Showing posts with label சமூக சேவை. Show all posts
Showing posts with label சமூக சேவை. Show all posts

Thursday, March 04, 2010

மீனாவுடன் மிக்சர் - 18 {நாற்காலியில் எனக்கு ஒரு கர்சீப் போடறீங்களா?}

உலகத்திலேயே கஷ்டமான சில வேலைகள் என்னென்னன்னு என்னை நீங்க கேட்டீங்கன்னா, இப்படித் தான் நான் பட்டியலிடுவேன்-:

* ரத்த அழுத்த வியாதியை வளர்த்துக்காமல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுவது.
* மசால் வடையை ஒதுக்கி விட்டு மேரி பிஸ்கட்டோடு டீ குடிப்பது.
* உஸ்மான் ரோட்டுக்கு போய் நல்லி கடைக்குள் நுழையாமல் வருவது.
* ஜொள்ளோழுகாமல் சாம்பார் வடையை பத்தி நினைப்பது.
* தாய் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் வாழும் இந்திய மக்களுக்கிடையே சமுதாய உணர்வை வளர்க்கும்னு எதிர்பார்த்து தமிழ் சங்கம் போன்ற சமூக சங்கங்களை நிறுவி அதை கெட்ட பெயர் எடுக்காமல் நடத்துவது.

மரீனா பீச்ல நம்ம காந்தி சிலைக்கு பக்கத்துல இடம் கிடைச்சா வாங்கி போடலாம்னு ஒரு திட்டம் வச்சுருக்கேன். முதலமைச்சரோட கிருபை இருந்தா நடக்க வாய்ப்பிருக்கு. எதுக்கா? பல நாட்டு இண்டு இடுக்குகளிலே எல்லாம் பூந்து 'ஹலோ.......நாங்க இங்கயும் வந்துட்டோமே, இப்ப என்ன பண்ணுவீங்க?' ன்னு வில்லத்தனமான வெற்றி சிரிப்போடு சமூக சங்கங்களை நிறுவி நடத்தறாங்களே community volunteers, அவங்களுக்கெல்லாம் சிலை எழுப்ப தான்.

எதனால சிலருக்கு இப்படி ஒரு ஆசை? எங்கிருந்து இவங்களுக்கு வருது இந்த உந்துதல்? மாசா மாசம் குடும்பத்துக்கு படி அளக்குற கொட்டாவி விடும் உத்தியோகத்தையும் கஷ்டப்பட்டு செஞ்சுகிட்டு, வீட்டில் எந்நேரமும் விஸ்வரூபம் எடுத்து குஞ்சம்மாவா பிலிம் காட்டி கொண்டு, குழந்தைகளுக்கு முழு நேர (சம்பளம், பேட்டா இல்லாத அநியாயத்தை பத்தி இன்னொரு பதிவில் எழுதறேன்) டிரைவராவும் வேலை செய்துகிட்டு ஏன் இவங்களுக்கு இப்படி சமூகத்துக்கு குப்பை கொட்ட ஆசை? முக்கியமா எந்த கடை வைட்டமின் மாத்திரை சாப்பிடறாங்க இவங்கெல்லாம்? என்னடா இவ கேள்வி மேல கேள்வியா அடுக்கறாளேன்னு பாக்கறீங்களா? தருமி சிவன் கிட்ட சொன்னது போல எனக்கு கேள்வி மட்டும் தாங்க கேட்க வரும். ஹி ஹி.........

பல நாட்களா ஒய்வு கொடுத்து பாதுக்காத்து வச்சதுல நம்ம மூளை இன்னிக்கு வேலை செய்ய தயார்னு ஒரு இருமாப்புல இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ரெண்டு கப் ஹார்லிக்ஸ் கலந்துண்டு உக்காந்தேன். அஞ்சே நிமிஷம் தான். அப்படியே சோர்ந்து போயிட்டேன். உருப்படியா ஒரு விடையும் கிடைக்கலை. ஹார்லிக்ஸ் மேல இருந்த நம்பிக்கையே போயிடுத்துன்னா பாருங்களேன்!

சரி போறது, நமக்கு தான் விடை கண்டுபிடிக்க துப்பில்லை, ஊர் மக்கள் அபிப்பிராயம் என்னன்னு பார்ப்போம்னு காது கொடுத்து கேட்டதுல இதை தெரிஞ்சுகிட்டேன். பதவி ஆசை மற்றும் புகழ் ஆசை தான் இவங்களோட முக்கியமான உந்துதல்ன்னு சிலர் நம்பறாங்க.

இருக்குமோ? நாற்காலி மேலே ஆசைப்பட்டு தான் இந்த மக்களெல்லாம் இப்படி சங்கத் தலைவர், செயலர், காசாளர், உறுப்பினர் அதிகாரி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக மற்றும் விளையாட்டு தொடர்பு இப்படிப்பட்ட வேலைகளுக்கு எல்லாம் கை தூக்கராங்களோ? இந்த வேலைக்கு பணம் கூரையை பிச்சுகிட்டு கொட்டுமா? தினமலர் பத்திரிகை முதல் பக்கத்தில் இவங்க (நிர்வாக குழுவின்) போட்டோ வருமா? சன் டிவியில் இவங்களை நேர்முக பேட்டி எடுப்பாங்களோ? இவங்க நடத்தும் கலாசார நிகழ்ச்சிகளை ஊர் மக்கள் வானளாவ புகழ்வாங்களா? மற்றுமொரு பெரிய கேள்விக்கணைக்கு மன்னிக்கவும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் 'ஆமாம்'ன்னு நீங்க சொல்லறீங்களா? சமூக சேவை செய்ய முன் வர்றவங்களோட முக்கிய காரணங்கள் பதவி மற்றும் புகழ் ஆசை தான்னு நீங்க இன்னும் நம்பிநீங்கன்னா அடுத்த தேர்தல்ல எனக்கு ஒரு நாற்காலியில் கர்சீப் போட்டு வைங்களேன் ப்ளீஸ்? என் முகமும் தான் பத்திரிகையில் ஒரு தடவை வரட்டுமே!

வருஷத்தில் மூணு அல்லது நாலு முறை எங்க ஊர் தமிழ் சங்கம் அருமையான கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. இதுக்கு ரிச்மன்ட் ஊர் பெண்கள் சார்பாக நான் நிர்வாக குழுவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்கிறேன். ஏன்னா நாங்க அப்புறம் எங்கே போய் எங்களோட புது புடவையை எல்லாம் கட்டி நாலு பேருக்கு காமிக்கறது?

போன மாசம் நடத்தின நிகழ்ச்சி எப்பவும் போல் கலக்கலாக இருந்தது. எத்தனை குழந்தைகள் பங்கேற்றாங்க தெரியுமா? நாட்டியம், நாடகம், பாட்டுன்னு ரொம்ப அருமையா இருந்தது நிகழ்ச்சி. நடுவில் நான் தான் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன். தமிழ் dictionary கொண்டு போக மறந்துட்டேனா, பாத்தா குட்டி பசங்கல்லாம் சுத்த தமிழ்ல பேசி வயத்தில் கொஞ்சம் புளி கலக்கினாங்க. என் பள்ளி நாட்களோட செய்யுள் புத்தகங்களை தூசு தட்ட நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். டிவி தொகுப்பாளர்கள் நல்ல தமிழ் பேச பயிற்சி எடுக்க டீச்சர் தேடறாங்கன்னு கேள்விப்பட்டீங்கன்னா எங்க ஊர் பசங்களுக்கு ஒரு போன் போட சொல்லுங்க.

இப்படி ஒரு மூணு மணி நேர நிகழ்ச்சி நல்லபடியா நடக்கணும்னா குறைஞ்சது ஒரு மூணு மாசமாவது தமிழ் சங்க நிர்வாக குழு அதுக்கு அசராமல் உழைக்கணும். எத்தனை எத்தனை வேலை! ஹால் எடுத்து, மைக் செட்டப் செய்து நிகழ்ச்சிக்கு நடுவில் மக்கள் சாப்பிட டீ, பலகாரம் ஏற்ப்பாடு செய்து.... இது போல இன்னும் பல பல வேலைகள். இந்த உழைப்புக்கு ஒரு குட்டி கல்யாணமே பண்ணிடலாம். ஆனால் இதில் வருத்தம் என்னன்னா சக மக்களுக்காக, அவர்கள் கண்டு களிக்க என்று இந்த குழு இவ்வளவு உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பது பெரும்பாலும் ஒரு முழ நீள குத்தப் பத்திரிகை தான். சமோசாவில் உப்பு தூக்கல், டீயில் சர்க்கரை குறைச்சல், பெரியவங்க நிகழ்ச்சி ரொம்ப குறைவு - இது போல குற்றங்களை அடுக்கும் ஊர் மக்களுக்கு எங்க சங்கத் தலைவர் நிகழ்ச்சிக்கு நடுவே "இது எங்க சங்கம் இல்லை, உங்க சங்கம்." ன்னு அழகாக சொன்னார். நாமெல்லாம் வெளியாட்களாய் நின்னு குத்தம் சொல்லாமல், எல்லோரும் சேர்ந்து பங்கேற்றால் தான் நம்ம ஒரு சங்கம்னு சொல்லி கொள்ளரதுல பெருமைப்பட முடியும்னு நான் நினைக்கிறேன்.

நிர்வாக குழுவுக்கு மட்டுமில்லாமல், அத்தனை குழந்தைகளையும் வாரத்தில் பல முறை practice க்கு சளைக்காமல் காரோட்டி அழைத்துப் போன பெற்றோர்களுக்கும் ரிச்மன்ட் தமிழ் சமுதாயம் சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.

-மீனா சங்கரன்

Thursday, October 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 12 {ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்}

ஒரு வழியா நவராத்திரி சுண்டல் சாப்பிட்ட அஜீரணம் போய் இப்ப தான் மிக்சர் பக்கம் வர முடிஞ்சது. நான் எட்டிப்பார்க்காத இந்த சில வாரங்களில் ஏதோதோ அருமையான பதிவுகளெல்லாம் வந்திருக்கு தமிழ் சங்கத்துல. அதெல்லாம் படிக்கறத்துக்கு முன்னாடி என்னை அதிசயத்தில் ஆழ்த்தும் எங்க ஊர் தமிழ் பெண்களின் சமூக உணர்வைப் பத்தி உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை. கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?