Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Friday, September 18, 2015

பாரதியின் நினைவு நாளில்



          
இன்று செப்டெம்பர் 11 ம் நாள் மகாகவி பாரதியின் நினைவு நாள். இது போன்ற நாட்களில் நான் பாரதியைப் பற்றி ஏதாவது எழுதுவதும், படிப்பதும் வழக்கம். இப்பொழுதெல்லாம் இந்த நாளில் எட்டயபுரத்துக்கு போவதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது உடல் நலமும் சொந்த பிரச்னைகளும் இடம் கொடுக்காததே முக்கிய காரணம்.
 
     திடீரென்று ஒரு நினைவு இன்று பாரதி உயிரோடு இருந்தால்  எப்படி இருக்கும்? வெறும் கற்பனைதான். இருந்தாலும் அப்படி கற்பனை செய்வதில் தவறில்லையே?

   பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரைப் பற்றி பேச திருவள்ளுவர் திரும்பி வந்தால் என்று கற்பனை தலைப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ  பேசுகிறார்கள்., எழுதுகிறார்கள்.
 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பாரதி பற்றி அப்படி தலைப்பைப் போட்டு பேசலாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    அந்த எண்ணத்தில் தான் யோசனை செய்யத் தொடங்கினேன் கற்பனையை ஓடவிட்டேன்.திடீரென்று எனக்கு ஒரு பயம். இனம் தெரியாத பீதி என்று கூட சொல்லலாம் பாரதி இன்று உயிரோடு இருந்தால் மூன்று துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருப்பார் என்று தோன்றியது அலறிஅடித்துக் கொண்டு எழுந்திருந்தேன் நானே என்னை நிதானப்படுத்திக்கொண்டேன்.

  நல்ல வேளை வயதான காலத்தில் நடு ரோட்டில் குண்டடி பட்டு   சாவதைவிட 40 வயதில் நோய் வந்து இறந்து போனது நல்லது என்று  எனக்குப்பட்டது. நான் ஏன் அப்படி நினைத்து பயப்படுகிறேனென்று உங்களுக்கு குழப்பமும் சந்தேகமும் வரலாம். கடந்த ஒரு சில  ஆண்டுகளாக இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்கள் தான் இந்த பயத்துக்குக் காரணம். பாரதி வாழ்ந்த காலத்தில் பல புரட்சிகரமான கருத்துகளை துணீந்து கூறினான் எழுதினான். அதற்காக அந்நிய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி பல துன்பங்களை ஏற்றான் ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடவில்லை அவனுடைய பத்திரிகை தடை செய்யப்பட்டபோது பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்குப் போய் தன் தேச பக்தக் கடமையைத் தொடங்கினான் ஒரே விநாயகர் உருவில் அல்லா உள்ளிட்ட எல்லா கடவுளையும் பார்ப்பதாகக் கவிதை பாடி சமய நல்லிணக்கம் பேசினான்.
 
விரிவாக எழுத நேரமில்லை அனைவரும் அறிந்த இந்த செய்திகளை சுருக்கமாகச் சொல்லியாக வேண்டியிருக்கிறது இதே கருத்துக்களை இன்றைய காலத்தின் தேவக்கேற்ப எழுதும் எழுத்தாளர்களும் அறிஞர்களும் இன்று படும் பாட்டைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது சிறிய பட்டியல் கொடுக்கிறேன் .என் பயத்துக்குக் காரணமிருப்பதாக  நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

   M.M.பஷீர் என்ற மலையாள எழுத்தாளர் மாத்ருபூமி பத்திரிகையில்  எழுத்தச்சனுடைய ராமயணம் பற்றி பத்து கட்டுரைகள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார் அவர் நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் மூன்று கட்டுரைகள் வெளியான நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் தபால் மூலமாகவும் பிறகு போன் மூலமாகவும் வரத் தொடங்கியது உடனே கட்டுரை எழுதுவதை நிறுத்தும்படி உத்திரவு வந்தது. எழுத்தாளர் இலக்கியத்தை விட உயிர் பெரியதென்று தீர்மானித்து மூட்டை கட்டிவிட்டார் இத்தனைக்கும் அவர் ராமாயணத்தைப் பற்றி உயர்வாகத் தான் எழுதினார் என்பதுதான் முக்கியமான செய்தி இவன் யார் ராமாயணத்தைப் பற்றி எழுத என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்?.

 பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மாதொருபாகன் என்ற நாவல் எழுதினார். திருச்செங்கோடு பகுதியில் ஒருசில மக்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல். அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவருடைய மனைவியும் ஆசிரியராகப் பணி செய்கிறார். அந்த நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து சிலர் கலகத்தை தூண்டிவிட்டு ஒரு குறிப்பிட்ட சாதியை குறி வைத்து அந்த நாவலில் அவமானப்படுத்தியிருக்கிறார் என்று போராடத் தொடங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரும் அந்த சாதியச் சேர்ந்தவர்தான் அவர் என்ன விளக்கம் கொடுத்தும் பயனில்லை. எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் யாரும் இலக்கிய ரசனை இல்லாதவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. பொது அமைதி கெடும் என்ற பெயரில் ரெவின்யு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் எழுத்தாளர் மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்கள். பெருமாள் முருகன் இனி எந்த கதையும் எழுத மாட்டேன் எந்த இலக்கியப் படைப்பிலும் ஈடுபடமாட்டேன் என்று சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு திருச்செங்கோட்டை விட்டு வெளியூர் சென்றுவிட்டார் அவரை தோப்புக் கரணம் போடச் சொல்லாதது ஒன்றுதான் பாக்கி.அவர் இதுவரை எழுதி வெளியாகி புத்தகச் சந்தையில் விற்பனையில் இருக்கும் எல்லா நூல்களையும்  திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். ஆக  இன்று எந்த நாவலை .,எந்த சிறுகதையை யார் எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை காவல் துறையினரும் மற்ற துறை உயர் அதிகாரிகளும் தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.
 
யு.ஆர். ஆனந்தமூர்த்தி என்ற கன்னட எழுத்தாளர் 2014 ஆகஸ்ட் மாதம் இறந்தார். அவர் புகழ் மிக்க கன்னட எழுத்தாளர். ஞானபீட விருது பெற்ற ஐந்து கன்னட மொழி அறிஞர்களில் அவரும் ஒருவர் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டவர் அவர் சமய நல்லிணக்கம் பற்றியும் மதவெறியில் நடை பெறும் கலகங்கள் பற்றியும் தீவிரக் கருத்துகளை பல சமயங்களில் வெளியிட்டிருக்கிறார் அவர் கருத்துககளில் அதிருப்தி கொண்டவர்கள் ஒன்று கூடி அவர் இறந்த தினத்தன்று அவருடைய வீட்டு முன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். வீட்டினுள் சவம் கிடக்கும் போது வெளியே மரணத்தைக் கொண்டாடும் காட்டுமிராண்டித் தனத்தை நான் முன்பு ஒரு முறை கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு முறை நேரிலும் பார்த்து அதன் விளைவுகளால் மற்றவர்கள் பட்ட பாட்டையும்  நான் கண்டிருக்கிறேன்.

இதெல்லாம் பரவாயில்லை என்றுதான் தோன்றும் வெறும் மிரட்டல்தான். கொலை மிரட்டல் அடிதடி மிரட்டல் செயல்படாமல் முடங்க வைத்து மன உளச்சல் கொடுத்து தன்னுடைய மிருக பலம் வெற்றி பெற்றதாக எண்ணி ஒரு எக்காளம். இறந்தபோனவர் பிணத்தின் பக்கத்தில் கொக்கரிப்பு .இதெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல .மிக மிக அற்ப விஷயங்கள் இனி வருவதுதான் முக்கியம்      
பூனே நகரத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபோல்கர் என்ற ஒரு அறிஞர் நடுரோட்டில் பட்டபகலில் இரண்டு இளஞர்களால் கொலை செய்யப்பட்டார். அவர் ஒரு பகுத்தறிவுவாதி நாத்திகவாதி. மூடநம்பிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். பில்லி, சூன்யம் நரபலி போன்ற மூட நம்பிக்கை பூஜைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார் மகாராஷ்டிர மாநிலத்தில் சென்ற சில ஆண்டுகளில் நரபலி என்று சந்தேகத்தைத் தூண்டும் பல கொலைகள் விசாரனையில் இருக்கின்றன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஒர் ஆண்டுக்கு மேல் ஆகியும் தாபோல்கர் கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

  ஏறக்குறைய அதே முறையில் பூனே நகரத்துக்கு அருகில் கோலாப்பூர் நகரத்தில் கோவிந்தபன்சாரே என்பவர் கொலை செய்யப்பட்டார். காலை வேளையில் மனைவியுடன் சாலையில் நடந்து சென்ற அவரையும் அவர் மனைவியையும் மிக அருகில் பைக்கில் வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.மனைவி மட்டும் தப்பினார்  இறந்தவருடைய வயது எண்பது. அவர் நாத்தீகர் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியச் சேர்ந்த தொழிற்சங்கவாதி வழக்கறிஞர் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்..பல பொது அமைப்புகளில் பங்குகொண்டு செயல்பட்டவர். சிவாஜி பற்றி அவர் எழுதியுள்ள நூல் ஏழு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது  செய்யப்படவில்லை. காவல்துறை நினைத்தால்தான் குற்றாவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும். சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது நடத்தப்பட்ட கடையடைப்பைப் பற்றி தன் கருத்தை  டிவிட்டரில் வெளியிட்ட ஒரு பெண் அடுத்த 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டாள்.  மூன்று நாள் காவலில் அந்த பெண் படாதபாடு பட்டாள் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் காவல்துறை அப்பொழுது மின்னல் வேகத்தில் செயல்பட்டு  கைது செய்த உண்மையும் அந்த பெண்களுடைய ஜாமீனுக்கு வாதாட வழக்கறிஞர்கள் தயங்கினார்கள் என்பதெல்லாம் பழைய செய்தி பரபப்பான மொம்பை நகரமே அதையெல்லாம் மறந்து போயிருக்கும்.
 
  சென்ற ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடகாவில் தார்வார் நகரத்தில் கன்னட அறிஞர் எம்.எம்.கல்பர்கி அவருடைய வீட்டில் காலை  8 மணிக்குக் கொலை செய்யப்பட்டார் .அதே மூன்று துப்பாக்கிக் குண்டுகள் அதே இரண்டு இளைஞர்கள் .அதே மோட்டார் பைக். அதாவது மூன்று கொலையும் ஒரே முறையில் நிகழ்த்தப்பட்டது. முன்னது இரண்டும் தெருவில். கல்பர்கி மட்டும் வீட்டில் கொல்லப்பட்டார் இதுதான் வித்தியாசம். எம்..எம்.கல்பர்கி எனற எழுபத்தெட்டு வயது கன்னட மொழி அறிஞர் கன்னட மொழி இலக்கியத் துறையில் பணீயாற்றியவர் கல்வெட்டு ஆய்வாளர்.40க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர் பலகலைக் கழகத் துணை வேந்தராகப்  பணி செய்தவர் இவர நாத்திகர் அல்ல வீரசைவ சமயத்தைச சேர்ந்தவர். சமய சீர்திருத்தவாதி. உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர். இது தொடர்பாக அவ்வப்பொழுது தீவிரமான கருத்துக்களை பேசிவந்தார் பல  பத்திரிகைகளில் எழுதிவந்தார்.
 
ஏதாவது ஒரு வகையில் நிறுவனமயப்பட்ட மதங்களுக்கு எதிராகப் பேசியவர்களும் எழுதியவர்களும் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யப்படுவது சென்ற சில ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது
கொலை செய்யப்படுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் மதத் துரோகி. களைந்தெறியப்பட வேண்டியவர் இதுதான் இன்றைய நிலைமை. இத் தேசத்தை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்? பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 
 கல்பர்கி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு ஒருவர்
கல்பர்கி தொலைந்தான், அடுத்த குறி கே.எஸ்.பகவான் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அவர் கைது செய்யப்பட்டார் அடுத்த அரை மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார் (கே எஸ் பகவான்  என்பவர் கல்பர்கியின் ஆதரவாளர் எழுத்தாளர் )

இந்த நாட்டில் யாருக்கு ஜாமீன் கொடுக்கலாம் எதற்கு ஜாமீன் கொடுக்கலாம் என்பதற்கு என்ன சட்டம் இருக்கிறது அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது பற்றிபேசினால் குழப்பம் தான்மிஞ்சும்.  சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பன் கூட ஒரு முறை எளிதாக ஜாமீன்பெற்று வெளியே போனான் அதற்குப் பிறகு பிணமாகத் தான் கிடைத்தான் ஒரு வேளை உயிரோடு பிடித்திருந்தால் அவனுக்கும் ஜாமீன் கொடுத்திருப்பார்கள். ஆறு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சல்மான்கான் இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளி வர முடியும்.. அங்ககீனமானமாகி இரண்டு ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் மட்டும் நகர்ந்து வரும் அளவுக்கு பலவீனப்பட்டுப் போன கல்லூரிப் பேராசிரியருக்கு இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் கிடையாது ஏனென்றால் அவர் ஒரு நக்ஸல்பாரி  ஆதரவாளர். வெளியே விட்டால் அவர் இந்த அரசாஙகத்தைக் கவிழ்த்துவிடுவார்.

 இந்த நிலையில் பாரதியார் பற்றிய என்னுடைய பயத்தில் நியாயம் இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் சுதந்திரம் வாங்கிய ஆறு மாத காலத்தில் காந்தியையே  கணக்குத் தீர்த்து அனுப்பி வைத்த பெருமை இந்த நாட்டுக்கு உண்டு.
                                                           -மு.கோபாலகிருஷ்ணன்.