Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, August 11, 2014

ரிச்மண்டில் பிடித்த இடம்

கொஞ்ச நாட்களுக்கு முன் ரிச்மண்ட் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். உங்கள் அனைவருக்கும் ரிச்மண்டில் ஏதாவது ஒரு இடம் மிகவும் பிடித்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் ஒன்று இருக்கிறது. ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. என் வீட்டிலிருந்து சில நிமிடங்கள்தான் ஆகும் போவதற்கு.



எந்த இடம் என்று தெரிகிறதா?

 டீப் ரன் பார்க்!

சிறு குழந்தைகள் முதல் என்னைப் போன்ற முதியவர்கள்வரை அனைவரும் பொழுது போக்கலாம் இங்கே. இந்தப் பூங்காவில் பல மகிழ்ச்சியான நினைவுகள், நிகழ்ச்சிகள். தமிழ் சங்கப் பிக்னிக்குகள், பார்க்கில் இருக்கும்  அனைத்து விளையாட்டு இடங்கள், கால்பந்தாட்டம், கிரிக்கெட், நடைபாதைகள், சாரண முகாம், மீன்பிடிப்பு, குளத்தில் ஆமைகள், வாத்துகள், மீன்கள், துவக்கப் பள்ளி புத்தகப் போட்டி( Book Bowl),  கோடைகாலப் பசுமை, இலையுதிர் கால வண்ணக் கோலம், குளிர்காலத்தில் உறைந்த குளம்,  சைக்கிளோட்டம், சாரணர்களுடம் புதையல் தேடல்(Geocacahing), நாயுடன் நடை,  அங்கிருக்கும் கட்டிடத்தில் நண்பர்களுடன்  பேட்மிண்டன், நிறைய பார்ட்டிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனது அனுபவங்களை...

இத்தனை வருடங்களில் இந்தப் பூங்காவில் நிறைய மாறுதல்களைப் பார்த்திருக்கிறேன். பாதைகள் அகலமானது. சரிவான பாதையை மேடாக்கி குளக்கரையை பலப் படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டிடத்தில் நிறைய புது விளையாட்டு சாதனங்கள்.  காடாய் அழகாய் இருந்த பூங்காவை சிதைத்து நட்ட நடுவே ஒரு பூதாகரமான கட்டிடம்! ஆனால் அந்தக் கட்டிடமும் நிறைய உபயோகமாகத்தான் இருக்கிறது. சின்னதாக ஆரம்பித்த மூங்கில் புதர் இப்போது மூங்கில் காடாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் குளத்தின் பக்கத்தில் ஒரு இயற்கை மையம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இங்கு நடந்து போக எத்தனை பாதைகள் இருக்கின்றன தெரியுமா? நான் அகலமாக ரோடு மாதிரி இருக்கும் பாதைகள்களைச் சொல்லவில்லை. ஒற்றையடி பாதை மாதிரி நிறைய இருக்கின்றன... அடுத்த முறை போகும்போது கவனியுங்கள்.  அவற்றில் போய்ப் பாருங்கள். எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். மரங்களின் பெயர்கள், பறவைகள் வகைகள், ஆமை வகைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு இடத்திற்குப் போகும்போதும், ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் முதல் முதலாகப் போவது போல், சந்திப்பது போல் எண்ணிப் பாருங்கள். அந்த இடத்தைப் பற்றி, அந்த மனிதரைப் பற்றி புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பூங்காவில் எடுத்த சில படங்கள்.

Friday, June 05, 2009

பதிவு இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

மின்சாரம் அது சம்சாரம்

முந்திய பதிவைப் படித்து, பாராட்டியும் ஊக்கமும் தந்து மறுமொழிகள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி கூறி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். உண்மையில், அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் இருந்த மகிழ்வை விட மறுமொழிகளை படிக்கும் போது மேலும் மகிழ்வை உணர்ந்தேன். நன்றி!

தொடர் பதிவு என்று சொல்லிட்டோமே. அடுத்து என்ன எழுதுவது என்ற கவலை. எனது பட்டியலை தேடி எடுத்துப் பார்த்தேன். ஆ.. மாட்டிகொண்டது தலைப்பு!

பாகம் இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

முதலில் மின்சாரம் அது சமாச்சாரம் என்று தான் தலைப்பு வைக்க எண்ணினேன். பிறகு மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் ஏதோ ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது. மின்சாரம் தொட்டால் அதிர்ச்சிதரும். சம்சாரம் தொடாமலே அதிர்ச்சி தரும். மின்சாரம் அறிவியல். சம்சாரம் அறியாவியல். என்னடா தலைப்பிலேயே பிரச்னை பண்ண ஆரம்பித்து விட்டானே என்று யோசிக்காதீர்கள். எல்லாம் கடைசியில் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையில்...

15 வருடமாக உடனிருந்தும் என்னை கொஞ்சமாவது புரிந்து வச்சிருக்கிங்களா என்று சம்சாரம் ஒரு புறம் முனகிக் கொண்டு இருக்க.. மாதா மாதம் ஏறிக்கொண்டே செல்லும் மின்சார செலவு ஒரு புறம்.. இதெல்லாம் புரியாத புதிர் என்று இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டேன். பொறு பொறு! சம்சாரத்தை 15 வருடமாகத்தானே தெரியும். மின்சாரத்தை 40 வருடமாக தெரியுமே. மேலும் மின்சாரம் அறிவியல் ஆயிற்றே. சரி. கொஞ்சம் அலசினால் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கினேன்.

பல இணைய பக்கங்கள் சென்று மின்சார செலவை குறைப்பது எப்படி என்று படித்தேன். எந்தெந்த மின்சார கருவிகள் எவ்வளவு மின்சாரம் குடிக்கிறது என்று ஆராய்ந்தேன். வீட்டில் ஒவ்வொருவரின் மின்சார உபயோக பழக்கங்களை நோட்டமிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மின்சார புதிர் விளங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு பல விஷயங்கள் புதிதாக இருந்தது.
வீட்டுக்கு முன் தானாக எரியும் இரவு விளக்கிற்கு மாத செலவு 2 வெள்ளி. ஒரு முறை துணி உலர்த்தும் இயந்திரத்தை உபயோகித்தால் 35 காசு. ஒரு மணி நேரம் காற்று குளிர்விப்பான் உபயோகித்தால் 42 காசு. சாதாரண மின் விளக்கிற்கு பதில் கச்சிதமான மின்குழல் விளக்கு உபயோகித்தால் 75% மின்சாரம் மிச்சம்.

சரி இதெல்லாம் தெரிந்து என்ன லாபம். செயலாக்க வேண்டுமே. வீட்டில் முடிந்த அறைகளில் மின்விசிறி மாட்டினேன். வசந்த காலங்களில் சூரியன் தாழ்ந்ததும் சன்னல்களை திறந்தும் பகல் நேரங்களில் சன்னல் திரைகளை மூடியும் காற்று குளிர்விப்பான் உபயோகப் படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க முடிந்தது. மாலை வேளைகளில் இயற்கை காற்றும் சுவாசிக்க முடிந்தது. குளிர்பதனப்பெட்டியில் தேவையான அளவு பனிக்கட்டி சேர்ந்ததும் பனிக்கட்டி செய்வானை நிறுத்தலாம். கொத்து விளக்கில் சில விளக்குகளை அகற்றினேன். முடிந்தவரை துணி உலரும் இயந்திரம் உபயோகிப்பதை குறைத்து சில துணிகளை கொடியில் உலர்த்தினோம். துணியும் பொலிவுடன் இருந்தது. வீட்டின் சீதோஷண நிலையும் மேம்பட்டது. இது போன்ற மேலும் பல முன்னேற்றங்கள் செய்த பின் வழக்கமாக 100 முதல் 180 வெள்ளி வரை ஆகும் மாதாந்திர மின்சார செலவு இப்போது 50 வெள்ளிக்குள் அடக்க முடிந்தது. அப்பாடா ஒருவழியாக மின்சாரத்தை புரிந்து கொள்ள முடிந்ததே என்ற கூடுதல் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் மேலே இயற்கையை காக்கும் போராட்டத்தில் நம்மால் ஓர் சிறு பணியாவது செய்ய முடிந்ததே என்ற மன நிறைவு.

மேலும் விவரங்களுக்கு கீழிருக்கும் இணைய முகவரிகளை சொடுக்கவும்.
http://michaelbluejay.com/electricity/
http://dom.com/

உங்களில் இந்த சமாச்சாரத்தில் மேலும் புது அனுபவங்களும் வழிகளும் தெரிந்து இருப்பின், தயவு செய்து தெரிவிக்கவும். கேட்டு தெரிந்து கொள்ள எப்போதும் நான் தயார்!