Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Thursday, April 19, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 5




அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா



இப்ப‌டிப் ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் பிர‌ச‌விக்க‌, ச‌மூக‌த்தின் மீது எவ்வ‌ள‌வு கூர்ந்த நோக்கும் அக்கறையும் இருக்க வேண்டும். சமூக நிலை, சொல்லாட‌ல், மொழித்திற‌ன், ஆளுமை எனக் க‌ல‌ந்து க‌ட்டிய‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

...

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு

...

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

(திரைப்படம்: பதிபக்தி, 1958)

மேலே, 'கவைக்குதவாத வெறும் பேச்சு' என்ற வரிகளில் சில நேரம் பயணித்தேன். அதென்னது 'கவை', எழுத்துப் பிழையாக இருக்கலாம் எனத் தேடியதில், 'கதை' என்றும், 'சபை' என்றும் பலர் பலவிதமாகத் தங்கள் தளங்களில் பதிந்துள்ளார்கள். எல்லா வரிகளும் 'க'வில் இருக்க 'சபை' சரியானதாக இருக்க முடியாது. ஆனால், 'க'வில் ஆரம்பிப்பதால், 'கதை' ஒத்துப்போகிறது. இருப்பினும் அதுவும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சமூகத்தின் அவலத்தைப் பாடுகையில், அவன் எங்கே 'கதை' கேட்டுக் கொண்டிருக்க முடியும். 'கவை' கொண்டு ஏதாவது அடிப்பானானால், உணவுக்கு வழி கிடைக்கலாம் அவனுக்கு.

வாழ்வின் மித‌வேகப் பயணத்தின் ஆரம்ப கால மாட்டு வண்டியிலிருந்து மாறி, கைவண்டி ரிச்சாவுக்கு மாறியிருந்தது காலம். யாரெல்லாம் இந்த வண்டியில் பயணிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறது உலகம், என்றெல்லாம் சொல்லி, மாட்டை மாற்றி, மனிதனாக மாறி, சக மனிதனைச் சுமந்து, வண்டி இழுத்து, ஊரெல்லாம் சுற்றினாலும், தன் வாழ்வு சாலையின் ஓரமாகக் கிடக்கிறதென்று சொல்லும் வரிகள் உண்மையிலே சுடுகின்றது இன்றும்!

***

ஏதோ ஒரு ந‌ம்பிக்கையின் பேரில் வ‌ந்தாலும், ப‌ல‌ரும் தாயத்தைப் எப்ப‌டிப் பார்க்கின்ற‌ன‌ர் என்று க‌விஞ‌ரின் எண்ண‌த்தில் உதித்த‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள். உட்கார்ந்த‌ இட‌த்தில் இருந்து சாதிக்க‌ முடியுமா என்ற‌ நோக்கில் தான் ம‌னித‌னின் சிந்த‌னை இருந்திருக்கிற‌து/இருக்கிற‌து. போகிற போக்கில், க‌டைத்தேங்காயை எடுத்து வ‌ழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அப்ப‌டியே போய்க்கிட்டே இருக்கிறோம். இந்த‌ப் பாட‌லில், மனித எண்ணங்களான இரண்டு கேள்விகளுக்கு என்ன‌ அற்புதமாகப் ப‌தில் த‌ருகிறார் க‌விஞ‌ர்.

ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து ...

ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து ...


(திரைப்படம்: மகாதேவி, 1957)

***

'ஒன்னிலிருந்து இருப‌து வ‌ரைக்கும் கொண்டாட்ட‌ம், கொண்டாட்டம்' என்ற என்.எஸ்.கே அவ‌ர்க‌ளின் பிர‌ப‌லான‌ பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிறது, ப‌ட்டுக்கோட்டையாரின் கீழ்வ‌ரும் பாட‌லைப் ப‌டிக்கையிலே. அன்றைய‌ சூழ‌லுக்கு முற்றிலும் ஒத்துப் போயிருந்தாலும், இன்று இவ்வ‌ரிக‌ள் பொருத்த‌மாக‌ இருக்க‌ முடியுமா ? யாரு கிட்ட‌ காசு இல்ல‌ இன்று ?!

க‌ருத்து அதுவ‌ன்று ! அன்று, வ‌ரவும் செலவும் சில பல ரூபாய்கள். இன்று, வ‌ர‌வும் செல‌வும் ப‌ல‌ ல‌ட்ச‌ ரூபாய்க‌ள். இது தானே வித்தியாசம்! ஒருவ‌ர் ச‌ம்பாதிக்கும் வீடுக‌ளில் இது தான் இன்றைய‌ நிலை. இதில் 'ஏழை' என‌ வ‌ரும் இட‌ங்க‌ளில் 'ப‌ண‌க்கார‌ ஏழை' என்றும், 'க‌ட‌ன்கார‌ன்' என்கிற‌ இட‌ங்க‌ளில் 'வ‌ரி, வீட்டுக் க‌ட‌ன், வாக‌ன‌க் க‌ட‌ன், மின்சார‌ம், பாலு, சோறு, த‌ண்ணீ, லொட்டு, லொசுக்கு...' என்று போட்டுக் கொள்வோம்.

கையில‌ வாங்கினேன் பையில‌ போட‌ல‌ காசு போன
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

சொட்டு சொட்ட வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகைய நகைகள் இருக்கு
மடியை பாத்த மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
என்னமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
வேலைய கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

(திரைப்படம்: இரும்புத் திரை, 1960)

எல்லாத்தையும் படைச்சு, என்னையும் படைச்சு, எல்லாத்துக்கும் ஏங்க வைக்கிறாயே என்ற பாட‌லின் இறுதி வ‌ரிக‌ள், பிறைகீற்றுப் புன்ன‌கை வ‌ர‌வ‌ழைக்கிற‌து.

***

'காயமே இது பொய்யடா' என்று க‌ண்ண‌தாச‌னும், அவ‌ருக்கு முன் சில சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்க‌, ந‌ம் க‌விஞ‌ரின் 'காய‌மே இது மெய்ய‌டா' என்ற‌ வ‌ரிக‌ள் சிந்த‌னையில் ஆழ்த்துகிற‌து ந‌ம்மை. விய‌ப்போடு தேடினால், இதைச் சில‌ சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்கிறார்க‌ள். திருமூல‌ர் திரும‌ந்திர‌த்தில், 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன். உட‌ம்பை வ‌ள‌ர்த்தேன், உயிர் வ‌ள‌ர்த்தேனே' என்றார். இங்கே 'காய‌ம்' என்ப‌து 'தேக‌ம்' அல்லது 'உடம்பு' என்று பொருள் கொள்ள வேண்டும்.

காய‌மே இது மெய்ய‌டா இதில்
க‌ண்ணும் க‌ருத்துமே வையடா
நோயும் நொடியும் வ‌ராம‌ல் காத்து
நுட்ப‌மாக‌ உய்ய‌டா !

ஆயுள் கால‌ம் ம‌னித‌ர்க‌ளுக்கு
அமைப்பிலே யொரு நூற‌டா
அரையும் குறையுமாய் போவ‌த‌வ‌ன‌வ‌ன்
அறிவும் செயலும் ஆம‌டா

மாய‌மெனும் குய‌வ‌ன் செய்த‌
ம‌ண்ணுபாண்ட‌ம் தான‌டா இது
ம‌த்தியில் உடையாத‌ப‌டி நீ
ம‌ருந்து மாயம் தின்ன‌டா

(திரைப்படம்: கற்புக்கரசி, 1957)

அதென்னது, மத்தியில் உடையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?! க‌விஞ‌ரே சொல்கிறார்...

வாய‌க்கெடுத்த‌து ப‌சிய‌டா
அந்த‌ப் ப‌சியைக் கொடுத்த‌து குட‌லடா !
இந்த‌க் குட‌லைச் சுத்த‌ம் செய்திடாவிடில்
உட‌லுக்கே சுக‌ம் ஏத‌டா ?

***

டூ மினிட்ஸ் நூடுல்ஸ், இன்ஸ்ட‌ன்ட் காஃபி, ஒன் லைன் ஃபேஸ்புக் அப்டேட், ஃப்யூ மினிட்ஸ் லஞ்ச், குயிக் நாப் என‌ எல்லாமே ட‌க் ட‌க் என்று வேக‌மா செஞ்சு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம். எல்லாம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா செய்யும் நிலையில் இன்றிருக்கின்றோம். ஆனால், கவிஞர் வேறொரு ஷார்ட்க‌ட் ப‌த்தி சொல்றாரு. ந‌ம்மைப் ப‌ற்றியே நாம் யோசித்துக் கொண்டிருக்க‌, ச‌மூக‌த்தைப் ப‌ற்றியே சிந்திக்கும் க‌விஞ‌ரின் க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

(திரைப்படம்: மகாதேவி, 1957)

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Wednesday, March 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 4, மற்றும் சில சிந்தனைகளும் ...



இத்தொடரை ஆரம்பிக்கும் போதே, அதிகமா வழவழாவென்று இழுக்காமல், சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஆரம்பித்தேன். இன்னும் ஓரிரண்டு பாகத்தில் முடித்திட வேண்டும் என்ற 'நல்லெண்ணத்துடன்', பாகம் நான்கை ஆரம்பித்தால், மனம் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டே இருக்கிறது ப‌ல‌ நினைவுக‌ளுக்கு இடையில்.

இரண்டு காரணங்கள். ஒன்று, பாகம் இரண்டில்
பித்தனின், பட்டுக்கோட்டையாரிடம் பாரதியின் தாக்கம் குறித்த பின்னூட்டம். இன்னுமொன்று, நம்ம ரிச்மண்ட் மாஜி பிரசிடென்ட் ஐயா நாகு அவர்கள் தந்த புராண‌ ஒலிப்பேழைகள்.

***

ஒருவன் தன் வாழ்நாளில் நல் அறங்களைச் செய்து வாழ‌ வேண்டும் என வெகுவாக உணர்த்திச் சென்றிருக்கிறார்கள் அக்காலப் புலவர்கள்.

ஔவை தன் மூதுரையில்:
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்தல்
முற்பவத்திற் செய்த வினை.


திருவள்ளுவர் தன் குறளில்:
அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.


பட்டினத்தார் தம் பாடலில்:
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!


பட்டினத்தடிகளின் மேற்கண்ட பாடல் வரிகளில் நமக்கொன்று புலனாகிறது. 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே !' எனப் புருவச்சுழிப்பில் ஆச்சரியப்படுகிறோம். உண்மை தான். இவ்வரிகளை கண்ணதாசன், தனது 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி'யில் பயன்படுத்தி பலரின் பாராட்டுக்கும் உள்ளானார். பட்டினத்தடிகள் பதிலையும் சொல்லிவிட்டார். கண்ணதாசன் கேள்வியைக் கேட்டு, பதிலை நம்மிடம் விட்டுவிட்டார் !

***

எல்லாம் தானாக, 'க‌ல்லைத்தான் ம‌ண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்க‌த்தான்' என்றார் இராமச்சந்திரக் கவிராயர். இவ்வரிகள் பின்னாளில் கவியரசரின், 'பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வர ...' என்று தேனாக வந்து பலரின் மனம் கவர்ந்திருக்கலாமோ!

உலக நீதியில், 'ம‌தியாதார் த‌லை வாச‌ல் மிதிக்க வேண்டாம்' என்று ஔவை சொன்ன அவ்வரிகளை அப்படியே பயன்படுத்தி, அதில் அர்த்த‌ம் உள்ள‌து என்று மேலும் அழுந்தச் சொன்னார் க‌ண்ண‌தாச‌ன்.

***

வாரியாரின் பிரசங்கம் ஒன்றில், அருணகிரியார் வில்லிபுத்தூராரைச் சந்திக்கும் இடம் பற்றி, இவ்வாறு விவரிக்கிறார்
வாரியார்.

வில்லிபுத்தூரார்: தாங்க‌ள் யார்?
அருணகிரியார்: ம‌னிதன்
வி: பிற‌ந்த‌ ஊர்?
அ:இந்த‌ உட‌ல் பிற‌ந்த‌து திருவ‌ண்ணாமலை
வி:ஓஹோ. த‌ங்க‌ள் பேர்?
அ:ஒரு பேரும் கிடையாது. குழ‌ந்தை பிற‌ந்த‌துனு சொன்னார்க‌ள். என் தாயார் என்னை அருண‌கிரி என்று அழைத்தாள். த‌ந்தையார் ம‌க‌னே என்றார். பாட்ட‌னார் பேர‌ப்பிள்ளை என்றார். த‌மைய‌னார் த‌ம்பி என்றார். த‌ம்பி பிற‌ந்து அண்ணா என்றான். ம‌னைவி வ‌ந்தா என்னாங்க‌ என்பாள். மாம‌னார் மாப்பிள்ள‌ என்பார். ம‌க‌ன் அப்பா என்பான். பேர‌ன் தாத்தா என்பான். வ‌ய‌சாச்சா என்றால் கிழ‌வா என்பார்க‌ள். உயிர்போச்சு என்றால் பிண‌ம் என்பார்க‌ள். சுட்டெரிச்சா சாம்ப‌ல். எத்தனையோ பேர்க‌ள் வ‌ந்து வ‌ந்து போகின்றன.

இந்தப் பேர் தாக்க‌த்திலேயே 'எந்த‌ ஊர் என்ற‌வ‌னே, இருந்த‌ ஊரைச் சொல்ல‌வா...' என‌ ஊர் பற்றி பாடியிருக்கலாம் கவியரசர்.

நான் அறிந்த கண்ணதாசன் பாடல்களில் சில‌ இங்கு உதாரணங்களாக‌............/; இவர் போன்றே பல கவிஞர்களும், பல இலக்கியப் பாடல்கலைக் கற்று, நம்போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் நிச்சயம் தந்திருப்பார்கள். க‌ண்ண‌தாச‌னுக்கு முன் சில‌ நூறு ஆண்டுக‌ள் முன் சென்றால்,

'அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை !' என்றார் வள்ளலார். வள்ளலாரின் இவ்வரிகளுக்கும் ஒருவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். பெரியபுராண சொற்பொழிவில் இதற்கு அருமையாக விளக்கம் அளிக்கிறார் கீரன். க‌ட‌வுளுக்கு உரு(வ‌ம்)த் த‌ர‌ எண்ணி அந்த‌ கால‌த்தில் பலவற்றையும் விவாதித்திருப்பார்கள் போல! பேதமில்லா உருவம் தர பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பின் மகிமையை போற்றி, அனைத்து சமயத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், இறைவன் ஜோதி வடிவானவன் எனச் சொன்னாராம் மாணிக்கவாசகர். இதையே, 'கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை' என்றார் அவர் தம் திருவாச‌க‌த்தில்.

இவ்வாறு ப‌ல‌ புக‌ழ் பெற்ற‌ புல‌வ‌ர்க‌ளுக்கும் முன்னோடிக‌ள் பலர் இருந்து, பல கருத்துக்களை எழுதியும், ஒரே க‌ருத்தைப் ப‌ல‌வாறு பல பேர் எழுதியும், இம்மானுட‌ம் திருந்த‌வில்லையே என்ப‌தைத் தான் ப‌ட்டுக்கோட்டையார் கோபம் கொண்டு கேட்டார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


ஏதோ கொஞ்ச‌ம் ப‌டித்த‌தனால் தான் இன்னும் மானுட‌ம் த‌ழைக்கிற‌தோ என்ன‌வோ ? புராண‌ங்க‌ளும், அற‌நெறிக‌ளும் இல்லாம‌ல் இருந்திருந்தால் இன்றைய‌ உல‌க‌ம் எவ்வாறு இருந்திருக்கும்? ச‌மீப‌த்தில் ஒரு ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு, த‌மிழ‌க‌த்தையே உலுக்கிய‌தை வெகு சாதார‌ண‌மாக‌ எடுத்துச் சென்றிருக்கும் !!!

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Tuesday, February 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 3 - காதல் ஸ்பெஷல்





பட்டுக்கோட்டையாரின் திருமணம்



மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?

பொதுவா பொதுவுடமைக் கருத்துக்களை எழுதுபவர்களால் காதல் கவிதைகள் படைக்க இயலாது. அப்படியே படைத்தாலும் அதிலும் ஏதாவது அறிவுரையும், ஆதங்கமும் வெளிப்படலாம். ஆனால், இவற்றிற்கு நேர்மாறாக, பொதுவுடமைக் கருத்துக்களின்பால் அதிகம் நாட்டம் கொண்ட நம் கவிஞர் இயற்றிய காதல் பாடல்கள், ஒவ்வொரு சாமான்யனின் மனதிலும் ஏறி அமர்ந்து கொள்ளும். இரு வரி உதாரணம் மேலே.

கடந்த இரண்டு பாகங்களில் பறந்த கனலைக் கொஞ்சம் தனல் தணித்து பட்டுக்கோட்டையாரின் 'காதல்' வரிகளை இந்தப் பாகத்தில் வாசிக்கலாம். நம்மளும் ஒரு பாட்டு, அதுவும் காதல் பாட்டு எழுதலாம் என அமர்ந்தால், விரல் அச்சுப் பலகையத் தட்டுதோ இல்லையோ, வெறும் காத்துத் தான் வருது ;) மானே, தேனே, மயிலே, ஒயிலே, கண்ணே, கருவிழியே எல்லாம் போட்டு பிரமாதமா ஒன்னு எழுதிடனும்னு ஒரு கமிட்மென்ட் இல்லாம, மனசு பாட்டுக்கு அது போக்குல போகுது :)

என்னதான் பயிற்சி எடுத்தாலும், சிலரை சில போட்டிகளில் விஞ்ச முடியாது. அதுவும் முக்கியமாகக் கலைத்துறையில். அன்றைய கவிஞர்கள் மனதில் தங்கும் கருத்துக்களை எழுதினார்கள். இன்றைய அநேக கவிஞர்கள் மனதைக் கெடுக்கும் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுதிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல, 'இது படத்துல வர்ற சிட்டுவேஷன், யாரையும் புண்படுத்தறதுக்கு இல்ல'னு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பட்டுக்கோட்டையார் இதில் முதல் வகை என்பது நாமெல்லாம் அறிந்ததே ! 'செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன் ?' என்று தன்னிலையைப் பாடியவர், அவரெல்லாம் எங்கே ரூம் போட்டு யோசித்திருப்பார். தான் கொண்ட கருத்தில் நேர்மை, எதிலும் எங்கும் சிறு வக்கிரம் தொனிக்காமல் காதல் வரிகள் படைத்த விதம், எளிமையாக இயற்கையோடு ஒன்றிக் காதலைச் சுமந்து வரும் பாடல்கள் என நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன் அவர். இது கவிஞரின் கேள்வி பதில் காதல்.

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

(திரைப்படம்: இரும்புத்திரை 1960)

இதுவரையிலும் பேசாத தென்றல் (காற்று) இன்று மட்டும் வந்து இன்பம் என்று சொல்வது ஏனோ ? ... என்னே ஒரு கற்பனை ! 'வெறும் காத்துத் தான் வருது' என்ற நகைச்சுவைக் காட்சி இங்கிருந்து தான் பிறந்திருக்குமோ ? மேற்கண்ட பாடலில் காதலி காதலனிடம் கேள்விகளால் துளைக்கிறாள். பொறுமையாக சூசகமாகப் பதிலுரைக்கிறான் காதலன். மரக்கிளையையும், கொடியையும் இணைத்துக் காதலி கேட்ட கேள்வியும், அதற்குக் காதலன் அளித்த பதிலும் அதி அற்புதம். இன்றைக்கு இது போல எங்காவது காதலர்களைக் காண முடியுமா? இதைப் பற்றி பதிவு பதிவா எழுதலாம் :) ஆனால், இதுவல்ல இடம்.

பொதுவாகக் காதலுக்குத் தூது போவது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். சக தோழமைகளை நம்பித் தூது அனுப்பி, கவிழ்ந்த காதல்கள் பற்றி ஏராளமான தமிழ் திரைப்படங்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் ;) மனிதனை நம்பினால் இதான் கதி. இது கவிஞருக்கு அன்றே தெரிந்திருக்கிறது :) அதான் அடுத்த பாடலில் வெண்ணிலாவைத் தூது அனுப்புகிறார்.

நான் பேதையாய் இருந்தேன், என் இதயத்தைத் திருடிவிட்டாள், அதை அவளிடம் இருந்து பறித்து என்னிடம் திருப்பிக் கொடு என்று வெண்ணிலாவை அழைக்கிறார் பட்டுக்கோட்டையார். அதுவும், சும்மா போய் கெஞ்சினால் தரமாட்டாள், பறித்து வந்து தந்துவிடு, பயம் கொள்ளத் தேவையில்லை, இது அவள் தந்த பாடம் என்று கூறும் அற்புத வரிகள். இது கவிஞரின் தூதுக் காதல்.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
...
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
(திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)


காதலியின் முகத்திற்கு ஒரு வர்ணனை எழுதச் சொன்னால், கண்ணாடி மாதிரி, பளிங்கு மாதிரி, இன்னும் அதீதக் கற்பனையில் தக்காளி மாதிரி என்றெல்லாம் தான் இன்று கவிஞர்கள் எழுதுகிறார்கள். ப‌ட்டுக்கோட்டையாரோ, முகத்தையே ஒப்பிடுகிறார்.

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
...
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
(திரைப்படம்: தங்கப் பதுமை 1959)

புற அழகைச் சுமந்து வந்த பாடலில், அக அழகையும் சொல்லி, எத்தனை சுகமானாலும் இருவருக்கும் பொதுவாக்கலாம் என காதலில் பொதுவுடமையைப் பாடியது மற்றவர்களில் இருந்து நம் கவிஞரை சற்றே தள்ளி நின்று வியக்க வைக்கிறது. இது கவிஞரின் பொதுவுடமைக் காதல்.

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
(திரைப்படம்: அமுதவல்லி 1959)
இயற்கையோடு இணைத்து கவிஞர் எழுதிய மேற்காணும் பாடல் வரிகளில் மயங்காதவர் உண்டோ. 'தேமதுரத் தமிழோசை' என்றான் பாரதி. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்பத் தமிழோசை வந்து நம் செவிகளில் பாயுமே ! இது கவிஞரின் அழகுக் காதல்.

அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ

களங்கமிலா என் மனதினிலே
கலையழகே உமதன்பாலே
இன்ப உதயம் ஆவது போலே
இதய உறவினினாலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
(திரைப்படம்: மஹேஸ்வரி 1955)

'அமைதியான இரவில் அல்லி மலர்ந்து ஆடுதே. காரணம் ஏதோ ?' என வினவுகிறாள் காதலி. இரவில் அல்லி மலர்வதற்கான காரணத்தை அன்பு உறவின் மூலம் அழுத்தமாக எடுத்துரைக்கும் இப்பாடல், கவிஞரின் இயற்கைக் காதல்

இப்பொழுதெல்லாம் காதலியர் என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்கள் எனச் சிந்தித்தால், அதாவது நம் இன்றைய கவிஞர்கள் என்ன எழுதுவார்கள் என்றால் ... சிறந்த ஒரு உதாரணம், நம்மை எல்லாம் துள்ளி ஆட்டம் போட வைத்த 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ? ... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? ...' பாடலின்றி வேறேது !

புற அக அழகை, இயற்கையை, பண்பை, நானத்தை, பொதுவுடமையைக் காதலில் எழுதிய நம் கவிஞர், துள்ளி ஆட்டம் போட வைக்கும் காதலையும் சொல்லியிருக்கிறார். தினம் நம் வீட்டில் இன்றும் நடக்கும் சின்னச் சின்ன ஏச்சுப் பேச்சுக்களை, கொஞ்சல்களை மையமாகக் கொண்ட காதல் வரிகள். இது கவிஞரின் கிராமியக் காதல்.

உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
...
உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
கண்ணு... என் கண்ணூ.......
உன்னாட்டம் புத்திசாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..
அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே...

(திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957 )
கிராமியக் காதலின் காணொளி


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Tuesday, January 31, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 2



சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


பளார்னு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது இவ்வரிகளைப் படித்தபோது !!! இன்றுவரை என்ன‌த்த‌ ப‌ண்ணிதான் கிழிச்சோம் நாமெல்லாம் !!! அர‌சிய‌ல்வாதியாக‌ட்டும், திரைத்துறையின‌ராக‌ட்டும், எத்தொழில் செய்ப‌வ‌ராக‌ட்டும், அட‌ சாதார‌ண‌ ச‌க‌ ம‌னித‌னாக‌ட்டும் ...

நல்வழி, மூதுரை, ராமாயணம், மகாபாரதம் இப்படி எண்ணற்ற இதிகாசங்களை வழிவழியாகப் படித்தோம், படித்துக் கொண்டு வருகிறோம். எல்லாம் படித்தும், இன்னும் சூதும் வாதும், ஏச்சும் பேச்சும் வளர்ந்து வந்திருக்கின்றனவே அன்றி குறைந்ததாய் தெரியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலக வாழ்வு ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணம். அரசியல்வாதிங்க எல்லாம் இவங்க மேசையில தூசு. மேலதிகார வர்க்கத்தின் அரவணைப்பிருந்தால் டீ பாய் கூட குறுகிய காலத்தில் பீப்பாய் ஆகிடலாம். 'சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட்'னு இதற்கு சால்ஜாப்பு வேறு. 'உண்மைக‌ளைப் ப‌டித்து வாழ‌முடியுமா ? என்ன‌ங்க‌ நீங்க‌ இன்னும் அந்த‌க் கால‌த்து ஆளு மாதிரி இருந்துகிட்டு (அதற்குள் நம‌க்கு 50 - 60 அக‌வை தந்த தமிழ்சங்க பிரசிடென்ட் ஐயாவுக்கு நன்றிகள் :)) 'ப‌டிச்சோமா, முடிச்சோமா, அடுத்து எவ‌ன‌டா க‌வுக்க‌லாம்னு பாப்பீங்க‌ளா, அத‌ விட்டுட்டு' என்று தான் இருக்கிற‌து இன்றைய‌ உல‌க‌ம். பட்டுக்கோட்டையார் அன்றைக்கு (அநேக‌மா 40 - 50 ஆண்டுக‌ளுக்கு முன்) எழுதிய மேற்கண்ட பாடலில் உலகம் இன்றும் துளியும் மாற‌வில்லை என்ப‌து எவ்வ‌ள‌வு நித‌ர்ச‌ன‌ம்.

வளர்ந்த(தாக நினைக்கும்) ஜென்மங்களிடம் சொல்லி என்ன‌ பிர‌யோஜ‌னம்? 'ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்பதிலா வ‌ளையும்?!' நாளைய உலகம் யாருடைய‌ கையில்? இன்றைய சிறுவர்கள் தானே நாளைய உலகினர். நாம் அடிப்பதும், திட்டுவதும், சாப்பிடாத பிள்ளையைப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதும் தானே செய்கிறோம். அல்லது இதற்கு நேர்மாறாக, எதுகேட்டாலும் வாங்கித் தந்து, செல்லம் கொடுத்து அவர்களைப் பிஞ்சிலேயே சிதைக்கிறோம். சிறுவர்களைப் பற்றி பட்டுக்கோட்டையாரின் சிந்தனையே வேறாக இருந்தது. எடுத்தார் பேனாவை, தெளித்தார் க‌ன‌லை.


சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!

(திரைப்படம் : அரசிளங்குமரி 1958)

ஒரே பாடலில், அறிவு, காலம், பொதுவுடைமை, மூட ந‌ம்பிக்கை என மிகத் தெளிவாகச் சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதி, 'மனிதனாக வாழ்' எனப் பிஞ்சிலேயே விதைத்தான் அன்றே.

பொதுவா ஒரு பாடல் பற்றி எழுத நினைத்தால், மிகச் சிறந்ததாக நாம் நினைக்கும் சில வரிகளை மட்டும் கோடிட்டு, போல்ட் ஃபான்ட் போட்டு காண்பிப்போம். மற்றொன்று படிக்கிறவருக்கு போரடிக்காம இருக்கணும் என்றும் எண்ணுவோம். அப்படி இப்பாடலில் சிலவரிகளை மட்டும் சிறப்பானது எனப் பிரித்து எடுக்க முடியவில்லை. மாறாக, இப்பாடல் வரிகள் முழுதுமே நம்மைச் சிந்திக்க வைக்கிறது, வைக்கும். ஒவ்வொரு வரியும் சாட்டையாடியாய் நம்மேல் விழும் வரிகள். இப்பாடலின் ஒருசில வரிகள் என் தனித் தளத்தில் (தாய்க் கட்சியில் இருந்து பிரிந்துவிடவில்லை என நாகுவுக்கு நினைவு'படுத்துகிறேன்') முதன்மை வாக்கியங்களாக போட்டுக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்.

'அவ‌ன‌ நிறுத்த‌ச் சொல்லு நான் நிறுத்த‌றேன்' என்ற‌ புக‌ழ் பெற்ற‌ ந‌கைச்சுவைக் காட்சி நாமெல்லாம் திரைவ‌ழி அறிந்த‌தே. எல்லாவ‌ற்றையும் கூர்ந்து நோக்கின், எல்லாம் எங்கேயோ இருந்தே எடுக்கப்படுகிறது. கீதையின் சாராம்சம் போல, 'நேற்று உன்னுடைய‌து இன்று என்னுடைய‌து' என்று ஆகிவிட்ட‌து. இதுவே, நாளை மற்றொருவ‌ருடைய‌து ஆக‌லாம். பட்டுக்கோட்டையாரின் கீழ்வரும் பாடலில் இருந்து கூட மேற்சொன்ன நகைச்சுவை காட்சி பிறந்திருக்கலாம். திருடுவ‌தும், திருடும் கூட்ட‌மும், அதனைத் தடுக்கப் பாடுபடும் ச‌ட்ட‌மும், முடிவில் திருட‌னாய் ஆகிவிடாதே, அதுவே திருட்டை ஒழிக்கும் ந‌ல்ல‌ செய‌ல் என்றும் சிறுபிள்ளைக்குப் புரியும் வ‌ண்ண‌ம் எளிய‌ த‌மிழில் நல்வழி த‌ந்த‌மை ப‌ட்டுக்கோட்டையாரின் வ‌ல்ல‌மை. அத‌னைப் புரிந்து அத‌ன்வ‌ழி ந‌ட‌க்காத‌து இன்றைய மனித குலத்தின் பேராசை அன்றி வேறேது ?!


திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)

ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப‌ட‌ம்), ப‌ல்லாயிர‌ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப‌ய‌ம்: 2ஜி ஸ்பெக்ட்ர‌ம் குழுவின‌ர்). முன்ன‌தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன‌தில் மாட்டினோர் நாலைந்து மாத‌ங்களில் ப‌ல‌த்த‌ வ‌ர‌வேற்பிற்குப் பிற‌கு க‌ட்சியில் முக்கிய‌ அந்த‌ஸ்த்தைப் பெறுவ‌ர். 'ப‌ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான‌ சொன்னாரு, ந‌ம‌க்கு எங்கே சொன்னாரு' என்ற‌ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற‌து.

எவ்வளவு சீக்கிரம் தூங்கினாலும் மறுநாள் காலையில் அடிக்கும் அலாரத்தையும் மீறி, தூக்கம் வரும் பாருங்க. அட அட ... அசத்தாலா அப்படியே அமுக்கிப் போடும் நம்மை. ஆனாலும் தொடர முடியாத நிலை. இன்றைய கார்ப்பரேட் உலகில் இதற்கும் நாம் பழகிக்கொண்டோம். சட்டுபுட்டுனு எழுந்தோமா, வண்டிய மிதிச்சு, அல்லது முன்னாடிப் போறவன மிதிச்சு, அடிச்சுப் பிடிச்சு அலுவலகம் ஓடறோமானு இருக்கிறோம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை அன்றி, அன்றைக்கு திண்ணை தூங்கிப் பசங்களுக்காகவே நிறைய பாடல் பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். அவற்றை இனிவரும் பதிவுகளில் எழுத எண்ணம். அது சார்ந்த ஒரு பாடல், கீழ்வரும் வரிகளில் பார்ப்போம். இப்பாடலில் வ‌ரும் முத‌ல் வ‌ரி பின்னாளின் மிக‌ப் பிர‌ப‌ல‌ம் அடைந்த‌வை. திரைப்ப‌ட‌த்தின் பெய‌ராக‌வும் வைக்க‌ப்ப‌ட்ட‌து. இது த‌ம்பிக்கு பாடிய‌ பாட்டு. என்ன‌ருமைத் த‌ம்பி தூங்கிக் கிட‌ந்து சோம்பேறி எனும் ப‌ட்ட‌ம் வாங்கிவிடாதே, விழித்தெழு என்று உசுப்பேற்றும் பாட‌ல்.

அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் (2)
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(திரைப்படம் : நாடோடி மன்னன் 1958)

பாப்பாவிடம் ஆரம்பித்து, சின்ன பயலுக்கு சேதி சொல்லி, தம்பிக்கு அறிவுறைத்து என இவை எல்லாம் நாம் சிறுவர்களாய் இருந்த‌ வயதில் கேட்டு வந்த பாடல்கள் தான். பட்டுக்கோட்டையாரின் வரிகளிலேயே, 'பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்பது போல, வளர்ந்த பின் நம் குணம் முற்றிலும் மாறி, படிச்சதெல்லாம் ம‌றந்து போச்சு. படிச்சு என்னத்த கிழிச்சோம். நாடும் நாமளும் மோசமா போய்கிட்டே தான் இருக்கோம் !!!


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...



Thursday, January 26, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 1

சினிமாவின் பால் நாட்டம் கொண்டோரும், அல்லது திரைப்படப் பாடல் வரிகளில் காதல் கொண்டோரும், இவரை சட்டென மறக்க இயலாது. இவர் பற்றி அறியாதார் கூட, இவரது ஒரு பாட்டைக் கேட்டால் போதும், இவர் யாரென அறிந்து கொள்ள பிரியப்படுவார்கள். சினிமாவின் மூலமே நமக்கெல்லாம் அறிமுகம் என்றாலும், தான் கொண்ட கொள்கையிலிருந்து, அரசியல் ஆகட்டும், நாடகம் ஆகட்டும், சினிமாவாகட்டும், பொதுவுடமைச் சித்தாந்தம் ஆகட்டும், சற்றும் மாறாமல், ஆரம்பம் முதல் கடைசி வரை, தன் பாடல் வரிகளில் அதைக் கையாண்டவர். நம் மனதில் என்றும் எளிதில் நினைவில் கொள்ளும் பேராற்றல் கொண்டவர், அவர் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

'கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும்...' இங்ஙனம் தான் ப‌ட்டுக்கோட்டையாரைப் ப‌ற்றிச் சொல்கின்ற‌ன‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள். அநேக பிரபலங்களைப் போலவே பட்டுக்கோட்டையாரும் பள்ளிக்குச் சென்று அதிகம் படித்தவரில்லை. தந்தையின் வழியிலும், அண்ணனின் வழியிலும், சிறிது காலம் திண்ணைப் பள்ளியிலும் கற்றறிந்தார். அவ்வளவே. மிகச் சிறு வயதிலேயே, பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கையில் அவர் இயற்றிய‌ பாடல்:

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே !


ஒரு நாள், வயல் வேலை செய்து கொண்டு சிறிது ஓய்வெடுக்கையிலே, அருகில் இருக்கும் குளத்தில் பட்டுக்கோட்டையாரின் கவனம் செல்கிறது. அங்கே கெண்டைக் குஞ்சுகள் துள்ளி விளையாடும் அழகைக் கண்டு ரசிக்கிறது அவர் மனம். அடுத்த நிமிடம், சிந்தனை வயப்பட்டவரின் நெஞ்சினில் சித்தாந்த வரிகள் பிறக்கிறது. மேற்கண்ட வரிகளை, 'என்ன பிரமாதம்... சாதாரண வரிகள் தானே?' என்று எண்ணலாம். அப்படி எண்ணுவது மாபெரும் தவறு என்பது சற்று ஆழ்ந்து படித்தால் புரியும் நமக்கு. இதனுள்ளும் ஒரு சமூகக் கருத்தைத் திணித்து, எளிமையாய் (நமக்கெல்லாம் புரியனும்ல !) படைத்த வல்லமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

'மனம் ஒரு குரங்கு', ஒரு இடத்தில் நில்லாது தாவிக்கிட்டே இருக்கும். குணம்? ... நிற்கிறதோ, தாவுகிறதோ, ஆனால், பல வகைகளில் இன்றும் பரிணமிக்கிறது. 'மிருகத்திலிருந்து வந்து விலகி ஆனால் மிருகத்தை விடக் கேவலமாய் இருக்கிறாயே' என எப்படி இவ்வளவு எளிமையாய், வலிமையான வரிகளில் !!! சொல்ல வார்த்தைகள் இல்லை ...

உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)

இச்சுத்தா இச்சுத்தா ... மான் புலியை வேட்டையாடும் இட‌ம் க‌ட்டில், மே மாச‌ம் தொன்னித்தெட்டில் மேஜ‌ர் ஆனேனே ... போன்ற‌ க‌ருத்துச் செரிவு மிக்க பாடல்களைத் தந்து, க‌விஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்க‌ளுக்குத் த‌னி மகுட‌ம் சூட்டி எங்கேயோ கொண்டு சென்றுவிட்ட‌ன‌ர். இவை எல்லாம் பெண்களை இழிவுப‌டுத்துவ‌தாயில்லை? இவை போன்ற‌‌ பாட‌ல்க‌ளைப் பெண் பாட‌க‌ர்க‌ளே பாடியிருப்ப‌து தான் வேத‌னைக்குறிய‌து. இவ‌ற்றிற்கு நேர்மாறாக‌, அந்த‌க் கால‌த்திலேயே (பெரிய‌ விஷ‌ய‌முங்க‌ !) பெண்க‌ளை ம‌தித்து, அவ‌ளுக்கும் ஒரு ம‌திப்பைத் த‌ந்து மெருகேற்றிய பட்டுக்கோட்டையாரின் க‌‌ன‌ல் வ‌ரிக‌ள்...

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லு சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ?

(ப‌ட‌ம்: க‌ல்யாண‌ப் ப‌ரிசு)

தமிழ் சினிமா மறபுப்படி வ‌ழக்கம் போல ம‌ர‌த்தைச் சுற்றி, காதலனும் காதலியும் ஓடி ஆடிப் பாடும் பாட்டு. சிற்சில இடைவெளி ஓட்ட‌ங்க‌ளுக்குப் பின் ஒரு ம‌றைவில் நிற்கும் காத‌லியின் விர‌லை, லேசாக‌த் தொட்டு விடுவான் காத‌லன். அவ்வ‌ள‌வு தான், அந்த‌ அம்மாவுக்குக் கோப‌ம் பொத்துக் கொண்டு வ‌ந்துவிடும். 'அடே அறிவு கெட்ட‌வ‌னே, என்னை மான‌ப‌ங்க‌ப் ப‌டுத்த‌ நினைத்த‌ மூட‌னே, உன்னைப் போய் காத‌லித்தேன் பார்' என்றெல்லாம் சீற‌வில்லை. பொறுமை இழந்து புரட்சியில் இறங்கிடாதே, எல்லாம் கல்யணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்ற இதமான சீற்றம் கொண்ட காதலியின் வரிகள் மேலே. இது அன்றைக்கு. இன்று நிலைமையோ வேறு. நேரா 'கட்டிப்புடி கட்டிப்புடி டா ... கண்ணாலா கண்டபடி கட்டிப்புடி டா...' தான்.

'தானத்தில் சிறந்த தானம் எது?' அப்படீன்னு எங்க ஹோம் மினிஸ்டர் கிட்ட கேட்டேன். அவங்க படக்குனு 'என்னது? கண்தானமா?'னு சீரியஸா கேக்க ... அதையினும் மிஞ்சியது ...'நிதான‌ம்' என்றேன். ந‌ம‌க்கு எப்ப‌டி இந்த‌ அறிவு ஞான‌ம் என்று அவ‌ங்க‌ளுக்கு ஒரே ச‌ந்தேக‌ம். முக‌த்திலேயே கேள்வி ப‌ட‌ர்ந்த‌து. ம‌ரியாதை (?!) நிமித்த‌ம் அவ‌ங்க எதும் கேக்க‌ல‌ :)

எம்.ஜி.யாரும் கலைவாணரும் நடித்த‌ 'சீர் மேவு குரு பாதம்' என்று தொடங்கும் கேள்வி ப‌தில் பாட‌ல். எளிமையான கேள்விக‌ள் அழுத்தமான பதில்கள். காய்ந்தவன் வயிறு பற்றியும், நயவஞ்சகனின் நாக்கு பற்றியும் உறைக்கும் பதிலில் நம் உடல் சிலிர்ப்பது உறுதி. க‌‌லைவாண‌ர் கேள்வி கேட்க‌, ஒத்தை வார்த்தையில் எம்.ஜி.ஆர். ப‌தில‌ளிப்பார்.

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்
...
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
...
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
...
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)


இன்று, அதே ஒத்தை வார்த்தையில் பாடல் எழுதச் சொன்னால், நமது கவிஞர்கள் இப்படித் தான் எழுதுகிறார்கள். சமீபத்தில் வ‌ந்த ஒரு பாட‌ல், ந‌ம்மை எல்லாம் கிற‌ங்க‌டிக்கும் ... 'ஒத்த‌ சொல்லால எ(ன்) உசிர் எடுத்து வச்சிகிட்டா ... ரெட்ட கண்ணால ... என்ன தின்னாடா'



மேற்க‌ண்ட 'சீர் மேவு குரு பாதம்' பாட‌ல் ஒருசில‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் 'கிளௌன் சுந்தரம்' என்பவர் எழுதிய‌தாக‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ரியான‌ த‌க‌வ‌ல் தெரிந்த‌வ‌ர்க‌ள் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள். த‌க்க‌ ச‌ன்மான‌ம் நாகு ஐயா வ‌ழ‌ங்குவார்.


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Thursday, February 26, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா.



  ---      ---   ---



எழுதியது யாரென்று தெரியவில்லை. நெஞ்சை பிசையும் பாடல். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு நீர்வை மகள் அனுப்பினார்.... 

ஒரு ஈழத்து நண்பர் சொன்னார்: " எனக்கு இந்த பிரச்சினை எப்படி முடியும் என்று கூட கவலையில்லை. சீக்கிரம் முடிந்தால் நிம்மதி"... 

எனக்கு மீண்டும் மீண்டும் கானா ப்ரபாவின் பதிவின் முகப்பில் அவருடைய சிரித்த முகத்திற்கு கீழே இருக்கும் வரிகள்தாம் மனதில் ஓடுகின்றன...  

ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்....

என்று தணியும் இந்தத் துயரம்?

Friday, May 18, 2007

Evergreen S.P.B - இளைய நிலா பொழிகிறதே

இந்த இனிய மாலைப் பொழுதில் உங்களுக்கு ஒரு இனிய கானம்.

எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு திரைப்படங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு இசை அமைப்பாளர்கள், எவ்வளவு பாடகர்கள். இன்றும் இப்பாடல் நமக்கு இனிக்கிறதென்றால், thats is S.P.B and Raja. என்ன ஒரு finish !!!

Please click the below link to enjoy the video. கடைசியில், கண்டிப்பா நீங்களும் S.P.B. கூட சேர்ந்து ஆடுவிங்க.

href="http://www.youtube.com/watch?v=W8l_ezoU8Lc&mode=related&search=

என்றும் அன்புடன்
சதங்கா