Showing posts with label saravana bhavan. Show all posts
Showing posts with label saravana bhavan. Show all posts

Tuesday, June 02, 2009

மீனாவுடன் மிக்சர் - 1

தொலைக்காட்சியில் 'அனுவுடன் காப்பி' (அதாங்க Koffee with Anu) என்று ஒரு தொடர் வருகிறதாமே? கேள்விப்பட்டேன். அனுவோட காப்பி குடிக்கரச்ச மீனாவோட மிக்சர் சாப்பிட கூடாதா? அப்படி நினைச்சு தான் இப்படி ஒரு பேர் வச்சிருக்கேன். ர்ய்மிங்கா வேற இருக்கு.

இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டு கொண்டே மேற்க்கொண்டு படிங்க.

---------------------------------------------------------------------------------------------
சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

எல்லாருக்கும் கனவுகளும் ஆசைகளும் உண்டு. கண் மூடி கனவுகளில் திளைக்கையில் சிலருக்கு வைர வைடூரியங்கள் தெரியலாம். சிலருக்கு எழுபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டி தெரியலாம். சிலருக்கு சமீபத்தில் வெளி வந்த புது மாடல் செல் போன் தெரியலாம். இன்னும் சிலருக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களை கழிப்பது போல தெரியலாம். எல்லாமே வெளியே சொல்லி கொள்ளும்படியான அழகான கனவுகள்.

எனக்கு கனவில் தெரிவதெல்லாம் ஒரு கிண்ணத்தில் சாம்பார் வடை தான். அதுவும் சரவண பவன் ஹோட்டல் சாம்பார் வடை. சின்ன வெங்காயம் வாசனை மூக்கை துளைக்க (சத்தியமாக எனக்கு கனவில் வாசனை வருதுங்க), மின்னும் எவர்சில்வெர் கிண்ணத்தில் மேலே பொடிப்பொடியா நறுக்கின வெங்காயமும் கொத்தமல்லியும் மிதக்க சரவண பவனோட சாம்பார் வடை சமீப காலமாக என் கனவில் வந்து என்னை ரொம்ப தொல்லை செய்கிறது. யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? "ஐயோ பாவம், பல வருடங்களாக பட்டினி போல இருக்கு" என்று நினைக்க மாட்டார்களா? இந்த கனவை எப்படியாவது மாற்றி ஆக வேண்டும் என்று நேற்று இரவு படுக்க போவதற்கு முன் மனக்கண்ணில் அழகான பட்டு புடவைகளும் ஜொலிக்கும் நகைகளையும் கொண்டு வந்து பார்த்து விட்டு படுத்தேன். நாலு பேரிடம் சொல்லி கொள்வது போல் ஒரு கனவு வர வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி விட்டு தூங்கினால் என்ன கனவு வந்தது சொல்லுங்கள்? அதே கிண்ணம், அதே வடை, அதே சாம்பார்.

இன்னும் பதிமூன்றே நாட்களில் இந்தியாவில் இருப்பேன். இன்றிலிருந்து இரண்டாவது திங்கள் விடிகாலை மூன்று மணியளவில் விமானம் சிங்காரச் சென்னையில் இறங்குகிறது. விமானத்தளத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சரவணபவன் ஹோட்டலில் இறங்கி சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்று நான் கேட்டதற்கு வீட்டில் கீழ்ப்பாக்கத்தில் வேண்டுமானால் நிறுத்தி விட்டு செல்லலாம் என்று சொல்கிறார்கள். என் மூளை மிகப்பெரியது இல்லை தான். ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மூளைக் கோளாறு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையா? இது கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை?

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இவர்களை எல்லாம் நம்பினால் என் சரவண பவன் சாம்பார் வடை ஆசை படு குழியில் தான் விழப்போகிறது. என் காலே எனக்குதவி என்று ஊருக்கு சென்ற மறுநாள் ஒரு ஆட்டோ பிடித்து சரவணபவனுக்கு போய் சாம்பார் வடைக்கு ஒரு சலாம் போட்ட பிறகு தான் தங்கமாளிகை பக்கம் நகை வாங்க செல்லுவேன். சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.