Showing posts with label ரயில். Show all posts
Showing posts with label ரயில். Show all posts

Sunday, January 22, 2012

ரயில் பயணங்களில்

இந்த மாதம் 7-ம் தேதி நியூயார்க் டைம்ஸ்  தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி.

நியூயார்க் நகரத்தில் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகம் இல்லாத விடியற்காலத்தில் நான்கு மணி அளவில் ஒரு பிரயாணி பயணம் செய்த கொண்டிருந்தார். கூட்டம் அதிகம் இல்லாததாலும்  எதிர் வரிசை காலியாக இருந்ததாலும்  ஒரு காலை எதிர் சீட்டில் வைத்தபடி தூங்கிவிட்டார். அப்படி பயணம் செய்வது குற்றம் என்று கூறி காவல்துறை அதிகாரி அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மாஜிஸ்டிரேட்டிடம்  அந்த பிரயாணியை ஒப்படைத்து  12  மணி நேரம் கழித்துதான் அவரை விடுதலை செய்தனர். அவர்  அபராதத் தொகையாக  50 டாலர் கட்டினார்.

            பயணம் செய்யும்போது இங்கிதம் இல்லாமல் நடந்து கொண்டு சக பிரயாணிகளுக்கு இடையூறு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாம். காவல்துறையினர் இது போன்ற விஷயங்களில் கடுமையாக நடந்துகொண்டு  சிறிய குற்றங்களுக்கு கூட நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து நடப்பதாக புகார்  எழுந்துள்ளது.  இப்படி நடவடிக்கை எடுப்பதால் மெட்ரோ ரயிலில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் பேசப்படுகிறது.


          சென்ற நவம்பர் மாதத்தில் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரயாணி கைது செய்யப் பட்டார். அவர் ஒரு சர்க்கரை நோயாளி. காலியாக இருந்த எதிர் சீட்டில் கால் வைத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் இன்சுலின் போட்டுக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர். ஆகையால் சில மணி நேரம் அவர் இன்சுலின் இல்லாமல் இருக்க நேர்ந்தது. அவர் மயக்கமடைந்து கீழே விழ காவல் துறையினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். மூன்று நாள் மருத்துவமனை வாசத்துக்கு  பிறகு வீடு திரும்பியிருக்கிறார். அது விஷயமாக அரசாங்கத்துக்கு 150,000 டாலர் செலவானது என்றும் அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.


       இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எனக்கு இந்த செய்தி கேட்கவே வேடிக்கையாக இருந்தது. சிரித்து முடித்த பிறகு எனக்கு ஏற்பட்ட ரயில் பயண அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. இந்தியாவில் எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.


     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.


        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. நேரடியாக பாதிக்கப்பட்டபோது சங்கடப்பட்டதும் உண்டு. ஒரு அனுபவத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும்.


          பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பதி போயிருந்தேன். திரும்பி வரும்போது ரயிலுக்காக ஸ்டேஷனில் காத்திருந்தேன். திருப்பதியில் கூட்டத்திற்கு  கேட்கவா வேண்டும். முதல் வகுப்பு பயணிகள் தங்குவதற்கான தங்கும் அறையில் ஓய்வாக  சில நிமிடம் உட்காரலாம்  என்று எண்ணினேன். மனைவியை பெண்களுக்கான தங்கும் அறையில் உட்காரவைத்துவிட்டு முதல் வகுப்பு தங்கும் அறைக்குள் நுழைந்தேன். எல்லா நாற்காலியிலும் பயணிகள் உட்கார்ந்த்ருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள்  சற்று கணித்து பார்த்தபிறகு குடும்பமாக உட்கார்ந்திருந்த ஒரு மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்ததை கவனித்தேன். அந்த நாற்காலியில் போய் உட்காரலாமென்று அந்த இடத்தை நெருங்கினேன்.


      ஓரளவு வட்டமாக இருந்த அந்த மேஜையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அடுத்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த பெண்ணின் தாயாக இருக்கலாம். அதற்கடுத்த  நாற்காலியில் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அடுத்த நாற்காலியில் ஒரு நடுத்தர வயது நபர் அமர்ந்திருந்தார்.  அந்த பெண் அருகில் இருந்த நாற்காலி மட்டுமே காலியாக இருந்தது. நான் நெருங்கிச் சென்றதும் அதில் உட்கார வருகிறேன் என்பதை புரிந்துகொண்ட அந்த பெண் ஒரு காலைத் தூக்கி காலியாக இருந்த அந்த நாற்காலியில் வைத்துக் கொண்டாள்.


         நான் அந்த நாற்காலியை சற்று நகர்த்தி போட்டுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு மேல் பகுதியில் கை வைத்த அதே நேரத்தில்தான் அந்த பெண் நாற்காலியில் உட்காரும் பகுதியில் காலை வைத்தாள். நான் இதை எதிபார்க்கவில்லை. கையை எடுக்காமல் அந்த பெண்ணை  பார்த்தேன். நாற்காலியை என்பக்கம் இழுக்கலாமா என்று  யோசித்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் சற்று நேரம் பேசாமலிருந்தேன். பாதம் தொடும்  வகையில் ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த பெண்ணுக்கு பதினைந்து அல்லது சற்று கூடுதலான வயது இருக்கலாம். காலைத் தூக்கி நாற்காலியில் வைத்ததால் சற்று சரிந்த உடையை சரி செய்த கொண்டு என்னைப் பார்த்தாள்.நான் அந்த பெண்ணையே உற்று கவனித்தேன். உடனே அந்த பெண் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பக்கத்தில் அமர்ந்திருந்த தாயும் நிலைமையை புரிந்து கொண்டாள். நான் உட்காருவதை தவிர்க்கவே காலைத் தூக்கி நாற்காலியில் வைத்த பெண்ணிடம் எதுவும் சொல்லாமல் அவளும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுவன் சுவாரஸ்யமாக ஏதோ தின்பண்டத்தை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவ்வளவும் ஒரு நிமிடம் நீடித்திருக்கும். நான் நாற்காலியில் கை வைத்தபடியே நின்றிருந்தேன்.

         சிறுவனுக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த நபர், அந்த பெண்ணின் தந்தை என்று நினைக்கிறேன். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருந்து என் அருகில்  வந்தார். நான் அதைப் பொருட்படுத்தாமல் நின்றேன். அருகில் வந்தவர் நாற்காலியில் வைத்திருந்த அந்த பெண்ணின் காலில் ஓங்கி ஒரு அடி வைத்தார்; அடி சுளீரென்று நன்றாகவே விழுந்தது. உடனே அந்த பெண் எழுந்துகொண்டு சற்று பின்னே சென்றாள். உடனே அந்த பெண்ணின்  தாயும் எழுந்திருந்து கணவரிடம் ஏதோ சத்தம் போட்டாள் தெலுங்கு மொழியில்  பேசியதால் எனக்கு எதுவும் புரியவில்லை. அவரும் கோபமாக சில வார்த்தைகளை பதிலுக்கு பேசிவிட்டு என்னிடம் நெருங்கினார். என்னிடம் நாற்காலியை காட்டிஉட்காரச் சொல்லி தெலுங்கில் பேசினார். நான் எனக்கு தெலுங்கு தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.


        அந்த பெண் காலி செய்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச்
சொல்லி என்னிடம் கூறினார் சரளமான ஆங்கிலத்தில்பேசினார். நானும் ஒப்புக்காக சில
வார்த்தைகள் பேச வேண்டுமென்று அவரை சமாதானப் படுத்தினேன். என்ன இருந்தாலும் பெண்ணை நீங்கள் அடித்திருக்கவேண்டம் என்றேன். இதுவெல்லாம் தலைமுறை (generation gap) பிரச்னைகள்  என்றேன். என்ன தலைமுறைக் கோளாறோ, வயதில் பெரியவருக்கு இடம் கொடுத்து உட்காரவைக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பாட்டைக்  கூட இழந்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையாகவே  ஆதங்கத்துடன் கூறினார்.

      நீங்கள் ரொம்பவும் வேதனைப்பட்டீரா  என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை பொதுவாகவே இப்பொழுதெல்லாம் இது போல நடந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்தான் அதிகம் என்றேன்.  அந்த பெண் கண்ணை கசக்கிக் கொண்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தாள் அவர் எழுந்திருந்து  அந்த பெண்ணிடத்தில் போய்  ஏதோ சொன்னவுடன் அவருடைய மனைவி பெரிய குரலில் அவரிடம் எதிர்குரல் கொடுத்தாள். நான் அவரை திரும்ப அழைத்து பிரச்னையை இத்துடன் விடுங்கள் என்று கூறி வேறு விஷயத்தை பேசத் தொடங்கினேன்  அவருடைய பெயரைக் கேட்டேன்,  ஊரைக் கேட்டேன்.

          மனிதர் பண்பானவராகத் தெரிந்தார். சற்று நேரம் உலக நடப்பை மற்ற ஏதோ விவரங்களைப் பேசினார் நான் புறப்பட வேண்டிய ரயில் வரும் நேரத்தில் அவரிடம் சொன்னேன், உங்கள் பெண்ணுக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும் ஒரு நல்ல மனிதரை சந்திக்க இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது உங்கள் பெண்தானே என்றேன். அவர் சிரித்துக் கொண்டே என்னிடம் விடை பெற்றுக் கொண்டார்.

               சற்று தள்ளி நின்ற அவருடைய மனைவியும் அந்த பெண்ணும் இன்னும் சமாதானமாகவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவர்களிடமும் சிரித்தபடியே போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டேன். இரண்டு பேரிடத்திலும் எந்த அசைவும் இல்லை.
- மு.கோபாலகிருஷ்ணன்

Friday, May 20, 2011

நடுத்தெரு அநாகரிகம்

சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து திருச்சி வருவதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் நானும் என் மனைவியும் காத்துக்கொண்டிருந்தோம். திருச்சி, கரூர் வழியாக மங்களூர் செல்லும் ரயில் இன்னும் வந்தபாடில்லை. நல்ல கூட்டம் எங்கள் கம்பார்ட்மென்ட் வந்து நிற்கும் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் நின்றோம்.

எங்கள் அருகில் ஒரு இளைஞனும் அவனுடைய மனைவியும் ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்கள். அங்கும் இங்குமாக பலர் குடும்பத்துடன் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்தில் இருந்த தம்பதியினரின் குழந்தை பக்கத்தில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.

அந்த குழந்தை பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கல்லின் மேல் ஏறிவிட்டது. யாரும் கவனிக்காத போது அந்த பெண்குழந்தை கீழே விழுந்து விட்டது. குழந்தையின் அழுகைக்குரலைக் கேட்டு நான் திரும்பிபார்த்தேன். ஓடிப்போய் குழந்தையை தூக்க முயன்றேன். அதற்குள்ளாக அந்த பெண் ஓடி குழந்தையைத் தூக்கிக் கொண்டுவிட்டாள்.

காயம் எதுவும் இல்லை. இரண்டடி உயரத்திலிருந்து சறுக்கியதால் குழந்தை பயத்தில் அழுதது. முகத்திலும் முழங்கையிலும் லேசான சிராய்ப்பு. அவ்வளவுதான். அந்த இளைஞன், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தவன், குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்டு ஓடிவந்தான். என்ன, என்ன ஆனது? என்று கேட்டான்.

ஒன்னும் ஆகிவிடவில்லை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்துவிட்டது என்றேன் நான். அந்த பெண் குழந்தையை சமாதானம் செய்தவாறு, ஒன்றுமில்லை சரியாகிவிட்டது என்று தன் கணவனுக்கு பதில் கூறினாள். அவன் குழந்தையை அவளிடமிருந்து பலவந்தமாக பிடுங்கிக் கொண்டு அந்த பெண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.

நானும் என் மனைவியும் பக்கத்தில் இருந்த மற்ற பயணிகளும் திகைத்து போனோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு அமைதியாக நின்றார்கள். சிலர் அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்து போனார்கள். நான் சமாதானமாக எதாவது சொல்லலாம் என்று வாயைத் திறந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ மௌனமாகிவிட்டேன். பக்கத்தில் நின்றவர்களும் ஏதும் பேசவில்லை. ஆனால் அங்கே நின்ற அத்தனைபேரும் அவனை ஒரு அருவருப்போடு பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.

பொது இடத்தில் பலர் முன்னிலையில் அடி வாங்கிய அந்த பெண் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் நின்றாள். குனிந்தபடியே அழுது கொண்டிருந்தாள். அந்த இளைஞனுக்கு முப்பது வயதிருக்கும். நாகரீகமான உடை உடுத்தியிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அந்த பெண்ணுக்கு இருபத்தியைந்து வயது இருக்கலாம். நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் என்று சொல்லத் தோன்றியது.

இந்த சம்பவத்தைப் பார்த்ததும் நான் மன வேதனைப் பட்டேன். ஒரு பெண்ணை, கட்டிய மனைவியை பலர் முன்னிலையில் பொதுவிடத்தில் அடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை பார்த்தும் என்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம். பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பயணிகளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞன் எதையும் பொருட்படுத்தாமல் அந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு சற்று விலகிப் போய் நின்றான்.

சற்று நேரத்தில் நாங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. நானும் என் மனைவியும் ரயிலில் ஏறி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்தோம். துரதிஷ்ட வசமாக அந்த இளைஞனும் அவன் மனைவியும் எங்களுடைய இருக்கைக்கு நேர் எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்.

அந்த பெண் இன்னும் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தால். குழந்தை அமைதியாகிவிட்டது. முகத்தில் லேசாக சிராய்ப்பு இருந்தாற்போல் தோன்றியது. அவ்வளவுதான். பலத்த அடி எதுவுமில்லை. எதாவது ஒரு வகையில் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் "குழந்தைக்கு எதாவது முதலுதவி தேவைப்பட்டால் சொல்லு அம்மா, தாம்பரம் ஸ்டேஷனுக்கு போன்செய்து விட்டால் ரெடியாக இருப்பார்கள்", என்று அந்த பெண்ணிடம் கூறினேன்.

உண்மையில் முதலுதவி எதுவும் தேவையில்லைதான். குழந்தை இப்பொழுது அவளுடைய மடியில் கண் அயரத்தொடங்கிவிடது. அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அந்த இளைஞன் இப்பொழுது மேலே ஏறி படுத்துக் கொண்டுவிட்டான். அவன் என்னிடம் வேறு எதுவும் பேசவில்லை. வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை.

என் எண்ணம் எல்லாம் திரும்பத்திரும்ப அந்த இளைஞனுடைய ஆண் ஆதிக்க மனப்பான்மையைப் பற்றியும் கட்டிய மனைவியை பலர் எதிரில் பொதுவிடத்தில் அடிக்கும் அவனுடைய கூச்சமில்லாத அநாகரிகத்தையும் பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது. இவன் தன் மனைவியிடம் வீட்டில் எப்படி நடந்து கொள்வான் என்பதைப்பற்றியும் கற்பனை செய்யத்தொடங்கினேன். பொதுவிடங்களில் நடுத்தெருவில் பல வன்முறைகளையும் அடிதடிகளையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. உண்மையில் அன்றைய சம்பவம் என் மனத்தை வெகுவாக பாதித்தது தூங்குவதற்கு முன் அந்த சம்பவத்தைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோஒரு விஷயம் தொடர்பாக பேசும்போது ரயில் பயணத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றி கூறி வருத்தப்பட்டேன்.

இதை கேட்டுவிட்டு என் நண்பர் இன்னொரு சம்பவத்தை, தானே நேரில் பார்த்த ஒரு சம்பவத்தைப் பற்றி என்னிடம் கூறினார்.

அந்த சம்பவம் ஏறக்குறைய இது போன்றதுதான். சற்று வேடிக்கையானதும் கூட.

நண்பர் நகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்தி கொண்டிருக்கிறார். பேருந்தில் நல்ல கூட்டம் அவருக்கு சற்று முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஆணுக்கு நடுத்தர வயது அந்த பெண்ணும் நாற்பது வயதை தாண்டியவள் என்று சொல்லும் அளவுக்கு இருந்தாள்.

நல்ல கூட்டம் காரணமாக பேருந்து மெதுவாக ஊர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஆண்கள் வரிசையில் (தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி வரிசையில் உட்கார இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். ) இருந்த இரன்டு சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து போகிறார். இன்னொரு சீட்டில் ஒரு பள்ளி மாணவன் புத்தகப் பையுடன் உட்கார்ந்திருக்கிறான் அந்த மாணவனுக்கு 15 வயதிருக்கும். காலியாக இருந்த ஒரு சீட்டில் உட்கார நின்று கொண்டிருந்த ஒருவர் நகர்கிறார்.

அதற்கு முன்பாகவே நின்று கொண்டிருந்த அந்த பெண் அந்த சீட்டில் உட்கார்ந்து விடுகிறாள்.

அவள் சீட்டில் உட்கார்ந்த அடுத்த கணமே அவள் முதுகில் பளார் என்று ஒரு அடி விழுகிறது. அடித்தவர் வேறு யாருமில்லை. அந்த பெண்ணின் பின்னால் நின்ற அவளுடைய கணவர்தான். அடித்ததோடு நிற்கவில்லை. ஆம்பிளை பக்கத்திலே உட்கார உனக்கு சீட் கேட்குதாடி? என்று உரத்த குரலில் சத்தம் போட்டான் அவன். அந்த பெண் அலறி அடித்தபடி எழுந்து விட்டாள் பக்கத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த அந்த மாணவனும் அதிர்ச்சியிலும் பயத்திலும் எழுந்துவிட்டான்.

மேலும் அவளை அடிக்க அவள் கணவன் வேகமாக நெருங்கினான். அவள் தலையை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்தாள் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த தன்மான வீரனால் அவ்வளவு சுலபமாக கையை அசைக்க முடியவில்லை. மற்றவர்கள் மேலும் அவருடைய கை பட்டதால் அவர்கள் சத்தம் போடத்தொடங்கினார்கள்.

பக்கத்திலிருந்த ஒருவர் அவருடைய ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டு, "உங்கள் சண்டையில் பேருந்தில் இருப்பவர்களை எல்லாம் அடிக்க வேண்டாம் அடிப்பதாக இருந்தால் வீட்டில் போய் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இருவருக்கும் இடையில் வார்த்தை வளர்ந்தது. கண்டக்டர் விசிலை ஊதி பேருந்தை நிறுத்திவிட்டார்.

அதிர்ச்சியில் உறைந்து போன அந்த மாணவன் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்துக்கு போய்விட்டான். ஒரு பள்ளி மாணவன் பக்கத்தில் உட்கார்ந்தால் நாற்பது வயதுப் பெண்ணுடைய கற்பு களங்கப் பட்டுப் போகும் என்று ஒரு ஆண் நினைக்கும் அவலத்தை எப்படி எடுத்துக்கொள்வது/ ? அதற்காக பொதுவிடத்தில், நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் மனைவியை அடிக்கிறான்.

Possessive என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் உடனடியாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. இதுபோன்று, பெண்களை பொதுவிடத்தில் இழிவாக நடத்தும் ஆணாதிக்கச் செயல்களை தமிழ்நாட்டில் அடிக்கடி பார்க்கலாம். ஒரு சிறுவன் அருகில் உட்கார்ந்த பெண்ணுடைய கற்பு பங்கப்பட்டு விடும் என்று எண்ணும் ஆண்களுடைய மனோபாவத்தை கூர்ந்து நோக்கினால் அவனுடைய வக்கிர உணர்வுகளை நன்றாக புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் கதியை எண்ணிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இப்பொழுது அந்த சிறுவன் காலி செய்த இடத்தில் அந்த நபர் போய் உட்கார்ந்துகொண்டான். இன்னும் ஏன் நிக்கிறே உட்காருடி என்று சத்தம் போட்டான். அந்த பெண் தலையை கவிழ்ந்தபடியே பழையபடியே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

பக்கத்தில் இருந்த ஒரு பயணி "உட்கார இடம் பிடிக்க இதுவும் ஒரு தந்திரமோ ' என்று கேட்க எல்லோரும் சிரித்தார்கள்.

பேருந்து இப்பொழுது புறப்பட்டது.
- மு கோபாலகிருஷ்ணன்