Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, October 06, 2010

ஒரு பாக்யராஜ் ரசிகனின் கதை

"கன்னி பருவத்திலே" என்னோட நண்பன் கனகராஜ் "தாவணி கனவுகள்" கண்டு கொண்டு இருந்த சில பொண்ணுங்க கிட்டே "டார்லிங் டார்லிங் டார்லிங்" சொல்லி, அவங்களை முதல்ல "வீட்ல விசேஷங்க"-ன்னு சொல்ல வச்சு பிறகு "ஆராரோ ஆரிராரோ" பாட வைக்கலாம்னு ஆசைப்பட்டு பல தடவ "வேட்டிய மடிச்சு கட்டி"க்கிட்டு போயிருந்தாலும், எப்போதும் அவனுக்கு முதல்ல கிடக்கிற பதில் "விடியும் வரை காத்திரு", அப்புறம் "இன்று போய் நாளை வா". 

காலேஜில NSS கேம்ப்-ன் கடைசி “அந்த 7 நாட்களில்” கனக்ஸ் யாரு கிட்டயோ  காதல்ல “புதிய வார்ப்புகள்” உருவாக்க முயற்சி  பண்ணி அதுக்கு அவங்க குடுத்த  டோஸ்-ல அவனோட  ஜொள்ளு “தூறல் நின்னு போச்சு".  கொஞ்சம் "பொய் சாட்சி" செட்டப் பண்ணியும் பிரயோஜனம் இல்ல.  இதுல நொந்து போன கனக்ஸ் "சுவரில்லா  சித்திரங்கள்" எப்படி போடறது,  "ஒரு கை ஓசை" -ல எவ்வளவு நாள்தான் ஓட்டறது,  நமக்கு "சுந்தர காண்டம் " சரிப்படாதுன்னு முடிவுக்கு வந்துட்டான். அத எல்லாம் நெனச்சு அப்பப்போ "மௌன கீதங்கள்" பாடுவான். 

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி"- யை "முந்தானை முடிச்சு" பண்ணின பிறகு "இது நம்ம ஆளு"ன்னு பேசாம சௌதியில "ராசுக்குட்டி" போல இருக்கான் "எங்க சின்ன ராசா". அங்கே "சின்ன வீடு" தேடி  "பாமா ருக்மணி" வீட்டுக்கு போனா "அவசர போலீஸ் 100 " கூப்பிட்டு உள்ளே தள்ளிருவாங்கல்லே. கல்யாணத்தப்போ என்னதான் "பவனு பவுனுதான்" எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் அவன் ஒரு "ஞான பழம்"னு யாரும் நெனச்சிராதீங்க.

Monday, December 07, 2009

பார்

"செல்லம் குடுக்காதே குடுக்காதேன்னு சொன்னா கேட்டியா"

வேலையிலிருந்து வந்த உடனே பாய்ந்தாள் அம்மா. "இன்னைக்கு என்னாச்சு அம்மா", என்றேன் சிரித்துக் கொண்டே.

அமெரிக்காவில் வளரும் பேரனுடன் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் என் அம்மாவுக்கு தினசரி குருஷேத்திரம்தான். இவர்களின் சுதந்திரமும்,பேச்சும் அவர்களின் வாழ்க்கைமுறையும் எப்போதும் ஒத்துப் போவதில்லை. என் அப்பாவாவது பரவாயில்லை. எங்களை சுதந்திரமாக வளர்த்தவர். அம்மாவுக்குத்தான் பேரனின் கேள்விகளும், நடைமுறையும் சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை.

"உன் பையன் என்ன பண்ணினாலும் கண்டிக்காம இப்ப எங்கியோ போயிண்டிருக்கு பாரு", என்றாள் அம்மா. "அவன் என்ன பண்ணினாலும் சிரிச்சிண்டே இரு. நாளைக்கு ஊரே சிரிப்பா சிரிக்க போவுது."

"ஊர் சிரிக்கப் போவுதுன்னு பாத்தா நீ இங்கே எதுவும் பண்ண முடியாதும்மா. இப்ப என்ன ஆயிடிச்சு".

"அன்னைக்கி அப்படிதான் பர்த்டே பார்ட்டின்னு பசங்களும், பொண்ணுங்களும் ஒண்ணா ரா முழுக்க கூத்தடிச்சதுகள்." என்று ஆரம்பித்தாள் அம்மா.

"முதல்ல இப்பத்திய கதைய சொல்றியா?", என்றேன்.

நம்ப கண்ணு முன்னாடிதானே இருந்ததுகள் குழந்தைகள். சென்னைல சீதாவோட உத்தம புத்திரன் சனிக்கிழம அன்னிக்கு வீட்டுக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு வந்தானாம். அதுக்கு என்ன சொல்றே... நம்ம ஊர் எங்கியோ போயிட்டு இருக்கு. நீ இந்த ஊரப் பத்தி சொல்ல வந்துட்டே.

மகளின் பையனை இழுத்ததால், அம்மாவுக்கு பொத்துக் கொண்டு வந்தது. "அந்த ராயனும் சரியில்லை. அவன் கூட சேந்து நம்ம குமார் குட்டிச்சுவரா போவப்போறாண்டா", என்றாள் அம்மா.

"ரயன் நல்ல பையனம்மா. அவன என்னமோ உனக்கு பிடிக்கல. விடேன். சரி இன்னைக்கி என்ன ஆச்சு".

"ஆமாம் நீதான் மெச்சிக்கனும் அந்த ராயன. அவன் பாருக்கு போறானாம். இவனை அழைச்சானாம். இதுவும் போய்தான் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்குது. நீயே கூட்டிட்டு போய் உன் செலவிலேயே விஸ்கியும், பியரும் வாங்கிக்குடு".

"இந்தப் பசங்க இன்னும் ஹைஸ்கூல்கூட போகலே. நானே கூட்டிட்டுப் போனாலும் உள்ளே விடமாட்டாங்க. உன்னை ஏதோ கிண்டல் பண்ணியிருக்கானுங்க இந்த பசங்க ரெண்டு பேரும்."

"இல்லடா. இன்விடேஷனே அடிச்சி கொண்டாந்து குடுத்தான் அந்த பையன். இதோ இங்க தானே இருந்தது. ஆ... நான் பாருக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு அதட்டினேன். உன் புத்திர சிகாமணிக்கு கோபம் பொங்கிடிச்சி. இந்த ஊர் பத்தி எனக்கு புரியலை அது இதுன்னு கத்திட்டு அவன் ரூமுக்கு கொண்டு போயிட்டான். நீயே போய் கேளு", என்று என்னை ஏற்றிவிட்டாள் அம்மா.

எனக்கு கோபம் வரவில்லை. இது என்ன கதை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் அதிகமானது. போய் விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு குமாரின் அறைக்குள் நுழைந்தேன்.

ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன் சிரித்துக் கொண்டே.

"அம்மா. ரயன் கூப்பிட்டிருக்கிறது வெறும் பார் இல்லை. ரொம்ப ஸ்பெஷலான பார். நம்ம ஊர்ல பசங்களுக்கு பூணுல் போடறமாதிரி, ஜூஸ் - அதாம்மா யூதர்கள் - அவங்கள்ல  பண்ற பங்க்ஷனுக்கு பேரு பார் மிட்ஸ்வா"!

Friday, August 28, 2009

அடை மழை !


Photo Credit: fineartamerica.com

நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, பலத்த வேலைப் பளுவிற்கு இடையிலும் (நாம சொல்லிக்காம வேற யாரு சொல்லறதாம் :)), இந்த அரைபக்கக் கதை.

-----

கருமுகில் போர்த்திய அடர்த்தியில் கனன்று கொண்டிருந்த வானம் சற்றைக்கெல்லாம் வெண் மழை தூவ ஆரம்பித்திருந்தது.

இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கால்கள் சுறுக்கி, கைகள் பிணைத்து கருப்பைக் குழந்தையாய் இருக்க முடியாமல், இன்றும் வேலைக்குப் போவது மாதிரி ஆன‌தே என வருந்தினாள் நந்தினி.

பஸ் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்குப் பத்துப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். பாராசூட்டையும் விட சிறிதான குடை கொண்ட பஸ்டாப்பில், அண்டிய ஆட்டுக் குட்டிகளாய் அப்பிய ஜனத்திரளுடன் சில நிமிடங்கள் ஒண்டி நின்றாள். மழை நின்றபின் வீட்டுக்குப் போய், முதல் வேலையாய் இழுத்துப் போர்த்திப் படுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அடைம‌ழையாய் விடாது பெய்த‌து ம‌ழை.

வழக்கம் போல இன்றும் குடை எடுத்துவர மறந்திருந்தாள். அரை மணி நேரத்தில் பொறுமை இழந்து, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். சொட்டுச் சொட்டாய் விழுந்த மழை நீர், தலை முடியின் வழி பல கிளைகள் கொண்ட நீர்வீழ்ச்சிகளாய் கொட்டியது.

நேற்றும் இதனால் தான் அம்மாவுடன் சண்டை. "மழை நாளா இருக்கு. ரெண்டு நாள் லீவ‌ப் போட்டு வீட்டுல‌ இரேண்டி. அப்ப‌டி என்ன‌ ஆபிஸ‌க் க‌ட்டி அழுக‌றே ! பாக்குறது என்னவோ தையல் வேலை தான‌" என்று த‌வித்தார். "பெரிய குடை எடுத்துப் போகத் தான் கூச்சமா இருக்கு. ஹேன்பேக்கில் ஒரு சின்னக் குடையாவ‌து வ‌ச்சிக்க‌ வேண்டாமா ?" என்றும் திட்டினார். அத்தோடு அம்மாவுட‌ன் பேச்சை நிறுத்தி இப்போ, இருபத்தி மூணு ம‌ணி, ப‌தினைந்து நிமிட‌ம், (வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்) ஏழு நொடிக‌ள் ஆகியிருந்த‌து.

ச‌ர் ச‌ர்ரென்று க‌ட‌ந்து செல்லும் வாக‌ன‌ங்க‌ள். சாலைக் க‌ழிவோடு இர‌ண்ட‌ற‌க் க‌லந்திருந்தது ம‌ழை நீர். ச‌க‌தியாய் போன தெருக்கள் ஸ்கேட்டிங்க் போர்ட் இல்லாமலேயே வழுக்கியது. வெள்ளிக் கம்பியாய் மின்னல் கீற்றுக்கள் வேறு நடைக்குத் தடையாய் இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் பஸ்ஸாட்ப்பிலேயே நின்றிருக்கலாமோ ?' என‌ யோசித்தாள். 'நின்றிருந்தால் நின்று கொண்டே தான் இருப்போம். ந‌ல்ல‌ வேளை. இதோ இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வீட்டை அடைந்து விட‌லாம் !' என்று அடிமேல் அடிவைத்து ந‌ட‌ந்தாள்.

தொப்ப‌லாய் ந‌னைந்து வீட்டுப் ப‌டியேறி, காலிங் பெல்லை அடித்துக் காத்திருந்தாள். அம்மா வ‌ந்து திற‌ப்பதற்கான‌ அறிகுறி எதுவும் தென்ப‌ட‌வில்லை. 'இன்னும் அம்மாவுக்குக் கோப‌ம் த‌னிய‌ல‌ போல‌ !' என‌ நினைத்து, ஹேன்பேக்கில் முன் பக்கம், கையை விட்டுத் த‌ன்னிட‌ம் இருக்கும் சாவியைத் தேடினாள். அக‌ப்ப‌ட‌வில்லை, 'சாவியையும் ம‌றந்து விட்டோமா ? என்ன‌திது சோத‌னை' என்று சுவ‌ற்றில் சாய்ந்தாள். ஏதோ நினைவில் மீண்டும் ஹேன்ட்பேக்கின் மைய‌ப் ப‌குதிக்குள் கையை விட‌, ரிமோட் க‌ண்ட்ரோல் போல எட்டிப் பார்த்தது, தன் குழந்தையின் குணம் அறிந்து அவளது ஹேன்ட்பேக்கில் அம்மா நேற்றிரவே போட்டு வைத்த‌ அந்த அழகிய‌ குட்டிக் குடை !

ஆகஸ்ட் 31, யூத்ஃபுல் விகடனில்

Tuesday, June 02, 2009

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

Tuesday, May 26, 2009

விகடன் தளத்தில் முதல் பக்கத்தில்...

கீழே இருக்கும் படத்து மேலே கிளிக்கி பெரிதான படத்தில் தேடுங்கள். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் ஏன் இதை இங்கே போட்டிருக்கிறேன் என்று?




பெண்கள் படம் எல்லாம் தாண்டி வலது பக்கம் கீழே - சதங்காவின் கதை - விகடன்.காமில் வந்திருக்கிறது. முதல் பக்கத்திலே சுட்டி வேறு.
வாழ்த்துக்கள் சதங்கா.

ஆமாம் - என்ன மாதிரி ஆட்கள் எழுதுவதற்கு யூத்புல் நிகர் வேறு எதாவது தளம் இருக்கா விகடனில்? :-)

Friday, May 22, 2009

செவிச் செல்வம்.

மே 26, 2009 விகடன் முகப்பில்

சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.

வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, குறுகலான பாதைகளில் முன்னேறி செல்வது, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் ரம்மியமாக இருக்குமோ ? என்னவோ !! ஆனால், நாமும் அதற்குள் ஐக்கியமாகி செல்லும்போது தான் தெரிந்தது வலி.

"வேர் கேன் ஐ கெட் ஹியரிங் எய்ட் ?" என்று தேடிய என்னை, "செவிட்டு மெஷினத் தான தேடுற, அதுக்குக் கூட அலப்பரை தாங்கலேயேடா ராசா" என்று தோள்களில் தட்டினான் நண்பன் ஸ்ரீதர்.

ஐபாட் மாதிரி இருக்கும் சிலவற்றை எடுத்து மேசையில் வைத்தார், சிரிப்பென்றால் என்னவென்று கேட்கும், சிரிப்பை மறந்த இந்திய ஊழியர்.

'டேய் நந்து, எனக்கு இந்தப் பெரிசு பெரிசா இருக்க மெஷினெல்லாம் வேண்டான்டா. வெளிய‌ எடுப்பாத் தெரியும் வேற‌ ! இப்ப‌ல்லாம் ப‌ட்ட‌ன் சைஸ்ல‌ வ‌ருதாமே. அதைவிட‌க் குட்டியா இருந்தா வாங்கிட்டு வாடா' என்ற‌ தாத்தாவின் குர‌ல் மாட‌ர்னாய் ஒலித்த‌து.

"அதெல்லாம் எக்ஸ்பென்சிவா இருக்கும் !" என்றார் ஊழிய‌ர். ப‌ர‌வாயில்லை எடுங்க‌ என்ற‌த‌ற்கு, வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காண்பித்தார்.

'ரெண்டு ட‌மார‌மும் அவுட்டு. ஒன்னு வ‌ச்சாக் கூட‌ ச‌ரியா வ‌ராது. அத‌னால‌ ரெண்டா வாங்கிட்டு வ‌ந்திருப்பா' என்றிருந்தார் அம்மா.

நானூறு வெள்ளி * 2 க்கு பிங்க் பில் கொடுத்தார். ஏனைய சாமான்க‌ளும், வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு பாடி ஸ்ப்ரே, வீட்டுக்கு த‌லைவ‌லித் தைல‌ பாட்டில்க‌ள், டைக‌ர் பாம், சில டி.ஷ‌ர்ட்க‌ள், சாக்லேட் வ‌கைய‌றாக்க‌ள். அப்பாடா ஷாப்பிங் முடிச்சாச்சு என்று நிம்ம‌திப் பெருமூச்சு விட்டேன்.

அன்றிர‌வே சென்னை வ‌ந்த‌டைந்து, நேரே ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்தேன். 'விவேகானந்தன்' என்றவுடன், வேறு கேள்வி கேட்காமல் அவரது அறையில் விட்டனர் என்னை. அவ‌ரை அந்த‌ நிலையில் பார்க்க‌வே பாவ‌மாய் இருந்த‌து. எழுபதுகளின் மத்தியில் இருந்தாலும், சில‌ நாட்க‌ள் வ‌ரை திட‌மாக‌ இருந்த‌வ‌ர். சமீபத்தில் சாலையில் ந‌ட‌ந்து செல்கையில், பின்னால் மிதிவ‌ண்டியில் வ‌ந்த‌ சிறுவ‌ன் மோத‌, கீழே விழுந்து, விலா எலும்பு முறிந்துவிட்ட‌து. மிதிவ‌ண்டியின் ம‌ணியை அடித்துக் கொண்டே வ‌ந்த‌ அவ‌ன், எப்ப‌டியாவ‌து இவ‌ர் வில‌கிக் கொள்வார் என‌ நினைத்து, அவ‌ர் ப‌க்க‌ம் வ‌ரை வ‌ந்து, மோதிவிட்டான்.

ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ள் முன்னாலேயே தாத்தாவுக்கு காது கேட்ப‌து நின்றுவிட்டிருந்த‌து. வீட்டில் எல்லோரும் ஹியரிங் எய்ட் வைக்க சொல்லியும், இன்று வ‌ரை அது எதுக்கு, வேண்டாம் என்று ம‌றுத்து வ‌ந்தார். விபத்துக் கார‌ண‌த்தைக் கூறி தாத்தாவை மெஷின் வைக்கச் சொல்லி வற்புறுத்த, ஒரு வ‌ழியாய் ச‌ம்ம‌தித்திருக்கிறார்.

த‌லையில் லேசாய்க் கீர‌லுக்கு ம‌ருந்திட்டு, சிறாய்புக்களுக்கு க‌ட்டுபோட்டு நீட்டிய‌ கால்க‌ளுட‌னும், பெட்டில் புத்த‌க‌ம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர்முன் நிற்க‌, பொக்கை வாய் திற‌ந்து (ப‌ல் செட் அத‌ற்கான‌ அழ‌கிய‌ ப்ளாஸ்டிக் ட‌ப்பாவில் நீந்திக் கொண்டிருந்த‌து), என்னை கிட்டே வ‌ர‌ச் சொல்லி, ஆர‌த் த‌ழுவிக் கொண்டார். எங்கே அழுதுவிடுவாரோ என்று ச‌ற்று வில‌கி த‌ள்ளி நின்று கொண்டேன்.

ச‌த்த‌மாக‌ப் பேசினால் கூட அவருக்கு கேட்கவில்லை. சைகையில் நான் பேச‌, வாய் திற‌ந்து தாத்தா ப‌தில‌ளித்தார். காற்றில் க‌ல‌ந்த‌ க‌ல‌வையாய் வார்த்தைக‌ள் தெறித்த‌து.

பையைப் பிரித்து, அழகாக‌ ஜொலித்த‌ ஹிய‌ரிங் எய்ட் பேக்கிங்கை தாத்தாவிட‌ன் நீட்டினேன். இந்த‌ முறை அழுதே விட்டார்.

ஒன்றைப் பிரித்து, எப்ப‌டி ஆப்ப‌ரேட் செய்ய‌ வேண்டும் என‌ விள‌க்கினேன். ஆசையாய் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தார். சட்டைப் பொத்தானை விட சிரியதாக இருந்தது. அவ‌ர‌து இட‌து காதில் பொறுத்தினேன்.

"சுத்தமா வெளியில தெரியலைல ..." என்று குஷியானார்.

ப‌ட‌ப‌ட‌வென‌ ப‌ட்டாசு வெடிப்ப‌தாய் உண‌ர்ந்திருப்பார் போல‌. ரொம்ப நாட்கள் கேட்காமல் இருந்த காது, அவருடைய மெல்லிய சத்தத்தையும் பெரிதுபடுத்தி வாங்கியிருக்குமோ, என்னவோ ... லேசாக‌ சிலிர்த்துக் கொண்டார்.

"தாத்தா, எப்படி இருக்கீங்க. இப்ப கேட்குதா ?" என்றேன்.

"நல்லா இருக்கேன்ட நந்து. நல்லா கேட்குது என்று ப‌தில் அளித்தார்". பெருமித‌ம் தாங்க‌வில்லை அவ‌ருக்கு. விட்டால் எழுந்து ஓடி விடும் அள‌விற்கு முக‌த்தில் ஆன‌ந்த‌ம்.

"தனியாவா இங்க வந்தே. வேற யாரும் கூட வரலை ?!" என்று கேட்டார் தாத்தா.

"ஃப்ரெண்டோட வந்தேன் தாத்தா. அவன் இங்க பக்கத்தில ஏதோ வேலை இருக்குனு போயிருக்கான். அநேகமா இப்ப கீழே காத்திருப்பான். சரி உடம்பப் பார்த்துக்கங்க. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க. நான் காலையில் வர்றேன்." என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் நான் மருத்துவமணை செல்ல மதியம் ஆகிவிட்டது. சோகமாக இருந்த தாத்தாவை ஏறிட்டு நோக்கினேன். 'நேற்றிரவு குழந்தை போல இருந்தாரே...' "தாத்தா, என்னாச்சு உங்களுக்கு ?" என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பக்கத்தில் சென்று படுக்கையில் அமர்ந்த என்னைக் கூர்ந்து கவனித்தார். அதே கேள்வியை மீண்டும் கேட்க ...

"இந்தக் கிழம் விடுற அட்டகாசம் தாங்கலை. என்றும் இளமைனு நெனைப்பு போல. ஆனா என்ன, காசு பார்ட்டி. முழிக்கிற முழியப் பாரு" என்றார் நர்ஸ். "பாத்து பேசுங்கம்மா, அவர் காதுல விழுந்திரப் போகுது" என்ற ஆயாவிற்கு, "இந்த டமாரத்துக்கா ..." என்ற எகத்தாளமான நர்ஸின் பேச்சில், 'அட ஈஸ்வரா !!!' எனக் கூசிப் போனார் விவேகான‌ந்த‌ன்.

"ஏங்க, வந்த உடனே கெளம்பணும்னு சொல்றீங்க. அப்படி இப்படி கொஞ்ச நேரம் இருக்க மாதிரி பாவ்லா காட்டுங்க‌. கைய கால புடிச்சு விடுங்க. நடிக்கவாவது தெரியுதா. உங்க அப்பாவுக்கும், சரி, பையன் தான் நம்ம மேல பாசமா இருக்கானு தோணும். கொட்டிக் குமிச்சு வச்சிருக்கதெல்லாம், அப்புறம் உங்க தங்கச்சி தட்டிகிட்டுல போயிடுவா... விட்டுருவேனா ..." என்று முழக்கிய மருமகளை ஏறிட்டார். வ‌ழிச‌லாய் ஒரு சிரிப்பை காட்டினாள். 'ஐயோ ராமா ... எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாள் சிரித்த இந்த‌ சிரிப்புக்கு இதுதான் அர்த்த‌மா ?!' என‌ நொந்து போனார்.

வ‌ந்த‌வ‌ரும், போன‌வ‌ரும் ... 'கெழ‌ம் எப்ப‌ போகும், எட‌ம் எப்ப‌ காலியாகும்' என்ற‌ நிலையிலேயே பேசிச் செல்ல, கவுண்டமணி ஒரு படத்தில் செய்வது போல 'என்ன‌ க‌ரும‌த்துக்கு இந்த‌ மெஷின் ந‌ம‌க்கு இனி, பேசாம காது கேட்காம இருக்கதே நல்லதுடாப்பா !!!' என ஹியரிங் எய்டை க‌ழ‌ட்டி குப்பையில் விசிறி அடித்த‌தை தாத்தா சொல்ல‌, வாய் பேசாது மௌனியாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.

Thursday, May 21, 2009

நண்பர்களைக் குறைப்பது எப்படி?

முதலில் அந்த விளம்பரத்தைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. "நிறைய நண்பர்கள் தொந்தரவா? ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்கிறோம். அல்லது உங்கள் கட்டணம் வாபஸ்!" அந்த மாதிரி ஒரு விளம்பரத்தை நான் பார்த்ததே இல்லை. எனக்கு வெகு சிலரே நண்பர்கள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரை கழட்டிவிடலாம்தான். ஆனாலும் ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்யும் வழி என்ன என்பதை பார்க்க மிக ஆவலாக இருந்தது. பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன்.

விளம்பரத்தில் இருந்த முகவரியில் போய் நின்றால், அது ஒரு வீடு. சிரித்த முகத்துடன் வந்து என்னை உள்ளே வரவேற்றார் மைக்கேல். இப்படி இனிய சுபாவம் கொண்ட மனிதரா நண்பர்களைத் தொலைக்க வழி சொல்லப் போகிறார் என்ற கேள்வியோடு உள்ளே போனேன். மைக்கேல் அவருடைய நண்பர்கள் குறைக்கும் முறையை விளக்க ஆரம்பித்தார். முதலில் அந்த முறையை எப்படி கண்டுபிடித்தார் என்று சொன்னார். பல மாதங்களுக்கு முன்னால் மைக்கேல் பல்பொருள் அங்காடியில் பண்டம் வாங்கும்போது ஒரு நபரை சந்தித்தாராம். அந்த ஆள் மைக்கேலுக்கு நிறைய சம்பாதிக்கும் ஒரு வியாபாரத்தை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அந்த வியாபாரத்தை சில வருடங்கள் செய்தாலே போதும், நிறைய பணம் சம்பாதித்து வேலையெல்லாம் விட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாமாம். இப்படியாக ஆரம்பித்து மெக்டோனால்ட் நிறுவனர் உதாரணம், ரெசிடுவல் இன்கம், உங்கள் கீழே உங்களை பணக்காரர் ஆக்குவதே குறிக்கோளாய் ஒரு கூட்டம், உங்கள் உள்ளே தூங்கிக்கிடக்கும் உங்கள் ஆற்றல், தன்னம்பிக்கை, ஊக்கம், என்று நீட்டி முழக்க, மைக்கேல் எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடினாராம்.

அப்படி தப்பிக்குமுன்னால் மைக்கேலிடம் இரண்டு வீடியோ டேப்புகள் வேறு - இந்த வியாபாரத்தை மேலும் விளக்குவதற்கு. அந்த டேப்புகளில் மேலும் ஒரு விஷயமும் இல்லை என்றார் மைக்கேல். நிறைய தம்பதிகள் இந்த வியாபாரத்தை செய்ததனால் பெரிய மாளிகையில் வாழ்ந்துகொண்டு விடுமுறைக்கு பல ஊர்கள் சுற்றுவது போன்ற படங்கள்தானாம் அந்த வீடியோ முழுக்க. அதிலிருந்து ஆரம்பித்தது மைக்கேலின் ஓடி ஒளியும் ஆட்டம். முதலில் யார் தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள் என்று காண்பிக்கும் சாதனம் வாங்கினார் மைக்கேல். பிறகு பல்பொருள் அங்காடிகளிலோ உணவகங்களிலோ அந்த நபர் தெரிகிறாரா என்று சுற்றுமுற்றும் பார்ப்பாராம். எங்கேயாவது அந்த ஆள் தெரிந்தால் 'கப்'பென்று பதுங்குவாராம். அவருடைய வாழ்க்கையே அந்த நபரால் மாறிவிட்டதாம். தொலைபேசி ஒலித்தால் நடுங்குவது, பக்கத்து ஊருக்குப் போய் பண்டங்கள் வாங்குவது என்று போலீஸில் தப்பித்த கைதி மாதிரி வாழ்ந்தேன் என்றார். ஒரு முறை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தொலைபேசி மணியடித்தது. அந்த நபரின் எண் என்று தெரிந்து எடுக்காமல் விட்டுவிட்டாராம். அந்த மணி நாராசமாய் ஒலித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த மாதிரி யோசனை வந்தது.

அவருடைய இந்த அனுபவங்களை விருப்பு,வெறுப்பின்றி ஆராய்ந்தாராம். அந்த நபரின் உத்திகள், அதனால் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றையும் அலசியவுடன் அவருடைய யோசனை கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது. மறுநாள் அவருடைய நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து விரைவில் பணக்காரர் ஆவது எப்படி என்று விளக்க ஆரம்பித்தாராம். அவருடைய பிரசங்கத்தில்
அந்த நபரைவிட ஒரு சில படி மேலே போய் கழுத்தில் ரத்தம் கொட்டுமளவு மனிதர் ராவு ராவு என்று ராவினாராம்.

மறுநாளில் இருந்து ஆரம்பித்தது அவருடைய பரிசோதனையின் விளைவு. அவருடைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள தினமும் முயன்றாராம். ஒருவர் கூட சிக்கவில்லை. அவருடைய ஐடியா வேலை செய்ய ஆரம்பித்ததில் அவருக்கு கொள்ளை மகிழ்ச்சி. உள்ளூர் போன் கம்பெனி அவருக்கு ஒரு பரிசு அனுப்பியதாம். இவரால் தொலைபேசி எண் காண்பிக்கும் சாதனம் அமோக விற்பனையாம் ஊரில்.

அப்படியே படிப்படியாக அவரது செயல்முறையை மேம்படுத்தி ஆட்களையே காணாமல் போவது வரை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது என்றார் மைக்கேல். என்னால் நம்ப முடியவில்லை. சரி வா, நீயே உன் கண்களால் பார்த்துக் கொள் என்று வீட்டுக்கு பின்புறம் அழைத்துக் கொண்டு போனார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் ஏதோ வேலையாக இருந்தார். மைக்கேல் அவரை பெயர் சொல்லி அழைத்ததுதான். அடுத்த விநாடி அந்த ஆள் மாயமாய் மறைந்தார். நிஜமாகவே காணோம். சினிமாவில் வருவதுபோல் ஒரு 'உஷ்' இல்லை, ஒரு 'ஜிங்' இல்லை. ஒரு விநாடி இருந்தார். மறுவிநாடி காணோம். அவ்வளவுதான்.

எனக்கு அப்படியும் சந்தேகம், இது ஏதோ மனோவசியமா என்ன என்று. இன்னும் சிலமுறை செய்து காண்பியுங்கள் என்றேன். மைக்கேல் என்னை ஜேம்ஸ் நதிப்பக்கம் அழைத்துக் கொண்டு போனார். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியில் நிறைய செய்து காண்பிக்கலாம். ஆனால் இப்பொதெல்லாம் அவரை உள்ளே விடுவதில்லையாம். நதிக்கறையில் நிறைய பேர் நடப்பதும், ஓட்டமுமாக இருந்தார்கள். சிலர் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். யாராவது தெரிந்தவர்கள் இருக்கிரார்களா என்று நோட்டம் விட்டுக்கொண்டே போனார் மைக்கேல். அவருடைய சக ஊழியர் ஒருவர் கயாக் படகில் வந்து கொண்டிருந்தார். மைக்கேல் கூப்பிட்டு கையை அசைத்தார். அவ்வளவுதான். மறுவிநாடி வெறும் கயாக் மட்டும் தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தது.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் எனக்கு ஒரு சந்தேகம். அப்படி மாயமாய் மறையும் மனிதர்கள் திரும்ப வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டேன். மைக்கேல் சிரித்துக் கொண்டே சொன்னார், "யாருக்குத் தெரியும்....."

Wednesday, May 20, 2009

பீச்சுக்கு போகலாமா ?! (அரைபக்கக் கதை)

சரியாகக் காலை பத்து மணிக்கு சிணுங்கியது செல்.

மறுமுனையில் செந்தில். "மாலதி ! இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் வச்சுக்காத. சாயந்திரம் பீச்சுக்கு போகலாம் !"

'சாயந்திரம் போற‌த்துக்கு இப்பவே என்ன அவசரம் ! என் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல' என்று பெருமிதம் கொண்டாள் மாலதி.

சமையலில் மூழ்கினாள், புத்தகம் வாசித்தாள். அயற்சியாக இருக்க சிறிது கண்ணயர்ந்தாள்.

பண்ணிரண்டு முப்பதுக்கு மீண்டும் செல்லின் சிணுங்கல்.

"மாலதி ! நான் குணா. இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் இல்லியே ?! சாயந்திரம் பீச்சுக்கு போகலாமா ?"

'இல்லடா, செந்தில் கூப்பிட்டு இருக்கான்னு சொல்லிடலாமா ?!' என யோசித்து, அவன் என்னடான்னா போகலாம் என்று உத்தரவிடுகிறான். இவன் என்னடா என்றால் போகலாமா என்று கேட்கிறான். யாருக்கு என்ன பதில் சொல்வது'

"உனக்கு எத்தனை தடவை சொல்வது. பசங்களுக்கு இந்த அளவிற்கு செல்லம் கொடுத்து வளர்க்காதே என்று !!! பேரு சொல்லிக் கூப்பிட்டாங்க, ச‌ரி, அத ஆரம்பத்துலேயே கண்டிச்சிருக்கணும். விட்டாச்சு. இவனுங்க எலியும் பூனையுமா இருந்துகிட்டு, நம்மள பிரிக்கிறானுங்க. இப்ப பாரு, ஊர்ல எவ்வளவோ அழகழ‌கா புள்ளைக இருக்கு. எதிர்த்து நின்னு என்ன அழகா பேசுது. அதுல யாரையாவது புடிச்சு கிடிச்சு பீச்சுக்கு போக வேண்டியது தானே !!! என் பொண்டாட்டிய என் கூட அனுப்ப மாட்டேங்கிறானுங்க" என்று ம‌திய‌ச் சாப்பாட்டிற்கு வ‌ந்த‌ அர்ஜூன் வழக்கம் போல அலுத்துக் கொண்டார்.

Friday, February 27, 2009

யாரந்த சதங்கா?

மனுஷன் விகடனில் அவர் கவிதைக்கு லிங்க் கொடுத்ததையே மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அடக்கம் ஜாஸ்தியாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.

 விகடனில் கதை வெளியாயிருப்பதை சொல்லவே இல்லை. அடுத்த முறை கூப்பிடட்டும், பேசிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள், சதங்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். பாலு மகேந்திரா ரகுமானை சொன்ன பாணியில், ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

Wednesday, May 14, 2008

அமெரிக்க வரன்

"நமஸ்காரம், வாசுகி அம்மா. எப்பிடி இருக்கீங்க? உங்க மகளுக்கு ஏதாவது வரன் வந்ததா?".

"ஏதாவது இல்லை, ஸ்வாமி. அமெரிக்க வரனா வரனும். நான் தினம் வந்து இந்த முருகனை வேண்டிக்கிறேன், ஒரு அமெரிக்க வரனா கிடைக்கணும்னு. இன்னும் இந்த முருகன் மனசு வெக்கலை".

"என்ன வாசுகி அம்மா, முருகனுக்கு கல்யாண உற்சவம் செய்யப் போறிங்களாமே".

"ஆமாம், சிவகாமி. உங்களுக்கு போன் பண்ணிணேன். லைன் கிடைக்கல. தப்பாம வந்துடனும்".

"அப்படியா, நல்லது. கட்டாயம் வரேன். அப்படியாவது முருகன் மனசு வைப்பானென்று பார்க்கறீங்க".

"சரியா சொன்னீங்க."

"நீங்க பேசனதையெல்லாம் கேட்டேன். நல்ல மாப்பிள்ளையாக நம்ப ஊருலயே பாருங்க".

"உங்களுக்கென்ன, சுமதியம்மா. நீங்க உங்க பிள்ளைகளுக்கெல்லாம் அமெரிக்கா, பிரான்ஸ்னு பார்த்து கொடுத்துட்டீங்க. பொண்ணோட பிரசவம், மருமக பிரசவம்னு அமெரிக்கா, பிரான்ஸ் பார்த்துட்டீங்க."

"அங்க போயி அவங்க படற கஷ்டத்த எல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். பாவம் நம்ம வீட்டுப்பிள்ளைங்க. இங்க சுகமா, சொகுசா வளர்ந்துட்டு அங்க போய் கஷ்டப்படறாங்க. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, பெருக்கிக்கூட்ட, இஸ்திரி போட, ஏன் சமையலுக்குக்கூட இங்க ஆள் இருக்கு. பாவம் இதெல்லாம் அவங்களே செய்யணும். இதற்குமேல் டிரைவர் வேலை வேற. குழந்தையெல்லாம் இருந்தா இன்னும் நெறய வேலை. நிம்மதியா ஒரு வாய் சாப்பிட கூட நேரம் கிடைக்கறதில்லை. எல்லா வேலை செய்ய மெஷின் இருந்தாலும்கூட, அவங்க தானே அதையெல்லாம் போடனும்."

"நீங்க என்ன சொன்னாலும் அமெரிக்கா வரன் போல வருமா?'

"சரி, சரி. உங்க விருப்பம் போல நடக்கட்டும்".

"நீங்களும் முருகன் கல்யாணத்துக்கு வந்துடுங்க."

முருகன் கல்யாண உற்சவம் வெகு ஜோராக நடந்தது. மறுநாள் காலை, "அம்மா, தபால்", என்று ஒரு குரல் ஒலித்தது. "வாசுகி அம்மா. நீங்க எதிர்பார்க்கிற அமெரிக்க வரனாய் இருக்கட்டும்" என்றார் தபால்காரர். "அப்படி இருந்து நல்லபடியாக கல்யாணம் முடியட்டும். உங்களை நல்லா கவனிக்கிறோம்", என்றபடியே வாசுகியம்மா அவசரமாக தபாலைப் பிரித்தார்கள். அதற்குப் பிறகு எல்லாம் மின்னல்வேகத்தில் நடந்து, மகள் அமெரிக்கா கிளம்புவதில் முடிந்தது.

நாட்கள் பறந்தன. வாசுகி அம்மாள் வாரந்தோறும் மகள் போனுக்காக காத்திருந்து பேசி மகிழ்வார்கள். ஒரு வாரம் மகள் போனுக்காக காத்திருந்தபோது, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சினிமாவை நிறுத்தி, பரபரப்பாக நியுயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தில் நடக்கின்ற விமானத் தாக்குதலை ஒளிபரப்பினார்கள். "அம்மா, தாயே, அகிலாண்டேஸ்வரி. இது என்ன சோதனை. நீதான் என் பிள்ளைகளை காப்பாத்த வேண்டும்", என்று புலம்பியபடி தன் கணவரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் மருமகன் அந்த கட்டிடத்தில் வேலை செய்வதால், இருவரும் மிகப் பதட்டத்துடன் மகளுக்கு போன் செய்ய முயன்றார்கள். வெகு நேரம் முயன்றும், அவர்களுக்கு இணைப்பே கிடைக்கவில்லை. சுமதியம்மாவிற்கு போன் செய்து அவர்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா என்று விசாரித்தார்கள்.

மறுநாள் மகளிடமிருந்து போன் வந்தது. "அம்மா கவலைப் படாதீங்க. நாங்க பத்திரமாக இருக்கிறோம். நாங்க அன்னைக்கு லீவு போட்டுவிட்டு பிட்ஸ்பர்கில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போயிருந்தோம்" என்றாள் அவள்.

"நல்ல வேளை. அந்த பெருமாள்தான் உங்களை காப்பாத்தினார். டீவில ஒவ்வொரு நாள் ஒரு சேதி வருது. எதோ பாரஸ்ட் பயர்னு சொல்றாங்க. ஒரு நாள் எல்லார்க்கும் வேலை போகுதுனு சொல்றாங்க. ஒரு நாள் பூகம்பம்னு சொல்றாங்க. ஒரு நாள் யாரோ சுட்டுட்டாங்கனு சொல்றாங்க. இப்படி நாள்தோறும் ஒரு பயங்கரமான செய்தியை கேட்டு எங்களால இருக்க முடியலை. பேசாம மாப்பிள்ளையை இங்கயே ஒரு வேலை பார்த்துக்கிட்டு வந்துடச் சொல்லு".

Wednesday, April 02, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

கொஞ்சம் வித்தியாசம் செய்யலாம் என்று நினைத்து 3‍-in-1 பதிவு ஒன்று பதிந்திருக்கிறேன். இங்கே ஓடும் ட்ரக்குகள் பற்றிய பதிவு. 3-in-1, மற்றும் உட்கருத்து, எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

http://vazhakkampol.blogspot.com/2008/03/3-in-1-trucks-drivers.html

Tuesday, April 01, 2008

கார்மேகக் காகத்தின் கதை!

எல்லோரும் காக்கா நரி கதை படித்திருப்பீர்கள். அதை கவிதையாக வடித்திருக்கிறேன்.  


புழுதி படிந்த ஒரு கிராமத்தில் 
ஒரு யௌவனக் கிழவி வடை
 சுட்டு விற்று வந்தாள்
காசு பெற்று வந்தாள்

அந்த கந்தக வடையை
கவர்ந்து செல்ல அங்கே வந்தது
ஒரு கார்மேகக் காகம்
பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேகக் காகத்தின்  
கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லறைப் பூக்கள்கூட
அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது.

பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேகக் காகம் 
சந்தன மின்னல் போல் பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது

விதைக்குள் இருந்து வந்த விருக்ஷம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம்
அதன் சுந்தரக் கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொப்பனக் காகம்

பூவுக்குள் பூகம்பம்போல்
புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி - நர்த்தக நரி
நாலடியார் நரி
நீதியறிந்து போதி சொல்லும்
போதி மரத்து சாதி
கார்மேகக் காகம் வைத்திருந்த அந்த வடையை
அந்த நரி பார்த்தது
உடல் வேர்த்தது
அந்த ராஜவடையை அபகரிக்க
அதன் நந்தவன மூளை
நாசவேலை ஒன்றை செய்தது

நரி
அதுவாகச் சென்றது ,
காகம் இருந்த மரத்தடியே
மெதுவாகச் சென்றது
ஆனால் அந்தக் கார்மேகக் காகமோ
இச்சக அழகியாகி ய
எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை
தன் நேரிய விரல்களுக்கிடையில் வைத்து
அதன் கூர்மையை சோதித்துக் கொண்டிருந்தது

நரி பகர்ந்தது
ஓ உலக அழகியே
உள்ளூர் மோனலிசாவே
நகராட்சி ப் பூங்காவுக்குள் நுழைந்த நமீதாவே
என் அந்தப்புரத்துக்குள் அத்து மீறி புகுந்த அசினே
தீவுத் திடலில் திடும்பென  நுழைந்த திரிஷாவே
நீ பார்க்கவே எ வ்வளவு அழகு
நீ மட்டும் உன் கந்தர்வக் குரலிலே ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும்
சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்
ஏன்,  நீருக்கும் வேர்க்கும் என்றது

இந்த இடத்தில்தான் சரித்திரம் சரிகிறது
பூகோளம் புரள்கிறது
தமிழ் தடுமாறுகிறது

நரியின் தேவ எண்ணத்திலே
ஈட்டி பாய்ந்தது
ஏனென்றால்,

 காகம் என்ன பதிலளித்தது தெரியுமா?
ஏ நர்த்தக நரியே
நான் பாடமாட்டேன்.
ஏனென்றால்

நான் நாகுவின் வாசலில் வளர்ந்த காகம்
ஆகவே மெட்டு இல்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது

ரிச்மண்ட் மக்களே
பாசமுள்ள ரிச்மண்ட் தமிழ் மக்களே
காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது
மனதிற்குள் மழை பொழிந்தது
அங்கே ஆனந்தங்கள் பரவசம்
அனுமதி இலவசம்
கார்மேகக் காகத்தின் கதை
என்னைப் பொருத்தவரை
ஒரு கருவாட்சிக் காவியம் !
கள்ளிக்காட்டு இதிகாசம் !!

பாசமுள்ள ரிச்மண்ட் வாசிகளே
நீங்கள் பள்ளிகளிலும்
பல்கலைக் கழகங்களிலும்
இந்தக் கார்மேகக் காகத்தின் கதையை
பாடத்திட்டமாக்க பரிந்துரை செய்யுங்கள்!

வணக்கம் கூறி கதை முடித்தேன் யான்.


பிகு: நானே எழுதியது என்று சொன்னால்.....  பித்தன் நெற்றிக்கண்ணைத் திறந்திடப் போகிறார். அதனால் சொல்லிவிடுகிறேன். இந்த மண்டபத்தில் சுட்டது. அதுவுமில்லாமல் ஏப்ரல் ரெண்டுக்குள் எழுத ஒரு கெடு.. அதான் ஹி.... ஹி....







Wednesday, March 05, 2008

அபார்ட்மென்ட் எண் 26

அபார்ட்மென்ட் பத்தி ஒரு செய்தியைக் கதையாய் எப்படி சொல்லலாம் என்று எண்ணி, ரொம்ப நாளா எழுதணும் என்று நினைத்து இப்ப தான் நேரம் கிடைத்தது. எழுதியிருக்கிறேன், வந்து படிச்சு பார்த்து உங்க கருத்துகளச் சொல்லுங்க.

http://vazhakkampol.blogspot.com/2008/03/26.html

Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

கொஞ்ச நாள் முன்னால் ஆரம்பித்து கிடப்பில் கிடந்தது இக்கதை. இன்று கிடைத்த சிறு ஓய்வில் எழுதி முடித்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_2111.html

Thursday, June 21, 2007

வைராக்கியம் - இருநூறாவது பதிவு!

தஞ்சைப் பெரிய கோவிலின் மணி டாங், டாங், டாங்கென அடித்து அன்றைய சாயங்கால பூசையை ஊருக்கு உரைத்தது.

விபூதிப் பிரசாதம் வாங்கி அணிந்து கொண்டு வெளியில் வந்தார் பரமசிவம். சிலு சிலுவென வீசிய காற்றில் சுற்றுப் பிரகாரத்தில் இருந்த மரங்களின் இலைகள் சிற்றருவியென சலசலத்தன. தென்றலின் தீண்டலில் கோவிலுள் இருந்த புழுக்கம் குறைந்து ஒருவித வேதியல் மாற்றம் நிகழ்ந்து தேகத்தில் குளுமையை உணர்ந்தார் பரமசிவம்.

பெரிய வளாகம் என்பதால், ஓரளவுக்கு மக்கள் இருந்தும் கூட்டமாகத் தெரியவில்லை.



வெளிச்சம் மெல்ல விடைபெற துவங்கியது. வலக்கையை மேல்தூக்கி மலைமுகடாய்ப் புருவங்களின் அருகில் வைத்து நந்தி மண்டபத்தைப் பார்த்தார். 'நாவன்னா' நேரத்துக்கு வந்திட்டானே என வியந்து, அத்திசையை நோக்கி நடையை சற்று துரிதப்படுத்தினார். சக வயதுடையோர் வட்டத்தில், நாராயணபிள்ளையை நாவன்னா என்று தான் அழைப்பார்கள். எனக்கென்ன அவ்வளவு வயதா ஆகிவிட்டது, அந்தக்காலத்து ஆளுக மாதிரி கூப்பிடறீங்களே என்று அன்பாய்க் கடிந்து கொள்வார். அப்படி ஒன்றும் வயோதிகர் இல்லை நாவன்னா, வருகிற ஆவணியில் அவருக்கு வயது 65.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்தான் நாவன்னா. ஆனால் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு யாரும் பார்த்ததில்லை. வெளிப்பிரகாரத்தோடு சரி. சாமியை வெறும் கல் என்று நினைத்தாரோ, இல்லை அர்ச்சகர்களை வெறுத்தாரோ தெரியவில்லை.

நாவன்னாவை நெருங்கிய பரமசிவம், "என்ன ஓய், மேல்சட்டையில அங்கங்கே அழுக்கு படிந்து இருக்கு" என்றார்.

ஒன்னுமில்லவோய், இன்னிக்கு வேலையில சுந்தரபாண்டி பயல காணோம். வெஷம் குடிச்சிக் கெடக்கானாம். அவன் ஆத்தா செல்லம்மா வந்து சொல்லி அழுதுட்டுப் போறா. இன்னிகுனு பாத்து ஒரு கல்யாண ஆர்டர். அதான் வெறகு மண்டில நானே வெறகு அள்ளி போடவேண்டியதாப் போச்சு. குனிஞ்சு நிமிந்ததில முதுகு தான் கொஞ்சம் வலிக்குது.

துள்ளிக்குதிக்கிற வயசுனு நெனைப்பாய்யா உமக்கு. இன்னோரு ஆளப் போட்டு வேலையப் பாக்கவேண்டியது தானே. என்ன வெறகு மண்டி வச்சு நடத்தறே ? ஊரோட இலவசமா கேஸ் அடுப்பு வேற கவுருமெண்டு கொடுக்குது. வெறகு விக்கிறாராம் வெறகு. நாவன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் பரமசிவம் புலம்பும் புலம்பல் தானிது.

வந்திட்டாரு சிவம். சிவய்யா, நீயும் சொல்லிகிட்டே தான் இருக்கே. நானும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். கையக் கால மடக்கி, ஒடம்ப வளச்சி, வேல பாத்து சாப்பிட்ட உடம்புய்யா. சும்மா உக்காந்து சாப்பிட மனம் வரமாட்டேங்குது.

மேல்துண்டை உதறி படிக்கல்லில் போட்டு நாவன்னாவின் அருகில் பரமசிவமும் அமர்ந்தார். இப்பவாவது சொல்லுமய்யா, ஸ்ரீவிமானத்தின் உச்சியில் இருக்கும் 80 டன் கல், ஒரே கல்லா ? நமக்குத் தெரிஞ்சு அது ஒரே கல்லுனு தான் படிச்சிருக்கோம். ஆனா அது இரு கற்கள் என்றும், ஆரஞ்சுச் சுளையென ஆறேழு கற்கள்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களே என்றார்.

உம்ம குசும்பு உம்ம விட்டுப் போகுமாய்யா. என் தம்பி மக கற்பகம் புகுந்த வீடு மூலமா, கணபதி ஸ்தபதி சொந்தக்காரன்னு சொன்னதில இருந்து கோவிலப் பத்தி ஏதாவுது கேட்டுக்கிட்டே இருக்கியே. ஸ்தபதி அவர்களயே ஓரிரு முறைதான் பாத்துருக்கேன். அவுக பாட்டன் பூட்டன் கட்டுன கோவில் பத்தி எனக்கு என்னய்யா தெரியும் என்று சீறித்தள்ளினார் நாவன்னா.

சரி விடுமய்யா. என்னத்த சொல்லிப்புட்டேன். இம்புட்டுக் கோபம் வருது இந்த வயோதிக வாலிபருக்கு என்று மீண்டும் சீண்டினார் பரமசிவம்.

என்னவிட நீர் ரெண்டு வருசம் மூப்புன்றத மறக்காம இருந்தாச்சரி என்றார் நாவன்னா புன்முறுவல் பூத்தபடி.

வட்ட பல்புகளும், நீள ட்யூப்லைட்டுகளும் மினுக்கி கோவில் வளாகம் முழுதும் ஒளி பரவியது. கம்பீரமாகக் காட்சி அளித்தது ஸ்ரீவிமானம். நந்தியின் மேல் தடவிய எண்ணையின் பளபளப்பில் மேலும் மின்னியது நந்தி மண்டபம். கோவிலிருந்து ஓரிருவராக வெளியேறத் துவங்கினர்.

நம்ம நக்கல் பேச்சு கெடக்கட்டும். என்னவாம் அந்த பயலுக்கு, எதுக்கு வெஷம் குடிச்சானாம் என்று நாவன்னாவைக் கேட்டார்.

வா நடந்துகிட்டே பேசிக்கிட்டு போகலாம் என்று நாவன்னா எழுந்தார். பரமசிவமும் அவரைத் தொடர்ந்தார். மண்டபத்தை விட்டு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

மராத்தியர் கட்டிய கோட்டைச் சுவர் வாயிலில் சுந்தரபாண்டியனின் தாய் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொண்ட நாவன்னா, என்னம்மா பய எப்படி இருக்கான் இப்போ என்றார். அழுத அவளின் கண்களால் வீங்கியிருந்தது ஒட்டிப்போன கன்னங்கள்.

நைந்துபோன முந்தானையை வாயில் வைத்தபடி
, கண்களில் நீர் பெருக்கெடுக்க "அப்படியே தான் கெடக்கான். சோறு தண்ணி எறங்க மாட்டேங்குதுய்யா". நெலக்குத்தின தேர் மாதிரி விட்டத்தை வெறித்த படி கெடக்கான்யா என்று தாங்கமுடியாத அழுகையை அடக்கிக் கொண்டாள்.

சுப்ரமணிக்குச் சேதி தெரியுமா என்று கேட்டார் பரமசிவம்.

ஊர் ஊரா போற பொளப்பு அவருக்கு. எப்ப வருவாருனு தெரியல. இப்ப எந்த ஊர்ல இருக்காருன்னும் தெரியல. எப்பவாவுது பக்கத்து வீட்டு போன்ல கூப்பிட்டு பேசுவாரு. அவரா கூப்புட்டாத்தான்யா என்று விம்மினாள்.

ஏதாவுது பேசறானா ? நான் என்ன செய்யட்டும் என்றார் நாவன்னா.

படிக்கனும், படிக்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கான்யா. ஆயிரத்துக்கு மேல மார்க் எடுத்து என்னய்யா ப்ரயோசனம். மேலே படிக்க வைக்க முடியாத வசதியற்ற என் வயிற்றில் பொறந்து இப்படிக் கஷ்டப்படுறானே என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

படிக்கும்போதே உங்க வெறகு மண்டில வேலை செஞ்சுகிட்டே தானய்யா படிச்சான். அதையே முழுசா செய்யிடானு சொன்னாலும் கேக்க மாட்டேன்கிறான்யா என்று தளுதளுத்தாள்.

சரி சரி கண்ண தொடச்சுக்கவே. பெத்தவ கஷ்டம் எங்களுக்கும் புரியுது. நாங்க நாளைக்கு அவன வந்து பாக்குறோம் என்று சொல்லி, கையில் தொங்கிய மஞ்சப் பையில் கையைவிட்டு, சில நூறு ரூபாய்த்தாள்களை உருவி, செல்லம்மாளிடம் நீட்டினார் நாவன்னா. மேல்படிப்புக்கு நாங்க உதவி பண்றோம்னு சுந்தரபாண்டி கிட்ட சொல்லு. வேற ஏதாவுது உதவி தேவைனா சொல்லு என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தனர் பரமசிவமும் நாவன்னாவும்.

சோகம் அப்பிய செல்லம்மாளின் விழிகள் வியப்பில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது முதல் முறையாய். கைகூப்பி இருவரையும் வணங்கி வீடு நோக்கி விறைந்தாள்.

சிறிது தூரம் நடந்து, யாரும் அவர்கள் அருகில் இல்லை என்று அறிந்து, "ஏய்யா நாவன்னா, புத்தி மழுங்கிப் போச்சாய்யா உமக்கு. நல்லாப் படிக்கிற பையனையா வேலைக்கு வெச்சிருந்தே ?" கையக் கால மடக்கி வேல செஞ்சு சாப்பிட்டா மட்டும் போதுமா ? அந்த வைராக்கியம் செய்யற செயல்லயும் இருக்க வேணாமா ? ஒன்னுமில்லாத பயலெல்லாம் ஓகோனு இருக்க இந்தக் காலத்தில படிக்கிற ஒரு பய அழியலாமா ? அதுக்கு நாமலும் உடந்தையா இருக்கலாமா ? என எண்ணையிலிட்ட எள்ளாய்ப் பொறிந்து தள்ளினார் பரமசிவம்.

படிப்புச் செலவுக்கு எங்க வருமானம் பத்தல. நீங்க உதவி பண்ணி அவனுக்கு வேல போட்டுக் கொடுங்க. அந்த சம்பளத்தில அவன் படிச்சிக்கிருவான் என்று ஆத்தாளும், அப்பனும் விழுந்து கெஞ்சினதுக்கு நான் பண்ணின காரியம் அது. என்ன பண்ணச் சொல்றே இப்போ என்று சீறினார் நாவன்னா.

கோவிலைச் சுற்றி வந்து தற்போது சிவகங்கைக் குளத்தருகே இருந்தனர் இருவரும். குப்பையும், முட்புதர்களும் அண்டி இருந்தது. ஒருகாலத்தில் அரண்மனைக்கு இணையாக பராமரிக்கப் பட்ட இடமாக இருக்கலாம் ! குப்பையில் தான் மாணிக்கம் இருக்கும் என்பதால் குளமெங்கும் குப்பையோ என்னவோ !

நாளைக் காலை நேரா சுப்ரமணி வீட்ல சந்திப்போம் என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர்.

குடியானவர் தெரு, வெறித்த கண்கள் விலகாமல் மேல் பார்த்துக் கிடந்த சுந்தரபாண்டியனின் அருகில் செல்லம்மாள் விரித்த கிழிந்த பாயில் அமர்ந்திருந்தனர் பரமசிவமும், நாவன்னாவும்.

முட்டாப்பய மவனே, இப்படிப் பண்ணிப்புட்டியேடா. மார்க் எடுக்கத் தெரிஞ்ச உனக்கு மத்த விசயம் தெரியலையேடா. படிச்சா மட்டும் போதுமா? உன்கிட்ட வசதியில்லேன்ற காரணத்துக்காக உசிரக்குடுக்கத் துணிஞ்ச நீ, அந்த வைராக்கியத்தை உங்க ஆத்தா சொல்ற மாதிரி முழுநேரம் வேலை செஞ்சு நாளப்பின்ன ஒரு பெரிய ஆளா ஆகிக் காமிக்க வேண்டாமா ?

தமிழ் நாட்டையே ஆண்ட காமராசர் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சாருனு தெரியுமா உனக்கு. பள்ளிக்கூடத்தில் மழையைப் பார்த்துக்கொண்டு படிக்காமல் போன கி.ரா. ஒரு பல்கலைகழகத்துல சிறப்புப் பேராசிரியரா இருந்திருக்கார். கண்ணதாசன் படிச்சாரா என்ன ? எத்தனையோ கவிஞர்கள் இன்னிக்கு இருந்தாலும் உலகம் பூரா அவரத் தான இன்னும் கவியரசர்னு சொல்லுது. இப்படியே சொல்லிகிட்டே போகலாம் படிக்காத மேதைகளைப் பத்தி. வைராக்கியத்துல வேகமா இருக்கத விட விவேகமா இருக்கனும். பாடத்தவிட இதையல்லவா நீ படிச்சிருக்கனும் மொதல்ல. யோசிக்கறதே இல்ல, இந்தக் காலப் பசங்க சட்டுபுட்டுனு முடிவெடுக்கறீங்க. வாழ்ந்து காட்டணும், அது தான் வைராக்கியம்.

செல்லம்மாள் கொடுத்த நீர்க்காபியை அருந்திக் கொண்டே பரமசிவம் சொன்ன சொற்கள் காபியைவிடச் சூடாய் இருந்தது.

நாவன்னா கிட்ட பேசி உன்னோட படிப்புச் செலவுக்கு உதவி பண்ணச் சொல்லியிருக்கேன். நடந்தத மறந்துட்டு நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய்ட்டு பிற்பாடு நாவன்னாவுக்கு settle பண்ணிடு. என்ன நாஞ்சொல்றது என்று கேட்டார் பரமசிவம்.

கண்கள் மெல்லத் துடிக்க, உடலை சற்று நெளித்து எழுந்து அமர்ந்தான் சுந்தரபாண்டி. நாவன்னாவிடம், எப்ப வரணும்னு சொல்லுங்கய்யா வேலைக்கு என்றான் !

நாற்பது வருடம் முன்பு இவ்வுலகைவிட்டுப் பிரிந்த தன் தமையன் வேலுச்சாமியின் எண்ணம் பரமசிவத்தின் கண்களில் முத்துக்களாய் உதிர்ந்தது.

மார்ச் 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

-------------

இது எங்க சங்கத்து இருநூறாவது (200) பதிவு. அத பதியறதுல முதல்ல பெருமைப்படறேன். இந்த எண்ணிக்கைகு உழைத்த எங்க சங்கத்து மக்கள் அனைவருக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.

இதுவரைக்கும் படித்து, பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இனிமேலும் படிக்கப் போகிறவர்களுக்கு நன்றிகள் பல.

தஞ்சைப் படம், நம்ம தமிழ் ப்ளாக்ல இருந்து எடுத்து போட்டிருக்கேன். அதன் உரிமையாளருக்கு என் நன்றி.

கதை பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

Wednesday, June 06, 2007

மூப்பு

காலையிலிருந்து ஒரே கேள்வி மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது. குளித்துக் கொண்டிருக்கும்போது இந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'. நேற்று பேங்க் பேலன்ஸ் பார்த்ததாலா, இல்லை பசங்கள் கேட்ட விளையாட்டு சாதனத்தாலா என்று தெரியவில்லை. நீங்கள் நினைக்கிற மாதிரி 'ஒரு நகை நட்டு உண்டா' என்ற டயலாக்கிலிருந்து இல்லை.

மனம் அந்த வரிகளை அசை போட ஆரம்பித்தது. ஆஹா என்ன வரி? எப்படி ஒரு உதவாத பொருளை வைத்து எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதை புரியும்படி எப்படி மகன்களுக்கோ, காதற்ற ஊசி போல பல விஷயங்களை வாங்கப் பார்க்கும் நம்ம வீட்டு பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டுக்கோ சொல்வது?
இங்க பாரு மக்கா, இதுக்கெல்லாம் அடிச்சிக்கறீங்களே - கடைசீல இத எல்லாமா கொண்டு போகப்போறீங்கன்னு கேட்டிருக்காரு பாருங்க அப்படின்னு ஒரு பில்ட் அப் கொடுத்து ஒரு பெரிய லெக்சர் அடிக்கலாமே. சரி யாரு சொன்னது இதை.

இது நம்மளுக்கு ரொம்ப தெரிஞ்ச விஷயமாச்சே. அட சட்னு பேரு வரமாட்டெங்குது. அதாம்பா பெரிய பணக்காரரா இருப்பாரு. அழகா ஒரு பையன் பிறப்பான். இவர விட வியாபாரத்துல பெரிய ஆளா வருவான். பையன் பேர்கூட திருவெண்காடன். அது பையன் பேரா, அப்பா பேரா? பையன் வியாபாரத்துக்கு வெளிநாடு போயி ரொம்ப பொருளெல்லாம் வாங்கிட்டு வருவான். இவரு போயி திறந்து பாத்தா எல்லாம் வரட்டியா இருக்கும். கோபத்துல பையன அடிக்க தேடுவாரு. ஒரு துண்டுசீட்டுல 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே'ன்னு எழுதிட்டு பையன் எஸ்கேப். பையன் வேறுயாருமில்லை. இறைவந்தான். அப்பறம் இவருக்கு ஞானம் வந்து எல்லாத்தையும் துறந்துட்டு ஆண்டியாவாரு.

அட - இவரு பேரு இப்பகூட தெரியாட்டி கேவலம். பேரு தெரியறவரைக்கும் படுத்தப்போவுது. பல்லிடுக்குல மாட்டின மாம்பழ நாரு மாதிரி உறுத்திட்டே இருக்கும்.

டி.எம். சௌந்தரராஜன்கூட நடிச்சிருப்பாரு. படம்பேரு இவருபேருதான். பாட்டெல்லாம் பிரமாதமாயிருக்கும். இவரு நாயன்மாரா இல்லையா? சரியா தெரியலை. பெரிய சித்தரு. இவரு ஆண்டியா அலையறாரு குடும்ப மானம் போகுதுன்னு இவரு அக்கா ஆப்பத்துல விஷம் வெச்சு இவருக்கு பிச்சை போடுவாங்க. அதுல விஷம் இருக்கறது தெரிஞ்சு ஓட்டப்பம் வீட்டைச் சுடும்னு ஆப்பத்தை கூரை மேல போடுவாரு. வீடு எரிஞ்சி போயிடும். அட வீடு கிடக்கட்டும். அவரு பேரு என்னா. சட்.

அக்கா புருஷனா எம்.ஆர். ராதா கலக்கியிருப்பாரு. ஊர்ல யாரோ கெளப்பிவிட்டு ரெண்டாம் ஷோ போயி, நா ஒருத்தன் தான் தியேட்டர்லியே முழிச்சிருந்தேன். டி.எம்.எஸ். ரொம்ப சின்னவயசா இருப்பாரு. நல்ல கம்பீரம். அவருக்கே இந்த படம் ஞாபகம் இருக்கோ இல்லியோ. நம்மள இந்த ப்ரச்னை இப்படி வாட்டுதே?

அம்மா சாகறவரைக்கும் அந்த ஊர்லயே சுத்திக்கிட்டு இருப்பாரு - இல்லையே அது ஆதி சங்கரர் கதையோ? இல்ல இதுலயும்தானா?? என்னடா ஒரே குழப்பமாயிருக்கு. அம்மா செத்த உடனே கொள்ளி வைக்கும்போது, அம்மா உடலை விறகுக்கட்டையேல்லாம் வாட்டும்னு வாழத்தண்டுங்க மேல போட்டு கொள்ளி வச்சாரு. அப்ப அவர் பாடுன பாட்டுகூட ரொம்ப உருக்கமா இருக்கும்.

அம்மா செத்ததுக்கப்பறம் இவரு கெளம்பி ஊர் ஊரா சுத்துவாரு. ஒரு ஊர்ல திருடனுங்க அரண்மனைல நகைய திருடிட்டு ஓடும்போது இவர் மேல போட்டுட்டு போயிடுவானுங்க. இவர திருடன்னு நினைச்சு ராஜாகிட்ட கூட்டிட்டுபோயி ராஜா இவர கழுவேத்த உத்தரவு போடுவாரு. கழுவேத்தறதுன்னா உங்க எத்தன பேருக்கு தெரியும்? அப்பறம் சொல்றேன். இப்ப சித்தர கண்டுபிடிக்கனும். டி.எம்.எஸ்(இவரு, இவருன்னு சொன்னா சித்தரா, ராஜாவான்னு நீங்க குசும்பு பண்ணுவீங்கன்னு தெரியும்) உடனே ஒரு பாட்ட எடுத்து உட்ட உடனே கழுமரம் எரிஞ்சி போயிடும். அப்பறம் அந்த ராஜாவும் இவரு சிஷ்யனாயி இவரு பின்னாடியே வந்துருவாரு. அந்த சிஷ்யருக்கு ஒரு நாயி தோஸ்த் ஆயிடும். இவரு சிஷ்யரு பந்தபாசம் எல்லாம் உட்றனும்னு சொல்லி அந்த நாய் மண்டைலியே திருவோட்டால ஒரு போடு போட்டு தள்ளிடுவாரு. இவருடைய சிஷ்யகோடி இவருக்கு முன்னாலியே மோட்சம் வாய்க்குவாரு. அட இவ்ளோம் பெரிய மனுஷன். இன்னமும் பேர் ஞாபகம் வரமாட்டிங்குது. என்ன லொள்ளுய்யா இது...

அப்பறம் சோழராஜா வந்து இவரண்ட கண்டுக்குவாரு. சோழராஜா யாருன்ரீங்க. நம்ம மேஜர்னு நெனக்கிறேன். மேஜர் தமிழ்ல சொல்லி இங்கிலிஷ்ல சொல்லாத ஒரே படம் இதுதான்னு நெனக்கிறேன். அப்பறம் கரும்ப வெச்சு சித்தர் பிலாசபியெல்லாம் உடுவாரு. ஆரம்பத்துல இனிக்கும் முடிவுல கசக்குற வாழ்க்க மாதிரி (ஆரம்பம் கரும்போட அடியில இருந்து). அப்பறம் கொஞ்சம் சித்து விளையாட்டுல்லாம் விளையாடுவாரு. விளையாடற பசங்கள கூப்ட்டு மேல ஒரு கூடய கவுக்க சொல்லிட்டு மாயமா அவங்க பின்னாடி இருந்து வருவாரு. ரெண்டு, மூனுவாட்டி இது மாதிரி பண்ணிட்டு அப்பறம் கூடய கவுத்திட்டு தொறந்து பாத்தா - சிவலிங்கமாயிருப்பாரு. அதாம்பா மோட்சம் வாங்கி எஸ்கேப்.

இவ்ள விஷய்ம் ஞாபகம் வருது, பேரு மட்டும் தெரியலையே? அய்யோ, அய்யோ!!!

அப்பறம் எங்கியாவது குளிக்கும்போது ஞாபகம் வந்து யுரேகா, யுரேகான்னு ஓடப்போறேன். அதுசரி. அப்டி ஓட்னது யாரு? போச்சுறா. இன்னொரு பேரும் அவுட்டா? ஆமா நம்ப பட்டினத்தாரு பேரே மறந்து போ...

ஹையா!!!! பட்டினத்தார்!!!!! பட்டினத்தார்!!!!!!! ஆகா நம்ப ஞாபகசக்தியே ஞாபகசக்தி!

யுரேகா பார்ட்டிய அப்பறம் பாக்கலாம். பட்டினத்தார் பத்தி உடனே கூகுளாண்டவர் கிட்ட கேக்கனும். நமக்கு தெரிஞ்ச விஷயத்துல எவ்ள நிஜம் எவ்ள உல்ட்டானு பாக்கறதுக்கு.

Monday, May 21, 2007

வரப்பு உயர்ந்த வீடு

காலக்கோட்டை புளியமரம் எறங்கு என்று சவுண்டு விட்ட கண்டக்டர், தொடந்து விசிலடிக்கவும், நாளுக்கு சில முறை சாய்ந்தே வரும், ஒரே அரசுப் பேருந்து தள்ளாடி நின்றது. சிலர் இறங்கவும், பலர் ஏறவும், சிறு புழுதி பரப்பிக் கிளம்பியது. இறங்கியவர்களில் பாலுவும் ஒருவன்.

விடுமுறை என்றால் அது கண்டிப்பாக நண்பன் பாண்டியின் வயல் கிணற்றில் குளிக்காமல்க் கழிந்ததில்லை. பாண்டியின் வயலைக் கடந்து தான் அப்பேருந்து வந்தது. கேணி நிறம்பி வழிந்ததைக் கண்டு சந்தோசப்பட்டான் பாலு. ஆனால், அரையாண்டு விடுமுறைக்கு வரும்போது கூட அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. இப்போது வயல்வெளிகளைச் சுற்றி ஏதோ பெரிய மாற்றம் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை.

சுற்றிப்பார்த்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு குன்றுகள். சின்ன அருவி கூட உண்டு எங்க ஊர்ல. மதுரயச் சுத்தி, திண்டுக்கல்லுக்கு அப்புறம் எங்க ஊர் தான் குளுகுளுனு இருக்கும்னு இந்தப் பக்கத்து ஆளுகளுக்குத் தெரியும் என்ற நினைவுகளுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடக்க ஆரம்பித்தான் பாலு. அக்ரகாரம் தாண்டி, பெருமாள் கோனார் வீடு தாண்டி, காமராஜ் தெருவில் நுழைந்தான். வலப்பக்கம் நாலு வீடு தள்ளியிருந்த அவனது வீட்டின் கதவு, சாத்தியிருந்தாலும் தாழிடாமல் இருந்தது. கதவைத் தள்ளித் திறக்கையில் கேட்ட க்ரீச்சில், உள்ளிருந்து "யாரதுதுதுதுதுது" என்றது அவன் அம்மாவின் குரல்.

நாந்தாம்மா என்றான்.

வா ராசா .... பஸ் ஹாரன் சத்தம் கேட்டுச்சு, நீதா-னு நெனச்சேன். எப்படிப்பா இருக்கே, பரீச்சே எப்படி எழுதிருக்கே. வழக்கமான கேள்விகள் தானேயென்று தாயின் பரிவு அவ்வயதில் புரியவில்லை.

சரிம்மா நாங்கெளம்பறேன்.

என்னப்பா வந்ததும் வராததுமா வெளிய கெளம்பிட்ட. ஏதாவுது சாப்பிடறிய ?

ஒன்னும் வேணாம்மா ...

நீ இன்னிக்கு வர்ரேனு சொன்னேன். லெச்சுமி அத்தே உனக்காக நாட்டுக்கோழி கொழம்பு வச்சி எடுத்தாரேனு சொல்லியிருக்காக. சீக்கிரம் வந்துரு ராசா. கைலி மாற்றி, சரிம்மா என்றான். தந்தையின் மிதிவண்டி பக்காவாக இருந்தது. நன்றாகத் துடைத்து பளபளவென்று வைத்திருந்தார். stand எடுத்து விட்டு, வீட்டினுள்ளிருந்து அப்படியே மிதிவண்டியைத் தூக்கி, வாசல் படிகள் கடந்து, தெருவில் இறக்கிப் பாண்டி வீடு நோக்கி மிதித்தான்.

வாடா பாலு. எப்படி இருக்கே ? பாத்து எவ்ளோ நாளாச்சு டா என்றான் பாண்டி. கை குலுக்கிக் கொண்டனர் இருவரும். துண்டு, சோப்பு டப்பா எல்லாம் கொண்டாந்திட்டியா மறக்காம ? சத்த இரு, இந்தா வந்திர்ரேன் என்று வீட்டினுள் சென்றான் பாண்டி. பரபரவென்று தன் தந்தையின் சட்டைப் பாக்கெட்டைத் துளாவினான்.

கூடத்தில் படுத்திருந்த அவனது பாட்டி, என்னடா பாண்டி சத்தம் என்றதும், "இது மட்டும் எப்படித்தான் அது காதுல கேக்குமோ", "அதும் கண்ணும் கரெக்டா தெரியுமோ" என்று முனுமுனுத்தான். ஏ கெழவி பேசாம படு, நான் note-அ தேடிக்கிட்டிருக்கேன் என்றான்.

அவன் சொன்னது எந்த note-u என்று அவனது பாட்டிக்குத் தெரியாமலில்லை. ஒங்கப்பன் செஞ்சத தானடா நீயும் செய்யறே, போடா போக்கத்தவனே என்று செல்லமாகக் கடிந்து, வழக்கம் போலத் தன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.

மச்சி எரநூறு தேரியிருக்கு டா. பணம் கிடைத்த சந்தோசத்தில் இருவரும் உற்சாகமானார்கள். எவ்ளோ நாளாச்சிடா மச்சி நாம சந்திச்சு. குமார் வந்திருப்பானா டா என்றான் பாலு.

அவன் நேத்தே வந்திட்டன். நீ தான் லேட்டு ...

நீ இன்னிக்கு வர்ர சேதி சொல்லிட்டேன் எல்லாருக்கும். இப்ப வந்திருவாய்ங்க பாரு எல்லோரும்.

இருவரும் வெளித் தின்னையில் வந்து அமர்ந்து, அனைவரின் வரவுக்கும் காத்திருந்தனர்.

உச்சி வெயில். படுத்திருந்த பாட்டி, 'யப்பா, முருகா' என்று ஆரம்பித்து அனைத்து சாமிகளையும் ஒருமுறை அழைத்து, தனது மஞ்சளாகிப் போன வெள்ளைப் புடவையை சரிசெய்து கொண்டு எழுந்தாள். பின்கட்டுக் க்தவைத் திறந்து வெளியே வந்தாள். கூசிய இரு கண்களையும் மெல்லக் கசக்கிக் கொண்டு அவள் வருவதைப் பார்த்து, கட்டிக் கிடந்த காங்கேயம் காளைகள் இரண்டும் எழுந்து நின்றன.

இந்த ஆடு, கோழி எல்லாம் எப்படி அதுங்க இஷ்டத்துக்கு திரியுது. நம்மை மட்டும் ஏன் கட்டிப்போட்றாய்ங்க என்று மாடுகளுக்குத் தோன்றியிருக்குமா ? உழைப்பாளி எங்கே விட்டுட்டுப் போய்ருவியோன்னு மனிதனுக்குப் பயம், என்றும் அதுகளுக்குத் தெரியுமா ?

காற்று தென்றலாக வருடியது வேப்பமரத்தினடியில். வெயிலின் வெக்கைத் துளியுமில்லை. களனியைக் களைந்து, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு ஊரலைத் திறந்து விட்டாள். அவிழ்த்து விட்ட காளைகள் இரண்டும் மூக்குப் பிடிக்கக் குடித்தன.

பக் பக் என்று சுற்றி சுற்றி வந்த கோழிகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் குருனை அரிசியைத் தூவினாள். அந்த நேரத்திலும் சேவல் ஓட்டின் மேல் நிழலோரமாய் நின்று கொண்டிருந்தது.

வைக்கபடப்பினருகில் சுருண்டு படுத்திருந்த நாய், காதுகளைக் கூராக்கி, லேசாகக் கண் திறந்து பார்த்து, வாலை அங்கும் இங்கும் ஆட்டிவிட்டு மீண்டும் கண் மூடிக் கொண்டது.

தூரத்தில் நாலைந்து சைக்கிள் வருவதைப் பார்த்துத் துள்ளி எழுந்தனர் பாண்டியும், பாலுவும். வருவது ரவி, ஆறுமுகம், கணேசன், மாரி, கோடி, மணி என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அனைவரும் பாண்டியின் வீட்டை அடைந்தனர்.

எல்லாரும் பரீட்சை எப்படிடா எழுதிருக்கீங்க என்று பாண்டி கேட்க, அதற்கு ஆறுமுகம், அது கெடக்கு, வழக்கம் போல பெயில் தான். அத எதுக்கு ஞாபகப்படுத்தறே, அதான் லீவு விட்டாய்ங்கள்ல, "அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.

சரி சரி நேரமாச்சு கெளம்புங்கடா என்று அவசரப்படுத்திய பாண்டி, இந்தா மாரி ரூவா, நம்ம ராஜா புரோட்டா ஸ்டால்ல போய், சிக்கன் சாப்ஸ், எறா பொரியல், மட்டன் குருமா, அப்புறம் ... புரோட்டா கொஞ்சமா போதும், வாங்கிட்டு நேரா நம்ம வயலுக்கு வந்திடு என்று அவனை அனுப்பினான்.

பிரபல நண்பர்கள் குழுவின் ஆஸ்த்தான பாடகர் கானா கணேசனின் கணீர் முழக்கத்துடன் கிளம்பினர் அனைவரும். பாட்டு அலுப்புத் தட்டியவுடன், சில மாத காலப் பிரிவில் தங்களுக்கு ஏற்பட்ட அவரவரின் பல கதைகள் பேசி கல கலவென களைப்பு மறந்து பல கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்றனர். ரெட்டைப் பாலம் தாண்டி, ரயில்வே கிராஸிங் அப்புறம் வயல் வெளி ஆரம்பம்.

அதுவரை தெரியவில்லை, பின்பு வழி நெடுக அவ் வித்தியாசத்தை மீண்டும் பாலுவால் உணர முடிந்தது. என்ன ஒரு வெக்கை, போன விடுமுறைக்கு இப்படி இல்லியே என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களைத் தொடர்ந்தான்.

சற்று தூரம் சென்றவுடன், கருவேல மர நிழலில் அமர்ந்திருந்தாள் கல்யாணப் பருவத்தைத் தாண்டிய பொன்னழகு. ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. என்ன பொன்னழகு, எப்போ கல்யாணம், புள்ள குட்டி எல்லாம் பாக்கப் போறே என்றான் ஆறுமுகம் விசமத்தனமாய்.

"மவராசா, நீங்க எப்ப வருவீகனுதேன் காத்திருக்கேன், நீங்க கட்டிகிறது, இந்தச் சிறுக்கி மவள !" என்று பொன்னழகு சொல்லவும், மீண்டும் சிரிப்பொலி சிதறியது. டேய் டைனமோ தலயா, பேசாம வாடா என்று ரவி சத்தம் போடவும், அமைதியானான் ஆறுமுகம்.

தார் ரோட்டிலிருந்து பிரிந்து தாழ்வாய்க் கீழிறங்கிய வண்டிப் பாதையில், சிறிதும் தயக்கமின்றி சர் சர்ரென்று ஒருவர் பின் ஒருவராய் இறங்கினர். சிறிது தொலைவில் ஒத்தயடிப் பாதையில் பயணித்துப் பாண்டியின் வயலை அடைந்தனர்.

வயலைச் சுற்றி வெகு தொலைவு வரை நெடுகிலும் அரையடி வெளியில் தெரியும் படி கல் நடப்பட்டிருந்தது. பாலு பாண்டியிடம் கேட்டான், என்ன மாப்ளே போன தடவை இங்க வந்ததுக்கும் இப்போ வர்றதுக்கும் நெறைய மாற்றம் தெரியுது. எவ்ளோ மரங்கள் இருந்திச்சு. கடலை, கரும்பு, நெல்லுனு எதாவுது இருக்குமே டா. பொட்டல் காடா கெடக்கு இப்ப எல்லாம் என்றான்.

விசயம் தெரியாதா உனக்கு ?! நம்ம வயலையும், செல்லத் தொர சித்தப்பு வயலையும் தவிர்த்து எல்லாம் வெல போய்ருச்சு என்றான்.

எதுக்கு ? புரியும் படி வெளக்கமா சொல்லுடா மாம்ஸ் என்றான் பாலு ஆச்சரியத்துடன்.

கொஞ்ச நாள் முன்னாடி மதுரயில இருந்து ஒரு சேட்டு நம்ம நாட்டாம வீட்டுக்கு வந்தாரு. ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாங்க. கடைசில தான் தெரிஞ்சது அவரு நம்ம வயக்காட்ட வாங்க தான் வந்திருக்காருனு. நம்மாளுக முக்காவாசி பேருகிட்ட பேசி, ஐநூறு ஏக்கர வளைச்சி வாங்கிட்டாரு.

மதுர என்ன மதுர, நம்ம ஊர் பங்களூரூ மாதிரி ஆகிடும் பாருங்க என்றான் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்த மாரி. சென்னை கூட சென்றறியாத மாரி பங்களூரைச் சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். ஆச்சரியப்படாதீங்கண்ணே, சென்னை வெய்யிலு கொளுத்தும்னும், பங்களூரில் வெய்யில் இருந்தாலும் கொஞ்சம் குளுகுளுனு இருக்கும்னும் கேள்விப்பட்டிருக்கேன். எல்லாம் போனாத் தான் தெரியுமா ? இந்தா இப்ப பாலண்ணே வந்திருக்காரு, திருச்சியப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியதுதேன் என்றான்.

வயல வித்துட்டுப் பொழப்புக்கு என்ன செய்யப் போறாங்க எல்லாரும் என்றான் பாலு. அவங்களே அதப்பத்திக் கவலப்படல. உனக்கேன்டா கஷ்டம் என்றான் பாண்டி. எல்லாம் டபுல் மடங்கு வெல செய்யும் மாயம். கேட்டா "வெளச்சலே இல்ல, என்ன தம்பி பண்றதுனு" சொல்றாரு சாமிக்கண்ணு அண்ணே.

போன வருசம் கூட ஒரு செய்தி படிச்சேன், மதுரையில Tidel Park ஒன்னு வர்றதா ! அதுக்கும் நம்ம ஆளுக வயக்காட்ட வித்ததுக்கும் தொடர்பிருக்குமோ என்றான் பாலு.

கரெக்டா புடிச்சடா பாலு. நீ லா படிக்கப் போகலாம்டா என்றான் குமார். இந்த எடத்த வாங்கின சேட்டு, இங்க தர வாரியா வீடுகள கட்டப் போராறாம். பங்களா போன்ற தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதற்கு ஏற்ற வசதிகள் கொண்ட மற்ற கட்டிடங்கள் எல்லாம் கட்டி ஒரு சொகுசுபுரியா ஆகப்போகுது நம்ம ஊரு, மாரி சொன்னதப் போல என்றான் குமார்.

இங்க வீடு கட்டினா வாங்குறதுக்கு யாரு இருக்கா என்றான் பாலு.

என்னண்ணே இப்படிக் கேட்டுட்டிங்க. இங்க தெக்கால இருந்து ஒரு ரோடு போடப் போறாய்ங்களாம். அந்த ரோடு போட்டுட்டா நம்ம ஊருல இருந்து மதுரைக்கு பத்து நிமிஷம்தேன். ஏதோ ஒரு பார்க் சொன்னிகளே, அதுக்கு இந்தியா முழுக்க இருந்து ஆளுக வருவாகளாம்ல வேலைக்கு. அவுகள கணக்குப் பண்ணித்தேன் இந்த சேட்டு எல்லாம் செட்டப்பா பண்றாரு. இப்பல்லாம் வாடகைக்கு இருக்கத விட சொந்தமா வாங்குறதுதேன் அவுகளுக்கு சவுகரியமாம்ல என்றான் மாரி.

நாமெல்லாம் பள்ளிக்கூடம் முடிச்சி B.A., M.A.,னு படிக்கப்போவோம். அவுகள்லாம் computer படிச்சவகளாம். மாசத்துக்கே லச்சக்கணக்குல சம்பளமாம்ல என்று வியந்தான் ரவி. ஆனா ஒன்னுடா, நம்ம ஆறுமுகம் இப்படியே பெயிலாயிகிட்டே இருந்தான்னா, மாடு மேய்க்க ஒரு வயல் கூட அவனுக்கு இருக்காது பாத்துக்குங்க என்று ரவி சொல்லவும், எட்டுத் திக்கும் விட்டுத் தெரித்து வானை முட்டியது சிரிப்பலை.

நாமும் இவர்களுடன் சேர்ந்து சிரிக்கலாமா ?! இல்லை சிந்திப்போமா ?!

Monday, May 14, 2007

நிதர்சனம் - சிறுகதை

எனது நிதர்சனம் சிறுகதையினை படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post.html
இது 11/25/2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.

அன்புடன்,

முரளி.

Saturday, May 05, 2007

மாறினால் மறக்க முடியுமா ?

"சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

"எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

சொல்லுடா ராஜி.

இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.

Friday, April 13, 2007

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

பத்து ஆண்டுகளுக்கு முன்

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் பினாத்திக் கொண்டு புரண்டு படுத்த சங்கர் அதிர்ந்து எழுந்தான். மிக முக்கிய காரணம், இன்று அவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

டேய் இந்டெர்வியூ கெடைக்கறதே கஷ்டம். அதும் கெடச்சு, ரெண்டு மூனு round தாண்டி வேலையும் கெடச்சிருச்சு, இன்னும் என்னடா பெனாத்தல். பேசாம படு, ஒரு ஏழரை மணிக்கா எழுந்திருக்கலாம். ஹிஸ்ஸித்தான் ஜீவா.

(a+b)2, இது எந்த விதத்தில் நமக்கு வாழ்க்கையில் உதவும் ? பள்ளி நாட்களில் அம்மாவிடம் பல முறை சங்கர் கேட்ட கேள்வி. அம்மாவின் ஆச்சரியம் குறையுமுன், நமக்கெதற்கு அதெல்லாம். நமக்குத் தேவை ராங்க். அட்டை to அட்டை படிக்கனும்டா. நிறைய முறை அப்பா சொன்ன வாக்கியம்.

சங்கரின் கணக்குகள் பாலாராய் பெருகி, மன்னிக்கவும், இந்த ஆறும் இப்ப பிரச்சினையில் இருக்கோ ! சிறு நதியாய் ஓடியது. வேலை எந்த மாதிரி இருக்கும். அங்கே இருப்பவர்கள் எப்படி நம்மை நடத்துவார்கள் ?

ஏதோ ஜாலியா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை கல்லூரி முடிந்தவுடன் பாலைவனம் போலானது. அடுத்தது என்ன ? என்ற கேள்வி பூதாகரமாய் உருவெடுத்தது. ஆரக்கல், விஸுவல் பேசிக், சி++ எல்லாம் படித்தான், அட்டை to அட்டை. பல வேதனைகள், சோதனைகள் கடந்தது. கல்லூரி நாட்களில் பரீட்சைக்குப் படித்ததை விட அதிகம் படித்து, முட்டி, மோதி, கிடைத்தது இந்த வேலை.


தற்போது - April 2007

விடியுமுன்பே எழுந்த சங்கர், குழந்தைகளின் விலகிய போர்வைகளை சரி செய்து, லேசாக தலை கோதுகையில், என்னங்க அவசரம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்களேன் என்றாள் சுமதி.

வார இறுதியில் ... Spring break க்கு எங்கேப்பா கூட்டிட்டுப் போறே என்றான் ஆறு வயது அபிஷேக். சுமதியின் கொஞ்ச்சலில், சரிம்மா, சரிம்மா என்றது தான் கேட்டது. தங்கை அனுக்ஷாவுடன் backyard-ல் விளையாட ஓடிவிட்டான்.

(a+b)2, இங்கு வந்த போது ஒரு முறை ஜீவா சன்னமாய்ச் சொன்னது ஞாபகம் வந்தது. அது ஒன்னுமில்லேடா சங்கரு, andhra 2 + babu 2 + whole andhra டா babu, குறிப்பா சொல்லனும்னா இந்த testing துறை.

இந்த testing என்ன பாடு படுத்துகிறது. ஆந்திரப் பெண்மணிகள், மனைவிமணிகள் அதிகமாயினும், பொதுவாக இந்தியப் பெண்மணிகள் ஐந்தாண்டு அனுபவம் பெறுவது ஐந்தே நாட்களில்.

ஆந்திராவில் இதுக்கும் கூட Certificate அடிச்சுக் கொடுக்கறாங்களாம்டா, வியந்தான் ஜீவா செல்பேசியில்.

ஜீவா, எப்போடா Richmond வர்ரே ?

நீ எப்போ Denver வர்ரேனு சொல்லு ? மறந்திட்டேன் பாரு, "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்டா'.

o.k. ஜீவா, உனக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வீட்டில கேட்டதாச் சொல்.

அலுவலகத்தில், சங்கர், நீங்க சொன்ன மாதிரியே உங்க Code (a+b)2 test செஞ்சா, andhra 2 + babu 2 + whole andhra டி baby னு வருது. Great ! testing is passed. Code Release க்கு அனுப்பலாம் என்றார் மூன்றே மாதத்தில் மாறிய பதினோறாம் tester.