Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Sunday, December 18, 2011

தமிழ்சங்கத்தின் விவாதக் குழுமம்


இந்தத் தலைப்பு சரியா! சரியில்லையா! ன்னு தமிழ் நல்லா தெரிஞ்ச நாகு, மெய்யப்பன், சீனிவாசன், வெங்கட் செட்டியார், சத்யா, நடராஜ மூர்த்தி மற்றும், மு.கோ போன்ற தமிழ் அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.  

சொல்ல வந்த விஷயம் (விடயம் நு எழுதனுமோ!) இதுதான்.  தமிழ் சங்கதின் சார்பில் ஒரு குழுமமா சேர்ந்து சில விஷயங்களைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் கூட்டம் போட்டு பேசினோம். வெறும கூட்டம் போட்டு பேசரதோட, பல நல்ல புத்தகங்களை கடனா வாங்கிட்டு போய் படிச்சுட்டு அடுத்த கூட்டம் நடக்கும் போது கொண்டு வந்து தரலாம்.  உங்க கிட்ட இருக்கர புத்தகங்களையும் இப்படி கொண்டு வந்து கொடுத்து நம்ப மக்களுக்கு படிக்கர ஆர்வத்தையும், படிக்கர விழிப்புணர்வையையும் கொண்டு வரலாம்.
 

சீனிவாசனின் தொடக்க உரைக்கு அப்புறம் தமிழ் சங்கத்தின் இந்த கூட்டங்கள் நல்லா போகுமா போகாதான்னு தெரிஞ்சுக்க நம்ம வெங்கட் செட்டியார் ‘சந்தேகம்’ ங்கர தலைப்பில் பேசினார்.  வெறும பேசினார்ன்னு சொல்லக் கூடாது, சந்தேகமே இல்லாம, நம்ம எல்லோருக்கும் சந்தேகம்ன்னா என்னன்னு கண்டிப்பா சந்தேகம் வர்ர மாதிரி பேசினார்.  இப்படி பட்டைய கிளப்பி வெங்கட் பேசினதும், சத்யா மாறிவரும் பல மாறுதல்களைப் பற்றிப் பேசி நாம இழந்தை பல விஷங்களைப் சொல்லி நம்மை மறுபடி நம்முடைய பால்ய காலத்துக்கு கொண்டு சென்றார்.  கடைசியா நான் ‘அரசியல்’ ங்கர தலைப்பில பொதுவா அரசியல்ன்னா என்ன, நம்மோட தினசரி வாழ்க்கையில அரசியல் எப்படி இயங்குதுன்னு பேச ஆரம்பிச்சு, 45 நிமிஷம் எல்லோரும் விவாதிச்சதுக்கு அப்புறம் வெறும அரசியல்ன்னா என்னங்கரதுல வந்து நின்னதோட கூட்டம் முடிவுக்கு வந்தது.  தமிழ்த்தாய் வாழ்த்தோட துவங்கிய கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது. 

கடந்த சனிக்கிழமை (12.17.2011) சங்கத்தின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.  இந்த முறை க்ரெடிட் மதிப்பீட்டு எண் என்பது என்ன அதை எதற்காக பார்க்கிறார்கள் என்பது பற்றி நண்பர் ராஜ்குமார் விவரமாகச் சொன்னார்.  இதுபோல பல அரிய பெரிய விஷங்கள் இவரிடம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்தான். 

இவரை அடுத்து நண்பர் மெய்யப்பன் (தமிழ் சங்கத்தின் தமிழ் ஆசிரியர்) தமிழுக்கு யார் எதிரி என்று காரசாரமாக பேச வந்தவர் முதல் எதிரிகளாக நாகு, நான் மற்றும் சீனிவாசனை உதாரணமாகக் காட்டினார்.  இவர் சொல்ல வந்த கருத்து தமிழ் நசிந்து வருகிறது, நல்ல எழுத்தாளர்கள் பலர் இருந்தும், படைக்கவும், படைப்புகளைப் பதிப்பிக்கவும் ஆர்வம் இல்லாம இருக்காங்க, தமிழ் நாட்டு கோவில்கள்ள இங்கு தமிழிலும் அர்சனை செய்யப் படுங்கர போர்டை பார்த்தா வெக்கமா இருக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சமா நசிஞ்சு போயிட்டே இருக்குன்னு விலாவரியா பேசினார், இது பல நிஜ தமிழ் ஆர்வலர்களுக்கும்,  நம்ம பலருக்கும்  காலம் காலமாக இருக்கும் ஒரு ஆதங்கம்தான்.  ஆனா அதை இவர் சொன்ன விதம், இவருடைய கவலை, தமிழக அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுபோல் போலியாக இல்லாமல் ஹிருதயத்திலிருந்து வந்த ஒரு கவலைங்கரதை விளக்க வேண்டிய அவசியமில்லை.  இவர் பேச்சை குறுக்கிட்டு என்னை மாதிரி எல்லோரும் பேசினாலும், பேச்சு தங்கு தடையில்லாமல் நல்லா இருந்தது.   

ரஜனியோட டிசம்பர் 12 பிறந்த நாளை கொண்டாடர தமிழக மக்கள், தேசிய கவி பாரதியோட டிசம்பர் 11 பிறந்த நாளை கண்டுக்காம இருக்காங்களேன்னு ரொம்ப வருத்தப் பட்டார் மெய்யப்பன்.  ரஜனி பிறந்த நாள் ஒரு கமர்ஷியல் விஷயம், பாரதி  பிறந்த நாள் நம்மை போல பலருக்கு உணர்வு பூர்வமாண ஒன்னு, இதை பத்தி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லைங்கரது என்னோட கருத்து.  இதைத் தவிர அதிகமா பேசப் பட்ட விஷயம் ப்ளாக்ங்கர விஷயம் வந்ததும், ஒரு சென்சார்ஷிப் இல்லாமல் யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் எழுதலாம்ங்கரது.  நாகுவோட கவலை ஒற்றெழுத்து எப்படி எழுதரதுன்னு கூட ப்ளாகுல எழுதர நிறைய பேருக்குத் தெரியலை, ரவியுடைய கவலை, இப்படி தப்பு தப்பா பலர் எழுதரதுனால கூட பல படிச்சவங்க எழுதரதுல ஆர்வம் காட்டாம இருக்கலாம்.  எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.  தமிழை தப்பு தப்பா எழுதினா தப்பு இல்லை.  தப்பான கருத்தை சரின்னு எழுதினாதான் தப்பு.  (ஹீம் நாடகம், கதைன்னு எழுதும் போது எனக்கு இப்படி ஒரு ஃப்ளோ வரதே இல்லை)

ஒரு சின்ன சிற்றுண்டி இடைவெளி (அதாங்க ஸ்நேக்ஸ் ப்ரேக்) க்கு பிறகு மு.கோபாலகிருஷ்ணன், பேசினார்.  இவர் பேசியதை சுருக்கமா சொல்லனும்னா கூட ஒரு பெரிய கதை மாதிரி சொல்லனும்.  பல விஷயங்களை பளிச்ன்னு சொன்னார்.  மெய்யப்பன் கருத்துகள் பலதை ஆதரிச்சும் சிலதை எதிர்த்தும் பேசினார்.  அந்தக்கால அரசியலில் காமராஜர், முத்துராமலிங்க தேவர் ரெண்டு பேருக்கும் நடுவில இருந்த பல விஷங்களைச் சொன்னார்.  பெரியாரைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு, அவருடைய பல நல்ல எண்ணங்களை பத்தி சொல்லிட்டு அந்தப் பேச்சு அரசியலை நோக்கி போறதை தெரிஞ்சுகிட்டு அதை தவிர்த்துட்டு பேசினார்.  இவர் பேச்சு நல்ல பல கருத்துக்களோட இருந்தது.

எனக்கு இப்படிப் பட்ட கூட்டங்கள் பிடிக்கும், ஏன்னா அடுத்தவங்க கருத்து என்னன்னு தெரிய வரும் அது மட்டும் இல்லாமல், கருத்துப் பகிர்வுங்கரது அருமையான ஒரு விஷயம்.  பேசப் பேச பல விஷயங்களைப் பத்தி ஒரு தெளிவு வரும்.  ஆனா இப்படிப் பட்ட நல்ல கூட்டங்கள் தொடர்ந்து நடக்கரதுக்கு நம்மல மாதிரி பலருடைய ஒத்துழைப்பு அதி முக்கியம்.  பேச தயாரில்லையா,  வேண்டாம், ஆனா, வந்து பங்கெடுத்துக்கலாமே.  அதை செஞ்சா 10-15 இருக்கர இந்தக் கூட்டம், 40-50 ஏன் 100 பேர் கலந்துக்கர கூட்டமா மாறும். 

இன்னிக்கு நம்ம எல்லோருக்கும் இருக்கர ஒரு கவலை, நம்ம நாட்டின் அரசியல் நிலைமை மாறாதா, யார் எதைச் செஞ்சா இது மாறும், அன்னா ஹசாரே காப்பாத்துவாரா, மோடி காப்பாத்துவாரா, எப்படி நாம இதுல பங்கெடுத்துக்கரதுன்னு தினம் தினம் யோசிக்கரோம், அதே யோசனையோட, மாசம் ஒரு தடவை இப்படி கூட்டங்களுக்கு வந்தால், ஊர் கூடி யோசிச்சா ஒரு வழி பிறக்காமலா போகும்.

முரளி இராமச்சந்திரன்

Monday, May 12, 2008

தோட்டக்காரன்

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Sunday, June 17, 2007

சிவாஜி எனும் அக்கப்போர்

"அமெரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பும் இளைஞர் (!) வில்லனை சமாளித்து, லஞ்சம் கொடுத்து ஊருக்கு நல்லது செய்கிறார் !"

இந்த ஒரு வரி (பழைய) கதைக்கு,


படமாக்க செய்த செலவு 80 கோடிக்கும் மேல்.

பில்ட்அப்-களுக்கு பஞ்சமே இல்லை.

நின்றால் ஒரு செய்தி, நடந்தால் ஒரு செய்தி.

சென்னையில் பால் குடம், பீர் குடம் அபிஷேகம் (எங்கே போய் முடியுமோ ?!)

10 ரூபா டிக்கட் ப்ளாகில் (நம்ம blog இல்லிங்கோ !) 500 ரூபாய்க்கு சென்னையில் விற்றிருக்கிறார்கள்.

திருச்சியில் 500 ரூபா நோட்டில் காந்தி இருக்குமிடத்தில் இவர்.

முன்னாள், இன்னாள் முதல் அமைச்சர்களுக்கு பிரத்தியேக காட்சி (அதிக கமிட்மென்ட் இல்லாத நமக்கே ஆயிரம் வேலை இருக்கும்போது, இவர்களால் எப்படி இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது என்று நினைக்கிறபோது வியப்பாகத் தான் இருக்கிறது !)

இதெல்லாம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், இணையச் செய்திகளிலும் வெளியானவை.


வலைப் பதிவர்கள் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல,

முதல் விமர்சனம் போட்டாச்சில்ல என்கிறார் ஒருவர்.

ஒருவர் சொல்கிறார் பாபா படம் போல் ஆகவேண்டும் என்று.

இன்னொருவர் சொல்கிறார் 100 நாள் என்ன 1000 நாள் ஓடும் என்று.

படத்தை பார்ப்பதைப் புறக்கணியுங்கள் என்கிறார் கோபத்துடன் ஒருவர்.

logic விசயத்தில் நம்ம ஊர் என்றில்லை வெளிநாடுகளில் அடிக்காத கூத்தா என்கிறார் இன்னொருவர்.

அவர் கர்நாடகத்துக்காரர், தமிழனுக்கு உதவி செய்வதில்லை என்கிறார் மற்றவர்.

கர்நாடகம், காவிரி, தமிழன், ஒரு கோடி, இப்படி பல விசயங்களையும் அலசி அதிரவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


சரி, விசயத்துக்கு வருவோம்.

பால் குடம் எடுப்பவருக்கும், பீர் பாட்டில் உடைப்பவருக்கும் நோக்கங்கள் இருக்கலாம். அவர்களைப் பொருத்தவரை என்றாவது ஒருநாள் 'தலைவர்' அரசியலுக்கு வருவார். நாமலும் நாலு காசு பார்க்கலாம் என்று.

படித்த, பண்புள்ள, பல நாடுகளில் வாழும் நாமும் 'சிவாஜி' பில்ட்அப்புக்கு சத்தமில்லாமல் உதவுகிறோம். ஒரு படம் நல்லா இருந்தா பாருங்கள். தாராளமா விமர்சனம் செய்யுங்கள். ஆனால் இன்றைக்கு தமிழ்மணத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நாம் காண்பது 'சிவாஜி' பற்றிய செய்தியே. இது சற்று வேதனை தரும் விசயம்.

நாம் பார்க்க, படிக்க, அனுபவிக்க, பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது, ஒரு பொழுதுபோக்குப் படத்திற்கு இத்தனை நேரம் செலவழிப்பது நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்தக் கால சூழலுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமான ஒன்று என்று மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தப் பொழுதுபோக்கு கொஞ்சம் ஓவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

உங்களுடைய பதிவுகள் வெறும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும், site traffic-க்கும் ஆக இருக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை நீங்கள் நிராகரிக்கலாம். உங்களுக்கும் பீர் பாட்டில் உடைப்போருக்கும் வித்தியாசமில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்.

இந்தா அந்தா என்று படமும் ரிலீஸாகிவிட்டது. இத்துடனாவது 'சிவாஜி' எனும் அக்கப்போர் ஓயவேண்டும் என்றும் மனம் குமுறும் வாலிபர் (!)