Showing posts with label சதங்கா. Show all posts
Showing posts with label சதங்கா. Show all posts

Tuesday, March 14, 2017

கிராமத்தில் ஓர் நாள்

Photo Courtesy: Internet

இப்பொழுதெல்லாம் கொசுக்களும் தம் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.  அவை வருவதும் தெரிவதில்லை, கடிப்பதும் தெரிவதில்லை, பறப்பதும் தெரிவதில்லை.

ஒலி குறைக்கும் கருவி (silencer) பொருத்தி வரும் போலும்.   நம் காதுகளுக்கு வெகு அருகில் பறந்தாலும் ரீங்காரமெல்லாம் கேட்பதேயில்லை.  நமது டமாரம் தான் காலி என்று பயந்து, சுற்றும் முற்றும் புள்ளினங்களின் ஓசை கேட்ட பின் தான் நிம்மதி.

மேலும் குத்தூசி முறை (acupuncture) கற்றிருக்கும் போல.  அவைகளுக்குள்ளும் சந்தைப்படுத்துதல் (marketing), பயிற்சிக்கூடங்கள் (training), எல்லாம் இருக்குமோ என்னவோ?  ஏனெனில் தொழிலில் அத்தனை துல்லியம், கடிப்பதே தெரிவதில்லை.

சிறிது நேரம் கழித்து, என்னடா கால் பக்கம் சுர்க்குன்ற மாதிரி இருக்கிறதே என சுர்க்கிய இடத்தில் பட்டென அடித்தால், உள்ளங்கை விரல்களில் ரத்தம்.  அட கொசு!  அப்பாடா ஒன்றை அடித்தாயிற்று என கூர்ந்து கவனித்தால், ஒரு ரெண்டு மூன்று கொசுக்கள் எனது கால்களை வட்டமடித்துக் கொண்டிருந்தன, எங்கே எப்படி தரையிறங்கலாம் என.

இவை, நான் செய்யும் செயலுக்கு மிக்க இடைஞ்சலாய்ப் போனது.  ஆப்பக்கட ஆயா மாதிரி ஈ ஓட்டினால் நம்மை விட்டு போவதாய்த் தெரியவில்லை.  அப்பொழுது, ஆரம்பித்தது எனது அபிநயங்கள்.  ஏனெனில், ஆரம்பித்த செயலை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.  பாதியில் விட்டுவிட்டு வரவும் முடியாது, வந்தால் அந்த நாள் தொலைந்தது.  பரதநாட்டியம் முதல் பரோட்டா மாஸ்டர் வரை அத்தனை கலைஞர்களும் தோற்றனர் என் அபிநயத்தில்.

ஓர் அடியில் உயிர் போய்விடும் எனத் தெரிந்தும், அவற்றின் உருவத்தை விட பன்மடங்கு பெரிய விலங்கான மனிதர்களையே மிரட்டுவதை எண்ணி வியந்து, இன்றைய அதிகாலைப் பல் துலக்கலை வெற்றிகரமாக முடித்துக் கிணற்றங்கரையை விட்டு வெளியேறினேன்!

Tuesday, October 14, 2014

பாதயாத்திரைப் பயணம்

சனிக்கிழமை காலை ...

'எல்லாம் எடுத்திக்கிட்டாச்சா'னு ஒருமுறை பார்த்துக்கங்க என்ற அன்பான தங்கமணியின் அக்கறையில், தண்ணீர் குடுவை, சிலபல கொறிக்கும் பதார்த்தங்கள், குளிருக்கு ஒரு மென்கம்பளிச் சட்டை (fleece), ஐ.டி.கார்டு, பணப்பை (wallet), கைத் தொலைபேசி, எல்லாம் ரெடி.  கெளம்ப வேண்டியது தான்.  சரி, போய்ட்டு வருகிறேன் என்று, 'மேப் மை வாக்'ஐ கிளிக்கி ...

நான் ஒரு வழியாகப் போகலாம் என்றிருந்தால், 'அந்த வழிகள் பெரிய பெரிய சாலைகள், உயிருக்கு உத்திரவாதமில்லை.  அதனால், குறுக்கு சாலையிலயா (லிஸ்ட் அடுக்கப்படுகிறது) போயிட்டு மரியாதையா வாங்க.  எங்காவது மட்டையாயிட்டா உடனே கூப்பிடுங்க.  (மட்டையாயிட்டு எப்படிக் கூப்பிடமுடியும் ! :))  அப்பப்ப தண்ணி குடிச்சுங்கங்க, மறக்காம ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு எங்க இருக்கேனு இற்றைப்படுத்துங்க‌ (update).  எவ்வளவு நாள் வெயிலடிச்சுது அப்பலாம் கிளம்பாம, குளிர‌ ஆரம்பிக்கும் போது அப்படி என்ன நடைப் பயணம் வேண்டிக்கிடக்கு' என்று தங்கமணியின் குரல் மெல்லத் தேய்ந்து (fade) குறைய‌, வீட்டை விட்டு ஒருசில நூறு அடிகள் கடந்து அடியேனது பாதயாத்திரை துவங்கியது.  இலக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கலாம் என்று!

அதிகாலைக் குளிரில், கதிரவனின் ஒளியில் நடக்க ஆனந்தமாக இருந்தது.  சர்சர்னு சிற்றுந்தில் கடந்த சாலைகளில், ரொம்ப நேரமா நடக்கற மாதிரி தோன்றியது.  இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் இந்த சாலையிலேயேவா இருக்கிறோம் என்று தோன்றியது.  வழியில் ஆங்காங்கே நகர சபை(city council)க்கு என்னைத் தேர்ந்தெடுப்பீர் எனும் பதாகைகள் பல வீடுகளின் முன்பு அறிவித்திருந்த‌ன.  வருகிற நவம்பரில் தேர்தல்.  பெரிய சாலைகளில் நடப்பதற்கு தனிச் சாலையும், மறுபுறம் கடப்பதற்கு பொத்தானும்  இருந்தன.  சிறிய சாலைகள் தான் எதுவுமே இல்லாமல், கொஞ்சம் அச்சம் விளைவிப்பதாய் இருந்தன.  ஒரு குறுஞ்சாலையில், ஆளரவமின்றி இருக்க, திடீரென எதிரில் தூரத்தே இரு ஆண்கள்.  மனதில் கொஞ்சம் பீதி ஏற்படத்தான் செய்தது.  வெள்ளைக்காரர்களா இருந்தா (பொய் சொல்லமாட்டங்க எனும் நகைச்சுவை எண்ணம் மறந்து), பரவாயில்லை, வேறு எவராவதா இருந்து நம்ம ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று மனம் சிறிது யோசித்தது.  அந்த அளவிற்கு எல்லாம் போகவில்லை.  சற்றே நெருங்கி அவர்களைக் கடக்கையில், 'ஹவ் ஆர் யூ'  என்று அசோகன் பாணியில் அடிவயிற்றில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விட்டன‌ர்.  அப்பாடா என்றிருந்தது.


இந்த மாதிரி ஆட்கள் சிலநேரம் வழிமறிந்து கையில் எவ்ளோ வச்சிருக்கேனு கேட்டு, நம்மிடம் இருக்கத புடுங்கிட்டுப் பற‌ந்துடுவாங்கனு எல்லாம் கேள்விப்பட்டதினால, பையில் எப்பவும் ஒருசில பச்சை நோட்டுக‌ள் மேலாப்பல வைத்திருப்பேன்.  பின் பாக்கெட்ட்ல இருந்து எடுக்கக் கூடாதாம் .. ஏன்னா துப்பாக்கி தான் நாம் எடுக்கறோம்னு அவன் சுட்டுட்டு போய்டுவான் என்றெல்லாம் எனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து சிலபல பொத்தான்கள் அமுக்கி சாலைகள் கடந்து நகரப் பூங்கா அருகில் இருந்தேன்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் வந்து செல்லும் இடம்.  (கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறதா?:))  சனிக்கிழமை ஆதலால், பல்வேறு விளையாட்டுக்கள், பிறந்த பிஞ்சுக்களில் இருந்து பதின்ம வயது இளைஞர்கள் வரை.  ஸாஃப்ட் பால், பேஸ் பால், ஸாக்கர், இன்னும் பல பெயர் தெரியாத விளையாட்டுப் போட்டிகள் பல வண்ணங்களில் ந‌டந்து கொண்டிருந்தன.  நடைமேடையில் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள் இழுத்துச் செல்ல, அவைகளைத் தொடர்ந்திருந்தனர்.  எப்படித் தான் வளர்க்கிறார்களோ?  ஒரு நாய் கூட குரைக்கவில்லை, சண்டித்தனம் செய்யவில்லை, எப்படி என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்தது என்னுள்.

போட்டி நடக்கும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் பலர்.  தங்கள் தாத்தா பாட்டி, சொந்தங்கள், என அனைவரையும் கூட்டி வருகிறது இளைய தலைமுறை.  பூங்காவே ஒரு திருவிழா போல திகழ்கிறது.  காணக் கண் கொள்ளா ஆனந்தம்.  நம்மூரில் இது சாத்தியமா ?  எளிதாகச் சொல்லிவிடுவோம், 'வயசான காலத்துல இதெல்லாம் தேவையா' என ...

பூங்காவை சுற்றி வருகையில், விளையாட்டுத் தவிர குடும்பங்களாகப் பலர் அன்றைய மதிய உணவை கரி அடுப்புகளில் சுட்டுக் கொண்டும், அத்தோடு பல கேளிக்கைகளில் திளைத்தும் இருந்தனர்.  பூங்காவினுள் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் மென் நீர்த்தூவல்.  பல வண்ணங்களில் படபடத்துச் செல்லும் மீன்குஞ்சுகள்.  நீரோரங்களில் ஒற்றைவால் தவளைக்குஞ்சுகள்.  ஒருசில வாத்துக்கள்.  இவை எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வைக்கும் விதமாக ஒரு பெரிய பூந்தோட்டம்.  குளிர் ஆரம்பித்திருப்பதால், பூக்களின் விளைச்சல் குறைய ஆரம்பித்திருந்தது.

பூங்காவைக் கடந்து, மற்றொரு பெருஞ்சாலயில் நடையைக் கட்டிய போது தூரத்தே ஒருவர் ஓடி வருவது தெரிந்தது.  ஆணா?, பெண்ணா?, என்று அனுமானிக்கமுடியவில்லை.  சற்றே பெருஞ்சாலை ஆதலால் சர்சர் என்று சிற்றுந்துகளின் உறுமல்.  கிட்டே நெருங்க நெருங்க பதின்ம வயதுப் பெண் அவர்.  இழுத்துப் போர்த்திய மேலாடையும், அரை நிஜாரும், கையில் தண்ணீர் குடுவையும், காதுகளில் இசைக்குழாயும் சொருகி மெய்மறந்து, சற்றும் ஒரு ஜீவன் தன்னை எதிர்கொண்டு செல்கிறது என்ற எண்ணமில்லாமல் என்னை கடந்து விட்டிருந்தார்.

இதன் நடுவே அலைபேசி அழைப்பில் தங்கமணி.  சொல்றத கேளுங்க, அங்கே இருங்க, வண்டிய எடுத்துட்டு வர்றேன்.  எதுக்கு வீராப்பு என்று அடுக்க, வழக்கம் போல அவர்களது அன்பான எண்ணத்திற்கு வளையாமல், சிறிது இடைவெளி எடுத்து, நீர் அருந்தி, தின்பண்டங்கள் கொரித்து, வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  குளிரிலும் வந்த சூரியனின் கதிர்கள் கண்களைக் கூசின.  மதியம் ஆகி இருந்தது.  மேப் மை வாக்கை பார்த்தால், பன்னிரெண்டு மைல்கள் காட்டியது.  சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை.  துள்ளிக் குதிக்கலாம் என்றால் அப்போது தான் கால்களில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.  இன்னும் ஒன்னரை மைல்கள் நடக்க வேண்டும் வீட்டிற்கு.  நடந்து, ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நாள் நடைபயணத்தை முடித்துக் கொண்டாயிற்று!

நடப்பது சுகம் ! தொடரும் ...

Monday, October 06, 2014

ஹலோ, அபிதாபியா ? ...

Image credit: Google
ஹலோ, அபிதாபியா ? ...

ஏய் ... லூஸு ... ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பன்னிட்டு, அபிதாபியானு கேக்குற ... கட்டத்தொரைக்கிட்ட மாட்டுன கைப்புள்ள கத உனக்கும் ஆகிடும் சாக்றத ... என்றது கரகர குரல் மறுமுனையில்.

தொடைகள் கிடுகிடுக்க, கால்களை ஸ்டெடியாக வைத்துக் கொண்டு, ஆடும் கைகளையும் அடக்கி, ரிஸீவரை கெட்டியாகப் பிடித்தபடி, இரண்டு மூன்று முறை மென்று விழுங்கி ... நா, சாரினா, உங்க அட்ரெஸ் வெரிஃபய் பன்னனும் அதான் ... என்று இழுத்தான் ரங்கன்.

க்ரெடிட் கார்டா ?

இல்லனா

சோப்பு சீப்பு விளம்பரம் .....

நா ...

என்னடா நொன்னா ...

ரங்கன் விளக்கி சொல்கிறான் ... மறுமுனை கரகர குரல், 'அப்டியா ... ஆகட்டும் ... நல்லது ...எங்களுக்கும் டீஸர் போட்டு ஒலகத்த பயமுறுத்த வசதியா இருக்கும்' என்று ஹாஹாகித்து, 'நம்பர் நாலு ....' என்று ஆரம்பித்து பார்த்திபன் ஸ்டைலில் விலாசத்தை சொல்லியது.

நா, ஆஃப்கானிஸ்தான்ல பிள்ளையார் கோயிலா ?

டேய் திரும்பத் திரும்பத் தொல்ல பண்ற நீ... இங்க போன்ல சுட்டேனா அங்க நீ பிஸ் பீஸ் ஆயிடுவா ...

...

ஆமான்னா, மொத்தமா கட்டி கொண்டாந்து உங்க கேம்ப் நட்டநடுல ட்ராப் பன்னிடரேன்னா ...

ஆமான்னா ... ஆமான்னா ... திரும்பிப் பார்க்காம போய்டறேன்னா ....

டொக் என்று மறுமுனையில் போன் துண்டிக்கப்படுகிறது.

'ஆமா, ஒரு ஃபோன் ப்ன்றதுக்கே இந்த ஆட்டம் ஆடறியே, நீ எல்லாம் இந்த டாஸ்க்க எப்படி நிறைவேத்தப் போற' என்றான் ரங்கனிடம் நண்பன் விச்சு.

'இல்லடா ... என்ன ஆனாலும் பரவாயில்ல. இத்த பன்னா நாடு சுபிச்சம் அடையும்.   மக்களும் அவங்கவங்க வேலயப் பாப்பாங்க.  அழுகை குறையும் ... பொய் பித்தலாட்டம், சூது குறையும் ... வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே போகிற திருட்டுக்கள் குறையும் ... அவன் பொண்டாட்டிய இவன் இழுக்காம இருப்பான் ... இவன் பொண்ட்டாட்டிய அவன் இழுக்காம இருப்பான் ... அண்ணனும் தம்பியும் நண்பர்களா இருப்பாங்க ... நாத்தனார் கொழுந்தனார் நல்லவங்களா இருப்பாங்க ... உறவுகள் சிதையாம இருக்கும் ...அலுவலகத்துல காதல் செய்யாம வேல செய்வாங்க ... படிக்கிற வயசுல பிள்ளைங்கலாம் பள்ளிக்குப் போய் படிக்கும் ... சைல்ட் லேபர் குறையும் ...கிராமத்துல வெட்டுக் குத்து கொறஞ்சு நிம்மதியா இருப்பாங்க ... இதிகாசம் என்ற பேர்ல அடிக்கற ஜல்லி கொறயும் ... ஊரு நல்லா இருக்கும் ... வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுனு எல்லாம் நல்லா இருக்கும் ...மொத்தத்துல‌ நல்ல மழை பெய்யும் ...'னு ரங்கன் சொல்லிமுடிக்க, கையில் சோடாவோடு அருகில் இருந்தான் விச்சு.

நல்லாத் தான் இருக்கு, 'ஐ ஏம் வித் யூ, ரங்கா' என்று விச்சு சொல்ல, இருவரும் இருக்கப் பிடித்தனர் கரங்களை, டாஸ்க்கை நிறைவேற்ற‌ ...




Wednesday, September 24, 2014

தயிர்சாதம் (டே!)

எதெதுக்கோ 'டே (நாள்)' வைத்துக் கொண்டாடும் நாம், தயிர்சாதத்திற்கும் ஒரு டே வைத்துக் கொண்டாடவேண்டாமா?!.  இதை தமிழக முதல்வர் கவனதுக்குக் கொண்டு சென்று, ஒரு 'டே'வை உருவாக்கி, அதை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ஏனெனில் நாம தான் உலகெங்கும் வியாபித்திருக்கிறோமே!  பத்தாததற்கு வெள்ளையப்பர்கள் பங்குக்கும் தயிரை டப்பா டப்பாவாக உள்ளே தள்ள ஆரம்பித்திருக்கிறார்களே!  'யோக'ர்ட்னு பேர் போட்டதுனாலேயோ என்னவோ, இத்த சாப்பிட்டா யோகா பண்ணதுக்கு சமம்னு நெனச்சுட்டார்களோ என்னவோ!

'இட்லி', 'தயிர்சாதம்' என்றால் நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை.  அது ஒரு பழங்கால உணவு என்றும், நம் தகுதிக்கு ஏற்றது அல்ல என்றும் நினைப்பவர் உண்டு.
Photo Credit: Google
இந்த எண்ணிக்கை எனது நண்பர்கள் வட்டத்திலேயே அதிகம்.  பல காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.  ஆனால், இவர்கள் இதன் அருமை தெரியாதவர்களே!  பள்ளி காலம் முதல் கல்லூரி வரை பிரம்ம முகூர்த்ததில் உலை வைத்து கதிரவன் வருகைக்கு முன்னரே டப்பா டப்பாவாக எங்களுக்கு கட்டுசாதம் கட்டி அனுப்பும் எனது தாயாரின் கைவண்ணத்தில் வாரத்திற்கு மூனு நாளாவது நம்ம ஹீரோ தயிர் சாதம் இருப்பார்.  இது பல வீடுகளில் நான் கண்டதுண்டு.  தாய்மார்களுக்கு சுலபம் என்றாலும், நம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் உணவும் கூட. என்னைப் போல சோறுகட்டிச் செல்லும் கூட்டத்தில், இதுபோல பலரின் மதிய பிரதான உணவு தயிர்சாதம்.

அப்படி என்னதான் இவற்றில் ஈர்ப்பு எனப் பார்த்தால், இவற்றிற்காக தொட்டுக் கொள்ள வைக்கும் பதார்த்தம் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம்.  இட்லிக்கு ஒரு சாம்பார், அவியல், தேங்காய் சட்னி, மிளகாய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, மல்லிச் சட்னி என அடுக்கிக் கொண்டே போவது போல, தயிர் சாதத்திற்கும், மோர் மிளகாய், உருளைக் கிழங்கு மசாலா பொரியல், வாழைக்காய் பொரியல், தக்காளிப் பருப்புப் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி, சுண்டைக்காய்ப் பச்சடி, பலவகை வற்றல்கள், இது எதுவுமே இல்லை என்றால் ஒரு விரல்நுனி ஊறுகாய்  என கல்யாணவீட்டு மளிகை சிட்டை கணக்கா அடுக்கலாம்.

Photo Credit: Thulasi teacher
வீடுகளில் செய்வது போக தயிர்சாதத்திற்கென பேர் போன (?!) கோயில் உண்டக்கட்டிகளும், உணவகங்களும், நம் நினைவிற்கு வருபவை.  எங்க ஊரு பெருமாள் கோயில் தயிர்சாதம், அப்படியே நெய் வடியும்.  பொங்கலில் போடுவதற்கு பதில் தயிர்சாதத்தில் ஊற்றியது போல இருக்கும்.  கடுகும், உளுந்தும், வரமிளகாயும் போட்டு தாளித்து, அப்படியே ஒரு கை வில்லல் நம் கையில் போடுவார் பெருமாள் கோயில் அர்ச்சகர்.  அப்படியே வழுக்கிட்டுப் போகும் நம் தொண்டைக்குள்.  பிறகும் உள்ளங்கையில் நெய் வடியும்.  இதுபோக சென்னை போன்ற பெருநகர உயர்தர உணவகங்களில், தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டு பலநூறுகள் செலவழிப்போரும் நிறைய உண்டு.

தேச வரையரையின்றி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தயிர்சாதம்.  அப்பேர்ப்பட்ட தயிர்சாதத்திற்கு டே போடுறோமோ இல்லியோ, இப்ப ஒரு பதிவு போட்டாச்சு :)

Friday, September 05, 2014

குரு என்பவன் யார் ?

மாதா, பிதா, குரு, தெய்வம்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! ... அருணகிரியார்

எல்லோருக்கும் ஆசான் (குரு) வேண்டும்.  ஆசான் இல்லாத வாழ்க்கை, ட்ரைவர் இல்லாத வண்டியில் போகிற மாதிரி ... வாரியார்

சைவ சித்தாந்தங்களில் குரு நம்மைத் தேடி வர வேண்டும் என்கின்றனர்.

இதில் வ‌ரும் குரு என்பவன்  யார்?  ப‌ள்ளி க‌ல்லூரி கால‌ங்க‌ளில் ந‌ம‌க்குப் பாட‌ங்க‌ள் ப‌யிற்றுத் த‌ந்த ஆசிரிய‌ப் பெருமக்கள்?

ஆசிரிய‌ரும் குருவும் ஒன்றா ?  அன்று ஆம், இன்று அன்று!


ஏட்டுச் சுரைக்காயை எடுத்துப் புகட்டுபவர்ஆசிரிய‌ர்.  மக்கு மாணவன்
என்பவனையும் மார்க்கு வாங்கும் எந்திரமாக மாற்றுபவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் வேலை வேண்டிப் பெற்று தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்ப்பவர் ஆசிரியர்.  மாதச் சம்பளம் போதாதென்று மாலை வேளை ட்யூஷன் எடுப்பவர் ஆசிரியர்.  இதில் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், குரு என்பவன், பிறர் தன்னை குரு என்று போற்றுவதையும் விரும்பாதவன்.  தன் பின்னே இத்தனை இலக்கங்களில் மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்று மார் தட்டி, உலகெங்கும் மடம் கட்டிக் கொள்ளாதவன்.  ஏட்டுச் சுரைக்காயை எடுத்துரைக்காமல், அனுபவ ஞானத்தைப் புகுத்துபவன்.  தன் உயர்வைப் பெரிதென எண்ணாமல், தன்னை நாடி வரும் உண்மைச் சீடனின் உயர்வை விரும்புவன்.  ஞானத் தெளிவைத் தருபவன்.

அடுக்கலாம் இன்னும் பல ...

இதுபோன்ற குருக்கள் இன்றும் இருக்கிறார்களா ? இல்லாததால் தான், குரு தினம் கொண்டாடாமல் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமா ?  இதில் ஏதேனும் அரசியல் இருக்கக்கூடுமோ ?

எது எப்படியோ, மேற்கண்ட 'மாதா, பிதா, குரு, தெய்வம்' தொடரில் வரும் குருவுக்கும், இன்றைய ஆசிரியருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அவர் குரு, இவர் ஆசிரியர்.  ஆனால் இன்றுவரை இத்தொடர் நமக்குத் தவறுதலாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்!!!



Wednesday, August 27, 2014

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதைத் தைத்தது.  எவரெஸ்ட் ஏறிய டென்சிங்கிடம், 'இந்த மலையில் ஏறி என்ன கண்டீர்கள் ?' என்று கேட்டதற்கு, 'மனிதன் மலைச் சிகரத்தைக் கைப்பற்றுவதைவிட, தன்னைத் தானே உணர்வது முக்கியம் என்று புரிந்து கொண்டேன்! இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டி இருந்தது!!" என்றாராம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்று கணியன் பூங்குன்றன் சொல்லிச் சென்றதைப் போல பல யோகிகள், மகான்கள், பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டு வந்திருக்கிறோம்.  இது எத்துணை சத்தியம் என்று நம்மை நாம் அறிந்தால் மட்டுமே சாத்தியம்!!

'தன்னை உணர்வது' என்றால் என்ன என்று அறிய முதலில், நம்மை நாம் அறிய வேண்டும்!  நான் அறிந்த‌ வ‌ரையில் திருமூல‌ரின் இர‌ண்டு பாட‌ல்க‌ள் இவ‌ற்றை அழுத்த‌மாக‌ உண‌ர்த்துகின்ற‌ன‌.  அவ‌ற்றிலிருந்து தான் க‌ணிய‌ன் பூங்குன்ற‌ன் தம‌து 'தீதும் ந‌ன்றும்'ஐ எளிமைப்ப‌டுத்தியிருக்க‌க்கூடும்.

கீழே உள்ள திருமூல‌ரின் இரு திருமந்திரப் பாடல்கள், சாதார‌ண‌ வ‌ரிக‌ள் போல‌த் தோன்றினாலும்,  உள்ளார்ந்து பய‌ணிக்க‌ ஒரு பேருண்மை புல‌னாகும் என்ப‌து திண்ண‌ம்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

மனித இனத்தில் இரண்டே ஜாதி தான்.  ஒன்று, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போதும் என்ற மனம்.  மற்றொன்று, எவ்வளவு தான் கிடைத்தாலும் போதாதென்ற மனம்.

தந்தையும், தாயும், குழந்தை மகளும் நகைக்கடைக்குள் நுழைந்தால், பளபளக்கும் நகைகளைவிட, அங்கே பளபளப்பாக இருக்கும் தாயின் மனம்.  ஆனால், குழந்தைக்கோ அங்கிருக்கும் பலூன்களிலோ, பொம்மைகளிலோ பதிந்திருக்கும் மனம்.  த‌ந்தையின் ம‌ன‌ம் ... சொல்ல‌வே வேண்டாம் :)

எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான்.  அது ... நம்மை ஆட்டுவிக்கும் மனம் தான்.  இந்த பாழாய்போன மனது இருக்கிறதே, அது, கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் துள்ளித் திரிவது.  இலக்கின்றித் துள்ளிக் குதிப்பது.  ஓரிடம் பற்றாது, முட்டி மோதி வீழ்ந்தெழுந்து ... மீண்டும் அங்குமிங்கும் துள்ளி ஓடுவது.  மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்.

நம்மை அறிவதை விடுத்து பிறரை அறிவதில் அதிக‌ நாட்டம் செலுத்துகிறோம்.  பிறரை அறிவதுகூட ஒரு கட்டத்தில் சுலபம் என்றாகிவிடும், நம்மை நாமே அறிய முற்படுகையில்.

நம்மை அறிய‌, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.  காலையில் எழுந்ததில் இருந்து, மாலை வரை உடலாலும் மனதாலும் அலுத்துத் திரியும் நாம், 'ஓரிடம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது சாத்தியமா ?'  என்றால், ஆம் ... ஆனால், உடனே இல்லை எனலாம்.  மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை அறிய, நமது சுவாசத்தைக் கவனிக்க மற்றும் சரி செய்யச் சொல்கிறார் திருமூலர் ப‌ல‌ பாட‌ல்க‌ளில்.  அவ‌ற்றைப் பிரிதொரு ப‌திவினில் பார்க்க‌லாம்.

***

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது சங்ககால‌ புறநானூற்றுப் பாடல்.   திருமந்திரம், திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வருகிறது.  இது ஐந்தாம் நூற்றாண்டு படைப்பு என்கின்றனர் பலர்.  ஆனால், திருமுறைகள் காலத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படவில்லை என்பதையும் நாமறிய வேண்டும்.  தென்நாட்டில் வாழும் தலைச்சங்கத்தின் தலைவராக இருந்த அகத்தியரை சந்திக்க வடக்கில் இருந்து வந்ததாக திருமூலரின் வரலாறு சொல்கிறது.  அதுவுமன்றி  ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல்கள் பாடியாதாகவும் நாம் படிக்கின்றோம்.  இது 'எந்த ஆண்டு' என்றும் ஆராய வேண்டும்.  கண்டிப்பாக சூரியனைச் சுற்றும் பூமி சுழற்சி ஆண்டாக இருக்கமுடியாது.

Thursday, August 07, 2014

நாயோட்டு மந்திரம் ...


அனைத்தும் மறந்த‌ அவ‌ச‌ர‌ உல‌கில், ஒரு ந‌ண்ப‌ருக்குத் தொலைபேசி, க‌தைக்க‌லாம் என்றால் கூட‌ முடிவ‌தில்லை.  ஒன்று ந‌ம‌க்கு நேர‌மிருப்ப‌தில்லை, அப்படியே அழைத்தாலும் ம‌றுமுனையில் ந‌ண்ப‌ருக்கு நேர‌மிருப்ப‌தில்லை.  எங்கூருப் ப‌க்க‌ம் கிழ‌விக‌ள் கூறும் ஒரு ப‌ழ‌மொழி தான் நினைவிற்கு வ‌ருகிற‌து.  'நாய்க்கு நிற்க நேரமில்லை உட்கார இடமில்லை', என்ப‌து போன்ற‌ ஒன்று!  இன்றைய‌ வாழ்விற்கு இது எத்துனை பொருத்த‌ம்.  சமீபத்தில், வெகு நாள் க‌ழித்து அழைத்த‌ ந‌ண்ப‌ர், ரிச்ம‌ண்ட் மிடில் ஏஜ் மார்க‌ண்டேய‌ரிட‌ம் இது ப‌ற்றி பேசிய‌போது, 'அத‌ ஏன் ஓய் ஞாப‌க‌ப்ப‌டுத்தரீர், இதோ, இப்ப‌க் கூட‌ அங்க‌ இங்க‌னு ஓடிகிட்டு இருக்கேன், எதுவும் உருப்ப‌டியா இல்ல'னு அங்க‌லாய்த்துக் கொண்டார் :)

இது இப்ப‌டி இருக்க‌, இவ்வ‌ச‌ர‌த்தில் ந‌ம‌து ர‌சிப்புத் திற‌னும், சிந்தனைத் திற‌னும் எப்ப‌டித் தாக்குப் பிடித்து நீடிக்கும்?  ப‌த்தாத‌ற்கு, சித்த‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டுக்க‌ளில், 'இலை ம‌றை காய் மறை'யாக‌ப் பாடிச்சென்ற‌ க‌ருத்துக்க‌ள் தான் எத்த‌னை ?!  அவ‌ற்றை எல்லாம் ஆய்ந்து ப‌டித்து இன்புற‌ ந‌ம‌க்கெல்லாம் நேர‌மெங்கே ?  ந‌ம்ம‌ அவ‌ச‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் போன‌தே, ப‌டித்த‌வுட‌ன் புரிய‌ற‌மாதிரி எழுத‌ வேண்டாம் :)

ச‌மீப‌ கால‌மாக‌க் கேட்டுத் திளைக்கும் அரும‌ருந்து, திருமூல‌ரின் திரும‌ந்திர‌ம்.  'த‌ண்ணீர் வாளிக்குள் த‌லையைக் க‌விழ்த்து' பின்னாளில் ந‌ட‌க்க‌ப் போவதை முன்னாளில் க‌ண்ட‌தாக‌ நாஸ்ட்ர‌டாம‌ஸைச் சொல்வ‌ர் சில‌ர்.  அதுபோல‌ திருமூல‌ரும் ஏதாவ‌து டெக்னிக் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பாரோ ?  சாதார‌ண‌ ம‌னித‌ன் எழுதும் பாட‌ல்க‌ள் அன்று அவை.  மேலோட்ட‌மாக‌ ஒரு க‌ருத்தும், ஆழ்ந்து உட்செல்லச் செல்ல‌ ... இன்றைய அறிவிய‌ல் விய‌க்கும் வ‌ண்ண‌ம் அன்றே எழுதி அருளிய‌வ‌ர்.

நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.

என்ற பாட‌லை ப‌ல‌முறை கேட்டிருந்தாலும், 'நாயோட்டு ம‌ந்திர‌ம்' என்றால் என்ன‌ ?  இப்ப‌டி ஒரு திருமுறைப் பாட‌லில், கேவ‌ல‌ம் நாயின் ம‌ந்திர‌ம் என்று சொல்லியிருக்கிறாரே என்று விய‌ந்த‌துண்டு.  அது என்ன‌வென்று அறிந்து கொள்ள‌ நேர‌மின்றி, ப‌ல‌ நாட்க‌ள் சென்று, எப்ப‌டியோ நேர‌ம் ஒதுக்கி, இணைய‌க் க‌ட‌வுளிட‌ம் முறையிட்ட‌தில், இத‌ன் பொருள் கிட்டிய‌து.  அது,

"நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்."

இன்னும் சற்றே ஆழ்ந்து பொருள் கொள்ள மற்றொரு வலைத்தளம் தரும் தகவல்,



"மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது."

இது போல‌ ப‌ல‌ நுண் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கி ந‌ம்மை என்றும் வ‌சீக‌ரிக்கும் திரும‌ந்திர‌ம்.  நேர‌ம் விளைகையில், மேலும் சில பாடல்கள் பார்க்கலாம்!

Thursday, May 16, 2013

திருக்குறள் கணிணி மென்பொருள் - 2

சமீபத்தில் பதிந்த திருக்குறள் கணிணி மென்பொருள் பதிவின் தொடர்ச்சியாக, சில நண்பர்களின் வேண்டுகோளின் பேரில், சிறிது மேம்படுத்தப்பட்ட மென்பொருளைக்  கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.  மேல் விபரங்களுக்கு, மென்பொருளின்  F1 விசையை அழுத்தினால், தகவல் பெறலாம்.





நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.


திருக்குறள் கணிணி மென்பொருள் முந்தைய பதிப்பு

http://blog.richmondtamilsangam.org/2013/05/blog-post.html




Monday, May 06, 2013

திருக்குறள் ‍- கணிணி மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மனித வாழ்விலும் ஏதோ ஒருவகையில் கூடவே வரும் பழம் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மிக முக்கியமான படைப்பாகும்.

மனனத்தில் தொடங்கிய கல்வி, எழுத்துக்களாய் உருப்பெற்று, ஏடுகளில் அழுந்தி, தாள்களில் தவழ்ந்து, இன்று மின்னணுவியலில் பயணிக்கும் இக்காலத்தில், என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது !

திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும், வரிசையாகவோ, அல்லது குறிப்பான வரிசை அன்றியோ, சிறு கட்டமைத்த‌ கால அவகாசத்தில் காட்டுவதே இத் திருக்குறள் மென்பொருளின் திட்டம். குறிப்பிட்ட எண் கொண்ட குறள் தேடும் ஆற்றலும் இதில் கண்டு பயன் பெறலாம்.

கீழ்க்கண்ட சுட்டியில், இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் முயற்சித்துப் பாருங்கள்.


671 முதல் 680 குறள்களுக்கான ஆங்கில விளக்கம் கிடைக்கப் பெற‌வில்லை. தகவல் இருந்தால்/அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இம்மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

முதல் பக்கம்

குறிப்பிட்ட குறள் எண் தேடல் பக்கம்

அசைவூட்டக் கட்டமைப்புப் பக்கம்


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்புவோம் !

நன்றி !!

Friday, March 01, 2013

யோகம் பயில்



எளிதான நம் வாழ்வை எவ்வளவு கடினமானதாக‌ ஆக்கியிருக்கிறோம். உற‌வுக‌ள், ந‌ட்புக்க‌ள், உண‌வுக‌ள், செல்வம், பதவி, புகழ், வாழ்க்கை முறை எல்லாவ‌ற்றிலும் கோலோச்சினாலும், அடிப்படையான ஏதோ ஒன்றை இழ‌ந்தே இவ‌ற்றை எல்லாம் பெற்றிருக்கிறோம்.

பொதுவாக‌ இந்திய‌ர்க‌ள் உடல் ந‌ல‌த்தைப் பாதுகாப்ப‌தில்லை என்ப‌து உல‌க‌ளாவிய‌ ஒரு எண்ண‌ம். அகவை நாற்ப‌தைத் தொடுகையில் இது ச‌ற்று மாறக்கூடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக இளம்வயது மார‌டைப்பு ப‌ற்றி செய்தி அறிகையில் ந‌ம‌க்குள்ளும் ஒரு ப‌ட‌ப‌டப்புத் தோன்றுகிறது. 'ஓடு உடற்பயிற்சி நிலையத்திற்கு' என்று கிளம்புகிறது ஒரு கூட்டம். 'உட‌ற்ப‌யிற்சி செய்கிறேன்' என்பது ஒரு பெருமிதத்தைத் தருகிறது நமக்கு. உடலுக்கு செய்யப்படுகிறதோ இல்லையோ, 'ஜிம்' சென்றுவ‌ருகிறேன் என்ப‌து இன்றைய‌ இள‌வ‌ட்ட‌ங்க‌ளின் ம‌த்தியில் அந்தஸ்த்தான சொல் ஆகியிருக்கிறது. நாள் முழுக்க‌ உட‌ற்ப‌யிற்சி செய்யும் ம‌னித‌ர்க‌ளும் இருக்கிறார்கள்.

ஜி.யு.போப் சொன்னால் திருக்குறள் படிக்கிறோம். 'ப்ரெய்ன் யோகா' என அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் என தோப்புக்கரணம் போடுகிறோம். இதேபோன்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், ஜ‌ப்பானியர்க‌ளும், ஏனைய‌ ம‌ற்ற நாடுக‌ளிலும் செய்ய‌ப்ப‌டுவ‌தால் யோக‌ம் ப‌ற்றியும் தெரிந்து வைத்திருக்கிறோம். செய்கிறோமா, இல்லையா என்ப‌து அடுத்த‌ பிர‌ச்ச‌னை :)

உடல் நலம் பேண, மேற்க‌ண்ட‌வாறு க‌டின‌மான‌ உட‌ற்ப‌யிற்சி தேவையா ?, என்றால், தேவையில்லை என்கிற‌து யோக‌க் க‌லை. "இன்றைய வாழ்வின் கடின உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமே. அதுவும் கடின உடற்பயிற்சியினால் உடலின் உள்ளுறுப்புக்கள் சேதமடைய சாத்தியங்கள் அதிகம். யோகத்தில், உடல் வருத்தாது உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி இருக்கிறது". இதுவும் மேற்க‌த்திய‌ அறிஞ‌ர்க‌ள் சொல்லித் தான் நாம் அறிகிறோம். ந‌ம் நாட்டில் தோன்றிய‌ ப‌ல‌ துற‌விக‌ளும், ஞானிக‌ளும் ப‌ன்னெடுங்கால‌ம் செய்து வ‌ந்த‌ யோக‌த்தை, நாம் செய்யாம‌ல் விட்ட‌தை, இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செய்கின்ற‌ன‌. நாமும் செய்ய‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌ யோசித்தால், விடை சுல‌ப‌மே.

ந‌ம‌க்குத் தேவை நிறைய‌ நேர‌ம். கை, கால்க‌ளை நீட்டி முட‌க்க‌ப் போதுமான‌ இட‌ம், ஒரு வ‌ழுக்காத‌ விரிப்பு, ஒரு குரு. இத‌ற்கும் மேலாக, ம‌ற்ற‌ ச‌ந்தை போல‌வே யோகாவிற்கும் ஒரு பெரிய‌ ச‌ந்தை இருக்கிற‌து. உலக அளவில் யோகா, முப்பது பில்லியன் டாலர் சந்தை என்கிறது இணைய ஆய்வறிக்கைகள்.

மேற்சொன்ன குருவும் (பலருக்கு இணையம்), இடமும், விரிப்பும் நமக்குக் கிடைத்தாலும், பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. க‌டின‌ உட‌ற்ப‌யிற்சி செய்ய‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் செல‌விடுகையில், யோகாவிற்கு ஒரு அரை ம‌ணி நேர‌ம் போதும் ஒரு நாள் ஒன்றுக்கு. 'ம‌ன‌ம் ஒன்றுப‌டாத‌ விஷ‌ய‌ங்களில் புல‌ன்க‌ள் வேலை செய்யாது' என்பது பல பழைய பாடல்களின் வாயிலாக நாம் அறியலாம். அதே போல் யோகாவினுள் சென்று உண‌ராத‌ வ‌ரை ந‌ம் யோக‌த்தின் பெருமையை நாம் அனுப‌விக்க‌ முடியாது.

மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இரண்டும் கலந்தது யோகா. 'மூச்ச நல்லா இழுத்து விடுங்க' என்பாரே மருத்துவர், அதே தான் இங்கு மூச்சுப் பயிற்சி. யோக முறைப்படி கை கால்களை நீட்டி மடக்கியோ, மற்றும் இடுப்பு கழுத்தை வளைத்துத் திருப்பியோ நாம் வெளியில் இருந்து செய்யும் உடற்பயிற்சி, நம் உடலின் உள்ளுறுப்புகளை விரிவடையச் செய்கிறது. உடலின் உள்தசைகளையும் இலகுவாக்குகிறது. இதனால் நம்முள் ஆற்றல் பிறந்து பரினமிக்கிறது. இதுவே அனைத்துலகும் ஏற்றுக் கொண்ட யோகத்தின் அடி நாதம்.

எளிய‌ ப‌யிற்சியாக‌ ஆர‌ம்பித்து, நம்மால் முடிந்த வரை க‌டின‌மான‌ யோக‌ ஆச‌ன நிலைக‌ள் வ‌ரை நம்மால் பயணிக்க முடியும். யோகா பற்றி ஏராளமான செய்திகளும் காணொளிகளும் இணையத்தில் இருக்கின்ற‌ன. நம் முன்னோர் கண்டுபிடித்ததை, நாமும் க‌ண்டு, ப‌டித்து, செய்துண‌ர்ந்து ப‌ய‌ன்பெறுவோம் ! உடல் நலம் காப்போம் !!


Thursday, April 19, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 5




அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா



இப்ப‌டிப் ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் பிர‌ச‌விக்க‌, ச‌மூக‌த்தின் மீது எவ்வ‌ள‌வு கூர்ந்த நோக்கும் அக்கறையும் இருக்க வேண்டும். சமூக நிலை, சொல்லாட‌ல், மொழித்திற‌ன், ஆளுமை எனக் க‌ல‌ந்து க‌ட்டிய‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

...

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு

...

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

(திரைப்படம்: பதிபக்தி, 1958)

மேலே, 'கவைக்குதவாத வெறும் பேச்சு' என்ற வரிகளில் சில நேரம் பயணித்தேன். அதென்னது 'கவை', எழுத்துப் பிழையாக இருக்கலாம் எனத் தேடியதில், 'கதை' என்றும், 'சபை' என்றும் பலர் பலவிதமாகத் தங்கள் தளங்களில் பதிந்துள்ளார்கள். எல்லா வரிகளும் 'க'வில் இருக்க 'சபை' சரியானதாக இருக்க முடியாது. ஆனால், 'க'வில் ஆரம்பிப்பதால், 'கதை' ஒத்துப்போகிறது. இருப்பினும் அதுவும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சமூகத்தின் அவலத்தைப் பாடுகையில், அவன் எங்கே 'கதை' கேட்டுக் கொண்டிருக்க முடியும். 'கவை' கொண்டு ஏதாவது அடிப்பானானால், உணவுக்கு வழி கிடைக்கலாம் அவனுக்கு.

வாழ்வின் மித‌வேகப் பயணத்தின் ஆரம்ப கால மாட்டு வண்டியிலிருந்து மாறி, கைவண்டி ரிச்சாவுக்கு மாறியிருந்தது காலம். யாரெல்லாம் இந்த வண்டியில் பயணிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறது உலகம், என்றெல்லாம் சொல்லி, மாட்டை மாற்றி, மனிதனாக மாறி, சக மனிதனைச் சுமந்து, வண்டி இழுத்து, ஊரெல்லாம் சுற்றினாலும், தன் வாழ்வு சாலையின் ஓரமாகக் கிடக்கிறதென்று சொல்லும் வரிகள் உண்மையிலே சுடுகின்றது இன்றும்!

***

ஏதோ ஒரு ந‌ம்பிக்கையின் பேரில் வ‌ந்தாலும், ப‌ல‌ரும் தாயத்தைப் எப்ப‌டிப் பார்க்கின்ற‌ன‌ர் என்று க‌விஞ‌ரின் எண்ண‌த்தில் உதித்த‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள். உட்கார்ந்த‌ இட‌த்தில் இருந்து சாதிக்க‌ முடியுமா என்ற‌ நோக்கில் தான் ம‌னித‌னின் சிந்த‌னை இருந்திருக்கிற‌து/இருக்கிற‌து. போகிற போக்கில், க‌டைத்தேங்காயை எடுத்து வ‌ழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அப்ப‌டியே போய்க்கிட்டே இருக்கிறோம். இந்த‌ப் பாட‌லில், மனித எண்ணங்களான இரண்டு கேள்விகளுக்கு என்ன‌ அற்புதமாகப் ப‌தில் த‌ருகிறார் க‌விஞ‌ர்.

ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து ...

ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து ...


(திரைப்படம்: மகாதேவி, 1957)

***

'ஒன்னிலிருந்து இருப‌து வ‌ரைக்கும் கொண்டாட்ட‌ம், கொண்டாட்டம்' என்ற என்.எஸ்.கே அவ‌ர்க‌ளின் பிர‌ப‌லான‌ பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிறது, ப‌ட்டுக்கோட்டையாரின் கீழ்வ‌ரும் பாட‌லைப் ப‌டிக்கையிலே. அன்றைய‌ சூழ‌லுக்கு முற்றிலும் ஒத்துப் போயிருந்தாலும், இன்று இவ்வ‌ரிக‌ள் பொருத்த‌மாக‌ இருக்க‌ முடியுமா ? யாரு கிட்ட‌ காசு இல்ல‌ இன்று ?!

க‌ருத்து அதுவ‌ன்று ! அன்று, வ‌ரவும் செலவும் சில பல ரூபாய்கள். இன்று, வ‌ர‌வும் செல‌வும் ப‌ல‌ ல‌ட்ச‌ ரூபாய்க‌ள். இது தானே வித்தியாசம்! ஒருவ‌ர் ச‌ம்பாதிக்கும் வீடுக‌ளில் இது தான் இன்றைய‌ நிலை. இதில் 'ஏழை' என‌ வ‌ரும் இட‌ங்க‌ளில் 'ப‌ண‌க்கார‌ ஏழை' என்றும், 'க‌ட‌ன்கார‌ன்' என்கிற‌ இட‌ங்க‌ளில் 'வ‌ரி, வீட்டுக் க‌ட‌ன், வாக‌ன‌க் க‌ட‌ன், மின்சார‌ம், பாலு, சோறு, த‌ண்ணீ, லொட்டு, லொசுக்கு...' என்று போட்டுக் கொள்வோம்.

கையில‌ வாங்கினேன் பையில‌ போட‌ல‌ காசு போன
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

சொட்டு சொட்ட வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகைய நகைகள் இருக்கு
மடியை பாத்த மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
என்னமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
வேலைய கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

(திரைப்படம்: இரும்புத் திரை, 1960)

எல்லாத்தையும் படைச்சு, என்னையும் படைச்சு, எல்லாத்துக்கும் ஏங்க வைக்கிறாயே என்ற பாட‌லின் இறுதி வ‌ரிக‌ள், பிறைகீற்றுப் புன்ன‌கை வ‌ர‌வ‌ழைக்கிற‌து.

***

'காயமே இது பொய்யடா' என்று க‌ண்ண‌தாச‌னும், அவ‌ருக்கு முன் சில சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்க‌, ந‌ம் க‌விஞ‌ரின் 'காய‌மே இது மெய்ய‌டா' என்ற‌ வ‌ரிக‌ள் சிந்த‌னையில் ஆழ்த்துகிற‌து ந‌ம்மை. விய‌ப்போடு தேடினால், இதைச் சில‌ சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்கிறார்க‌ள். திருமூல‌ர் திரும‌ந்திர‌த்தில், 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன். உட‌ம்பை வ‌ள‌ர்த்தேன், உயிர் வ‌ள‌ர்த்தேனே' என்றார். இங்கே 'காய‌ம்' என்ப‌து 'தேக‌ம்' அல்லது 'உடம்பு' என்று பொருள் கொள்ள வேண்டும்.

காய‌மே இது மெய்ய‌டா இதில்
க‌ண்ணும் க‌ருத்துமே வையடா
நோயும் நொடியும் வ‌ராம‌ல் காத்து
நுட்ப‌மாக‌ உய்ய‌டா !

ஆயுள் கால‌ம் ம‌னித‌ர்க‌ளுக்கு
அமைப்பிலே யொரு நூற‌டா
அரையும் குறையுமாய் போவ‌த‌வ‌ன‌வ‌ன்
அறிவும் செயலும் ஆம‌டா

மாய‌மெனும் குய‌வ‌ன் செய்த‌
ம‌ண்ணுபாண்ட‌ம் தான‌டா இது
ம‌த்தியில் உடையாத‌ப‌டி நீ
ம‌ருந்து மாயம் தின்ன‌டா

(திரைப்படம்: கற்புக்கரசி, 1957)

அதென்னது, மத்தியில் உடையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?! க‌விஞ‌ரே சொல்கிறார்...

வாய‌க்கெடுத்த‌து ப‌சிய‌டா
அந்த‌ப் ப‌சியைக் கொடுத்த‌து குட‌லடா !
இந்த‌க் குட‌லைச் சுத்த‌ம் செய்திடாவிடில்
உட‌லுக்கே சுக‌ம் ஏத‌டா ?

***

டூ மினிட்ஸ் நூடுல்ஸ், இன்ஸ்ட‌ன்ட் காஃபி, ஒன் லைன் ஃபேஸ்புக் அப்டேட், ஃப்யூ மினிட்ஸ் லஞ்ச், குயிக் நாப் என‌ எல்லாமே ட‌க் ட‌க் என்று வேக‌மா செஞ்சு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம். எல்லாம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா செய்யும் நிலையில் இன்றிருக்கின்றோம். ஆனால், கவிஞர் வேறொரு ஷார்ட்க‌ட் ப‌த்தி சொல்றாரு. ந‌ம்மைப் ப‌ற்றியே நாம் யோசித்துக் கொண்டிருக்க‌, ச‌மூக‌த்தைப் ப‌ற்றியே சிந்திக்கும் க‌விஞ‌ரின் க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

(திரைப்படம்: மகாதேவி, 1957)

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Wednesday, March 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 4, மற்றும் சில சிந்தனைகளும் ...



இத்தொடரை ஆரம்பிக்கும் போதே, அதிகமா வழவழாவென்று இழுக்காமல், சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஆரம்பித்தேன். இன்னும் ஓரிரண்டு பாகத்தில் முடித்திட வேண்டும் என்ற 'நல்லெண்ணத்துடன்', பாகம் நான்கை ஆரம்பித்தால், மனம் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டே இருக்கிறது ப‌ல‌ நினைவுக‌ளுக்கு இடையில்.

இரண்டு காரணங்கள். ஒன்று, பாகம் இரண்டில்
பித்தனின், பட்டுக்கோட்டையாரிடம் பாரதியின் தாக்கம் குறித்த பின்னூட்டம். இன்னுமொன்று, நம்ம ரிச்மண்ட் மாஜி பிரசிடென்ட் ஐயா நாகு அவர்கள் தந்த புராண‌ ஒலிப்பேழைகள்.

***

ஒருவன் தன் வாழ்நாளில் நல் அறங்களைச் செய்து வாழ‌ வேண்டும் என வெகுவாக உணர்த்திச் சென்றிருக்கிறார்கள் அக்காலப் புலவர்கள்.

ஔவை தன் மூதுரையில்:
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்தல்
முற்பவத்திற் செய்த வினை.


திருவள்ளுவர் தன் குறளில்:
அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.


பட்டினத்தார் தம் பாடலில்:
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!


பட்டினத்தடிகளின் மேற்கண்ட பாடல் வரிகளில் நமக்கொன்று புலனாகிறது. 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே !' எனப் புருவச்சுழிப்பில் ஆச்சரியப்படுகிறோம். உண்மை தான். இவ்வரிகளை கண்ணதாசன், தனது 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி'யில் பயன்படுத்தி பலரின் பாராட்டுக்கும் உள்ளானார். பட்டினத்தடிகள் பதிலையும் சொல்லிவிட்டார். கண்ணதாசன் கேள்வியைக் கேட்டு, பதிலை நம்மிடம் விட்டுவிட்டார் !

***

எல்லாம் தானாக, 'க‌ல்லைத்தான் ம‌ண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்க‌த்தான்' என்றார் இராமச்சந்திரக் கவிராயர். இவ்வரிகள் பின்னாளில் கவியரசரின், 'பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வர ...' என்று தேனாக வந்து பலரின் மனம் கவர்ந்திருக்கலாமோ!

உலக நீதியில், 'ம‌தியாதார் த‌லை வாச‌ல் மிதிக்க வேண்டாம்' என்று ஔவை சொன்ன அவ்வரிகளை அப்படியே பயன்படுத்தி, அதில் அர்த்த‌ம் உள்ள‌து என்று மேலும் அழுந்தச் சொன்னார் க‌ண்ண‌தாச‌ன்.

***

வாரியாரின் பிரசங்கம் ஒன்றில், அருணகிரியார் வில்லிபுத்தூராரைச் சந்திக்கும் இடம் பற்றி, இவ்வாறு விவரிக்கிறார்
வாரியார்.

வில்லிபுத்தூரார்: தாங்க‌ள் யார்?
அருணகிரியார்: ம‌னிதன்
வி: பிற‌ந்த‌ ஊர்?
அ:இந்த‌ உட‌ல் பிற‌ந்த‌து திருவ‌ண்ணாமலை
வி:ஓஹோ. த‌ங்க‌ள் பேர்?
அ:ஒரு பேரும் கிடையாது. குழ‌ந்தை பிற‌ந்த‌துனு சொன்னார்க‌ள். என் தாயார் என்னை அருண‌கிரி என்று அழைத்தாள். த‌ந்தையார் ம‌க‌னே என்றார். பாட்ட‌னார் பேர‌ப்பிள்ளை என்றார். த‌மைய‌னார் த‌ம்பி என்றார். த‌ம்பி பிற‌ந்து அண்ணா என்றான். ம‌னைவி வ‌ந்தா என்னாங்க‌ என்பாள். மாம‌னார் மாப்பிள்ள‌ என்பார். ம‌க‌ன் அப்பா என்பான். பேர‌ன் தாத்தா என்பான். வ‌ய‌சாச்சா என்றால் கிழ‌வா என்பார்க‌ள். உயிர்போச்சு என்றால் பிண‌ம் என்பார்க‌ள். சுட்டெரிச்சா சாம்ப‌ல். எத்தனையோ பேர்க‌ள் வ‌ந்து வ‌ந்து போகின்றன.

இந்தப் பேர் தாக்க‌த்திலேயே 'எந்த‌ ஊர் என்ற‌வ‌னே, இருந்த‌ ஊரைச் சொல்ல‌வா...' என‌ ஊர் பற்றி பாடியிருக்கலாம் கவியரசர்.

நான் அறிந்த கண்ணதாசன் பாடல்களில் சில‌ இங்கு உதாரணங்களாக‌............/; இவர் போன்றே பல கவிஞர்களும், பல இலக்கியப் பாடல்கலைக் கற்று, நம்போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் நிச்சயம் தந்திருப்பார்கள். க‌ண்ண‌தாச‌னுக்கு முன் சில‌ நூறு ஆண்டுக‌ள் முன் சென்றால்,

'அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை !' என்றார் வள்ளலார். வள்ளலாரின் இவ்வரிகளுக்கும் ஒருவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். பெரியபுராண சொற்பொழிவில் இதற்கு அருமையாக விளக்கம் அளிக்கிறார் கீரன். க‌ட‌வுளுக்கு உரு(வ‌ம்)த் த‌ர‌ எண்ணி அந்த‌ கால‌த்தில் பலவற்றையும் விவாதித்திருப்பார்கள் போல! பேதமில்லா உருவம் தர பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பின் மகிமையை போற்றி, அனைத்து சமயத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், இறைவன் ஜோதி வடிவானவன் எனச் சொன்னாராம் மாணிக்கவாசகர். இதையே, 'கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை' என்றார் அவர் தம் திருவாச‌க‌த்தில்.

இவ்வாறு ப‌ல‌ புக‌ழ் பெற்ற‌ புல‌வ‌ர்க‌ளுக்கும் முன்னோடிக‌ள் பலர் இருந்து, பல கருத்துக்களை எழுதியும், ஒரே க‌ருத்தைப் ப‌ல‌வாறு பல பேர் எழுதியும், இம்மானுட‌ம் திருந்த‌வில்லையே என்ப‌தைத் தான் ப‌ட்டுக்கோட்டையார் கோபம் கொண்டு கேட்டார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


ஏதோ கொஞ்ச‌ம் ப‌டித்த‌தனால் தான் இன்னும் மானுட‌ம் த‌ழைக்கிற‌தோ என்ன‌வோ ? புராண‌ங்க‌ளும், அற‌நெறிக‌ளும் இல்லாம‌ல் இருந்திருந்தால் இன்றைய‌ உல‌க‌ம் எவ்வாறு இருந்திருக்கும்? ச‌மீப‌த்தில் ஒரு ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு, த‌மிழ‌க‌த்தையே உலுக்கிய‌தை வெகு சாதார‌ண‌மாக‌ எடுத்துச் சென்றிருக்கும் !!!

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Tuesday, February 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 3 - காதல் ஸ்பெஷல்





பட்டுக்கோட்டையாரின் திருமணம்



மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?

பொதுவா பொதுவுடமைக் கருத்துக்களை எழுதுபவர்களால் காதல் கவிதைகள் படைக்க இயலாது. அப்படியே படைத்தாலும் அதிலும் ஏதாவது அறிவுரையும், ஆதங்கமும் வெளிப்படலாம். ஆனால், இவற்றிற்கு நேர்மாறாக, பொதுவுடமைக் கருத்துக்களின்பால் அதிகம் நாட்டம் கொண்ட நம் கவிஞர் இயற்றிய காதல் பாடல்கள், ஒவ்வொரு சாமான்யனின் மனதிலும் ஏறி அமர்ந்து கொள்ளும். இரு வரி உதாரணம் மேலே.

கடந்த இரண்டு பாகங்களில் பறந்த கனலைக் கொஞ்சம் தனல் தணித்து பட்டுக்கோட்டையாரின் 'காதல்' வரிகளை இந்தப் பாகத்தில் வாசிக்கலாம். நம்மளும் ஒரு பாட்டு, அதுவும் காதல் பாட்டு எழுதலாம் என அமர்ந்தால், விரல் அச்சுப் பலகையத் தட்டுதோ இல்லையோ, வெறும் காத்துத் தான் வருது ;) மானே, தேனே, மயிலே, ஒயிலே, கண்ணே, கருவிழியே எல்லாம் போட்டு பிரமாதமா ஒன்னு எழுதிடனும்னு ஒரு கமிட்மென்ட் இல்லாம, மனசு பாட்டுக்கு அது போக்குல போகுது :)

என்னதான் பயிற்சி எடுத்தாலும், சிலரை சில போட்டிகளில் விஞ்ச முடியாது. அதுவும் முக்கியமாகக் கலைத்துறையில். அன்றைய கவிஞர்கள் மனதில் தங்கும் கருத்துக்களை எழுதினார்கள். இன்றைய அநேக கவிஞர்கள் மனதைக் கெடுக்கும் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுதிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல, 'இது படத்துல வர்ற சிட்டுவேஷன், யாரையும் புண்படுத்தறதுக்கு இல்ல'னு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பட்டுக்கோட்டையார் இதில் முதல் வகை என்பது நாமெல்லாம் அறிந்ததே ! 'செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன் ?' என்று தன்னிலையைப் பாடியவர், அவரெல்லாம் எங்கே ரூம் போட்டு யோசித்திருப்பார். தான் கொண்ட கருத்தில் நேர்மை, எதிலும் எங்கும் சிறு வக்கிரம் தொனிக்காமல் காதல் வரிகள் படைத்த விதம், எளிமையாக இயற்கையோடு ஒன்றிக் காதலைச் சுமந்து வரும் பாடல்கள் என நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன் அவர். இது கவிஞரின் கேள்வி பதில் காதல்.

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

(திரைப்படம்: இரும்புத்திரை 1960)

இதுவரையிலும் பேசாத தென்றல் (காற்று) இன்று மட்டும் வந்து இன்பம் என்று சொல்வது ஏனோ ? ... என்னே ஒரு கற்பனை ! 'வெறும் காத்துத் தான் வருது' என்ற நகைச்சுவைக் காட்சி இங்கிருந்து தான் பிறந்திருக்குமோ ? மேற்கண்ட பாடலில் காதலி காதலனிடம் கேள்விகளால் துளைக்கிறாள். பொறுமையாக சூசகமாகப் பதிலுரைக்கிறான் காதலன். மரக்கிளையையும், கொடியையும் இணைத்துக் காதலி கேட்ட கேள்வியும், அதற்குக் காதலன் அளித்த பதிலும் அதி அற்புதம். இன்றைக்கு இது போல எங்காவது காதலர்களைக் காண முடியுமா? இதைப் பற்றி பதிவு பதிவா எழுதலாம் :) ஆனால், இதுவல்ல இடம்.

பொதுவாகக் காதலுக்குத் தூது போவது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். சக தோழமைகளை நம்பித் தூது அனுப்பி, கவிழ்ந்த காதல்கள் பற்றி ஏராளமான தமிழ் திரைப்படங்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் ;) மனிதனை நம்பினால் இதான் கதி. இது கவிஞருக்கு அன்றே தெரிந்திருக்கிறது :) அதான் அடுத்த பாடலில் வெண்ணிலாவைத் தூது அனுப்புகிறார்.

நான் பேதையாய் இருந்தேன், என் இதயத்தைத் திருடிவிட்டாள், அதை அவளிடம் இருந்து பறித்து என்னிடம் திருப்பிக் கொடு என்று வெண்ணிலாவை அழைக்கிறார் பட்டுக்கோட்டையார். அதுவும், சும்மா போய் கெஞ்சினால் தரமாட்டாள், பறித்து வந்து தந்துவிடு, பயம் கொள்ளத் தேவையில்லை, இது அவள் தந்த பாடம் என்று கூறும் அற்புத வரிகள். இது கவிஞரின் தூதுக் காதல்.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
...
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
(திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)


காதலியின் முகத்திற்கு ஒரு வர்ணனை எழுதச் சொன்னால், கண்ணாடி மாதிரி, பளிங்கு மாதிரி, இன்னும் அதீதக் கற்பனையில் தக்காளி மாதிரி என்றெல்லாம் தான் இன்று கவிஞர்கள் எழுதுகிறார்கள். ப‌ட்டுக்கோட்டையாரோ, முகத்தையே ஒப்பிடுகிறார்.

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
...
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
(திரைப்படம்: தங்கப் பதுமை 1959)

புற அழகைச் சுமந்து வந்த பாடலில், அக அழகையும் சொல்லி, எத்தனை சுகமானாலும் இருவருக்கும் பொதுவாக்கலாம் என காதலில் பொதுவுடமையைப் பாடியது மற்றவர்களில் இருந்து நம் கவிஞரை சற்றே தள்ளி நின்று வியக்க வைக்கிறது. இது கவிஞரின் பொதுவுடமைக் காதல்.

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
(திரைப்படம்: அமுதவல்லி 1959)
இயற்கையோடு இணைத்து கவிஞர் எழுதிய மேற்காணும் பாடல் வரிகளில் மயங்காதவர் உண்டோ. 'தேமதுரத் தமிழோசை' என்றான் பாரதி. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்பத் தமிழோசை வந்து நம் செவிகளில் பாயுமே ! இது கவிஞரின் அழகுக் காதல்.

அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ

களங்கமிலா என் மனதினிலே
கலையழகே உமதன்பாலே
இன்ப உதயம் ஆவது போலே
இதய உறவினினாலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
(திரைப்படம்: மஹேஸ்வரி 1955)

'அமைதியான இரவில் அல்லி மலர்ந்து ஆடுதே. காரணம் ஏதோ ?' என வினவுகிறாள் காதலி. இரவில் அல்லி மலர்வதற்கான காரணத்தை அன்பு உறவின் மூலம் அழுத்தமாக எடுத்துரைக்கும் இப்பாடல், கவிஞரின் இயற்கைக் காதல்

இப்பொழுதெல்லாம் காதலியர் என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்கள் எனச் சிந்தித்தால், அதாவது நம் இன்றைய கவிஞர்கள் என்ன எழுதுவார்கள் என்றால் ... சிறந்த ஒரு உதாரணம், நம்மை எல்லாம் துள்ளி ஆட்டம் போட வைத்த 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ? ... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? ...' பாடலின்றி வேறேது !

புற அக அழகை, இயற்கையை, பண்பை, நானத்தை, பொதுவுடமையைக் காதலில் எழுதிய நம் கவிஞர், துள்ளி ஆட்டம் போட வைக்கும் காதலையும் சொல்லியிருக்கிறார். தினம் நம் வீட்டில் இன்றும் நடக்கும் சின்னச் சின்ன ஏச்சுப் பேச்சுக்களை, கொஞ்சல்களை மையமாகக் கொண்ட காதல் வரிகள். இது கவிஞரின் கிராமியக் காதல்.

உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
...
உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
கண்ணு... என் கண்ணூ.......
உன்னாட்டம் புத்திசாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..
அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே...

(திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957 )
கிராமியக் காதலின் காணொளி


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Tuesday, January 31, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 2



சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


பளார்னு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது இவ்வரிகளைப் படித்தபோது !!! இன்றுவரை என்ன‌த்த‌ ப‌ண்ணிதான் கிழிச்சோம் நாமெல்லாம் !!! அர‌சிய‌ல்வாதியாக‌ட்டும், திரைத்துறையின‌ராக‌ட்டும், எத்தொழில் செய்ப‌வ‌ராக‌ட்டும், அட‌ சாதார‌ண‌ ச‌க‌ ம‌னித‌னாக‌ட்டும் ...

நல்வழி, மூதுரை, ராமாயணம், மகாபாரதம் இப்படி எண்ணற்ற இதிகாசங்களை வழிவழியாகப் படித்தோம், படித்துக் கொண்டு வருகிறோம். எல்லாம் படித்தும், இன்னும் சூதும் வாதும், ஏச்சும் பேச்சும் வளர்ந்து வந்திருக்கின்றனவே அன்றி குறைந்ததாய் தெரியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலக வாழ்வு ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணம். அரசியல்வாதிங்க எல்லாம் இவங்க மேசையில தூசு. மேலதிகார வர்க்கத்தின் அரவணைப்பிருந்தால் டீ பாய் கூட குறுகிய காலத்தில் பீப்பாய் ஆகிடலாம். 'சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட்'னு இதற்கு சால்ஜாப்பு வேறு. 'உண்மைக‌ளைப் ப‌டித்து வாழ‌முடியுமா ? என்ன‌ங்க‌ நீங்க‌ இன்னும் அந்த‌க் கால‌த்து ஆளு மாதிரி இருந்துகிட்டு (அதற்குள் நம‌க்கு 50 - 60 அக‌வை தந்த தமிழ்சங்க பிரசிடென்ட் ஐயாவுக்கு நன்றிகள் :)) 'ப‌டிச்சோமா, முடிச்சோமா, அடுத்து எவ‌ன‌டா க‌வுக்க‌லாம்னு பாப்பீங்க‌ளா, அத‌ விட்டுட்டு' என்று தான் இருக்கிற‌து இன்றைய‌ உல‌க‌ம். பட்டுக்கோட்டையார் அன்றைக்கு (அநேக‌மா 40 - 50 ஆண்டுக‌ளுக்கு முன்) எழுதிய மேற்கண்ட பாடலில் உலகம் இன்றும் துளியும் மாற‌வில்லை என்ப‌து எவ்வ‌ள‌வு நித‌ர்ச‌ன‌ம்.

வளர்ந்த(தாக நினைக்கும்) ஜென்மங்களிடம் சொல்லி என்ன‌ பிர‌யோஜ‌னம்? 'ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்பதிலா வ‌ளையும்?!' நாளைய உலகம் யாருடைய‌ கையில்? இன்றைய சிறுவர்கள் தானே நாளைய உலகினர். நாம் அடிப்பதும், திட்டுவதும், சாப்பிடாத பிள்ளையைப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதும் தானே செய்கிறோம். அல்லது இதற்கு நேர்மாறாக, எதுகேட்டாலும் வாங்கித் தந்து, செல்லம் கொடுத்து அவர்களைப் பிஞ்சிலேயே சிதைக்கிறோம். சிறுவர்களைப் பற்றி பட்டுக்கோட்டையாரின் சிந்தனையே வேறாக இருந்தது. எடுத்தார் பேனாவை, தெளித்தார் க‌ன‌லை.


சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!

(திரைப்படம் : அரசிளங்குமரி 1958)

ஒரே பாடலில், அறிவு, காலம், பொதுவுடைமை, மூட ந‌ம்பிக்கை என மிகத் தெளிவாகச் சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதி, 'மனிதனாக வாழ்' எனப் பிஞ்சிலேயே விதைத்தான் அன்றே.

பொதுவா ஒரு பாடல் பற்றி எழுத நினைத்தால், மிகச் சிறந்ததாக நாம் நினைக்கும் சில வரிகளை மட்டும் கோடிட்டு, போல்ட் ஃபான்ட் போட்டு காண்பிப்போம். மற்றொன்று படிக்கிறவருக்கு போரடிக்காம இருக்கணும் என்றும் எண்ணுவோம். அப்படி இப்பாடலில் சிலவரிகளை மட்டும் சிறப்பானது எனப் பிரித்து எடுக்க முடியவில்லை. மாறாக, இப்பாடல் வரிகள் முழுதுமே நம்மைச் சிந்திக்க வைக்கிறது, வைக்கும். ஒவ்வொரு வரியும் சாட்டையாடியாய் நம்மேல் விழும் வரிகள். இப்பாடலின் ஒருசில வரிகள் என் தனித் தளத்தில் (தாய்க் கட்சியில் இருந்து பிரிந்துவிடவில்லை என நாகுவுக்கு நினைவு'படுத்துகிறேன்') முதன்மை வாக்கியங்களாக போட்டுக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்.

'அவ‌ன‌ நிறுத்த‌ச் சொல்லு நான் நிறுத்த‌றேன்' என்ற‌ புக‌ழ் பெற்ற‌ ந‌கைச்சுவைக் காட்சி நாமெல்லாம் திரைவ‌ழி அறிந்த‌தே. எல்லாவ‌ற்றையும் கூர்ந்து நோக்கின், எல்லாம் எங்கேயோ இருந்தே எடுக்கப்படுகிறது. கீதையின் சாராம்சம் போல, 'நேற்று உன்னுடைய‌து இன்று என்னுடைய‌து' என்று ஆகிவிட்ட‌து. இதுவே, நாளை மற்றொருவ‌ருடைய‌து ஆக‌லாம். பட்டுக்கோட்டையாரின் கீழ்வரும் பாடலில் இருந்து கூட மேற்சொன்ன நகைச்சுவை காட்சி பிறந்திருக்கலாம். திருடுவ‌தும், திருடும் கூட்ட‌மும், அதனைத் தடுக்கப் பாடுபடும் ச‌ட்ட‌மும், முடிவில் திருட‌னாய் ஆகிவிடாதே, அதுவே திருட்டை ஒழிக்கும் ந‌ல்ல‌ செய‌ல் என்றும் சிறுபிள்ளைக்குப் புரியும் வ‌ண்ண‌ம் எளிய‌ த‌மிழில் நல்வழி த‌ந்த‌மை ப‌ட்டுக்கோட்டையாரின் வ‌ல்ல‌மை. அத‌னைப் புரிந்து அத‌ன்வ‌ழி ந‌ட‌க்காத‌து இன்றைய மனித குலத்தின் பேராசை அன்றி வேறேது ?!


திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)

ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப‌ட‌ம்), ப‌ல்லாயிர‌ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப‌ய‌ம்: 2ஜி ஸ்பெக்ட்ர‌ம் குழுவின‌ர்). முன்ன‌தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன‌தில் மாட்டினோர் நாலைந்து மாத‌ங்களில் ப‌ல‌த்த‌ வ‌ர‌வேற்பிற்குப் பிற‌கு க‌ட்சியில் முக்கிய‌ அந்த‌ஸ்த்தைப் பெறுவ‌ர். 'ப‌ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான‌ சொன்னாரு, ந‌ம‌க்கு எங்கே சொன்னாரு' என்ற‌ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற‌து.

எவ்வளவு சீக்கிரம் தூங்கினாலும் மறுநாள் காலையில் அடிக்கும் அலாரத்தையும் மீறி, தூக்கம் வரும் பாருங்க. அட அட ... அசத்தாலா அப்படியே அமுக்கிப் போடும் நம்மை. ஆனாலும் தொடர முடியாத நிலை. இன்றைய கார்ப்பரேட் உலகில் இதற்கும் நாம் பழகிக்கொண்டோம். சட்டுபுட்டுனு எழுந்தோமா, வண்டிய மிதிச்சு, அல்லது முன்னாடிப் போறவன மிதிச்சு, அடிச்சுப் பிடிச்சு அலுவலகம் ஓடறோமானு இருக்கிறோம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை அன்றி, அன்றைக்கு திண்ணை தூங்கிப் பசங்களுக்காகவே நிறைய பாடல் பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். அவற்றை இனிவரும் பதிவுகளில் எழுத எண்ணம். அது சார்ந்த ஒரு பாடல், கீழ்வரும் வரிகளில் பார்ப்போம். இப்பாடலில் வ‌ரும் முத‌ல் வ‌ரி பின்னாளின் மிக‌ப் பிர‌ப‌ல‌ம் அடைந்த‌வை. திரைப்ப‌ட‌த்தின் பெய‌ராக‌வும் வைக்க‌ப்ப‌ட்ட‌து. இது த‌ம்பிக்கு பாடிய‌ பாட்டு. என்ன‌ருமைத் த‌ம்பி தூங்கிக் கிட‌ந்து சோம்பேறி எனும் ப‌ட்ட‌ம் வாங்கிவிடாதே, விழித்தெழு என்று உசுப்பேற்றும் பாட‌ல்.

அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் (2)
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(திரைப்படம் : நாடோடி மன்னன் 1958)

பாப்பாவிடம் ஆரம்பித்து, சின்ன பயலுக்கு சேதி சொல்லி, தம்பிக்கு அறிவுறைத்து என இவை எல்லாம் நாம் சிறுவர்களாய் இருந்த‌ வயதில் கேட்டு வந்த பாடல்கள் தான். பட்டுக்கோட்டையாரின் வரிகளிலேயே, 'பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்பது போல, வளர்ந்த பின் நம் குணம் முற்றிலும் மாறி, படிச்சதெல்லாம் ம‌றந்து போச்சு. படிச்சு என்னத்த கிழிச்சோம். நாடும் நாமளும் மோசமா போய்கிட்டே தான் இருக்கோம் !!!


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...



Thursday, January 26, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 1

சினிமாவின் பால் நாட்டம் கொண்டோரும், அல்லது திரைப்படப் பாடல் வரிகளில் காதல் கொண்டோரும், இவரை சட்டென மறக்க இயலாது. இவர் பற்றி அறியாதார் கூட, இவரது ஒரு பாட்டைக் கேட்டால் போதும், இவர் யாரென அறிந்து கொள்ள பிரியப்படுவார்கள். சினிமாவின் மூலமே நமக்கெல்லாம் அறிமுகம் என்றாலும், தான் கொண்ட கொள்கையிலிருந்து, அரசியல் ஆகட்டும், நாடகம் ஆகட்டும், சினிமாவாகட்டும், பொதுவுடமைச் சித்தாந்தம் ஆகட்டும், சற்றும் மாறாமல், ஆரம்பம் முதல் கடைசி வரை, தன் பாடல் வரிகளில் அதைக் கையாண்டவர். நம் மனதில் என்றும் எளிதில் நினைவில் கொள்ளும் பேராற்றல் கொண்டவர், அவர் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

'கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும்...' இங்ஙனம் தான் ப‌ட்டுக்கோட்டையாரைப் ப‌ற்றிச் சொல்கின்ற‌ன‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள். அநேக பிரபலங்களைப் போலவே பட்டுக்கோட்டையாரும் பள்ளிக்குச் சென்று அதிகம் படித்தவரில்லை. தந்தையின் வழியிலும், அண்ணனின் வழியிலும், சிறிது காலம் திண்ணைப் பள்ளியிலும் கற்றறிந்தார். அவ்வளவே. மிகச் சிறு வயதிலேயே, பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கையில் அவர் இயற்றிய‌ பாடல்:

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே !


ஒரு நாள், வயல் வேலை செய்து கொண்டு சிறிது ஓய்வெடுக்கையிலே, அருகில் இருக்கும் குளத்தில் பட்டுக்கோட்டையாரின் கவனம் செல்கிறது. அங்கே கெண்டைக் குஞ்சுகள் துள்ளி விளையாடும் அழகைக் கண்டு ரசிக்கிறது அவர் மனம். அடுத்த நிமிடம், சிந்தனை வயப்பட்டவரின் நெஞ்சினில் சித்தாந்த வரிகள் பிறக்கிறது. மேற்கண்ட வரிகளை, 'என்ன பிரமாதம்... சாதாரண வரிகள் தானே?' என்று எண்ணலாம். அப்படி எண்ணுவது மாபெரும் தவறு என்பது சற்று ஆழ்ந்து படித்தால் புரியும் நமக்கு. இதனுள்ளும் ஒரு சமூகக் கருத்தைத் திணித்து, எளிமையாய் (நமக்கெல்லாம் புரியனும்ல !) படைத்த வல்லமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

'மனம் ஒரு குரங்கு', ஒரு இடத்தில் நில்லாது தாவிக்கிட்டே இருக்கும். குணம்? ... நிற்கிறதோ, தாவுகிறதோ, ஆனால், பல வகைகளில் இன்றும் பரிணமிக்கிறது. 'மிருகத்திலிருந்து வந்து விலகி ஆனால் மிருகத்தை விடக் கேவலமாய் இருக்கிறாயே' என எப்படி இவ்வளவு எளிமையாய், வலிமையான வரிகளில் !!! சொல்ல வார்த்தைகள் இல்லை ...

உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)

இச்சுத்தா இச்சுத்தா ... மான் புலியை வேட்டையாடும் இட‌ம் க‌ட்டில், மே மாச‌ம் தொன்னித்தெட்டில் மேஜ‌ர் ஆனேனே ... போன்ற‌ க‌ருத்துச் செரிவு மிக்க பாடல்களைத் தந்து, க‌விஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்க‌ளுக்குத் த‌னி மகுட‌ம் சூட்டி எங்கேயோ கொண்டு சென்றுவிட்ட‌ன‌ர். இவை எல்லாம் பெண்களை இழிவுப‌டுத்துவ‌தாயில்லை? இவை போன்ற‌‌ பாட‌ல்க‌ளைப் பெண் பாட‌க‌ர்க‌ளே பாடியிருப்ப‌து தான் வேத‌னைக்குறிய‌து. இவ‌ற்றிற்கு நேர்மாறாக‌, அந்த‌க் கால‌த்திலேயே (பெரிய‌ விஷ‌ய‌முங்க‌ !) பெண்க‌ளை ம‌தித்து, அவ‌ளுக்கும் ஒரு ம‌திப்பைத் த‌ந்து மெருகேற்றிய பட்டுக்கோட்டையாரின் க‌‌ன‌ல் வ‌ரிக‌ள்...

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லு சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ?

(ப‌ட‌ம்: க‌ல்யாண‌ப் ப‌ரிசு)

தமிழ் சினிமா மறபுப்படி வ‌ழக்கம் போல ம‌ர‌த்தைச் சுற்றி, காதலனும் காதலியும் ஓடி ஆடிப் பாடும் பாட்டு. சிற்சில இடைவெளி ஓட்ட‌ங்க‌ளுக்குப் பின் ஒரு ம‌றைவில் நிற்கும் காத‌லியின் விர‌லை, லேசாக‌த் தொட்டு விடுவான் காத‌லன். அவ்வ‌ள‌வு தான், அந்த‌ அம்மாவுக்குக் கோப‌ம் பொத்துக் கொண்டு வ‌ந்துவிடும். 'அடே அறிவு கெட்ட‌வ‌னே, என்னை மான‌ப‌ங்க‌ப் ப‌டுத்த‌ நினைத்த‌ மூட‌னே, உன்னைப் போய் காத‌லித்தேன் பார்' என்றெல்லாம் சீற‌வில்லை. பொறுமை இழந்து புரட்சியில் இறங்கிடாதே, எல்லாம் கல்யணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்ற இதமான சீற்றம் கொண்ட காதலியின் வரிகள் மேலே. இது அன்றைக்கு. இன்று நிலைமையோ வேறு. நேரா 'கட்டிப்புடி கட்டிப்புடி டா ... கண்ணாலா கண்டபடி கட்டிப்புடி டா...' தான்.

'தானத்தில் சிறந்த தானம் எது?' அப்படீன்னு எங்க ஹோம் மினிஸ்டர் கிட்ட கேட்டேன். அவங்க படக்குனு 'என்னது? கண்தானமா?'னு சீரியஸா கேக்க ... அதையினும் மிஞ்சியது ...'நிதான‌ம்' என்றேன். ந‌ம‌க்கு எப்ப‌டி இந்த‌ அறிவு ஞான‌ம் என்று அவ‌ங்க‌ளுக்கு ஒரே ச‌ந்தேக‌ம். முக‌த்திலேயே கேள்வி ப‌ட‌ர்ந்த‌து. ம‌ரியாதை (?!) நிமித்த‌ம் அவ‌ங்க எதும் கேக்க‌ல‌ :)

எம்.ஜி.யாரும் கலைவாணரும் நடித்த‌ 'சீர் மேவு குரு பாதம்' என்று தொடங்கும் கேள்வி ப‌தில் பாட‌ல். எளிமையான கேள்விக‌ள் அழுத்தமான பதில்கள். காய்ந்தவன் வயிறு பற்றியும், நயவஞ்சகனின் நாக்கு பற்றியும் உறைக்கும் பதிலில் நம் உடல் சிலிர்ப்பது உறுதி. க‌‌லைவாண‌ர் கேள்வி கேட்க‌, ஒத்தை வார்த்தையில் எம்.ஜி.ஆர். ப‌தில‌ளிப்பார்.

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்
...
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
...
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
...
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)


இன்று, அதே ஒத்தை வார்த்தையில் பாடல் எழுதச் சொன்னால், நமது கவிஞர்கள் இப்படித் தான் எழுதுகிறார்கள். சமீபத்தில் வ‌ந்த ஒரு பாட‌ல், ந‌ம்மை எல்லாம் கிற‌ங்க‌டிக்கும் ... 'ஒத்த‌ சொல்லால எ(ன்) உசிர் எடுத்து வச்சிகிட்டா ... ரெட்ட கண்ணால ... என்ன தின்னாடா'



மேற்க‌ண்ட 'சீர் மேவு குரு பாதம்' பாட‌ல் ஒருசில‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் 'கிளௌன் சுந்தரம்' என்பவர் எழுதிய‌தாக‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ரியான‌ த‌க‌வ‌ல் தெரிந்த‌வ‌ர்க‌ள் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள். த‌க்க‌ ச‌ன்மான‌ம் நாகு ஐயா வ‌ழ‌ங்குவார்.


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Friday, January 13, 2012

பொங்க‌ல் வாழ்த்து - 2012



ஏர் பூட்டிய எருது
நிலம் பிளக்கும் உழவன்

எம்குல‌ப் பெண்க‌ளின் வ‌ருகை
விண் அதிரும் குலவை

வெண் மேகம் நீந்தும்
நீர் ததும்பும் நிலம்

சடசடத்துக் கதை பேசும்
காற்றில் ஆடும் நாற்று(க‌ள்)

முப்பொழுதும் நீர் பிடிக்க‌‌
த‌ப்பாது வ‌ள‌ரும் ப‌யிர்

நீண்டு வளர்ந்து பின்
தலை வ‌ண‌ங்கும் நெல்மணி(க‌ள்) !

***

ஞாயிற்றின் வ‌ர‌விற்கு,
மாக்கோல‌த் த‌ரையினிலே
ம‌ஞ்ச‌ள் த‌ண்டுடுத்தி
வைத்திட்ட‌ ம‌ண்பானை

க‌ற்க‌ண்டுத் தேனோடு
வெல்லம் கலந்திடவே
நீரூறும் ந‌ம்நாவில்
ப‌ச்ச‌ரிசிப் பால்பொங்க‌ல்

உண்டு மகிழ்ந்திடுவோம்
உழ‌வ‌னை வாழ்த்திடுவோம்
வைய‌க‌ம் தழைத்திட‌
உழ‌வினைப் போற்றிடுவோம் !!

***

அனைவ‌ருக்கும் இனிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள் !!!

படம்: நன்றி இணையம்

Monday, September 14, 2009

வாங்க Excel படிக்கலாம் - Pivot Table

ஆடிய‌ன்ஸ்: எக்ஸெலுக்கு அல்லது பிவோட் டேபிளுக்குப் புதிய‌வ‌ர்.

ஒரு வங்கிக் கணக்கோ, அல்லது வீட்டுக் கணக்கோ எழுத வேண்டும் என்றால் (நீங்க அப்படி எதுவும் தப்பெல்லாம் செய்யறதில்லையா ? அப்ப நம்ம கூட்டாளி :))), முதலில் கட்டம் கட்டி, பார்டர் போட்டு, 'இன்ன தேதிக்கு பாலுக்கு இவ்வளவு, கீரைக்காரம்மா கிட்ட பேரம் பேசி வாங்கின காய்கறி இவ்வளவு' என்று கட்டங்களைத் தேடி தேடி எழுதுவோம். இரண்டாவது, வரிசையா எழுதிகிட்டு வந்து கடைசியில் (ஒரு குரூப்பா) பிரித்து மொத்தமா பால், காய்கறி என்று அந்த மாதத்திற்கு கணக்கிடுவோம். இந்த இரண்டாவது முறையை கையாண்டு எக்ஸெலில் ரொம்ப எளிதா, சில "க்ளிக் அண்ட் ட்ராக்" மூலம் முதல் முறையான கட்டங்களைப் பெறலாம். எடுத்துவிட்டேன் ர‌ம்ப‌த்தை என‌ எகிறிவிடாதீர்க‌ள் :) எழுத்தைக் குறைத்து, ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் பிவோட் டேபிளிலில் ப‌ய‌ணிக்க‌லாம் வாருங்க‌ள்.


தேதியிட்டு வ‌ரிசையா எழுதிக் கொண்டு வ‌ந்த‌ க‌ண‌க்கு. மொத்த‌த்தையும் செல‌க்ட் செய்து கொள்ளுங்க‌ள்.


"Insert" மெனுவை க்ளிக்கி, "Pivot table"ஐ செலக்ட் செய்யுங்கள். எக்ஸெல் 2003 எனில், Data மெனு.


கணக்கு பார்க்கும் பக்கத்திலேயே பிவோட் டேபிள் போட்டுக் கொள்வோம். அதனால், திறக்கும் குட்டி விண்டோவில், "Existing worksheet" க்ளிக்கி, செல் $E$2வில் க்ளிக்கிக் கொள்ளுங்கள்.


மாயாஜால‌ம் மாதிரி ஆங்காங்கே திற‌க்கும் க‌ட்டங்க‌ள் க‌ண்டு ப‌ய‌ந்துவிடாதீர்க‌ள்.


வ‌ந்த‌ க‌ட்ட‌ங்க‌ளின் வ‌ல‌து மேலே, "Choose fileds to add to report"ல் அனைத்தையும் "டிக்" செய்து கொள்ளுங்க‌ள். இவை முறையே "Row Labels" ம‌ற்றும் "Values" க‌ட்ட‌ங்க‌ளில் பிர‌திப‌லிக்கும். பிவோட் டேபிளும் தயார்.


தேதி வாரியாக‌ப் பார்க்க, தேதியை "Row Label"ல் க்ளிக்கி "Column Label"ல் ட்ராப் செய்யுங்க‌ள்.


தேதி வாரியாக, Nice and Beautiful Pivot table.


ஏதாவ‌து மாற்ற‌ம் செய்ய‌ வேண்டும் எனில், டேட்டா ஏரியாவில் செய்யுங்க‌ள். பின், பிவோட் டேபிளில் "Right Click" செய்து "Refresh" க்ளிக்கினால் போதும்.


மாற்றம் செய்யப்பட்ட பிவோட் டேபிள்.

Friday, August 28, 2009

அடை மழை !


Photo Credit: fineartamerica.com

நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, பலத்த வேலைப் பளுவிற்கு இடையிலும் (நாம சொல்லிக்காம வேற யாரு சொல்லறதாம் :)), இந்த அரைபக்கக் கதை.

-----

கருமுகில் போர்த்திய அடர்த்தியில் கனன்று கொண்டிருந்த வானம் சற்றைக்கெல்லாம் வெண் மழை தூவ ஆரம்பித்திருந்தது.

இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கால்கள் சுறுக்கி, கைகள் பிணைத்து கருப்பைக் குழந்தையாய் இருக்க முடியாமல், இன்றும் வேலைக்குப் போவது மாதிரி ஆன‌தே என வருந்தினாள் நந்தினி.

பஸ் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்குப் பத்துப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். பாராசூட்டையும் விட சிறிதான குடை கொண்ட பஸ்டாப்பில், அண்டிய ஆட்டுக் குட்டிகளாய் அப்பிய ஜனத்திரளுடன் சில நிமிடங்கள் ஒண்டி நின்றாள். மழை நின்றபின் வீட்டுக்குப் போய், முதல் வேலையாய் இழுத்துப் போர்த்திப் படுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அடைம‌ழையாய் விடாது பெய்த‌து ம‌ழை.

வழக்கம் போல இன்றும் குடை எடுத்துவர மறந்திருந்தாள். அரை மணி நேரத்தில் பொறுமை இழந்து, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். சொட்டுச் சொட்டாய் விழுந்த மழை நீர், தலை முடியின் வழி பல கிளைகள் கொண்ட நீர்வீழ்ச்சிகளாய் கொட்டியது.

நேற்றும் இதனால் தான் அம்மாவுடன் சண்டை. "மழை நாளா இருக்கு. ரெண்டு நாள் லீவ‌ப் போட்டு வீட்டுல‌ இரேண்டி. அப்ப‌டி என்ன‌ ஆபிஸ‌க் க‌ட்டி அழுக‌றே ! பாக்குறது என்னவோ தையல் வேலை தான‌" என்று த‌வித்தார். "பெரிய குடை எடுத்துப் போகத் தான் கூச்சமா இருக்கு. ஹேன்பேக்கில் ஒரு சின்னக் குடையாவ‌து வ‌ச்சிக்க‌ வேண்டாமா ?" என்றும் திட்டினார். அத்தோடு அம்மாவுட‌ன் பேச்சை நிறுத்தி இப்போ, இருபத்தி மூணு ம‌ணி, ப‌தினைந்து நிமிட‌ம், (வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்) ஏழு நொடிக‌ள் ஆகியிருந்த‌து.

ச‌ர் ச‌ர்ரென்று க‌ட‌ந்து செல்லும் வாக‌ன‌ங்க‌ள். சாலைக் க‌ழிவோடு இர‌ண்ட‌ற‌க் க‌லந்திருந்தது ம‌ழை நீர். ச‌க‌தியாய் போன தெருக்கள் ஸ்கேட்டிங்க் போர்ட் இல்லாமலேயே வழுக்கியது. வெள்ளிக் கம்பியாய் மின்னல் கீற்றுக்கள் வேறு நடைக்குத் தடையாய் இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் பஸ்ஸாட்ப்பிலேயே நின்றிருக்கலாமோ ?' என‌ யோசித்தாள். 'நின்றிருந்தால் நின்று கொண்டே தான் இருப்போம். ந‌ல்ல‌ வேளை. இதோ இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வீட்டை அடைந்து விட‌லாம் !' என்று அடிமேல் அடிவைத்து ந‌ட‌ந்தாள்.

தொப்ப‌லாய் ந‌னைந்து வீட்டுப் ப‌டியேறி, காலிங் பெல்லை அடித்துக் காத்திருந்தாள். அம்மா வ‌ந்து திற‌ப்பதற்கான‌ அறிகுறி எதுவும் தென்ப‌ட‌வில்லை. 'இன்னும் அம்மாவுக்குக் கோப‌ம் த‌னிய‌ல‌ போல‌ !' என‌ நினைத்து, ஹேன்பேக்கில் முன் பக்கம், கையை விட்டுத் த‌ன்னிட‌ம் இருக்கும் சாவியைத் தேடினாள். அக‌ப்ப‌ட‌வில்லை, 'சாவியையும் ம‌றந்து விட்டோமா ? என்ன‌திது சோத‌னை' என்று சுவ‌ற்றில் சாய்ந்தாள். ஏதோ நினைவில் மீண்டும் ஹேன்ட்பேக்கின் மைய‌ப் ப‌குதிக்குள் கையை விட‌, ரிமோட் க‌ண்ட்ரோல் போல எட்டிப் பார்த்தது, தன் குழந்தையின் குணம் அறிந்து அவளது ஹேன்ட்பேக்கில் அம்மா நேற்றிரவே போட்டு வைத்த‌ அந்த அழகிய‌ குட்டிக் குடை !

ஆகஸ்ட் 31, யூத்ஃபுல் விகடனில்

Tuesday, June 09, 2009

பட்டாம்பூச்சி


நான் என்ன பதிவு போடலாம்னு யோசிச்சி யோசிச்சி கண்ல பட்டாம்பூச்சி பறக்கற அளவு வந்ததை யாரோ கவிநயாகிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு. கண்ல மட்டும் ஏன் பூச்சி பறக்கனும். பதிவு பதிவா பறக்கட்டும்னு எந்த புண்ணியவானோ ஆரம்பிச்ச தொடரில் சேர்ந்து அவங்க பறக்கவிட்ட பட்டாம்பூச்சி விருதுல என்னையும் சேத்துக்கிட்டாங்க. விருதுக்கு நன்றி கவிநயா! கவிநயா எந்த தலைப்பு எடுத்தாலும் கலக்கறவங்க. பதிவும் சரி, கவிதையும் சரி, பாடுகிறதுக்கு வசதியா பாடுறதும் சரி, நாட்டியத்திலும் சரி, பக்தியிலும் சரி - அவங்களுக்கு நிகர் அவங்கதான். அதனாலதான் அவங்களுக்கு ரெண்டு பேர் இந்தப் பட்டாம்பூச்சி விருதை கொடுத்திருக்காங்க....

நமக்கு அவங்க ரேஞ்சுக்கு எழுத முடியாட்டியும் கொஞ்சம் படம் காமிப்பமேன்னுதான் மேலே இருக்கற படம்.   வர்ஜினியா ட்வின் லேக் பார்க்கில் நானே எடுத்தது. டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி. அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் காணப்படும் இந்தப் பட்டாம்பூச்சி வர்ஜினியா மற்றும் நான்கு மாநிலங்களுக்கு மாநிலப் பூச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இந்தப் பட்டாம்பூச்சி விருதை இந்த மூனு பேருக்கு வழங்குகிறேன். முதலாவதாக எங்க கட்சியில் இருந்து போய் தனிக்கட்சி ஆரம்பிச்சி அப்பப்போ கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் சதங்கா!சுவையாக கவிதை, கதை எழுதுவதுஓவியம் வரைவது, வீட்டில் சமையலறை எந்த திசையில் இருக்கிறது என்று கூடதெரியாமல் சமையல் குறிப்பு எழுதுவது(சும்மானாச்சியும் சொன்னேன்) என்று பல கட்சிகள் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார். மனுஷன் பல சுவையான சின்ன விஷயங்களை அவருடைய கவிதை மூலம் அப்படியே நம் கண் முன்னால் நிறுத்துவார். சுந்தரத் தெலுங்கினில் அவருடன் ஆணி பிடுங்கும் பெண்டிராகட்டும், நம்ம ஊர் டீக்கடை ஆகட்டும், ஓட்டு வீட்டு முற்றமாகட்டும், நம்ம ஊர் டவுன் பஸ்ஸாகட்டும்- இவருடைய எளிய, இனிய தமிழ் அப்படியே நம்முன் வந்து நிறுத்தும். நான் எழுதும் தமிழ் தாங்காமல் வேறு ஊருக்கு ஓடிவிட்டார். உங்க ஊர் 'பட்டாம்பூச்சி' குறித்து எழுதுங்க சதங்கா!

அடுத்தது செல்வராஜ்! அவருடைய கொங்குநாட்டுத் தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய எழுதும் செலுத்தலுக்கு ஏதோ கட்டுப்பாடு வந்திருக்கிறது :-) அதாங்க இவர் வேதிப் பொறியியலில் செலுத்தக் கட்டுறுத்தல் (Process Control) துறையில் பணி புரிபவர். தமிழ்மணத்தின் நிர்வாகத்தில் இவருடைய தொண்டும் உண்டு.  வேதிப் பொறியியலை விளக்கும் பதிவுகளும், அவருடைய மகள்கள் கேட்கும் கேள்விகள் குறித்த பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தவை. இவருடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது மகள்களின் துவக்கப் பள்ளியில் இந்தியா குறித்து அவர் செய்த ஒரு வீடியோ. மழலையுடன் பெண்கள் இந்தியாவின் அருமை, பெருமைகளை விளக்க அழகாக இந்தியாவைப் படம் பிடித்திருந்தார். சுட்டி கிடைக்கவில்லை. நீங்கள் திரும்ப உங்க பதிவில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும், செல்வராஜ்.

மூன்றாவதாக கானாப்பிரபா! "ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" - அவரைப் பற்றிய அவரது விளக்கமே நெஞ்சில் ஒரு வலியைத் தரும்! எனக்கு இங்கே பல ஈழத்தோழர்கள் மூலமாக கொஞ்சம் ஈழப்பாரம்பரியம் குறித்துத் தெரிந்திருந்த போதிலும் ஈழத் தமிழரின் பாரம்பரியத்தை எனக்கு நிறைய அறிமுகப் படுத்தியவர் பிரபா. இணுவில், யாழில் வளர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். இவருடைய மடத்து வாசல் பிள்ளையாரடியும், றேடியோஸ்பதி பதிவும் மிகவும் பிரசித்தம்.

ஒருமுறை இவருடைய நல்லூர் கோவில் பதிவை எனது ஈழ நண்பர் வீட்டில் காண்பித்தேன். கண்கலங்க அப்படியே கணினி முன் சேவிக்கவிருந்தார்கள். நல்லூர் ஈழ மக்கள் வாழ்வில் எப்படி பிணைந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது. அவருடைய பிள்ளையாரடி பதிவுகளில் எனக்கு ரொம்பவும் பிடித்தது கல்லடி வேலர் பதிவு.  சென்ற வாரம் பல ஈழப்பதிவர்களுடன் ஈழத்து முற்றம் ஆரம்பித்திருக்கிறார். ஈழத் தமிழின் இனிமையும், தூய்மையும் அனைவரும் அறிந்ததே. ஈழத்து பேச்சு வழக்குகளை நமக்கெல்லாம் விளக்குவதற்கான இந்த சேவையின் ஆரம்பமே முசுப்பாத்தியாக இருந்தது. ஈழத்து பட்டாம்பூச்சிகளைத் தொடர்ந்து பறக்கவிடவேண்டும், பிரபா!

மூவருக்கும் வாழ்த்துகள்!
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Tuesday, May 26, 2009

விகடன் தளத்தில் முதல் பக்கத்தில்...

கீழே இருக்கும் படத்து மேலே கிளிக்கி பெரிதான படத்தில் தேடுங்கள். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் ஏன் இதை இங்கே போட்டிருக்கிறேன் என்று?




பெண்கள் படம் எல்லாம் தாண்டி வலது பக்கம் கீழே - சதங்காவின் கதை - விகடன்.காமில் வந்திருக்கிறது. முதல் பக்கத்திலே சுட்டி வேறு.
வாழ்த்துக்கள் சதங்கா.

ஆமாம் - என்ன மாதிரி ஆட்கள் எழுதுவதற்கு யூத்புல் நிகர் வேறு எதாவது தளம் இருக்கா விகடனில்? :-)