Showing posts with label பயணம்.. Show all posts
Showing posts with label பயணம்.. Show all posts

Thursday, March 03, 2011

பஹாமாஸ் விஜயம் - 2

நாங்க போன கப்பல் ராயல் கரீபியன் கப்பல். கார்னிவல், டிஸ்னி, நார்வேஜியன் என்று பல கப்பல்கள் இருக்கு. அதில் இது கொஞ்சம் நல்லதுன்னு செவி வழி செய்தியை கேட்டு நாங்களும் டிக்கெட் வாங்கினோம்.

க்ரூய்ஸ் கப்பலில் நுழையரதுக்கு பல வழிமுறைகள் போட்டு, பல வசதிகளைச் செய்து வா வா என்று எதிர் கொண்டழைக்க சில ஆட்களைப் போட்டு நம்மள சும்மா திணரடிக்கராங்க. துறைமுகத்திலேயே கார் நிறுத்துமிடமும், அதற்கு முன்னாடியே நமது பெட்டி படுக்கைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லா சாமான் செட்டையும் கொடுத்துட்டு ஹாயாக கையை வீசிகிட்டு உள்ளே போகலாம். அடுத்த நாட்டுக்குச் போவதாக இருந்தால் மறக்காமல் பாஸ்போர்ட்டை கையிலேயே வெச்சுக்கங்க. இல்லை போகவே முடியாது, ஜாக்கிரதை. கொஞ்சம் தின்பண்டம் ஏன்னா, எப்போ, எந்த குழந்தை, எப்படி, எதுக்கு கத்துமோ தெரியாது கப்புன்னு வாயில அடைச்சு ஒரு கப் தண்ணி ஊத்தி அடக்கிடலாம், தேவையான மருந்துகள், காமெரா, லேப்டாப் கம்ப்யூட்டர் இதை லக்கேஜ்ஜோடு அனுப்பினால் அது கையில் வந்து சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யுதான்னு தெரியர வரைக்கும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கும்.

நம்ம போர்டிங் பாஸ் கொடுக்கர இடம் ஏர்போர்டை ஞாபகப் படுத்தும் அதே சமயம், எந்த மாதிரி டிக்கெட் வாங்கியிருக்கீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமாகவோ அல்லது லேட்டாகவோ உங்களை செக்கின் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஒரு கைப் பட்டை போட்டு இதுங்க ரெண்டும் உங்க கூட வருதாங்கர ரேஞ்ஜில கேள்வி கேட்டுட்டு, அப்புறம்தான் “O they are so cute” ன்னு ஒரு மொக்கையை போட்டுட்டு, முக்கியமான விஷயத்துக்கு வருவார்கள். அது வேற ஒன்னும் இல்லைங்க கப்பல் உள்ளே திங்கர சோறு, காபி, டீ, எலுமிச்சை தண்ண்ண்ணீ ஜூஸைத் தாண்டி எதைச் சாப்பிட்டாலும் அதாவது மஹா ஜனங்களே இந்த லாகிரி வஸ்துகள் எதைச் சாப்பிட்டாலும் வேறு எதை வாங்கினாலும், போட்டு தாளிக்கரதுக்கு அப்பப்ப க்ரெடிட் கார்டை நீட்டு தேய் தேய்ன்னு தேய்க்க வேண்டாம், அதை செக்கின் பண்ணும் போதே வாங்கி ஒரே ஒரு முறை தேய்த்து விட்டு (அப்பாடி என்ன சவுகர்யம் இல்லை) அத நம்ம ரூம் கார்டோடு கோர்த்து விட்டுடுவாங்க. அப்படின்னா, ரூம் கார்ட் தொலைஞ்சு போனாலோ, கொஞ்ச நேரம் காணாம போனாலோ, அடி வயித்தில கரைக்கிர புளில சூப்பரா ஒரு கப்பல் கும்பலுக்கே சாம்பார் வெக்கலாம் ஜாக்கிரதை. நாங்க கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா பரம்பரை, குழந்தைகள் கார்டில் அதைக் கோக்கவேண்டாம்னு சொல்லிட்டு, அது மட்டும் இல்லை குழந்தைகள் நாங்க இல்லாம எதுவும் வாங்க முடியாதுன்னும் சேர்க்கச் சொல்லிட்டோம். சரி, சரி, உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. வீட்டுக்காரம்மா கார்டை அப்படி கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு நான் கேக்கலை, அவங்க பக்கத்திலேயே இருக்கரச்சே எப்படி அதெல்லாம் ஒரு சாத்வீகமான மனுஷன் கேக்க முடியும்ன்னு உங்களுக்குத் தோண வேண்டாம். மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கங்க, கேள்வி கேக்கரது ரொம்ப ஈசி, கேள்விகளுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.

ஒருவழியாக இதெல்லாம் கடந்து கப்பல் உள்ளே வந்தா முதல் மரியாதைல ராதா படகுல இருந்து இறங்கினதும் இழுத்து கிட்டு இருக்கும் சிவாஜி படக்குன்னு ஒரு பட்சி கொத்தினமாதிரி வெடக்குன்னு காலை உதறுவாரே அது போல ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சா ஒரு மண்ணும் இல்லை. ஒரு வரவேற்பாளி மாயாஜால படத்துல வர்ர மாதிரி திடீர்ன்னு தோன்றி (என்ன, டொய்ய்ய்ங் ன்னு ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்தான் இல்லை) ஒரு சூப்பர் அன்னாசி பழ ஜுஸ் கப்பை கொடுத்து குடிக்கிறியான்னு கேட்டு “நல்லா இருக்குமா”ன்னு கேக்க வாயெடுக்கரதுக்குள்ள நம்ம ரூம் கார்டை வாங்கி ஒரு தேய் தேச்சு 8 டாலர் ஆச்சுன்னு சொல்லிட்டாங்கப்பு. அப்பால நாம எப்பேர்பட்ட ராஜ பரம்பரை, ஒரே ஒரு கப்பு போதும், நிறைய பேர் வராங்க எல்லாருக்கும் வேணுமில்லையான்னு பெருந்தனமையா அவங்ககிட்ட நடந்துகிட்டு விடு ஜீட்.

இப்படியாக படாத பாடு பட்டு சொகுசு கப்பலேறிய ஒரு தமிழன் என்ற பெயரை வேறுயாரும் எடுத்துக்கரதுக்குள்ள எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.

காலை 11 மணிக்கு கப்பலுக்குள்ள வந்தா சட்டுபுட்டுன்னு நாலு எடத்த பார்த்தமா, நம்ம ரூமுக்கு வந்தமா, சின்னதா ஒரு த்யானம் செய்தமான்னு இல்லாத குறைக்கு, மதியம் 1 மணிக்குத்தான் ரூமுக்குள்ள போக முடியும்ன்னு சொல்லி வெளியிலேயே நிறுத்திட்டாங்க. “ஏண்டா என்னடா ஆச்சு உங்களுக்கு இவ்ளோ நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு” ன்னு கேட்டே விட்டேன்.

அதுக்கு “கப்பலை நல்லா சுத்திப் பாருங்க, ராவிக்கு ஜூப்பர் ஷோ இருக்கு எங்க ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா”ன்னு அன்பா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தானுங்க. இவனுங்களுக்கு எங்கள பத்தி அவ்வளவா தெரியாது, இவங்களோட மிட்நைட் ஷோ எதுக்கும் போகாம நாம ஏன் வரலைன்னு இவனுங்க வருத்தப் பட வெக்கனும்னு மனசுக்குள்ளேயே கறுவிக்கிட்டோம்.

நாங்க போன கப்பல் 10 தளம் கொண்டது. எங்க ரூமும் 10வது தளத்திலதான். 11வது தளத்தில் நீச்சல் குளமும், கப்பலின் முன் பக்கம் 12வது தளத்தில் சாப்பாடும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கப்பலில் எங்களைப் போல பயணித்த 3000 பேருக்கு 850 சிப்பந்திகள்ன்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லக்கூடாது, கப்பலுக்குள்ளே ஒரு சின்ன நகரமே இருக்குங்க. பெரிய சூதாட்ட விடுதி, 3 சாப்பாடு ஹோட்டல், சின்ன மால், 2 ஸ்பெஷல் ‘தண்ணி’ கிடங்கு, ஒரு பெரிய இரண்டடுக்கு ஆடிட்டோரியம், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கண்காணித்துக் கொள்ள இடம், லைப்ரரி, முடிதிருத்தும் இடம், கூடைப் பந்தாட இடம், டேபிள் டென்னிஸ் ஆட இடம் என்று அசத்தோ அசத்துன்னு அசத்ராங்க. கொஞ்சம் அசந்து மறந்து எங்கெயாவது நின்னா போச்சு ஒன்னு “என்னங்க ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் தெரியனுமா, என்னைய கேளுங்க நான் சொல்றேன்” னு வந்துடரானுங்க, இல்லை “ஏதாச்சும் சாப்பிடரீங்களா, கொண்டுவரட்டுமா”ன்னு கேக்கராங்க. இப்படியெல்லாம் நம்மள கவனிச்சா நாம திரும்பத் திரும்ப கப்பல் பயணத்துக்கு வருவோம்னு எந்தப் பயபுள்ளையோ போட்டு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஒருவழியா ரூமுக்கு நம்மள அனுப்பி அதப் பார்த்தா கொஞ்சம் மலைப்பாத்தான் இருந்துச்சு. காசுக்கேத்த தோசைன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு கிங் சைஸ் பெட்

ஒரு சோபா அதைப் பிரிச்சு குயின் சைஸ் பெட்டாக்கி ரெண்டு பேர் தூங்கலாம்,
Add Image

ஒரு சின்ன பார்

ட்ரெஸ்ஸிங் டேபிள்

சின்ன குளியலறை

பால்கனி
என்று ரொம்ப தாராளமாகவே இருந்தது.
இதையெல்லாம் அனுபவிக்கரத்துக்குள்ள ரூம் சர்வீஸ்ன்னு ஒருத்தன் வந்து கதவை இடிச்சு, “என்ன ஏழரை மணி ஷோவுக்கு போகலையா”ன்னு கேட்டு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா அனுப்பிட்டான். அப்பதான் தெரிஞ்சுது எங்களை வெளியில அனுப்பினாதான் அவன் ரூமை க்ளீன் பண்ணி பளிச்சுன்னு வெக்க முடியுமாம். நேரம்டா சாமின்னு, அந்த ஷோவுக்குப் போனோம்.
இவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் நல்லாத் தெரியுது, எதை வேணும்னாலும், பேசிப் பேசியே வித்துடுவானுங்க. இப்படித்தான் 25 டாலருக்கு ஒரு கூப்பன் புத்தகம் வித்தானுங்க அத வாங்கினா நமக்கு 1000 டாலர் லாபம்ன்னு சொல்லி சொல்லி வித்தானுங்க. ரஸல் பீட்டர் ஸ்டாண்டப் காமெடி கேட்டீங்கன்னா ஒன்னு சொல்வான், ரெண்டு பேர் வியாபாரத்துல மீட் பண்ணக்கூடாது, இந்தியனும் சீனனும். இந்தியன் எதையும் பேரம் பேசாம வாங்க மாட்டான், சீனன் எந்த பேரத்துக்கும் ஒத்துக்க மாட்டான். இது இவங்களுக்கு நல்லாத் தெரியும் போல இருக்கு. அப்படி புத்தகம் வாங்கினவங்கள்ள(ஹி ஹி என்னையும் சேர்த்து) பாதி பேர் இந்தியர்கள். அந்தப் புத்தகத்தில நாளான்னிக்கு நாம நசாவு (பஹாமாஸ்) போய் எல்லோரும் மூட்டை மூட்டையா வைரமும் வைடூரியமும்மா வாங்கிட்டு வரணும்ன்னு அவனுக்கு ஆசையா இருக்குன்னு சொல்லி சொல்லி கிளப்பி விட்டு “எலேய் வேலையப் பாருடா வெண்ணை”ன்னு நான் கத்தலாம்னு எழுந்ததும் டக்குன்னு கடைய மூடிக்கிட்டு ஓடிப் போயிட்டான். ரூமுக்கு வந்து அந்தப் புத்தகத்தை ஒழுங்கா படிச்சதும் தெரிஞ்சுது 1000$க்கு வாங்கினா 50$ இனாம்னு ஒரு கூப்பன் அதுமாதிரி பலதும் சேர்த்தா உங்களுக்கு 1000$ லாபமாம். அதுக்கு ஒரு 8000-10000 டாலர் செலவு பண்ணனுமாம். நாங்க இதுமாதிரி சீப்பா 1000$ லாபமெல்லாம் பாக்காம, ஸ்ட்ரெய்ட்டா 10000 டாலர் லாபமே பாத்துட்டோம். அந்த கதை 4ம் பாகத்தில வருது.
அந்தப் பயபுள்ள எழுந்து ஓடினதும் கப்பலின் நிகழ்ச்சிகளின் இயக்குனர் வந்து எல்லோருக்கும் அவரோட பல பல முறை சொன்ன ஜோக்ஸை எங்களுக்கு முதல் முறையா சொல்றாப்ல சொல்லி அவரே சிரிச்சுகிட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடியனை அறிமுகம் செய்துட்டு போனார். அந்த ஆள் பாவம், ஆபாச ஜோக் சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம, “என்ன கொடுமை சரவணா”ன்னு தலைல அடிச்சுகிட்டே ஜோக் சொன்னான். அதையெல்லாம் இப்ப சொல்லப் போரதில்லை அதெல்லாம் சேத்து வெச்சு நானும் ஒரு நாள் மேடைல ஸ்டாண்டப் காமெடி செய்ய வேண்டி வந்தால் சொல்றேன்.
சரியாக 8:30 மணிக்கு எங்களுக்கு சாப்பாடு போடுவதாக டைம் தந்திருந்தார்கள். சரின்னு அந்த ஹோட்டலுக்குள்ள போனா, முக்காவாசி பேர் இந்தியர்கள், மீதி சீனர்கள். எங்களுக்கு சர்வரும் சீனன் அவனோட உதவியாளியும் சீனள்.
அவளுடைய வேலை சூப்பர் ஈசி.
அவள்: “மேம், வாட்டர்ர்ர்ர்ர்”
மாலதி: “யா, வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓஓஓ ஓகே ஒன் லெமனெட்”
நான் குறுக்கிட்டு: “நோ, ஷி வாண்ட் வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், ஒன் லெமனெட் அண்ட் வாட்டர்”
நான்: “நோ, ஒன்லி வாட்டர் வித் லெமன் அண்ட் ஐஸ்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், வாட்டர் அண்ட் லெமனெட், ஐஸ் க்ரீம் ஆஃப்டர் ஃபுட்.
மாலதி: “டு யூ ஹாவ் எனிதிங் அதர்தன் லெமனெட்”
அவள்: “மேம், யு வாண்ட் அனதர் லெமனெட்”
நான் (தமிழில்): “கிழிஞ்சுது போ, அம்மா, நீ இவகிட்ட அதிகம் பேசாதே, அப்புறம் அவ பேசரமாதிரி உன் இங்லீஷும் ஆகிடப் போகுது பாத்துக்க”
அவள்: “சர்ர்ர்ர் யு வாண்ட் சம்திங் டு டிரிங்”
நான்: “லெமனெட்”
அவள்: (முகமெல்லாம் பல்லாக) “ஓ, லெமனெட் வெரி குட்”
இவள் இப்படின்னா சர்வர் அதுக்கும் மேல ஒரு படி போயிட்டான். அவன் பெயர் ஜார்ஜ். சீனனுக்கு எப்படி ஜார்ஜ்ன்னு பேர் வெச்சாங்கன்னு எனக்குத் தெரியலை அதை அவன் கிட்ட கேட்டு அவன் சொல்ற பதில் எனக்குப் புரியரதுக்குள்ள மாதுரி காலேஜ்க்கே போயிடுவாளோன்னு பயம் வந்துடுச்சு.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ஆங்கிலம் சுத்தமா தெரியாம, இவங்க எல்லாம் என்ன தைரியத்தில அமெரிக்காவுக்கு வேலைக்கு வராங்கன்னு தெரியலை, நம்ம அப்பா அம்மா வராங்களேன்னு சொன்னா அவங்க இங்க வேலைக்கு வரலை (நம்ம வீட்டுல குழந்தைகளை பாத்துக்கர வேலைக்கு வராங்கன்னு சொல்லி சிண்டு முடியாதீங்க சொல்லிட்டேன்). நம்மளோட இருக்கரதுக்குத்தான் வராங்க அதனால அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரலைன்னா பரவாயில்லை. இவங்க எல்லாம் இப்படி வரதுக்கு அவங்க வருமானமும், அவங்களோட சர்வைவல் எண்ணமும்தான்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுடன் நடந்த டைலாக்கை கொஞ்சம் காமெடிக்காக இங்க போட்டாலும், அந்தப் பெண்ணையும் ஜார்ஜையும் நினைச்சா பாவமாவும் இருக்கு, பாராட்டவும் தோணுது.
இப்படியாக எங்களின் முதல் நாள் கப்பலில் முடிந்தது.

அடுத்தப் பதிவில கோகோகே பீச்சுக்கு கூட்டிகிட்டு போய் சுத்தி காமிக்கறேன்.
-முரளி இராமச்சந்திரன்.

Thursday, February 24, 2011

பஹாமாஸ் பயணம்

முரளி: "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த கதை தெரியுமா?
தெரியாதா, எனக்கும் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சமீபத்தில் க்ரூஸ் அதாங்க சொகுசு சுற்றுலா (தப்பா படிச்சுட்டு "என்னாது, சொகுசு சுந்தரியா"ன்னு கேக்கக் கூடாது) பஹாமாஸ் போய் வந்த கதை நாளைக்கு வெளியிடப் போறேன்".

நாகு: "நாளைக்கா!"

முரளி: "உடனே நாளைக்குன்னா நாளைக்கா, ம்ம்ம்ம் நாளான்னிக்கு, ஹும்ம்ம் அதுக்கு மக்கா நாள்ன்னு வெச்சுக்கங்க எழுதி ஒரு ரெண்டு பதிவு, போட்டு வாங்கிடலாம்னு இருக்கேன். உடனே ஊருக்கு போகனும், ஆஃபீஸ்ல ஆணி புடுங்கணும், தமிழ் சங்க விழாவில தட்டி தட்டி கைவலிக்குது, விசிலடிச்சு வாய் வலிக்குது, சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு சொல்லாம, மருவாதையா படிங்க, ரசிங்க, பின்னூட்டமிடுங்க சரியா".

-முரளி இராமச்சந்திரன்.

Thursday, January 14, 2010

இந்தியப் பயணம் - பகுதி - 2


என்னதான் வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் குரலைத் தொலைபேசியில் கேட்டாலும், சென்னையில் இறங்கி தாய் தந்தையரை நேரில் பார்க்கும் அந்த நேரம், அவர்கள் முகத்தில் வழியும் சந்தோஷம், வாஞ்சை எழுத்தில் வடிக்கமுடியாத ஒன்று.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பா அடித்த ஜோக் “சீக்கிரம் கதவை சாத்துடா கொசு வந்துடும்” அதை அவர் சொல்லி முடிக்கும் முன்பு எனக்கு முன்னால் ஒரு நூறு கொசு எல்லாம் பெரிய வண்டு சைசில் வீட்டிற்குள் இருந்தது. அவைகள் தங்கள் பாஷையில் “பெரிய கூட்டமா வந்துட்டாங்கப்பு, வாங்க வந்து ஒரு சாம்பிள் பார்க்கலாம்”னு பேசி வெச்ச மாதிரி சரமாதிரியாக கடிக்கத் துவங்க, நான் ஒரு ப்ரேக், குச்சுப்புடி, கராத்தே, களரி பயட் எல்லாம் கலந்து கட்டி ஆடத்துவங்க அப்பா சாவகாசமாக, “என்ன கொசு கடிக்குதா, இந்தா இதால அடி” என்று ஒரு ப்ளாஸ்டிக் டென்னிஸ் ராக்கெட்டைத் தந்தார், அதில் ஒரு பொத்தானை அழுத்தினால் விளக்கு ஒன்று எரிகிறது, இன்னொரு பொத்தானை அழுத்தியபடி விஷ்க் விஷ்க் என்று நம் முன்னால் சுற்றினால் ஒரு 20—30 கொசு அதில் மாட்டி பட பட என்று எரிந்து பொத் பொத் என்று விழுகிறது. அதைப் பார்த்ததும் என் பெரிய பெண் குஷியாகி “ஐ, அப்பா மை டர்ன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் அவளுடைய டென்னிஸ் திறமையைக் காட்டினாள். பிறகு அடிப்பதற்கு கொசு இல்லாமல், சிலந்தி, எறும்பு, இந்தப் பூச்சி அந்தப்பூச்சி என்று தேடித் தேடி அடிக்க ஆரம்பித்தாள். ஆமாம், இந்தக் கொசுவை ஒழிக்க ஏன் ஒரு வழியும் இல்லை என்று தெரியவில்லை. இந்தக் கொசு அழிக்கும் மட்டையை எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். கோடையில் வீட்டின் பின்புறம் டெக்கில் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார முடியாது கொய்ங் என்று ஒரு லட்சம் பூச்சிகள் வந்து தாக்குகின்றது இந்த முறை எனக்காச்சு அவைகளுக்காச்சு, பார்த்துவிடுவோம்.

குரோம்பேட்டை, இது நான் பிறந்து வளர்ந்த ஊர். மண்வாசனை, மர வாசனை என்று ஜல்லியடிக்காமல் சொன்னால் கொஞ்சம் அமைதியான ஊர், அகரம் நாராயணன் என்ற ஒரு ரௌடி எம்.ஜி.ஆர் காலத்தில் அட்டகாசம் செய்த ஒரு நிகழ்வு, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிதடிகளைத் தாண்டி பெரிய வெட்டுக் குத்து கொலை எதுவும் இல்லாத ஒரு அமைதிப் பூங்காவனம். “அப்பா! எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு, ஹும்.”

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த குரோம்பேட்டை முகம் மாறி செல்வ செழிப்பில் மின்னுகிறது. நான் வளர்ந்த எங்கள் தெருவில்மட்டும் 6-7 அடுக்குமாடி குடியிருப்புகள், அதில் ஒரு 10-15 பேரிடம் கார் இருக்கிறது. இதைத் தவிர, தெரு முழுவதும் ஒரு 10 ட்ராவல் கார்கள் 4 டூரிஸ்டர் வேன் என்று ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். குரோம்பேட்டை ஸ்டேஷன் ரோட் நிறையவே மாறி இருக்கிறது, இந்த மாற்றம் சென்னையின் பல பாகங்களிலும் பளிச்சிடுகிறது. ஆட்டோகாரர்கள் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது, அவர்கள் வைத்ததுதான் சட்டம், கேட்பதுதான் ரேட், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். கொஞ்சம் காலை பரப்பி வைத்து நின்றால் பட்டென்று உங்கள் கால் பக்கம் போர்ட் வைத்து ஒரு ஆட்டோ ஷெட் போட்டு விடுவார்கள். மறக்காமல் அதில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் போட்டோ இருக்கும். ஆட்சி மாறினால் இருவரையும் அழித்துவிட்டு அம்மா படம் இருக்கும், நல்ல பொழப்புய்யா இது.

தனி வீடு வைத்து இருக்கும் அனைவர் வீட்டிலும் ஒரு அடி பம்ப் இருக்கிறது. கேட்டால், “பாலாறு கனெக்ஷன் இருக்கு இல்ல அது ஒரு தொட்டில வந்து பிறகு அதிலிருந்து வீட்டு மாடில இருக்கர பெரிய டாங்குக்கு மோட்டார் போட்டு ஏத்திடுவோம், வேணும்னா அடி பம்ப் வழியா டக்குன்னு பிடிச்சுடலாம்” இது என்ன லாஜிக் என்பது தெரியவில்லை.

சென்னையில் நிறைய மாதுக்கள் கார் ஓட்டுகிறார்கள். ஹூண்டாய்(5 லட்சம்), டாடா இண்டிகா(3-4 லட்சம்) தூள் பறக்கிறது, பலர் ஹொண்டா சிடி(10 லட்சம்) வைத்திருக்கிறார்கள் என்று அசால்ட்டாக சொல்கிறார்கள். டொயோட்டா காம்ரி 25 லட்சம், எனக்குத் தெரிந்த பல வங்கி மேளாளர்கள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா வங்கிகளில் தருகிறார்கள்? அமெரிக்காவில் இருக்கிறோம், கார், வீடு எல்லாம் இருக்கிறது என்றாலும், சென்னை போனால் ஒரு ஓட்டை சைக்கிள்கூட இல்லை என்பது சற்று கேவலமாகத்தான் இருக்கு.

ரெண்டு தெரு தாண்டி இருக்கும் கோயிலுக்கு போக 25 ரூ ஆட்டோ சார்ஜ் கேட்கிறார்கள். காரணம் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய், வீட்டிலிருந்து கோவில் 500 அடிதூரம், ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது ஆட்டோவில், பேசாமல் சென்னைக்கு போய் ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் கார் ஓட்டினா நல்ல பைசா பார்க்கலாம். 5 மணி நேரம், 50 கி.மீக்கு 500ரூபாய் வாங்குகிறார்கள். போய் இறங்கிய 4-5 நாட்களுக்கு, பெரிய பருப்பு மாதிரி “ஏங்க ஏ.சி. போடுங்க” என்றால், மறுபேச்சு பேசாமல் போட்டு விடுகிறார்கள், இறங்கும்போது,

“சார் பில் 1200 ரூபாய்”

“எப்படிங்க”,

“என்ன சார் இப்படி கேக்கரீங்க, ஏ.சி. போட்டா டபுள் சார்ஜ் சார்”

“அது சரி, இந்தாங்க”

“...”

“இன்னும் என்ன”

“ட்ரைவர் பேட்டா சார்”

“ஏங்க கார் உங்க சொந்த கார்னு சொன்னீங்க”

“ஆமாம் சார், சொந்த வண்டியா இருந்தாலும் ட்ரைவர் வேலை பார்த்தால் ட்ரைவர் பேட்டா உண்டு சார், அதுதான் கம்பெனி ரூல்.”

“ஆமா உங்க ‘கம்பெனி’ ல எத்தனைபேர் வேலை செய்றாங்க”

“நான் ஒண்டிதாங்க”

“!!!!??”

தொடரும்.