Wednesday, September 24, 2014

தயிர்சாதம் (டே!)

எதெதுக்கோ 'டே (நாள்)' வைத்துக் கொண்டாடும் நாம், தயிர்சாதத்திற்கும் ஒரு டே வைத்துக் கொண்டாடவேண்டாமா?!.  இதை தமிழக முதல்வர் கவனதுக்குக் கொண்டு சென்று, ஒரு 'டே'வை உருவாக்கி, அதை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ஏனெனில் நாம தான் உலகெங்கும் வியாபித்திருக்கிறோமே!  பத்தாததற்கு வெள்ளையப்பர்கள் பங்குக்கும் தயிரை டப்பா டப்பாவாக உள்ளே தள்ள ஆரம்பித்திருக்கிறார்களே!  'யோக'ர்ட்னு பேர் போட்டதுனாலேயோ என்னவோ, இத்த சாப்பிட்டா யோகா பண்ணதுக்கு சமம்னு நெனச்சுட்டார்களோ என்னவோ!

'இட்லி', 'தயிர்சாதம்' என்றால் நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை.  அது ஒரு பழங்கால உணவு என்றும், நம் தகுதிக்கு ஏற்றது அல்ல என்றும் நினைப்பவர் உண்டு.
Photo Credit: Google
இந்த எண்ணிக்கை எனது நண்பர்கள் வட்டத்திலேயே அதிகம்.  பல காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.  ஆனால், இவர்கள் இதன் அருமை தெரியாதவர்களே!  பள்ளி காலம் முதல் கல்லூரி வரை பிரம்ம முகூர்த்ததில் உலை வைத்து கதிரவன் வருகைக்கு முன்னரே டப்பா டப்பாவாக எங்களுக்கு கட்டுசாதம் கட்டி அனுப்பும் எனது தாயாரின் கைவண்ணத்தில் வாரத்திற்கு மூனு நாளாவது நம்ம ஹீரோ தயிர் சாதம் இருப்பார்.  இது பல வீடுகளில் நான் கண்டதுண்டு.  தாய்மார்களுக்கு சுலபம் என்றாலும், நம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் உணவும் கூட. என்னைப் போல சோறுகட்டிச் செல்லும் கூட்டத்தில், இதுபோல பலரின் மதிய பிரதான உணவு தயிர்சாதம்.

அப்படி என்னதான் இவற்றில் ஈர்ப்பு எனப் பார்த்தால், இவற்றிற்காக தொட்டுக் கொள்ள வைக்கும் பதார்த்தம் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம்.  இட்லிக்கு ஒரு சாம்பார், அவியல், தேங்காய் சட்னி, மிளகாய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, மல்லிச் சட்னி என அடுக்கிக் கொண்டே போவது போல, தயிர் சாதத்திற்கும், மோர் மிளகாய், உருளைக் கிழங்கு மசாலா பொரியல், வாழைக்காய் பொரியல், தக்காளிப் பருப்புப் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி, சுண்டைக்காய்ப் பச்சடி, பலவகை வற்றல்கள், இது எதுவுமே இல்லை என்றால் ஒரு விரல்நுனி ஊறுகாய்  என கல்யாணவீட்டு மளிகை சிட்டை கணக்கா அடுக்கலாம்.

Photo Credit: Thulasi teacher
வீடுகளில் செய்வது போக தயிர்சாதத்திற்கென பேர் போன (?!) கோயில் உண்டக்கட்டிகளும், உணவகங்களும், நம் நினைவிற்கு வருபவை.  எங்க ஊரு பெருமாள் கோயில் தயிர்சாதம், அப்படியே நெய் வடியும்.  பொங்கலில் போடுவதற்கு பதில் தயிர்சாதத்தில் ஊற்றியது போல இருக்கும்.  கடுகும், உளுந்தும், வரமிளகாயும் போட்டு தாளித்து, அப்படியே ஒரு கை வில்லல் நம் கையில் போடுவார் பெருமாள் கோயில் அர்ச்சகர்.  அப்படியே வழுக்கிட்டுப் போகும் நம் தொண்டைக்குள்.  பிறகும் உள்ளங்கையில் நெய் வடியும்.  இதுபோக சென்னை போன்ற பெருநகர உயர்தர உணவகங்களில், தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டு பலநூறுகள் செலவழிப்போரும் நிறைய உண்டு.

தேச வரையரையின்றி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தயிர்சாதம்.  அப்பேர்ப்பட்ட தயிர்சாதத்திற்கு டே போடுறோமோ இல்லியோ, இப்ப ஒரு பதிவு போட்டாச்சு :)

Monday, September 22, 2014

பெண்



அண்டத்தின் அழகே பிரம்மனின் படைப்பு
நடை பயின்ற என்னை மட்டுமே
மன்றத்தில் பிரம்மனின் படைப்பு என்பது
வெறும் வர்ணிப்பா அல்லது பிரமிப்பா?

ஐயிரண்டு மாதம் அன்னையின் வயிற்றில்
கை இரண்டை மடக்கி வாய் பொத்தி
கருவறை என்னும் இருள் அறையில்
வாழ்ந்தது  தான் பெண்ணின்  முதல் பாடம்.

இருளைக் கண்டு மருள மாட்டேன்.

இந்த பாரம்பரியம் மட்டும் பாதுகாக்கப் படுகிறது
இன்றும் இந்த நவீன யுகத்தில்.
அதனால் தான் பெண் இன்னும் இருட்டறையில்
இருக்கிறாள்.
இதனால் தானோ அன்று சமையல் அறையும்
இருட்டாகவே இருந்ததோ .
கடவுளின் கருணை தான் என்ன
சமையல்  அறையிலும்,சாமி அறையிலும்
நெருப்பின் வெளிச்சம் காட்டி வளர்த்தான் பெண்ணை..


கருவறை தாண்டி வந்த நானோ
என் பிறந்த வீட்டை நினைத்து அழுகிறேன்.
அனால் சுற்றமும் முற்றத்தில் சிரிக்க
நான் அழுதால் ஊர் சிரிக்கும் என்ற
எனது இரண்டாம் பாடம் ஆரம்பமானது.

எனது தாயும் என்னை பார்த்து சிரிக்க
எனக்கோ மேலும் அழுகை.
என்ன செய்ய புரியாத வயது
நானும் சிரித்து விட்டேன்.

தாயின் சேலையில் வட்டம் போட்ட என்னை
கட்டம் தாண்டி, பட்டம் படித்த  என்னை
கல்யாணம் மீண்டும் தள்ளியது ஒரு இருட்டறையில்
இரண்டாம் முறை பிரிகிறேன் என் தாய் வீட்டை
அழுவதில்லை என்று சபதம் எடுத்தும்
இரண்டாம் முறை அழுகிறேன் எனது தாய் வீட்டின் பிரிவால்.
இன்றும் உலகம் சிரிக்கிறது என் திருமணம் என்று.

நான் சந்தோசமாய் வாழ்கிறேன் என்று நிருபிக்க
நான் பட்ட பாடு தான் என்ன
என் தாய்க்கு மட்டுமே தெரியும்

சந்தோசம் சுமையாய் மாற
நானும் இமையை மூடாமல்
சுகமாய் சுமக்கிறேன் என் மகவை.

நான் களித்த ஐயிரண்டு மாதம்
பின் வந்ததோ பிரம்மனின் பிரம்படி
என்னும் பிரசவ வலி.
இன்றும் அழுகிறேன் ஊர் சிரிக்கிறது
எனக்கு பிரசவம் என்று பரவசம் அவர்களுக்கு


பிரசவத்தால் சவமாய் போன நான்
மூன்றாம் முறையாக பிறந்த வீட்டை பிரிகிறேன்.
இன்று நான் அழுக வில்லை அதனால் ஊர் அழுகிறது.
கடவுளின் கருணை தான் என்ன
இருளாய்  இருக்கும் இவ்வுலகிற்கு
என்னையே நெருப்பின் வெளிச்சமாய்
தந்தான் இவ்வுலகிற்கு.
இனி என்றும் என் வாழ்வில் இருள் இல்லை.


வேதாந்தி





 




Tuesday, September 16, 2014

ஊருக்கு உபதேசம்


இரிச்மண்டு தமிழ்ச் சங்கத்தின் அடுத்த கலாச்சார நிகழ்ச்சி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த சாதனையில், என்னுடைய அனுபவங்கள் மற்றும், சக தமிழ் நண்பர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

சில குறைபாடுகள், இவை ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அல்ல, நமக்குத் தெரிந்தவை, மற்றும் நாமே பலமுறை(?) கடைபிடித்தவை , நான் தொகுக்க  மட்டுமே செய்திருக்கிறேன்.

தாமத வருகை

நிகழ்ச்சி நிரல் அறிவித்த பின், கலாச்சார இயக்குனர்கள் தொலைபேசியை அணைத்து விடுவது உசிதம். முதல் ஐந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் பங்கு பெரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அழைத்து, நாங்க என்னங்க உங்களுக்கு பாவம் செய்தோம், இப்படிக் கவுத்திடீங்களே என்று அலறுவார்கள். ஆறு மணி நிகழ்சிக்கு 7:30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் நம் பாரம்பரியம். அதில் நமக்குப் பெருமை உண்டு. நிகழ்ச்சி தொடங்கி சற்று நேரம் வரை தன்னார்வலர்களும் சங்கப் பொதுக்குழு உறுப்பினர்களும் மாத்திரம் அங்கே இருப்பார்கள். தன்னார்வலர்கள்  அரங்கத்திற்கு வெளியேவும், மற்ற உறுப்பினர்கள் உள்ளே பல வேலைகளாகவும் இருப்பார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நிகழ்ச்சியை பல கோணங்களில் பதிவு செய்வதில் தீவிரமாக இருப்பார்கள். எனவே முதல் சில நிகழ்சிகள் குடும்பங்களுக்கு உட்பட்ட சிறப்புக் காட்சியாகவே அமையும்.

ஒரு கண்ணில்  வெண்ணை , இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு 

அனைத்து பெற்றோர்களுக்கும் தம் குழந்தைகளின் நிகழ்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் புளகாங்கிதம் அடைய வேண்டும், ஆனால் நாம் நம்முடைய நிகழ்ச்சி முடிந்த உடன், இடத்தைக் காலி செய்ய வேண்டும். நிகழ்சி நிரல் அறிவிக்கும் முன், நம்முடைய நிகழ்ச்சி இடைவேளைக்கு முன்பா அல்லது பின்பா என்று அறிய ஆவல், தெரிந்து கொண்டால் சௌகர்யமான நேரத்துக்கு வரலாம். நீச்சல் வகுப்பு இருக்கிறது, என் பையன் நிகழ்ச்சியை 3 மணிக்கு அப்புறம் போடுங்க என்று வேண்டுகோள் விடுத்த நண்பர் ஒருவர் உண்டு. இவர்களுக்கு பயந்து நிகழ்ச்சி நிரலை, நிகழ்ச்சி தொடங்கும் வரை பதுக்கி வைக்கும் கட்டாயம் உண்டாகி இருக்கிறது. இரண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதித்தால், அதை இப்போ போடுங்க, இதை அப்போ போடுங்க என்ற தொல்லை தாங்க முடியாமல் அதை ரத்தே செய்து விட வேண்டிய சூழ்நிலை.

காணொளிப் பதிவு 
 
உங்கள் குழந்தையின் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய மறந்து விட்டு, மற்றொரு பெற்றோரின் பதிவில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். இருபது குழந்தைகள் நடனம் ஆடினாலும், ஐந்து நிமிடமும் தம் குழந்தையை மாத்திரமே திரை முழுவதும் தெரியுமாறு பதிவு செய்வதில் பெற்றோர்கள் வல்லவர்கள். தம் பதிவை கூச்சம் காரணம் மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் நழுவுபர்கள் அதிகம்.


தலைமறைவு

குழந்தைகள் பெரிதானவுடன், அவர்களைத்  தமிழ்ப் பாட்டுகளுக்கு நடனம் ஆடச் சொல்லிப் பாருங்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள். இதன் காரணம், நமக்கு இனி கலாசார நிகழ்சிகளைக் காணத் தேவை இல்லை, ஏனென்றால் நம் குழந்தைகள் இனி பங்கு பெறப் போவதில்லை. நம் ஊரில், கடைசிக் குழந்தைக்குத் திருமணம் ஆகி விட்டால், அதன் பின்பு மற்ற திருமணங்களுக்குப் போவதை நிறுத்தி விடுவார்கள். காரணம் இனி எழுதும் மொய் திரும்ப வராது. பல சமுதாயத்தின் மூத்த ஆர்வலர்கள் இதன் காரணமாகவும் வருவதில்லை. அது போக அடுத்த தலைமுறையின் மீதுள்ள அதிருப்தி 2000 வருடங்களுக்கு மேலாகவே உள்ளது, அதன் காரணமாகவும் பல பேர் வருவதில்லை.

ஊருக்கு உபதேசம் செய்யும் முன், நான் இதையெல்லாம் தவிர்க்க முடியுமா என்று யோசிக்கிறேன். நீங்களும் யோசிங்க....

Sunday, September 14, 2014

பொற்காலக் கனவும் பாரதியாரும்

(செப்டம்பர் 11 அன்று மகாகவியின் நினைவு நாளையொட்டி மு.கோ. அவர்கள் எழுதியது)
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் படித்தவர்கள், படிப்பறியா பாமரர்கள் அனைவரிடத்திலும் உள்ள பெரிய பலவீனம் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பெருமிதம் கலந்த கருத்து அவர்களிடம் அழுத்தமாக நிலவுகிறது. கடந்து போய்விட்ட பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நல்லதாகவே இருந்தது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெட்டு இப்பொழுது எல்லாம் கெட்டழிந்து நிற்பதாக பலர் நம்புகிறார்கள்
பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கல்வித் திட்டம் செயல்படுகிறது. தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் சங்ககாலம் பொற்காலம் என்பார். அடுத்து வரலாற்றாசிரியர் பாடம் நடத்தும்போது குப்தர் காலம் பொற்காலம் என்பார். சலித்துப்போய் வீடு திரும்பும் மாணவனிடம் தாத்தா பேச்சைத் தொடங்குவார். அந்த காலத்தில் வெள்ளைக்காரன் ஆண்டப்போ என்று ஆரம்பிப்பார்.
இரண்டு விஷயத்தில் தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் முன்னால் தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்தவர்கள் என்று அடித்துப் பேசுகிறார்கள்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றி மூத்த குடி
என்று ஆதாரம் காட்டுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும், ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழிகள் உள்பட எல்லா மொழிகளுக்கும் தமிழ் தான் தாய் மொழி. தமிழிலிருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றி வளர்ந்தன என்பார்கள்.
இதை ஏற்க மறுப்பவர்கள் தமிழினத்தின் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாதான் உலக நாடுகள் அனைத்துக்கும் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தது என்ற பேச்சுக்கு எதிராக வாய் திறந்தால் நீங்கள் இந்து மத விரோதியாக பட்டம் பெற வாய்ப்பு உண்டு. உலகத்தின் எல்லா ஞானமும் நான்கு வேதங்களிலிருந்து தான் பெறப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் நீங்கள் நாஸ்திகர் என்ற பழியைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
எப்படி எல்லாம் வாழ்ந்த தமிழன் இப்படி நலிந்து போனானே என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். வடமொழி மரபும் வாடையும் வீசி தமிழின் தனித்தன்மை அழிகிறதே என்று பகுத்தறிவு வாதிகளும், தனித்தமிழ் ஆர்வலர்களும் வேதனைப் படுவார்கள்.
பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நன்றாக இருந்தது என்ற மூட நம்பிக்கை தமிழனுக்கு மட்டும் உள்ள பலவீனம் அல்ல. இந்தியாவில் மற்ற மொழி பேசுவோரிடமும் ஏதாவது ஒரு வகையில் இந்த மனநோய் பல உருவங்களில் தொடர்கிறது. உலகின் பல பகுதிகளீல் வாழும் ஓரளவு பழமையான நாகரீகச் சிறப்பு உள்ள மக்களீடம் இந்த பொற்காலக் கனவு தொடர்கிறது.
மேல்நாட்டவர்கள் கிரேக்க நாகரீகம் பற்றி இந்த பெருமிதத்தோடு பேசுவதைப் பார்க்கலாம். உலகின் முதல் ஜனநாயக அமைப்பு கிரேக்கத்தில் இருந்த நகரக் குடியரசுகளில்தான் இருந்தது என்பார்கள்.இந்த கருத்தை பல அறிஞர்கள் ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயம்
அன்றைய நகரக் குடியரசில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதுதான் உண்மை. சொத்துக்களும், நிறைய அடிமைகளையும் உடையவர்கள் மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் சங்ககாலம் பொற்காலம் என்று பல தமிழ் அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த பொற்காலத்தில் தமிழ் மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறக் கேட்கலாம். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து வாழ்ந்தனர் என்றும் பல நூல்களில் கூறப்பட்டிருப்பதெல்லாம் வெறும் கற்பனைதான். புலவர்கள் வள்ளல்களையும் மன்னர்களையும் நயந்து பாடி வாழ்ந்தவர்கள். அவர்கள் கற்பனையாகச் சொன்ன, பாடிய பாடல்களில் உள்ள செய்திகள் உண்மை நிலையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வகைக் கற்பனைகளோடு கிரேக்கக் கவிஞர்களூம் பாடியிருக்கிறார்கள். போர் இல்லாமல், சகல வளமும் கொண்ட, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சமுதாயம் என்று மனதுக்கு இதமான கற்பனைகள் கொண்ட கவிதைகளை பழைய இலக்கியங்களில் நிரம்பக் காணலாம். இந்த பாடல்கள் கவிஞனின் நல்லெண்ணத்தையும் அவனுடைய உள்மனத்தில் கிடக்கும் ஆசைகளையும் எதிரொலிப்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.வ.ஜகந்நாதன் என்ற தமிழ் அறிஞர் கூறுகிறார்.
வேத காலம் முதல் பரமார்த்திக வாழ்க்கையை அறிந்து வாழ்ந்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இனி புதியதாக உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. கிடைத்த உண்மைகளைக் கொண்டு அதைக் கடைப் பிடித்து வாழ்வதே நம் கடமையாகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த நம் சான்றோர்கள் எல்லா உண்மைகளையும் கண்டறிந்தவர்கள் என்ற நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது. முன் நாளில் வாழ்ந்தவர்கள் பிணி இல்லாமல் முற்றும் உணர்ந்தவர்களாய் வெகு நாள் வாழ்ந்தார்கள். காலப் போக்கில் மக்கள் பிணி மிகுந்தவர்களாய் சிற்றறிவு கொண்டவர்களாய் குறுகிய வாழ்நாளைக் கழித்து மாண்டார்கள் என்ற கருத்தை பல இடைக்கால நூல்களில் பார்க்கலாம் சென்ற 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திராவிடப்பிரகாசிகை என்ற நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
முதல் தமிழ்ச்சங்க காலத்தில் வாழ்ந்த அகத்தியர் படைத்த நூலின் பொருளை பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் ,சில வாழ்நாள் கொண்டவர்களா யும் எளிய அறிவு படைத்தவர்களாயும் இருந்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை அதனால். பல நூல்கள் அழிந்துபட்டன என்று கூறுகிறார் பிற்காலத்தில் வாழ்ந்த சிறு மதியாளர்கள் முந்தைய காலத்திய அறிஞர்களீன் படைப்பை புரிந்து கொள்ள முடியாததால் நூல்கள் அழிந்தன என்ற பொருளில் கூறுகிறார்..
சமயப் பிணக்காலும் குறுகிய மனப்பாங்காலும் பல நூல்கள் காப்பாற்றப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டன.கவனிப்பார் இன்றி காப்பவர் இன்றி நூல்கள் அழிந்துபட்டன என்பதுதான் உண்மை.இந்த வேதனை தரும் உண்மையை மறைத்து பழம்பெருமை பேசுகிறார் ஆசிரியர்.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளூம் மன உறுதி இல்லாமல் பலவீனப்பட்டவர்கள் தங்கள் நாடு,சமூகம் ,மொழி பற்றி பழைய பெருமைகளை விதந்து ஓதி மன நிறைவு கொள்ளச் செய்யும் முயற்சிதான் இது அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளுடன் புனையப்பட்ட பழங்காலம் பற்றிய புகழ்பாடல்களில் நாம் நம் அறிவை இழந்துவிடக் கூடாது. பழைய அமைப்பு முறைகளீல் உள்ள போற்றத்தக்க ,இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவற்றை சரியாக இனம் கண்டு அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோன்றிய (14 ம்நூற்றாண்டுக்குப் பின்)
தமிழ் நூல்களெதுவும் இலக்கியமாகக் கருதத்தக்கதல்ல,ஒதுக்கப்பட வேண்டியவை என்று மறைமலையடிகள் கூறுகிறார்.அவர் வாழ்ந்த 20 ம் நூற்றாண்டின் முன் பகுதியில் படைக்கப்பட்ட பாரதி பாடல்களும் ,மற்ற கவிஞர்களின் படைப்புகளும் தோன்றிய நூற்றுக்கணக்கான நாவல்களும் மறைமலையடிகள் பார்வையில் கவைக்கு உதவாத எழுத்துக்கள். அவரைப் பொறுத்த வரையில் தமிழின் பொற்காலம் 14 ம் நூற்றாண்டோடு முடிந்து போய் விட்டது.
இப்படி விடாப்பிடியாக பழமையைத் தூக்கிப் பிடித்து பெருமை பேசுவோர் எல்லா பகுதியிலும் இருப்பார்கள்.தமிழ் நாட்டில் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைத்து முள்ளாக வளர்ந்து தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கிறது
இலக்கியத்தில் புதிய உத்திகள், மரபுகள் தோன்ற பெரும் தடையாக வளர்ந்து விட்டது.பழையன எல்லாம் கழிக்கப்படவேண்டியவை அல்ல. ஆனால் வீண் பெருமை பேசி எல்லா வகையிலும் பழமையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது புதிய சிந்தனையோட்டத்துக்கு தடையாகி விடுகிறது. ஒரு விஷயம் பழமையானது என்பதாலேயே பூஜைக்கு உரியதாக மாறி விடுகிறது நவீன காலத்தின் வளர்ச்சியையும் பழைய முறைகளீன் இன்றைய பொருத்தப்பாட்டையும் பற்றி தெளிவான சிந்தனை இல்லை.
புது உலகக் கவிஞனாக அவதரித்த பாரதி இந்த பழமை செய்யும் கேட்டைப் பார்த்தார்.எல்லாத் துறைகளிலும் வியாபித்து நிற்கும் தடைகளுக்கு பழமை மீதான வழிபாட்டு உணர்வுதான் காரணம் என்று உணர்ந்தார்.
அதனால்தான் சரித்திரத் தேர்ச்சிகொள் என்று புதிய ஆத்திச்சூடி பாடிய பாரதி அடுத்தபடியாக பிணத்தினைப் போற்றேல் என்று பாடினார் மேலும் தெளிவாக பழமை விரும்பிகளுக்கு பாரதி அறிவுரை கூறினார்.கடந்த காலத்திலிருந்ததை எல்லாம் இழந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருக்காதே புதியவை படைக்கப் புறப்படு என்றார்.
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
என்று பாடினார்
பழமை என்பது நிகழ் காலத்துக்கான சாவி, எதிர்காலத்துக்கான வழிகாட்டி.. என்றார் ஒரு மேல் நாட்டு அறிஞர்.
பாரதி இந்த விளக்கத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். மிகப்
பெரிய இயக்கத்தை வழி நடத்த வேண்டிய மக்கள் கடந்த காலத்தின் சிறப்பையும்,அதன் இழப்பையும் எண்ணி ஏங்காமல் நிகழ்காலத் தாழ்வை நிணைத்து மனம் தளராமல் நமக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று
நம்புங்கள் என்று பாரதி முழங்கினார்
வரலாற்றை படித்து அதன் சரியான பயன்பாட்டைஎடுத்துச் சொல்கிறார்
முன்னர் நாடு நிகழ்ந்தபெருமையும்
மூண்டிருக்கும் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்று வரலாற்றைப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு மனம் தளர்ந்தவர்களைப் பற்றி இந்த மக்களுக்கு என்ன சொல்லி உண்மையை
உணரச் செய்வேன்,இவர்களுடைய பரிதாப நிலையைக் கண்டு என் உள்ளம் எரிகிறதே என்றுவேதனைப் படுகிறார் பாரதி.
என்ன கூறி மற்றெங்ஙன் உணர்த்துவென்
இங்கிவர்க்கென துள்ளம் எரிவதே
என்று முடிக்கிறார்
- மு.கோபாலகிருஷ்ணன்

Saturday, September 13, 2014

என்னமோ நடக்குது?

சமீபத்துல ஊர்ல நாட்ல கேக்கர இல்லைன்னா நான் பார்க்கர விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் ஏறு மாறாத்தான் இருக்கு.  உங்க எல்லோருக்குமே அப்படியான்னு தெரியலை.  அதனால கொஞ்சம் இங்க வந்து சொல்லிப் பார்ப்போமேன்னு ஒரு முயற்சி.

சங்கர்ராமன் கொலைவழக்கு
இந்த விவகாரம் பலப் பல வருஷங்கள் இழுத்து கிட்டு போய் கடைசியா குத்தம் சாற்றப் பட்ட 'எல்லோரும்' விடுவிக்கப் பட்ட பின்னாடி, மேல் முறையீடு வரும்னு சொல்லப்பட்டது.  இப்போஇந்த கேஸ்ல மேல் முறையீடு இல்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கரதா தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறதுன்னு செய்தி போட்டிருக்காங்க.  இந்த கேஸ்ல தீர்ப்பு வந்ததும் பலர் சொல்ல ஆரம்பிச்சது, சங்கர்ராமனை ஆள் வெச்சு காஞ்சி ஆச்சார்யர்கள் கொலை செய்யலைன்னா அவரை அவரே ஆள் வெச்சு தற்கொலை செஞ்சுகிட்டாரா, இல்லை தானே ஒரு நாலு அரிவாளை எடுத்து வெட்டிகிட்டு செத்து போயிட்டாரான்னு கேள்வி கேட்டிருந்தாங்க.  அவங்க எல்லோரும் திருப்பி அதே உலக மகா அறிவுப் பூர்வமான கேள்வியை கேக்க ஆரம்பிச்சிருக்காங்க.  தமிழ்நாட்டுல உணர்ச்சி வசப்படாம யாரும் எதுவும் செய்யரதோ இல்லை  பேசரதோ இல்லை.  ஆனா இப்படிப் பட்ட கேள்விகள் உணர்ச்சி வசப்படுதல்ல உச்ச கட்டம்ன்னு நினைக்கரேன்.  ஒரு கொலை நடக்குது, கொலைக்கு முக்கிய குற்றவாளிகள்ன்னு சந்தேகத்தின் அடிப்படையில சிலரை கைது செய்யராங்க, சந்தர்ப்பமும், சாட்சியங்களும் வெச்சு அவங்க குற்றவாளிகள் இல்லைன்னு தீர்ப்பு வந்த உடனே சரியான குற்றவாளிகள் யாருன்னு யோசிக்காம, எப்படியாவது குற்றம் சாட்டப் பட்டவங்களுக்கு ஏதாவது தண்டனை தரனும்னு யோசிச்சா அதை என்ன சொல்றது.  இந்திய தண்டனைச் சட்டம் சொல்வது (நிஜமான வக்கீல்கள் யாராவது இந்தப் பதிவைப் படிக்கவேண்டிய கஷ்டம் வந்தா இது சரியா இல்லை தப்பான்னு சொல்லலாம்), ஒரு குற்றவாளி குற்றம் செய்திருக்கிறார் என்பது சந்தேகத்து இடமில்லாமல் தெளிவாக்கப் படவேண்டும்ன்னு, நாம எல்லாம் தீர்ப்பு வரதுக்கு முன்னாடியே தீர்ப்பு எழுதர ஆசாமிகள்.  அவர் அரெஸ்ட் ஆனவுடனே அவர்தான் குற்றவாளின்னு தீர்ப்பு எழுதிட்டோம், இப்போ அப்படி இல்லைன்னு கோர்ட் சொன்னதும் ஒத்துக்க முடியலை.  ஆனா இதே விஷயம் அரசியல்வாதிகிட்ட சொல்லுபடியாகாது.

சங்கர்ராமன் தானே தன் கழுத்தை அறுத்து கிட்டு செத்தார்ன்னு கோர்ட் சொல்லலை, அவரை காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆள்வெச்சு கொலை செஞ்சாங்கன்னு சொல்லப்பட்டது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப் படலைன்னுதான் சொல்லியிருக்கு.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு
ஒரு அரசியல் தலைவர் வரம்புக்கு மீறி சொத்து குவிச்சு வெச்சிருக்காருன்னு ஒரு கேஸ், அது ஒரு 19 வருஷமா நடக்குது, இதுல எது சரி, யார் சரி, எது தப்பு, யார் தப்புன்னு யாருக்கு தெரியும்னு எனக்கு தெரியலை.  20 கேஸ் போட்டு, 19 கேஸ்ல ஜெ நிரபராதின்னு வெளில வந்துட்டாங்க.  ஒரே ஒரு கேஸ்ல அதாவது இந்த சொத்து குவிப்பு கேஸ்ல மட்டும் இன்னும் வெளில வரலை.  இதுல ஒரு விஷேஷம் என்னன்னா இவங்க வெளில வந்த 19 கேஸ்ல பெரிவாரியான கேஸ்களோட தீர்ப்பு வந்த போது ஆட்சியில இருந்தது தி.மு.க.  அதனால இவங்க தன்னோட பவரை யூஸ் பண்ணி வெளில வந்துட்டாங்கன்னு சொல்ல முடியலை.  இப்போ என்ன நடக்கும்ங்கரது 20ம் தேதி தெரிஞ்சுடும்.


நித்தியானந்தா
சில வருஷங்களுக்கு முன்னாடி நான் டெல்லியில வேலை செய்திட்டு இருந்த போது ஒரு சாமியாரைப் பத்தி சொல்லும் போது என்னோட நண்பர் அந்த சாமியாரை 'ஜில்காட்' சாமியார்ன்னு சொல்வார்.  அதோட அர்த்தம் தெரிஞ்ச போது சிரிப்பா இருந்தது.  அதனோட ரியல் அர்த்தத்துக்கு சரியான சாமியார் இந்த நித்தி.  இதுக்கு மேல இவரப்பத்தி நான் எழுத எனக்கு கேவலமா இருக்கு அதனால அதைப் பத்தி நீங்களே பத்திரிகைகள்ல படிச்சுக்கங்க.

கத்தி படம்
படம் என்ன படம், கதை என்ன கதை, இதெல்லாம் யாருக்கு தெரியும்னு தெரியலை ஆனா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கள்ல ஒருத்தர் இலங்கை அதிபரோட தொடர்புடையவர் அதனால இந்தப் படத்தை தமிழ்நாட்டுல வெளியிடக் கூடாதுன்னு முடக்கி வெச்சிருக்காங்க.  தமிழ் படத்தை தயாரிக்கரவர் இன்னரோட தொடபுடையவரா இருக்கக் கூடாதுன்னு எந்த சட்டத்துல இருக்குன்னு தெரியலை, ஆனா, தமிழ்நாட்டுல தமிழ் தமிழ்னு வெத்துக்கு கத்தி அரசியல் பண்ணும் ஒரு கட்சி (தி.மு.க ந்னு நான் வெளிப்படையா சொல்ல மாட்டேன்)யில பெரிய போஸ்ட இருக்கரவரோட அண்ணன் (கலாநிதி ந்னும் நான் சொல்ல மாட்டேன்) தமிழ்நாட்டுல தொலைக்காட்சி சானல்கள் வெச்சு கோடிக்கோடிக்கோடியா சம்பாதிச்சுட்டு ஒரு விமான சேவையை துவக்கி இலங்கைக்கு விமானம் விடலாம், இலங்கை கிரிக்கெட் வீரர்களை வெச்சு ஒரு டீம் வாங்கி IPL ல கிரிக்கேட் விளையாடலாம் ஆனா இலங்கைல அதிபரோட தொடர்பில இருக்கரவங்க யாரும் படம் தயாரிக்கக் கூடாது.  என்ன கூத்து இதுன்னு தெரியலை.

பாபநாசம்
கமல் மலையாளத்துல மோகன்லால் நடிச்சு வந்த த்ரிஷ்யம் படத்தோட தமிழ் பதிப்பான பாபநாசத்துல நடிக்கரதுக்கு நெத்தில விபூதி பூசி நடிக்கரது தப்பு, அதே கெட்டப்போட ஒரு மடாதிபதியைப் பார்த்தது தப்பு.  காரணம் அவர், தான் ஒரு நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு வாதின்னு அவரே பல பேட்டிகள்ல உளறி கொட்டினதுனாலன்னாலும் அவர் நெத்தில விபூதி வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்றது கொஞ்சம் அழிச்சாட்டியம்தான்.  பகுத்தறிவு பகுத்தறிவுன்னு ஜல்லியடிக்கும் ஒரு கூட்டம் (திமுக) தன்னோட மனைவி, துணைவி, இணைவிகளோட கோவிலுக்கு போகலாம், நெத்தி நிறைய குங்குமம் வெச்சுக்கலாம், தேர்தல்ல ஜெயிக்கனும்னு சிறப்பு ஆராதனை செய்யலாம் ஆனா விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து மட்டும் சொல்லக்கூடாது.  இது சரியான்னு யாரும் கேக்கக்கூடாது.

இப்போ கமல் சொன்னது ஏன் உளறிக் கொட்டினதுன்னு சொல்லிட்டேன்னா பின்னூட்டத்துல யாரும் திட்ட மாட்டாங்க.

ஒரு இண்டர்வ்யூல (கார்டூனிஸ்ட் மதன்) அவரே சொன்னது, எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, நான் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் இருப்பவன், நான் ஒரு அக்மார்க் நாஸ்திகவாதி.  இது தப்புன்னு எங்க குடும்பத்துல இருக்கரவங்க எல்லோரும் சொல்லும் போது நான் சொல்றது இதுதான், கடவுள்ங்கரது ஒரு க்ருபா சமுத்ரம்ன்னு சொல்றாங்க அப்படி அவர் க்ருபா சமுத்திரம்னா என்னை ஒன்னும் செய்யாம இப்படியே ஏத்துக்கட்டுமேன்னார்.  ஆக இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனா அப்படி இருக்கரதுனால எந்த ப்ரச்சனையும் வராம இருக்க அதே க்ருபா சமுத்திரம் காப்பாற்றட்டும்னு வேண்டிக்கரார்.  இது உளறல் இல்லைன்னா என்னன்னு யாராவது சொல்லுங்க.

முரளி இராமச்சந்திரன்.

Friday, September 05, 2014

குரு என்பவன் யார் ?

மாதா, பிதா, குரு, தெய்வம்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! ... அருணகிரியார்

எல்லோருக்கும் ஆசான் (குரு) வேண்டும்.  ஆசான் இல்லாத வாழ்க்கை, ட்ரைவர் இல்லாத வண்டியில் போகிற மாதிரி ... வாரியார்

சைவ சித்தாந்தங்களில் குரு நம்மைத் தேடி வர வேண்டும் என்கின்றனர்.

இதில் வ‌ரும் குரு என்பவன்  யார்?  ப‌ள்ளி க‌ல்லூரி கால‌ங்க‌ளில் ந‌ம‌க்குப் பாட‌ங்க‌ள் ப‌யிற்றுத் த‌ந்த ஆசிரிய‌ப் பெருமக்கள்?

ஆசிரிய‌ரும் குருவும் ஒன்றா ?  அன்று ஆம், இன்று அன்று!


ஏட்டுச் சுரைக்காயை எடுத்துப் புகட்டுபவர்ஆசிரிய‌ர்.  மக்கு மாணவன்
என்பவனையும் மார்க்கு வாங்கும் எந்திரமாக மாற்றுபவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் வேலை வேண்டிப் பெற்று தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்ப்பவர் ஆசிரியர்.  மாதச் சம்பளம் போதாதென்று மாலை வேளை ட்யூஷன் எடுப்பவர் ஆசிரியர்.  இதில் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், குரு என்பவன், பிறர் தன்னை குரு என்று போற்றுவதையும் விரும்பாதவன்.  தன் பின்னே இத்தனை இலக்கங்களில் மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்று மார் தட்டி, உலகெங்கும் மடம் கட்டிக் கொள்ளாதவன்.  ஏட்டுச் சுரைக்காயை எடுத்துரைக்காமல், அனுபவ ஞானத்தைப் புகுத்துபவன்.  தன் உயர்வைப் பெரிதென எண்ணாமல், தன்னை நாடி வரும் உண்மைச் சீடனின் உயர்வை விரும்புவன்.  ஞானத் தெளிவைத் தருபவன்.

அடுக்கலாம் இன்னும் பல ...

இதுபோன்ற குருக்கள் இன்றும் இருக்கிறார்களா ? இல்லாததால் தான், குரு தினம் கொண்டாடாமல் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமா ?  இதில் ஏதேனும் அரசியல் இருக்கக்கூடுமோ ?

எது எப்படியோ, மேற்கண்ட 'மாதா, பிதா, குரு, தெய்வம்' தொடரில் வரும் குருவுக்கும், இன்றைய ஆசிரியருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அவர் குரு, இவர் ஆசிரியர்.  ஆனால் இன்றுவரை இத்தொடர் நமக்குத் தவறுதலாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்!!!