Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Wednesday, March 21, 2012

தலபுராணங்கள் வளர்ந்த கதை


பெங்களூரில் இருந்த போது என் கர்நாடக நண்பர் ஒருவர் திருச்சிக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் போய்விட்டு வந்ததாகச் சொன்னார். உங்கள் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டேன்.  அருமையான ஊர், காவிரி நதி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை எல்லாம் பார்க்க அற்புதமாக இருந்தது, எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகள் என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. சொந்த ஊரை ஒருவர் புகழ்ந்து பேசுவதைக் கேட்டால் யாருக்குதான் மகிழ்ச்சியாக இருக்காது?

 அடுத்து அவர் திருச்சி நகரம் பற்றி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன்.தாயுமானவர் கோயிலைப் பற்றி கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கமாக ஒரு கதையைச் சொன்னேன்..

 திருச்சியில் வணிக சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், குடும்பத்தில் அனைவரும் சிவபக்தர்கள்.இளைய தலைமுறையைச் சேர்ந்த பெண் ஆழ்ந்த பக்தி கொண்டவள். திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, அந்த பெண் கருத் தரித்திருக்கிறாள். பெண் கரு தரித்திருக்கும் செய்தி அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் திருச்சிக்கு வந்து பெண்ணைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். திரும்பவும் பிரசவ சமயத்தில் முன்பாகவே வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்வேன் என்று பெண்ணிடம் கூறிவிட்டு காவிரியின் வட கரையில் உள்ள சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.

 பிரசவ காலம் நெருங்கிவிட்டது. காவிரி நதியில் பெரும் வெள்ளம், கரை புரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் நதியில் படகுப் போக்குவரத்து நின்று போய்விட்டது, பெண்ணின் தாயார் வெள்ளம் சீக்கிரமே வடிந்து சரியான நேரத்தில் திருச்சி போய் பெண்ணுக்கு அருகில் இருக்க கருணை புரியும்படி சிவபெருமானை வேண்டுகிறாள்.

 பெண்ணுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிவிட்டது. சரியான நேரத்தில் உதவிக்கு வந்து சேராத தாயை நினைத்து வருந்தினாள் சற்று நேரத்தில் தாயார் வந்து சேர்ந்தாள்.சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறேன் என்று கூறியபடியே உள்ளே நுழைந்தாள். வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அம்மா மேல் கோபம். தாயிடம் சரியாக பேசவே இல்லை. நல்ல வேளையாக சற்று நேரத்தில் குழந்தை பிறந்தது. குலம் தழைக்க ஒரு ஆண்மகவை பெற்று எடுத்தாள்.

ஒரு பெண்ணுக்கு பிரசவ காலத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் தாயார் செய்து முடித்தாள். இரண்டு, மூன்று நாள் ஓடியது.

காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தொடங்கிய முதல் படகில் புறப்பட்டு தாய் திருச்சிக்கு வருகிறாள். வீட்டில் குழந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு உள்ளே நுழைகிறாள் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்கிறாள்.கையில் குழந்தையுடன் இருந்த பெண் எந்த பதிலும் சொல்லவில்லை. சரியான நேரத்தில் வந்து சேராததால் பெண் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்று நினைத்து தாய் கேட்டாள்.

 நான் என்ன செய்யமுடியும் காவிரியில் சில நாட்களாக நல்ல வெள்ளம். படகு போக்குவரத்து அறவே இல்லை, வெள்ளம் வடிந்தவுடன் புறப்பட்டு இப்பொழுது தான் வர முடிந்தது, இதற்காக என்மேல் கோபப் படலாமா என்று கேட்டாள்.

 பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை. திகைத்துப் போனவளாக, நீதான் ரெண்டு நாட்களாக இங்கேதானே இருக்கிறாய்? பிரசவ நேரத்தில் நீதான் பக்கத்தில் இருந்தாயே, ஏன் திடீரென்று இப்படி பேசுகிறாய்? என்று கேட்டாள்.

 ஊரிலிருந்து வந்த தாயாருக்கு எதுவும் புரியவில்லை. நான் இப்பொழுதுதானே உள்ளே நுழைகிறேன். வேறு யார் இங்கே வந்தார்கள் என்றாள். சிறிது நேர குழப்பத்துக்குப் பிறகு இரண்டு நாளாக இருந்து பணிவிடை செய்த தாயாரை தேடினார்கள், காணவில்லை.

 தாய்க்கும் மகளுக்கும் உண்மை விளங்கியது. தாயும் மகளும் வேண்டியபடியே இறைவன் கருணையோடு அந்த பெண்ணுக்கு தாயாக வந்திருந்து பிரசவம் பார்த்திருக்கிறான் என்ற உண்மை விளங்கியது.

 அதனால் சிவபெருமான் திருச்சியில் தாயுமானவராக பக்தர்களுக்கு அருள் செய்கிறார். ஆண்டுதோறும் திருச்சி தாயுமானவர் கோயிலில் செட்டிப் பெண்ணுக்கு இறைவன் மருத்துவம் பார்த்த திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

 இந்த கதையை நான் நண்பரிடம் விரிவாக சொன்னதும் அவர் மனம் நெகிழ்ந்து போனார். இது காலம்,காலமாக திருச்சியில் வழங்கி வருகிறது. இந்த கதை எந்த புராணத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

 இது போன்று பல ஊர்களில் அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தன் பக்தனுக்கு நெருக்கடி காலத்தில் அருள் செய்து காப்பாற்றிய கதை வழங்கப் படுகிறது. இது போன்ற கதைகளைக் கொண்ட பல தலபுராணங்கள் தமிழ் மொழியில் நிறைய உண்டு.

 மதுரையில் சோமசுந்தரக் கடவுள், தன் பக்தர்களை காத்து அருளிய பெருமையை விரிவாகப் பாடுவதுதான் திருவிளையாடல் புராணம். இந்த திருவிளையாடல்களை ஐந்து புலவர்கள் பல்வேறு தலைப்புகளில் பாடியிருக்கிறார்கள். ஆனால் இலக்கிய நயத்திலும் கதை சொல்லும் திறனிலும் சிறந்து விளங்கி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற நூல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்தான்.

 இறைவன் புட்டுக்கு மண் சுமந்த கதை, ஏமநாதன் கதை இவையெல்லாம் இந்த திருவிளையாடல் புராணத்தில்தான் வருகிறது. திருவாரூரில் உள்ள சிவபெருமான் தியாகராஜருடைய பெருமையைப் பேசும் தியாகராஜ லீலை என்ற நூலும் உண்டு. இது போன்று பல ஊர்களில் உள்ள இறைவனைப் பற்றி பாடும் நூல்களை தலபுராணம் என்று குறிப்பிடுகிறோம்.

 17, 18, 19 ம் நூற்றாண்டுகளில் மட்டும் ஏறக்குறைய இருநூறு தல புராணங்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்கள். எல்லா புராணங்களும் அந்த ஊரின் சிறப்பு, நிலவளம், அந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெருமை அவர் பக்தனை காக்க நிகழ்த்திய அற்புதம் இவை பற்றி பேசும். அந்த புராணங்களிலிருந்து சில வரலாற்றுச் செய்திகளையும் அறிய முடியும்.

 பொதுவாக முஸ்லீம் படையெடுப்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த பிறகுதான் இத்தகைய தல புராணங்கள் தோன்றின என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த கருத்து சரியானதல்ல என்பது வேறு சிலர் கருத்து. பதினான்காம் நூற்றாண்டில்தான் முஸ்லீம்கள் படையெடுத்து வந்து மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்களைக் கொள்ளையடித்தார்கள் ஆனால் 10,11-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தல புராணங்களும் உண்டு. ஸ்ரீரங்க மகாத்மியம் என்ற நூலை உதாரணமாகக் கூறலாம். மேலும் பல நூல்கள் உண்டு.

16,17-ம் நூற்றாண்டுகளில் சிற்றிலக்கியங்கள் என்று கூறப்படும் பல நூல்கள் தோன்றின. அந்த வகையில் குறவஞ்சி, பிள்ளைத்தமிழ்,பரணி, தூது, இப்படி பல வகைகளில் புலவர்கள் தமிழ் மொழியில் எழுதினார்கள். இவையனைத்தும் 96 வகைப் பிரபந்தங்கள் என்று குறிப்பிடப்படும். இவற்றில் நல்ல சுவை உள்ள நூல்களும், இலக்கிய வளம் சற்று குறைநத நூல்களும் உண்டு. முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் கற்பனை வளம் மிக்க படைப்பு. குற்றாலக் குறவஞ்சி உழவர் வாழ்வைப் பற்றி சொல்லும் நாட்டிலக்கியம்,

 சிற்றரசர்கள் தன்ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊருக்கு தல புராணம் எழுதப்பட வேண்டும் என்று போட்டி, போட்டுக் கொண்டு புலவர்களை ஆதரித்தார்கள். அதனால்தான் எராளமான தல புராணங்கள் தோன்றின. 19ம நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்ந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆறு தலபுராணங்கள் எழுதியிருக்கிறார்.

 பிற்காலத்தில் தல புராணங்கள் தோன்றின என்றாலும் அதற்கான கருப் பொருள் நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத்தில் உண்டு என்று சொல்ல வேண்டும். பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் ஆகிய நூல்களில் தல புராணக் கூறுகளைக் காணமுடியும். ஒரு பாடலில் முதல் இரு அடிகளில் இறைவன் எழுந்தருளியிருக்கும் ஊரின் வளத்தையும், பெருமையையும் பாடி விட்டு அடுத்த இரு அடிகளில் இறைவன் பெருமையைப் பாடும் பாடல்களை தேவாரத்தில் பார்க்கலாம். வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்திலும் பார்க்கலாம்.


"கங்கையிர்ப்புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர்பரந்துபாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள்மால்,இறைவன் ஈசன், கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே" 

 உதாரணத்துக்கு மேலேகண்ட ஆழ்வார் பாடல் ஒன்று போதும். இது போன்ற பாசுரங்களின் கருப்பொருள் பிற்காலத்தில் தல புராணமாக வளர்ந்தது.

இன்னும் சற்று பின் நோக்கிப் பார்த்தால் சங்க இலக்கியங்களிலும் ஊர்ப் பெருமையை பாடும் பாடல்களை பார்க்கலாம். பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலையும், மதுரைக் காஞ்சியும் ஒரு வகயில் தல புராணக் கருத்துகளைக் கொண்டது என்று சொல்லலாம். ஆனால் இந்த இரு நூல்களும் இறைவன் பற்றி பாடாமல் ஊரின் வளத்தையும், பெருமையும் பற்றி மட்டும் பாடும்.

இந்த கருப்பொருள்தான் பிற்காலத்தில் பக்தி இலக்கியத்தில் விரித்து தல புராணமாக இறைவன் பெருமை பேச பயன் படுத்தப்பட்டது.

எங்கோ கைலாயத்திலும் வைகுந்தத்திலும் இருக்கும் இறைவனை தனக்கு பக்கத்தில் இருப்பதாக பக்தனை உணரச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தலபுராணங்கள் எழுதப்பட்டதாக கூறலாம். தமிழ்நாடு மாறி மாறி பல சிற்றரசர்களிடம் சிக்கி, அமைதியும் ஒழுங்கும் இல்லாமல் தவித்துக் கொடிருந்த காலத்தில் இறைவன் அவர்களுக்கு அருகில் இருப்பதாக நினைப்பது ஒரு வகையான ஆறுதலாக இருந்திருக்கும். ஆகையால் அன்றைய மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய தலபுராணங்கள் தேவைப் பட்டிருக்கலாம்.  இதுப்போல கணக்கில்லாத தல புராணங்கள் தோன்றின.

இலக்கிய உரைகல்லில் உரைத்துப் பார்த்தால் திருவிளையாடல் புராணம் மட்டும் சிறந்து நிற்கிறது என்று கூறவேண்டும்.


மு.கோபாலகிருஷ்ணன்