Showing posts with label சாரணர். Show all posts
Showing posts with label சாரணர். Show all posts

Sunday, September 27, 2009

நடையா, இது நடையா...

சென்ற வார இறுதியில் சாரணர்களுடன் தெரியாத்தனமாக ஒரு முகாமுக்கு போக ஒத்துக் கொண்டேன். முதுகில் மூட்டையை சுமந்து கொண்டு ஏழு மைல் நடந்துபோய் முகாம் அமைத்து சமைத்து சாப்பிட வேண்டுமாம். வீட்டில் நம் இடுப்பளவை வைத்து ஒரு சிக்ஸ் சிக்மா பிராஜக்ட் ஆரம்பித்திருப்பதால், இரண்டு நாள் தப்பிக்கலாம் என்று சரி செய்யலாம் என்று கிளம்பினேன். பக்கத்து முகாமில் Wild Women Weekend நடக்கிறது, 21 வயது பெண்குழந்தைகளுக்கு இயற்கையோடு ஒன்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்கள் என்று வேறு ஆசை காட்டினர். அப்படியும் வருகிறேன் என்று சொன்ன நிறைய தந்தையர்குலம் கடைசி நிமிஷத்தில் கழண்டுகொண்டனர். என்னடா விஷயம் என்றால் எனக்குத் தெரியாமல் ஏழு மைல் நடை, ஒன்பதாகியிருந்தது. அடப்பாவிகளா. நம்மை வைத்து இப்படி ஒரு காமெடியா?

நாங்கள் போன இடம் அருமையான இடம். வர்ஜினியா பீச்சிற்கு தெற்கே சுற்றும் நீர் சூழ்ந்த் ஒரு தீபகற்பம்(அப்படி என்றால் என்ன என்று கேட்கக்கூடாது). ஒரு மைல் குறுக்களவில் நீண்டிருக்கும் ஒரு நிலப்பரப்பு. வர்ஜினியாவிலேயே இந்த மாநிலப் பூங்காவிற்குத்தான், மிகக்குறைந்த மக்கள் போவார்களாம். ஏன் தெரியுமா - இந்தப் பூங்காவிற்கு நீங்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோதான் போகலாம். காரில் முடியாது. வயதானவர்களுக்கு சுற்றிக் காண்பிக்க ஒரு டிராம் போகிறது. அதில் ஏற பிறப்புச் சான்றிதழ் எல்லாம் கேட்பார்கள்.

நாங்கள் காலையில் கிளம்பியபோது பேருந்தளவில் இருந்த நம் வேனைப் பார்த்துவிட்டு ஐந்து வா/சாரணர்களை ஏற்றிவிட்டார்கள். போய் சேருவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. ஒருவன் Q94 வை என்கிறான், ஒருவன் 98 வை என்கிறான், ஒருவன் இவன் அடிக்கிறான் என்கிறான்... போங்கடா என்று பாய்ஸ் பாட்டு கேட்கவைத்தேன். அதில் ஒருசில வார்த்தைகள் தமிழில் இருந்தால் அவர்களுக்கு சரியாகப் புரியவில்லை. 'அடியே கொல்லுதே' பசங்களுக்கு கொஞ்சம் ஓகே. Car Talk அது இது என்று ஓட்டிவிட்டேன். பதினோரு மணிக்கு போய் சேர்ந்தோம். கொஞ்சம் நடந்துவிட்டு கொண்டு வந்த மதிய உணவை சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டோம். முதலில் ஒரு தார் ரோடு. நல்லவேளையாக மேகமூட்டமாக இருந்ததால் வெயில்சூட்டில் இருந்து தப்பித்தோம். ஒரு கொடுமை என்ன என்றால், போன வழியில் கடலோசை கேட்கிறது, கடல் வாசம் தெரிகிறது, ஆனால் கடல் தெரியவே இல்லை. கடல்பக்கம் நெடுக்க மணல்குன்றுகள் கடலை மறைத்திருந்தன.


வந்த சிறுவர்களிலேயே சிறியதாக இருந்த பையனின் மூட்டை என் மூட்டையை விட கனமாக இருந்தது. கேட்டால் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் என்கிறான். அவனுக்கு நடக்க மிகவும் சிரமமாக இருந்தது. நம்முடைய புத்திர சிகாமணி ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே எனக்கு இது முடியாது திரும்பவேண்டியதுதான் என்றான். அதனால் அடுத்த ஒரு மணிநேரம் அவன் பக்கமே போகவில்லை. குட்டிப்பையனுக்கு துணையாக நடக்கிறேன் பேர்வழி என்று நானும் அவனுடன் மெதுவாக தவழ்ந்து போனேன்.

கூட வந்த சாரண ஆசிரியர் நாங்கள் நடக்கும் வேகம் ஒரு மணிக்கு ஒரு மைல், இந்த வேகத்தில் இரவு எட்டு மணியாகிவிடும் என்று வயிற்றில் புளியைக் கரைத்தார். ஒரு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தோம். 'அத்தியாவசிய பொருட்களில்' freezer ice pack போன்ற சில குப்பைத்தொட்டிக்கு போனது.

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். பெரிய சாரணர்கள் விரைவில் போய் சேர்ந்து திரும்ப வந்து பொடியன்களின் மூட்டைகளை சுமக்கிறோம் என்று விரைவாகப் போய்விட்டார்கள். நாங்கள் நாரை, மைனா, ஆர்க்டிக் டர்ன்(பையனின் உடான்ஸ்?) என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு மெதுவாகப் போனோம்.



பொடியனை கொஞ்சி கெஞ்சி நடக்கவைத்து மெதுவாகப் போய்க்கொண்டிருந்தோம். மகமாயி ஒரு போலீஸ்காரி ரூபத்தில் வந்து எங்களுக்கு அருகாமையிலேயே ஒரு கேம்ப் சைட்டில் இடம் கிடைத்திருக்கிறது என்று அருள் பாலித்தாள். மூன்று மைல் நடை மிச்சம். பசங்களுக்கும் அசுரபலம் வந்து ஒரேமூச்சில் முகாமை அடைந்தார்கள். மூட்டையை இறக்கிவைத்தேன். சுமை இறங்கியதும், கால்கள் தன்னாலே நடக்க ஆரம்பித்தன. விசித்திரமான அனுபவம்.





From False Cape State Park

கூடாரங்களை அமைத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம். யாருமே வராத இடம் என்பதால் பூங்கா மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு வகையான லாரல் மரங்கள் அடர்ந்த இடம் நாங்கள் தங்கியிருந்த இடம். தாழ்வாக பரந்து விரிந்த மரங்கள் எங்களூர் முந்திரிக் காடுகளை நினைவூட்டின. அமைதியான வளைகுடா எங்களை இளைப்பாற வைத்தது.

களைப்பெல்லாம் பெரியவர்களுக்குத்தான். பசங்கள் கடற்கரை போகவேண்டும் என்றார்கள். கிளம்பினால் கடற்கரை ஒன்றரை மைல் தூரம் :-(
கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு முகாமுக்குத் திரும்பினோம்.





From False Cape State Park

இரவு உணவு தயார் செய்தோம். வேறென்ன - கொதிக்கவைத்த நீரில் ராமென் நூடுல்ஸ். ஒரு ஆள் பையிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு எடுத்து எண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.





From False Cape State Park

இங்கே கேம்ப் ஃப்யர் எல்லாம் பண்ணக்கூடாது என்பதால் அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம். படுக்கையில் தலையை சாய்த்ததுதான் தெரியும். காலையில் உலகில் உள்ள புள்ளினங்கள் எல்லாம் என் கூடாரத்துக்கு வெளியே போட்ட கூப்பாட்டில்தான் எழுந்தேன். காலை உணவு கொதிக்கும் நீரில் ஓட் மீல். கூடாரங்களைக் கலைத்து, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பினோம். இந்த முறை கடற்கரை ஓரமாக நடை.

நல்ல வெயில். ஆனால் அலையோரமாக நடந்ததால் வெயிலின் சூடு தெரியவில்லை. கரையெல்லாம் நிறைய ஹார்ஸ் ஷூ நண்டு ஓடுகள் கிடந்தன. சிலவற்றில் முழு நண்டின் உடலே இருந்தது. அங்கங்கே குட்டியாக கருப்பில் சுருக்குப்பை மாதிரி கிடந்தது. மெர்மெய்ட் பர்ஸ் என அழைக்கப்படும் அந்தப் பை சுறா முட்டைகள் அடங்கிய பையாம். மேலும் சில பெலிகன்களைப் பார்த்தோம். ஒரு டால்பின் கும்பலையும் பார்த்தோம்.
From False Cape State Park
. கடைசி அரை மைல் கரையில் இருந்து உள்ளே பயணம். அப்போதுதான் வெயிலின் சூடு தாக்க ஆரம்பித்தது. கடைசி அரைமைல் பல்லைக் கடித்துக் கொண்டு விடுவிடுவென நடந்து காரை அடைந்தோம்.

நம்மூர் கர்நாடக சங்கீதம் மாதிரி இந்த மாதிரி நேரத்தில் எதுவும் உதவாது. வண்டியில் இன்னொரு பையனும் சேர்ந்து மொத்தம் ஆறு வா/சாரணர்கள். கிளம்பும்முன் ஒரு எச்சரிக்கை விடுத்தேன். ஏதாவது சண்டையோ சச்சரவோ ஆரம்பித்தால் இதுதான் நடக்கும் என்று ஒரு நிமிடம் ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டுக் காண்பித்தேன். அனைவரும் கப்சிப். வரும் வழியில் ரெண்டே ரெண்டு முறைதான் அந்தப் பாட்டை போடவேண்டி வந்தது.

மற்ற படங்களையும் பார்க்கிறீர்களா?

Thursday, June 25, 2009

இந்த வார சொர்க்கம்

சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நான் ஒரு சாரண முகாமில் இருக்கிறேன். வர்ஜினியாவின் ப்ளூரிட்ஜ் மலைத் தொடரில் இருக்கும் ஒரு பெரிய சாரண முகாம். புலஸ்கி கவுண்டியில் ஹிவாஸ்ஸி என்ற கிராமத்துக்கு அருகில். மலைகளும் சிறு நதிகளும் நிறைந்த இந்த இடம் இன்னொரு சொர்க்கபுரி.

இணையத்தொடர்பும் அலைபேசி தொடர்பும் வேலை செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  சொர்க்கத்தை அனுபவிக்காமல் இங்கே என்னய்யா செய்கிறீர்கள் என்பவர்களுக்கு - எல்லாம் உங்கள் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத்தான். சொர்க்கத்தின் ஒரு உதாரணம்...


இது என்ன என்கிறீர்களா?

எனது ஊஞ்சலில்(ஹம்மாக்) இருந்து எனக்கு தெரிவதெல்லாம் இதுதான்! போய் இன்னும் இன்றைக்கும் இந்த வாரம் மீதமிருக்கும் வேலைகளை எல்லாம் முடியுங்கள் சரியா? நான் கொஞ்சம் தூங்க வேண்டும்.

அடுத்த வாரம் விவரமாக...


விவரமாக அடுத்த வாரம்.

Monday, May 18, 2009

ஓல்ட் ரேக் மலை

சென்ற வார இறுதியில் சாரணப் படையுடன் ஒரு முகாமுக்கு சென்றிருந்தேன். வெறும் முகாம் அல்ல. சொர்க்கபுரி! சந்தேகமிருந்தால் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.


அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஒரு பாகமான ஷேனன்டோவா தேசியப்பூங்காவில் இருக்கிறது ஓல்ட் ரேக் மலை (Old Rag Mountain).
ரிச்மண்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி இரவு ஒன்பதரை மணிக்கு ஓல்ட் ரேக் மலையடிவாரத்தை அடைந்தோம். பார்க்கிங் லாட் காலியாக இருந்தது. எங்கள் சாரணப்படையைச் சேர்ந்த புண்ணியவான்கள் இருவர் முதலிலேயே போய் கூடாரங்கள் அமைக்க இடத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

கும்மிருட்டில் மரங்களூடே தடவிக் கொண்டே போய் எங்கள் கூடாரங்களை அமைத்தோம். ஒரே பாறைகளும், மரக்கிளைகளும் நிறைந்த தரையில் அதிர்ஷடவசமாக சமதரை கிடைத்தது எனக்கு. தலையில் கட்டிக்கொள்ளும் லைட் இல்லையென்றால் அதோகதிதான் இந்த முகாம்களில். கூடாரம் அமைத்துவிட்டு வாசனாதி பண்டங்களை ஒரு கரடிப்பையில் போட்டு கட்டி மரத்தில் தூக்கிக் கட்டினோம். வாசனாதி பண்டங்களை கூடாரத்தில் வைத்துக்கொண்டால் கரடி வரும் என்று கரடி விட்டார்கள்.

காலையில் எழுந்து பார்த்தால் உலகமே பாலுமகேந்திரா காமிராவில் பிடித்த மாதிரி இருந்தது.



நான் கொஞ்சம் உலாத்திவிட்டு ஆற்றில் இறங்கி விளையாடிவிட்டு மேலே இருக்கும் வீடியோவை எடுத்துவிட்டு வருவதற்குள் உள்ளங்கையில் அடங்கும் கேஸ் அடுப்பை வைத்து தண்ணீர் சுடவைத்து டீ,காப்பி எல்லாம் தயாராய் இருந்தது. அதையும் ஓட் மீல்-ஐயும் ஒரு கைப்பார்த்துவிட்டு மதிய உணவுக்கு சான்ட்விச் செய்துகொண்டு கிளம்பினோம்.

முதல் நாள் ஈயடித்துக் கொண்டிருந்த பார்க்கிங் லாட்டில் சைக்கிள் நிறுத்தக்கூட இடம் இல்லை. அவ்வளவு கும்பல். காலையிலிருந்தே திருவிழா கூட்டம் போல மக்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். எங்களைத் தவிர இரண்டு சாரணர்படைகள், நிறைய கல்லூரி மாணவர்கள், மலையேறும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களும் வந்து குவிந்திருந்தார்கள். ஓல்ட் ரேக் மிகவும் பிரசித்தமாம். கடினமான பாதைகளும், பாதையிலேயே கடும்பாறைகளும் கொண்டு ரொம்ப சேலஞ்சிங் மலையேற்றம் இது என்று வயிற்றில் புளியைக் கறைத்தார்கள் கூடவந்த மகானுபாவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் ஆரம்பித்தது. மூடுபனியும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி பக்கத்து மலை தரிசனங்கள் கிடைக்க ஆரம்பித்தன. மேலே போகப்போக பாறைகள் பாதையிலே பாறைகள் அதிகம். சில இடங்களில் வெறும் பாறைதான். பாறைகளுக்கு நடுவே குறுகலான பாதை, நெருங்கிய பாறைகளின் இடையே குறுகலான பாதை என்று பலவிதம். சில இடங்களில் பாறைகளுக்கு அடியே தவழ்ந்தும் போக வேண்டியிருந்தது. இங்கே பாருங்கள் கோவர்தன கிரிதாரி!




பாதையில் பாதி அடைத்துக் கொண்டிருக்கும் பாறை.



அடுத்தது பார்த்தால் ஒரு பெரிய கும்பலே தர்ம தரிசனத்திற்கு நிற்கிறது. நான் கியூவைப் பார்த்துவிட்டு சரிதான் இங்கேதான் லட்டு கிடைக்கும் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் அங்கே கிடைப்பது அல்வா. ஒரு குறுகலான பாதையில், இரண்டு பாறைகளைக் கடந்து செல்லவேண்டும் - அதுதான் இந்த பாதையிலேயே கடினமான இடம்.



அம்மாடி! அதை ஒரு வழியாக கடந்து ஒரு குகையில் புகுந்து வெளியேறி இரண்டு பாறைகளுக்கு இடையே இறங்கி சிக்கிக்கொள்ளாமல், கணுக்காலை சுளுக்கிக் கொள்ளாமல் தப்பித்து உச்சியை அடைவதற்குள் அம்மாடி - களைத்துவிட்டது. உச்சியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சுற்றிப் பார்த்தால் - பச்சைப்பசேல் என்று எங்கும் பச்சைப்போர்வை போர்த்திய உலகம்.



திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது மேலே இருக்கும் மலையைப் பார்த்தபோது. அங்கிருந்து இறங்குமுகம்தான். சிறிது இறங்கியபிறகு மழை பிடித்துக் கொண்டது. எல்லோரும் பாஞ்சோ எனப்படும் மேலாடையை அணிந்து கொண்டு அடைமழையிலும் விடாது நடந்தோம். எங்கள் குழுவில் இருந்த சிறுவர்கள் இருவரும் மிகவும் சோர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு என்ற பேரில் நானும் அவர்களுடன் மெதுவாக நடந்து வந்து அழகழகான பாலங்களைக் கடந்து முகாமை அடைந்தேன். மொத்த நடை ஏழு மைல்.

வந்து இளைப்பாறிவிட்டு அடுப்பு மூட்டி தண்ணீர் கொதிக்கவைத்தோம். இரவு உணவு நூடுல்ஸ். திடீரென மழை திரும்ப ஆரம்பித்தது. போட்டதை போட்டபடி கூடாரங்களுக்குள் பாய்ந்தோம். சமயோசிதமாக கொதித்துக் கொண்டிருந்த நீரை கோப்பையில் கொட்டிக்கொண்டு கூடாரத்துக்குள்....



Maggi cuppa mania saves the day!

பிறகு மழையிலே சமையல்பாறை மேல் ஒரு கூடாரம் கட்டி மற்றவர்களுக்கு சமைத்து பரிமாறி கூடாரத்துக்குள் கட்டையை சாய்த்ததுதான். காலையில் பறவை ஒலிக்குதான் எழுந்தேன். காலை உணவுக்கு பேகில், டீ! கூடாரங்களைப் பிரித்து, இடத்தை சுத்தம் செய்துவிட்டு (Leave No Trace), வீட்டுக்கு கிளம்பினோம். இன்னொரு அற்புதமான முகாம் இனிதே முடிந்தது.

மற்ற படங்களை இங்கே பார்க்கலாம்.