Showing posts with label வலைவலம். Show all posts
Showing posts with label வலைவலம். Show all posts

Monday, November 26, 2007

எச்சரிக்கை

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
காலம் கடந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சமீபத்தில் சென்னை சென்று வந்த அனுபவத்தை 'பரணீதரன்' அளவுக்கு தரமாக இல்லாவிட்டாலும், 'மணியன்' அளவுக்காவது எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் அபிப்ராயங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், பின்னூட்டங்களைப் பொருத்து இதைச் செய்யலாம் என்று இருக்கிறேன். தேவையில்லை என்று நினைத்தால் தெரிவித்து விடுங்கள். நாகு இதை வெளியிடும் சமயம், தடயம் மர்ம நாவலையும் முடித்து வெளியிட்டு விடுகிறேன் எனவே அதைப் பற்றி பின்னூட்டத்தில் கேட்டு குடைய வேண்டாம்.

சதங்கா:
உங்கள் கவிதைகளை நேற்று படித்தேன், அருமை. பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது, வார்த்தைகள் நன்கு பண் பட்டிருக்கிறது. வாஷிங்டன் பற்றிய பதிவில் வார்த்தைகளின் எளிமை மிக அழகு.

பரதேசி: படம் பாரு கடி கேளு உங்களின் ஏக போக சொத்தாகி விட்டது. இனி உங்களைப் போல இதை யாரும் எழுத முடியாது என்று நினைக்கிறேன். செல்வி(நாய்)க்கு தாலி கட்டிய செல்வகுமாரின் பதிவு அருமை. இந்த மேட்டர் சீரியஸ்னெஸ் செல்விக்கு மட்டும் புரிஞ்சுது, செல்வகுமார் கதை கந்தல்தான்.

அன்புடன்,

முரளி.

Friday, October 19, 2007

புத்தகவலம்

என்னய்யா யூட்யூபை வைத்து பதிவு நடத்துகிறாய் என்று அனைவரும்(சரி - ரிச்மண்டில் இருக்கும் இருவர்) கலாய்க்கிறார்கள். அதனால் யூட்யூப் பஜனை இல்லாத பதிவு இது.

முதலில் ஒரு அபூர்வமான படத்தைப் பாருங்க இங்கே. எல்லா ஆரஞ்சு கொக்குகளும் (அதாங்கோ ஃப்ளாமிங்கோ) சேர்ந்து ஒரு பெரிய ஆரஞ்சு கொக்கு செய்திருக்கின்றன. எங்கே ரூம் போட்டு யோசிச்சதுகளோ தெரியலை...

நேற்று ஒரு புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். A Certain Ambiguity: A Mathematical Novel - by Gaurav Suri & Hartosh Singh Bal

கணிதமேதையான ஒரு தாத்தா தன் பேரனுக்கு ஒரு கால்குலேட்டர் கொடுத்து புதிர்களின் மூலம் கணிதத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். பேரன் அமெரிக்கா போய் கணிதம் கற்கவேண்டும் என்று சொத்தை எழுதிவைத்து செத்துப் போகிறார். பேரன் அமெரிக்கா வந்து ஸ்டான்ஃபோர்டில் படிக்கிறான். தாத்தா 1919ல் நியுஜெர்ஸியில் சிறைத்தண்டனை பெற்றதை அறிகிறான். அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கணிதத்தை நாடுகிறார். புத்தகம் கைக்கு வந்ததும் மேலே சொல்கிறேன். :-) வேண்டுமானால் முதல் அத்தியாயத்தை படித்துக் கொள்ளுங்கள் இங்கே.

கணிதம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது சைமன் சிங்கின் புத்தகங்கள். அவருடைய கோட் புக் மிகவும் சுவாரசியமானது. ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரை மனிதன் எப்படி ரகசியமாக சங்கேத மொழியில்(encryption) தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விளக்குகிறார். ஜூலியஸ் சீஸர், ஸ்காட்லாந்து ராணியில் துவங்கி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா-இங்கிலாந்து ரகசிய தொடர்பு கொள்ள என்ன உத்திகள் எல்லாம் கையாண்டார்கள் என்று சுவாரசியமாக போகிறது புத்தகம்.


இந்த கணிணி உலகில் புழக்கத்தில் இருக்கும் என்கிரிப்ஷன் வகைகளும் சுலபமாக புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். மாணவர்கள் படிக்க நல்ல அழகான முறையில் விளக்கியிருக்கிறார். ஜெர்மனி உபயோகப்படுத்திய எனிக்மா கருவி மாணவர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய அருமையான தலைப்பு. வர்ஜினியாவில் புதையுண்டு இருக்கும் பொக்கிஷம் பற்றிய கதையும் சுவாரசியமானது. அதற்கான் வேட்டை இன்னும் வர்ஜினியாவின் லின்ச்பர்க் நகரில் நடக்கிறதாம். அடுத்த முறை அந்த பக்கம் போகும்போது கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.

அவருடைய பிக் பேங் தியரி பற்றிய புத்தகமும் அருமையானது. இந்த புத்தகமும் ஆதி காலத்திலிருந்து பல நாகரீகங்களில் உலகம் மற்றும் அண்டவெளியைப் பற்றி இருந்த பலவிதமான நம்பிக்கைகளில் ஆரம்பித்து இந்த நாள் வரை உலகம் உருவானதற்கான ஆராய்ச்சியைக் கோவையாக சொல்கிறார் சைமன். இவருடைய ஃப்ர்மட் தியரம் பற்றிய புத்தகமும் இந்த வகையில் ஆதிகாலத்து கணித மேதைகளில் ஆரம்பித்து தற்போதைய கண்டுபிடிப்பு வரை விளக்கியிருக்கிறார். இந்த புத்தகம்தான் பாதிக்கு மேல் எனக்கு OHT ஆகிவிட்டது(overhead transmission).

இந்த புத்தகங்களை எல்லாம் அண்மையில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் ஒன்றிருக்கிறது. பத்ரி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிக் இன்ஃபோ போன்ற தளங்களுக்கு காரணகர்த்தா. இப்போது இந்தியா திரும்பி கிழக்கு பதிப்பகம் என்ற பேரில் தமிழில் புத்தகங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த கிழக்குப் பதிப்பகம் அண்மையில் ஒருவரின் வரலாற்றை புத்தகமாக போட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த நபர் அகால மரணம் அடைந்தபோது நான் அடைந்த சோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.

இவர் இறந்து போன செய்தி கேட்டு, என் நண்பன் ஒருவன் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'தூக்கம் போச்சிடி அம்மா' என்று புலம்பிக் கொண்டிருந்தான். கரெக்ட்! சிலுக்கின் வாழ்க்கை வரலாறுதான் புத்தகமாக வந்திருக்கிறது. இந்த தாளாத துயரத்தைத் தணிக்க - புத்தகம் வந்ததற்கல்ல - எத்தனை முறை மூன்றாம் பிறை பார்த்தாலும் போதாது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் யாராவது இந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தால் என் ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுக்கிறேன்.(தமிழ் சங்க பொருளாளரிடம் சொல்லாதீர்கள்)



இப்போது நான் படித்துக் கொண்டிருப்பது மீரா காம்தார் எழுதிய Planet India. 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் சைனாவுக்கும்தான் சொந்தம் என்கிறார். உலகநாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்தியா என்கிறார். தட்பவெப்பத்தில் பார்த்தால் இமாலயக் குளிரிலிருந்து ராஜபுதன பாலைவன சூடுவரை... அரசியலில் பார்த்தால் கம்யூனிஸ்டுகளில் இருந்து மன்மோகன் சிங் வரை.... சினிமா, பொருளாதாரம், ஏழ்மை, பணம் அனைத்து எல்லா விளிம்புகளையும் அடங்கியதால், இந்தியாவே ஒரு சிறிய உலகம் போன்றது என்றும், எப்படி இந்தியா உலகத்தின் முக்கிய நாடாக திகழப்போகிறது என்று சொல்கிறார் மீரா.


நான் சதங்காவுடன் கூட்டணியை முழுமையாகத் துண்டித்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிக்கட்சிக்காக அல்ல. சுஜாதாவைப் பிடிக்காதாம். அதாவது படித்ததே இல்லை என்கிறார் மனுஷன். தமிழ்நாட்டில் எந்த குகையில் இருந்தார் என்று தெரியவில்லை. சுஜாதா படிக்காத நபர் யாராவது இருப்பார்களா? பிடிப்பது பிடிக்காதது அடுத்த விஷயம். அப்புறம் பிடித்த எழுத்தாளர் என்று நான் கேள்விப்படாத பெயர் எல்லாம் சொல்கிறார். அவருடைய தமிழ் வாத்தியார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த மற்றொரு எழுத்தாளர் அண்மையில் மறைந்த ஆர்ட் பக்வால்ட். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கடைசி பக்கம் நினைவிருக்கிறதா? அதற்காக வாரம் முழுவதும் காத்திருப்பேன். பள்ளியில் ஒருமுறை நான் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு என் ஆசிரியர் 'ஆர்ட் புக்வால்ட்' ரொம்ப படிப்பியா என்று கேட்டார். நியுயார்க் டைம்ஸில் புகழ்பெற்ற மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே கடைசி பேட்டி காண்கிறார்கள். அதில் அவருக்கே உரித்த பாணியில் அவருடைய மரணத்தை அவரே அறிவிப்பதை பாருங்கள். மனுஷன் சிரித்துக் கொண்டே அழவைக்கிறார். சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் P.G.Wodehouse. ரொம்ப நாள் கழித்து சில புத்தகங்களை படித்தேன்(மகனும் விரும்பிப் படிக்கிறான் - மகனுடன் புத்தகத்துக்கு சண்டை போடுவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை). உங்களுக்கு இரண்டு வினாடி வினா கேள்விகள்(அது என்ன வினா கேள்வின்னு கேக்கப்படாது).

1. ஜீவ்ஸின் முதல் பெயர்(first name) என்ன?
2. பெர்ட்ரம் வூஸ்டரின் நடுப் பெயர்(middle name) என்ன?

சரியான பதில் அளிப்பவருக்கு சிலுக்கு புத்தகத்திற்கு கொடுத்தது போக அடுத்த பாதி ராஜ்ஜியம்.

வர்ட்டா.... Toodle-oooo!!!

Tuesday, September 11, 2007

வலைவலம்

ஒருவனுக்கு சாப்பிட மீனைக் கொடுத்தால் அவன் அன்று மட்டும்தான் சாப்பிடுவான். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுதும் சாப்பிடுவான் என்கிறது ஒரு சீனப்(?) பழமொழி. அந்த பழமொழியைச் செயல்படுத்தும் இரண்டு பொதுப்பணி நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.



முதலாவது கிவா! கிவா'வின் திட்டம் மிக எளிது. சுயமாகத் தொழில் செய்ய விரும்பும் ஏழைமக்களுக்கு தேவையான சிறுகடன்(மைக்ரோக்ரெடிட்) கொடுப்பது. நீங்கள் உங்கள் கணணியில் இவர்களைப் பற்றி படித்துவிட்டு இருபத்தைந்து டாலரில் இருந்து தேவைப்பட்ட அளவு கொடுக்கலாம். அவர்கள் அந்த கடனை அடைக்கும்போது நீங்கள் மீண்டும் வேறு யாருக்காவது கடன் கொடுக்கலாம் அல்லது உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கிவா நிறுவனம் பல நாடுகளில் உள்ள சேவை நிறுவனங்கள், மற்றும் மைக்ரோகிரெடிட் நிறுவனங்களுடன் சேர்ந்து உங்கள் கடனை அப்படியே தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கிவா தளத்தில் படியுங்கள். நியுயார்க் டைம்ஸின் இந்த வீடியோவும் சுவாரசியமானது.

PBS-ன் செய்தித் தொகுப்பை இங்கே பாருங்கள்.


நான் கிவாவைப் பற்றி கேள்விப்பட்டது இந்த பதிவின் மூலம்.

ஆனால என்ன ஒரு வேடிக்கை என்றால், அண்மையில் கிவாவுக்கு ஆப்ரா வின்ஃப்ரி மூலம் நல்ல விளம்பரம் கிடைத்ததால், அனைத்து கடன்களுக்கும் பண உதவி கிடைத்துவிட்டது. நீங்கள் கடன் கொடுக்க இப்போது ஆளில்லை. ஆனால் தளத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருங்கள். கிவா நிறுவனம் கடன் கொடுக்க தகுதியானவர்களை மும்முரமாக தேடி தளத்தில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. ஒரு உபகதையாக ஆப்ராவுக்கு நன்கொடை செய்ய ஐடியா கொடுத்த ஒரு சிறுமியின் கதையையும் படியுங்கள்.





இரண்டாவது நிறுவனம் ரூம் டு ரீட். இந்த நிறுவனத்தை ஜான் வுட் ஆரம்பித்த கதை ரொம்ப சுவாரசியமானது. மைக்ரோசாஃப்டில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஜான் வுட் நேபாளத்தில் ஒரு முறை மலையேற்றம் செய்யப் போயிருந்தபோது ஒரு சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்தை பார்க்கிறார். அங்கு இருக்கும் புத்தகங்களெல்லாம் இவர் மாதிரி மலையேறும் மக்கள் போட்டுவிட்டுப்போன புத்தகங்கள், வார இதழ்கள். அவற்றுள் பல குழந்தைகளுக்கு உகந்ததுமல்ல. ஆசிரியர்களோ குழந்தைகளுக்கு படிப்பு சொல்லத் துடிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று ஜான் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்த தலைமை ஆசிரியர் சொன்ன ஒரு வாக்கியம் தன் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டது என்கிறார் ஜான். அந்த தலைமை ஆசிரியர் சொன்னது இதுதான்:

"Perhaps, Sir, you will some day come back with books".

அந்த கதையை அவர் சொல்லியே கேளுங்கள்.



அந்த பள்ளிக்கு சில புத்தகங்கள் கொடுக்கலாம் என்று ஆரம்பித்த முயற்சி இன்று ஒரு மிகப் பெரிய பொதுச்சேவை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே அதன் முதல் அத்தியாயத்தைப் படித்துப் பாருங்களேன்.

ஜான் வுட்'டின் நிறுவனம் இன்று பள்ளிக்கூடங்களில் நூலகம் நிறுவுவதில் இருந்து நூதனமான முறையில் பள்ளிக்கூடங்களே கட்டிக் கொடுப்பதும் பெண் குழந்தைகளுக்கு படிக்க பண உதவி தருவதுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு சிறு கிராமத்தில் உங்கள் பெயர் போட்ட நூலகம் நிறுவத் தயாரா?

Monday, August 27, 2007

நம்ப ஊர் பதிவுகள் - நம்ம ஊர் வலைவலம்

என்னடா இது, இந்த ரிச்மண்டுக்கு வந்த சோதனை? இதில் எழுதிக்கொண்டு இருந்த மக்களைக் காணவில்லை. கோடை விடுமுறையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. பித்தனாவது பரவாயில்லை. தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு நம்முடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சதங்கா இருக்கிறாரே - சத்தம் போடாமல் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார். தமிழ்மணத்தில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். என்னய்யா தனியாக மைக் பிடித்து விட்டீர் என்றேன். கொள்கை அடிப்படையில் தனியாக போய்விட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் 'இஞ்சி' தின்ற குரங்கு மாதிரி ஆகிவிட்டேன். அவ்வப்போது நான் ரொம்ப அழுதால், ஒரு இஞ்சி, மன்னிக்கவும், ஒரு பதிவு இங்கே போடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வாரத்துக்கு ஒருமுறை புலம்புவதாக உத்தேசம்.

தமிழ்மணத்தின் பூங்கா வலை இதழில் சதங்காவின் யானைக்கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

பரதேசியாரும் காணோம். சென்னைக்கு போய்விட்டு வந்து இன்னும் பரதேசி மனநிலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக் கூப்பிட்டேன். தலைக்கு மேல் வேலையாம். அவர்தான் இந்த பதிவை ரொம்ப நாள் ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றி வந்தார். இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டு கூப்பிட்டு "தமிழ் சங்கப் பதிவுக்கோர் குறை நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை" என்று பாடப்போகிறேன்.

காணாமல் போன தேனப்பனை பிடித்துக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறிஞ்சிப்பூ பரிசு கொடுக்கப்படும். அவர் கதையை அடுத்த பதினோரு வருஷத்துக்கு கேட்கக்கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

நம் ஊரில் தனிக்கட்சி நடத்தும் மற்ற சிலரைப் பார்ப்போம். நம் தமிழ் சங்க வெப் மாஸ்டர் கதையைப் பாருங்கள். தனிமரம் காடான கதையாய் ஒரே ஆளாய் பல பேரில் கூட்டணி நடத்துகிறார். அவருடைய புகைப்படங்கள் மிகவும் அருமையானவை. ஜெயகாந்தன் என்றால் சும்மாவா?

எங்க ஊரு பாட்டுக்காரன் பதிவைப் பாருங்கள். தமிழ் சங்க கல்லாப்பெட்டிக்காரர் அரவிந்தின் பாடல்கள் அருமையாக இருக்கின்றன. அரவிந்தன் மட்டும் எழுதினால், அவர் வீட்டில் சும்மா இருப்பார்களா? முப்பது நாளில் முப்பது பதிவுகள் என்று ஒரு சாதனை செய்திருக்கிறார் சுபத்ரா. அவருடைய பதிவு இதோ. ஆனால் கல்லாப்பெட்டி ரொம்ப மோசம். அவர் படிக்கும் பதிவுகள் என்ற வரிசையில் மனைவியின் பதிவை கடைசியில் குறிப்பிடுகிறார்(ஏதோ நம்மால் ஆன கைங்கரியம் :-)

எல்லோர் பதிவையும் சொல்லிவிட்டு இந்த பதிவைச் சொல்லாவிட்டால் எனக்கே புவ்வா கிடைக்காது :-) அப்படியே நம் புத்திர சிகாமணிகள் பதிவுகளும் இங்கே (ஒன்றா, இரண்டா) இருக்கின்றன.

அட மறந்தே விட்டேன். ரிச்மண்டில் அனைவரையும் எழுத வைக்க மூல காரணமே கவிநயாதான். அவருடைய வலைத்தளத்தில் புதிதாக ஏதும் காணவில்லை. அன்புடன் ஜோதியில் கலந்திருக்கிறார் போல. அவர்தான் இயலிலும் நாட்டியத்திலும் கலக்குகிறார் என்றால் அவர் மகன் எனம்மா இசையை விட்டு வைத்தீர்கள் என்ற தோரணையில் மேற்கத்திய இசையில் கலக்குகிறான். எனக்கு ஒரே ஆச்சரியம் அரவிந்த் கேட்கும் மேற்கத்திய இசை எல்லாம் எனக்குப் பிடித்த கிளாஸிக் ராக்! அவனது இசையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. மேலும் தொடர்ந்து இசையில் சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.

எனக்குத் தெரிந்த ரிச்மண்ட் பதிவுகள் இவ்வளவுதான். உங்களுக்கு தெரிந்த ரிச்மண்ட்காரர்களின் பதிவுகளையும், வலைத்தளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Saturday, June 30, 2007

வலைவலம்

கோடைகாலத்திற்கு நிறைய பேர் இந்தியாவிற்கு போய்விட்டு வருவார்கள். போகும்போதும், வரும்போதும் நேர வித்யாசத்தினால் பல தொந்தரவுகள். இந்த ஜெட்-லேகிற்கு ஒரு நிவாரணம் கண்டுபிடிக்க அர்ஜெண்டைனாவில் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான முயற்சி செய்கிறார்கள். அதுசரி தலைவலி போய் 'திருகு'வலி வராதா என்று கேட்காதீர்கள். அதைப்போல இந்த செய்தியை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று இந்த மருந்தைக் கேட்டால் நான் பொறுப்பில்லை.

மருத்துவர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அமெரிக்காவில் ஒரு புது ஊருக்கு போனவுடன் ஒரு நல்ல டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு உதவுகிறார் பாரதி இந்தப் பதிவில். பாரதி என்றால் முண்டாசுக்காரர் இல்லை. அவரது பதிவில் சில நல்ல வலைத்தளங்களை சுட்டியிருக்கிறார். அது மாதிரியான ஒரு தளம்தான் ரெவல்யூஷன் ஹெல்த். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அமெரிக்காவில் வலைஉலாவிற்கு AOL மூலம் வித்திட்டு பட்டை கிளப்பிய ஸ்டீவ் கேஸ்.

உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் பல மூலைகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டுமா - இந்த தளத்தில் பாருங்கள்.. எல்லா ஊருக்கும் போய் பாருங்கள். கஜுராஹோவிலேயே உட்கார்ந்து விட வேண்டாம்.(அங்கே இங்கே போய் 'அதே' இடத்துக்கு வரீங்களேன்னு பித்தன் குரல் விடுவது கேட்கிறது)

ஈபே கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியக் குடும்பம் ஒரு தலைகீழான ஈபே ஆரம்பித்திருக்கிறது. ஹம்ராஸ் தளத்தில் ஒரு பொருளை ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் எல்லாரைவிட குறைந்த விலைக்கு கேட்கவேண்டும். அது எப்படி என்கிறீர்களா? அந்த குறைந்த விலைக்கு நீங்கள் மட்டுமே கேட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு பொருளுக்கு இப்படி பேரம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1.20 - பத்து பேர்
1.23 - இரண்டு பேர்
1.24 - ஒருவர்
1.28 - மூன்று பேர்
1.39 - ஒருவர்

ஜெயிப்பவர் 1.24க்கு கேட்டவர். அவர் ஒருவர் மட்டும்தான் குறைந்த விலைக்கு கேட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அஸ்மத் மோனகன் எனும் தாயும் அவரது மகள்கள் ஆம்பரின், ஹென்னா. இதைப் பற்றி விவரமாக இங்கே படிக்கலாம்.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். ஏன் என்று தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும். நான் இங்கே பேரைச் சொல்லாமல் ஊரைச் சொல்கிறேன். நம் வலைப்பதிவில் எழுதும் ஒரு நபரின் ஊரில் நடந்த சம்பவம் மிக சுவாரசியமானது. கவிச் சக்கரவர்த்திக்கு எந்த ஊரில் சமாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாட்டரசன் கோட்டைக்காரர்கள் தவிர மற்றவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் கவிச்சக்கரவர்த்தி யாரென்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான் ஆளாளுக்கு அரசர், பேரசரர் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள். நான் சொல்லுவது கம்பரைப் பற்றி. ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம். அந்த சுவாரசியமான கதையை பிரபுவின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு Gods must be crazy யில் வரும் ஆதிவாசிதான் நினைவுக்கு வந்தான். அய்யய்யய்யய்யய்யய்.......


இப்படி ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார் ரவிசங்கர்.



புரியவில்லையா?

தமிங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டாமென்கிறார். ஆங்கில அடிமை என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் வேகமானது என்கிறார் ரவி. வேகமான முறை என்பதற்காகவே முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த விசைப்பலகையை பார்த்தால்தான் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.




ஆனால் இந்த முறை ஆங்கில மோகத்தைக் குறைக்குமென்றால், தட்டச்சும் வேகத்தை அதிகமாக்குமென்றால் கண்டிப்பாக அனைவரும் முயலவேண்டும். நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இப்போதே வலைபதிய உட்காரும்போது 'கருத்து' கேட்க வேண்டியிருக்கிறது. இதில் இந்த விசைப்பலகையை முயன்றால், 'கருத்து' 'புராணமாக' மாறும் அறிகுறிகள் வலுக்கின்றன.

கடேசியாக நமது வர்ஜீனியா மாவட்டத்தில் மோசமாக காரோட்டுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்த முறை கன்னாபின்னாவென்று ஓட்டி மாமாவிடம் மாட்டினால் நீதிபதி தீட்டுவது மட்டுமல்லாமல் மூன்று வருடங்களுக்கு தண்டல் கட்டவேண்டும். முழு விவரங்கள் இதோ.

Thursday, May 10, 2007

வலைவலம்

முதலில் வலப்பக்கத்தில் இருக்கும் வலைக்குலையும் காலண்டரும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். லேபிள் கிளவ்ட் என்று ஒரு தளத்தில் பார்த்தது. இங்கு சேர்க்க நான் கொஞ்சம் ததிங்கினத்தோம் போட்டேன். கடைசியில் பொன்ஸுக்கு் அவுட்ஸோர்ஸ் செய்ய, அவர்கள் ஆணி பிடுங்கி வேலை செய்ய வைத்தார்கள். லேபிள் கிளவுட்டை நான் வகைக்குலை என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

இது கொஞ்சம் பழைய செய்திதான். இருந்தாலும் தமாஷ் - அதாவது உங்கள் தலையெழுத்து, என் கண்ணில் இன்றுதான் பட்டது. குஜராத்தில் பத்தொன்பது வயதான ஒரு பெண்ணும், பையனும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளப் பார்த்தார்கள். ஆனால் ஒரு பிரச்னை. குஜராத்தில் பையனுக்கு கல்யாணம் செய்ய இருவத்தோரு வயதாயிருக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்த செய்தியை ஒரு குரங்கு(மனம்) படித்துவிட்டு இப்படி கற்பனை செய்தது. குரங்கு(மனம்) நிறைய தமிழ் சினிமா பார்க்கிறது என நினைக்கிறேன். நம்ம ஊர் சத்தியாவிடம் சொல்லி நண்பருக்கு கொஞ்சம் ஆட்றா ராமா ஆட்டம் காண்பிக்கவேண்டும்.

அந்த சினிமா கதை இருக்கட்டும். இந்த செய்தியைப் பாருங்கள். பாலச்சந்தர் பிச்சை வாங்கவேண்டும். மாண்ட்ரியல் நகரைச் சேர்ந்த மெலனி போய்வின் என்பவர் தனது 7 வயது மகளுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார். டெய்லர் சின்ட்ரோம் என்ற வியாதி கொண்ட மகளுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை. அந்த குறையைத் தீர்க்க தாயார் மெலனியின் உத்தி என்ன தெரியுமா? தன் முட்டைகளை உறைநிலையில் வைத்து மகள் பெரியவளானவுடன் கர்ப்பம் தரிக்க பயன்படுத்துவாராம். ஆக ஒரே நேரத்தில் அவர் பாட்டியாகவும், தாயாராகவும் ஆவாராம். யாரோடு விந்தை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. பெண்ணிற்கு விந்துதானம் செய்பவர் தந்தையா, துணையா??? கேள்வியின் நாயகனைத்தான் கேட்க வேண்டும். குரங்க்கைக் கேட்டால் என்ன சொல்லும் என்று தெரியவில்லை.


ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் பெரியார் சிலைக்கு குண்டு வைக்கப் பார்த்த அம்புஜம் மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டீர்களா? இந்த கண்மணிப் பக்கத்தில் அதைப் பற்றி படிக்கலாம். இன்னோரு மாமியிடம் ஒரு திருடன் பட்ட அவதி இந்தக் கதையில்.

ஆப்பிள் கம்ப்யூட்டரின் ஸ்டீவ் ஜாப் பற்றி தெரியாதவர்கள் கிடையாது. அவரது 10 பாடங்கள் இந்த தளத்தில். இது அவரே சொன்னதா, இங்கே ஜல்லியடிக்கிறார்களா என்று தெரியவில்லை. கன்ஃபூசியஸ் சொன்ன ஒரு மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது.

கன்ஃபூசியஸ் சொன்னதாக சொல்லும் பல மேற்கோள்கள் உண்மை கிடையாது - கன்ஃபூசியஸ்!


பாடம் எல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைக்கு உதவும் இந்த சர்ச்சையைப் பார்ப்போம். தாளிப்பதற்கு எதைப் போடலாம் - எள்ளா, உளுந்தா? கடலை போடலாம் என்று குரல் கொடுப்பவர்கள் கடைசி பெஞ்சுக்கு போகவும். எள்ளா, உளுந்தா எந்த சமயத்தில் எதை பயன்படுத்தலாம் என்று கம்பராமாயணம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா இங்கே?

இந்த விஷயத்தை நமது உள்ளுர் கம்ப ராமாயண வல்லுனரைக் கேட்டிருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Wednesday, April 11, 2007

வலைவலம்

உலக வரைப்படத்தை ஒரே மாதிரி பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு இந்த தளம் பிடிக்கும். ஏஷியட் போட்டிகளில் எதை சேர்த்தால் தங்கம் கிடைக்கும் என்று யோசித்து கபடியை சேர்த்த மாதிரி, ஹை நம்ம ஊர் எவ்ளாம் பெருசு என்று வியக்கும் வண்ணம் இந்தியாவை பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாக காட்டும் மக்கள்தொகை அடிப்படையிலான வரைப்படம்! இந்தியத்தாய் இன்னொரு குழந்தை பெறுவதற்கு தயாராக உள்ளது போன்றிருக்கிறாள். அமெரிக்கர்கள் செல்வத்திலும், உணவுத் தானத்திலும் மட்டுமில்லாது, வேக உணவு(அதாங்க fastfood) வகையிலும் கொழித்திருக்கிறார்கள்(super size me!). இந்தியா மக்கள்தொகையில் கொழுத்ததுபோல் இந்த வகையிலும் கொழுத்திருப்பது ஒரு irony! ஆனால் படிப்பில் கொழுத்திருப்பது ஒரு நல்ல விஷயம். பெண்கல்வியில்லாமையில் கொழுத்திருப்பது இன்னொரு irony!

குழந்தை பெறுவதற்கு தயாராக இருக்கும் இந்தியத்தாய் என்றதும் நினைவுக்கு வருகிறது. குழந்தை பெறும் நிலையில் இருக்கும் இந்தியத் தாயார்களின் கூட்டு வலைப்பதிவு இது. நம் வலைப்பதிவில் உள்ள ஜனத்தொகையைவிட மிக அதிகம். ஆனால் நம் படையைப்போல அமைதி காப்பதில்லை. வயற்றிலுள்ள குழந்தை உதைக்கிறமாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். பெங்களூரில் ஒரு கர்ப்பிணியின் அனுபவங்கள் போன்ற பதிவுகள், இதை நம்ம ஊர் வெப் எம்டி அளவுக்கு கொண்டு போனாலும் போகலாம்.

என்னதான் நம்ம ஊர் படங்களை கிண்டல் அடித்தாலும், நம்ம ஊர் படங்கள் கம்ப்யூட்டரை காட்டுவதில் அமெரிக்க படங்களைவிட் எவ்வளவோ மேல். இங்கே ஒரு பயல் ஆப்பிள் லேப்டாப் பெண்ணே என்று எழுதினானா? ஹாலிவுட் படங்களில் கம்ப்யூட்டரை இன்னும் எவ்வள்வு கேலிக்கூத்தாக காண்பிக்கிறார்கள் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள் இங்கே.


நான் தமிழில் வலைவலம் வருவது இருக்கட்டும். பாருங்கள் யாரெல்லாம், தமிழில் செய்தி தருகிறார்கள் என்று. யாஹு பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது MSNனும் தமிழ் ஜோதியில் கலந்திருக்கிறார். நான் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். ஊஹும்... இப்போதுதான் ஹிந்தியில் அவதாரமெடுத்திருக்கிறார். ஹிந்தி எதிர்ப்புக்காரர்களை கூப்பிட்டு அந்த வலைத்தளத்தில் கறுப்பு மை பூச சொல்ல வேண்டும்.

Saturday, February 03, 2007

வலைவலம்

Mac வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
windows update செய்தே நோவார்.



முதற்கண் நன்றி நவில வேண்டும்.

இந்த பதிவை உயிருடன் வைத்திருக்கும் பரதேசியாரே! உமக்கு ஆயிரம் பொற்... கும்பிடு...

நம் வலைப்பதிவு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். சமீபத்தில் பரதேசியாரின் லொள்ளையும், கடுப்ஸையும் தமிழ்ப்பதிவுலக பிரபலங்களான துளசியும் பெங்களூர் செந்தழல் ரவியும் படித்து ரசித்திருக்கிறார்கள். துளசியக்கா நியூசிலாந்தில் தமிழ் வளர்க்கிறார்கள். அவரின் எவரிடே மனிதர்கள் தொடர் படிக்க வேண்டிய ஒன்று. செந்தழல் ரவி சென்ற ஆண்டு நட்சத்திர வலைப்பதிவர் பரிசு வாங்கியவர். சென்ற மாதத்தில் நம் பதிவுக்கு இங்கிருந்தெல்லாம் வருகை தந்திருக்கிறார்கள். வலது கோடியில் துளசி எட்டிப் பார்ப்பது தெரிகிறதா?




அதெல்லாம் சரி - நம் ஊரில் யார் படிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

இதோ வந்து விட்டது தமிழில் யாஹூ. சினிமா, ஆரோக்கியம், ஆன்மீகம் என்று விகடன் கல்கி பாணியில் போகிறது. இதை பார்த்தவுடன், எம்பெருமான் கூகுளாண்டவர் ஞாபகம் வந்தது. அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தால், இந்தியப் பக்கத்தோடு நிற்கிறார். தமிழில் தேடலாம் இந்த தளத்தில். பழக்க தோஷத்தில் தமிழில் தேடினால், கிடைத்தது நானே! ஹி... ஹி...

அதெல்லாம் கிடக்கட்டும். இந்த கலாட்டாவைப் பாருங்கள். பண்ருட்டிக்காரர்களுக்கு கல்யாணத்தில் என்ன குறை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காலை டிபனுக்கு இட்லி இல்லைபென்றால் பெண்வீட்டுக்காரர்களாய் இருந்தாலும் பொங்கியெழுந்து விடுவோம். கடலூர்காரர்களுக்கு எச்சரிக்கை.

சென்னையில் புத்தகக் கண்காட்சி மிக கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்போது நிறைய ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. நல்ல கும்பலும் வருகிறது. மக்கள் புத்தகங்களும் நிறைய வாங்குகிறார்கள். வாஸ்து, ஆன்மீகம் மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்பதாக ஒரு நண்பனின் தகப்பனார் சொன்னார். துளசி கோபால் ரொம்பவே பாராட்டியிருக்கிறார். தமிழ் இனி அழியாது என்று. அவருக்கு அந்த சந்தேகம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. இத்தனை பேர் தமிழில் எழுதும்போது, நியூஸிலாந்தில் தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது, அது ஏன் அழிகிறது? கிழக்குப் பதிப்பகத்தை நடத்தும் பத்ரியின் பதிவிலும் ஒவ்வொரு நாளைப்பற்றியும் படிக்கலாம். நான் கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை நெய்வேலியில் இந்த புத்தகக் காட்சி போயிருக்கிறேன். புத்தகக் கடைகளுடன் மின்சாரத்தில் இயங்கும் பலவிதமா ராட்டினங்கள்(rides) எல்லாம் சேர்ந்து ஒரே அமர்க்களம்.ஒரு ராட்டினத்தில் உட்கார்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால் இன்னும் சுற்றிக் கொண்டிருந்தது. எங்க வீட்டு கரண்டா, உங்க வீட்டு கரண்டா?

சமீபத்தில் ஐரோப்பாவில் விஞ்ஞானிகள் கூடி உலகம் வெப்பமடைவதற்கு மனிதன்தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம். அதற்கு டைனோசார்கள்தான் காரணம் என்று இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன். டப்யு இது குறித்து என்ன நினைக்கிறார் என்று யாராவது கேட்டுச் சொன்னால் நல்லது.

'டூர் டி பிரான்ஸை' இவ்வளவு நாள் தன் ஹேண்டில்பாரில் வைத்திருந்த லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் புற்றுநோய் வந்து பிழைத்தவர் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இப்போது புற்றுநோயை குணமாக்கும் ஆராய்ச்சிக்கு வாஷிங்டனில் முக்கியத்துவம் கொடுப்பதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் லேன்ஸ். என்ன செய்யப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை(எனக்கு). ஆனால் நம்மால் முடிந்த, பெயர் பதிவை செய்வோம். லிவ் ஸ்ட்ராங். Go Lance!(அதை தமிழில் எழுதினால் ஏனோ நன்றாக இல்லை)

விக்கி பசங்களின் பதிவும் அறிவை வளர்ப்பதில் அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டியது. நான் அந்த பக்கம் எல்லாம் போவதில்லை. நயன்தாரா சிம்பு விவகாரம் என்னாயிற்று என்று தெரிந்தாலே போதும். ஜென்ம சாபல்யம் அடைவேன்.

இந்தியாவில் காதலர்(வேலைண்டின்) தினம் இப்போதெல்லாம் கோலாகலமாக நடக்கிறது. இந்த சிவசேனையும் தமிழர் மரபுக்காவலர்களும் இந்த ஆண்டு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். எனக்கு கல்லூரி முடிக்கும் தறுவாயில்தான் அப்படி ஒரு தினம் இருக்கிறது என்று லேசாக தெரிந்தது. முதலில் யார் அந்த வேலண்ணன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பென்ஸர் பிளாஸாவில் நடந்த போட்டிகளைப் பற்றி விகடனில் படித்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன். இப்படியெல்லாம் ஏன் நமக்கு நடக்கவில்லை என்று!

சரி இதெல்லாம் போகட்டும். பதினேழாம் தேதி மதியம் மூன்று மணிக்கு ஹிந்து மையத்துக்கு பொங்கல் விழா காண வந்து விடுங்கள். சென்ற முறை ஜால்ரா சரியாக அடிக்காததால், இந்த முறை அதற்குக்கூட யாரும் என்னைக் கூப்பிடவில்லை.

காணவில்லை: பித்தன், முரளி, ரமேஷ், எதிரொலி, தருமி, அஜாதசத்ரு, கவிநயா. கண்டுபிடித்து இப்பதிவுக்கு அழைத்து வருவோர்க்கு ஒரு பதிவு இனாம். அப்படியே இந்த இடது பக்கத்தில் அணிவகுக்கும் அமைதிப் படையினருக்கும் ஒரு சலாம். ஏனிந்த மௌனம் ஏனோ, ஏழை எமக்கருள?

Tuesday, December 26, 2006

வலைவலம்

எந்தரோ ப்ளாகிகளு அந்தரிகி மா வந்தனமு

வலைப்பதிவு எழுதுவோர் எல்லாரும் வெட்டியல்ல. சமீபத்தில் வலைப்பதிவர்கள்(ப்ளாகிகள்) சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள். தேசிகன் என்பவரின் பதிவில் பார்த்த சிறுவன் ஆதித்யா இப்போது பிட்ஸ்பர்க் குழந்தை மருத்துவகத்தில் இருக்கிறான். அவன் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதில் வலைப்பதிவர்களின் பங்கு பெரிது. ஆதித்யா வேலூர் CMCயில் இருந்தபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த என் நண்பன் சொன்னான் - அந்த வார்டு முழுவதும் ஆதித்யா போல நிறைய குழந்தைகள். அங்கு போவதற்கே கஷ்டமாக இருந்தது.

இப்போது பிட்ஸ்பர்கில் இருக்கும் ஆதித்யாவுக்கு ஒரு பொம்மைகடை வைக்கும் அளவுக்கு பொம்மைகள் வந்து குவிந்திருக்கின்றன என்கிறார்கள் அவன் பெற்றோர்கள்.

ஆதித்யாவுக்கு நீங்களும் உதவலாம். விவரங்கள் இதோ.

Residents of USA and US citizens who would like to contribute thro US$ Check can draw it payable to "Children's Hospital of Pittsburgh" and mail it to the address mentioned below. Please make sure you write "For Aditya Kumar - Visit # 1022726762" in the memo part of the check.

Nandita & Mahesh
5701 Governors Pond Circle
Alexandria, VA 22310
(703) 960-6615

After mailing the check, please send the check details to kumarsang@gmail.com , ravi2604@gmail.com and nandita999@yahoo.com




ஆதித்யா போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவ இந்தியாவில் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பிற்கு அவ்வப்போது நிதி உதவி செய்தால் உங்களுக்கு எல்லா நலங்களும் வந்து சேரும்.

இனி வலைப்பதிவர்களின் இன்னொரு முயற்சியை பார்ப்போம்.

ஏழைப்பெண் மகாலட்சுமியின் தடைப்பட்ட கல்விக்கு
உதவ முயல்கிறார் செந்தழல் ரவி என்ற பெயரில் பெங்களூரில் இருந்து எழுதும் ரவி. திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது பணம் கட்டமுடியாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

மேலே விவரங்களுக்கு செந்தழல் ரவியின் பதிவை படியுங்கள். அவரது பள்ளிக்கூட நண்பன் எழிலரசன் பற்றி தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்கவும்.

வலைவலம் வராமலே இந்த பதிவு நீண்டுவிட்டது. ஆகவே - RTP (ராகம் தானம் பல்லவி) பற்றி கேட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வருந்தி வருந்தி விக்கிபசங்க சொல்லியதை நான் மறுபடியும் எழுதப் போவதில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

ப்ளாகிகளே - சற்றே மௌனம் கலைந்து உங்கள் லொள்ளையும், எதிரொலியையும், பித்து மொழிகளையும் நமக்கு அருளவும்.

Friday, November 03, 2006

வலைவலம்

வலை மேய்ந்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
உருப்படியாக வேலை செய்து உய்வார்.

டிம்-பர்னர்ஸ்-லீ
-யாயனமஹ!

தமிழ்நாட்டு தேர்தல், அமெரிக்கத் தேர்தல் எல்லாம் கிடக்கட்டும். இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு சொல்ல வேண்டும். பாக்கெட் வைத்த சட்டை, பேண்ட், சுடிதார் பார்த்திருப்பீர்கள். பாக்கெட் வைத்த புடவை பார்த்திருப்பீர்களா? இதோ பாருங்கள், குமரன் ஸ்டோர்ஸ் அறிமுகப்படுத்தும் பாக்கெட் வைத்த புடவை. பாக்கெட் சரியாக பக்கவாட்டில் வருமாறு கட்ட சொல்லித்தரும் வீடியோ காஸெட் தருகிறார்களா என்று விசாரிக்க வேண்டும். தம்பி எதிரொலி - கொஞ்சம் கேட்டு சொல்லேன்.

இவர்கள் இதற்கு முன்னால் 3-D புடவை, கலர் மாறும் மாயப்புடவை எல்லாம் தந்திருக்கிறார்கள். நமீதா கட்டும் மாயமாய் மறையும் புடவை யார் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Ipod-ல் பாட்டு கேட்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற பாட்கேஸ்ட்(யாரவர்?) பற்றியும் கேட்டிருப்பீர்கள். அறைத்துவிட்ட ரசம், பயத்தம்பருப்பு ரசம் பண்ணுவது எப்படி என்று தமிழில் பாட்கேஸ்ட் இருக்கிறது. முழுவதாக டவுன்லோடு பண்ணிவிட்டு சமைக்க ஆரம்பிக்கவும். இல்லாவிட்டால் தங்கவேலு சொல்வதுபோல பயத்தம்பருப்புதான் இருக்கும் ரசத்தை இண்டெர்நெட் அடிச்சிக்கிட்டு போயிடும். அந்த தளத்தில் மேலும் அவியல், மோர்குழம்பு மற்றும் கறிவேப்பிலை சட்னி பண்ணுவது எப்படி என்று என்னினிய தமிழ் மக்களுக்கு சுளுவாக புரிகிறமாதிரி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் சிங்கப்பூரில் இருந்து மாத்திஸ். சாப்பிட்டு பார்த்து சொன்னவர்கள் பாட்கேஸ்ட் இருந்தால் கொஞ்சம் தைரியமாக இருக்கும்.

நீங்கள் சில பல பதிவுகளை தொடர்ந்து படிப்பவராய் இருந்தால் ப்ளாக்லைன்ஸ், கூகுள் ரீடர் போன்ற இலவச சேவைகளை பயன்படுத்திப் பாருங்கள். யார் புதிதாய் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். சும்மா வலை மேயத் தேவையில்லை. நீங்கள் படிக்கும் தளத்தை உங்கள் ப்ளாக்லைன்ஸ் பட்டியலில் சேர்க்க சுலபமாக நெருப்புநரி 2.0 விலும், IE7லிம் வசதி இருக்கிறது. நான் மேயும் தளங்கள் இதோ. கவலைப்படாதீர்கள், பலான பதிவெல்லாம் அதில் இல்லை.

பேட்டை ராப் எல்லாம் ஜுஜுபி. அதுக்குத் தாத்தா ராப் இங்கே பாருங்க. பட்டிமன்றத்து பேச்சாளர்கள் இதை தவறாமல் பார்க்கவும். நம்ப ஊர் கிழியற கிழிக்கு...

செவ்வாய் கிழமை அமெரிக்கத் தேர்தல் பற்றி கணிப்பு சொல்லலாம் என்று யோசித்தேன். எதற்கு வம்பு? ஏற்கனவே பித்தனார் வாங்கிக் கட்டியிருக்கிறார். உனக்கெதுக்குடா 'மக்காகா' இதெல்லாம் என்று எதிரொலி சவுண்டு விட வாய்ப்பு கொடுப்பானேன்?

சரி - இரண்டாவது ரவுண்டு கூட்டாங்ஸ் பற்றி இங்கே பாருங்கள். கவிதை மற்றும் கதை.
நிறைய புண்ணியவான்கள் ரிச்மண்ட் தமிழ் காங்கிரஸில் (அதாங்க இந்த பிளாக்) சேர்ந்து விட்டு (ஓட்டுப்) பதியாமல் இருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி பிளாகாத பிளாகிகள் சங்கம் ஆரம்பித்து அங்கே பிளாக் கடத்திவிடுவேன் என்று எச்சரிக்கிறேன். நவம்பர் 12ல் எல்லோரையும் தமிழ் சங்க தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் சந்திக்கலாம். என்னைத் தெரியாதவர்கள் அங்கே என்னை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். மேடையில் ஒரு பாட்டுக்கு ஜால்ரா அடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

Tuesday, October 17, 2006

வலையில் சுட்டவை

தமிழ்நாட்டு அரசியல் YouTubeல் இணையம் சிரிக்கிறது (சந்தியெல்லாம் இந்த இன்டெர்நெட் உலகில் ரொம்ப சிறுசுங்க)



அரசியல் கிடக்கட்டும். இரண்டரை வயது வாண்டு தபலாவில் என்னமாய் கலக்குகிறான் பாருங்க!