Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, June 19, 2011

நம்மை கவர்ந்த தமிழ் திரை உலகம்: பாகம் 2

நம்மை கவர்ந்த தமிழ் திரை உலகம்: தொடர்ச்சி .....
முள்ளும் மலரும்

சிறு வயதில் (ஒரு 10 வயது இருக்கும்) ஒருவர் என்னிடம் கேட்டார். "முள்ளும் மலரும்", இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியுமா? நான் "thorn and flower " என்று கூறினேன். அவர் "thorn too blossoms " என்று என்னை திருத்தினார். முள்ளும் மலரும் படத்தை பார்க்காத வரையில் என்னால் இந்த அர்த்தத்தை உணர்ந்திருக்க முடியாது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு தமிழ்த் திரை உலகில் ஒரு தனி அடையாளம் உருவாக்கி தந்த ஒரு படம் என்றால் அது மிகையாகாது. தான் முதன் முறை திரைக்கதை எழுதிய "வள்ளி" திரைப்படம் "முள்ளும் மலரும்" படத்தில் ரஜினி காந்துடைய தங்கை வேடத்தின் பெயரின் பின் அழைக்கப்பட்டது என்றால் நாம் ரஜினியின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.
கதாபாத்திரங்கள்
காளி (ரஜினி) - கிராமத்தில் ஒரு வின்ச் இயக்குனர். வள்ளி (ஷோபா ) - ரஜினியின் தங்கை . மங்கா (படாபட் ஜெயலக்ஷ்மி ), குமரன் (சரத்பாபு ) - இஞ்சினியர்.
kadhai
அப்பா அம்மா இல்லாத சூழ்நிலையில் தங்கையை பாசத்தோடு வளர்த்து மறுக்கிறான் காளி. வின்ச் இயக்குனாராக வேலை செய்து கொடிருக்கும் போது, கிராமத்து மக்களுக்கு இலவசமாக வின்ச்-ஐ அவ்வப்போது இயக்கி அவர்களை கீழிருந்து மேல் வர உதவுகிறான்.
ஒரு நாள், புதிய இஞ்சினியராக குமரன் பதவி எடுக்கிறார். கிராமத்திற்கு வரும் முதல் நாள், ரஜினி வின்ச்-ஐ இலவசமாக இயக்குவதை பார்த்து விட்டு, இனி இயக்கக் கூடாது என்று உத்தரவு இடுகிறார். அப்போது முதல் காளிக்கும், குமரனுக்கும் இடையே ஒரு கசப்புணர்ச்சி உருவாகிறது.
மங்கா அந்த ஊருக்கு வருகிறாள். மங்காவுக்கும் காளிக்கும் இடையே காதல் உருவாகிறது. அதே நேரத்தில் குமரனும் வள்ளியைக் காதலிக்கிறார்.
இந்த சூழ்நிலையில், ஒரு நாள் குடி போதையில் பாட்டு பாடி விட்டு ரோடில் தூங்கும் போது, ஒரு லாரி காளியின் கையில் ஏறி, காளி ஒரு கையை இழக்குமாறு சூழ்நிலை உருவாகிறது. அதன் மூலம் அவன் வேலையையும் அவன் இழக்கிறான்.
அப்போது, குமரன் வள்ளியை பெண் கேட்கிறார். காளி "எனக்கு உங்களை பிடிக்கவில்லை" என்று கூறி மறுத்து விடுகிறான். அப்போது மற்ற உறவினர்களும் மங்காவும் சேர்ந்து குமரன்-வள்ளி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். காளியிடம் உனக்கு வர இஷ்டம் இருந்ததால் வா, இல்லா விட்டால் இந்த கல்யாணம் நாங்கள் நடத்தி வைப்போம் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

இறுதிக் காட்சி
உறவினர்கள் வள்ளியை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு கிளம்புகிறார்கள். அப்போது காளி வள்ளியிடம் மட்டும் கேட்கிறான். உனக்கு இந்த அண்ணன் மேல் இஷ்டம் இருந்ததால் என்னோடு வா என்று. அவளும் அரை மனதோடு மறுத்து விட்டு கல்யாணத்துக்கு கிளம்புகிறாள். காளி மன வேதனையோடு பின்னால் நிற்க எல்லோரும் போக ஆரம்பிக்கிறார்கள். கடைசி நிமிடத்தில். வள்ளி பின்னால் திரும்பி அண்ணனை பார்த்து விட்டு, ஓடி வந்து கட்டி பிடித்து, எனக்கு என் அண்ணன்தான் முக்கியம் என்று கதறி அழுகிறாள். காளி அவளை கட்டி அணைத்துக்கொண்டு திரும்பிப பார்த்து, ஸ்தம்பித்து நிற்கும் உறவினர்களிடம் "எல்லாரும் இப்போ தெரிஞ்சிக்கிடீங்களா, என் தங்கச்சிக்கு யாரு முக்கியம்னு? எனக்கு இனிமே ஒண்ணுமே வேண்டாம். நான் இப்போ ஒரு காரியம் பண்ண போறேன். என் தங்கச்சிக்கு பிடிச்சவருக்கே அவள கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம்" அன்று கூறி அவளை அனுப்பி வைக்கிறான்.
படத்தின் சிறப்புகள்
மணி ரத்னத்தினால் மிகவும் அபிமானிக்கப்பட்ட இயக்குனர் மகேந்திரன் ஆவார். மக்களின் இயல்பான வாழ்க்கையை தத்ரூபமாக எடுப்பதில் மகேந்திரன் தன்னுடைய இந்த முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்துள்ளார்.
இந்த ரஜினிகாந்துடைய நடிப்பு இன்னும் எல்லோராலும் பாராட்டப்பட்டு, இந்த ரஜினி எங்கே உள்ளார் என்று ரசிகர்கள் கேட்கும்படி நடித்துள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்யும் செய்தியை சரத்பாபு சொல்லும்போது, "ரெண்டு கை, ரெண்டு காலு இல்லாட்டி கூட பொழச்சுக்குவான், இந்த காளி ஒரு கெட்ட பையன் சார்" அன்று சொல்லும்போது தியேட்டரே அதிரும்.
பின்னணி இசைப்பதிவு செய்யப் படாத இந்த திரைப் படத்தின் பதிவை (Positive) விநியோகஸ்தர்கள் பார்த்த போது, வாங்க மறுத்து , பின்னணி இசை முடிந்தவுடன், போட்டி போட்டு வாங்கி இருக்கிறார்கள். பின்னணி இசை இந்த படத்தின் உயிர் நாடி என்று சொன்னால் அது மிகை ஆகாது. செந்தாழம் பூவில் பாட்டு, காலத்தால் அழியாதது. அடி பெண்ணே, நித்தம் நித்தம் நெல்லு சோறு, ராமன் ஆண்டாலும் ஆகிய பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.

Saturday, February 21, 2009

பஞ்சமில்லை பஞ்சமில்லை

பஞ்சமில்லை பஞ்சமில்லை

எங்கே என்ன பஞ்சம் என்று கேட்கிறீர்களா?
அந்த கால படங்களின் பெயர்களுக்கும் சர், இந்த கால படங்களின் பெயர்களுக்கும் சரி. பஞ்சமே இல்லை.

தமிழ் படங்களின் பெயர்கள் ஒரு பெரிய சுற்று (cycle) முடிந்து அடுத்த சுற்று ஆரம்பித்து விட்டாற்போல் இருக்கிறது.
அந்த கால படங்களில் சிலவற்றில் விநோதமானவை சில:

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
மணாளனே மங்கையின் பாக்கியம் (
அசட்டுப்பிள்ளை (1943)
மடசாம்பிராணி (1939)
குமாஸ்தாவின் பெண் (1941)
காலேஜ் குமாரி (1942)
டம்பாச்சாரி (1935)
டேஞ்சர் சிக்னல் (1937)
திகம்பர சாமியார் (1950)
கலிகால மைனர் (1945)
குட்டி (1937)
சகடயோகம் (1946)
சாந்த சக்குபாய் (1939)
சிரிக்காதே (1939)
பக்கா ரௌடி (1937)
பஞ்ஜாப் கேசரி (1938)
பிழைக்கும் வழி (1948)
பைத்தியக்காரன் (1947)
மாயா மச்சீந்திரா (1939)
மூன்று முட்டாள்கள் (1936)

இந்த கால தமிழ் படங்களின் சில அபத்தமானவைகளும், சில விநோதமானவைகளும் இதோ:

பொய் சொல்ல போறோம்
ஓடி போலாமா
வெண்ணிலா கபடி குழு
சற்று முன் கிடைத்த தகவல்
கதைன்னா சும்மா இல்லை
கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி
அதே நேரம் அதே இடம்
பேட்டை முதல் கோட்டை வரை
துபாய் ராணி
குளிர் 100 டிகிரி
மாயாண்டி குடும்பத்தார்
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு
குண்டக்க மண்டக்க
தெனாவட்டு திமிரு
திருட்டு பயலே
தொட்டி ஜயா
எம்டன் மகன்
நீ வேணும்டா செல்லம்
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
சிவா மனசுல சக்தி

இது போதாதென்று ஆனா ஆவன்னாவிலிருந்து ஒன்று இரண்டு என்று ஒன்றையும் விடு வைக்கவில்லை நம் தமிழ் திரையுலகம்:

உதாரணம்:

அ ஆ இ ஈ
ABCD
ஆதி
123
ரெண்டு
Plus 2
நியூட்டனின் 3ம் விதி
4 students
ஐந்தாம் படை
ஆறு
7G Rainbow colony
அந்த ஏழு நாட்கள்
சென்னை 28
வருஷம் 16
16 நாட்கள்
16 வயதினிலே
1977
February 14th
June R
டிசம்பர் பூக்கள்

பொருட்களின் பெயர்களிலும் சில படங்கள்:

விசில்
வில்லு
வேல்
கோவில்
கொக்கி
கிரீடம்
தொலைபேசி
தாஜ் மகால்
சூரியன்
ஜீன்ஸ்
பாறை
நிழல்கள்
ஆல்பம்

பெயர் பஞ்சம் ஏற்பட்டு ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களிலும் சில பெயர்கள்:

ஜி

பொய்
பொரி
தாஸ்
தம்
பாபா
பாலா
ரன்
சாமி
கிரி
கஜா
பையா

கீழ்கண்டவைகளை எத்துடன் சேர்ப்பது?

ஐ லவ் யூ டா
அபியும் நானும்
மதுரை சம்பவம்
குரு என் ஆளு
அந்தோணி யார்
அடடா என்ன அழகு
அங்காடி தெரு
அச்சமுண்டு அச்சமுண்டு
ரைட்டா தப்பா

பிரபல பாடல்களை நினைவூட்டும் பெயர்களும் சில:

நினைத்தாலே இனிக்கும்
ஒளியும் ஒலியும்
அலையோடு விளையாடு
எங்க ராசி நல்ல ராசி
யாவரும் நலம்
காதலன் காதலி
குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
சொல்ல சொல்ல இனிக்கும்
சிந்தனை செய்
வானம் பார்த்த சீமையிலே
என்னை தெரியுமா

ரிப்பீட்டே! படங்களும் சில:

ஜகன் மோகினி
பில்லா
வாலிபன் சுற்றும் உலகம்
திருவிளையாடல் ஆரம்பம்
ராமன் தேடிய சீதை
நான் அவனில்லை
God Father
தசாவதாரம்

Tuesday, June 24, 2008

தசாவதாரம்

தசாவதாரம் திரைப் படத்தை என்னுடன் பேர்ட் த்யேட்டர்ல பார்த்த 100-120 பேருக்கும் இந்தப் படம் பிடித்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த விமர்சனம் சற்று பெரியதாக இருக்கப் போகிறது. எனவே கமலையோ, அல்லது இந்தப் படத்தையோ பிடிக்காதவர்கள் அனைவருக்கும் வருகைக்கு நன்றி, தடயம் அடுத்த அத்தியாயம் வெளிவரும் போது பார்ப்போம். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

படத்துக்கு வாங்கன்னு சொல்லி என் நண்பர் ஒருவரை வரச்சொன்னேன், அவர், "நான் கொஞ்சம் பிஸி, நீ பாத்துட்டு வந்து கதை சொல்லு, நான் டிவிடில வரும்போது பாத்துக்கரேன். அதோட நான் வந்தா என்னைத் தெரிஞ்சவங்க என் வாயைக் கிண்டுவாங்க, நான் ஏதாவது சொன்னா 'கிறுக்கன்'-ன்னு சொல்லுவாங்க வீணா சண்டைதான்னு" சொல்லிட்டார், அதனால அவர் பிடுங்கள் இல்லாமல் ஆனந்தமா படம் பார்த்துட்டு வந்தேன்.

படம் புரியலை, கதை சாதாரண மக்களுக்கு சத்தியமா புரியாது, என்னய்யா இது அசினுக்கு ஒரு டான்ஸ் இல்லை, கவர்ச்சி காட்டின மல்லிகா ஷெராவத்தை பாதிலயே கழுவேத்திட்டாங்க, படம் எந்த ஊர்ல நடக்குதுன்னு ஒரு மண்ணும் புரியலைன்னு யோசிக்கரவங்க ஜோரா ஒரு தடவை கமலையும், வேணும்னா என்னை மாதிரி சில பேரையும் திட்டிட்டு போங்க.

கதை, ஒரு உலக மகா பயங்கர கிருமி அதை வெளியில விட்டா உலகில பலர் அழிந்து விடுவார்கள் என்று அதைக் பத்திரமாக காப்பாற்ற நினைக்கும் ஒரு சாதாரண விஞ்ஞானியின் கதாபாத்திரத்தில் கமல் (கோவிந்தராஜ் ராமசாமி நாயக்கர்). இதைத் தொடர்ந்து கமல் சந்திக்கும் பலரில் மற்ற 8 கமலும் எலும்புகூடாக போய்விட்ட ஒரு கமலும் அடங்குவர். இந்த கதையை ஹாலிவுட்டில் டாம் க்ரூய்ஸ், வில்பர் ஸ்மித் அல்லது வேறு ஒருவர் நடித்திருந்தால் அதைப் புகழ்ந்து பக்கம் பக்கமாக எல்லோரும் பேசி இதைப் போல ஒரு படம் தமிழில் வருவதற்கு இன்னும் 100-150 வருஷம் ஆகும்ன்னு ஆருடம் சொல்லிகிட்டு இருப்போம், அப்படி ஒரு படம் வந்ததும், அட போங்கய்யா கதையே புரியலை, கிருமியாம், ஒரு சின்ன டப்பாவில இருக்குமாம் அது உலகத்தையே அழிக்குமாம் சும்மா புருடா விடாதீங்கன்னு சொல்லி தாளிக்கிறோம்.

எங்கள் உறவினர் ஒருவர், 10 கமலஹாசனின் குணாதிசயங்களை விவரமாக ஒருவர் ஆங்கிலத்தில் விளக்கியிருப்பதை எனக்கு அனுப்பினார், அதை அப்படியே இங்கு தந்திருக்கிறேன். முக்கியமாக இதை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியாது.

To: For the ones who criticize Kamal for Dasavathaaram.
One thing we had noticed is why people didn't get the real subtext and reason for the various roles and hence the title. If you knew the real dasavatharams of Lord Vishnu and their characters you can appreciate the script more. Let me explain, starting with the best adapted role:

1. Krishna avatar - Vincent Poovaraghavan
Lord krishna is actually a dalit, he is dark-skinned [shyamalam]. He saved draupadi when she was being violated and he was the actual diplomat in mahabharatham. Lord krishna dies of an arrow striking his lower leg. Now look at how vincent was introduced.. he appears when asin is about to be molested and he saves her like draupadi. Vincent is the dalit diplomat, fights for land issue [soil issue to be exact] and dies from the metal rod striking his leg. Oh even five of vincent's men are drugged at P. Vasu's.. sounds familiar???
2. Balarama avatar - Balarama naidu
This is an easy given. as the name suggests and the role personifies you can easily get it.
3. Mathsya avatar - Ranagaraja nambi
Nambi is thrown into water in an act of trying to save lord from being thrown into sea, though vainly. what more clue do you want?
4. Varaha avatar - Krishnaveni paatti
During the mukunda song, krishnaveni paatti does varaha avatar in the shadow puppetry. The frame freezes on it for a second. there is the clue. Moreover, in varaha avatar lord actually hides earth so as to protect life forms. Here too krishnaveni hides the germs - life form inside the statue so as to protect.
5. Vamana avatar - Kalifulla khan
Remember in vamana avatar, lord vishnu takes the vishvaroopa, that is the giant form! Hence the giant kalifulla here symbolises vamana avatar.
6. Parasurama avatar - Christian Fletcher
Parasurama is actually on an angry killing spree and killed 21 generations of the particular kshatriya vamsa. Hence the real KILLER... Guess what thats what our Fletcher is! He comes around with the gun [modern upgrade for axe] and kills everyone around. I have to check if he kills 21 people though.
7. Narasimha avatar - Shingen Narahashi
First of all the name itself is a play on the words singam [means lion in tamil] and narasimha [the avatar being symbolised]. Lord Narasimha manifests himelf to kill the bad guy and he also teaches prahaladha.In the movie, he shows up to kill the killer fletcher! and is also a teacher.. Lord Narasimha had to kill the asura with bare hands and hence the martial arts exponent here.. get it?
8. Rama avatar - Avatar Singh
Lord Rama stands for the one man one woman maxim, kind of symbolising true love.. Here Avatar portrays that spirit by saying that he loves his woman more than anything and wants to live for her.
9. Kalki avatar - Govindaraj Ramasamy
As you know, the hero in kaliyug can be none other than the Kalki avatar!!!
10. Koorma avatar - Bush
This is the most loose adaptation I couldn't clearly comprehend. But if you look at the real koorma avatar, the lord is the turtle/tortoise that helps in stirring the ksheera sagara and bringing out the amruth.This essentially creates war among the devas and asuras. Similarly today Bush facilitates war between you know whom... May be Kamal also indicates that this avatar the characteristics of a tortoise...
"இதெல்லாம் சரி, நீ என்ன சொல்ல வர்ரே அதைச் சொல்லு அத விட்டுட்டு அடுத்த ஆளு சொல்றதை ஏன் எங்களுக்கு சொல்றே"ன்னு திட்டாதீங்க. இது இந்த இவர் சொன்ன மாதிரி நிஜமாகவே தசாவதாரமா இல்லையான்னு தெரிஞ்சுக்கரதுக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. எனக்கு, ஒரு படத்தை ரசிக்கத் தேவையானது, நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல இயக்கம், நல்ல ஒளிப்பதிவு, நல்ல பின்னனி இசை, பாடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய பாதிப்பில்லை, தொய்வில்லாத கதைக் களமும் திறமையான படப் பகுப்பும் போதும். இவையெல்லாம் இந்தப் படத்தில் இருக்கிறது.

ஒரு கலைஞன் (சொல்லப் போனால் மிகச் சிறந்த கலைஞன்) 10 வேடங்களில் நடித்து, அதற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி (அங்கங்கே இயக்கியும் இருப்பார் என்று நினைக்கிறேன்), ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கியது போல தந்திருப்பது மிகப் பெரிய விஷயம்தான். சில பாத்திரங்கள்(கலிஃபுல்லா கான், அவத்தார் சிங்) அதிகம் வேலையில்லாமல் வெறும வளைய வருவது போல இருக்கிறது. இதுவும் தவிர்க்க முடியாத ஒன்று, எல்லோருக்கும் பேசப் படக்கூடிய அளவில் வசனமும் முக்கியத்துவமும் இப்படிப் பட்ட ப்ரமாண்டமான படத்தில் சாத்தியமில்லை. மகா மகா கலைஞன் நாகேஷுக்கே படம் முழுவதுக்கும் ஒரு பக்கம் அளவுதான் வசனம் என்றால் மற்றவர்களைப் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை.

ஒரு சைவ சமயத்தை சார்ந்த சோழன்(நெப்போலியன்) எப்படி சாதாரணத் தமிழ் பேசினார் (ஒத்துக் கொள் நம்பி)? பள்ளி கொண்ட பெருமாளை நிஜமாகவே கடலில் தூக்கி எறிந்தார்களா? கிருமி தாக்கிய சில நிமிடங்களுக்குப் பிறகுதானே கடல் நீர் பொங்கி வருகிறது அதற்குள் அந்தக் கிருமி பரவியிருக்காதா? அமெரிக்காவிலிருந்து வரும் வில்லன் கமலுக்கு எப்படி ஹீரோ கமல் இந்தியா வந்திருப்பது தெரியும்? அதுவும் ஏர்போர்டில் எங்கிருக்கிறார் என்பது எப்படித் தெரியும்? எப்படி வீடியோ காமெராவில் கைத்துப்பாக்கியை மறைத்து கொண்டு வரமுடியும்? எப்படி வில்லன் போகிற போக்கில் எல்லோரையும் கொன்று குவிக்க முடியும்? அவர் கடைத்தெருவில் பெரிய களேபரத்தை ஆரம்பித்த பிறகு போலீஸ் ஆஃபீஸர் பலராம் நாயுடு எங்கே போனார்? இப்படி பல கேள்விகளைக் கேட்கலாம், ஆனால் இவையெல்லாம் கதையின் ஓட்டத்தை சற்றும் குலைக்கவில்லை என்பதுதான் நிஜம். கடைசியில் 2004-ல் சுனாமி வந்ததே ஒரு மிகப் பெரிய இழப்பை தவிர்க்கத்தான் என்று கதையை முடித்திருக்கிறார்கள். அது சரியா தவறா என்று ஆராய்வது எனக்கு தேவையில்லாத ஒன்று.
முடிவாக, என்னைப் பொறுத்தவரையில் இது கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். 13 கமலுக்காக (10 கமல் + கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கமல்கள்) கண்டிப்பாக பார்க்கவேண்டும். கமலைப் பிடிக்காதவர்கள் கதாபாத்திரங்களின் நல்ல ஒருங்கிணைப்புக்காக பார்க்கலாம் அல்லது அசிங்க நடனமாடாத கதாநாயகிக்காகப் பார்க்கலாம் அல்லது கமல் அங்கங்கே அள்ளித் தெளித்திருக்கும் பல நல்ல கருத்துக்களுக்காகப் பார்க்கலாம் அல்லது க்ராஃப்பிக்ஸ் மூலம் பல காட்சிகளைத் தத்ரூபமாக தந்திருப்பதற்காகப் பார்க்கலாம் அல்லது ஒரு க்ராதகச் சுனாமியை கண் முன் கொண்டுவந்து அன்றைய கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியதற்காகப் பார்க்கலாம் கதையை தொய்ய விடாமல் செலுத்தியதற்காகப் பார்க்கலாம் அல்லது மனதைக் கரைக்கும் பாட்டி கமலுக்காகப் பார்க்கலாம் அல்லது தெலுங்கு உச்சரிப்பால் கலகலக்க வைக்கும் பலராம் நாயுடு கமலுக்காகப் பார்க்கலாம் அல்லது நடிப்பால், கண் அசைவால, தெய்வ பக்தியால் நம் அடி வயிற்றை பிசைந்து நம் கண்களைக் குளமாக்க முயன்ற ரங்கராஜ நம்பி கமலுக்காகப் பார்க்கலாம் அல்லது பல இன்னல்களுக்கு இடையில் இப்படி ஒரு ப்ரமாண்டமான படத்தை தயாரித்தவருக்காகப் பார்க்கலாம் அல்லது இப்படத்தை இவ்வளவு சிறப்பாக இயக்கிய ரவிக்குமாருக்காகப் பார்க்கலாம். இத்தனைக் காரணங்கள் போதாது என்றால், குருவி, பீமா போன்ற த்ராபை படங்கள் போதும் என்று இருந்து விடலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Monday, April 14, 2008

தமிழ்த்திரையுலகம் ஒரு பார்வை

2004ல் தமிழ் சங்க இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை. நம் சினிமா நான்கு வருடங்களில் மாறிவிடுமா என்ன? இன்னமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.


தமிழ்த் திரையுலகம் ஒரு பார்வை


நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைவாணர், நடிகவேள், நாகேஷ், சாவித்திரி, பானுமதி, பத்மினி மற்றும் பலர் நடிப்பில் கொடி கட்டிய, இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம், மகேந்திரன், ஸ்ரீதர் மற்றும் பலர் இயக்கத்தில் புதிய சகாப்தங்கள் படைத்த தமிழ்த் திரையுலகம் இன்று எங்கே உள்ளது என்று பார்ப்போமா?

முதலாவது தற்போது தமிழ்ப்படத்தில் நடிக்கத் தேவையான தகுதிகள். நடிகர்களை முதலில் எடுத்துக்கொள்வொம். கதாநாயகன் காவல் அதிகாரியாக அல்லாத எந்த ஒரு சமீபத்திய திரைப்படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். கதாநாயகன் ஒரு வாரம் மழிக்காத தாடியுடன் காணப்படுவார். காரணம் பளிச்சென்று காணப்படும் நடிகரைத் தமிழ் மக்கள்(??) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்(!!) ஸ்ரீகாந்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணக்காட்சியில் கூட தாடியுடன் இருப்பார். இவர் தாடி வைத்திருந்தால் தரணி முழுவதும் இவர் பின்னால் வந்து விடுமா? தாடி இல்லாவிடில் இவர் தலையைக் கொய்து விடுவார்களா? ஏன் இந்த மூட நம்பிக்கை? அஜீத்!! இவர்தான் இந்த பாரம்பரியத்தை அமர்க்களத்தில் ஆரம்பித்து வைத்தார். அந்த உரிமையில் காவல் அதிகாரியாகக்கூட தாடியுடன் வலம் வருகிறார் ஆஞ்சநேயாவில். விஜய்!! காதலை ஏகபோக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு படத்திற்குப் படம் இறுதிக் காட்சிகளில் காதலைப் பற்றி அறிவுரைகளை அள்ளி வழங்கும் இவருக்கு தாடி வளர்வதே இல்லை. மிகவும் கடினப்பட்டு வளர்த்த சிறு தாடியுடன் ரசிகர்களை(!!!) மகிழ்விக்கிறார். காவல் அதிகாரியாக சாமியில் வரும் விக்ரம் கூட இந்த பாரம்பரியத்தை மாற்ற மனமில்லாமல் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு ஒரு காட்சியில் தாடியுடன் நடனமாடி ரசிகர்களை ஜென்ம சாபல்யம் அடைய வைக்கிறார். ஏன்! நம் சூப்பர் ஸ்டாரும் பாபாவில் ஒரு வார தாடியுடன் தோன்றி ரசிகர்களைப் பிறந்த பயனை அனுபவிக்க வைக்கிறார். உலக நாயகன் மாத்திரம் இளப்பமா? காணுங்கள் பம்மல் கே சம்பந்தம். கதாநாயகனுக்குப் பொதுவாக எல்லாமே தெரியும். பாட்டு பாடுவார், நடனம் ஆடுவார். எந்த இசைக்கருவியையும் சரளமாக வாசித்து கதாநாயகியை வியக்க வைப்பார். கராத்தே, சிலம்பு, குத்துச்சண்டை உட்பட சகல சண்டை முறைகளையும் அறிந்தவர். மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து இவர் கையாளும் பல யுக்திகள் அபத்தங்களாக முடிவதுண்டு. தன் ரசிகர்(!!!)களுக்கு என்ன பிடிக்கும் என்பதை இவர் அறிந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை நடிக்க வந்து இவரை ஒதுக்கியிருப்பார்கள்.

தமிழ்ப்படக் கதாநாயகிக்குக் குறைந்த பட்சத் தேவை, தமிழ்நாட்டில் பிறந்திருக்கக் கூடாது. அப்படிப் பிறந்திருந்தாலும் மும்பையில் வளர்ந்ததாகப் பொய் சொல்ல வேண்டும். பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் தோன்றி வேண்டுமென்றே அரைகுறைத் தமிழில் பேசி ரசிகர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்ய வேண்டும். வாய்ப்புகள் குறையும் போது, எனக்கு முதலிடம், இரண்டாம் இடம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை என்றும் வாய்ப்புகள் அறவே இல்லாதபோது கன்னடத்திலும், கேரளத்திலும் முழு கவனம் செலுத்துவதாகவும் சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை, ஆனால் அதுவே ஆபாசமாக மாறி விடக் கூடாது எனபதில் இவர் உறுதியாக இருப்பார். படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடும்போது 'சங்கர் சார் படம் என்பதால் ஒத்துக்கொண்டேன், என் மார்க்கெட் ஒன்றும் சரிந்து விடவில்லை' என்று சப்பைக்கட்டு கட்டுவார். ஒரு இயக்குனரின் முதல் மனைவியாகவோ அல்லது புகழ் பெற்ற நடிகரின் இரண்டாவது மனைவியாகவோ சரணடைந்து தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடிக்க முடிவு செய்யும் போது இவரது வாழ்க்கை முழுமை பெறுகிறது.

அடுத்து நகைச்சுவை. நகைச்சுவை நடிகருக்கு பொது அறிவு தேவை. 'அடப்பாவி, நீ என்ன ஜார்ஜ் புஷ்ஷா? நா என்ன பின் லேடனா? மெட்ராஸ் என்ன டோரா போராவா?' என்று தற்காலிக உலக நடப்புகளைப் பற்றிப் பேசி ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும். தரக்குறைவான விஷயங்களைப் பற்றிக் கூச்சப்படாமல் பேச வேண்டும். சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை சரளமாக உபயோகப்படுத்தத் தெரிய வேண்டும். மனைவி கணவனைக் கரிக்கட்டை என்றும், கணவன் மனைவியைக் குறத்தி என்றும் அன்பாக அழைத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். நாயகன் எவ்வழியோ இவர் அவ்வழி. நாயகன் பேட்டை ரௌடி என்றால் இவர் உதவியாளனாக வந்து சண்டையும் இடுவார். நாயகியிடம் நாயகனின் உள்ளே இருக்கும் ஈர மனதை பக்குவமாக எடுத்தும் சொல்வார். நாயகன் கல்லூரி மாணவர் என்றால் நாற்பது வயதாகும் இவர், கல்லூரியில் தேறாமல் பல வருடங்கள் படித்து வரும் முதிய மாணவராக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார். நாயகன் உயர் காவலதிகாரி என்றால் இவர் கான்ஸ்டபிளாக வந்து பெண் கான்ஸ்டபிளிடம் சில்மிஷங்கள் புரிய வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் வீணடிப்பதில்லை. மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் விளாசும் இவர் தற்காப்புக்கு தன் ஜாதிச் சங்கங்களை நாடுவார்.

இயக்குனருக்கு வருவோம். இவருக்கு இயக்கத் தெரிந்திருக்க அவசியமில்லை. ஒரு கதை வைத்திருப்பார். அந்தக் கதை இது வரையில் எந்தப் படத்திலும் சொல்லப்படவில்லை என்பதில் அசாத்திய நம்பிக்கை உள்ளவர். இந்தக் கதையை அங்கீகரிக்கும் ஒரு அப்பாவி தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் இயக்கம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைப்பவர். குழந்தைகள் கூட எளிதாக ஊகிக்கும் ஒரு விஷயத்தைத் துருப்புச் சீட்டாக எண்ணி இறுதிக் காட்சியில் அமைப்பவர். ஒரு மும்பை நாயகி, அவளை இது வரை எந்த நாயகனும் செய்திராத வகையில் வித்தியாசமாகக் காதலிக்கும் ஒரு வார தாடி வைத்த நாயகன், இறுதிக் காட்சியில் நாயகன் நாயகிக்காகச் செய்யப்போகும் தியாகம், புதிதாகப்(!!) போடப்பட்டது என்ற உறுதிமொழியொடு இசையமைப்பாளர் அளித்து அயல்தேசத்தில் படம் பிடிக்கப்பட்ட சில பாடல்கள் ஆகியவற்றை நம்பி 'A, B சென்டர்ல ஓடிரும் சார், C மாத்திரம் பிக் அப் ஆயிடுச்சின்னா 2 வாரத்தில போட்டபணம் எடுத்திடலாம்' என்று தயாரிப்பாளருக்கு ஆசை காட்டுபவர். 'வழக்கமான முக்கோணக் காதல் கதை என்றாலும், ஒரு மாறுபட்ட கோணத்தில் (270 டிகிரீஸ்???) எடுத்திருக்கிறோம் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர். படம் ஓடவில்லை என்றால் 'ரசனை கெட்ட ஜென்மங்கள்' என்ற பட்டத்தை மக்களுக்குத் தருபவர்.

இசையமைப்பாளர், இவருக்கு இவரே சூட்டிக்கொண்ட ஒரு பட்டம் இருக்கும். மறு உபயோகத்தில் அபார நம்பிக்கை கொண்ட இவர் ஒருபோதும் சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிப்பதில்லை. பொருள் சார்ந்த முறை (OOM) யைப் பயன்படுத்தி இவர் மென்பொருள் தயாரிக்க முடிவு செய்தால் கிரேடி பூச் போன்றவர்கள் இசைத்துறைக்கு மாற வேண்டி இருக்கும். இசை அமைப்பதை ஒரு தொழிற்சாலை நடத்துவது போலக் கருதும் இவருக்குத் தரக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை இருப்பதில்லை. திரைப்பட அரங்குகளில் சிறுகடை நடத்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் அபிமானத்துக்கு உரியவர். பாடல்களில் கூடுமான வரை அர்த்தம் இருக்கக் கூடாது. அகராதியில் உள்ள வார்த்தைகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். தம்பியின் நினைவு தினத்தை 'போடாங்கோ' என்று பாடி அனுசரிக்கலாம். ஓடிப் போவது கல்யாணத்திற்கு முன்பா பின்பா என்று உபயோகமான ஆலோசனைகளை அள்ளி வழங்கலாம்.

கதைக்கு செல்வோமா? மிக எளிது. நாயகன் நாயகியை எப்படியாவது காதலிக்க வேண்டும். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும். நாக்கை வெட்டிக் கொள்ளலாம். பார்க்காமல் காதலிக்கலாம். தொலைபேசியில் காதலிக்கலாம். முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் சந்தித்து எந்த தகவலும் பரிமாரிக்கொள்ளாமல் பிரிந்து விட்டு, பின்னர் படம் முழுவதும் பரஸ்பரம் தேடலில் செலவு செய்யலாம். காதல் ஒருமுறைதான் வரும், இரண்டாவது முறை வந்தால் அது காதலே அல்ல என்று காதலையே கண்டு பிடித்தது போல வசனம் பேசலாம். கண்டிப்பாக பாடல்கள் வேண்டும். நாயகனும் நாயகியும் டூயட் பாடும்போது சம்பந்தமே இல்லாமல் இருபது ஆண்களும் இருபது பெண்களும் பின்னால் ஆடி, தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
நாயகன் முதல்வராக இருந்தாலும் சரி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடனம் ஆடி ரசிகர்களைத் திருப்தி அடையச் செய்ய வேண்டும். தென்னவனில் விஜய்காந்த் தேர்தல் அதிகாரியாக வந்து நீலம், மஞ்சள், ஊதா, சிகப்பு மற்றும் பல கலர்களில் கிரணுடன் நடனம் ஆடி அரசு அதிகாரிகள் மீது நமக்குள்ள மரியாதையை உயர்த்துவது போகப் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை நிறைவு செயகிறார். நாயகனுக்கோ நாயகிக்கோ இறுதிக் காடசியில் வரும் நோய்கள் ஜனங்களின் மருத்துவ அறிவை அதிகரிக்கும். இறுதியாக சராசரி ரசிகன். இவனுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறியத் தலையைப் பிய்த்துக்கொள்ளும் திரைப்படக் கலைஞர்களுக்கு இவனுக்கே அது தெரியாது என்ற ரகசியம் தெரியாது. தன் அபிமான நடிகனின் உயர்ச்சியில் ஜென்ம சாபல்யம் அடையும் இவன், தன் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியைத் திரை அரங்கின் வெளியே கள்ள டிக்கெட் வாங்குவதிலும், VCD தேடி அலைவதிலும் செலவு செய்கிறான். முக்கால்வாசி நேரம் இளித்தவாயனாகவே இருக்கும் இவனே மொத்த திரையுலகின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாயகன்.

நன்றி
ச.சத்தியவாகீஸ்வரன்.

Sunday, September 23, 2007

டூரிங் டாக்கீஸ்

என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்னும் இந்த டூரிங் டாக்கீஸ் உயிர் பெற்றிருப்பதைப் பல கிராமங்களில் இன்றும் நாம் காணலாம். சுமார் இருபது ஆண்டுகள் முன்னால் இது போல் எங்கள் ஊரிலும் ஒரு டாக்கீஸ் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் அதன் நினனவுகள் இன்றும் மனதில் நிற்பவை. அதன் நினைவாய் எழுதிய எனது கவிதை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_22.html

Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.



சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!

Sunday, June 17, 2007

சிவாஜி எனும் அக்கப்போர்

"அமெரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பும் இளைஞர் (!) வில்லனை சமாளித்து, லஞ்சம் கொடுத்து ஊருக்கு நல்லது செய்கிறார் !"

இந்த ஒரு வரி (பழைய) கதைக்கு,


படமாக்க செய்த செலவு 80 கோடிக்கும் மேல்.

பில்ட்அப்-களுக்கு பஞ்சமே இல்லை.

நின்றால் ஒரு செய்தி, நடந்தால் ஒரு செய்தி.

சென்னையில் பால் குடம், பீர் குடம் அபிஷேகம் (எங்கே போய் முடியுமோ ?!)

10 ரூபா டிக்கட் ப்ளாகில் (நம்ம blog இல்லிங்கோ !) 500 ரூபாய்க்கு சென்னையில் விற்றிருக்கிறார்கள்.

திருச்சியில் 500 ரூபா நோட்டில் காந்தி இருக்குமிடத்தில் இவர்.

முன்னாள், இன்னாள் முதல் அமைச்சர்களுக்கு பிரத்தியேக காட்சி (அதிக கமிட்மென்ட் இல்லாத நமக்கே ஆயிரம் வேலை இருக்கும்போது, இவர்களால் எப்படி இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது என்று நினைக்கிறபோது வியப்பாகத் தான் இருக்கிறது !)

இதெல்லாம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், இணையச் செய்திகளிலும் வெளியானவை.


வலைப் பதிவர்கள் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல,

முதல் விமர்சனம் போட்டாச்சில்ல என்கிறார் ஒருவர்.

ஒருவர் சொல்கிறார் பாபா படம் போல் ஆகவேண்டும் என்று.

இன்னொருவர் சொல்கிறார் 100 நாள் என்ன 1000 நாள் ஓடும் என்று.

படத்தை பார்ப்பதைப் புறக்கணியுங்கள் என்கிறார் கோபத்துடன் ஒருவர்.

logic விசயத்தில் நம்ம ஊர் என்றில்லை வெளிநாடுகளில் அடிக்காத கூத்தா என்கிறார் இன்னொருவர்.

அவர் கர்நாடகத்துக்காரர், தமிழனுக்கு உதவி செய்வதில்லை என்கிறார் மற்றவர்.

கர்நாடகம், காவிரி, தமிழன், ஒரு கோடி, இப்படி பல விசயங்களையும் அலசி அதிரவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


சரி, விசயத்துக்கு வருவோம்.

பால் குடம் எடுப்பவருக்கும், பீர் பாட்டில் உடைப்பவருக்கும் நோக்கங்கள் இருக்கலாம். அவர்களைப் பொருத்தவரை என்றாவது ஒருநாள் 'தலைவர்' அரசியலுக்கு வருவார். நாமலும் நாலு காசு பார்க்கலாம் என்று.

படித்த, பண்புள்ள, பல நாடுகளில் வாழும் நாமும் 'சிவாஜி' பில்ட்அப்புக்கு சத்தமில்லாமல் உதவுகிறோம். ஒரு படம் நல்லா இருந்தா பாருங்கள். தாராளமா விமர்சனம் செய்யுங்கள். ஆனால் இன்றைக்கு தமிழ்மணத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நாம் காண்பது 'சிவாஜி' பற்றிய செய்தியே. இது சற்று வேதனை தரும் விசயம்.

நாம் பார்க்க, படிக்க, அனுபவிக்க, பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது, ஒரு பொழுதுபோக்குப் படத்திற்கு இத்தனை நேரம் செலவழிப்பது நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்தக் கால சூழலுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமான ஒன்று என்று மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தப் பொழுதுபோக்கு கொஞ்சம் ஓவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

உங்களுடைய பதிவுகள் வெறும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும், site traffic-க்கும் ஆக இருக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை நீங்கள் நிராகரிக்கலாம். உங்களுக்கும் பீர் பாட்டில் உடைப்போருக்கும் வித்தியாசமில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்.

இந்தா அந்தா என்று படமும் ரிலீஸாகிவிட்டது. இத்துடனாவது 'சிவாஜி' எனும் அக்கப்போர் ஓயவேண்டும் என்றும் மனம் குமுறும் வாலிபர் (!)

Friday, June 15, 2007

சிவாஜி விமர்சனம்

அதோ வருகிறது, இதோ வருகிறது என்று பூச்சி காட்டிக்கொண்டு இருந்த சிவாஜி படம் வெளிவந்துவிட்டது. வந்தே விட்டது.... ரஜினி ரசிகர்கள் செய்யும் திவ்ய பாலாபிஷேக அலம்பல் பார்த்து புல்லரித்துப் போனேன். பாலை விரயம் செய்தால் பரவாயில்லை. இப்போது பீருக்கு வந்திருக்கிறார்களாம். கலி முத்திவிட்டது. இப்படி மக்களும் வவ்வால்களும் அத்தியாவசிய பொருட்களை விரயம் செய்வதை தடுக்க ஒரு சட்டம் வரவேண்டும்.

சில விமர்சனங்கள் இதோ...

இட்லிவடையாரின்
குற்றப் பத்திரிக்கை (FIRஆம்).... பாவி. தலைவருக்கே FIRஆ?

டுபுக்கு டவுன்லோடு செய்து பார்த்தேன் என்கிறார். சிவாஜின்னு பேரு இருக்கறதால மக்களோட குசும்பு ஜாஸ்தியாயிருக்கு...


கொஞ்சம் விலாவாரியான (அந்த விலா இல்லை) விமர்சனம், சக்கரபாணியோடது... ரஜினி இவ்வளவு நாள் சென்றும் பட்டையைக் கிளப்புவதற்கு காரணத்தை நச்சுன்னு கடைசி பாராவில் கோடி காட்டியிருக்கிறார். ரிச்மண்ட் மக்கள் இந்த வாரக்கடைசியில் ஜென்மசாபல்யம் அடைவார்களாக!

ஆனால் வலையில் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லாவிடில் இந்த மாதிரி சிவாஜி பஞ்ச் டயலாக் எல்லாம் படிக்க நேரிடும். மற்றபடி எல்லா 'சிவாஜி' விஷயங்களுக்கும் சிறில் அலெக்ஸ் வலையில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார். அங்கே போய் பார்த்து திவ்ய தரிசனம் செய்யுங்கள்.

கடைசியாக - குதிரையின் வாயிலிருந்தே..... (தயவு செய்து பாலையும், பீரையும் கணினித் திரையில் கொட்ட வேண்டாம்)