Thursday, January 31, 2013

விஸ்வரூபம்



ஊர்ல நாட்ல எல்லாரும் கமலோட விஸ்வரூபம் பத்தி பேசலைன்னாலோ இல்லை அதப் பத்தி லேட்டஸ்ட்டா ஏதாவது தெரியலைன்னாலோ "எதுக்குடா பொறந்தே"ங்கர மாதிரி பாக்கராங்க.  சரி இப்படி எதையாவது எழுதிட்டா.  "இங்க பார்டா இவனெல்லாம் எழுதரான்"ந்னு சொல்ல தோணினாலும், கமல் பத்தி கூகுள் பண்ரவங்க கண்ல நம்ம ப்ளாக் தெரிஞ்சு அவங்க இங்க வந்தா, நம்ம ப்ளாகுக்கு தானே பெறுமைன்னு நீங்க இருக்கனும் சரியா.  

நான் நிறைய பேர்கிட்ட அடிக்கடி சொல்லி அடிவாங்கர ஒரு விஷயம் "சோ" வை எனக்கு பிடிக்கும்ங்கரது.  அது எப்படி விஸ்வரூபம் விஷயத்துல ப்ரச்சனையாச்சுன்னு சொல்றேன் அதுக்கு முன்னாடி விஸ்வரூபம் பத்தி சொல்லிடரேன்.

ரிச்மண்ட்ல பல ஃப்ரெண்ட்ஸ் சொன்னா மாதிரி இது ஒரு ஹாலிவுட் படம் அதுல கமல் நடிச்சு அதை இயக்கியிருக்காருன்னு சொல்லனும்.  அப்படி ஒரு படம்.  கதை என்னன்னு முழுசா சொல்ல மாட்டேன்.  கமல் ஒரு முஸ்லீம், ஆஃப்கானிஸ்தான்ல தீவிரவாதிகளோட பயிற்சி எடுத்துக்கர/கொடுக்கர ஒருத்தர்.  விஸ்வநாதன்ங்கர பேர்ல கதக் டான்ஸ் கத்து கொடுக்கர ஐயரா ஒருத்தர்.  "யோவ்  விஸ்வநாதன்னு பேர் வெச்சுட்டு ஐயங்காராவா இருப்பார்"ன்னு கேக்கக்கூடாது.  இவரோட மனைவி பூஜா, மாணவி ஆண்ட்ரியா, மாமா சேகர் கபூர், நண்பர் மைல்ஸ், வில்லன் ராஹூல் போஸ் மற்றும் பலர்.  பாட்டு வைரமுத்து, கமல்.  டான்ஸ் பண்டிட் பிர்ஜு மஹராஜ்.  கமல் டான்ஸ்ல பிச்சு ஒதரரார்ன்னு சொன்னா அது ரொம்ப சாதாரணமான ஸ்டேட்மெண்ட்.  கண்ணாடி ரூம்ல காமிரா தெரியாம சுழண்டு சுழண்டு ஆடரதும், காமிராவுக்கு எதிரா ஆடராரா, இல்லை ஆடரத கண்ணாடியில காமிச்சு அதை படம் பிடிக்கராங்களான்னு யோசிக்கக்கூட விடாம,  மாத்தி மாத்தி காமிச்சு பின்னிட்டார்.  வசனம் அங்கங்க நல்லா இருக்கு.  கண்டிப்பா ஹாலிவுட்ல பல டைரக்டர்கள், நடிகர்களுக்கு சரியான சவால் விடக்கூடியவன்னு காமிச்சிருக்காரு.  இளையராஜா ம்யூசிக்கா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.  


முஸ்லீம் கமல்தான் ஐயர் கமல் ஆ? இல்லை ரெண்டு பேரா? என்ன ஏதுன்னு தெரியரதுக்கு தியேட்டருக்கு போய் சட்டுன்னு படத்தைப் பாத்துட்டு வந்துருங்க.  பாவம் கமல் கைகாசப் போட்டு வீட்டை அடமானம் வெச்சு படம் எடுத்திருக்கரதா சமீபத்துல பேட்டி கொடுத்திருக்காரு.  வளராத (இல்லை வராத) முடியை வெட்ட மாசா மாசம் 20 டாலர் கொடுத்துட்டு பெருமையா வீட்டுக்கு வருவோமில்ல,  அத மாதிரி நெனச்சுண்டு ஒரு 16 டாலர் கொடுத்து இந்தப் படத்தை பாத்துடுங்க.  நிஜமா சொல்லனும்னா 20 டாலர் கொடுத்தே இந்தப் படத்தை பாக்கலாம்.  அவ்வளவு நல்லா எடுத்திருக்காரு.  நான் படம் பார்த்த அதே நாள்ல படம் பார்த்த ஒருத்தர் "என்னய்யா படம் எடுத்திருக்கான், போலீஸ் வந்து நம்மள பிடிச்சுண்டு போயிடுவானோன்னு பக்கு பக்குன்னு இருந்துச்சு" ன்னு சொன்னார் அவர் சொன்ன மாதிரியெல்லாம் இல்லை அதனால தைரியமா போய் பாருங்க.  அப்படியும் நம்பிக்கை வரலைன்னா டுபுக்கு இந்த இடத்துல http://dubukku.blogspot.com/2013/01/blog-post_25.html எழுதியிருக்கரத முச்சூடும் படிச்சுடுங்க.

இப்போ தமிழ்நாட்டுல கமலுக்கு நடக்கர ப்ரச்சனை:
இந்தப் படம் முஸ்லீம்களுக்கு எதிரான படம்ன்னு சொன்னா யாரும் நம்ம மாட்டாங்கன்னு எல்லோருக்கும் தெரியும், அதனால கேட்பார் பேச்சை கேட்டு, கண்ட மேனிக்குக் குரல் கொடுத்துண்டு இருக்காங்க.  இது ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில நடக்கர சில சம்பவங்கள்னு கமல் சொன்னது சரிதான்.  இதுல இவரும் தீவிரவாதிங்க சிலரும் தமிழ் பேசரதும் கொஞ்சம் லாஜிக் இல்லாம இருந்தாலும் சினிமான்னா கமல் பம்மல் சம்பந்தம் படத்துல சொன்னா மாதிரி "அனுபவிக்கனும் ஆராயக்கூடாது"  அவ்வளவுதான்.  இந்தப் படத்துல வந்திருக்கர விஷயத்தைவிட பல மடங்கு விஷயம் சுமார் 15 வருஷத்துக்கு முன்னாடியே  தி சீஜ் "The Seige"ந்னு ஒரு படத்துல விலாவரியா வந்திருக்கு.  கமல் தமிழ்நாட்டுல கஷ்டப் படரதை பார்த்தா விஜய் ஒரு படத்துல (திருமலை) அவரோட ஃப்ரெண்ட்ஸை வில்லனுங்க்க கடத்திட்டு போனதும் யாருன்னு தெரியாம, "தெரியலையே காத்துல கத்தி சுத்தரமாதிரி இருக்கு"ந்னு சொல்லுவாரு அது மாதிரிதான் இதுவும் இருக்கு. 

இந்தப் படத்தை ஜெயா டிவி கிட்டயிருந்து விஜய் டி.விக்கு கொடுத்துட்டாரு அதனாலதான் ஜெ. இவரை இப்படி வறுக்கராங்க, இவர் பி.சி தம்பரம்  இருந்த ஒரு விழாவுல அடுத்த ப்ரதமரா ஒரு வேட்டி கட்டிய தமிழன் தான் வரனும்னு சொன்னாரு (அப்படி சொல்லியிருந்தா அதுக்கே கமலை ஒரு காட்டு காட்டலாம்.  இதுக்கு முன்னாடி வேட்டி கட்டின தேவ கெளவுடா என்னத்தை கிழிச்சாருன்னு தெரியலை) அதுல கடுப்பாயி அம்மா இவரை ஒரு காட்டு காட்டராங்க, அப்படி இப்படின்னு நிறைய கேள்விப் படரோம்.  இதுல எது உண்மை எது பொய்யின்னு யாருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது.  அதே சமயம்,  இப்படி ஒன்னு பண்ணி தமிழ்நாட்டுல ஒரு ப்ரச்சனைன்னு வந்தா அது ஜெ வுக்கு தலைவலியா இருக்கும்னு நினைச்சு யாராவது பண்ணியிருக்கலாம்னும் நான் சொன்னா அதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டா நான் எங்க போவேன்.   இதுக்கெல்லாம் புல்ஸ்டாப் வெச்சு ஜெ. கமல் சொல்லி யாரும் ப்ரதமர செலக்ட் பண்ணப் போரது இல்லை அதனால இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அதோட ஜெ டி.வி  நிர்வாகத்தும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு போட்டு ஒடச்சிட்டாங்க.  அதை மறுத்து யாரும் இது வரைக்கும் ஒன்னும் சொல்லலையே அது ஏன்?

ஜெயகாந்தன் (எழுத்தாளர் இல்லை, நம்ம ரிச்மண்ட் நண்பர்) ஃபேஸ்புக்ல சொன்ன மாதிரி கமல் படத்துக்கு இந்த தடங்கல் ஒரு பெரிய பப்ளிசிட்டிதான்னு நினைக்கறேன்.  

இதுக்கு நடுவுல "சோ" கமலுக்கு சார்பா ஜெ கிட்ட பேசனும்னு குப்பன் சுப்பன்னு எல்லோரும் ஒரு அட்வைஸ் கொடுத்திருந்தாங்க.  அதை கேட்டு அவர் கிட்ட போய் யாரோ பேட்டி எடுக்க அவர் "தடை சரிதான்"ந்னு சொல்ல, இப்போ எல்லாரும் அவரை சரமாரியா திட்டிட்டிருக்காங்க.  இதுல ஹை லைட்டு என்னன்னா, ஆபீஸ்ல ஒருத்தர் "யோவ் பெரிசா சோ வைப் பத்தி பேசுவியே, இட்லி வடை பதிவை படிச்சியா (http://idlyvadai.blogspot.com/2013/01/blog-post_31.html)  இப்ப என்ன சொல்றே, அந்தாளுக்கு மண்டைல முடிதான் இல்லைன்னா, இப்ப மூளையும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.  இப்படி இருக்கரதுக்கு அந்தாளு...... " ந்னு அவரத் திட்ர சாக்குல என்னை நல்லா திட்டிட்டு போயிட்டாரு.  

முகமது பின் துக்ளக் படமும் சரி நாடகமும் சரி காலத்தை கடந்து இருக்கர விஷயம்.  அதுல முஸ்லீம்களுக்கு எதிரா எதுவும் இல்லைன்னு தெரிஞ்சாலும் "சோ" வை அலைக்கழிக்கனும்னு அதுக்கு தடை மேல தடை போட்டாங்க.  ஆனா விஸ்வரூபம் அப்படி இல்லைன்னு அந்த டிராமா/படம் பார்த்தவங்களுக்கும், விஸ்வரூபம் பார்த்த/கேட்டவங்களுக்கு தெரியும், தெரியாத மாதிரி நடிச்சா ஒன்னும் பண்ண முடியாது.  

இந்தப் படத்துலயும் ப்ராமின்ஸ்ஸ கேவலமா கிண்டல் பண்றாங்க, அதுவும் கமல் டான்ஸ் ஆடறேன் பேர்வழின்னு நடை, பேச்சு, பாவனைனு எல்லாத்தையும் ஒரு 'திரு நங்கை' மாதிரி பண்ணி வெறுப்பேத்தராரு.  நம்மூர்ல டான்ஸ் கத்துக்கரவங்க, கத்து தரவங்க எல்லாரும் அப்படியா இருக்காங்க. இவரை பார்க்கும் போது, டி.வில மோகன் வைத்யான்னு ஒருத்தர் இப்படிதான் நடிப்பாரு அவர மாதிரியே இருக்கு.  அது என்ன லாஜிக்கோ தெரியலை, கண்றாவியா இருக்கு, அவர் மனைவியா வர்ர பூஜாவை NRI ஐயர்ன்னு சொல்லி அவங்க தமிழ கொலை பண்ணி, நடுவுல ஜோக்குன்னு தத்து பித்துன்னு பேசி படுத்தரதுக்காக இந்தப் படத்துக்கு தடைன்னு சொல்லியிருந்தா சரியா இருந்திருக்கும்.  திரைக்கதைல நிறைய ஓட்டை, டுபுக்கு சொன்ன மாதிரி எடிட்டிங்க் கொஞ்சம் சொதப்பல், நடிகர்கள் செலக்‌ஷன் கொஞ்சம் தண்டம்.  ஆண்ட்ரியா வையும் பூஜாவையும் விசாரிக்கர எஃப். பி.ஐ பெண் ஆபீசர் தண்டமோ தண்டம்.  5 ரூபாய்க்கு நடிச்சுட்டு கண்டிப்பா ஒரு 5000$ -10000$ வாங்கிட்டு போயிருப்பாங்கன்னு நெனைக்கரேன்.

வில்லன் நல்லா பண்ணியிருக்காரு.  "இவர் பெரிய ஆக்டர் இவரைக் கூடத் தெரியாம எப்படி இருக்க" ன்னு போன வாரம் அரவிந்தன் கேவலமா பார்த்தார்.  அதுக்கப்புறம் இவரைப் பத்தி படிச்சா நிஜமாவே நிறைய படங்கள்ல நடிச்சிருக்காரு, எனக்குத்தான் தெரியலை.  இவரை பத்தி நான் படிக்கரது இருக்கட்டும், அப்பா காபி பத்தி சூப்பரா எழுதியிருக்காரே அதைப் படிச்சியான்னு அவரை சதாச்சிட்டேன், அது ஒரு தனிக்கதை.  

கடைசியா, இந்தப் படம் இப்ப சொல்ற விஷயத்துக்காக  தடை பண்ணப் படவேண்டிய படமில்லை.  ப்ராமின்ஸ கிண்டல் பண்றதுக்கும், டான்ஸர்ஸ கிண்டல் பண்றதுக்கும், எஃப்.பி.ஐ. போலீஸ்ன்னு எல்லோரையும் கிண்டல் பண்றதுக்கும் தடைன்னா பரவாயில்லைன்னு சொல்லலாம்.  அது நம்ம வாழ் நாள்ல நடக்கப் போரதில்லை.  அதனால வழக்கம் போல (தி.க உருவான காலத்துல இருந்து) நாம அவங்கள மன்னிச்சிடுவோம்.  அடுத்து "சோ" வோட முகமது பின் துக்ளக் படத்துக்கு கொடுத்த ப்ரச்சனைக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.  அப்படி கம்பேர் பண்ணினா அது சரியான பித்துக்குளித்தனம்.

எப்படியோ, இந்தப் படம் இன்னும் ஒரு வாரம் இல்லை ரெண்டு வாரத்துல internet-ல வரதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல தியேட்டர்ல வந்து கமலுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கட்டும்.



பி.கு 1: கமல் இவ்வளவு நல்லவர், அவ்வளவு நல்லவர்ன்னு எல்லோரும் சொல்றோமே, அவர் ஒரு பேட்டியில எனக்கு மஹாத்மாவை விட மோஹந்தாஸ் கரம்சந்த் காந்திங்கர வக்கீலதான் பிடிக்கும்னு உளறியிருந்தாரே அதை யாரும் ஏன் கேள்வி கேக்கலை?  

பி.கு 2: காதலா காதலா படம் வெளிவரதுக்கு கமலுக்கு ப்ரச்சனை வந்த போது, மணிவண்ணன் நடிக்க மாட்டேன்னு சொன்னதும் அந்த ரோலுக்கு எம்.எஸ். விஸ்வநாதனை போட்டு ஒப்பேத்தி வெச்ச போது வலுவில வந்து நான் உன் படத்துல நடிப்பேன் எனக்கு ஒரு ரோல் குடுன்னு சொல்லி அதை கல கலப்பா செஞ்ச, ரொம்ப நல்லவர்ன்னு கமல் பாராட்டின "சோ"  இப்ப அவரோட கருத்தை தைரியமா சொன்னதும் கெட்டவரா ஆயிட்டாரே அது எப்படி?

பி.கு3: மஞ்சள் அடிக்காம எதையாவது பின் குறிப்புன்னு எழுதினா யாரும் கவனிக்க மாட்டாங்கன்னு (ஹி ஹி) மஞ்சள் தடவிட்டேன்.


முரளி இராமச்சந்திரன்.


Tuesday, January 15, 2013

காப்பி புராணம் - இரண்டாம் பகுதி

காப்பி புராணம் முதல் பகுதி இங்கே...
இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை வெள்ளைத் துரைமார்களின் பானமாக இருந்த  காப்பி மேட்டுக் குடியைச் சேர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் தலை காட்டியது.விதேசிகளின் பானமாக இருந்த காப்பி படிப்படியாக சுதேசிகளின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும்  அடையாளமாக வளர்ந்தது. பணக்காரர்கள் காப்பி குடிப்பதை நாகரீகத்தின் ஒரு அம்சமாக கருதத் தொடங்கினார்கள்.

அப்பொழுது புதிதாகத் தொடங்கிய காப்பி கிளப்புகளில் மட்டும் காப்பி விற்பனையானது,. காலப்  போக்கில் நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க குடும்பங்களில் காலை உணவு காப்பியுடன் தொடங்கும் நிலை வளர்ந்தது.

குறிப்பாக 1920களில் காப்பி குடிக்கும் பழக்கம் பிராமண சமூகத்தில் எல்லா பகுதியினரிடத்திலும்  நிலை பெற்றது. வீட்டு விசேஷங்களில் காப்பி நன்றாக அமைவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். பிராமணர்கள் காப்பி கிளப்பில் டிகிரி காப்பி என்று பெருமையோடு விளம்பரம்  செய்தார்கள். 

சில ஹோட்டல்கள் நல்ல காப்பிக்காக புகழ்ந்து பேசப்பட்டது. வியாபார போட்டியில் காப்பி  பொடியுடன் போதை பொருட்கள் சேர்க்கப்படுவதாக சில ஹோட்டல்களுக்கு எதிராக வதந்தி  உலவத் தொடங்கியது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும்  நகரங்களில் பல ஹோட்டல்கள் நல்ல காப்பிக்கு புகழ் பெற்றவை. அந்த ஹோட்டல்களில் காப்பி குடிப்பதை வாழ்நாள் பாக்கியமாக அந்த பகுதி மக்கள் நம்பினார்கள். திருச்சிக்கு அருகில் ஒரு  கிராமத்தில் உள்ள பெரியவர் தன் இளமைக் காலத்தில் பிரபல ஹோட்டலில் காப்பி குடிப்பதற்காக நகரத்துக்கு போனதைப் பற்றி பெருமையாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ரயிலில் சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு தினமும் திருச்சி சென்று அந்த ஹோட்டலில் காப்பி குடித்த பெருமையை அளந்து கொட்டுவார். 

இப்படி காப்பிக்கு அடிமையாகிப் போனவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள் மத்தியில் அதிகமாக இருந்தனர். ஆனால் இன்று மற்ற சமூகத்திலும் காப்பிக்கு அடிமையானவர்களைப் பார்க்க முடியும். 

வீட்டில் காப்பி தயாரிக்கும் பழக்கத்தை பிராமணர்கள்தான் முதல்முதலாக தொடங்கினார்கள் என்பது சரிதான். அந்த காப்பியை நுரை போங்க ஆற்றி குடிப்பதும், அவர்களுடைய தனி பாணி. அவர்களுடைய ஆச்சாரம் கெடாதபடி காப்பியை குடிப்பதற்கு தனியாக டம்ளர்களும் தயாராகியது.  பித்தளை பாத்திர உற்பத்திக்கு புகழ் பெற்ற கும்பகோணம்தான் விளிம்பில் வளைந்த தம்ளர்களை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வந்தது. உதட்டில் வைக்காமல் மேலே தூக்கி காப்பியை குடிப்பதற்காகவே இந்த தம்ளர்கள் பயன்படுத்தப்பட்டன. டவரா, டம்ளரில் காப்பி கொண்டு வந்து வைக்கும் பழக்கத்தை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் காணமுடியாது. பிராமணர்கள் அதிகம் வாழும் நகரம் கும்பகோணம்.காப்பி பிரியர்களான பிராமணர்களும் அங்கே அதிகம்.நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தமிழ்நாட்டில் டவரா டம்ளரில் காப்பி குடிக்கும் பபழக்கத்தைப் பற்றி படத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. 

தரமான காப்பி தயாரிப்பதில் புகழ் பெற்ற ஹோட்டல்காரர்கள் அபின் போன்ற போதைப் பொருளை பயன்படுத்துவதில்லை என்று மறுக்கிறார்கள். காப்பிக் கொட்டையை தேர்வு செய்வதிலும்,அந்த கொட்டையை பக்குவமாக வறுப்பதிலும்தான் தரம் அமைகிறது என்று கூறுகிறார்கள். பில்ட்டர் முறையில் தயாரிக்கும்போது, சேர்க்க வேண்டிய நீரின் அளவும் கலக்கப்  பயன்படும் பாலும் காப்பியின் தரத்தை நிர்ணயிக்கிறது. அதோடு மட்டுமல்ல, அத்துடன் போடும் சர்க்கரையின் அளவும் காப்பியின் தரத்தையும், ருசியையும் தீர்மானிக்கிறது, சற்று கூடுதலான சர்க்கரை காப்பி ருசியை கெடுத்து விடும் என்கிறார் ஹோட்டல்காரர். 

பல ஆண்டுகளாக காப்பி தயாரித்த அனுபவம் காரணமாக பல பிராமண குடும்பங்களில்  காப்பி சுவையாக அமைகிறது. காலப்போக்கில் மற்ற சாதியினர் வீட்டிலும் பக்குவான முறையில் காப்பி தயாரிக்க முடியும். 

உணவுப் பழக்கங்களில் பழமையை தொடர்ந்து வற்புறுத்தும் பிராமண சமூக முதியவர்கள், காப்பி குடிப்பதால் வரும் பசிமந்தம், மற்ற நோய்கள் பற்றி கூறி மாறிவரும் உணவுப் பழக்கங்கள்  பற்றி எச்சரிக்கை செய்தார்கள். காலப் போக்கில் அவர்களும் காப்பி பிரியர்களாக மாறியதுதான் கண்ட பலன். 

எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் பத்திரிகைகள் வளர்ந்து வரும் காப்பி கலாச்சாரத்தை கண்டித்தன.சில மருத்துவர்கள் காப்பி குடியால் வரும் நோய்களை பட்டியல்  போட்டு பத்திரிகைகளில் எழுதி எச்சரித்தனர்/. தமிழ் அறிஞர் திரு. வி. க. வின் பத்திரிகையான  நவசக்தி தொடர்ந்து, காப்பி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது. நூறாண்டு வாழ்வது எப்படி என்ற நூலை எழுதிய மறைமலை அடிகள் காப்பி போன்ற நவீன பழக்கங்கள் மனிதனின் ஆயுளைக்  குறைத்து விடும் என்று எச்சரித்தார்.  

ஆனால் திரு. வி. க.வின் நவசக்தியில் தன் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கிய கல்கி  காப்பியைப் பொறுத்த வரையில் மொடாக் குடியராக மாறினார்.  உயர்சாதி காங்கிரஸ் தலைவர்கள் பலர் காப்பி குடிப்பதை பழக்கமாக வளர்த்துக் கொண்டனர். குறிப்பாக காங்கிரஸ் நடவடிக்கைகளில் பங்கு எடுத்துக் கொள்ளத் தொடங்கிய மேட்டுக் குடிப்  பெண்கள் காப்பி குடிப்பதை புதிய நாகரீகமாக வளர்த்துக் கொண்டார்கள். தீவிர காந்தியவாதிகள் பலர் காப்பியை மினி கள் என்று வர்ணித்தனர். இப்படி நாகரீகமாக காப்பி குடிப்பவர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுவதை போலித்தனமான அரசியல் என்று சாடினார்கள்.

இவர்களுடைய காப்பிக் குடி பழக்கத்தை குறை கூறி காந்தியடிகளிடம் பல காங்கிரஸ்வாதிகள் புகார் கொடுத்தார்கள் இத்தகைய புகார்கள் தன்னிடம் வருவதாகத் தெரிவித்து காந்தியடிகள் தன்னுடைய யங் இந்தியா இந்தியா பத்திரிகையில் வருத்தம் தெரிவித்தார் என்றசெய்தியைக் கேட்டால் இன்று எல்லோருக்கும் சிரிப்புத்தான் வரும்.

தமிழ்நாட்டின் மூத்த காந்தியவாதியான ராஜாஜியே ஒரு பெரும் காப்பிபிரியர் என்பதுதான் வேடிக்கையான செய்தி அதுமட்டுமல்ல கொதிக்கும் சூட்டில் உள்ள காப்பியை அவர் அனாயாசமாக குடிப்பதை நேரில் கண்ட பலர் அயர்ந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக ராஜாஜி  மிகச் சூடாக காப்பி குடிக்கும் பழக்கத்தை அவரோடு பழகிய பலர் எழுத்தில் பதிவு  செய்திருக்கிறார்கள்

காலையில் பழைய நீராகாரம் சாப்பிடும் பழக்கம் பல தலைமுறையாக இருந்தது. அந்த பழக்கத்தை விட்டு காப்பி குடிக்கத் தொடங்கியதைக் கண்ட பலர் அது பற்றி எச்சரித்தார்கள். காலையில் பழைய நீராகாரம் சாப்பிடுவதை விட்டு ஆரோக்கியத்துக்கு கேடான காப்பி  பழக்கத்தை வளர்த்துக் கொண்ட நிலையை வர்ணித்து பாடல்களை பாடினார்கள். இந்த வகையில்  இங்கிலாந்து காப்பி vsஇந்திய பழையது என்ற சிந்து பாடல் பிரசித்தமாக இருந்த காலம் உண்டு. இந்த காப்பி பழக்கம் ஆச்சாரமான வாழ்க்கை,ஏகாதசி விரதம் எல்லாவற்றையும் உடைத்து விட்டதாக பழி கூறி காப்பி மீது வசை பாடும் பாடல் பலர் வாயில் முணுமுணுக்கக் கேட்கலாம்.

அமாவாசை விரதத்தை அடியோடு கெடுத்தாயே  
ஆனதோர் கார்த்திகை விரதத்தை தடுத்தாயே 
ஏகாதசி விரதம் இடுப்பை ஒடித்தாயே  

என்று ஜனரஞ்சகமாக அந்த பாடல் செல்லும்.

காளமேகப் புலவர் என்ற பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அவருடைய சிலேடைப்  பாட்டுத் தான் நினைவுக்கு வரும். இரண்டு பொருள் தரும் வகையில் அவருடைய பாடல்கள் நகைச்சுவையாக இருக்கும். தென்னை மரத்தையும் பனை மரத்தையும் ஆசை வார்த்தை கூறி மயக்கி பணம் பறிக்கும் தாசியோடு ஒப்பிட்டு காளமேகப் புலவர் பாடியிருக்கிறார். வாயில் போட்டு  மெல்லும் வெற்றிலையைக் கூட தாசியுடன் ஒப்பிட்டு அவர் பாடியிருக்கிறார். 

அந்த காளமேகப் புலவர் பாணியில் ஒரு புலவர் காப்பியை தாசியுடன் ஒப்பிட்டு பாடியிருக்கிறார்.அந்த பாட்டையும் கொஞ்சம் ரசிக்கலாம்.

முன்னால் இருந்த நல்ல பழக்கத்தை எல்லாம் கைவிடச் செய்தாய், உன் பழக்கத்தை கொண்டவரை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய், பின்னர் பல நோய்களைக் கொடுத்தாய், இவ்வளவு மோசமான காப்பியே நீயும் விலை மாதுவும் ஒன்றுதான் என்று காப்பி மீது வசை பாடினார் இந்த நவீன காளமேகம்.

முன்னர் எளிதிற் பழக்கம் முற்றுவித்துச் சார்ந்தோரை  
தன்னடிமையாக்கித் தளைப் படுத்தும், பின்னர்ப்  
பிணி மல்கச் செய்விக்கும் பெற்றியால் பொல்லாக்  
கணிகையோடு காப்பி ஒப்பாம் காண்  

என்பதுதான் அந்த பாடல். யார் எவ்வளவுதான் வசை பாடினால்தான் என்ன, காலையிலும் மாலையிலும் காப்பியை  மறக்க முடியாதவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆனார்கள்.  நிஜ வாழ்க்கையைப் போலவே எழுத்தாளர்கள் எழுதும் கதைகளிலும் காப்பி பிரதானமான  இடத்தைப் பிடித்தது. காலையில் மனைவி கொண்டு வந்து வைத்த காப்பியை குடித்தபடியே  ஹிந்து பேப்பரை படிக்கத் தொடங்கும் கதாபாத்திரத்தை வர்ணிப்பதை எழுத்தாளர்கள் தங்கள்  பாணியாகக் கொண்டார்கள். ஆபீசிலிருந்து மாலை களைப்போடு வந்த கணவனை சூடான  காப்பியோடு வரவேற்கும் மனைவி பற்றி எல்லா எழுத்தாளர்களும் வர்ணனை செய்திருக்கிறார்கள். 

இப்படி எல்லா வகையிலும் காப்பி என்ற அந்நிய நாட்டுப் பானம் இந்தியாவில் குறிப்பாக  தமிழ்நாட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. எதிர்ப்புகளை சமாளித்து, சாதி போட்ட வேலிகளை ஓரளவு களைந்து சமபந்தி போஜனம் நடத்தியது. பழமைவாதிகளையும் விரதம் இருக்கும் வைதீகர்களையும் மனம் நோகச் செய்தது. இறுதியில் அவர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது 

இன்று தமிழ்ச் சமூகத்தில் காப்பி வியாபார தந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்.  LET US TALK OVER A CUP OF COFFEE, என்ற சொல்லாடல் அதைத்தான் சொல்லாமல் சொல்லுகிறது.  

ஒரு மனிதனின் விருந்தோம்பும் பண்பையும் (கஞ்சத்தனத்தையும்) அளந்து பார்க்க  காப்பிதான் அளவுகோலாக இருக்கிறது. அந்தப்பயல் வீட்டுக்குப் போனால் ஒரு டம்ளர் காப்பி கூட  கிடைக்காது என்று எச்சரிக்கையாக சொல்வதை பல சமயங்களில் காதால் கேட்டிருக்கிறோம்  ஒரு பெண்ணின் குடும்பப் பொறுப்பை அளந்து பார்க்கும் அளவு கோலாக காப்பிதான் இருக்கிறது. புதிதாக வீட்டுக்குவந்த மருமகளைப் பற்றி "அந்த பெண்ணுக்கு ஒரு காப்பி போடக் கூடத்  தெரியலையே" என்று மாமியார் குறை பட்டுக் கொள்ளும்போது வேறு எப்படி நாம் பொருள்  கொள்ள முடியும்?

- மு.கோபாலகிருஷ்ணன்  

( எ. ஆர். வெங்கடாச்சலபதியின் அந்த காலத்தில் காப்பி இல்லை என்ற கட்டுரையை படித்த  பிறகு, தோன்றிய சிந்தனையை பதிவு செய்திருக்கிறேன்.)  .   .     .

Monday, January 14, 2013

நோட்டீஸ் ப்யுட்டீஸ் - 7

நோட்டீஸ் ப்யுட்டீஸ்  -7


செருப்பு தான் நம் காலைக்கடிக்கும் என்று நமக்குத்தெரியும். இங்கு செருப்பையே நாம் கடிக்கலாம் போலிருக்கே!!!

Monday, January 07, 2013

காப்பிபுராணம்


 இலக்கிய மன்றக் கூட்டத்திற்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் பேசும்போது தன்னுடைய இளமைப் பருவத்தில் பேராசிரியர் ஆ. சீனிவாசராகவன் வீட்டிற்கு போன அனுபத்தைப் பற்றி கூறினார். பேராசிரியர் சீனிவாசராகவன் முந்தைய தலைமுறையின் மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர். திருநெல்வேலி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பனி புரிந்தவர். கம்பராமாயணம், பாரதி இலக்கியங்களை கற்றுத் தெளிந்த சிறந்த தமிழ் அறிஞர்.

 அவருடைய வீட்டுக்குப் போனால் தனக்கு கிடைக்கும் காப்பியைப் பற்றிக் கூறினார். பேராசிரியரின் மனைவி அற்புதமான ருசியுடன் கூடிய காப்பியை கொடுத்து உபசரிப்பார், என்று கூறினார். அந்த அனுபவத்தைக் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார். திருச்சிக்கு வந்தால், நல்ல ருசியுள்ள காப்பிக்கு நான் எங்கே போவேன் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குத்தான் போக வேண்டும். என்றார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

 மேலும் தொடர்ந்தார், அது என்ன மாயமோ இந்த பிராமணர்கள் இவ்வளவு ருசியுடன் காப்பி தயாரிக்க எங்கே கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை என்றார். அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

பொன்னீலன் என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருக்கிறார். என் மனைவி கொடுத்த காப்பியை அப்பொழுது வாயாரப் புகழ்ந்தார். அவர் சொன்னது என்னவோ உண்மைதான். பொதுவாக பிராமணர்கள் வீட்டில் காப்பி நல்ல ருசியாக இருப்பதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.கேட்கும்போது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 இந்த நாட்டின் பாரம்பரியப் பெருமை பேசும் பிராமணர்கள் வெளிநாட்டுச் சரக்கான காப்பியை எப்படி இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டார்கள், அந்த பானத்தை தன்வயப் படுத்திக் கொண்டு ரசனையோடு தயாரிக்கிறார்கள் என்பது ஒரு தனிக் கதை.

 இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை பிராமணர்கள் வீட்டில் காப்பி கிடையாது. விசேஷ நிகழ்ச்சிகளில் கூட காப்பி கிடையாது. நகரங்களில் இன்று காணப்படும் காப்பிக் கடைகள் கூட அன்று இல்லை. சோத்துக் கடை என்று கூறப்படும் சில விடுதிகளில் உணவு கிடைக்கும். பிராமணர்களும், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களும் அந்த விடுதிகளுக்குப் போக மாட்டார்கள். ஆச்சாரக் குறைவு என்று கூறி அந்த விடுதிகளுக்குள் நுழைவதை தவிர்த்துவிடுவார்கள். நகரத்துக்குச் செல்லும் காலங்களில் வீட்டில் தயாரித்த உணவை கையில் எடுத்துச் செல்வார்கள். தன சாதிக் காரர்
வீட்டைத் தேடி அங்கே உட்கார்ந்து கையில் கொண்டு போன உணவை சாப்பிட்டு விட்டு அந்த வீட்டில் நீர் வாங்கிக் குடிப்பார்கள்.

 இதுதான் அன்று நிலவிய பழக்கம்.சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைவர்கள் கூட தன்னுடன் தன சாதியைச் சேர்ந்த ஒரு சமையற்காரனை உடன் அழைத்துக்கொண்டு போவது வழக்கமாக இருந்தது. அந்த சமையற்காரரை தவசிப் பிள்ளை என்று குறிப்பிடுவார்கள்.

 நகரங்களின் அளவும்,நகரங்களுக்கு அடிக்கடி செல்வோரின் எண்ணிக்கையும் வளரத் தொடங்கிய பின் நிலைமை சற்று மாறியது. அத்தகைய பயணிகளின் தேவைக்காக காப்பி கிளப்புகள் தோன்றத் தொடங்கின. அங்கே காப்பியை தவிர வேறு சில பலகாரங்களும் கிடைத்தன.இப்படி வளர்ந்த காப்பி கிளப்புகள்தான் காப்பி குடி பழக்கத்தை நாட்டில் எல்லா பகுதி மக்களிடமும் வளர்த்தது.

 ஒரு காலத்தில் ஐரோப்பியர்களின் பானமான காப்பி இன்று எல்லா சாதி மக்களின் பானமாக வளர இந்த காப்பி கிளப்புகள் தான் காரணமாக அமைந்தது. எல்லா சாதியச் சேர்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களிலும், காலை உணவு காப்பியி லிருந்து தான் தொடங்குகிறது. சிலர் பல் துலக்கக் கூட காத்திருப்பதில்லை. படுக்கையிலிருந்து எழுந்த வுடன் காப்பியை குடிக்கும் நாகரீகமும் (?)உண்டு.

 இந்த காப்பி கிளப்புகளை பெரும்பாலும் பிராமணர்களே நடத்தினார்கள். அவர்களுக்கு கிடைத்த புதிய தொழிலாக ஹோட்டல் தொழில் அமைந்தது. அந்த கிளப்புகளில் எல்லா சாதியாரும் ஒரே பந்தியில்உட்கார்ந்து உணவு அருந்தும் பழக்கம் வளர்ந்தது. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்ய காலத்தில் தமிழ்நாட்டில் ரயில்கள் ஓடத்தொடங்கிய போது எல்லா சாதியாரும் ஒரு சேர உட்கார்ந்து பயணம் செய்வதால் சாதிக் கலப்பு ஏற்படுகிறது, என்று பிராமணர்கள் அங்கலாய்த்துக் கொண்டது உண்டு. தங்கள் சாதி ஆச்சாரம் கெடாமல் பயணம் செய்ய ரயிலில் தங்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று பிராமணர்கள் அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது உண்டு. அதே பிராமணர்கள் தான் இன்று காப்பி கிளப் தொடங்கி சகல சாதியாரும் கலந்து அமர்ந்து உணவு அருந்தும் நிலையை உருவாக்கினார்கள்.

 தொழில் திறமையும் சாமர்த்தியமும் உள்ள பிராமணர்கள் காப்பி கிளப் தொடங்கினார்கள்.படிக்க வசதியில்லாத,கல்வியைத் தொடர முடியாத பிராமணச் சிறுவர்கள் கிளப்புகளில் சர்வர்களாக சமையல்காரர்களாக பிழைப்பைத் தொடங்கினார்கள்.ஆகக் கூடி காப்பி கிளப் என்ற புதிய வர்த்தக அமைப்பு பெரும்பாலும் பிராமணர்கள் வசம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 ஆனால் பழமைவாதம் பேசும் எல்லா சாதியாரும் கிளப்புகளில் உணவு அருந்துவதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை.பல நூற்றாண்டுகளாக தான் உணவு உண்பதை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் பார்க்கக் கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த சாதியாரும் விலக்கு அல்ல. காப்பி கிளப்புகளில் கிடைக்கும் உணவு வகைகள் பிராமணர்களால் தயாரிக்கப்பட்டவை என்ற உத்திரவாதம் சில பழமைவாதிகளை திருப்திபபடுத்தலாம். அவர்கள் காப்பிகிளப் உணவை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பிராமணாள் காப்பி கிளப் என்ற பெயர்ப் பலகையுடன் விளம்பரம் செய்யப்பட்டது.

 இந்த அறிவிப்பு சாதி வெறி யை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி பெரியார் ஈ.வே. ரா. 1950 களில் எதிர்ப்பு இயக்கம் தொடங்கினார். அவருடைய தொண்டர்கள் பெயர்ப் பலகையில் இருந்த பிராமணர் என்ற சொல்லை தார் பூசி அழித்தனர்.ஆகையால் பெரும்பாலான ஹோட்டல்களில் பிராமனாள் என்ற சொல் விளம்பரப் பலகையிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற விளம்பரப் பலகையைப் பார்க்கலாம்.எந்த கட்சி தொண்டனும் அதற்கு எதிர்க்குரல் கொடுக்கவில்லை. தார்ச் சட்டி களையும் காணவில்லை.

 இந்த பேக்கரிகளுக்கும்,அங்கே விற்பனையாகும் தின்பண்டங்களுக்கும் அய்யங்கார்களுக்கும் எந்த வகை ஓட்டும் இல்ல, உறவும் இல்லை என்பது வேறு விஷயம்.

 ஆனால் வைதீக பிராமணர்கள் பலர் இன்று வரை கிளப்பில் காப்பியோ இதர உணவு வகைகளையோ சாப்பிடுவதை தங்களுக்கு ஆச்சாரக் குறைவு என்றே நினைக்கிறார்கள்.

 சர்க்கார் உத்தியோகத்தை கைப்பற்றுவதில் பிராமணர்கள் முன்னே நிற்பதை எதிர்த்து பகுத்தறிவுவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அதனால் சர்க்கார் வேலை வாய்ப்பை இழந்த பிராமண இளைஞர்கள் ஹோட்டல் தொழிலில் இறங்கினார்கள். அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் விட்டு வைக்கவில்லை. அதன் ஒரு அம்சம்தான் தார்ச்சட்டி, பெயர்ப்பலகை அழிப்பு எல்லாம்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காப்பிக் கடை முண்டங்கள் என்று பாப்பாரச் சிறுவர்கள் மீது கவிதையில் வசை பாடினார்.

 ஹோட்டல் முதலாளிகளும் சரி அடுப்படியில் நெருப்பில் வெந்து பிழைப்பு நடத்தும் சமையல் காரர்களும் சரி எல்லோருமே சுரண்டல்காரர்கள்தான், ஏனென்றால் அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். இதுதான் பகுத்தறிவுப் பார்வை.

 கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று இந்த காப்பிகிளப் தொடர்புடையதுதான்.இன்று பிராமணர்கள் ஹோட்டல் தொழிலில் கொண்டிருக்கும் பங்கு குறைவு. பல்வேறு சாதி இந்துக்கள் ஹோட்டல் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் பிராமணர்கள் நடத்தும் ஹோட்டல்களைத் தேடி காண்பது அரிது. ஹோட்டல் சமையல்காரர்களாக இருப்பவர்களிலும் பிராமணர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. சென்ற தலைமுறையில் பிராமண சமையல்காரர்கள் தயாரித்த தின்பண்டங்களையும்,உணவு வகைகளையும் இதர சாதியைச் சேர்ந்த சமையல்காரர்கள் இன்று நல்ல முறையில் தயாரிக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் காப்பி கிளப்புகளிலும் பார்ப்பன ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

 இன்று தமிழ்நாட்டில் சகலரும் குடிக்கும் பானமான காப்பி ஆப்பிரிக்காவில் உள்ள எதியோப்பியாவில் உதயமானது என்ற செய்தி பலருக்கு அதிசயமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அந்த நாட்டின் சில பகுதிகளில் வளர்ந்த காப்பிச் செடிகளின் விதைகளை தின்ற பறவைகள் கூடுதலான உற்சாகத்தோடு பறந்து திரிவதை அந்த நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்தார்கள். அந்த காபிச் செடியின் விதைகளை எப்படி உணவாகத் தயாரிக்கலாம் என்று பல முயற்சிகளைச் செய்தனர்.

 அந்த நாட்டின் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் காப்பிச் செடியின் விதை களை நீரில் போட்டு கொதிக்க வைத்து தயாரித்த பானத்தைக் குடித்தார்கள். இந்த பானம் பசியைக் குறைப்பதையும் சற்று சுறுசுறுப்பை ஏற்படுத்துவதையும் உணர்ந்தார்கள். தங்களுடைய சமயச் சடங்குகளில் இந்த பானத்தை விநியோகம் செய்தார்கள். தங்களுடைய நாட்டிலிருந்து காப்பிச் செடி விதைகள் வெளிநாடுகளுக்குகொண்டு செல்வதற்கு தடை விதித்தனர்.

 17ம் நூற்றாண்டில் மைசூர் பகுதியைச் சேர்ந்த பாபா புதன் என்ற முஸ்லீம் துறவி ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மெக்காவிலிருந்து திரும்பி வரும்போது அவர் கள்ளத்தனமாக ஏழு காப்பி விதைகளை கொண்டு வந்தார். தன இடுப்பில் கட்டிய சிறிய துணியில் மறைத்து வைத்து கொண்டு வந்த அந்த
காப்பி விதைகளை மலை பாங்கான சிக்மகளூர் பகுதியில் விதைத்து பயிர் செய்தார். படிப்படியாக பல பகுதிகளில் பயிர் செய்யப்பட்டன. நாளடைவில் மலைப் பாங்கான பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் பயிர் செய்யப்பட்டது.

 அப்படி பயிர் செய்யப்பட காப்பி கொட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.மிகச் சிறிய அளவிலான காப்பி கொட்டையை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ், மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வாங்கினார்கள். இந்தியர்கள் யாரும் அந்த காப்பிக் கோட்டையை வாங்கியதில்லை. காலப் போக்கில் மைசூர் பகுதியில் (இன்றைய கர்நாடகம்) மிகப் பெரிய வாணிபப் பயிராக வளர்ந்தது. ஆயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

 இப்படி காப்பி விதைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து பயிர் செய்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பாபா புதன் என்ற துறவியின் மீது மக்கள் அன்பு பாராட்டினர் அவர் காலத்துக்குப் பிறகு அவருக்கு எழுப்பப்பட்ட சமாதி இன்று எல்லா சமயத்தவரும் தொழுகை செய்யும் தர்க்காவாக வளர்ந்திருக்கிறது

 இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் விவசாயப் பொருள்களில் காப்பிக் காப்பிக் கொட்டை மிக முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இன்று கணிசமான அளவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.


 இதுதான் காப்பி இந்தியாவுக்கு வந்த கதை.

 (இரண்டாம் பாகம்)

- மு.கோபாலகிருஷ்ணன்