Sunday, July 15, 2007

சட்டை



சட்டையின் கை குட்டை
காபி நிற பட்டை
அணிவது சின்ன மொட்டை
கால்சட்டை ஜோபியில் ஒரு ஓட்டை
அதன் வழியே விழுந்தது புளியாங் கொட்டை
கையிலொரு கைக்குட்டை
அதில் சுமப்பதொரு கொடுக்காப்புளிக்காய் மூட்டை
ஆற்றில் சிறுவன் கட்டுவது ஒரு மணல் கோட்டை

Saturday, July 14, 2007

தனிமை




உன்னைப் போல் ஆயிரம் இருக்கையில்
நீ மட்டும் துணையில்லாமல்
தன்னந்தனியே மின்சாரக் கம்பியில் உட்கார்ந்திருப்பது ஏனோ?

சுகமோ அல்லது சோகமோ
எந்த நிலையில் நீ இருக்கின்றாய்?

தனிமையில் துயரமும் உண்டு
தெளிவும் உண்டு.

Friday, July 13, 2007

வந்துட்டான்யா வந்துட்டான்

வந்துட்டான்யா வந்துட்டான்! பரதேசி வந்துட்டான்.
சக ப்ளாகிகளே வணக்கம்!
மூன்று வார விடுமுறைக்குப்பிறகு சென்ற ஞாயிறன்று பிறந்த நாட்டிலிருந்து புகுந்த நாட்டிற்குத்திரும்பினோம். என் பயணம் மிக அருமை. பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்ப்போல் என் உடன் படித்த நண்பன் ஒருவனை 30 வருடங்களுக்கிப்பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல பழங்கதைகள் பேசினோம். பிறகு விலாவாரியாக எல்லாவற்றையும் விவரிக்கிறேன். வாக்கு கொடுத்தபடி சரவணபவனில் வயிறு புடைக்க புசித்தேன் (சாம்பார் வடை, புரோட்டா குருமா, குழிப்பணியாரம் முதல் 'முக்கனி' ஐஸ்க்ரீம் வரை). நீங்கள் ஜொள்ளு விட்டு கீபோர்டையும் மௌஸையும் ஈரமாக்குவது தெரிகிறது. 7 வருடங்களுக்கு முன் நான் பார்த்த சென்னையும், மும்பாயும் தலைகீழாக மாறிவிட்டன. என்ன ஜனநெருக்கம்! என்ன பணப்பெருக்கம்! நான் வாழ்ந்த காலத்தில் 10 ரூ நோட்டே ரொம்ப பெரியது. இப்போது அவ அவன் 500 ரூ நோட்டுக்களள சர்வசாதாரணமாக எடுத்து வீசுகிறான். கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி என்று 'அவன்'களும் 'அவள்'களும் சல்லென்று பறக்கின்றனர். பீட்ஸா ஹட், டாமினோஸ்,
பீட்ஸா கார்னர், காபி டே, கபே காபி என்று விதவிதமான தீனிகள் வேறு. போதாதற்கு, சரவணபவன், சங்கீதா, க்ராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று வேறு.

கட்டுரை தொடரும் வரை......
ஸாம்பிளுக்கு சில படங்கள்:


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பீட்சா ஹட்



மெரினா பீச்சில் கண்ட மாங்காய் பத்தைகள்



திருமயிலை கபாலீஸ்வரர் கோவில்


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி செண்டரின் முகப்பு


திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் (நிரம்பியுள்ளது)

அடையார் ரோட்டோரம் கண்ட ஒரு டிபன் கடை

Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.



சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.




- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

கடல்

பொங்கும் நுரைதள்ளி
எங்கும் கரைதொடுவாய்

சங்கும் சிப்பிகளும்
தங்கும் சிறார்கைகள்

...

மருளும் புள்ளிமானின்
மயக்கத் துள்ளலையும்

சீறிப்பாயும் சிங்கத்தின்
சிறப்பான வேகத்தையும்

சிறகடிக்கும் பறவையின்
சீரான படபடப்பையும்

...

கொண்ட உந்தனலை
ஊர்முழுக்க அறிந்திருக்க

உன்னோடு நான்நடக்க
உள்ளம் களிப்படையுமே

சற்றே உள்ளிறங்கி
சில்லென்று மேனிசிலிர்க்க

ஆடும் உன்மீது மிதந்தே
பாடும் என்மனம் அலைபோலே

-----

இந்தக் கவிதைய ஆரம்பிக்கும்போதும், 'ங்' முதல் நான்கு அடிகளுக்கு வரவே. சூப்பர் அப்படியே continue பண்ணலாம் என்று நினைத்தேன்.

அப்புறம் தான் புத்தி சொல்லியது, அடே மடயா, போன பாட்ட போட்டது அங்கே குற்றம்னு சொல்றாங்க என்று. யாரும் சூப்பரா இருக்குனு சும்மா எல்லாம் comment போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லுங்க அது போதும்.

Friday, July 06, 2007

மற்றும் ஒரு சிறு உதவி: [Richmond/Virginia/DC/MaryLand Area India/Chennai Travellers]

வைத்தியா சுந்தர்:

"எனது தாயாருக்கு தமிழ்/ஆங்கிலம் பேசக்கூடிய வழித்துணை தேவை. அவர்
வாசிங்டன் டி.சி.(IAD) இருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக ஆகஸ்ட் 20ம் தேதி வாக்கில் (*செப்டெம்பர் வரை வேறு தேதிக்கு மாற்ற இயலும்) பயணம் செய்யவிருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் நல்ல உடல் நலம் உள்ளவர். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரேனும் இந்த வழித்தடத்தில்/விமானத்தில் பயணம் செய்யவிருந்தால், தயவு செய்து உதவவும். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
EMAIL : vaidyasundar AT yahoo.com"

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!

கல்விக்கு உதவுங்கள்

சமீபத்தில் செந்தழல் ரவி மூலமாக இன்னொரு இளைஞருக்கு கல்விக்கு உதவி தேவைப்படுகிறது என்று தெரியவந்தது. மேல் விவரங்களுக்கு வரவணையான் பதிவில் படித்துக் கொள்ளுங்கள்.

வரவணை பதிவில் இருந்து ஒரு பகுதி இதோ:

அந்த தம்பியின் பெயர் கௌதம் ( ராஜா முகமது) சென்னை திரைப்படக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார். தந்தை இவர் பிறந்த சில ஆண்டுகளில் தவறிவிட்டார். இவரையும் இவரின் தங்கையும் தாயார் சித்தாள் வேலை செய்து படிக்க வைத்தார். மேற்படிப்புக்கு சென்னை வந்த இந்த தம்பி பகுதி நேரம் உழைத்துக்கொண்டெ படித்துக்கொண்டிருக்கிறார் , அதில் வரும் வருமானம் அன்றாட செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இந்த ஆண்டு தன் கல்லூரிகட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தால் தன் படிப்பை நிறுத்துவதாக தெரிவித்தார் என்னிடமும் சுகுணா திவாகரிடமும்.

உங்களால் முடிந்த உதவி செய்யலாம்.

Thursday, July 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.



http://pkirukkalgal.blogspot.com/2007/07/12.html



- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

piththanp@gmail.com

Tuesday, July 03, 2007

ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...



வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்

மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்

வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்

இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)

அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்

பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்

-----

இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)

என்றும் அன்புடன்
சதங்கா