வந்தடையும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. இதனால் வருடத்திற்கு பல கோடி மரங்கள் அழிக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு அழைப்பின்றி வரும் இவற்றை எவ்வாறு கட்டுபடுத்துவது என சமீபத்தில் படித்தேன்.  http://dmachoice.org என்ற இணைய தளத்தில் நமது வீட்டு 
முகவரியை பதிவு செய்து,  தேவை இல்லாத விளம்பரங்களை முழுவதுமாக நிறுத்திவிடலாம்! இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான விளம்பரங்களை தெரிவு செய்தால் அவை மட்டும் உங்களுக்கு வந்தடையும். எதோ நம்மால் முடிந்தது சில மரங்களையாவது விட்டு வைப்போமே!! 


நடந்து வரும் (நடக்கவுள்ள) இந்திய நாடாளுமன்ற தேர்தல் காமெடிகளை பார்த்தால் கடவுளே வந்தாலும் நம்ம மக்களை திருத்தமுடியாது என்றே தோன்றுகிறது! இதிலும் சில நம்பிக்கை வேட்பாளர்கள் இருப்பது சின்ன ஆறுதல். எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் யார் வென்றார்கள், அவர்களுடைய சொத்து, படிப்பு (அட ஆமாங்க), கிரிமினல் விபரங்கள் (வெளியே தெரிந்தது :-( மட்டும் ) , எத்தனை நாட்கள் பாராளுமன்றத்தில் பங்குபெற்றார்கள் (அதில்  எத்தனை கேள்விகள் எழுப்பினார்கள்)  போன்ற விபரங்களை கூகிள் தளத்தில்  காணலாம்.
 
அதில் வேடிக்கை என்னவென்றால் கோடிஸ்வரகள், அமைச்சர்கள் சொத்து விசயத்தில் வறுமைகோட்டிற்கு அருகே இருப்பதாக காட்டியிருப்பது  தான்!  மிக சில நல்ல அதிகாரிகள் கடந்த சில தேர்தல்களில் பல நல்ல கட்டுப்பாடுகள், விதிமுறைகள் என்று இந்த காமெடிகள் அதிகரிக்காமல் செய்திருக்கிறார்கள்! 
கடந்த  இடைதேர்தல் மாதிரி ஓட்டுக்கு ருபாய், பிரியாணி, சரக்கு என்று இந்த முறையும் மாநிலம் முழுக்க கிடைக்குமா என்று தெரியவில்லை. நம்ம முன்னாள் தலைவர் நாகு  இந்த முறை வாக்களிக்க முடியாமைக்கு மி்கவும் வருத்தப்பட்டு பேஸ்புக்கில் பதித்திருந்தார் - ஏன் என்று இங்கே சென்று பாருங்கள்

காரமான மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று படித்திருப்போம். 
ஆனால் அவற்றிலும் சில நன்மைகள் இருக்கிறது என்று சமீபத்தில் படித்தேன்.  ரத்த அழுத்தத்தை குறைப்பது, அல்செய்மர் (Alzheimer)  நோய் தடுப்பு சக்தி அதிகரிப்பு, உடல் எடை மற்றும் பருமனை குறைப்பது, டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தத்தை குறைப்பது என பல நன்மைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள் . அடிக்கடி லெட்டுஸ், தக்காளி, ஆலிவ் பழங்கள், வெள்ளரியை பன்னுக்கு இடையே வைத்து சாப்பிட்டு பழகினதால் என்னால் இப்பவெல்லாம் ஒரு சில்லி பரோட்டாவை கூட (இந்தியாவில்)  தொட முடிவதில்லை.  


  

Tuesday, April 28, 2009

போடுங்கம்மா ஓட்டு, சிலேட்டு சின்னத்த பார்த்து!...

யூடியூப் படம் காட்டி கொஞ்ச நாளாயிற்று. அதான்!



மனிதர் இணையத்தில் கலக்குகிறார். ஆர்க்குட், ஃபேஸ்புக் தளங்களில் பக்கங்கள் இருக்கின்றன. தளத்தில் அவரது எலெக்சன் மானிஃபெஸ்டோ ஈபேப்பரில். பார்லிமெண்டில் இருந்து ட்விட்டர் செய்ய என் ஆசிகள்.(நான் காலேஜ் சீனியர் ஆச்சே - அதான் ஆசி!)

தென் சென்னைக்கு தொலைபேசினால் நீங்கள் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டிய இந்தப் பதிவின் தலைப்பு. சரியா?

Sunday, April 26, 2009

படம் பாரு கடி கேளு - 27



அதெல்லாம் முடியாதும்மா. ஓட்டு போட்டவங்களுக்கு இந்த ஒரு விரலில் தான் மை வெக்க முடியும். நீ எல்லா விரலிலும் "நக பாலீஷ்" போட சொல்றியே. அடுத்த தேர்தலில இதுக்கே ஒரு சட்டம் கொண்டு வரணும் போலிருக்கே!

படம் பாரு கடி கேளு - 26



ஏதோ செல் போனுக்கு தான் மாடலிங் செய்ய கூப்பிட்டாங்கன்னு வந்தா இவ்வளவு பெரிய போனை என் தலையில மாட்டிட்டாங்க!

Friday, April 17, 2009

கில்லாடிப் பையன்!

இந்தியாவில் லோகசபை தேர்தல் ஆரம்பித்திருக்கிறது. 'உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத்தின்' தேர்தல். இந்த தேர்தலில் என்னைக் கவர்ந்த வேட்பாளர்: சரத்பாபு! சினிமா நடிகர் சரத்பாபு இல்லை!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவரைப் பற்றி நான் இன்னும் சொன்னால், சொந்த கல்லூரி பெருமை பேசுகிறான் என்று நீங்கள் தள்ளிவிடாமல் இருக்க - இதோ இட்லிவடையாரின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

தென்சென்னையில் வாழும் உங்கள் உற்றார் உறவினர் அனைவரையும் இவருக்கு ஓட்டுப் போடச்சொல்லுங்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள், சரத்!

Wednesday, April 08, 2009

கில்லாடி பசங்க - 2

ரிச்மண்ட் வட்டார அறிவியல் போட்டியில் வேதியியல்  பிரிவில் முதல் பரிசு வாங்கிய விஜய் கோவிந்தராஜ்,  சூட்டோடு சூடாக மாநில சுற்றில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறான்.

சென்ற வார இறுதியில் வர்ஜினியா மாநில அளவில் நடந்த அறிவியல் போட்டியில் வேதியியல் பிரிவில் இரண்டாம் பரிசு வாங்கியிருக்கும் விஜய் கோவிந்தராஜுக்கும், அவனது பெற்றோர் ஷோபனா, கோவிந்தராஜுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

விவரங்கள் இந்தத் தளத்தில்.(விரைவில் வரும்)

Monday, April 06, 2009

கில்லாடி பசங்க...

ரிச்மண்டிலிருக்கும் தமிழ் குடும்பத்து சிறுவர் சிறுமியர் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். சமீபத்தில் நடந்த அறிவியல் போட்டிகளில் நம்ப பசங்க வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். மிட்லோதியனில் வசிக்கும் பார்கவி, கணேஷ் தம்பதியினரின் மகன் தருன் ஜுனியர் பிரிவில் பொறியியல் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கிறான். மேற்குக் கோடியில் வசிக்கும் ஷோபனா, கோவிந்தராஜ் தம்பதியினரின் மகன் விஜய் சீனியர் பிரிவில் வேதியியல் போட்டியில் வென்றிருக்கிறான். தருனுக்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள்!


முழுப் பட்டியல் இங்கே....


கீழே இருக்கும் படத்தில் இருக்கும் டென்னிஸ் போட்டி முடிவுகளைப் பாருங்கள்.


டேவிஸ் போட்டி முடிவுகள் மாதிரி தெரிகிறதா? எல்லாம் நம்ப உள்ளூர் செய்திதான். உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் போட்டிகள் முடிவுகளின் மாதிரிதான் இவை. உயர்நிலைப்பள்ளி டென்னிஸ் குழுக்கள் மேல் தடுக்கி விழுந்தால் நம்ம பசங்க மேல்தான் விழவேண்டும். ஹென்ரைகோ பள்ளியில் வித்யா, வெங்கட் தம்பதியினரின் மகன் அர்ஜுன், செல்வி,மோகன் தம்பதியினரின் மகன் விக்னேஷும், வனஜா, பொருளாளர் நாராயணன் தம்பதியினரின் மகன் அஷ்வினும் கலக்குகிறார்கள். டீப் ரன் பள்ளியில் பிருந்தா, சங்கர் தம்பதியினரின் மகன் பரணி சங்கர், வேதா, சேகர் நாகேந்திரா தம்பதியினரின் மகன் ஜெயந்த். காட்வின் பள்ளியில் ஷீலா, கார்த்திகேயன் தம்பதியினரின் மகன் அர்ஜுன்!

ச ில போட்டி முடிவுகள் இதோ....

இவர்களிடம் இருந்து பெரியவர்களைக் காக்கத்தான் சென்ற முறை 20-25 வயது, 26-34 வயது, 35-37.5 வயது என்று பல பிரிவுகளாக தமிழ் சங்க டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றதாக ஊரில் வதந்தி.


பசங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா என்று பெரியவர்கள் சென்ற மார்ச் 28ல் 10 கிலோமீட்டர் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். நானும் குடும்பத்தோடு கலந்து கொண்டேன். எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் (தமிழில் என்ன) எண்பது வயதான சங்கர் கலாவர்! ரிச்மண்டில் வசிக்கும் விஷால் உபாத்யாவின் தந்தை மூன்றாவது முறையாக கலந்து கொள்கிறார். சென்ற செயற்குழுவின் பங்கேற்பு அபாரம். நான், பொருளாளர் அரவிந்தன், செயலாளர் லஷ்மியின் கணவர் ஹரி(செயலாளரும் ஓடவேண்டியது கடைசி நிமிஷத்தில் ஜகா), பொதுச்சேவை சரண்யாவின் கணவர் சத்யா என்று கலக்கிவிட்டோம். இந்த குழுவின் மானத்தைக் காப்பாற்ற தலைவரின் மனைவி சாவித்திரி ஓடினார்கள். கூடவே ஷீலா கார்த்திகேயன்(கார்த்திக் க. நி. ஜ). ரவிச்சந்திரன் திருவேங்கடத்தானும்(லாவண்யா க.நி.ஜ), அஷோக் செட்டியும், ஜெயா செல்லையாவும் ஓடிய மற்ற பிரபலங்கள்.

முப்பதாயிரம் பேர் கலந்து கொண்ட இப்போட்டி கலகலவென்று திருவிழா மாதிரி இருந்தது. பலவகையான மனிதர்கள்! ஒரு கர்ப்பிணிப் பெண் என்னை விட வேகமாக ஓடினார். நிறைய பேர் மாறுவேஷத்தில் ஓடினார்கள். கர்ப்பிணிப்பெண்ணும் மாறுவேஷமோ என்று ஒரு சம்சயம்!


இந்த ஓட்டப்பந்தயப் போட்டிகளின் முடிவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாவது இப்படி சுட்டி கொடுத்தால், நாந்தான் எல்லோர் வயதையும் அம்பலப்படுத்தி விட்டேன் என்று கழுவேற்றி விடுவார்கள். ஏன் வம்பு? :-) திறமையிருந்தால் உங்களுக்கு தெரிந்த பெயர்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். படங்களையும் பார்க்கலாம் இந்தத் தளத்தில். மாறுவேடத்தில் ஓடியவர்கள் படங்களையும், பல பந்தயப் படங்களையும், சிறுவர் ஓட்டப் பந்தய படங்களையும் பாருங்கள்.


என்ன, அடுத்த வருடம் நீங்களும் ஓடுகிறீர்களா?

Wednesday, March 11, 2009

உங்களுடைய செக் இஞ்சின் லைட் சரி செய்து விட்டீர்களா?

உங்களுடைய காரில் செக் இஞ்சின் லைட் எரிய ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மாதிரி பயந்தாங்குளிகள் அடித்துப் பிடித்து ஓடிப்போய் மெக்கானிக்கிடம் காரை கொண்டுபோய் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு வருவோம். அதே ஒரு கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.

சென்ற வாரம் ஒரு நண்பருக்கு இப்படித்தான். இரண்டு நாட்களாக நெஞ்சுவலி என்று உடல்வலி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை, மூன்றாம் நாள் அவர் மனைவி காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார். அங்கே அவர் உடலை பரிசோதித்துவிட்டு உடனே எமர்ஜென்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு வந்தது மாரடைப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்தக்குழாயில் இருந்த இரண்டு அடைப்புகளை சரி செய்து அனுப்பியிருக்கிறார்கள். நாற்பதுகளில் இருக்கும் நண்பர் நிறைய டென்னிஸ் ஆடுபவர், சுறுசுறுப்பாக, இருக்கும் அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு நிறைய தொண்டு செய்பவர். அவருக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆகவே உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும் ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனை (annual physical checkup)செய்து கொள்ளுங்கள். அதுவும் நாற்பதை தாண்டிவிட்டால் இது மிகவும் கட்டாயம். கொழுப்பெடுத்து எது செய்கிறீர்களோ இல்லையோ - உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நமக்கு நடப்பது, ஓடுவது எல்லாம் மிகவும் குறைந்திருக்கையில், நமது உணவு அதற்கேற்றார்போல மாறாதிருப்பது, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக முக்கிய காரணம். இப்போதும் ஒன்றும் காலதாமதமாகவில்லை. இந்த சனிக்கிழமை மானுமென்ட் அவின்யுவில் பத்து கிலோமீட்டர் ஓடலாம் வருகிறீர்களா?

Monday, March 02, 2009

ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

நமக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கொடுக்கலாமென்றிருந்தார்கள். நான் பெருந்தன்மையாக அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிக் கொண்டால்தான் ஆயிற்று என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்புத்தொல்லை தாங்காமல் நான் வாங்கிக் கொண்ட பட்டம்தான் -  ஆயிரம் புரதம் மடித்த் அபூர்வ சிகாமணி!

 

என்னய்யா மடிக்கிற என்கிறீர்களா? நீங்களும் மடிக்கலாம் இங்கே சென்று... நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள். உங்களையும் மடித்து விடுவார்கள். உங்கள் வீட்டில் கணினி சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்,  அதையும் புரதம் மடிக்க வைக்கலாம். இதனால் பல வியாதிகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியம்.

அதென்னய்யா புரதம் மடிப்பது என்று கேட்பவர்கள்  http://folding.stanford.edu தளத்தில் சென்று படித்து தெரிந்து கொள்ளலாம். வர வர நான் ஒன்று சொன்னால், மக்கள் வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். அதனால் நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை :-)

இப்படிக்கு.

திரு. ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

படம் பாரு கடி கேளு - 25



சார், லாலு சார் தயவு செய்து சீக்கிரம் inspect பண்ணிட்டு போங்க சார். நீங்க inspect பண்ண வர்றீங்கன்னு காலையிலிருந்து என்னை இப்படியே படுக்க வெச்சுட்டாங்க. பாத்ரூம் கூட போக விடலே.