Showing posts with label செவி. Show all posts
Showing posts with label செவி. Show all posts

Saturday, May 23, 2009

தமிழர் காது எதனால் ஆனது?

தமிழர்களின் காது எதனால் ஆனது என நீங்கள் நினைக்கிறீர்கள்? காது இரும்பால் ஆனதாம். அதனால்தான் தெரியாத மொழிகளில் இவ்வளவு காலம் பாடித் தள்ளிக் கொண்டிருக்கிறார்களாம். தெரிந்த மொழியில் பாட்டு கேட்கிறவர்கள்தான் தோல்செவி படைத்தவர்கள் என்கிறான் பாரதி. இசைக்கு மொழியில்லை என்கிறவர்கள் ஒரு நல்ல புரிந்த மொழியில் பாடல் கேளுங்கள். அப்புறம் நீங்கள் அன்றாடம் கேட்கும் புரியாத மொழிப் பாடலைக் கேளுங்கள். வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றால் மேலே படிக்காதீர்கள்.

அண்மையில் ரிச்மண்டில் சௌம்யா அவர்களின் கச்சேரி நடந்தது. அற்புதமான குரலில் அனைவரையும் மகிழ்வித்த அவரது கச்சேரியில் எனக்கு மிகவும் பிடித்தவை தமிழ்ப் பாடல்கள். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' பாடல் தேவகானமாய் இருந்தது. அர்த்தமும் தெரிந்து இசையும் உயர்வாக இருந்தால் அந்த அனுபவமே வேறு.

இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் தமிழ்ச் சங்கத்தில் தமிழிசை விழா நடத்தினோம். அது என்ன அற்புதமாக அமைந்தது தெரியுமா? நீங்களே இங்கு சென்று பாருங்கள். என் மனதில் இன்னும் நிற்கும் பாடல்களில் சில - வருவாய் வருவாய் கண்ணா, சாந்தி நிலவ வேண்டும், முருகா முருகா... அதுவும் குறிப்பாக சாந்தி நிலவவேண்டும் பாடல். நிகழ்ச்சிக்கு முதல்நாள் ஒரு நூலகத்தில் ஒத்திகை நடந்தது. அந்த ஒத்திகையில் எந்த ஒலிப்பெருக்கியும் இல்லாமல் குழந்தைகள் பாடிய சாந்தி நிலவ வேண்டும் பாடல் தேவகானமாக இருந்தது. கேட்கும் மனதில் எல்லாம் நிஜமாகவே சாந்தி பரவும்விதமான அற்புதம். இங்கு ரிச்மண்ட் வாசிகளுக்கு வருவாய் வருவாய் கண்ணா என்று மனமுருகி அந்தக் குழந்தை பாடுவதை இன்று பார்த்தால் கண்ணீர் வராமல் இருக்க முடியாது. உடல்நலம் குன்றி இருக்கும் அவளை பார்த்துக் கொள்ள கண்டிப்பாக வருவான் கண்ணன். மேலே இருக்கும் சுட்டியில் நீங்கள் அவசியம் கேட்க வேண்டிய இன்னொரு பாடல் காற்றின் மொழி! மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்று வலியுறுத்தும் பாடல் :-) என்னமாய் அனுபவித்து, சந்தோஷமாய் பாடுகிறாள் பாருங்கள்.....

இனிமேல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையேனும் தமிழ்ச் சங்கம் தமிழிசை விழா நடத்தவேண்டும் என்பது என் விருப்பம். பார்ப்போம். தமிழ்ச் சங்கம் மூன்று விழா, ஒரு பிக்னிக்கோடு நிற்கிறதா அல்லது வளர்கிறதா என்று பார்ப்போம் ;-) ;-)

சங்கீத உலகில் எனக்குப் பிடிக்காத மற்றொரு விஷயம் வார்த்தைகளின் இறுதியைக் கொல்வது. கர்நாடக உலகில் பயன்படுத்தும் வார்த்தைகள் - ராகா, தாளா, பாவா எல்லாம் எந்த மொழி? எனக்குத் தெரிந்தவரை - தமிழும், தெலுங்கும், மலையாளமும் ஹிந்தியும் அல்ல. கன்னடத்தில் மட்டும்தான். நம்மவர்களுக்கு கன்னடர்கள் மீது அவ்வளவு பயமரியாதையா என்ன? எனக்கு என்னவோ இது ஆங்கிலப்பைத்தியத்தினால் வந்தது என்று தோன்றுகிறது. ராகா என்று சொல்லிவிட்டால் அது தமிழல்லாத மொழி மாதிரி இருப்பதால் வடக்கிந்தியர்களுக்கும், ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்ற அறியாமையோ?

சென்ற மாதம் இங்கே ஒரு மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அதில் வீட்டில் ஹிந்தி பேசும் பெண் அவளுடை ய பாட்டை அறிவிக்கும்போது அழகாக ராகம் என்று சொன்னாள். அவளுக்கு இருக்கும் மரியாதை நம்மூர் சங்கீதக்காரர்களுக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.

தோல்செவி உடைய மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மொழிப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எட்டுத் திக்கும் சென்று இசைச் செல்வங்கள் கொண்டுவந்து எட்டுத் திக்கு மொழிகளிலேயே பாடுவதுதான் இரும்புச்செவி கொண்டோர் செய்வது. புரிந்த மொழியில் பாடுவது மெல்லிசையைச் சேர்ந்த ரகம் என்றும் பஜனைகள் என்றும் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரிகிறதாம். என்னைக் கேட்டால் ஒரு சில பாடல்கள் தவிர கர்நாடக சங்கீதத்தில் எல்லாமே இறைவழிபாடுதான், பஜனைதான். அதை புரிந்த மொழியில் பாடினால் மோட்சமாவது கிட்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தமிழ் கர்நாடக வித்வானுக்கு நடந்த விழாவில் ஒரு தமிழ் எழுத்தாளர் அந்த வித்வானின் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார். தமிழனின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுக்குமளவு நிலமை இருக்கிறது. அதில் அந்த வித்வான் பேசும்போது ஒரு மலையாளப் பாடகர் ஒரு தமிழ் பாடலை கொலை செய்தார் என்று பேசினார். தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த.... என்று பாடினாராம். கண்ணாடி மாளிகையில் இருந்து கல்விட்ட கதை இது. இந்தப் பாடகரின் மற்ற மொழிப் பாடல்கள் - குறிப்பாக மீரா பஜன் - கேட்டால் அவரது பரம விசிறிகளே பத்து மைல்ஓடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இடையில் எதற்கோ வெளியே சென்று திரும்பும்போது ஒரு பாடகி பாடிக் கொண்டிருந்தார். சம்மா நம்மா கும்மா என்று போய்க்கொண்டிருந்தது பாடல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது என்று என் நண்பனைக் கேட்டேன். அந்த பாடல் எது தெரியுமா? சௌம்யா பாடிய தேவகானம்தான் அது. இசைக்காக வார்த்தைகளை சிதைத்து பாடினால் இப்படித்தான். அதுவே பொருள் தெரிந்தால் அப்படி சிதைக்க மனம் வராது. பொருள் தெரிந்தால், எங்கோ மணம்தான் பறக்கும். வேறு எதுவும் பறக்காது. நீங்கள் அடுத்த முறை எந்தரோ மகானுபாவுலு யாராவது பாடினால் கவனியுங்கள். நிறைய பேர் 'எந்தரோ'வையே ஒரு கை பார்ப்பார்கள். entha ro என்பார்கள் அது போகட்டும். நான் சொல்வது கடைசி லு. வார்த்தைகளை ஒலியில் பொருத்தும்போது லு அடுத்த வரிக்கு தள்ளப்படுகிறது. பொருள் தெரிந்தவர்கள் அதை சேர்த்து சிதைக்காமல் பாடுவார்கள். மற்றவர்கள்

எந்தரோ மஹானுபாவு
லூஊஊ அந்தரிகி

என்று மாற்றி விடுவார்கள்.

இன்னொரு தமிழ்ப்பற்று கொண்ட கூட்டம் இருக்கிறது. ஒரு பாடகி இப்படி பாடினார்...

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்கு ( nambaavaikku) ஷாற்றி நிராடினாள்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் ஷென்னேல் உடுக்கையருகல
பூங்குவலை போதில் பொரிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கு இருந்து ஷீற்ற முலை பற்றி வாங்க கடும் நிறைகள்
வண்ணப் பரும் பஷுக்கள் நீங்காத ஷெல்வம் நிரைந்தேலொரெம்பாவாய்......

கல்கியே வந்து யாரும் தமிழில் பாடவேண்டாம் என்று தடையுத்திரவு போடுமளவுக்கு இருக்கிறது டமிலிசை.

ஒரு பாடலுக்கு இசை வடிவம் கொடுக்கும்போது கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உ.வே.சா.வுக்கு ஒரு கிராமக் கூத்தில் நடந்தமாதிரிதான் இருக்கும். ஒரு கிராமத்தில் உ.வே.சா. போகும்போது கூத்து நடந்து கொண்டிருந்ததாம். இவர் போய் உட்காரும்போது பாடகன் இப்படி பாடிக் கொண்டிருந்தானாம்.

மரத்தேப்பூ மரத்தேப்பூ
டிங்கினானே டிங்கினானே

என்ன பாடுகிறான் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்?

Friday, May 22, 2009

செவிச் செல்வம்.

மே 26, 2009 விகடன் முகப்பில்

சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.

வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, குறுகலான பாதைகளில் முன்னேறி செல்வது, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் ரம்மியமாக இருக்குமோ ? என்னவோ !! ஆனால், நாமும் அதற்குள் ஐக்கியமாகி செல்லும்போது தான் தெரிந்தது வலி.

"வேர் கேன் ஐ கெட் ஹியரிங் எய்ட் ?" என்று தேடிய என்னை, "செவிட்டு மெஷினத் தான தேடுற, அதுக்குக் கூட அலப்பரை தாங்கலேயேடா ராசா" என்று தோள்களில் தட்டினான் நண்பன் ஸ்ரீதர்.

ஐபாட் மாதிரி இருக்கும் சிலவற்றை எடுத்து மேசையில் வைத்தார், சிரிப்பென்றால் என்னவென்று கேட்கும், சிரிப்பை மறந்த இந்திய ஊழியர்.

'டேய் நந்து, எனக்கு இந்தப் பெரிசு பெரிசா இருக்க மெஷினெல்லாம் வேண்டான்டா. வெளிய‌ எடுப்பாத் தெரியும் வேற‌ ! இப்ப‌ல்லாம் ப‌ட்ட‌ன் சைஸ்ல‌ வ‌ருதாமே. அதைவிட‌க் குட்டியா இருந்தா வாங்கிட்டு வாடா' என்ற‌ தாத்தாவின் குர‌ல் மாட‌ர்னாய் ஒலித்த‌து.

"அதெல்லாம் எக்ஸ்பென்சிவா இருக்கும் !" என்றார் ஊழிய‌ர். ப‌ர‌வாயில்லை எடுங்க‌ என்ற‌த‌ற்கு, வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காண்பித்தார்.

'ரெண்டு ட‌மார‌மும் அவுட்டு. ஒன்னு வ‌ச்சாக் கூட‌ ச‌ரியா வ‌ராது. அத‌னால‌ ரெண்டா வாங்கிட்டு வ‌ந்திருப்பா' என்றிருந்தார் அம்மா.

நானூறு வெள்ளி * 2 க்கு பிங்க் பில் கொடுத்தார். ஏனைய சாமான்க‌ளும், வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு பாடி ஸ்ப்ரே, வீட்டுக்கு த‌லைவ‌லித் தைல‌ பாட்டில்க‌ள், டைக‌ர் பாம், சில டி.ஷ‌ர்ட்க‌ள், சாக்லேட் வ‌கைய‌றாக்க‌ள். அப்பாடா ஷாப்பிங் முடிச்சாச்சு என்று நிம்ம‌திப் பெருமூச்சு விட்டேன்.

அன்றிர‌வே சென்னை வ‌ந்த‌டைந்து, நேரே ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்தேன். 'விவேகானந்தன்' என்றவுடன், வேறு கேள்வி கேட்காமல் அவரது அறையில் விட்டனர் என்னை. அவ‌ரை அந்த‌ நிலையில் பார்க்க‌வே பாவ‌மாய் இருந்த‌து. எழுபதுகளின் மத்தியில் இருந்தாலும், சில‌ நாட்க‌ள் வ‌ரை திட‌மாக‌ இருந்த‌வ‌ர். சமீபத்தில் சாலையில் ந‌ட‌ந்து செல்கையில், பின்னால் மிதிவ‌ண்டியில் வ‌ந்த‌ சிறுவ‌ன் மோத‌, கீழே விழுந்து, விலா எலும்பு முறிந்துவிட்ட‌து. மிதிவ‌ண்டியின் ம‌ணியை அடித்துக் கொண்டே வ‌ந்த‌ அவ‌ன், எப்ப‌டியாவ‌து இவ‌ர் வில‌கிக் கொள்வார் என‌ நினைத்து, அவ‌ர் ப‌க்க‌ம் வ‌ரை வ‌ந்து, மோதிவிட்டான்.

ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ள் முன்னாலேயே தாத்தாவுக்கு காது கேட்ப‌து நின்றுவிட்டிருந்த‌து. வீட்டில் எல்லோரும் ஹியரிங் எய்ட் வைக்க சொல்லியும், இன்று வ‌ரை அது எதுக்கு, வேண்டாம் என்று ம‌றுத்து வ‌ந்தார். விபத்துக் கார‌ண‌த்தைக் கூறி தாத்தாவை மெஷின் வைக்கச் சொல்லி வற்புறுத்த, ஒரு வ‌ழியாய் ச‌ம்ம‌தித்திருக்கிறார்.

த‌லையில் லேசாய்க் கீர‌லுக்கு ம‌ருந்திட்டு, சிறாய்புக்களுக்கு க‌ட்டுபோட்டு நீட்டிய‌ கால்க‌ளுட‌னும், பெட்டில் புத்த‌க‌ம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர்முன் நிற்க‌, பொக்கை வாய் திற‌ந்து (ப‌ல் செட் அத‌ற்கான‌ அழ‌கிய‌ ப்ளாஸ்டிக் ட‌ப்பாவில் நீந்திக் கொண்டிருந்த‌து), என்னை கிட்டே வ‌ர‌ச் சொல்லி, ஆர‌த் த‌ழுவிக் கொண்டார். எங்கே அழுதுவிடுவாரோ என்று ச‌ற்று வில‌கி த‌ள்ளி நின்று கொண்டேன்.

ச‌த்த‌மாக‌ப் பேசினால் கூட அவருக்கு கேட்கவில்லை. சைகையில் நான் பேச‌, வாய் திற‌ந்து தாத்தா ப‌தில‌ளித்தார். காற்றில் க‌ல‌ந்த‌ க‌ல‌வையாய் வார்த்தைக‌ள் தெறித்த‌து.

பையைப் பிரித்து, அழகாக‌ ஜொலித்த‌ ஹிய‌ரிங் எய்ட் பேக்கிங்கை தாத்தாவிட‌ன் நீட்டினேன். இந்த‌ முறை அழுதே விட்டார்.

ஒன்றைப் பிரித்து, எப்ப‌டி ஆப்ப‌ரேட் செய்ய‌ வேண்டும் என‌ விள‌க்கினேன். ஆசையாய் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தார். சட்டைப் பொத்தானை விட சிரியதாக இருந்தது. அவ‌ர‌து இட‌து காதில் பொறுத்தினேன்.

"சுத்தமா வெளியில தெரியலைல ..." என்று குஷியானார்.

ப‌ட‌ப‌ட‌வென‌ ப‌ட்டாசு வெடிப்ப‌தாய் உண‌ர்ந்திருப்பார் போல‌. ரொம்ப நாட்கள் கேட்காமல் இருந்த காது, அவருடைய மெல்லிய சத்தத்தையும் பெரிதுபடுத்தி வாங்கியிருக்குமோ, என்னவோ ... லேசாக‌ சிலிர்த்துக் கொண்டார்.

"தாத்தா, எப்படி இருக்கீங்க. இப்ப கேட்குதா ?" என்றேன்.

"நல்லா இருக்கேன்ட நந்து. நல்லா கேட்குது என்று ப‌தில் அளித்தார்". பெருமித‌ம் தாங்க‌வில்லை அவ‌ருக்கு. விட்டால் எழுந்து ஓடி விடும் அள‌விற்கு முக‌த்தில் ஆன‌ந்த‌ம்.

"தனியாவா இங்க வந்தே. வேற யாரும் கூட வரலை ?!" என்று கேட்டார் தாத்தா.

"ஃப்ரெண்டோட வந்தேன் தாத்தா. அவன் இங்க பக்கத்தில ஏதோ வேலை இருக்குனு போயிருக்கான். அநேகமா இப்ப கீழே காத்திருப்பான். சரி உடம்பப் பார்த்துக்கங்க. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க. நான் காலையில் வர்றேன்." என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் நான் மருத்துவமணை செல்ல மதியம் ஆகிவிட்டது. சோகமாக இருந்த தாத்தாவை ஏறிட்டு நோக்கினேன். 'நேற்றிரவு குழந்தை போல இருந்தாரே...' "தாத்தா, என்னாச்சு உங்களுக்கு ?" என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பக்கத்தில் சென்று படுக்கையில் அமர்ந்த என்னைக் கூர்ந்து கவனித்தார். அதே கேள்வியை மீண்டும் கேட்க ...

"இந்தக் கிழம் விடுற அட்டகாசம் தாங்கலை. என்றும் இளமைனு நெனைப்பு போல. ஆனா என்ன, காசு பார்ட்டி. முழிக்கிற முழியப் பாரு" என்றார் நர்ஸ். "பாத்து பேசுங்கம்மா, அவர் காதுல விழுந்திரப் போகுது" என்ற ஆயாவிற்கு, "இந்த டமாரத்துக்கா ..." என்ற எகத்தாளமான நர்ஸின் பேச்சில், 'அட ஈஸ்வரா !!!' எனக் கூசிப் போனார் விவேகான‌ந்த‌ன்.

"ஏங்க, வந்த உடனே கெளம்பணும்னு சொல்றீங்க. அப்படி இப்படி கொஞ்ச நேரம் இருக்க மாதிரி பாவ்லா காட்டுங்க‌. கைய கால புடிச்சு விடுங்க. நடிக்கவாவது தெரியுதா. உங்க அப்பாவுக்கும், சரி, பையன் தான் நம்ம மேல பாசமா இருக்கானு தோணும். கொட்டிக் குமிச்சு வச்சிருக்கதெல்லாம், அப்புறம் உங்க தங்கச்சி தட்டிகிட்டுல போயிடுவா... விட்டுருவேனா ..." என்று முழக்கிய மருமகளை ஏறிட்டார். வ‌ழிச‌லாய் ஒரு சிரிப்பை காட்டினாள். 'ஐயோ ராமா ... எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாள் சிரித்த இந்த‌ சிரிப்புக்கு இதுதான் அர்த்த‌மா ?!' என‌ நொந்து போனார்.

வ‌ந்த‌வ‌ரும், போன‌வ‌ரும் ... 'கெழ‌ம் எப்ப‌ போகும், எட‌ம் எப்ப‌ காலியாகும்' என்ற‌ நிலையிலேயே பேசிச் செல்ல, கவுண்டமணி ஒரு படத்தில் செய்வது போல 'என்ன‌ க‌ரும‌த்துக்கு இந்த‌ மெஷின் ந‌ம‌க்கு இனி, பேசாம காது கேட்காம இருக்கதே நல்லதுடாப்பா !!!' என ஹியரிங் எய்டை க‌ழ‌ட்டி குப்பையில் விசிறி அடித்த‌தை தாத்தா சொல்ல‌, வாய் பேசாது மௌனியாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.