Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Wednesday, December 17, 2008

மாநில ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி!



சென்ற டிசம்பர் 6-7 தேதிகளில் ஹாரிஸன்பர்க்'கில் நடந்த வர்ஜினியா/வாஷிங்டன் பகுதி லெகோ ரோபாட்டிக்ஸ் இறுதிப் போட்டியில் கார்த்திக் செட்டியின் அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. கார்த்திக் படத்தில் இடது பக்கம் நிற்கிறான்.

மூடி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்கையும் சேர்த்து எழுவரைக் கொண்ட இந்த அணி வர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசியில் இருந்த பல அணிகளுடன் மோதி இரண்டாம் டிவிஷன் பிரிவில்(12-14 வயதிற்குட்பட்டோர்) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அடுத்ததாக இவர்கள் வர்ஜினியா/டிசி தரப்பில் அமெரிக்க அணியாக ஏப்ரலில் அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்கள். அந்த போட்டியிலும் அசத்த கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்!

உமா, அசோக் செட்டி தம்பதியினருக்கும் தம்பி அஷ்வினுக்கும் எமது வாழ்த்துக்கள்.

லெகோ ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவது கார்த்திக்கிற்கு புதிதல்ல! சென்ற வருடமும் மாநிலப் போட்டியில் வெற்றி பெற்றான். உலக சாம்பியனாக ஏப்ரலில் வர வாழ்த்துக்கள்.

Monday, May 12, 2008

தோட்டக்காரன்

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Tuesday, July 24, 2007

வாழ்த்துச் சொல்ல வாங்க

ஒரு ரோட்டுல நடந்து போனா, நம்ம கண்ணுக்குக் என்ன தெரியும் ? ரோட்டுல போர நாலு பேரு தெரியும், அங்க ஓடிக்கிட்டிருக்கிற நாய் தெரியும். ஒரு ஓரமா பூச்செடி இருந்தா, ஓ பூச்செடி இருக்கா என்று ஒரு 'ஓ' வோடு நம் பார்வையோட்டம் நின்று கொள்ளும்.

எதுக்கு இத்தன built-up னு கேக்கறீங்களா ... மேலும் படிங்க !

நம் தமிழ் வலைப் பதிவர்கள் சமீபத்தில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினார்கள். நாம் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு பூச்செடியை, அதைவிட, தனியாய் ஒரு பூவை, அதனுள் இருக்கும் details-ஐ macro உத்தியோடு நம்ம 'வெப் மாஸ்டர்' ஜெயகாந்தன் அவர்கள் க்ளிக்கி, அதற்கு மூன்றாம் பரிசும் வாங்கியிருக்காரு. மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.


கொசுறு: நாமலும் போட்டியில பங்கேத்துக்கிட்டோம்ல. ஜெய்-க்கு பரிசு கிடைக்கனும்னுட்டு சாதாரணமா ரெண்டு படம் அனுப்பிச்சோம். ஹி.ஹி. விழுந்தாலும் மண் ஒட்டுமா நமக்கெல்லாம் ;-) மேல்க்கண்ட் சுட்டியில், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு போட்டிருக்கற படத்துல ரெண்டாவது 'போகஹண்டாஸ் ஏரி' நம்மதுங்க.

ஜெய்யின் பதிவிற்குச் சென்று உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

அவரின் பரிசு பெற்ற படம்

Wednesday, June 20, 2007

சிவாஜி வாயிலே ஜிலேபி


சின்ன வயதில் எல்லோரும் இந்த குறுக்கெழுத்து வார்த்தைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும், வார்த்தைகள் மாறாது. எனக்கு நினைவிருக்கும் இரண்டு:



சிவாஜி
வாயிலே
ஜிலேபி



டி
யில்
டில்லி



சிவாஜி வாயிலே ஜிலேபி என்றால் ரசிகர்கள் வாயில் என்ன என்று முயற்சித்தேன். இதற்கு மேல் போகமுடியவில்லை.



சி
சிவாஜி
ஜினி




இதிலும் முழு வார்த்தைகளில்லை. நாலெழுத்தில் ஒன்றும் தோன்றவில்லை. பார்ப்போம். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் பின்னூட்டத்தில். நான் ஜெயிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு தசாவதாரம் டிக்கெட் :-)

பின்னூட்டமிடும் மக்களே - நான் பாலின்ட்ரோம் தேடவில்லை. பாலின்ட்ரோம் என்றால் இடமிருந்து வடமாகவும் வடமிருந்து இடமாகப் படித்தாலும் ஒன்றாக இருக்கும். நான் கேட்பது - மூன்று வார்த்தைகள் - மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் - அட மேலே இருக்கும் வார்த்தைகள் போல - இருக்க வேண்டும்.

Monday, August 21, 2006

இலக்கியப் போட்டி 2006

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி! ரிச்மண்ட் நகரவாசிகளின் தமிழ் புலமையை காண்பிக்க இன்னொரு சந்தர்ப்பம் இதோ வருகிறது, தமிழ் சங்கத்தின்

இலக்கியப் போட்டி 2006


பத்து வயதுக்குட்பட்ட இளையர்களுக்கு ஒரு போட்டியும், அதற்கும் மூத்த இளையர்களுக்கு(11-20) ஒரு போட்டியும், இருபது வயதை தாண்டியவர்களுக்கு ஒரு போட்டியும் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு வயதுக்குரிய போட்டியிலும் இரண்டு விதமான படைப்புகள் சமர்ப்பிக்கலாம்: கவிதை, கதை அல்லது கட்டுரை(கவிதையில் சேர்க்கமுடியாத படைப்புகள்)

இளையர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழ் படைப்புகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்(தமிழ் சங்கம் நடத்தற போட்டியில அது கூட இல்லாட்டி எப்படி?). மூத்தவர்கள் மட்டும் தமிழிலேதான் எழுத வேண்டும். அப்படியும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் எழுதும் மூத்தவர்கள் தங்கள் படைப்புடன் தங்கள் பதின்ம(teen) வயதை நிருபிக்கும்வண்ணம் பிறந்தநாள் சான்றிதழ் இணைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.

தமிழில் எழுதுபவர்கள் யுனிகோடு எழுத்துருவை உபயோகித்தால் வசதியாக இருக்கும்.தமிழில் தட்டச்சு செய்வது குறித்து இந்த வலைத்தளத்தில் கற்கலாம்(http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil)

தமிழில் எழுத முடியாதவர்கள் அவர்களின் படைப்பின் பிம்பத்தை(scanned image)அனுப்பலாம். அல்லது பிரதியை நிர்வாகக் குழுவினரிடம் கொடுக்கலாம்.

உங்கள் படைப்புகள் எங்களுக்கு ரிச்மண்ட் நேரப்படி 2006 செப்டம்பர் 30 இரவு 12 க்குள் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பெறும் கவிதை மற்றும் கதைக்கு ஆயிரம் பொற்..... ஹி.. ஹி... மன்னிக்கவும். நிர்வாகக்குழுவில் ஜனநாயகம் வலுத்துவிட்டதால், இன்னும் பரிசு குறித்து சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது.

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவை உங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும். மண்டபத்தில் யாரோ எழுதி வாங்கிக்கொண்டு வரலாம். எங்களுக்கு தெரியாமலிருக்க வேண்டும். அவ்வளவே.

உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் மூலம்
rts_lit@googlegroups.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தவறாமல் படைப்பாளியின் பெயர், வயது, மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிடவும்.

சரியா?

அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

பி.கு: உங்கள் படைப்புத் திறனை உதைத்து ஆரம்பிக்க(அதாங்க கிக் ஸ்டார்ட்) இந்த தளத்தைப் பார்க்கவும். http://richmondtamilsangam.blogspot.com



How to write in Tamil: http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil

To convert Tscii/Tab files to unicode: http://www.suratha.com/atamil.htm

To write Tamil without installing any software: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (click on Thaminglish and type away!)