Showing posts with label புரூக் பாண்ட். Show all posts
Showing posts with label புரூக் பாண்ட். Show all posts

Sunday, May 05, 2019

கடிலக்கரையினிலே... புரூக் பாண்ட்

சென்ற வாரம் கடைக்கு போயிருந்தபோது ஒரு புதிய தேநீர் பொட்டல வகையைப் பார்த்தேன். நமக்கு புதியது. அதில் தேநீர் போட்டு அருந்தினால் அப்படியே நம்ம ஊர் டீக்கடை அனுபவம் வருகிறது. அதைவிட விசேஷம் அதன் வாசம்.  டப்பாவை திறந்து முகர்ந்தால்...... ஜிவ்வ்வ்வ்வ்வ்வென்று அடுத்த கணம் பண்ருட்டியில் என் அப்பாவின் டிப்போ!

என் அப்பா புரூக்பாண்ட் கம்பெனியின் பண்ருட்டி சேல்ஸ்மேன். ஊரில் அவர் பெயர் சொன்னால்கூட நிறைய பேருக்கு தெரியாது. புரூக்பாண்ட்காரர்தான்! மெட்ராஸ் ரோட்டில் ரயில்வே கேட்டுக்கு அருகில் இருந்தது அப்பாவின் டிப்போ. டிப்போவில் எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக டீயும் காபியும் இருக்கும். ஆனால் எண்ணிக்கை அதிகமானதாலோ என்னவோ டீ வாசம்தான் ஓங்கி இருக்கும். உள்ளே நுழைந்தாலே டீ வாசம்தான் மூக்கைத் துளைக்கும்....

அப்பாவின் இருக்கைக்கு மேலே ஒரு மின் விசிறி. கொஞ்சம் கவனித்தால்தான் தெரியும். அது ஒரு மேசை மின் விசிறி! உஷா ப்ராண்ட். சாதாரண மின்விசிறி கூட போட இடமில்லாததால், அப்பா மேசை மின்விசிறியையே ஒரு பலகை அடித்து மாட்டியிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அந்த மின்விசிறியையும் கழட்டிக் கொண்டுவந்து விட்டார் - அவனுங்க எங்க குடுத்தாங்க. நான் என் ஃபேனைத்தான் போட்டேன்.  அதனுடைய கனத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்பா - இதுக்கு நேர் கீழ எப்படி இவ்வளவு நாள் தைரியமா உக்காந்த? டேய் அது ஷாப்ஜான் மாட்டினதுடா. அவ்ள சீக்கிரம் விழுந்துடுமா? ஒரு தடவை இப்படித்தான் டீ டிஸ்டிரிபியூட் செய்யும்போது ஆத்துல தண்ணி நிறைய வந்துடுச்சி. ஷாப்ஜான் என்னை தோளில் தூக்கிட்டு போனான், தெரியுமா? அந்தக் காலத்து லாயல்டி இரண்டு பக்கமும் அதிகம். ஷாப்ஜான் அப்போதே புதுவைக்கு வேலை மாறி சென்று புரூக்பாண்ட் வேன் டிரைவராக முன்னேறியிருந்தார். எப்போதாவது அப்பாவைப் பார்க்க வருவார். ராமரின் முன்னே அனுமன் மாதிரி அவ்வளவு பயபக்தியுடன் நிற்பார்.

அப்பாவின் டிப்போ என் துவக்கப்பள்ளியிலிருந்து வரும் வழியில் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது நண்பர்கள் சில சமயம் நச்சரிப்பார்கள் - டேய் அட்டை போடனும் பிரௌன் பேப்பர் வாங்கி குடுடா....  டீ பொட்டலங்கள் வரும் பெட்டியில் உள்ளே ஒரு பழுப்பு நிறத்தில் மிகவும் கனமான காகிதம் இருக்கும். பாட புத்தகங்களுக்கும், நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட மிகவும் வசதியானது. அதை அட்டையாக போட்டால்  எடை கூடிவிடும் அவ்வளவு கனம். புத்தகங்கள் புல்லட் ஃப்ரூப் ரேஞ்சுக்கு பாதுகாப்பாக இருக்கும். சில ஆசிரியர்கள் படுத்துவார்கள். கட்டுரை நோட்டுகளுக்கு கடையில் வாங்கிய பிரௌன் பேப்பர்தான் போட வேண்டுமென்பார்கள். இந்த அட்டையை என் அண்ணன் அன்னிய செலாவணி அளவுக்கு பண்டமாற்றுக்கு பயன்படுத்துவான். இதற்கு ஒரு அட்டை, அதற்கு இரண்டு அட்டை என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கள்ளச் சந்தையையே உருவாக்கியிருந்தான். அந்த அட்டை மீது அப்பாவுக்கும் அபார நம்பிக்கை. அந்த அட்டையை மடித்துத் தைத்து ஒரு போட்டோ ஆல்பமே செய்திருந்தார், போட்டோ எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என்று. ஆனால் நாளாக நாளாக அந்த அட்டையின் நடுவே இருக்கும் தார் நிறத்தில் இருக்கும் கோந்து ஊறி வெளியே வரும். அப்பாவின் பழைய போட்டோக்களில் எல்லாம் அந்த சாயம் ஏறி வீணாகியிருக்கிறது.

அப்பா மாதாந்திர விற்பனை டார்கெட் முறியடிப்பதில் மன்னன். டிவிஷனிலேயே நாந்தான் நிறைய தடவை டார்கெட் பீட் செய்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லுவார். இருக்கும் அதே ஊர் சுற்றுவட்டாரங்களில் எப்படி  மேலும் மேலும் அதிகமாக விற்க முடிகிறது என்பது எங்களுக்கு பெரும் புதிர். பலமுறை இவருடைய ஸ்டாக்கை தீர்த்துவிட்டு பக்கத்து ஊர் டிப்போக்களில் இருந்து தருவிப்பார்.

புரூக்பாண்ட் சின்னம் பொறித்த டைகள் (ties) இரண்டை பொக்கிஷமாக வைத்திருந்தார்.  விற்பனை மன்னராக இருந்ததால் நிறைய பரிசுகள் அடுக்கு டிபன் கேரியர் போன்ற பரிசுகள்.  25 ஆண்டுகள் புரூக்பாண்ட் சேவைக்காக ஒரு கனமான் வெள்ளித்தட்டு, தம்ள்ர் எல்லாம் காத்ரேஜ் பீரோவின் லாக்கரில் இருக்கும். அந்த இரண்டு டைகளுடன். புரூக்பாண்டே உலகமாக வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பான் என்று ஒரு  காபி வந்ததாம்.. அந்த காபி ஒரு நல்ல தரமான ப்ளாஸ்டிக் டப்பாவில் வரும். வீட்டில் நிறைய பருப்பு பாத்திரங்கள் அந்த பான் டப்பாவில்தான். இந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தபோதும் பார்த்தேன். இன்னும் சில டப்பாக்கள் இருக்கின்றன.  புரூ காபியின் மணம் சொல்லவே தேவையில்லை.  இங்கே நான்கூட புரூவில் இருந்து மாறிவிட்டேன். ஆனால் நம் முன்னாள் சங்கத் தலைவர் சத்தியவாகீஸ்வரன் போன்ற புரூ பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள்.  சத்யா வீட்டிற்கு எப்போது போனாலும் புரூ போட்டு அழகாக ஆற்றிக் கொடுப்பார்.
அப்போது புரூக்பாண்டின் எதிரி லிப்டன்! லிப்டன் சேல்ஸ்மேன் பாப்பையாவும் அப்பாவும் நண்பர்கள்தான். நாங்கள் என்னவோ இருவரும் எதிரிகள் போல பேசிக்கொள்வோம். அந்த வீட்டு பிள்ளைகளைப் பார்த்தால் முறைத்துக் கொண்டு போவோம்.

கிரீன் லேபில், ரெட் லேபில், த்ரீ ரோஸஸ் என்று பல. கிரீன்லேபில் விலை குறைந்தது என நினைவு. டீக்கடைகளில் எல்லாம் அதுதான் இருக்கும். எனக்கு த்ரீ ரோஸஸ் பிராண்ட் வெளிவந்ததுகூட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் வென்னீரில் தோய்க்கும் பொட்டலங்களும் வந்தது. அப்பா அதை ச்ற்றும் பிடிக்காமல்தான் விற்பனை செய்ய முயன்றார். யாரும் அதை நம்பவில்லை. சும்மா வென்னீர்ல இத போட்டா போதுமா சார்? அவ்ள ஸ்ட்ராங்கா வருமா?? போன்ற கேள்விகள் நிறைய…  இலவசமாகக்கூட கொடுத்துப் பார்த்தார்கள். கி.ரா. அந்தக் காலத்தில் மக்களை கருப்பட்டி காபியில் இருந்து மாற்ற எவ்வளவு ததிங்கினத்தோம் போட வேண்டியிருந்தது என்று ஒருமுறை எழுதியிருந்தார்.

அப்பா டீ எப்படி போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தண்ணீர் கொதிக்கவைத்து அதை பாத்திரத்தில் வைத்திருக்கும் டீயில் சேர்க்க வேண்டும். டீயை நேராக கொதிக்க விடக்கூடாது. பிறகு வடிகட்டி அதில் பால் சேர்க்க வேண்டும். பின்னாளில் அண்ணன் வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு வந்தபோது என்னடா உன் அண்ணி பால், டீ எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கொதிக்கவச்சி குடுக்கறா என்று ஆதங்கத்துடன் சொன்னார். இப்போ எல்லாம் அப்படித்தாம்பா, யாருக்கு நேரம் இருக்கு என்று சமாதானப்படுத்தினேன்.  அமெரிக்கா வந்திருந்தபோது வெளியே காபி வாங்கினோம். என்னடா டிகாக்‌ஷன் மட்டும் கொடுக்கிறான் என்றார் அப்பா. நாம்தான் எல்லாம் கலக்கிக்கனும்பா என்று சர்க்கரை, பால் சேர்த்து கலந்து கொடுத்தேன். அப்பறம் இவனுங்க எதுக்கு இருக்கிறானுங்க என்றார். நல்லகேள்விதான்.

பின்னாளில் அப்பாவின் விற்பனையில் சம்பந்தமே இல்லாமல் ஸ்விஷ் ப்ளேட் சேர்க்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது என் அண்ணன் மட்டுமே. புது பிராண்ட் என்பதால் வண்ண வண்ண போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் எல்லாம் அவன் கள்ளச் சந்தையை மேம்படுத்தின.

பின்னாளில் அப்பா ஓய்வு பெற சில ஆண்டுகளே இருந்த போது ஒரு கீழ்நிலை பணியாளர் பிரச்சினையால் டிப்போவை மூடி அப்பாவுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விட்டார்கள். கம்பெனியின் லாயல்டி அவ்வளவுதான். அப்பா மலை போல நம்பியிருந்த யூனியனும் அந்த சமயத்தில் கைவிட்டு விட்டது.

இப்போது அந்த டிப்போ சேல்ஸ்மேன் மூலமான நேரடி விற்பனைமுறையே மாறி ஏஜென்சிகள் வந்து விட்டன. அந்தக் காலத்தில் புரூக்பாண்ட் சொந்த டீ எஸ்டேட்டுகளில்  வளர்ப்பதில் இருந்து விற்பனைவரை எல்லாமே செய்து கொண்டிருந்தது. இப்போது அந்த நிறுவனமே இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சகாப்தமே முடிந்த மாதிரி இருக்கிறது. அப்பாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இந்தியாவில் இப்போது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், புரூக்பாண்ட் லிப்டன் இரண்டையுமே விற்கிறது. ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாதது அது. இன்னும் சில நாட்களில் ஆப்பிள் கைபேசிகளும் சாம்சங் கைபேசிகளும் ஒரே நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்!!??