Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Sunday, September 14, 2014

பொற்காலக் கனவும் பாரதியாரும்

(செப்டம்பர் 11 அன்று மகாகவியின் நினைவு நாளையொட்டி மு.கோ. அவர்கள் எழுதியது)
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் படித்தவர்கள், படிப்பறியா பாமரர்கள் அனைவரிடத்திலும் உள்ள பெரிய பலவீனம் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பெருமிதம் கலந்த கருத்து அவர்களிடம் அழுத்தமாக நிலவுகிறது. கடந்து போய்விட்ட பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நல்லதாகவே இருந்தது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெட்டு இப்பொழுது எல்லாம் கெட்டழிந்து நிற்பதாக பலர் நம்புகிறார்கள்
பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கல்வித் திட்டம் செயல்படுகிறது. தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் சங்ககாலம் பொற்காலம் என்பார். அடுத்து வரலாற்றாசிரியர் பாடம் நடத்தும்போது குப்தர் காலம் பொற்காலம் என்பார். சலித்துப்போய் வீடு திரும்பும் மாணவனிடம் தாத்தா பேச்சைத் தொடங்குவார். அந்த காலத்தில் வெள்ளைக்காரன் ஆண்டப்போ என்று ஆரம்பிப்பார்.
இரண்டு விஷயத்தில் தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் முன்னால் தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்தவர்கள் என்று அடித்துப் பேசுகிறார்கள்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றி மூத்த குடி
என்று ஆதாரம் காட்டுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும், ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழிகள் உள்பட எல்லா மொழிகளுக்கும் தமிழ் தான் தாய் மொழி. தமிழிலிருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றி வளர்ந்தன என்பார்கள்.
இதை ஏற்க மறுப்பவர்கள் தமிழினத்தின் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாதான் உலக நாடுகள் அனைத்துக்கும் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தது என்ற பேச்சுக்கு எதிராக வாய் திறந்தால் நீங்கள் இந்து மத விரோதியாக பட்டம் பெற வாய்ப்பு உண்டு. உலகத்தின் எல்லா ஞானமும் நான்கு வேதங்களிலிருந்து தான் பெறப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் நீங்கள் நாஸ்திகர் என்ற பழியைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
எப்படி எல்லாம் வாழ்ந்த தமிழன் இப்படி நலிந்து போனானே என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். வடமொழி மரபும் வாடையும் வீசி தமிழின் தனித்தன்மை அழிகிறதே என்று பகுத்தறிவு வாதிகளும், தனித்தமிழ் ஆர்வலர்களும் வேதனைப் படுவார்கள்.
பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நன்றாக இருந்தது என்ற மூட நம்பிக்கை தமிழனுக்கு மட்டும் உள்ள பலவீனம் அல்ல. இந்தியாவில் மற்ற மொழி பேசுவோரிடமும் ஏதாவது ஒரு வகையில் இந்த மனநோய் பல உருவங்களில் தொடர்கிறது. உலகின் பல பகுதிகளீல் வாழும் ஓரளவு பழமையான நாகரீகச் சிறப்பு உள்ள மக்களீடம் இந்த பொற்காலக் கனவு தொடர்கிறது.
மேல்நாட்டவர்கள் கிரேக்க நாகரீகம் பற்றி இந்த பெருமிதத்தோடு பேசுவதைப் பார்க்கலாம். உலகின் முதல் ஜனநாயக அமைப்பு கிரேக்கத்தில் இருந்த நகரக் குடியரசுகளில்தான் இருந்தது என்பார்கள்.இந்த கருத்தை பல அறிஞர்கள் ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயம்
அன்றைய நகரக் குடியரசில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதுதான் உண்மை. சொத்துக்களும், நிறைய அடிமைகளையும் உடையவர்கள் மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் சங்ககாலம் பொற்காலம் என்று பல தமிழ் அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த பொற்காலத்தில் தமிழ் மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறக் கேட்கலாம். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து வாழ்ந்தனர் என்றும் பல நூல்களில் கூறப்பட்டிருப்பதெல்லாம் வெறும் கற்பனைதான். புலவர்கள் வள்ளல்களையும் மன்னர்களையும் நயந்து பாடி வாழ்ந்தவர்கள். அவர்கள் கற்பனையாகச் சொன்ன, பாடிய பாடல்களில் உள்ள செய்திகள் உண்மை நிலையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வகைக் கற்பனைகளோடு கிரேக்கக் கவிஞர்களூம் பாடியிருக்கிறார்கள். போர் இல்லாமல், சகல வளமும் கொண்ட, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சமுதாயம் என்று மனதுக்கு இதமான கற்பனைகள் கொண்ட கவிதைகளை பழைய இலக்கியங்களில் நிரம்பக் காணலாம். இந்த பாடல்கள் கவிஞனின் நல்லெண்ணத்தையும் அவனுடைய உள்மனத்தில் கிடக்கும் ஆசைகளையும் எதிரொலிப்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.வ.ஜகந்நாதன் என்ற தமிழ் அறிஞர் கூறுகிறார்.
வேத காலம் முதல் பரமார்த்திக வாழ்க்கையை அறிந்து வாழ்ந்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இனி புதியதாக உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. கிடைத்த உண்மைகளைக் கொண்டு அதைக் கடைப் பிடித்து வாழ்வதே நம் கடமையாகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த நம் சான்றோர்கள் எல்லா உண்மைகளையும் கண்டறிந்தவர்கள் என்ற நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது. முன் நாளில் வாழ்ந்தவர்கள் பிணி இல்லாமல் முற்றும் உணர்ந்தவர்களாய் வெகு நாள் வாழ்ந்தார்கள். காலப் போக்கில் மக்கள் பிணி மிகுந்தவர்களாய் சிற்றறிவு கொண்டவர்களாய் குறுகிய வாழ்நாளைக் கழித்து மாண்டார்கள் என்ற கருத்தை பல இடைக்கால நூல்களில் பார்க்கலாம் சென்ற 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திராவிடப்பிரகாசிகை என்ற நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
முதல் தமிழ்ச்சங்க காலத்தில் வாழ்ந்த அகத்தியர் படைத்த நூலின் பொருளை பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் ,சில வாழ்நாள் கொண்டவர்களா யும் எளிய அறிவு படைத்தவர்களாயும் இருந்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை அதனால். பல நூல்கள் அழிந்துபட்டன என்று கூறுகிறார் பிற்காலத்தில் வாழ்ந்த சிறு மதியாளர்கள் முந்தைய காலத்திய அறிஞர்களீன் படைப்பை புரிந்து கொள்ள முடியாததால் நூல்கள் அழிந்தன என்ற பொருளில் கூறுகிறார்..
சமயப் பிணக்காலும் குறுகிய மனப்பாங்காலும் பல நூல்கள் காப்பாற்றப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டன.கவனிப்பார் இன்றி காப்பவர் இன்றி நூல்கள் அழிந்துபட்டன என்பதுதான் உண்மை.இந்த வேதனை தரும் உண்மையை மறைத்து பழம்பெருமை பேசுகிறார் ஆசிரியர்.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளூம் மன உறுதி இல்லாமல் பலவீனப்பட்டவர்கள் தங்கள் நாடு,சமூகம் ,மொழி பற்றி பழைய பெருமைகளை விதந்து ஓதி மன நிறைவு கொள்ளச் செய்யும் முயற்சிதான் இது அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளுடன் புனையப்பட்ட பழங்காலம் பற்றிய புகழ்பாடல்களில் நாம் நம் அறிவை இழந்துவிடக் கூடாது. பழைய அமைப்பு முறைகளீல் உள்ள போற்றத்தக்க ,இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவற்றை சரியாக இனம் கண்டு அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோன்றிய (14 ம்நூற்றாண்டுக்குப் பின்)
தமிழ் நூல்களெதுவும் இலக்கியமாகக் கருதத்தக்கதல்ல,ஒதுக்கப்பட வேண்டியவை என்று மறைமலையடிகள் கூறுகிறார்.அவர் வாழ்ந்த 20 ம் நூற்றாண்டின் முன் பகுதியில் படைக்கப்பட்ட பாரதி பாடல்களும் ,மற்ற கவிஞர்களின் படைப்புகளும் தோன்றிய நூற்றுக்கணக்கான நாவல்களும் மறைமலையடிகள் பார்வையில் கவைக்கு உதவாத எழுத்துக்கள். அவரைப் பொறுத்த வரையில் தமிழின் பொற்காலம் 14 ம் நூற்றாண்டோடு முடிந்து போய் விட்டது.
இப்படி விடாப்பிடியாக பழமையைத் தூக்கிப் பிடித்து பெருமை பேசுவோர் எல்லா பகுதியிலும் இருப்பார்கள்.தமிழ் நாட்டில் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைத்து முள்ளாக வளர்ந்து தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கிறது
இலக்கியத்தில் புதிய உத்திகள், மரபுகள் தோன்ற பெரும் தடையாக வளர்ந்து விட்டது.பழையன எல்லாம் கழிக்கப்படவேண்டியவை அல்ல. ஆனால் வீண் பெருமை பேசி எல்லா வகையிலும் பழமையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது புதிய சிந்தனையோட்டத்துக்கு தடையாகி விடுகிறது. ஒரு விஷயம் பழமையானது என்பதாலேயே பூஜைக்கு உரியதாக மாறி விடுகிறது நவீன காலத்தின் வளர்ச்சியையும் பழைய முறைகளீன் இன்றைய பொருத்தப்பாட்டையும் பற்றி தெளிவான சிந்தனை இல்லை.
புது உலகக் கவிஞனாக அவதரித்த பாரதி இந்த பழமை செய்யும் கேட்டைப் பார்த்தார்.எல்லாத் துறைகளிலும் வியாபித்து நிற்கும் தடைகளுக்கு பழமை மீதான வழிபாட்டு உணர்வுதான் காரணம் என்று உணர்ந்தார்.
அதனால்தான் சரித்திரத் தேர்ச்சிகொள் என்று புதிய ஆத்திச்சூடி பாடிய பாரதி அடுத்தபடியாக பிணத்தினைப் போற்றேல் என்று பாடினார் மேலும் தெளிவாக பழமை விரும்பிகளுக்கு பாரதி அறிவுரை கூறினார்.கடந்த காலத்திலிருந்ததை எல்லாம் இழந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருக்காதே புதியவை படைக்கப் புறப்படு என்றார்.
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
என்று பாடினார்
பழமை என்பது நிகழ் காலத்துக்கான சாவி, எதிர்காலத்துக்கான வழிகாட்டி.. என்றார் ஒரு மேல் நாட்டு அறிஞர்.
பாரதி இந்த விளக்கத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். மிகப்
பெரிய இயக்கத்தை வழி நடத்த வேண்டிய மக்கள் கடந்த காலத்தின் சிறப்பையும்,அதன் இழப்பையும் எண்ணி ஏங்காமல் நிகழ்காலத் தாழ்வை நிணைத்து மனம் தளராமல் நமக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று
நம்புங்கள் என்று பாரதி முழங்கினார்
வரலாற்றை படித்து அதன் சரியான பயன்பாட்டைஎடுத்துச் சொல்கிறார்
முன்னர் நாடு நிகழ்ந்தபெருமையும்
மூண்டிருக்கும் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்று வரலாற்றைப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு மனம் தளர்ந்தவர்களைப் பற்றி இந்த மக்களுக்கு என்ன சொல்லி உண்மையை
உணரச் செய்வேன்,இவர்களுடைய பரிதாப நிலையைக் கண்டு என் உள்ளம் எரிகிறதே என்றுவேதனைப் படுகிறார் பாரதி.
என்ன கூறி மற்றெங்ஙன் உணர்த்துவென்
இங்கிவர்க்கென துள்ளம் எரிவதே
என்று முடிக்கிறார்
- மு.கோபாலகிருஷ்ணன்

Friday, December 14, 2012

பாரதியின் கடிதம்

பாரதியாரை விட ஏழாண்டுகள் இளையவர் பரலி .சு .நெல்லையப்பர் அவரை தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி நேசித்தார். அவருக்கு  பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். பாரதியின் தமிழ் பற்றை தன் மொழியை அவர் நேசித்த பாங்கை புரிந்து கொள்ள அந்த கடிதம் பயன்படும்.



          ஓம்
புதுச்சேரி 
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக

தம்பி – மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் -  தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு ஏறு  மேலே மேலே மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே மேலே!
**


தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது 

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி ! சக்தி சக்தி என்று பாடு

தம்பி – நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு  நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. 


தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

                                                                                                 உனதன்புள்ள
                                                                                                  பாரதி


19-7-1917 அன்று பாரதி புதுச்சேரியிலிருந்து எழுதிய கடிதம்.


 டிசம்பர் மாதம்  பதினோன்றாம் நாள் பாரதியின் பிறந்த நாள் அதை முன்னிட்டு ஒரு கட்டுரை எழுதி அனுப்ப  வேண்டும் என்று முயற்சி செய்தேன். வேறு சில கடமைகள் காரணமாக நேரத்தை ஒதுக்கி உட்கார முடியவில்லை அதனால்  சமீபத்தில் நான் படித்த பாரதி  கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன். இந்த கடிதம் பாரதி பாண்டிச்சேரியில் இருக்கும்போது பரலி சு நெல்லையப்பருக்கு எழுதப்பட்ட கடிதம்.
- மு. கோபாலகிருஷ்ணன்







Wednesday, February 23, 2011

தமிழ் தாத்தா உ .வே. சா. - வறுமையிலும் செம்மை (பகுதி 2)

(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

மகன் சாமிநாதய்யரின்  வற்புறுத்தல் காரணமாக தந்தையார் தன் மகனை தமிழ் படிக்க அனுமதித்தாரே  தவிர அவருக்கும் அதில் பூரண சம்மதம் இல்லை. ஆங்கில படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்துக்கு மகனை அனுப்பினால் குடும்பம் வயிறாரச் சாப்பிடலாம் என்று எண்ணினார். அந்த நிலையில்தான் தன் மகனை அரை மனதோடு தமிழ் படிக்க அனுமதித்தார்.

ஐயரின் தந்தையார் வேங்கடசுப்பையர் பலருடைய உதவியில் வாழ்ந்து கொண்டிருந்தார். நிலையான வருமானம் இல்லை. குடும்பத்துக் கடனை அடைக்க என்றோ தானமாக வந்த நிலத்தை ஈடு வைத்துத்தான் அவருடைய சீமந்த கல்யாணம் நடந்தது. அந்த கடன் ரூபாய் 500 ரூபாயை வட்டியுடன் சேர்த்து 730 ரூபாயாக பல வருடங்களுக்கு பிறகு சாமிநாதய்யர்தான் அடைத்தார். அந்த அளவுக்கு கைக்கும் வாய்க்குமாகத்தான் அவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து  வந்தார்கள்.

ஆகையால் ஆர்வம் காரணமாக தமிழ்க்கல்வி தொடங்கினாலும் அதற்காக அதிக செலவு செய்ய வழியில்லை . ஐயருடைய தந்தையாருக்கு நன்கு தெரிந்த சடகோபய்யங்கார் தமிழ் கற்பிக்க முன்வந்தார். அரியலூர் சடகோபய்யங்கார் நல்ல தமிழறிஞர். பல நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய குடும்பத்தில் பல முன்னோர்களும் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். அவர் எழுதிய சிவராத்திரி மகாத்மியம் என்ற நாடகம் அந்த நாட்களில் பல முறை மேடை ஏற்றப்பட்டது. . வைணவரனாலும் சமய சமரச நோக்கம் கொண்டவர்.

சாமிநாதய்யர் சில வருடங்கள் சடகோப ஐயங்காரிடம் தமிழ் கற்றார். ஐயரின் ஆர்வத்தையும் எளிதில் படித்தறியும் ஞானத்தையும் கண்டு வியந்து அவரை மேலும் பெரிய தமிழறிஞர்களிடம் சென்று தமிழ் கற்க கூறினார். அவர்.  அவருடைய முயற்சியில் அன்று பிரபலமாக இருந்த தமிழ் அறிஞரான திரிசரபுர மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்பது என்பது அன்றைய நிலையில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றதற்கு சமம் என்று கூறுவார்கள் அந்த பெருமை  சாமிநாதய்யருக்கு கிடைத்தது. ஐயர் பிள்ளையவர்களுடன்  தங்கி இருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏற்பாடாகி இருந்தது.
    
பிள்ளையவர்கள் அடிக்கடி திருவாவடுதுறை ஆதினத்து மடங்களுக்கு செல்வார். சென்ற இடத்தில் பல நாள் தங்குவார் சாமிநாதய்யரும் அவருடன் சென்று தங்கி பாடம் கேட்பார்.

எல்லா பாடங்களும் சுவடிகளைக்கொண்டுதான். பிள்ளை அவர்களுக்கு பல புராணங்கள் மனப்பாடமாகத் தெரியும், அவரே இருபது தலபுராணங்களை இயற்றியிருக்கிறார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வறுமையில் வாழ்ந்தவர்தான்.  சைவமடங்கள் கொடுத்த பொருளுதவியைக் கொண்டுதான் அவர் வாழ்ந்தார்.

பல மாதங்கள் பிள்ளை மாயவரத்தில் தங்கி இருந்தார். சாமிநாதய்யரும் அவரோடு தங்கி தமிழ் படித்து வந்தார். அன்றைய குல ஆச்சாரப்படிசாமிநாதய்யருக்கு பிராமணர் ஒருவர் வீட்டிலிருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாத்துரை என்ற அந்த பிராமணருக்கு மடத்திலிருந்து அரிசி முதலிய பொருட்களை கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திலோ மடத்திலிருந்து அரிசி மற்ற மளிகைப் பொருட்கள் அப்பாத்துரை ஐயர் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. 

சில மாதங்களுக்குப் பிறகு ஐயர் பிள்ளையவர்களுடன் வேறு ஊருக்கு புறப்படவேன்டியதாயிற்று. தான் உணவு சாப்பிட்ட வீட்டிற்கு எந்த கைம்மாறும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது. அப்பாத்துரை ஐயரை நேரில் பார்த்து மடம் கொடுக்க ஒப்புக்கொண்ட அரிசி மற்ற மளிகைப்பொருளை பெற்றுத் தருவது பற்றி பேசினார். சாமிநாதய்யர்  தான் ஊருக்கு செல்வதற்கு முன் எதுவும் நடக்கப்போவதில்லை என்று உணர்ந்தார்.அந்த நாட்களில் உள்ளாடை அணிவதற்காக ஆண்கள் இடையைச் சுற்றி அணியும் ஒரு கயிறு.  பிராமணசிறுவர்களுக்கு உபநயன நாளில் வெள்ளியால் செய்த இந்த கயிற்றை மாமன் சீராகக் கொடுப்பது வழக்கம். தன் இடையில் கட்டியிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை கழற்றி அப்பாத்துரை ஐயரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு தனக்கு சில மாதம் உணவு அளித்ததற்கு மாறாக அதை விற்று பணத்தை எடுத்தக் கொள்ளும்படி வேண்டினார்.

ஆனால் அப்பாத்துரை ஐயர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். "எனக்கு அந்த அளவுக்கு பணம் முக்கியம் இல்லை. நீ ஊருக்குப் போய் உன் தமிழ்ப் படிப்பை தொடர்ந்து படித்து முன்னேறினால் போதும்", என்று பெரிய மனதோடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். பிற்காலத்தில் அப்பாத்துரை ஐயர் குடும்பத்திற்கு ஐயர் சில உதவிகளை நன்றியுணர்வோடு செய்தார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பொறுப்பை ஏற்ற பிறகு நேரம் கிடைத்தபோதெல்லாம் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கு போனார். சுவடி தேடி அவர் செய்த பயணத்தில் அவருடைய கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்.

பழங்காலத்தில்  புலவர்கள் வாழ்ந்த சிற்றூர்கள், ஜமீன்தார்கள் இல்லங்கள், இப்படியாக பல ஊர்களுக்கு போனார். மருத்துவம் செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள், புலவர்களின் சந்ததியினர், இப்படி பலதரப்பட்ட மக்களை சந்தித்தார். பலர் செய்த உதவியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான சுவடிகளைச்  சேகரித்தார்.

மருத்துவம், சோதிடம் தொடர்பு உடைய நூல்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த சுவடிகள் அவருக்கு கிடைத்தன. தலபுராணம், சமயம் சார்ந்த பல நூல்கள், இலக்கியங்கள் ஆகியவை அதிகமாகக் கிடைத்தன. சீவகசிந்தாமணி என்ற சமண சமய இலக்கியத்தை இருபது இடங்களிலிருந்து கிடைத்த பல பிரதிகளை ஒப்பிட்டு அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார்.

அந்த நாட்களில் பெரிய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட தகுந்த அச்சகங்கள் சென்னையில்தான் இருந்தன.ஆகையால் புத்தகம் அச்சாகும் வேலையை கவனிக்கவும் புருப்  படித்து திருத்தி கொடுக்கவும் ஐயர் அடிக்கடி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டியதாயிற்று. சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட பல தமிழன்பர்களின் உதவியை நாடினார். சில பேரிடமிருந்து மட்டுமே உதவி கிடைத்தது. ஒரு கட்டத்தில் அச்சாகி பிரஸ்ஸில் இருந்த புத்தகத்தை எடுக்கவேண்டியிருந்தது. அச்சகத்துக்கு அச்சுக்கூலி கொடுக்க சாமிநாத அய்யரிடம் பணம் இல்லை. இதுபோன்ற நேரங்களில் அவர் கடன் வாங்கி சமாளிப்பது வழக்கம். ஏற்கனவே கடன் சுமை அதிகமாகிவிட்டது.. அச்சுக்கூலியைக்கொடுத்து புத்தகத்தை எடுத்து வெளியிட அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தனக்கு  பாண்டித்துரை தேவர் கௌரவிக்கும் வகையில் போர்த்திய பொன்னாடை பற்றிய நினைவு வந்தது.

விலை உயர்ந்த பொன்னாடை அது. அந்த பொன்னாடையை எடுத்துக்கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த சுப்ரமணிய தேசிகரிடம் காட்டி இது என்ன விலைக்கு போகும் என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்த தேசிகர் ஏன் இதை விற்கப் போகிறீர்களா?இது தேவர் போர்த்திய பொன்னாடை அல்லவா என்று கேட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை அச்சகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று ஐயர் கூறினார். நீங்கள் இதை விற்ற செய்தி தேவருக்கு தெரிந்தால் அவர் மிகுந்த வேதனை படுவார்  என்று கூறினார் ஆதீனகர்த்தா. அந்த பொன்னாடையை விற்கவிடாமல் தடுத்து ஆதீனகர்த்தா தானே வாங்கி வைத்துக் கொண்டார். தற்காலிகமாக அய்யருக்கு பண உதவி செய்து நூல் வெளியிட ஏற்பாடு  செய்தார்.

இப்படி பல சோதனைகளுக்குமிடையே தான் அய்யர் தமிழ் நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்த பழந்தமிழ் நூல்களை அச்சில் ஏற்றி புத்தகமாக வெளிக்கொணர்ந்தார்,. .மிகப்பிற்காலத்தில்தான் சாமிநாதய்யருடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.

வெளிநாட்டில் வாழ்ந்த சில தமிழறிஞர்கள் அய்யரின் அரிய பணியை பாராட்டினார்கள். ஜூலியஸ் வின்சோன் என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஐயர்  பதிப்பித்த நூல்களைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ஜி..யு. போப் அவர்களும் அய்யரைத் தொடர்பு கொண்டு பாராட்டு கடிதம் எழுதினார்.

சாமிநாதய்யருடைய பணியின் சிறப்பையும் அந்த பணியை நிறைவேற்றுவதில் அவர் சந்தித்த சோதனைகளையும் பற்றி பாரதியார் நன்கு அறிந்திருந்தார். அய்யருடைய தமிழ்ப்பணியின் பெருமையை வெள்ளையர் அரசாங்கம் உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டமும் மற்ற சில விருதுகளும் வழங்கியது. ஆனால் அவர் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்ததையும் பாரதியார் அறிந்திருந்தார். சாமிநாதய்யருடைய பெருமையை பாரதியார் இப்படி பாடினார்.

சாமிநாதய்யருடைய புகழ் வளர்ந்ததில் அதிசயம் ஏதும் இல்லை. சூரியனுக்கு ஒளிஇருப்பது அதன் இயற்கை. தேவர்கள் அமரத்வம் பெற்றது இயல்பானதுதான், இதில் அதிசயப்பட எதுவும்.இல்லை. அதுபோலவே சாமிநாதய்யருக்கு புகழ் வளர்வதும் இயல்பானதுதான் என்று பாரதியார் பாடினார். தமிழறியாத அன்னியரான வெள்ளையரே இப்படி ஐயரை புகழ்ந்தார்கள் என்றால் சங்கம் வைத்து தமிழ்  வளர்த்த பாண்டிய மன்னர் காலத்தில் ஐயர் வாழ்ந்திருந்தால் அவருடைய பெருமை எப்படி இருந்திருக்கும் என்று பாரதி கேட்கிறார்.

மேலும் ஐயருக்கு ஆறுதல் கூறுவதுபோல அடுத்த கவிதையில் கூறுகிறார். பணம் இல்லையே, பலவகை சுகங்களை அனுபவிக்கும் இனிய வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை வேண்டாம் ஐயரே. உங்களுக்கு ஒரு பெருமை உண்டு. பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் கொடுத்த தமிழ் மொழி உள்ளவரை புலவர்கள் வாய் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இறப்பு என்பதே இல்லை.என்று பாரதியார் பாடுகிறார். இப்பொழுது பாரதியார் பாட்டை பார்ப்போம்.

 நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே.

                                                                            - மு.கோபாலகிருஷ்ணன்
(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

Friday, November 06, 2009

எங்கள் ஊரில் தீபாவளி

பட்டாசு வெடிக்காத குறை தான், தமிழ் சங்கம் அசத்தி விட்டது. சங்கத்தின் முதல்வரின் முன்னுரை ஒரு கலைஞரின் முன்னுரை போல் இருந்தது. குறள் சொல்லிய குழந்தைகள், பாரதி பாடிய பாப்பா, தீபாவளி பற்றி சொன்ன இளம் சிறார்கள், இவை தான் சிறுவர் பங்கு என்றால் மிகை ஆகாது.

மேடையில் குறள் சொல்லும் குழந்தையை பார்த்து, பார்வையாளர்களை தங்கள் பிள்ளைகளை அவசரமாக ஒரு குறள் சொல்லி கொடுக்கும் நிலையையும் கண்டோம். இதனை பெற்றோர்களின் பேரார்வம் என்பதா அல்லது தமிழ் பற்று என்பதா ?இது அல்லவோ புரட்சி. தமிழ் சங்கத்தின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

இதனையும் மீறி மேடையில் மாறி, மாறி கையை ஆட்டி, கண்களில் கண்ணீர் மாரியுடன், " சூ சூ மாரி " என்று ஒரு இரயில் ஒட்டிய லதாவும், குழந்தைகளும் பார்த்த அனைவரும் தங்கள் கண்களின் ஆனந்த கண்ணீருடன் இருந்தனர் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

மூன்று இளம் அறிவிப்பாளர்களின் தமிழ் மிக்க அருமை. அவர்களின் உச்சரிப்பு மற்றும் பாராட்டுகளின் ஏற்ற இறக்கங்கள் மிதவும் நேர்த்தி அக இருந்தது. ஆங்கிலத்தில் எழுதி வாசித்தனர் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டர்கள். அதிலும் ஸ்வேதாவின் தமிழ் தாய் வாழ்த்து மிக்க அருமை. பிரசு என்று சொல்லி அதனை பரிசு என்று திருத்தியது மட்டும் அல்லாமல், மன்னிக்க வேண்டும் என்று கேட்ட அங்கிதாவின் தமிழ் மரபினை பாராட்டியே ஆக வேண்டும்.

சலாம் பாபுவும், முரட்டு காளையும் எல்லோரையும் ஆட வைத்து விட்டது.
மு. கோபால் அய்யா பாரதிக்கும், அவ்வைக்கும் ஒரு பாலமே கட்டி விட்டார். மிக அருமை மற்றும் புதுமை. நடராஜ மூர்த்தியும் கம்பனை கண் முன் நிறுத்தி விட்டார் என்றால் மிகை ஆகாதது.

மிக்க அருமையான கொண்டாட்டம். லக்ஷ்மியின் தனி ஆவர்த்தனுமும், செயலர் ஜெயகாந்தனின் நன்றி அறிவுப்பும் மிக எளிமையாக இருந்தது.
இவ்வளவு அருமைகள் இருந்தும், உங்களின் தமிழ் வகுப்பு ஆசிரியர்களை அறிமுகபடுத்த வில்லை என்ற குறை ஒன்றும் இருந்தது.

Sunday, September 20, 2009

கோவிந்தா கோவிந்தா

பாரதியார் ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்தி வந்த இந்தியா பத்திரிகையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1908 -ம் ஆண்டு தடை செய்தது. பாரதியாரை கைது செய்யவும் உத்திரவு போட்டது. கைது உத்தரவு பற்றி முன் கூட்டியே அறிந்த பாரதியார் தலைமறைவாக பாண்டிச்சேரிக்கு போய்ச் சேர்ந்தார்.

பிரெஞ்சு நிர்வாகத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தங்கி கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதும் நோக்கத்துடன்தான் அங்கே போய் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்த படி பல பத்திரிகைகளை எழுதினார்.அவர் எழுதிய கட்டுரைகள் பாண்டிச்சேரியில் அச்சடித்து பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்கு கடத்தி வர பட்டு விநியோகிக்க பட்டது.

1918 -ம ஆண்டு வரை பத்து ஆண்டுகள் பாரதி பாண்டிச்சேரியில்தான் வாழ்ந்தார். அங்கே வாசம் செய்த காலத்தில்தான் பாரதியார் பாஞ்சாலி சபதத்தை எழுதினார். பல இலக்கிய விமர்சகர்கள் பாஞ்சாலி சபதத்தை பாரதியின் படைப்புகளிலேயே உன்னதமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர். வ.வே.சு ஐயர் பாஞ்சாலி சபதத்தை "அக்ஷர லக்ஷம்" பெறும் என்று கூறி பாராட்டி இருக்கிறார். இப்படி எல்லோராலும் பாராட்ட பட்ட பாஞ்சாலி சபதத்தை பாரதி என்ன நோக்கத்தில் எழுதினார்?? பாரதியாரை பாஞ்சாலி சபதம் எழுத வைத்த அந்த ரசமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.

பாண்டிச்சேரியில் பாரதியாருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். அரவிந்தருடனும் பாரதிதாசனுடனும் தொடர்பு கிடைத்தது அந்த நாட்களில்தான்.

பல நண்பர்களுடன் கூடி ரசமான இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. பாரதியார் மிகச்சிறந்த முறையில் விவாதிக்கும் திறன் கொண்டவர். நகைச்சுவையாக பேசி தன் கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம். போலித்தனத்தையும் மூடநம்பிக்கையையும் கேலியும் கிண்டலும் செய்து குபீர் சிரிப்பு வரவழைப்பார்.

ஒரு நாள் இரவு வேளையில் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு போனார்.அன்று ஏதோ விசேஷமான நாள். அதை ஒட்டி நண்பர் வீட்டு அருகில் தெருவில் உபந்நியாசம் ஏற்பாடு ஆகி இருந்தது. மகாபாரத கதையின் ஒரு பகுதியை ஒருவர் பிரசங்கம் செய்து விளக்கி கொண்டு இருந்தார்.

பாரதி தேடி போன நண்பர் வீட்டில் இல்லை. ஆகையால், பாரதியார் நண்பர் வீட்டு அருகில் நின்று கொண்டு கதை பிரசங்கத்தை கேட்டு கொண்டிருந்தார். பிரசங்கம் செய்து கொண்டிருந்தவர் பேச்சில் சத்தும் இல்லை சாரமும் இல்லை. இடையில் சொல்லுக்கும் தடுமாறினார். சொல்ல வந்த பொருளையும் தேடி தேடி சொன்னதால் பேச்சு தடைப் பட்டது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கூட்டத்தில் இருந்தவர்கள் கதை கேட்டு கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் பலர் தூங்கி கொண்டிருந்தார்கள். விசேஷ நாட்களில் புராணம் சொல்வதை கேட்டால் போகும் இடத்துக்கு புண்ணியம். அதை தூங்கி கொண்டு கேட்டால் என்ன? விழித்துக்கொண்டு கேட்டால் என்ன ?

சொல்ல வந்த விஷயம் நினைவுக்கு வராதபோது அதை சமாளிக்க பிரசங்கி " கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா " என்று குரல் கொடுத்தார்.

அவருடைய ஓங்கிய குரலை கேட்டு தூங்கி கொண்டிருந்தவர்களும் விழித்துக் கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்று குரல் கொடுத்தார்கள். இப்படியாக தூங்கி கொண்டிருந்தவர்களை விழிக்க செய்ய கோவிந்தன் பெயர் பயன் பட்டது .

இந்த காட்சியை தொடர்ந்து அரை மணி நேரம் பார்த்து கொண்டிருந்தார் பாரதியார். அவருக்கு மனதில் பெரும் வேதனை. வீர காவியமான மகாபாரதத்தை பொழுது போக்கவும் புண்ணியம் தேட குறுக்கு வழியாகவும் எண்ணிய மக்களைப் பற்றி நினைத்து வேதனை பட்டார். அரைகுறையாக படித்து விட்டு கதை சொல்லி பிழைப்பு நடத்தும் பிரசங்கியை நினைத்து வருந்தினார். பக்தி என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்பதை ஒருபோதும் பாரதியார் ஏற்று கொண்டதில்லை.

பாரதியின் நண்பர் வீட்டு வேலைக்காரன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய பெயர் கோவிந்தன். பாரதியார் அவனை அழைத்தார். அவனிடம் சொன்னார்: அந்த ஐயர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இடையில் கோவிந்தா கோவிந்தா என்பார். அப்படி அவர் சொன்னவுடன் அவரிடம் ஓடி போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்று கேள் என்றார்.

வேலைக்காரன் தயங்கினான். பாரதியார் அவனை வற்ப்புறுத்தி தைரியமாக போய் நான் சொன்னபடி செய் என்றார். வேலைக்காரன் கோவிந்தனும் பிரசங்கி அருகில் போய் நின்றான்.

சில நிமிடங்கள் கழித்து பிரசங்கி வழக்கம் போல் "கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா" என்றார். வேலைக்காரன் கோவிந்தன் அவர் அருகில் போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்றான்.

பாகவதர் திகைத்து போனார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் விஷயம் அறிந்து சிரித்தார்கள். இப்பொழுதுதான் எல்லோருடைய தூக்கமும் முழுமையாக கலைந்தது.

சற்று தூரத்தில் நண்பர் வீட்டு வாசலில் நின்றபடியே அந்த காட்சியை பாரதியார் ரசித்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய உள்மனதில் ஒரு வேதனை இருந்தது. அந்த வேதனை அவருக்கு பல நாள் தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரகாவியத்தின் உண்மை பொருளை உணர்த்தும் நோக்கத்தோடும், காவியம் சொல்லும் நீதிகளை சமகாலத்துக்கு பொருத்தமான முறையில் சொல்லும் நோக்கத்தோடும்தான் பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதினார்.

மு. கோபாலகிருஷ்ணன்