Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Friday, September 05, 2014

குரு என்பவன் யார் ?

மாதா, பிதா, குரு, தெய்வம்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! ... அருணகிரியார்

எல்லோருக்கும் ஆசான் (குரு) வேண்டும்.  ஆசான் இல்லாத வாழ்க்கை, ட்ரைவர் இல்லாத வண்டியில் போகிற மாதிரி ... வாரியார்

சைவ சித்தாந்தங்களில் குரு நம்மைத் தேடி வர வேண்டும் என்கின்றனர்.

இதில் வ‌ரும் குரு என்பவன்  யார்?  ப‌ள்ளி க‌ல்லூரி கால‌ங்க‌ளில் ந‌ம‌க்குப் பாட‌ங்க‌ள் ப‌யிற்றுத் த‌ந்த ஆசிரிய‌ப் பெருமக்கள்?

ஆசிரிய‌ரும் குருவும் ஒன்றா ?  அன்று ஆம், இன்று அன்று!


ஏட்டுச் சுரைக்காயை எடுத்துப் புகட்டுபவர்ஆசிரிய‌ர்.  மக்கு மாணவன்
என்பவனையும் மார்க்கு வாங்கும் எந்திரமாக மாற்றுபவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் வேலை வேண்டிப் பெற்று தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்ப்பவர் ஆசிரியர்.  மாதச் சம்பளம் போதாதென்று மாலை வேளை ட்யூஷன் எடுப்பவர் ஆசிரியர்.  இதில் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், குரு என்பவன், பிறர் தன்னை குரு என்று போற்றுவதையும் விரும்பாதவன்.  தன் பின்னே இத்தனை இலக்கங்களில் மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்று மார் தட்டி, உலகெங்கும் மடம் கட்டிக் கொள்ளாதவன்.  ஏட்டுச் சுரைக்காயை எடுத்துரைக்காமல், அனுபவ ஞானத்தைப் புகுத்துபவன்.  தன் உயர்வைப் பெரிதென எண்ணாமல், தன்னை நாடி வரும் உண்மைச் சீடனின் உயர்வை விரும்புவன்.  ஞானத் தெளிவைத் தருபவன்.

அடுக்கலாம் இன்னும் பல ...

இதுபோன்ற குருக்கள் இன்றும் இருக்கிறார்களா ? இல்லாததால் தான், குரு தினம் கொண்டாடாமல் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமா ?  இதில் ஏதேனும் அரசியல் இருக்கக்கூடுமோ ?

எது எப்படியோ, மேற்கண்ட 'மாதா, பிதா, குரு, தெய்வம்' தொடரில் வரும் குருவுக்கும், இன்றைய ஆசிரியருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அவர் குரு, இவர் ஆசிரியர்.  ஆனால் இன்றுவரை இத்தொடர் நமக்குத் தவறுதலாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்!!!