Showing posts with label ரிச்மண்ட். Show all posts
Showing posts with label ரிச்மண்ட். Show all posts

Monday, August 11, 2014

ரிச்மண்டில் பிடித்த இடம்

கொஞ்ச நாட்களுக்கு முன் ரிச்மண்ட் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். உங்கள் அனைவருக்கும் ரிச்மண்டில் ஏதாவது ஒரு இடம் மிகவும் பிடித்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் ஒன்று இருக்கிறது. ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. என் வீட்டிலிருந்து சில நிமிடங்கள்தான் ஆகும் போவதற்கு.



எந்த இடம் என்று தெரிகிறதா?

 டீப் ரன் பார்க்!

சிறு குழந்தைகள் முதல் என்னைப் போன்ற முதியவர்கள்வரை அனைவரும் பொழுது போக்கலாம் இங்கே. இந்தப் பூங்காவில் பல மகிழ்ச்சியான நினைவுகள், நிகழ்ச்சிகள். தமிழ் சங்கப் பிக்னிக்குகள், பார்க்கில் இருக்கும்  அனைத்து விளையாட்டு இடங்கள், கால்பந்தாட்டம், கிரிக்கெட், நடைபாதைகள், சாரண முகாம், மீன்பிடிப்பு, குளத்தில் ஆமைகள், வாத்துகள், மீன்கள், துவக்கப் பள்ளி புத்தகப் போட்டி( Book Bowl),  கோடைகாலப் பசுமை, இலையுதிர் கால வண்ணக் கோலம், குளிர்காலத்தில் உறைந்த குளம்,  சைக்கிளோட்டம், சாரணர்களுடம் புதையல் தேடல்(Geocacahing), நாயுடன் நடை,  அங்கிருக்கும் கட்டிடத்தில் நண்பர்களுடன்  பேட்மிண்டன், நிறைய பார்ட்டிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனது அனுபவங்களை...

இத்தனை வருடங்களில் இந்தப் பூங்காவில் நிறைய மாறுதல்களைப் பார்த்திருக்கிறேன். பாதைகள் அகலமானது. சரிவான பாதையை மேடாக்கி குளக்கரையை பலப் படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டிடத்தில் நிறைய புது விளையாட்டு சாதனங்கள்.  காடாய் அழகாய் இருந்த பூங்காவை சிதைத்து நட்ட நடுவே ஒரு பூதாகரமான கட்டிடம்! ஆனால் அந்தக் கட்டிடமும் நிறைய உபயோகமாகத்தான் இருக்கிறது. சின்னதாக ஆரம்பித்த மூங்கில் புதர் இப்போது மூங்கில் காடாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் குளத்தின் பக்கத்தில் ஒரு இயற்கை மையம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இங்கு நடந்து போக எத்தனை பாதைகள் இருக்கின்றன தெரியுமா? நான் அகலமாக ரோடு மாதிரி இருக்கும் பாதைகள்களைச் சொல்லவில்லை. ஒற்றையடி பாதை மாதிரி நிறைய இருக்கின்றன... அடுத்த முறை போகும்போது கவனியுங்கள்.  அவற்றில் போய்ப் பாருங்கள். எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். மரங்களின் பெயர்கள், பறவைகள் வகைகள், ஆமை வகைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு இடத்திற்குப் போகும்போதும், ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் முதல் முதலாகப் போவது போல், சந்திப்பது போல் எண்ணிப் பாருங்கள். அந்த இடத்தைப் பற்றி, அந்த மனிதரைப் பற்றி புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பூங்காவில் எடுத்த சில படங்கள்.

Sunday, October 21, 2012

எங்க வீட்டு கொலு...


புதுசு புதுசாக வரும் தொழில் நுட்பங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்த ஆரம்பித்தால் நல்லது. இந்தப் பாடத்தை கடந்த இரண்டு நாட்களில் நன்றாகக் கற்றுக் கொண்டேன்.

கூகுள் ப்ளஸ்ஸில் ஈவண்ட்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை அங்கே போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு ஹேங்க் அவுட் ஆரம்பித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அண்மையில் ஒரு நண்பன் வீட்டு பூஜையில் ஹேங்க் - அவுட் மூலம் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் பூஜை, ஹோமம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள். மதுரையில் உட்கார்ந்து கொண்டு நியுஜெர்ஸி பூஜையில் ஐயரை ஓட்டினார் என் நண்பனின் தந்தை!

அதிலிருந்து எனக்கு ஈவண்ட்ஸ் ரொம்ப பிடித்து விட்டது. இங்கே ரிச்மண்டில் கொலுவுக்காக நண்பர்களிடம் இருந்து ஈவைட் மூலம் அழைப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு யோசனை. நவராத்திரி கொலுக்காக ஈவண்ட் ஆரம்பித்தால் அதில் உலகெங்கிலும் இருந்து அவரவர் கொலு படங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே?  அனைவரும் பார்க்கும்படியாக ஒரு பொது நிகழ்ச்சி(பப்ளிக் ஈவண்ட்) ஆரம்பித்து அனைத்து நண்பர்களையும் சேர்த்து விட்டு மற்ற வேலைகளில் மும்முரமாகிவிட்டேன்.

அரைமணி கழித்துப் பார்த்தால், அதில் ஒரு நண்பர் அழைப்புக்கு நன்றி, நாளை மாலை சந்திக்கலாம் என்று எழுதியிருந்தார். சரி யார் வீட்டு கொலுவிலாவது சந்திப்போம் என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சில மணி நேரம் கழித்து திடீரென்று தோன்றியது - மனிதர் நம் வீட்டில் கொலு என்று நினைத்துவிட்டாரா என்று. உடனே  அவருக்கு பதில் போட்டேன். ஐயா - என் வீட்டில் கொலு இல்லை. நீங்கள் கொலு போகும்போது படம் எடுத்தால் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஈவண்ட். அவரும் விளக்கத்துக்கு நன்றி என்று எழுதினார்.

மறுநாள் தொடர்ந்தது வேடிக்கை. காலையில் ஒருவர் மின்னஞ்சலில் என் முகவரி கேட்டிருந்தார். தொலைபேசியில் இருவர் அதே மாதிரி கேட்டிருந்தார்கள். தங்கமணி வேறு போன வாரம்தான் கிளம்பி இந்தியா போயிருக்கிறார். அது தெரிந்த சிலர், வீட்டில் அம்மணி வேறு இல்லையே, புதுசாக கொலு வேறு வைத்திருக்கிறாயா என்றார்கள்.  நானும் என் பிள்ளைகளும் கொலுவிருக்கிறோம், நீங்களெல்லாம் சுண்டல் கொண்டு வாருங்கள் என்றேன்.

ஒரு சிலர் விஷயத்தைப் புரிந்து கொண்டு தொலைபேசியில் இதோ வந்து கொண்டிருக்கிறோம், அதோ வந்து கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக மெசேஜ் விட்டார்கள் (வாய்ஸ் மெயிலுக்கு தமிழில் என்ன?) இது ஏதடா வம்பாகி விட்டது என்று நேற்று நாலு மணியில் இருந்து கொலு பார்க்கும் சாக்கில் வீட்டிலிருந்து ஜூட்.

இன்னொரு நண்பர், என்னடா தங்கமணி வேறு இல்லாமல் நீ கொலு வைத்திருக்கிறாய்.  'எந்த மாதிரி' கொலு என்று கடுப்பேத்தினார்.

நியுசிலாந்தில் இருந்து துளசி டீச்சர் ரிட்மண்ட் சற்று தொலைவில் இருப்பதால் வரமுடியவில்லை, எங்கள் கொலுவுக்கு வேண்டுமானால் வாருங்கள் என்று கிண்டலடித்தார்.

ஒரு ஈவண்ட் மற்றவர்களிடம் பகிர்ந்த் கொள்ளும்போது, அந்தப் பகிர்வு ஒரு அழைப்பாகப் போகிறது -  அதுதான் குழப்பத்தின் காரணம். ஆகவே மக்களே - எங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலு பற்றிய கூகுள் ஈவண்ட்  இங்கே பார்க்கலாம். இதுவரை ரிச்மண்ட், ப்ரிட்ஜ்வாட்டர்-நியுஜெர்ஸி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் வைத்திருக்கும் கொலு படங்கள் பகிரப் பட்டிருக்கின்றன. நான் பார்த்த கொலுக்கள் பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

Saturday, August 27, 2011

ரிச்மண்ட் மகாத்மியம் - 1

ரிச்மண்டா? எங்கேயிருக்கிறது அது??

தொலைபேசியில் நடந்த வேலைக்கான தேர்வில் நான் கேட்ட முதல் கேள்வி. அதுவும் சற்று வடக்கே மேரிலண்ட் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு... அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு சிரிப்பு.

மேரிலண்டில் இருந்து தெற்கே எங்காவது போயிருக்கிறாயா?
போயிருக்கிறேனே. வட கரோலைனா சாபல் ஹில்லுக்கு.
அப்படியானால் நீ ரிச்மண்ட் வழியாகத்தான் போயிருப்பாய்.
மெய்யாலுமா?

அதுதான் ரிச்மண்ட், வர்ஜினியா குறித்து நான் முதலில் கேள்விப்பட்ட விதம். ரிச்மண்டில் இருக்கிறேன்  என்று சொன்னவுடன் மற்றவர்கள் கேட்டவை:

"அப்படியா. மைக்ரோசாப்டிலா வேலை உனக்கு".
"அது ரெட்மண்ட்யா, ரிச்மண்ட் இல்லை"

கொஞ்சம் விவரம் தெரிந்த கலிபோர்னியா வளைகுடா மக்கள்:
"பரவாயில்லையே, இங்க ஈஸ்ட் பே-ல தான் இருக்கியா இப்போ"
"இது ரிச்மண்ட், வர்ஜினியாப்பா, ரிச்மண்ட கலிபோர்னியா இல்லை"

ரிச்மண்ட்,வர்ஜினியா!

இந்த ஊரிலிருக்கும் இந்தியர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு தெரியாத ஊர். ஜனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அமெரிக்க பெரிய நகரங்கள் பட்டியலில் வராத ஊர்.  வேறு ஊரிலிருக்கும் நண்பர்களும், சுற்றமும் ஊரைச் சுற்றிப் பார்க்க வராத ஊர். வந்தால் எங்களைப் பார்க்கத்தான் வரவேண்டும். ஆனால் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கின்றன ரிச்மண்டும் அருகில் இருக்கும் இடங்களும்.

நான் ரிச்மண்ட் பற்றி ஒன்றும் கேள்விப்படாமல், எந்த மடமும் சொந்த மடம் என்று வாழ்ந்த நாட்களில் இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். வந்த சில நாட்களில் அலுவலகத்தில் சக ஊழியனுடன் பேச்சு இப்படி போனது.

என்னய்யா, இந்த ஊர்ல என்ன ஃபேமஸ்?

என்ன அப்படி கேட்டு விட்டாய்? இரண்டு போர்களிலும் ரிச்மண்ட் எரிந்தது தெரியுமா?

அப்படியா? முதல் போரைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டாவது போரில் இந்த நாட்டில் ஹவாயில் மட்டும்தானே குண்டு போட்டார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்குதே?

ஹவாயா? நீ எந்தப் போர்களைப் பற்றி சொல்கிறாய்?

உலகப்போர்களைத்தானே சொல்கிறாய் நீ?

இல்லையப்பா. சுதந்திரப் புரட்சிப் போர், உள்நாட்டுப் போர் (civil war) இரண்டையும் பற்றித்தான் நான் சொன்னேன்.

சுதந்திரப் போர், உள்நாட்டுப் போர் - யாரவர்?

நான் சமச்சீர் கல்வி வராத நாட்களில் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் படித்தவன். எனக்கு மூவேந்தர்களும்,  சாளுக்கியர்கள், அசோகர், ஹர்ஷர், மௌரியர்கள் தவிர வேறு எந்த சரித்திரமும் தெரியாது. அப்படியாக ஆரம்பித்தது எனது ரிச்மண்ட் வரலாறு குறித்த ஆர்வம்.

அப்படி இருந்தவனிடம் பாண்டிச்சேரியில் ஒரு முதியவர் கேட்டார்: ரிச்மண்டா - வர்ஜினியா டொபாக்கோ! என்னையும் என் பிள்ளைகளையும் அப்படித்தான் அழைக்கிறார் அவர் இன்றும். அமெரிக்க மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் மாநில சுயாட்சிகளை காற்றில் பறக்கவிட்டு லூசியானாவை வாங்கிய கதையெல்லாம் புட்டு புட்டு வைத்தார்.  வெட்கமாகப் போய்விட்டது.

மேலும் தொடரும் என்று போட ரொம்ப யோசனையாக இருக்கிறது. நம்முடைய பதிவுகளுக்கும் தொடர்களுக்கும் பொருத்தமில்லையே? :-)

சமீபத்தில் நடந்த தமிழ்ச் சங்க வனபோஜனத்தில்(அதாங்க பிக்னிக்) தலைவர் முத்து ரிச்மண்ட் குறித்து எழுதுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.  அதற்கான எனது ஆரம்பம் இது.  நான் மேலே எழுதுவதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். அனைவரையும் தங்கள் ரிச்மண்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இந்த ஊரைப் பற்றியோ, அருகில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியோ, இந்த ஊர் வாழ் தமிழர், இந்தியர் சமூக அனுபவங்களையோ எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.  வெளியே ஐரீன் அம்மா வெளுத்து வாங்குகிறார். உங்களுக்கு வேறு என்ன வேலை. எழுதுங்கள்.



Wednesday, July 08, 2009

ரிச்மண்டில் பூகம்பம்!

ஆறாம் தேதி நள்ளிரவில் வீட்டுப் பின்னால் ஏதோ மரம் விழுந்தது மாதிரி ஒரு சத்தம். தரையும் அதிர்ந்தது. பின்னால் எட்டிப் பார்த்தால் எந்த மரமும் விழுந்திருக்கவில்லை. இடியாய் இருக்கவும் வாய்ப்பில்லை. யோசனையுடன் தூங்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் வேலையில் பிரயாணம் செய்யவேண்டியிருந்ததால், தோட்டத்தை நன்றாகப் பார்த்துவிட்டு, கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் நாராயணன் சென்னையில் இருந்து ஃபேஸ்புக்கில் விஷயம் அனுப்பியிருந்தார் நம்ம ஊரில் சின்ன்ன்னன நிலநடுக்கம் என்று. உள்ளூர் செய்தித்தாளில் விஷயத்தை நுனிப்புல் மேய்ந்து விட்டு அலுவலகம் செல்லும்போது இன்னொரு நண்பனின் வாய்ஸ்மெய்ல் வந்தது. உங்க தெருவில் பூகம்பமாமே - எல்லோரும் நலமா என்று...

பார்த்தால் என் வீட்டுக்கு நேர் பின்னால் பூகம்பம்! நல்லவேளை - ரிச்டர் கணக்கில் 2.3 அளவே ஆன நிலநடுக்கம். தப்பித்தோம்!
செய்தி விரிவாக இங்கே...  குல்லாவை கழட்டிவிட்டு பேட்டிக்கு வாங்கய்யா.. மூஞ்சே தெரியல... இந்த ஆளு எங்க தெருவான்னு சந்தேகமா இருக்கு.

இது தொடர்பான பக்கங்கள் இங்கே பார்க்கலாம்.... பிங் தேவர் இன்னும் நம் ஆண்டவர் கிட்ட கூட வரவில்லை இந்த விஷயத்தில்.

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Sunday, May 17, 2009

தமிழ் மணத்துக்கு வந்த சோதனை

என்னடா இது, தமிழ் மணத்துக்கு வந்த சோதனை...

நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு வந்தபோது என்னால் நம்பமுடியவில்லை. இப்ப சின்னப் பசங்கள்ளாம் 'என்ன கொடுமைங்க இது சரவணன்'னு சொல்றீங்களே - நாங்க அந்த காலத்துல பாலையாவின் - என்னடா மதுரைக்கு வந்த சோதனை-யை பயன்படுத்துவாம். அதுதான் தலைப்பு. இதையெல்லாம் படித்துவிட்டு செல்வராஜ் இனி வர்ஜினியாவில ஒரு பயலும் தமிழ்மணத்துல ஒரு வார்த்தை எழுதக்கூடாதுன்னு சொல்லாம இருந்தா சரி! வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும், எங்கள் தமிழ்ச்சங்க பதிவுகளை படிக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன்.

இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு முயற்சி. ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினர்களை எழுத வைப்பதற்காக ஆரம்பித்தது. நிறைய பேர் சேர்ந்தார்கள். ஆனால் விடாமல் எழுதியது ஒரு சிலர்தான். ரிச்மண்ட் தமிழ் சங்க பதிவில் விடாமல் எழுதுகிறார்கள் என்று யாரோ மௌஸ்(கண்) வைத்துவிட்டார்கள். அதுவும் போச்சு. அந்த ஒரு சிலரும் பல காரணங்களுக்காக தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். பலகட்சி ஜனநாயகத்திற்கு பழகிய மக்களாயிற்றே... நான் கொஞ்சம் அங்கே இங்கே திருடி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது டுவிட்டர் வந்து அதையும் கெடுத்தது. பதிவு தேய்ந்து டுவிட் ஆன கதையாய் ஒரு வரி எழுதினால் களைப்பாகிவிடுகிறது.

தமிழ்ச் சங்கப் பதிவுகளை நாலுபேர் கூட படிப்பதில்லை என்று தலைவர் முரளி கலாய்ப்பார். மொத்தம் எழுதுவதே நாலு பேராம். ஒருவர் எழுதினால் அதை படிப்பது மற்ற மூனு பேர்தான் என்பது அவர் கணக்கு. தமிழ்மணத்தின் புண்ணியத்தால் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி நியுசிலாந்துவரை (வணக்கம் டீச்சர்) எங்கள் புகழ் பரவியிருக்கிறது. ஆனாலும் ரிச்மண்டில் படிப்பது இன்றும் அதே மூனுபேர்தான்!

நான் பார்ப்பவர்களையெல்லாம் எழுதச் சொல்லி படுத்தியதினால், சிலபேர் ஊரை விட்டும், நாட்டை விட்டும் ஓடிவிட்டார்கள். ஆம்வேயைக் கண்டால் தூர ஓடு என்ற புதுமொழியில் கிட்டத்தட்ட என்பேரை போடவிருந்தார்கள். பதிவுப் புராணம் போகட்டும். ரிச்மண்டைப் பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்காவின் தலைநகரின் தெற்கே ஒரு பெரிய முக்கோண வடிவில் இருக்கும் மாநிலம் வர்ஜினியா. அந்த மாநிலத்தில் நடு சென்டரில் ஒரு புள்ளி வைத்தால், அதுதான் ரிச்மண்ட்! மைக்ரோசாஃப்ட் இருக்கிறதே அந்த ஊர்தானே என்பார்கள் சில மேதாவிகள். அது ரெட்மண்ட். ரிச்மண்ட் இந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் தெரியுமா? இந்தக் கதையைக் கேளுங்கள். நான் வாஷிங்டன் டிசி பகுதியில் இருந்தபோது ரிச்மண்ட் வேலைக்காக ஒரு தொலைபேசி தேர்வு நடந்தது. முடியும்போது அந்த மேலாளரிடம் என் கேள்வி: "ரிச்மண்ட் எங்கே இருக்கிறது?" அவர் கேட்டார் - வாஷிங்டனில் இருந்து தெற்கே எங்கேயாவது போயிருக்கிறாயா? ஆமாம் வடகரோலினா போயிருக்கிறேன் என்றேன். அப்படியானால் நீ ரிச்மண்டை பார்த்திருக்கிறாய்!

அமெரிக்க சரித்திரத்தில் ரிச்மண்டுக்கும், வர்ஜினியாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. அமெரிக்கா ஆரம்பித்ததே வர்ஜினியாவில் ஆரம்பித்த ஒரு குடியேற்றத்தினால்தான். அமெரிக்க சுதந்திரத்திற்கு வித்திட்டதும் வர்ஜினியாவில்தான். ஜார்ஜ் வாஷிங்டன், சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸனில் ஆரம்பித்து பல அமெரிக்க ஜனாதிபதிகளை அளித்திருக்கிறது வர்ஜினியா. "கிவ் மீ லிபர்டி ஆர் கிவ் மி டெத்" என்ற வாசகம் அமெரிக்க வரலாற்றில் புகழ் பெற்றது. பேட்ரிக் ஹென்றி அந்த வாசகத்தை முழங்கியது ரிச்மண்டில்தான்.

நான் ரிச்மண்டுக்கு வந்த புதிதில் சக ஊழியனிடம் இந்த ஊரைப் பற்றிக் கேட்டேன். அவர் இரண்டு யுத்தங்களிலும் எரிக்க்ப்பட்ட ஒரே ஊர் ரிச்மண்ட்தான் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு முதல் உலகப்போர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இரண்டாம் போரில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டது ஹவாய் மட்டும்தானே என்று கேட்டேன். அவர் குழம்பிவிட்டார். நீ எந்தப்போரைப் பற்றி பேசுகிறாய் என்று இருவரும் கொஞ்சம் சண்டைப் போட்டோம். பிறகுதான் அவர் விளக்கினார். அவர் சொன்னது அமெரிக்க சுதந்திரப் போர், மற்றும் உள்நாட்டுப் போர் - American Revolutionary war and American Civil War. அமெரிக்கன் சிவில் வார்... யாரவர்? அமெரிக்கா இரண்டாக உடைந்தபோது உண்டான அல்பாய்சு இரண்டாம் நாட்டின் அல்பாய்சு தலைநகர் ரிச்மண்டாம்.

கான் வித் விண்ட் படித்ததில்லையா, பார்த்ததில்லையா என்றும் யாருக்கும் கொலைவெறி வரவேண்டாம். பார்த்திருக்கிறேன் - ஆனால் அது உண்மை சம்பவங்களை வைத்து எடுத்த படம் என்று சாணக்யாவில் இரவு முழு மப்பில் பார்த்தவனிடம் யாரும் சொல்லவில்லை.

ஒரு மணி தூரத்தில் கடலும், ஒரு மணி தூரத்தில் மலைத்தொடர்களுமாக அமைந்திருக்கிறது ரிச்மண்ட். வெயில் நாளில் சென்னையை நினைவுறுத்துமாறு புழுக்கமும் வேர்வையும்கூட உண்டு! வர்ஜினியா, ரிச்மண்ட் வரலாறு, புவியியல் பற்றி விரிவாக வேறு சமயம் எழுதப் போகிறேன்(அடப்பாவி இன்னுமா?). இப்போது சங்க காலம் பற்றிப் பார்ப்போம். ரிச்மண்டில் சங்க காலம் 1999ல் ஆரம்பித்து, பத்தாண்டுகள் கடந்து, இன்று வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சங்க கால விளையாட்டுகளான டென்னிஸ், பௌலிங்ம் டேபிள் டென்னிஸ் எல்லாம் உண்டு. இந்த வரியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்தால் அதற்கு முன் இரண்டு வரிகளைத் திரும்ப படிக்கவும்.

ரிச்மண்ட் மாதிரியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் மாதிரியும் அமெரிக்காவில் பார்ப்பது கடினம். ஊர் அவ்வளவு பெரிய ஊரும் இல்லை, சிறிசும் இல்லை. எல்லா இடங்களுக்கும் பத்து நிமிடங்களில் போய்விடலாம். கால்பந்தாட்டமா, டென்னிஸா, நீச்சல் வகுப்பா, சங்கீத வகுப்பா, நாட்டிய வகுப்பா, கோவிலா, நாகு வீடா, தமிழ் சினிமாவா, டாஸ்மாக் கடையா, ஆபிஸா, ஆர்தர் ஆஷ் சிலையா - எல்லாம் பத்து நிமிடங்களில்!

தமிழர்கள் அன்புடன், மனதால் மிகவும் நெருங்கி வாழும் ஊர் ரிச்மண்ட். மக்கள் இந்த ஊரைவிட்டு போனாலும், திரும்ப வந்து விடுவார்கள். ரிச்மண்டில் வாழ்ந்துவிட்டு வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியே ஏன் அவர்கள் திரும்பவில்லை என்றும் கேளுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லையா, துணைவி/வன் ஊருக்குப் போயிருக்கிறார்களா - சாப்பாடு வந்து குவிந்துவிடும். எங்களூரில் நண்பர்களை அப்படி கவனித்துக் கொள்வோம். ஊரார் கணவரை ஊட்டி வளர்த்தால் தன்கணவன் தொப்பை தானே வளரும் என்பதில் மிக்க நம்பிக்கை உள்ள ஊர் ரிச்மண்ட்! நியுயார்க், வாஷிங்டன் போன்ற ஊர்களில் இருந்தால் ஊர் சுற்றிப் பார்க்க நண்பர்களும் நிறைய 'அழையா விருந்தாளிகளும்' வந்து குவிவார்கள். ரிச்மண்டில்தான் உண்மையான அன்புள்ள விருந்தாளிகள் வருவார்கள்! இங்கே வருபவர்கள் எங்களைப் பார்ப்பதற்குத்தான் வரவேண்டும் :-)