Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, October 14, 2014

பாதயாத்திரைப் பயணம்

சனிக்கிழமை காலை ...

'எல்லாம் எடுத்திக்கிட்டாச்சா'னு ஒருமுறை பார்த்துக்கங்க என்ற அன்பான தங்கமணியின் அக்கறையில், தண்ணீர் குடுவை, சிலபல கொறிக்கும் பதார்த்தங்கள், குளிருக்கு ஒரு மென்கம்பளிச் சட்டை (fleece), ஐ.டி.கார்டு, பணப்பை (wallet), கைத் தொலைபேசி, எல்லாம் ரெடி.  கெளம்ப வேண்டியது தான்.  சரி, போய்ட்டு வருகிறேன் என்று, 'மேப் மை வாக்'ஐ கிளிக்கி ...

நான் ஒரு வழியாகப் போகலாம் என்றிருந்தால், 'அந்த வழிகள் பெரிய பெரிய சாலைகள், உயிருக்கு உத்திரவாதமில்லை.  அதனால், குறுக்கு சாலையிலயா (லிஸ்ட் அடுக்கப்படுகிறது) போயிட்டு மரியாதையா வாங்க.  எங்காவது மட்டையாயிட்டா உடனே கூப்பிடுங்க.  (மட்டையாயிட்டு எப்படிக் கூப்பிடமுடியும் ! :))  அப்பப்ப தண்ணி குடிச்சுங்கங்க, மறக்காம ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு எங்க இருக்கேனு இற்றைப்படுத்துங்க‌ (update).  எவ்வளவு நாள் வெயிலடிச்சுது அப்பலாம் கிளம்பாம, குளிர‌ ஆரம்பிக்கும் போது அப்படி என்ன நடைப் பயணம் வேண்டிக்கிடக்கு' என்று தங்கமணியின் குரல் மெல்லத் தேய்ந்து (fade) குறைய‌, வீட்டை விட்டு ஒருசில நூறு அடிகள் கடந்து அடியேனது பாதயாத்திரை துவங்கியது.  இலக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கலாம் என்று!

அதிகாலைக் குளிரில், கதிரவனின் ஒளியில் நடக்க ஆனந்தமாக இருந்தது.  சர்சர்னு சிற்றுந்தில் கடந்த சாலைகளில், ரொம்ப நேரமா நடக்கற மாதிரி தோன்றியது.  இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் இந்த சாலையிலேயேவா இருக்கிறோம் என்று தோன்றியது.  வழியில் ஆங்காங்கே நகர சபை(city council)க்கு என்னைத் தேர்ந்தெடுப்பீர் எனும் பதாகைகள் பல வீடுகளின் முன்பு அறிவித்திருந்த‌ன.  வருகிற நவம்பரில் தேர்தல்.  பெரிய சாலைகளில் நடப்பதற்கு தனிச் சாலையும், மறுபுறம் கடப்பதற்கு பொத்தானும்  இருந்தன.  சிறிய சாலைகள் தான் எதுவுமே இல்லாமல், கொஞ்சம் அச்சம் விளைவிப்பதாய் இருந்தன.  ஒரு குறுஞ்சாலையில், ஆளரவமின்றி இருக்க, திடீரென எதிரில் தூரத்தே இரு ஆண்கள்.  மனதில் கொஞ்சம் பீதி ஏற்படத்தான் செய்தது.  வெள்ளைக்காரர்களா இருந்தா (பொய் சொல்லமாட்டங்க எனும் நகைச்சுவை எண்ணம் மறந்து), பரவாயில்லை, வேறு எவராவதா இருந்து நம்ம ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று மனம் சிறிது யோசித்தது.  அந்த அளவிற்கு எல்லாம் போகவில்லை.  சற்றே நெருங்கி அவர்களைக் கடக்கையில், 'ஹவ் ஆர் யூ'  என்று அசோகன் பாணியில் அடிவயிற்றில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விட்டன‌ர்.  அப்பாடா என்றிருந்தது.


இந்த மாதிரி ஆட்கள் சிலநேரம் வழிமறிந்து கையில் எவ்ளோ வச்சிருக்கேனு கேட்டு, நம்மிடம் இருக்கத புடுங்கிட்டுப் பற‌ந்துடுவாங்கனு எல்லாம் கேள்விப்பட்டதினால, பையில் எப்பவும் ஒருசில பச்சை நோட்டுக‌ள் மேலாப்பல வைத்திருப்பேன்.  பின் பாக்கெட்ட்ல இருந்து எடுக்கக் கூடாதாம் .. ஏன்னா துப்பாக்கி தான் நாம் எடுக்கறோம்னு அவன் சுட்டுட்டு போய்டுவான் என்றெல்லாம் எனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து சிலபல பொத்தான்கள் அமுக்கி சாலைகள் கடந்து நகரப் பூங்கா அருகில் இருந்தேன்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் வந்து செல்லும் இடம்.  (கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறதா?:))  சனிக்கிழமை ஆதலால், பல்வேறு விளையாட்டுக்கள், பிறந்த பிஞ்சுக்களில் இருந்து பதின்ம வயது இளைஞர்கள் வரை.  ஸாஃப்ட் பால், பேஸ் பால், ஸாக்கர், இன்னும் பல பெயர் தெரியாத விளையாட்டுப் போட்டிகள் பல வண்ணங்களில் ந‌டந்து கொண்டிருந்தன.  நடைமேடையில் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள் இழுத்துச் செல்ல, அவைகளைத் தொடர்ந்திருந்தனர்.  எப்படித் தான் வளர்க்கிறார்களோ?  ஒரு நாய் கூட குரைக்கவில்லை, சண்டித்தனம் செய்யவில்லை, எப்படி என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்தது என்னுள்.

போட்டி நடக்கும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் பலர்.  தங்கள் தாத்தா பாட்டி, சொந்தங்கள், என அனைவரையும் கூட்டி வருகிறது இளைய தலைமுறை.  பூங்காவே ஒரு திருவிழா போல திகழ்கிறது.  காணக் கண் கொள்ளா ஆனந்தம்.  நம்மூரில் இது சாத்தியமா ?  எளிதாகச் சொல்லிவிடுவோம், 'வயசான காலத்துல இதெல்லாம் தேவையா' என ...

பூங்காவை சுற்றி வருகையில், விளையாட்டுத் தவிர குடும்பங்களாகப் பலர் அன்றைய மதிய உணவை கரி அடுப்புகளில் சுட்டுக் கொண்டும், அத்தோடு பல கேளிக்கைகளில் திளைத்தும் இருந்தனர்.  பூங்காவினுள் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் மென் நீர்த்தூவல்.  பல வண்ணங்களில் படபடத்துச் செல்லும் மீன்குஞ்சுகள்.  நீரோரங்களில் ஒற்றைவால் தவளைக்குஞ்சுகள்.  ஒருசில வாத்துக்கள்.  இவை எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வைக்கும் விதமாக ஒரு பெரிய பூந்தோட்டம்.  குளிர் ஆரம்பித்திருப்பதால், பூக்களின் விளைச்சல் குறைய ஆரம்பித்திருந்தது.

பூங்காவைக் கடந்து, மற்றொரு பெருஞ்சாலயில் நடையைக் கட்டிய போது தூரத்தே ஒருவர் ஓடி வருவது தெரிந்தது.  ஆணா?, பெண்ணா?, என்று அனுமானிக்கமுடியவில்லை.  சற்றே பெருஞ்சாலை ஆதலால் சர்சர் என்று சிற்றுந்துகளின் உறுமல்.  கிட்டே நெருங்க நெருங்க பதின்ம வயதுப் பெண் அவர்.  இழுத்துப் போர்த்திய மேலாடையும், அரை நிஜாரும், கையில் தண்ணீர் குடுவையும், காதுகளில் இசைக்குழாயும் சொருகி மெய்மறந்து, சற்றும் ஒரு ஜீவன் தன்னை எதிர்கொண்டு செல்கிறது என்ற எண்ணமில்லாமல் என்னை கடந்து விட்டிருந்தார்.

இதன் நடுவே அலைபேசி அழைப்பில் தங்கமணி.  சொல்றத கேளுங்க, அங்கே இருங்க, வண்டிய எடுத்துட்டு வர்றேன்.  எதுக்கு வீராப்பு என்று அடுக்க, வழக்கம் போல அவர்களது அன்பான எண்ணத்திற்கு வளையாமல், சிறிது இடைவெளி எடுத்து, நீர் அருந்தி, தின்பண்டங்கள் கொரித்து, வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  குளிரிலும் வந்த சூரியனின் கதிர்கள் கண்களைக் கூசின.  மதியம் ஆகி இருந்தது.  மேப் மை வாக்கை பார்த்தால், பன்னிரெண்டு மைல்கள் காட்டியது.  சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை.  துள்ளிக் குதிக்கலாம் என்றால் அப்போது தான் கால்களில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.  இன்னும் ஒன்னரை மைல்கள் நடக்க வேண்டும் வீட்டிற்கு.  நடந்து, ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நாள் நடைபயணத்தை முடித்துக் கொண்டாயிற்று!

நடப்பது சுகம் ! தொடரும் ...

Saturday, June 20, 2009

அப்பாக்கள் தினம்

அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?

வேதாந்தி

Friday, October 24, 2008

அட பரவாயில்லையே

யூட்யூப் காட்டி கொஞ்ச நாளாச்சே. அதான். பாருங்க இந்த ஊர்க்காரங்க நம்ப கச்சேரில கலக்கறாங்க.



கனக்டிகட் மாநிலத்தில் இருக்கும் வெஸ்லாயன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாம். வெகு ஜோர்.

Wednesday, May 14, 2008

அமெரிக்க வரன்

"நமஸ்காரம், வாசுகி அம்மா. எப்பிடி இருக்கீங்க? உங்க மகளுக்கு ஏதாவது வரன் வந்ததா?".

"ஏதாவது இல்லை, ஸ்வாமி. அமெரிக்க வரனா வரனும். நான் தினம் வந்து இந்த முருகனை வேண்டிக்கிறேன், ஒரு அமெரிக்க வரனா கிடைக்கணும்னு. இன்னும் இந்த முருகன் மனசு வெக்கலை".

"என்ன வாசுகி அம்மா, முருகனுக்கு கல்யாண உற்சவம் செய்யப் போறிங்களாமே".

"ஆமாம், சிவகாமி. உங்களுக்கு போன் பண்ணிணேன். லைன் கிடைக்கல. தப்பாம வந்துடனும்".

"அப்படியா, நல்லது. கட்டாயம் வரேன். அப்படியாவது முருகன் மனசு வைப்பானென்று பார்க்கறீங்க".

"சரியா சொன்னீங்க."

"நீங்க பேசனதையெல்லாம் கேட்டேன். நல்ல மாப்பிள்ளையாக நம்ப ஊருலயே பாருங்க".

"உங்களுக்கென்ன, சுமதியம்மா. நீங்க உங்க பிள்ளைகளுக்கெல்லாம் அமெரிக்கா, பிரான்ஸ்னு பார்த்து கொடுத்துட்டீங்க. பொண்ணோட பிரசவம், மருமக பிரசவம்னு அமெரிக்கா, பிரான்ஸ் பார்த்துட்டீங்க."

"அங்க போயி அவங்க படற கஷ்டத்த எல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். பாவம் நம்ம வீட்டுப்பிள்ளைங்க. இங்க சுகமா, சொகுசா வளர்ந்துட்டு அங்க போய் கஷ்டப்படறாங்க. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, பெருக்கிக்கூட்ட, இஸ்திரி போட, ஏன் சமையலுக்குக்கூட இங்க ஆள் இருக்கு. பாவம் இதெல்லாம் அவங்களே செய்யணும். இதற்குமேல் டிரைவர் வேலை வேற. குழந்தையெல்லாம் இருந்தா இன்னும் நெறய வேலை. நிம்மதியா ஒரு வாய் சாப்பிட கூட நேரம் கிடைக்கறதில்லை. எல்லா வேலை செய்ய மெஷின் இருந்தாலும்கூட, அவங்க தானே அதையெல்லாம் போடனும்."

"நீங்க என்ன சொன்னாலும் அமெரிக்கா வரன் போல வருமா?'

"சரி, சரி. உங்க விருப்பம் போல நடக்கட்டும்".

"நீங்களும் முருகன் கல்யாணத்துக்கு வந்துடுங்க."

முருகன் கல்யாண உற்சவம் வெகு ஜோராக நடந்தது. மறுநாள் காலை, "அம்மா, தபால்", என்று ஒரு குரல் ஒலித்தது. "வாசுகி அம்மா. நீங்க எதிர்பார்க்கிற அமெரிக்க வரனாய் இருக்கட்டும்" என்றார் தபால்காரர். "அப்படி இருந்து நல்லபடியாக கல்யாணம் முடியட்டும். உங்களை நல்லா கவனிக்கிறோம்", என்றபடியே வாசுகியம்மா அவசரமாக தபாலைப் பிரித்தார்கள். அதற்குப் பிறகு எல்லாம் மின்னல்வேகத்தில் நடந்து, மகள் அமெரிக்கா கிளம்புவதில் முடிந்தது.

நாட்கள் பறந்தன. வாசுகி அம்மாள் வாரந்தோறும் மகள் போனுக்காக காத்திருந்து பேசி மகிழ்வார்கள். ஒரு வாரம் மகள் போனுக்காக காத்திருந்தபோது, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சினிமாவை நிறுத்தி, பரபரப்பாக நியுயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தில் நடக்கின்ற விமானத் தாக்குதலை ஒளிபரப்பினார்கள். "அம்மா, தாயே, அகிலாண்டேஸ்வரி. இது என்ன சோதனை. நீதான் என் பிள்ளைகளை காப்பாத்த வேண்டும்", என்று புலம்பியபடி தன் கணவரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் மருமகன் அந்த கட்டிடத்தில் வேலை செய்வதால், இருவரும் மிகப் பதட்டத்துடன் மகளுக்கு போன் செய்ய முயன்றார்கள். வெகு நேரம் முயன்றும், அவர்களுக்கு இணைப்பே கிடைக்கவில்லை. சுமதியம்மாவிற்கு போன் செய்து அவர்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா என்று விசாரித்தார்கள்.

மறுநாள் மகளிடமிருந்து போன் வந்தது. "அம்மா கவலைப் படாதீங்க. நாங்க பத்திரமாக இருக்கிறோம். நாங்க அன்னைக்கு லீவு போட்டுவிட்டு பிட்ஸ்பர்கில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போயிருந்தோம்" என்றாள் அவள்.

"நல்ல வேளை. அந்த பெருமாள்தான் உங்களை காப்பாத்தினார். டீவில ஒவ்வொரு நாள் ஒரு சேதி வருது. எதோ பாரஸ்ட் பயர்னு சொல்றாங்க. ஒரு நாள் எல்லார்க்கும் வேலை போகுதுனு சொல்றாங்க. ஒரு நாள் பூகம்பம்னு சொல்றாங்க. ஒரு நாள் யாரோ சுட்டுட்டாங்கனு சொல்றாங்க. இப்படி நாள்தோறும் ஒரு பயங்கரமான செய்தியை கேட்டு எங்களால இருக்க முடியலை. பேசாம மாப்பிள்ளையை இங்கயே ஒரு வேலை பார்த்துக்கிட்டு வந்துடச் சொல்லு".

Wednesday, March 05, 2008

அபார்ட்மென்ட் எண் 26

அபார்ட்மென்ட் பத்தி ஒரு செய்தியைக் கதையாய் எப்படி சொல்லலாம் என்று எண்ணி, ரொம்ப நாளா எழுதணும் என்று நினைத்து இப்ப தான் நேரம் கிடைத்தது. எழுதியிருக்கிறேன், வந்து படிச்சு பார்த்து உங்க கருத்துகளச் சொல்லுங்க.

http://vazhakkampol.blogspot.com/2008/03/26.html

Tuesday, November 27, 2007

செல்போன் ஃபார் ஸோல்ஜர்ஸ்!

மனமிருந்தால் மார்க்கமிருக்கும். ஒரு அக்கா தம்பி அமெரிக்க போர்வீரர்களுக்கு உதவ என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் மலைத்துப் போவீர்கள். இந்த ஒரு யூட்யூப் வீடியோவை பாருங்கள்.




ஒரு போர்வீரனுக்கு ஏழாயிரம் டாலர் செல்போன் பில் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போன இந்த உயர்பள்ளி மாணவர்கள் தங்களிடம் இருந்த பைசாவையும் நண்பர்களிடம் வசூல் செய்த பைசாவையும் கொடுக்கலாம் என்று ஆரம்பித்தது இன்று அமெரிக்க படைவீரர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலாக காலிங்கார்ட் வழங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!!!


CellPhone For Soldiers - இன்னும் பள்ளியில் படிக்கும் இந்த அக்கா தம்பி நிறுவனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். பழைய செல்போனை அவர்களுக்கு அனுப்ப வேண்டுமா? உங்கள் ஊரில் எங்கே கொண்டு போய் கொடுக்கலாம் என்று இங்கே பாருங்கள். இல்லாவிட்டால் இலவசமாக தபாலில் அனுப்ப இங்கே பாருங்கள்.

Monday, November 05, 2007

வாஷிங்டன் வீதி உலா

சமீபத்தில் தலைநகர் வாஷிங்டன் சென்று சுற்றி வந்தோம். அதை ஒரு கவிதை வடிவில் எனது வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post.html

Friday, September 28, 2007

டெக்ஸாஸில் கள்ள ஓட்டு

நம்ம ஊர் அரசியல்வாதிகளாவது அடியாட்களை வைத்து பொதுத் தேர்தலில்தான் கள்ள ஓட்டு போடுகிறார்கள். இங்கே பாருங்கள் சட்டசபையிலேயே மக்களின் பிரதிநிதிகள் ஜமாய்க்கிறார்கள். சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள். பாயும் புலிகளாக இருக்கிறார்கள் பாருங்களேன்!



பண்ணுவதையும் பண்ணிவிட்டு அதற்கு சால்ஜாப்பு வேறு. நம்ம ஊரில் இவ்வளவு டெக்னாலஜி வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வந்தால் நம்ப ஆட்கள் ஸ்கோர் போர்டிலேயே மேட்டரை முடித்து விடுவார்கள் :-)

நமக்கே பதிவு எழுத விஷயம் கிடைக்க மாட்டென்கிறது. இதில் நம்ம கூட்டணி கட்சிகள் வேறு முந்திவிடுகின்றன. இனி பதியக்கூடிய மேட்டர் எல்லாம் பதிந்து விட்டுதான் மக்களை ஸ்பேம் பண்ண வேண்டும் :-)

Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நாகு அவர்களின் ஒரு மின்னஞ்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அப்படியே சுட்டு ஒரு பதிவா போட்டாச்சு. வந்து ரசிச்சிட்டுப் போங்க.

http://vazhakkampol.blogspot.com/2007/09/jimmy-kimmel-explains-what-miss-teen.html

Tuesday, August 29, 2006

இது எப்படியிருக்கு?

புதன் கிழமை மாலை. பீட்டர் வீட்டில் ஒரே பரபரப்பு. பீட்டரின் அப்பா தாமஸ் லிவிங் ரூமில் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருக்கிறார். நடு நடுவே வாசல் கதவைத்திறந்து பார்க்கிறார். ஏதாவது கார் சப்தம் வாசலில் கேட்டாலே ஓடிச்சென்று கதவைத்திறந்து பார்க்கிறார். இதன் நடுவில் பீட்டரின் அம்மா எலிசபெத் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து "என்ன பீட்டர் இன்னும் வரவில்லையா?" என்கிறாள். 'வரும் நேரம் தான்' என்கிறார் தாமஸ்.

வாசலில் ஏதோ சப்தம் கேட்கவே தாமஸ் ஓடிச்சென்று பார்க்கிறார். பீட்டரின் தாத்தா ஜான் வாக்கிங் ஸ்டிக்கை சுழற்றியபடியே வந்து கொண்டிருக்கிறார். தாமஸ் கதவைத்திறக்க ஜான் உள்ளே வந்து "என்ன பீட்டர் இன்னும் வரவில்லையா? அவன் வருவதற்குள் என் வாக்கிங்கை முடிக்கவேண்டுமென்று வேகமாக நடந்தேன் இன்று" என்கிறார் ஜான். பீட்டரின் பாட்டி மேரி மாடியிலிருந்து மெதுவாக இறங்கி வந்து 'பீட்டர் வந்த மாதிரி இருந்ததே. மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்தேன். வந்தது நீங்கதானா?" என்று கூறி ஜானைப்பார்த்து முகத்தை சுளிக்கிறார்.

வாசலில் மறுபடியும் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. எல்லோரும் வாசலுக்கு சென்று பார்க்கின்றனர். "பீட்டர் வந்து விட்டான் பீட்டர் வந்து விட்டான்" என்று தாமஸ் கத்துகிறார். எல்லோரும் வாசலில் காத்திருக்கின்றனர். பீட்டர் காரிலிருந்து இறங்கி வலது கை கட்டை விரலைத்தூக்கி "தம்ப்ஸ் அப்" சைகை காட்டிக்கொண்டே உள்ளே வருகிறான்.

எல்லோருக்கும் முகத்தில் மகிழ்ச்சி. "என்ன பீட்டர் இண்டர்வியூ எப்படி?" என்று தாமஸ் கேட்கிறார். "Success Daddy" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான் பீட்டர். "என்ன interview வில் select ஆகி விட்டாயா?" என்கிறார் தாத்தா ஜான். "அவங்க ரொம்ப impress ஆகி எனக்கு வேலையும் கொடுத்து விட்டார்கள். "அப்பாடா, இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு படித்த படிப்பெல்லாம் வீண் போகவில்லை" என்றார் தாமஸ். "நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னேனே பீட்டரை Computer Engineering படிக்க வை டாக்டர் வக்கீல் என்று நினைக்காதே என்று. பார்த்தியா இன்று பீட்டருக்கு வேலையும் கிடைத்து விட்டது" என்று தாத்தா ஜான் கூறுகிறார். "சரி மட மடவென்று அடுத்து நடக்க வேண்டியதைப்பார்க்கவேண்டும்" என்கிறார் தாமஸ். "சரி பீட்டர், இண்டர்வியூவில் பாஸாகி செலெக்ட் ஆகி வேலையும் கிடைத்து விட்டது. ஆனால் எப்போ ஜாயின் பண்ண வேண்டும்?" என்று கேட்கிறார் தாத்தா ஜான். "தாத்தா அவர்களுக்கு immediate requirement இருக்கிறதாம். உடனே ஜாயின் பண்ணவேண்டுமாம்." என்கிறான் பீட்டர். "சரி, வெளி நாட்டுக்குப்போக டிக்கட் எல்லாம் எப்போ கிடைக்கும்?" என்கிறார் தாமஸ். "Consulate க்கு சென்று விசா வாங்க எல்லா பேப்பர்களும் கொடுத்து விட்டார்கள். நாளைக்கு விசாவுக்கு சென்று விசா வாங்கி விட்டால் உடனே ப்ளேன் டிக்கட்டுக்கு அரேஞ் பண்ணுவார்கள். உடனே ஒரு வாரத்தில் கிளம்பவேண்டும்" என்கிறான் பீட்டர். "சரி consulate ல் கும்பல் அலை மோதும். காலையில் 4 மணிக்கெல்லாம் போய் queue வில் நிற்கணும். எல்லோரும் படுக்கப்போகலாம் இப்போ" என்று கூறுகிறார் தாத்தா ஜான்.

வெள்ளிக்கிழமை காலை. பீட்டர் லிவிங் ரூமில் உட்கார்ந்திருக்கிறான். அவனைச்சுற்றி பெட்டிகள், துணிகள். அவசர அவசரமாக பாக்கிங் செய்து கொண்டிருக்கிறான். "இது என்ன டப்பா?" என்று கேட்டுக்கொண்டே ஒரு டப்பாவைத்திறந்து பார்க்கிறான். வாசனை மூக்கைப்பிளக்கிறது. "அம்மா, என்னம்மா இவ்வளவு sweets பண்ணி வெச்சிருக்கே? Customs ல பார்த்தா பிடிச்சு வீசிப்போட்டு விடுவான். கொஞ்சம் குறைவாக வை." என்கிறான் பீட்டர். "அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டார்கள். பீட்டர், ரொம்ப தூரம் போகப்போகிறாய். அதுவும் வேறு நாட்டுக்கு. ஏதோ என்னால் முடிந்தது செய்திருக்கிறேன்" என்று குரல் கொடுக்கிறாள் பாட்டி மேரி. "ரொம்ப thanks பாட்டி. 2 நாளில் முடித்து விடுகிறேன்." என்கிறான் பீட்டர். "பீட்டர், பாஸ்போர்ட், டிக்கட் எல்லாம் செக் பண்ணிக்கோ" என்கிறார் தாமஸ். "எல்லாம் OK Daddy" என்கிறான் பீட்டர். பாக்கிங்கும் முடிந்தது. "நாளை காலை எத்தனை மணிக்கு flight உனக்கு?" என்கிறார் தாத்தா ஜான். "10 மணிக்கு. 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் சரியாக இருக்கும்" என்கிறார் தாமஸ்.

சனிக்கிழமை காலை. பீட்டர் செக் இன் எல்லாம் முடித்து எல்லோருக்கும் விடை சொல்கிறான். "பீட்டர், ஜாக்கிரதையாகப்போ. புது இடம். கவலையாக இருக்கிறது. அடிக்கடி E-Mail செய்." என்கிறாள் அம்மா எலிசபெத். "Web Cam ல் என்னுடன் chat செய்வாயா பீட்டர்" என்று கேட்கிறாள் பாட்டி மேரி. பாட்டிக்கு பீட்டரிடம் மிகுந்த பிரியம். "கட்டாயம் chat செய்கிறேன் பாட்டி" என்கிறான் பீட்டர். "Telephone அடிக்கடி செய்யாதே. முக்கியமாக prime-time ல் செய்யாதே. Off-time ல் செய். ஆனால் போய் சேர்ந்தவுடன் போன் பண்ணு. அங்கே Guest House ல் தானே இருப்பாய்?" என்கிறார் தாமஸ். "Apartment வாடகைக்குப்பார்த்தவுடன், address, phone number எல்லாம் உடனே தெரியப்படுத்து" என்கிறாள் அம்மா எலிசபெத்.

"பீட்டர் ஊருக்கு சென்று 1 வருடம் ஆகி விட்டது. அடிக்கடி E-Mail செய்கிறான். நல்ல apartment, எல்லா வசதியும் இருப்பதாக எழுதியிக்கிறான். வேலையும் பிடித்திருக்கிறதாம்." என்கிறார் தாமஸ். "அடுத்தது பீட்டருக்கு கல்யாணம் தான்" என்கிறாள் பாட்டி மேரி. "அதைப்பற்றி தான் உங்களிடம் பேச இருக்கிறேன்" என்று ஜானிடமும் மேரியிடமும் கூறுகிறார் தாமஸ். "என்ன, அவனே பெண் பார்த்து விட்டானா?" என்று கேட்கிறார் தாத்தா ஜான். "அதெல்லாம் இல்லை. அவனுக்கு நாம் பார்க்கும் பெண் தான் சரிப்படுமாம். கல்யாணம் செய்தால் arranged marriage தான் செய்வானாம்." என்றாள் எலிசபெத். என் நண்பன் ஜோசப்பை இன்று பார்த்தேன். அவன் பெண்ணை உங்களுக்கு நினைவிருக்கிறதோ?" என்றார் தாம்ஸ். "லீசா சின்ன பெண்ணாக இருந்தாள் அப்போது. இப்போ வளர்ந்து பெரியவளாகி இருப்பாளே". "ஆமாம் நம் பீட்டருக்கு ஏற்ற ஜோடி" என்றாள் எலிசபெத். "அப்போ மடமடவென்று பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே" என்கிறார் ஜான்.

பீட்டர் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. "பீட்டர் 2 வார லீவில் வருகிறான். அவன் வருவதற்குள் இவ்வளவு வேலைகள் நடந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பெண் பார்த்தல் கூட நாம் தான் செய்தோம்" என்றார் தாமஸ். பீட்டர்-லீசா கல்யாணமும் முடிந்து பீட்டரும் ஊர் திரும்ப கிளம்பி விட்டான். "லீசாவின் விசா கிடைக்க இன்னும் ஒரு மாதம் ஆகுமா?" என்றார் தாத்தா ஜான். "ஆமாம், ஆபிஸிலிருந்து லெட்டர், bank statement, affidavit of support, டிக்கட் எல்லாம் அனுப்ப 1 மாதம் ஆகுமாம்" என்கிறாள் எலிசபெத். "பீட்டர், உனக்கு permanent residence application எந்த stage ல் இருக்கிறது?" என்கிறார் தாமஸ். "இப்பொழுது தான் regional labor முடிந்து national labor stageல் இருக்கு" என்கிறான் பீட்டர். "லீசா labor வருவதற்கு முன் உன் labor முடிந்து விடுமல்லவா" என்கிறார் தாத்தா ஜான். இதைக்கேட்டு பீட்டரை ஓரக்கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்கிறாள் லீசா.
பீட்டர் ஊருக்கு சென்று விட்டான். ஒரு மாதமும் முடிந்து விடுகிறது. லீசாவுக்கும் விசா கிடைத்து விட்டது. அவளும் கிளம்பி விட்டாள் கணவனைச்சேர.

Plane ல் இருந்து வெளியில் வந்து customs, immigration எல்லாம் முடிந்து வெளியில் வருகிறாள் லீசா. Airportல் நசநசவென்று ஒரே கும்பல். Placardல் பெயரை எழுதி மேலே துக்கி அங்கேயும் இங்கேயும் ஆட்டிக்கொண்டு முன் பின் தெரியாதவர்கள் வருகைக்காக காத்திருக்கிறார்கள் சிலர். Vacation முடிந்து குழந்தைகளுடன் திரும்பி வரும் மனைவிகளை வரவேற்க சோகத்துடன் காத்திருக்கும் சிலர். இந்த கும்பலில் பீட்டரின் உருவத்தைத்தேடுகிறது லீசாவின் கண்கள். வெளியே வந்து நின்று வருவான் வருவான் என்று காத்திருந்து 45 நிமிடங்கள் ஆகிவிட்டன. புதிய ஊர் வேறு. பீட்டரைக்காணவில்லை. லீசாவிடம் செல் போன் இல்லை. யாரிடமாவது பேசி செல்போனில் பீட்டரை கூப்பிடலாம் என்று நினக்கும் பொழுது பீட்டர் வேகமாக ஓடி வருவது தெரிகிறது. பீட்டர் ஓடி வந்து லீசாவைக்கட்டித்தழுவுகிறான். "Immigration ல் எவ்வளவு மாதம் stamp கொடுத்தான்" என்கிறான். "ஆறு மாதம்" என்கிறாள் லீசா. "பரவாயில்லை extend பண்ணிக்கலாம். அதற்குள் permanent residency கிடைத்துவிடும்" என்கிறான் பீட்டர். "அது சரி நீங்கள் ஏன் லேட்? நான் பயந்து விட்டேன்" என்கிறாள் லீசா.

"சாரி லீசா. என்ன செய்வது. கிண்டி ப்ளை ஓவர், சைதாப்பேட்டை டன்னல் எல்லா இடத்திலும் பயங்கர ட்ராபிக் ஜாம். எப்படியோ சந்து பொந்தெல்லாம் பூந்து வந்து விட்டேன்." என்கிறான் பீட்டர். லீசாவுக்கு பீட்டருடன் சேர்ந்ததில் இருந்த கவலையெல்லாம் மறந்து விட்டது. காரில் ஏறி ஏர்போர்ட் பார்க்கிங் லாட்டை விட்டு வெளியே வருகின்றனர். 'சென்னை உங்களை வரவேற்கிறது" என்ற போர்ட் அவர்களை வரவேற்கிறது. என் ஆர் ஏ (நான் ரெஸிடெண்ட் அமெரிக்கன்) க்களான பீட்டரும் லீசாவும் புது வாழ்க்கை துவக்க வந்து விட்டார்கள்.

இது எப்படியிருக்கு? இது தான் இந்த கதையின் 'கால்ப்பு'

இந்த கதைக்கு தலைப்பு எங்கே என்று கேட்கிறீர்களா?

காலம் மாறிவிட்டதால் கதைக்கு 'தலைப்பு' கிடையாது. 'கால்ப்பு' தான் உண்டு.