Tuesday, February 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 3 - காதல் ஸ்பெஷல்





பட்டுக்கோட்டையாரின் திருமணம்



மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?

பொதுவா பொதுவுடமைக் கருத்துக்களை எழுதுபவர்களால் காதல் கவிதைகள் படைக்க இயலாது. அப்படியே படைத்தாலும் அதிலும் ஏதாவது அறிவுரையும், ஆதங்கமும் வெளிப்படலாம். ஆனால், இவற்றிற்கு நேர்மாறாக, பொதுவுடமைக் கருத்துக்களின்பால் அதிகம் நாட்டம் கொண்ட நம் கவிஞர் இயற்றிய காதல் பாடல்கள், ஒவ்வொரு சாமான்யனின் மனதிலும் ஏறி அமர்ந்து கொள்ளும். இரு வரி உதாரணம் மேலே.

கடந்த இரண்டு பாகங்களில் பறந்த கனலைக் கொஞ்சம் தனல் தணித்து பட்டுக்கோட்டையாரின் 'காதல்' வரிகளை இந்தப் பாகத்தில் வாசிக்கலாம். நம்மளும் ஒரு பாட்டு, அதுவும் காதல் பாட்டு எழுதலாம் என அமர்ந்தால், விரல் அச்சுப் பலகையத் தட்டுதோ இல்லையோ, வெறும் காத்துத் தான் வருது ;) மானே, தேனே, மயிலே, ஒயிலே, கண்ணே, கருவிழியே எல்லாம் போட்டு பிரமாதமா ஒன்னு எழுதிடனும்னு ஒரு கமிட்மென்ட் இல்லாம, மனசு பாட்டுக்கு அது போக்குல போகுது :)

என்னதான் பயிற்சி எடுத்தாலும், சிலரை சில போட்டிகளில் விஞ்ச முடியாது. அதுவும் முக்கியமாகக் கலைத்துறையில். அன்றைய கவிஞர்கள் மனதில் தங்கும் கருத்துக்களை எழுதினார்கள். இன்றைய அநேக கவிஞர்கள் மனதைக் கெடுக்கும் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுதிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல, 'இது படத்துல வர்ற சிட்டுவேஷன், யாரையும் புண்படுத்தறதுக்கு இல்ல'னு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பட்டுக்கோட்டையார் இதில் முதல் வகை என்பது நாமெல்லாம் அறிந்ததே ! 'செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன் ?' என்று தன்னிலையைப் பாடியவர், அவரெல்லாம் எங்கே ரூம் போட்டு யோசித்திருப்பார். தான் கொண்ட கருத்தில் நேர்மை, எதிலும் எங்கும் சிறு வக்கிரம் தொனிக்காமல் காதல் வரிகள் படைத்த விதம், எளிமையாக இயற்கையோடு ஒன்றிக் காதலைச் சுமந்து வரும் பாடல்கள் என நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன் அவர். இது கவிஞரின் கேள்வி பதில் காதல்.

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

(திரைப்படம்: இரும்புத்திரை 1960)

இதுவரையிலும் பேசாத தென்றல் (காற்று) இன்று மட்டும் வந்து இன்பம் என்று சொல்வது ஏனோ ? ... என்னே ஒரு கற்பனை ! 'வெறும் காத்துத் தான் வருது' என்ற நகைச்சுவைக் காட்சி இங்கிருந்து தான் பிறந்திருக்குமோ ? மேற்கண்ட பாடலில் காதலி காதலனிடம் கேள்விகளால் துளைக்கிறாள். பொறுமையாக சூசகமாகப் பதிலுரைக்கிறான் காதலன். மரக்கிளையையும், கொடியையும் இணைத்துக் காதலி கேட்ட கேள்வியும், அதற்குக் காதலன் அளித்த பதிலும் அதி அற்புதம். இன்றைக்கு இது போல எங்காவது காதலர்களைக் காண முடியுமா? இதைப் பற்றி பதிவு பதிவா எழுதலாம் :) ஆனால், இதுவல்ல இடம்.

பொதுவாகக் காதலுக்குத் தூது போவது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். சக தோழமைகளை நம்பித் தூது அனுப்பி, கவிழ்ந்த காதல்கள் பற்றி ஏராளமான தமிழ் திரைப்படங்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் ;) மனிதனை நம்பினால் இதான் கதி. இது கவிஞருக்கு அன்றே தெரிந்திருக்கிறது :) அதான் அடுத்த பாடலில் வெண்ணிலாவைத் தூது அனுப்புகிறார்.

நான் பேதையாய் இருந்தேன், என் இதயத்தைத் திருடிவிட்டாள், அதை அவளிடம் இருந்து பறித்து என்னிடம் திருப்பிக் கொடு என்று வெண்ணிலாவை அழைக்கிறார் பட்டுக்கோட்டையார். அதுவும், சும்மா போய் கெஞ்சினால் தரமாட்டாள், பறித்து வந்து தந்துவிடு, பயம் கொள்ளத் தேவையில்லை, இது அவள் தந்த பாடம் என்று கூறும் அற்புத வரிகள். இது கவிஞரின் தூதுக் காதல்.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
...
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
(திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)


காதலியின் முகத்திற்கு ஒரு வர்ணனை எழுதச் சொன்னால், கண்ணாடி மாதிரி, பளிங்கு மாதிரி, இன்னும் அதீதக் கற்பனையில் தக்காளி மாதிரி என்றெல்லாம் தான் இன்று கவிஞர்கள் எழுதுகிறார்கள். ப‌ட்டுக்கோட்டையாரோ, முகத்தையே ஒப்பிடுகிறார்.

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
...
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
(திரைப்படம்: தங்கப் பதுமை 1959)

புற அழகைச் சுமந்து வந்த பாடலில், அக அழகையும் சொல்லி, எத்தனை சுகமானாலும் இருவருக்கும் பொதுவாக்கலாம் என காதலில் பொதுவுடமையைப் பாடியது மற்றவர்களில் இருந்து நம் கவிஞரை சற்றே தள்ளி நின்று வியக்க வைக்கிறது. இது கவிஞரின் பொதுவுடமைக் காதல்.

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
(திரைப்படம்: அமுதவல்லி 1959)
இயற்கையோடு இணைத்து கவிஞர் எழுதிய மேற்காணும் பாடல் வரிகளில் மயங்காதவர் உண்டோ. 'தேமதுரத் தமிழோசை' என்றான் பாரதி. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்பத் தமிழோசை வந்து நம் செவிகளில் பாயுமே ! இது கவிஞரின் அழகுக் காதல்.

அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ

களங்கமிலா என் மனதினிலே
கலையழகே உமதன்பாலே
இன்ப உதயம் ஆவது போலே
இதய உறவினினாலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
(திரைப்படம்: மஹேஸ்வரி 1955)

'அமைதியான இரவில் அல்லி மலர்ந்து ஆடுதே. காரணம் ஏதோ ?' என வினவுகிறாள் காதலி. இரவில் அல்லி மலர்வதற்கான காரணத்தை அன்பு உறவின் மூலம் அழுத்தமாக எடுத்துரைக்கும் இப்பாடல், கவிஞரின் இயற்கைக் காதல்

இப்பொழுதெல்லாம் காதலியர் என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்கள் எனச் சிந்தித்தால், அதாவது நம் இன்றைய கவிஞர்கள் என்ன எழுதுவார்கள் என்றால் ... சிறந்த ஒரு உதாரணம், நம்மை எல்லாம் துள்ளி ஆட்டம் போட வைத்த 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ? ... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? ...' பாடலின்றி வேறேது !

புற அக அழகை, இயற்கையை, பண்பை, நானத்தை, பொதுவுடமையைக் காதலில் எழுதிய நம் கவிஞர், துள்ளி ஆட்டம் போட வைக்கும் காதலையும் சொல்லியிருக்கிறார். தினம் நம் வீட்டில் இன்றும் நடக்கும் சின்னச் சின்ன ஏச்சுப் பேச்சுக்களை, கொஞ்சல்களை மையமாகக் கொண்ட காதல் வரிகள். இது கவிஞரின் கிராமியக் காதல்.

உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
...
உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
கண்ணு... என் கண்ணூ.......
உன்னாட்டம் புத்திசாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..
அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே...

(திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957 )
கிராமியக் காதலின் காணொளி


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

2 comments:

  1. காதலர் தினம் ஸ்பெஷலா? வெகு ஜோர். பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் செலக்ஷனும் வெகு ஜோர்.

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே பாடல் சிறுவயதில் என் நண்பனுக்கு ஒரு நாக்குத் திருப்பான்(அதாங்க டங் ட்விஸ்டர்).
    அடுத்த வரிதான் அவனைத் திண்டாடவைக்கும்.
    நீ இளயவளா, மூத்தவளா வெண்ணிலாவே...

    இளவளயா, இள வயலா என்று எப்படி எப்படியோ பாடுவான்.... :-)

    தங்கப்பதுமை பாடலும் அற்புதம். படம்தான் தாங்காது. அதை மூன்று, நான்கு தடவை அடுத்தடுத்து பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்...

    மஹேஸ்வரி படப் பாடலைக் கேட்டதாக நினைவில்லை.

    //
    மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
    கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?//

    இந்த வரிகளும் சில கவியரசரின் பாடல்களையும் கேட்டால் எனக்கு நினைவுக்கு வருவது எப்போதோ கேட்ட பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும், அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். பிரிட்டிஷ் ஆங்கிலம் புரிவதற்கு கடினமாம் ஆனால் அழகாம். அமெரிக்க ஆங்கிலம் ரொம்ப யூசர் ஃபெரெண்ட்லியாம். அது போலத்தான் அந்தக் காலப் பாடல்களும், இந்தக் காலப் பாடல்களும்.

    இப்பாடலையும், பார்த்தேன் சிரித்தேன் பாடலின் அதிரவைக்கும் முடிவையும் கேட்டுப் புரிந்தால்தான் அதிர்வு, ஆச்சரியம், கொலைவெறி எல்லாம். இப்போதெல்லாம் ரொம்ப யூசர் ப்ரென்ட்லி. நேத்து ராத்திரி யம்மா - ஒன்றுமே புரியத் தேவையில்லை. ரெண்டாங்கிளாஸ் வாண்டு உங்களுக்கு கிளாஸ் எடுக்கும் :-)

    உன் அத்தானும் நாந்தேனே... தங்கவேலுவின் மின்னும் கண்கள் மறக்கமுடியாதவை.

    அற்புதமான பதிவு, சதங்கா.

    தொடர்ந்து கிளுகிளுப்பு பறக்கட்டும். கனலை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.... :-)

    ReplyDelete
  2. நன்றி நாகு !

    மனசுல இருக்கத கொட்டி, கடசீல அப்படியே வச்சீங்க பாருங்க கனலுக்கே ஆப்பூ .....

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!