Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Sunday, May 05, 2019

கடிலக்கரையினிலே... புரூக் பாண்ட்

சென்ற வாரம் கடைக்கு போயிருந்தபோது ஒரு புதிய தேநீர் பொட்டல வகையைப் பார்த்தேன். நமக்கு புதியது. அதில் தேநீர் போட்டு அருந்தினால் அப்படியே நம்ம ஊர் டீக்கடை அனுபவம் வருகிறது. அதைவிட விசேஷம் அதன் வாசம்.  டப்பாவை திறந்து முகர்ந்தால்...... ஜிவ்வ்வ்வ்வ்வ்வென்று அடுத்த கணம் பண்ருட்டியில் என் அப்பாவின் டிப்போ!

என் அப்பா புரூக்பாண்ட் கம்பெனியின் பண்ருட்டி சேல்ஸ்மேன். ஊரில் அவர் பெயர் சொன்னால்கூட நிறைய பேருக்கு தெரியாது. புரூக்பாண்ட்காரர்தான்! மெட்ராஸ் ரோட்டில் ரயில்வே கேட்டுக்கு அருகில் இருந்தது அப்பாவின் டிப்போ. டிப்போவில் எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக டீயும் காபியும் இருக்கும். ஆனால் எண்ணிக்கை அதிகமானதாலோ என்னவோ டீ வாசம்தான் ஓங்கி இருக்கும். உள்ளே நுழைந்தாலே டீ வாசம்தான் மூக்கைத் துளைக்கும்....

அப்பாவின் இருக்கைக்கு மேலே ஒரு மின் விசிறி. கொஞ்சம் கவனித்தால்தான் தெரியும். அது ஒரு மேசை மின் விசிறி! உஷா ப்ராண்ட். சாதாரண மின்விசிறி கூட போட இடமில்லாததால், அப்பா மேசை மின்விசிறியையே ஒரு பலகை அடித்து மாட்டியிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அந்த மின்விசிறியையும் கழட்டிக் கொண்டுவந்து விட்டார் - அவனுங்க எங்க குடுத்தாங்க. நான் என் ஃபேனைத்தான் போட்டேன்.  அதனுடைய கனத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்பா - இதுக்கு நேர் கீழ எப்படி இவ்வளவு நாள் தைரியமா உக்காந்த? டேய் அது ஷாப்ஜான் மாட்டினதுடா. அவ்ள சீக்கிரம் விழுந்துடுமா? ஒரு தடவை இப்படித்தான் டீ டிஸ்டிரிபியூட் செய்யும்போது ஆத்துல தண்ணி நிறைய வந்துடுச்சி. ஷாப்ஜான் என்னை தோளில் தூக்கிட்டு போனான், தெரியுமா? அந்தக் காலத்து லாயல்டி இரண்டு பக்கமும் அதிகம். ஷாப்ஜான் அப்போதே புதுவைக்கு வேலை மாறி சென்று புரூக்பாண்ட் வேன் டிரைவராக முன்னேறியிருந்தார். எப்போதாவது அப்பாவைப் பார்க்க வருவார். ராமரின் முன்னே அனுமன் மாதிரி அவ்வளவு பயபக்தியுடன் நிற்பார்.

அப்பாவின் டிப்போ என் துவக்கப்பள்ளியிலிருந்து வரும் வழியில் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது நண்பர்கள் சில சமயம் நச்சரிப்பார்கள் - டேய் அட்டை போடனும் பிரௌன் பேப்பர் வாங்கி குடுடா....  டீ பொட்டலங்கள் வரும் பெட்டியில் உள்ளே ஒரு பழுப்பு நிறத்தில் மிகவும் கனமான காகிதம் இருக்கும். பாட புத்தகங்களுக்கும், நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட மிகவும் வசதியானது. அதை அட்டையாக போட்டால்  எடை கூடிவிடும் அவ்வளவு கனம். புத்தகங்கள் புல்லட் ஃப்ரூப் ரேஞ்சுக்கு பாதுகாப்பாக இருக்கும். சில ஆசிரியர்கள் படுத்துவார்கள். கட்டுரை நோட்டுகளுக்கு கடையில் வாங்கிய பிரௌன் பேப்பர்தான் போட வேண்டுமென்பார்கள். இந்த அட்டையை என் அண்ணன் அன்னிய செலாவணி அளவுக்கு பண்டமாற்றுக்கு பயன்படுத்துவான். இதற்கு ஒரு அட்டை, அதற்கு இரண்டு அட்டை என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கள்ளச் சந்தையையே உருவாக்கியிருந்தான். அந்த அட்டை மீது அப்பாவுக்கும் அபார நம்பிக்கை. அந்த அட்டையை மடித்துத் தைத்து ஒரு போட்டோ ஆல்பமே செய்திருந்தார், போட்டோ எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என்று. ஆனால் நாளாக நாளாக அந்த அட்டையின் நடுவே இருக்கும் தார் நிறத்தில் இருக்கும் கோந்து ஊறி வெளியே வரும். அப்பாவின் பழைய போட்டோக்களில் எல்லாம் அந்த சாயம் ஏறி வீணாகியிருக்கிறது.

அப்பா மாதாந்திர விற்பனை டார்கெட் முறியடிப்பதில் மன்னன். டிவிஷனிலேயே நாந்தான் நிறைய தடவை டார்கெட் பீட் செய்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லுவார். இருக்கும் அதே ஊர் சுற்றுவட்டாரங்களில் எப்படி  மேலும் மேலும் அதிகமாக விற்க முடிகிறது என்பது எங்களுக்கு பெரும் புதிர். பலமுறை இவருடைய ஸ்டாக்கை தீர்த்துவிட்டு பக்கத்து ஊர் டிப்போக்களில் இருந்து தருவிப்பார்.

புரூக்பாண்ட் சின்னம் பொறித்த டைகள் (ties) இரண்டை பொக்கிஷமாக வைத்திருந்தார்.  விற்பனை மன்னராக இருந்ததால் நிறைய பரிசுகள் அடுக்கு டிபன் கேரியர் போன்ற பரிசுகள்.  25 ஆண்டுகள் புரூக்பாண்ட் சேவைக்காக ஒரு கனமான் வெள்ளித்தட்டு, தம்ள்ர் எல்லாம் காத்ரேஜ் பீரோவின் லாக்கரில் இருக்கும். அந்த இரண்டு டைகளுடன். புரூக்பாண்டே உலகமாக வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பான் என்று ஒரு  காபி வந்ததாம்.. அந்த காபி ஒரு நல்ல தரமான ப்ளாஸ்டிக் டப்பாவில் வரும். வீட்டில் நிறைய பருப்பு பாத்திரங்கள் அந்த பான் டப்பாவில்தான். இந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தபோதும் பார்த்தேன். இன்னும் சில டப்பாக்கள் இருக்கின்றன.  புரூ காபியின் மணம் சொல்லவே தேவையில்லை.  இங்கே நான்கூட புரூவில் இருந்து மாறிவிட்டேன். ஆனால் நம் முன்னாள் சங்கத் தலைவர் சத்தியவாகீஸ்வரன் போன்ற புரூ பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள்.  சத்யா வீட்டிற்கு எப்போது போனாலும் புரூ போட்டு அழகாக ஆற்றிக் கொடுப்பார்.
அப்போது புரூக்பாண்டின் எதிரி லிப்டன்! லிப்டன் சேல்ஸ்மேன் பாப்பையாவும் அப்பாவும் நண்பர்கள்தான். நாங்கள் என்னவோ இருவரும் எதிரிகள் போல பேசிக்கொள்வோம். அந்த வீட்டு பிள்ளைகளைப் பார்த்தால் முறைத்துக் கொண்டு போவோம்.

கிரீன் லேபில், ரெட் லேபில், த்ரீ ரோஸஸ் என்று பல. கிரீன்லேபில் விலை குறைந்தது என நினைவு. டீக்கடைகளில் எல்லாம் அதுதான் இருக்கும். எனக்கு த்ரீ ரோஸஸ் பிராண்ட் வெளிவந்ததுகூட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் வென்னீரில் தோய்க்கும் பொட்டலங்களும் வந்தது. அப்பா அதை ச்ற்றும் பிடிக்காமல்தான் விற்பனை செய்ய முயன்றார். யாரும் அதை நம்பவில்லை. சும்மா வென்னீர்ல இத போட்டா போதுமா சார்? அவ்ள ஸ்ட்ராங்கா வருமா?? போன்ற கேள்விகள் நிறைய…  இலவசமாகக்கூட கொடுத்துப் பார்த்தார்கள். கி.ரா. அந்தக் காலத்தில் மக்களை கருப்பட்டி காபியில் இருந்து மாற்ற எவ்வளவு ததிங்கினத்தோம் போட வேண்டியிருந்தது என்று ஒருமுறை எழுதியிருந்தார்.

அப்பா டீ எப்படி போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தண்ணீர் கொதிக்கவைத்து அதை பாத்திரத்தில் வைத்திருக்கும் டீயில் சேர்க்க வேண்டும். டீயை நேராக கொதிக்க விடக்கூடாது. பிறகு வடிகட்டி அதில் பால் சேர்க்க வேண்டும். பின்னாளில் அண்ணன் வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு வந்தபோது என்னடா உன் அண்ணி பால், டீ எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கொதிக்கவச்சி குடுக்கறா என்று ஆதங்கத்துடன் சொன்னார். இப்போ எல்லாம் அப்படித்தாம்பா, யாருக்கு நேரம் இருக்கு என்று சமாதானப்படுத்தினேன்.  அமெரிக்கா வந்திருந்தபோது வெளியே காபி வாங்கினோம். என்னடா டிகாக்‌ஷன் மட்டும் கொடுக்கிறான் என்றார் அப்பா. நாம்தான் எல்லாம் கலக்கிக்கனும்பா என்று சர்க்கரை, பால் சேர்த்து கலந்து கொடுத்தேன். அப்பறம் இவனுங்க எதுக்கு இருக்கிறானுங்க என்றார். நல்லகேள்விதான்.

பின்னாளில் அப்பாவின் விற்பனையில் சம்பந்தமே இல்லாமல் ஸ்விஷ் ப்ளேட் சேர்க்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது என் அண்ணன் மட்டுமே. புது பிராண்ட் என்பதால் வண்ண வண்ண போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் எல்லாம் அவன் கள்ளச் சந்தையை மேம்படுத்தின.

பின்னாளில் அப்பா ஓய்வு பெற சில ஆண்டுகளே இருந்த போது ஒரு கீழ்நிலை பணியாளர் பிரச்சினையால் டிப்போவை மூடி அப்பாவுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விட்டார்கள். கம்பெனியின் லாயல்டி அவ்வளவுதான். அப்பா மலை போல நம்பியிருந்த யூனியனும் அந்த சமயத்தில் கைவிட்டு விட்டது.

இப்போது அந்த டிப்போ சேல்ஸ்மேன் மூலமான நேரடி விற்பனைமுறையே மாறி ஏஜென்சிகள் வந்து விட்டன. அந்தக் காலத்தில் புரூக்பாண்ட் சொந்த டீ எஸ்டேட்டுகளில்  வளர்ப்பதில் இருந்து விற்பனைவரை எல்லாமே செய்து கொண்டிருந்தது. இப்போது அந்த நிறுவனமே இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சகாப்தமே முடிந்த மாதிரி இருக்கிறது. அப்பாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இந்தியாவில் இப்போது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், புரூக்பாண்ட் லிப்டன் இரண்டையுமே விற்கிறது. ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாதது அது. இன்னும் சில நாட்களில் ஆப்பிள் கைபேசிகளும் சாம்சங் கைபேசிகளும் ஒரே நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்!!??

Saturday, June 20, 2009

அப்பாக்கள் தினம்

அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?

வேதாந்தி

அரசியல்வாதி

தினசரி பத்திரிக்கையில் ஒரே பரபரப்பு. அன்றைய தலைப்பு செய்தி இது தான். ஒரு மந்திரியின் மகன் தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறான். மந்திரியிடம் பேட்டி. பேட்டியில் மந்திரி தன மகனை ஒரு சாதரண ஏழை குடிமகனாக வளர்ப்பேன் என்று சொல்லிவிட்டார். கட்சியிலும் மற்றும் மக்கள் மத்தியில் மந்திரியின் செல்வாக்கு கூடியது. சில வருடங்கள் கழித்து அதே பரபரப்பு மகனை சாதரண ஒரு ஏழைப பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
மக்கள் மத்தியில் அவர் ஒரு அவதார புருசனாக சித்தரிக்கப் பட்டார். அவர் மகனுக்கோ ஒன்றும் விளங்க வில்லை. என்ன ஆச்சு அப்பாவிற்கு. தன்னை ஏன் இப்படி நடத்துகிறார். ஒரு நாள் அவரிடம் தனியாக சென்று விசாரித்தான். உங்களின் விளம்பரத்திற்கு என்னை ஏன் பலிகடா ஆக்குகிறிர்கள்?
அவரோ பலமாக சிரித்து விட்டு கிறுக்கா உனக்கு ஒன்றும் புரியாது. ஒரு மந்திரியின் மகன் என்றால் அவன் ஒரு இளவரசனுக்கு சமம். அனால் நீயோ ஒரு அனாதைப் பயல். உன்னை நான் தத்து தான் எடுத்தேன். இப்பொழுது புரிகிறதா உன் பிறவிப் பயன். உன் பிறவியால் நான் பயன் பெற வேண்டும் என்று உன் தலைவிதி
அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவர் அப்பா இல்லை ஒரு அரசியல்வாதி என்று.
வேதாந்தி

Friday, June 12, 2009

அனத்தல் அப்பா!

1987.. அதுவரை தமிழ் நாட்டையே தாண்டாத எனக்கு.. வேலை நிமித்தமாக ஜப்பான் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு மாதமாய் பிரயாணத்திற்கு ஏற்பாடு நடந்தது. பயண நாளும் வந்தது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம். பெட்டியெல்லாம் எடுத்து வாகனத்தில் ஏற்றி ஆகியது. ஆரம்பித்தார் அப்பா! பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டியா? சிங்கையில் இருக்கும் நண்பரின் தொலைபேசி எடுத்துக் கொண்டாயா? ஜப்பானில் குளிர் காலமாம்.. நல்ல கம்பளி எடுதுகிட்டயா? என்று ஏற்கனவே வேர்த்து ஒழிகி பதட்டத்துடன் இருக்கும் என்னிடம் கேள்வி மேல் கேட்டு மேலும் பதட்டம் ஊட்டினார் . என்னோடு விட்டால் பரவாயில்லை. ஏற்கனவே மகன் வெளிநாடு போகிறான் என்ற மகிழ்ச்சி கலந்த ஒரு விதமான பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என் அம்மாவிடம்.. அவன் வழியில் சாப்பிட ஏதேனும் கொடுத்தாயா? வேண்டிய அளவுக்கு துணி மணி எடுத்து வச்சானான்னு பார்த்தாயா? என்று அப்பாவின் அனத்தல் தொடர்ந்தது.

கடந்த 22 வருடத்தில் பலப்பல பிரயாணங்கள் சென்றும்.. ஓவொரு பிரயாணத்தின் போதும் எதாவது ஒன்றை மறந்து போய் அவஸ்தை பட்டதுண்டு. ஒருமுறை.. பயணத்திற்கு முக்கியமான பாஸ்போர்ட் கூட எடுக்க மறந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்ததுண்டு. அதனால், ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் அதற்கு முன்பும் அப்பாவின் "அனத்தல்" வந்து மனதை நெருடும். ரிச்மண்டில் இருந்து ஒரு பெரிய கல்யாண கும்பல் சென்னை பிரயாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. யாருக்காவது அது போன்ற அப்பாவின் அனத்தல் கேட்கனும்னு ஏக்கம் இருந்தா.. இதோ உங்களுக்காக!!

ஏம்பா! ரொம்ப நாள் வெளியூர் போறியே.. காற்று குளிர்விப்பானை 80 F க்கு மாத்தியோ இல்ல நிறுத்தியோ வச்சியா? தண்ணீர் சூடு செய்யும் பாய்லரை குறைந்த சூட்டிற்கு மாற்றியோ.. இல்லை நிறுத்தியோ வைத்தாயா? எரிவாயுவும் மிச்சம். ஆளில்லாத நேரத்தில் வீட்டிற்கும் பாதுகாப்பும் கூட. முக்கிய மின்சார பலகையில் தெரு விளக்கு மற்றும் குளிர் பதனப் பெட்டி தவிர மற்றனவற்றை நிறுத்தி வைத்தாயா? மின்சார செலவும் மிச்சம். வீட்டிற்கு பாதுகாப்பும் கூட. குளிர் பதன பெட்டியில் உறையும் அறையை ஓட விட்டு குளிரும் அறையை நிறுத்தி வைத்தாயா? தானாக புல்வெளிக்கு தண்ணீர் விடும் இயந்திரம் சரியாக வைத்து உள்ளதா? வீட்டிற்குள் இருக்கும் செடிக்கெல்லாம் அவ்வபோது தண்ணீர் விட யாருக்காவது சொல்லியிருக்கியா?

காலம் கெட்டு கிடக்கு.. நகை போன்ற விலையுயர்ந்தனவற்றை வங்கியின் பூட்டு அறையில் வைத்து விட்டாயா? நம்பாளுங்க வீட்டில் எங்க நகையை ஒளித்து வைப்பார்கள் என்று திருடர்களுக்கு நல்லாவே தெரியுதாம். இப்பல்லாம் விமானத்தில் கொடுக்கும் சாப்பாடெல்லாம் நல்லாவே இருக்கறதில்லை.. வழியில சாப்பிட நாலு இட்லியும் நல்ல காரமா கொஞ்சம் தக்காளி தொக்கும், மிளகா பொடியும் எடுத்துகிட்டியா? ஐரோப்பாவில் அடுத்த விமானத்திற்காக காக்கும் நேரத்தில் சாப்பிட்டா அதில் கிடைக்கும் சுகமே அலாதி.

"அப்பா! கிளம்புற நேரத்தில் போதும்பா உங்க அனத்தல்" என்று அன்று அப்பாவிடம் சொன்னது ஞாபகம் வரவும் "சரி.. போதும்யா உன்னுடைய அனத்தல்" என்று ஏகப்பட்ட குரல்கள் இன்று மானசீகமாக காதில் கேட்கவே, இத்தோடு நிறுத்திக்கறேன்.

உங்கள் அனைவருக்கும் பயணம் இனிதே அமையவும், அனைத்து கனவுகளும், சபதங்களும் நலமே நிறைவேற வாழ்த்துக்கள்!!

வசந்தம்

Monday, January 28, 2008

அப்பாவின் காகிதக் கப்பல்

என்னதான் டெக்னாலஜி வளர்ந்து ஆரைகமி, கிரைகமி (உச்சரிப்பு சரியா என்று தெரியவில்லை, ஆங்கிலத்தில் Origami, Kirigami) என்று காகிதப் படைப்புக்கள் சிறந்து விளங்கினாலும், அன்று நமக்கு அப்பா அன்பினால் செய்து கொடுத்த காகிதக் கப்பல் இன்றும் மறக்க முடியாத ஒரு inspiration தான்.

http://vazhakkampol.blogspot.com/2008/01/blog-post_27.html