Showing posts with label பிறந்த நாள். Show all posts
Showing posts with label பிறந்த நாள். Show all posts

Friday, December 14, 2012

பாரதியின் கடிதம்

பாரதியாரை விட ஏழாண்டுகள் இளையவர் பரலி .சு .நெல்லையப்பர் அவரை தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி நேசித்தார். அவருக்கு  பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். பாரதியின் தமிழ் பற்றை தன் மொழியை அவர் நேசித்த பாங்கை புரிந்து கொள்ள அந்த கடிதம் பயன்படும்.



          ஓம்
புதுச்சேரி 
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக

தம்பி – மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் -  தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு ஏறு  மேலே மேலே மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே மேலே!
**


தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது 

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி ! சக்தி சக்தி என்று பாடு

தம்பி – நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு  நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. 


தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

                                                                                                 உனதன்புள்ள
                                                                                                  பாரதி


19-7-1917 அன்று பாரதி புதுச்சேரியிலிருந்து எழுதிய கடிதம்.


 டிசம்பர் மாதம்  பதினோன்றாம் நாள் பாரதியின் பிறந்த நாள் அதை முன்னிட்டு ஒரு கட்டுரை எழுதி அனுப்ப  வேண்டும் என்று முயற்சி செய்தேன். வேறு சில கடமைகள் காரணமாக நேரத்தை ஒதுக்கி உட்கார முடியவில்லை அதனால்  சமீபத்தில் நான் படித்த பாரதி  கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன். இந்த கடிதம் பாரதி பாண்டிச்சேரியில் இருக்கும்போது பரலி சு நெல்லையப்பருக்கு எழுதப்பட்ட கடிதம்.
- மு. கோபாலகிருஷ்ணன்