Monday, November 03, 2008

நியுயார்க் மராத்தனில் என் நண்பன்

நான் முன்பே எழுதியது மறுபடியும் நடந்திருக்கிறது. இல்லை.. ஓடியிருக்கிறது(நம்ம ஊர் ரமேஷ் பாணியில்). மராத்தன் ஓடி என்னை அசர வைத்த என் கல்லூரித் தோழன் மறுபடியும் நியுயார்க் மராத்தன் ஓடி அசத்தியிருக்கிறான். ஓடிவிட்டு வரும்போது போனில் சொன்னான், இந்த தடவை முடியலடா, கடசில நடந்து தவழ்ந்து முடிச்சேன்.

அவன் சொன்னதைப் வைத்து மோசமாக இருக்கும் என்று பார்த்தால், சென்ற முறையைவிட வேகமாகவே ஓடியிருக்கிறான் - 4 மணி 40 நிமிடங்களில். சென்ற முறை 5 மணி 20 நிமிடங்கள். முதல் 25 கிமீ வேகமாகவே போயிருக்கிறான்.




கடைசியில்தான் நிறைய நேரம் எடுத்திருக்கிறான். ஆரம்பத்தில் ரொம்ப வேகமாக போயிருப்பான் என்று நினைக்கிறேன். Proud of you, buddy! நம்ம கல்லாப்பெட்டி அரவிந்தன் ஏதோ அரை மராத்தன் ஓடுகிறேன் பேர்வழி என்று பயிற்சிக்கு என்னையும் இழுக்கப் பார்க்கிறார். இதுவரை சாக்குப்போக்கு சொல்லி சமாளித்துவிட்டேன். நானும் ஓடிவிட்டால் அப்புறம் யார் என் முருங்கமரத்தைப் பார்த்துக் கொள்வது?

Sunday, November 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 30

தனம் திரைப்பட விமர்சனம்
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.

முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.

படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.

திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.

The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Thursday, October 30, 2008

அவசரத் தேவை - ரத்த வெள்ளை அணுக்கள் - ஹூஸ்டனில்...

லூகேமியாவுடன் போராடிக் கொண்டிருக்கும் மனீஷ் பரத்வாஜ் என்ற இளைஞருக்கு அவசரமாக ரத்த வெள்ளை அணுக்கள்(WBC) தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்தவர்கள் ஹூஸ்டன் பகுதியில் இருந்தால் உடனே தெரியப்படுத்துங்கள்.

மேல் விவரங்களுக்கு

http://www.lifeformanish.com/wbc.php

Tuesday, October 28, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 29

அமெரிக்க அதிபர் தேர்தல்.
ஒரு வழியாக தேர்தல் வந்தே விட்டது. வெற்றி பெறப்போவது நாங்கள்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது என்பதாக ரிபப்ளிகன் கட்சியும், டெமாக்ரெட் கட்சியும் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமா என்று யாராவது விளக்கினால் நல்லது. நடுநிலையாக விளக்க யாரும் இல்லாவிட்டால் நான் விளக்கலாம் என்று இருந்தேன். “ஜொஞ்சம் வாய மூடிகிட்டு இருக்கியா” என்று என் நண்பர் ஒருவர் சொன்னதால் சரி நமக்கேன் வம்பு என்று விட்டு விடுகிறேன். முடிவு எப்படியும் நவம்பர் 5ம் தேதி தெரிந்து விடப் போகிறது அது வரை காத்திருக்க மாட்டோமா?

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் நிர்வாக குழுவின் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் அதே நேரம் நிர்வாகக் குழுவின் தேர்தலையும் நடத்திவிடலாம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கும் பலரில் நானும் ஒருவன். அதோடு புதிய குழு வழக்கமான வருடத்திற்கு 3 கலை நிகழ்ச்சி, ஒரு பிக்னிக்கைத் தாண்டி வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தால் சூப்பராக இருக்கும்.

இலங்கையில் போர்
இது சற்று சென்சிடிவான விஷயம். இலங்கை ராணுவத்தின் இந்த போரில், பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் கூடிய சினிமா ப்ரபலங்களுக்கு நடுவே சற்று காரசாரமாக பேசிய இயக்குனர்கள் அமீர் (மெளனம் பேசியதே, பருத்தி வீரன்), சீமான் (தம்பி), பாரதிராஜா, ராமநாராயணன் நால்வரில் அமீர் மற்றும் சீமான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் சீமானின் பேச்சை அவரது இணைய தளத்தில் கேட்டேன். மிக வேகமான சொற்பொழிவு. பலருடைய உணர்வுகளை தூண்டி வெறியேற்றக் கூடிய பேச்சு. கைது செய்யாமல் விடப்பட்ட மற்ற இருவரோடு திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பல கட்சிகள் கூறி வருகின்றன. இதே நேரம் வைகோ மற்றும் அவர் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்று பார்க்க வேண்டிய அதே நேரத்தில் அனைவரும் பல அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இவ்வளவு நடக்கும் சமயம் தமிழக முதல்வர் தன் பங்கிற்கு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவை வாங்கி வைத்திருக்கிறார். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜிநாமா செய்வோம் என்று பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருக்கிறார். இதில் இலங்கையில் அவதிப் படும் அப்பாவி பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. இது ஒரு சினிமாவின் திரைக்கதை மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று ராஜிநாமா செய்வதாக இருந்தால் அதை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும் அல்லது பிரதமரிடம் தர வேண்டும் இரண்டும் இல்லாமல் தான் வாங்கி வைத்துக் கொண்டு, சும்மா பயம் காட்டுவது என்ன மனிதாபிமான நடவடிக்கை என்று தெரியவில்லை. இதில் அப்பாவி மக்களின் நிலையை நினைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்று உருகி உருகி ஒரு டைலாக் வேறு.

இந்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் மாட்ச்
இந்தியா இரெண்டாவது டெஸ்ட் மாட்சில் 320 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை போட்டு துவைத்து எடுத்து வெற்றி பெற்று இந்த 4 டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னனியில் இருக்கிறது. இன்னும் இரண்டு டெஸ்ட் மாட்ச் இருக்கிறது. ஆஸ்திரேலியா இதை விட தீவிரமாக அடுத்த இரண்டு டெஸ்ட் மாட்ச்சுகளையும் எதிர் கொள்ளும். அப்போது அவர்களை சமாளிக்க சச்சினின் ஆட்டம் மிக மிக முக்கியம். என்ன செய்யப் போகிறார்கள் இந்திய அணியினர் என்று சற்று படபடப்பாகத்தான் இருக்கிறது.



ரிச்மண்டில் கிரிக்கெட்

ரிச்மண்டில் கிரிக்கெட் அமோகமாக நடப்பது சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. அவர் சொன்ன இந்த வெப்சைட்டில் விளையாடும் பலரை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
www.greaterrichmondcricketclub.com. இதைப் போல வேறு அணியின் வெப்சைட்டின் தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஆமாம், RTS –ம் ஒரு அணியை தயார் செய்து கிரிக்கெட் விளையாடலாமே?

டிவிங்கிள் டிவிங்கிள் பாட்டு.
யூ டுயூப்பில் சுட்டு பதிவு நானும் போடுவேனே!
இந்த பாட்டைக் கேளுங்கள், சூப்பரா இருக்கு.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

Friday, October 24, 2008

அட பரவாயில்லையே

யூட்யூப் காட்டி கொஞ்ச நாளாச்சே. அதான். பாருங்க இந்த ஊர்க்காரங்க நம்ப கச்சேரில கலக்கறாங்க.



கனக்டிகட் மாநிலத்தில் இருக்கும் வெஸ்லாயன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாம். வெகு ஜோர்.