Thursday, April 26, 2012

பித்தனின் கிறுக்கல்கள் - 48


உ.பி மற்றும் 4 மாநில தேர்தல்கள்
உ.பி. தேர்தல் பலப் பல கூத்துகளுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மையான வித்யாசத்தில் வெற்றியை அள்ளித் தந்து முடிந்திருக்கிறது.  இவரது மகன் அகிலேஷ் இந்தியாவில் குறைந்த வயதில் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்று, சென்னையில் ஒரு கிழவர் இன்னமும் தனது தொண்டுகிழத் தந்தையார் பதவி விலகக் காத்துகொண்டு இளைஞர் அணித் தலைவர் என்ற பதவியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அவருடைய வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார். 

தமிழகத்தின் மின்வெட்டு
வெளியில் நாத்திகம் பேசிக் கொண்டு வீட்டில் சாமிகும்பிடும் திராவிட கட்சிகள் கூட கடவுளை பற்றிப் பேச வைத்திருக்கிறது தமிழகத்தின் மின்வெட்டு. 

தமிழக இடைத்தேர்தல்:
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவில் அ.இ.அ.தி.மு.க மற்ற கட்சிகளை அனைத்தையும் அடித்து நொறுக்கி டெபாசிட் இல்லாமல் செய்து பெற்றிருக்கிற வெற்றி பணம் கொடுத்து வந்ததா இல்லை ஜெ யின் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையால் வந்ததா என்று ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.  
இலங்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐ.நாவில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. இது செய்தி. 

அமெரிக்க அதிபர் தேர்தல்
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் தயாராகி வரும் இந்த நேரத்தில் அவரை எதிர்க்கக் கூடிய தகுதியிருப்பதாக குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னனியில் இருக்கும் மிட் ராம்னி அதிபருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டுவார் என்று நம்பும் பலரில் நாமும் ஒருவர்.  

திரைப்பட விமர்சனங்கள்
HUGO
HUNGER GAMES
WELCOME
ஹிந்திப் படம். 
வேட்டை
ஒரு கல் ஒரு கண்ணாடி.
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.  

பதிவை முழுவதும் இங்கே படிக்கலாம்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Sunday, April 22, 2012

கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனரே ?


 இந்த கதை மிகப் பழைய கதைதான், கர்ண பரம்பரைக் கதை என்று சொல்வார்கள். அதாவது எந்த குறிப்பிட்ட இலக்கியத்திலும் இல்லாத கதை வாய்வழியாக பல தலைமுறைக் காலமாக சாதாரண மக்களிடையே வழங்கி வரும் கதை

 ஒரு துறவி காட்டின் அருகில் ஓடும் நதிக்கரையில் நீண்ட நேரம் தவ நிலையில் இருந்தார், சில மணி நேரம் கழித்து தவ நிலையிலிருந்து எழுந்தார். அந்த துறவி நல்ல உயரம், கம்பீரமான உருவம், தலையில் அடர்த்தியான முடி,முகத்தில் தவ யோகிகளுக்கு உரிய நீண்ட தாடி, காவி உடை, உலக வாழ்க்கையின் ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டதை அறிவிப்பது போன்ற பார்வை, அகன்ற கண்கள்.

நிஷ்டையிலிருந்து எழுந்த கொங்கன முனிவர் அருகே உள்ள நதியில் நீராடினார்தன் உடைகளை  உலரவைத்துவிட்டு நதிக் கரையில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நல்ல பசி, குளித்த பிறகு பசி மேலும் அதிகமானது. உடையை அணிந்து கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு போய் உணவு  தேடலாம் என்று நினைத்தார்.

 அந்த நேரம்ஒரு கொக்கு ஒரு மீனை கொத்தி தன் அலகில்வைத்துக் கொண்டிருந்தது.  அது  பறக்கத் தொடங்கியதும் ஏற்பட்ட சலசலப்பை கேட்ட துறவி திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய தலைக்கு மேல் பறந்த கொக்கு  இட்ட  எச்சம் துறவியின் தோளில் விழுந்தது. கடுமையான கோபம் கொண்ட முனிவர் மேலேபறந்துகொண்டிருந்தகொக்கை தன் அகன்ற கண்களால் முறைத்துப் பார்த்தார்.

 திடீரென்று அந்த கொக்கு தீப்பிழம்பாக மாறி கருகி சாம்பலாகி ஓடும் நதியில் விழுந்தது.

முறைத்துப் பார்த்த மாத்திரத்தில் தன் கோபத்துக்கு உள்ளான கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனதைக் கண்ட முனிவருக்கு ஒரே ஆச்சரியம். என்னே என் தவ வலிமை என்று எண்ணிக்கொண்டு தனக்குள் பரவசப் பட்டார்.

 கொக்கு இட்ட எச்சத்தை துடைத்துவிட்டு திரும்பவும் நதியில்
நீராடினார். உலர்ந்தகாவி உடையை உடுத்திக்கொண்டு அருகில் இருந்த கிராமத்தை  நோக்கி நடந்தார் நடக்கும்போது முனிவருக்கு ஒரே சிந்தனை. தன்னுடைய  விடாமுயற்சியாலும் தொடர்ந்து வாழ்ந்த தவ வாழ்க்கையாலும் வளர்ந்துவிட்ட தன்  தவ வலிமையைப் பற்றி பெருமிதமான எண்ணத்துடன் நடந்தார்புராண காலத்து முனிவர்கள் வாய் விட்டு சாபம் கொடுத்தால்தான் கேடு நேரும் நான் கோபத்தில் முறைத்துப் பார்த்தாலே கேடு நேரும் என்று நினைத்தபோது முனிவருக்கு  உலகத்தையேவென்றுவிட்ட பெருமை.

 இப்படி பலவகையான சிந்தனையுடன் ஊரை அடைந்த துறவி ஒரு வீட்டின் முன்னால் நின்று  "அம்மா துறவி வந்திருக்கிறேன், ஏதாவது உணவு இருந்தால்கொடுங்கள்”, என்று குரல் கொடுத்தார்.

 பதில் இல்லை

 திரும்பவும்  "அம்மா  தாயே “, என்றார். பதில் இல்லை

அம்மா தாயே ".

 இப்பொழுதும் பதில் இல்லை

 சில  நேரத்துக்கு பிறகு, கதவை திறந்து கொண்டு தலையைக் காட்டிய ஒரு பெண்சற்று பொறுத்து இருங்கள் "என்று கூறிவிட்டு உள்ளே போனாள்.
 உள்ளே சென்ற பெண் உணவு அருந்திக் கொண்டிருந்த நோய்வாய்ப் பட்ட தன் முதிய கணவனை கை பிடித்துஅழைத்து வந்தாள். கை, கால்களை கழுவ அவருக்கு உதவி செய்துவிட்டு திரும்பவும் உள்ளே சென்றாள்.
 ஒரு பாத்திரத்தில் உணவுடன் வாசல் பக்கம் வந்தாள் பசியுடன் இருக்கும் அந்த துறவிக்கு நல்ல கோபம். காலதாமதமாக வந்த அந்த பெண்ணைப் முறைத்துப் பார்த்தார்.  அதே கோபம் நிறைந்த  பார்வை. கொக்கைப் பார்த்த அதே பார்வை

தன்னை முறைத்துப் பார்த்த துறவியின் கோபத்தைப் புரிந்து கொண்ட அந்த பெண் “கொக்கு என்று நினைத்தீரோ, கொங்கனரே”, என்றாள்.

 துறவிக்கு ஒரே அதிர்ச்சி.திகைத்துப் போய் ஒரு அடி பின்னால் நகர்ந்தார். அந்த பெண் கொண்டு வந்த உணவைவாங்கக் கூட தயங்கினார். அவருக்கு ஒரே குழப்பம்.

சற்று நேரத்துக்கு முன் காட்டில்,நதிக் கரையில் நடந்த சம்பவம் வீட்டில் இருக்கும் இந்த பெண்ணுக்கு எப்படி தெரிய வந்தது? இவளுக்கு ஞான திருஷ்டியா? தயக்கத்துடன் உணவை வங்கிக் கொண்ட துறவிக்கு இப்பொழுது பசி போய் விட்டது.

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க வாயைத் திறந்தார்அதற்கு முன் அந்த பெண் கேட்டாள் எனக்கு எப்படி தெரியும் என்று  கேட்கிறீர்களா ?என்றாள்.

 நான் கேட்க  நினைத்ததைக் கூட சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறாள். இந்த பெண் யாராக இருக்க முடியும் ? உள்ளே இருக்கும் இவளுடைய கணவர் முனிவரா? முக்காலமும் அறிந்த ஞானிகளாக  இருப்பர்களோ? என்றெல்லாம் நினைத்து குழம்பிப் போனார். தணிந்த குரலில் ஆமாம் என்று முணுமுணுத்துக் கொண்டு தலையை ஆட்டினர்.

 அந்த பெண் சொன்னாள்  உள்ளே உடல் நலமில்லாத என் கணவருக்கு உதவி செய்ய வேண்டியிருப்பதால்உங்களோடு பேச நேரமில்லை. நான்காவது தெருவில் ராமன் இருக்கிறான், அவனிடத்தில் போய் கேளுங்கள், அவன் சொல்வான் என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

 பசிக் களைப்பும் எதிர்பாராத விதமாக ஒரு குடும்பப் பெண் ஞானதிருஷ்டியோடு  பேசுவதும் கேள்வி கேட்பதும் அவரை சோர்வடையச் செய்தது. ஊர் சிறியதுதான். நான்காவது தெரு எங்கே இருக்கிறது எப்படி போக வேண்டும் என்று விசாரித்துக் கொண்டு போகலாம் என்று  புறப்பட்டார். அவருக்கு இப்பொழுது பசி இல்லை. வருந்திப் பெற்ற தன்னுடைய தவ வலிமைக்கு ஏதோ சவால்வந்து விட்ட தாக நினைத்தார்.

 ராமனுடைய வீட்டைதேடிபோய் கண்டுபிடித்துவிட்டார். ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் ஒரு குடிசை தான் ராமனுடைய வீடு. வீட்டை நெருங்கிப் போனதும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு ஒரு கசாப்புக் கடை. விற்பனை செய்து முடித்த பிறகு மீதமிருந்த மாமிசத் துண்டங்களை வாங்க யாராவது வருவார்கள் என்று காத்திருந்தான்

 அங்கே போன துறவியைப் பார்த்து ராமன் வரவேற்றான். "வாங்க சாமி அம்மா அனுப்பி வைச்சாங்களா?" என்றான்.இப்பொழுது துறவிக்கு மயக்கம் வராத  குறைதான். அந்த பெண் அனுப்பித்தான் நான் வருகிறேன் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவனுக்கும் ஞானதிருஷ்டியோ?

ஒரே குழப்பம்.

 ராமன் அவருக்கு ஒரு இருக்கைகொடுத்து உட்காரச் சொன்னான். "சாமி ரொம்ப களைப்பாக இருக்கீங்க போலிருக்கு என் வீட்டில் ஏதாவது சாப்பிடுவீங்களாஎன்றான்.

" அந்த அம்மா கொடுத்த உணவு இருக்கிறது நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்"என்று கூறிய துறவி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார்.

 எனக்கு ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும். அந்த அம்மா யார்? அவருடைய கணவர் யார்? அவர்கள் மேதைகளா முனிவர்களா?என்று அடுக்கிக் கொண்டே போனார்.

 ராமன் சாவகாசமாக துறவிக்கு பதில் சொன்னான். அந்த அம்மா சாதாரண குடும்பப் பெண்தான் அதிகம் படித்தவர் கூட இல்லை. வயது முதிர்ந்த தன் நோயாளிக் கணவனை சரியாக, ஜாக்கிரதை யாக கவனித்துக் கொள்ளவே அந்த அம்மாவுக்கு நேரம் சரியாகப் போய்விடும் வேறு எதுவும் அவர்களைப் பற்றி சொல்லுவதற்கில்லை" என்றான்.

 துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. “நீங்கள் யார்" என்று ராமனிடம் கேட்டார்.  நான் பல வருடங்களாக இந்த கசாப்புக் கடைவைத்து வியாபாரம் செய்கிறேன். வரும் சொற்ப வருமானத்தை வைத்து என்னுடைய முதிய பெற்றோர்களையும் இரண்டு குழந்தைகளையும் கண் கலங்காமல் காப்பாற்றி வருகிறேன். நானும் அதிகம் படிக்கவில்லை நான் உண்டு என் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் " என்றான் துறவி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தார்.

வீட்டில் இரு முதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள், குழந்தைகளின் கூச்சலும் விளையாடும் குரலும் கேட்டது.

 துறவி திரும்பவும் கேட்டார். "நீங்கள்  வேறு எதுவும் செய்வதில்லையா? என்று. அவருடைய குரலில் ஒரு பரிதாபம் தெரிந்தது. ராமன் கொடுத்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்பதும் தெரிந்தது. "ஆமாம் சாமி எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றான் ராமன்

 அந்த தவசிரேஷ்டர் சோர்ந்த முகத்தோடு, குழம்பிய மனத்தோடு நடையைக் கட்டினார்.

 கதை இங்கே முடிந்து விடுகிறது. சில பல மாற்றங்களோடு இந்த கதை பல பகுதிகளில் வழங்கி வருகிறது. இந்த கதை என்ன செய்தியை சொல்லுகிறது.

 தவம் என்றுகாட்டில் போய் செய்வதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதன் தன் கடமையைச் செய்து சுற்றத்தாருக்கும், சமுதாயத்துக்கும், பயனுள்ள வாழ்க்கை நடத்துவதுதான் உண்மை தவம். என்று சொல்லாமல் சொல்லுகிறது. காட்டிற்கு போய் தவம் என்பது ஒரு வகையில் சமுதாயப் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழ்வதாகும். சக மனிதர்களிடம் அன்பு செலுத்தாத வாழ்க்கை, அந்த வாழ்க்கை. சராசரி மனிதனின் சாதாரணத்தை விட எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்று இந்த கதை கூறுகிறது.

 துளி அளவு கூட அடக்கம்இல்லாமல் தன் தவ வலிமையைப் பற்றி பெருமைப் பட்டுக் கொண்டு அதை எல்லா இடத்திலும் தவறாகப் பயன்படுத்த முயன்ற கேவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது

 நாயை கல்லால் அடித்துவிட்டு, அந்த நாய் வலியில்குரைத்துக்கொண்டே ஓடுவதைப் பார்த்து, குறி தப்பாமல் அடித்த தன் திறமையைப் பற்றி நினைத்து சிரித்து மகிழும் சிறுவனுடைய சிறுபிள்ளைத் தனத்தை விட இந்த சாமியாரின் செயல் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல. அறியாச் சிறுவன் நாயை கல்லால் அடித்தான், அதன் உயிரைப் பறிக்கவில்லை. அவனை மன்னிக்கலாம்.

ஆனால் இந்த துறவி?

 புராணங்களில் வரம் சாபம் என்று அடிக்கடி குறிப்பிடப்படுவதெல்லாம் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம் வரமே சாபமாக மாறிப் போவதைப் பார்க்கிறோம். தன்னை நோக்கி தவம் இருந்த பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான் பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும். அவர் கொடுத்த வரம் அவருக்கே சாபமாக இருந்தது. நல்ல வேளை. கடவுளாக இருந்ததால் சிவன் தப்பினார். ஆனால் தசரதன் தப்ப முடியவில்லை. கைகேயிக்கு அவன் கொடுத்த இரண்டு வரங்கள் அவனுக்கே சாபமாகி அவனுடைய உயிரைக் குடித்தது. இதை எல்லாம் பார்க்கும்போது கொங்கன முனிவர் பாடு எவ்வளவோ தேவலாம் என்றுசொல்லத் தோன்றுகிறது. ஒரு குடும்பப் பெண்ணிடமும், ஒரு கசாப்புக் கடைக்காரனிடமும் தலை குனிந்து நின்றார். அவ்வளவுதான்.

 ஒரு துறவியின் கதையில் தொடங்கி இன்னொரு துறவியின் கதையோடு முடிக்கலாம்.

 ராமகிருஷ்ண பரமஹம்சர் அமைதியாக கங்கை நதிக் கரையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒரு துறவி அந்த பக்கம் வந்தார் அதே காவி உடை.சடைமுடி,நீண்ட தாடி. கையில் கமண்டலம். ஒரு அலட்சியமான பார்வை

பரமஹம்சருக்கு அருகில் வந்த துறவி, அவருடைய கவனத்தைப் பெறுவதற்காக மெதுவாக கனைத்தார், பரமஹம்சர்திரும்பிப் பார்க்கவில்லை.
 துறவி சற்று பெரிய குரலில் கனைத்தார். இப்பொழுது பரமஹம்சர் அந்த துறவியை நிமிர்ந்து பார்த்தார். அவர்" நீர்தான் பரமஹம்சரோ" என்று மிடுக்காகக் கேட்டார்.

 அப்படித்தான் மக்கள் என்னை அழைக்கிறார்கள்.என்று பரமஹம்சர் அமைதியாக பதில் அளித்தார்.

 நான் யார் தெரியுமா?என்றார் துறவி. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என்றார் ராம கிருஷ்ணர். துறவி தொடர்ந்தார். நான் பெரிய தவயோகி.எல்லா யோகமும் எனக்குத் தெரியும் சகல சாஸ்திரங்களும் எனக்கு அத்துபடி. என்று கூறிக் கொண்டே போனார்.

 பரமஹம்சர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.

 நான் அறியாத வித்தை இல்லை இமயமலையில் முப்பது வருடங்கள் தங்கி எல்லா  யோகங்களையும் கற்றுக் கொண்டுவிட்டேன். நான் நினைத்தால் இந்த கங்கை நதி  வெள்ளத்தில் நடந்தே அந்த கரைக்கு போக என்னால் முடியும் என்றார் அந்த துறவி.

 அடாடா, வீணாக்கிவிட்டீரே சுவாமி என்றார் பரமஹம்சர்.

துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்கிறீர் என்றார்.

 ஒரு பைசா கொடுத்தால் அந்த பரிசல்காரன் உங்களை அந்த கரையில் கொண்டு சேர்த்து  விடுவானே. அதற்குப் போய் முப்பது வருடங்களை வீணாக்கி விட்டீரே சுவாமி என்றார் பரமஹம்சர்.
  
துறவி திகைத்துப் போய் நின்றார் யாரோ தலையில் சம்மட்டியால் அடித்த உணர்வு. இந்த சாமியார்கள் எந்த காலத்திலும் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.

 - மு. கோபாலகிருஷ்ணன்

அடையாளம்

அன்பான தமிழர்களே,

நானும் என் நண்பரும் பேசிக் கொண்டிருக்கையில், மிக சாதரணமாக அவர் "குளிர்" என்பது ஆங்கில வார்த்தை என்று சாடி விட்டார்.
"COOL AIR " என்பது தான் குளிர் என்று மாறி விட்டது. வட காற்று என்ற திசை சொல் தான் வாடைக் காற்று என்று மருவியது. கூதல் என்பது தான்
உண்மையான தமிழ் சொல் என்கிறார் . உங்களின் வாதத்தை இங்கே பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி.

இப்படியே போனால் நம்மின் அடையாளம் ஒவ்வொன்றும் வேறு ஒருவரின் அடையாளம் ஆக கருதப்படும்.
நாம் நம்முடைய அடையாளத்தை தொலைத்து கொண்டு இருக்கிறோம். தயவு செய்து இந்த வலைதள தொடர்பை பாருங்கள்.

மிக சரியான வரிகள்." http://www.youtube.com/watch?v=TnWbRFabSrg&feature=ரேலடேத்"
நாம் நாமே என்று பெருமை பேசும் காலம் நெருங்கி விட்டது.
வாருங்கள் தமிழர்களே ஒன்று சேருவோம்.

வேதாந்தி



Thursday, April 19, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 5




அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா



இப்ப‌டிப் ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் பிர‌ச‌விக்க‌, ச‌மூக‌த்தின் மீது எவ்வ‌ள‌வு கூர்ந்த நோக்கும் அக்கறையும் இருக்க வேண்டும். சமூக நிலை, சொல்லாட‌ல், மொழித்திற‌ன், ஆளுமை எனக் க‌ல‌ந்து க‌ட்டிய‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

...

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு

...

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

(திரைப்படம்: பதிபக்தி, 1958)

மேலே, 'கவைக்குதவாத வெறும் பேச்சு' என்ற வரிகளில் சில நேரம் பயணித்தேன். அதென்னது 'கவை', எழுத்துப் பிழையாக இருக்கலாம் எனத் தேடியதில், 'கதை' என்றும், 'சபை' என்றும் பலர் பலவிதமாகத் தங்கள் தளங்களில் பதிந்துள்ளார்கள். எல்லா வரிகளும் 'க'வில் இருக்க 'சபை' சரியானதாக இருக்க முடியாது. ஆனால், 'க'வில் ஆரம்பிப்பதால், 'கதை' ஒத்துப்போகிறது. இருப்பினும் அதுவும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சமூகத்தின் அவலத்தைப் பாடுகையில், அவன் எங்கே 'கதை' கேட்டுக் கொண்டிருக்க முடியும். 'கவை' கொண்டு ஏதாவது அடிப்பானானால், உணவுக்கு வழி கிடைக்கலாம் அவனுக்கு.

வாழ்வின் மித‌வேகப் பயணத்தின் ஆரம்ப கால மாட்டு வண்டியிலிருந்து மாறி, கைவண்டி ரிச்சாவுக்கு மாறியிருந்தது காலம். யாரெல்லாம் இந்த வண்டியில் பயணிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறது உலகம், என்றெல்லாம் சொல்லி, மாட்டை மாற்றி, மனிதனாக மாறி, சக மனிதனைச் சுமந்து, வண்டி இழுத்து, ஊரெல்லாம் சுற்றினாலும், தன் வாழ்வு சாலையின் ஓரமாகக் கிடக்கிறதென்று சொல்லும் வரிகள் உண்மையிலே சுடுகின்றது இன்றும்!

***

ஏதோ ஒரு ந‌ம்பிக்கையின் பேரில் வ‌ந்தாலும், ப‌ல‌ரும் தாயத்தைப் எப்ப‌டிப் பார்க்கின்ற‌ன‌ர் என்று க‌விஞ‌ரின் எண்ண‌த்தில் உதித்த‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள். உட்கார்ந்த‌ இட‌த்தில் இருந்து சாதிக்க‌ முடியுமா என்ற‌ நோக்கில் தான் ம‌னித‌னின் சிந்த‌னை இருந்திருக்கிற‌து/இருக்கிற‌து. போகிற போக்கில், க‌டைத்தேங்காயை எடுத்து வ‌ழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அப்ப‌டியே போய்க்கிட்டே இருக்கிறோம். இந்த‌ப் பாட‌லில், மனித எண்ணங்களான இரண்டு கேள்விகளுக்கு என்ன‌ அற்புதமாகப் ப‌தில் த‌ருகிறார் க‌விஞ‌ர்.

ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து ...

ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து ...


(திரைப்படம்: மகாதேவி, 1957)

***

'ஒன்னிலிருந்து இருப‌து வ‌ரைக்கும் கொண்டாட்ட‌ம், கொண்டாட்டம்' என்ற என்.எஸ்.கே அவ‌ர்க‌ளின் பிர‌ப‌லான‌ பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிறது, ப‌ட்டுக்கோட்டையாரின் கீழ்வ‌ரும் பாட‌லைப் ப‌டிக்கையிலே. அன்றைய‌ சூழ‌லுக்கு முற்றிலும் ஒத்துப் போயிருந்தாலும், இன்று இவ்வ‌ரிக‌ள் பொருத்த‌மாக‌ இருக்க‌ முடியுமா ? யாரு கிட்ட‌ காசு இல்ல‌ இன்று ?!

க‌ருத்து அதுவ‌ன்று ! அன்று, வ‌ரவும் செலவும் சில பல ரூபாய்கள். இன்று, வ‌ர‌வும் செல‌வும் ப‌ல‌ ல‌ட்ச‌ ரூபாய்க‌ள். இது தானே வித்தியாசம்! ஒருவ‌ர் ச‌ம்பாதிக்கும் வீடுக‌ளில் இது தான் இன்றைய‌ நிலை. இதில் 'ஏழை' என‌ வ‌ரும் இட‌ங்க‌ளில் 'ப‌ண‌க்கார‌ ஏழை' என்றும், 'க‌ட‌ன்கார‌ன்' என்கிற‌ இட‌ங்க‌ளில் 'வ‌ரி, வீட்டுக் க‌ட‌ன், வாக‌ன‌க் க‌ட‌ன், மின்சார‌ம், பாலு, சோறு, த‌ண்ணீ, லொட்டு, லொசுக்கு...' என்று போட்டுக் கொள்வோம்.

கையில‌ வாங்கினேன் பையில‌ போட‌ல‌ காசு போன
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

சொட்டு சொட்ட வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகைய நகைகள் இருக்கு
மடியை பாத்த மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
என்னமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
வேலைய கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

(திரைப்படம்: இரும்புத் திரை, 1960)

எல்லாத்தையும் படைச்சு, என்னையும் படைச்சு, எல்லாத்துக்கும் ஏங்க வைக்கிறாயே என்ற பாட‌லின் இறுதி வ‌ரிக‌ள், பிறைகீற்றுப் புன்ன‌கை வ‌ர‌வ‌ழைக்கிற‌து.

***

'காயமே இது பொய்யடா' என்று க‌ண்ண‌தாச‌னும், அவ‌ருக்கு முன் சில சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்க‌, ந‌ம் க‌விஞ‌ரின் 'காய‌மே இது மெய்ய‌டா' என்ற‌ வ‌ரிக‌ள் சிந்த‌னையில் ஆழ்த்துகிற‌து ந‌ம்மை. விய‌ப்போடு தேடினால், இதைச் சில‌ சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்கிறார்க‌ள். திருமூல‌ர் திரும‌ந்திர‌த்தில், 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன். உட‌ம்பை வ‌ள‌ர்த்தேன், உயிர் வ‌ள‌ர்த்தேனே' என்றார். இங்கே 'காய‌ம்' என்ப‌து 'தேக‌ம்' அல்லது 'உடம்பு' என்று பொருள் கொள்ள வேண்டும்.

காய‌மே இது மெய்ய‌டா இதில்
க‌ண்ணும் க‌ருத்துமே வையடா
நோயும் நொடியும் வ‌ராம‌ல் காத்து
நுட்ப‌மாக‌ உய்ய‌டா !

ஆயுள் கால‌ம் ம‌னித‌ர்க‌ளுக்கு
அமைப்பிலே யொரு நூற‌டா
அரையும் குறையுமாய் போவ‌த‌வ‌ன‌வ‌ன்
அறிவும் செயலும் ஆம‌டா

மாய‌மெனும் குய‌வ‌ன் செய்த‌
ம‌ண்ணுபாண்ட‌ம் தான‌டா இது
ம‌த்தியில் உடையாத‌ப‌டி நீ
ம‌ருந்து மாயம் தின்ன‌டா

(திரைப்படம்: கற்புக்கரசி, 1957)

அதென்னது, மத்தியில் உடையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?! க‌விஞ‌ரே சொல்கிறார்...

வாய‌க்கெடுத்த‌து ப‌சிய‌டா
அந்த‌ப் ப‌சியைக் கொடுத்த‌து குட‌லடா !
இந்த‌க் குட‌லைச் சுத்த‌ம் செய்திடாவிடில்
உட‌லுக்கே சுக‌ம் ஏத‌டா ?

***

டூ மினிட்ஸ் நூடுல்ஸ், இன்ஸ்ட‌ன்ட் காஃபி, ஒன் லைன் ஃபேஸ்புக் அப்டேட், ஃப்யூ மினிட்ஸ் லஞ்ச், குயிக் நாப் என‌ எல்லாமே ட‌க் ட‌க் என்று வேக‌மா செஞ்சு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம். எல்லாம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா செய்யும் நிலையில் இன்றிருக்கின்றோம். ஆனால், கவிஞர் வேறொரு ஷார்ட்க‌ட் ப‌த்தி சொல்றாரு. ந‌ம்மைப் ப‌ற்றியே நாம் யோசித்துக் கொண்டிருக்க‌, ச‌மூக‌த்தைப் ப‌ற்றியே சிந்திக்கும் க‌விஞ‌ரின் க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

(திரைப்படம்: மகாதேவி, 1957)

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...