Monday, August 29, 2011

உத்தமன் பகுதி II

எழுதியவர் s .நாகேந்திரன் , கனடா. (அவர் சார்பில் வெளியிடுபவர் - சத்யா ரிச்மன்ட் )
---------
Washington D.C., Feb 2015.


அமெரிக்காவுக்கு வந்து சில வருஷங்கள் ஆயிடுச்சுங்க. காலையில டீ குடிச்சிகிட்டே இண்டர்நெட்டை பாத்துகிட்டு இருக்கேன். அட! இன்னைக்கு அறிஞர் அண்ணாவுடைய இறந்தநாளாம். வோட்டுக்காக அவரை இன்னும் மறக்காமல், எல்லா கட்சியும் மாலை போட்டு போட்டோ எடுத்துக்கிறாங்க. எப்படிங்க மறக்கமுடியும்? இன்னும் ரெண்டு மாசத்துல election வருதுல!!! அறிஞர் அண்ணானோனே என்னையும் அறியாம இன்னொரு அன்னா நியாபகத்துக்கு வர்றாரு.

மறக்க முடியும்மாங்க அவர? அவரால என் வாழ்க்கையே வீணாபோயிருக்கும். அவர் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இணைஞ்சு பிணையும் அரசுக்கு எதிரா (ஊழழுக்கு எதிரான்னு அப்ப சொல்லிகிட்டங்க) சில வருஷம் முன்பு போராட்டம் நடத்தியபோது, நான் கூட முட்டாள்தனமா கலந்துகிட்டேன். என்னை கைது பண்ணி ஜெயில்ல போட்டுருபாங்க. அப்பாதான் யார்யார் கைகாலுல விழுந்து, என்னை காப்பாத்தி, இங்க அனுப்பிவச்சுட்டாருங்க.

இங்க வந்ததுக்கு அப்புறம் பொழப்ப பார்கணுமுல. சொந்த அண்ணனையே நினைக்க நேரம் இல்லாதபோது, இந்த அன்னா எல்லாம் எம்மாத்திரம். என்னங்க நான் சொல்லுறது சரிதானே? ஆரம்பத்துல ரொம்ப கஷ்டபட்டேங்க. ஏதோ ஒரு சின்ன ஊருல தான் வேலை கிடைச்சுது. ஒரு ஹிந்திக்காரன் கூடத்தான் தங்கவேண்டிய தலையெழுத்து. ஆனா, நான் நினைச்ச அளவுக்கு அவங்க மோசம் இல்லைங்க. எல்லா உதவியும் அவன்தாங்க செஞ்சான். நம்ப ஊருல சுயலாபத்துக்காக எல்லாத்தையும் தப்பு தப்பாவே சொல்லிகுடுத்துடான்களோ கூட தோணிச்சு. சரி சரி, அத விடுங்க, கோவபடாதிங்க.

மேற்கத்திய நாடுகள்ல ஊழல் இல்லன்னு நம்ப ஊரு பத்திரிக்கைல திரிபான்னுங்க. அத எல்லாம் நான் நம்பினதே இல்ல. சந்து கிடைச்சா சிந்து பாடுறது மனுஷ குணமுங்க. அதுல வெள்ளத்தோல் மட்டும் விதிவிலக்கா எனக்கு தோனும். அதுவும் facebook-ல, நடமாடும் economic times தோழர் சமா என்பவர், அமெரிக்காவில நடந்த housing scam, stock market scam பத்தி பிரிச்சி மேய்ஞ்ச்சிருக்காருங்க. அதுனால, காச குடுத்து காரியத்த சாதிக்க முடிஞ்சால் பண்ணிக்கவேண்டியதுதான்னு தீர்மானிச்சேனுங்க.

நம்ப ஊரு ரேஷன் கார்டு போல இங்க 'sso card' வாங்கணும். அந்த ஆபீசிக்கு போனா, அரைமணி நேரம் கூட ஆகலைங்க. form fill-up பண்ணிட்டு, document சரி பார்த்திட்டு, ஒரு வாரத்துல போஸ்ட்ல வரும்ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டாங்க. எனக்கு ஆச்சிரியமா இருந்திச்சு. bankலையும் அதே மாதிரி. ஒரு விஷயம் சொல்லனும்ங்க. இப்ப நினைச்சா கேவலமா இருக்கு. இருந்தாலும் சொல்லுறேன். இந்த சின்ன ஊருல மூணு மாசமோ, ஆறு மாசமோ. ஒரு credit card வாங்கி கண்டதையும் வாங்கிட்டு கண்ணுக்கு தெரியாம ஓடுற 'தில்லாலங்கடி திட்டத்த' அரங்கேற்றலாமன்னு நினைச்சு கேட்டு பார்த்தேன். 'credit history' இல்ல, குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். வேணும்னா ஐநூறு டாலர் deposit போட்டு அப்புறம் அதுலேர்ந்து எடுக்குற மாதிரி ஒரு கார்டு தர்றோமுன்னு சொன்னான். சரிதான் போடானுட்டேன்.

இதே கதை தாங்க எல்லா விசயத்திலும். கார் license குறுக்கு வழியில வாங்கலாமுன்னு பார்த்தா முடியல. Driving license கிடைச்ச பின்னே, கார் வாங்குறதுல sales tax ஏமாத்தலாமுன்னு பார்த்தா முடியல. கார் வாங்குனோனே, ஸ்பீடா ஓட்டி டிக்கெட் கிடைச்சு லஞ்சம் குடுத்து எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா முடியல. சரி, 'not guilty' ன்னு சொல்லி கோர்டுக்கு போயி கோக்குமாக்கு பண்ணலாமுன்னு பார்த்தா முடியல. ஸ்பீடிங் டிக்கெட் கிடைச்சதால இன்சூரன்ஸ் பிச்சுகிச்சு. அத சரிகட்ட, இன்சூரன்ஸ் agent-a தாஜா பண்ணலாமுன்னு பார்த்தா முடியல. முடியும்கிற வார்த்தையே இவனுகளுக்கு தெரியலன்னு தோணிச்சு. பிழைக்க தெரியாத கூட்டமா, இல்ல ரொம்ப நேர்மையானவன்களோன்னு முடிவு பண்ண முடியலங்க. அமெரிக்கா நல்ல மண்ணு, இந்தியா சாக்கடைன்னு தோணிச்சுங்க.

விஷயம் கொஞ்சமே தெரிஞ்சாலும், வாயால வண்ணம் பூசி, வாஷிங்டன் பக்கமா வந்து சேர்ந்தேங்க. அங்கே தான் 'self-mailee' என்று செல்லமாக அழைக்கப்படும் ஒருவரை சந்தித்தேன். அவர் பெயர் முத்து. வெளிய சொல்லாதிங்க. ரொம்ப போர் அடிச்சா அவருக்கு அவரே mail அனுப்புவாராம். அதான் அந்த பேரு! விளையாட்டு மனுசன் போங்க. அவர் மூலமாக 'சொல் கொல் வித்தகர்' சத்தியாவின் (அதாவது சொல்லில் விளையாடி, கொல்லென்று சிரிக்க வைப்பதில் வல்லவர்) அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதும் 'richmond blog'ன் தொடர்வாளனானேன். அன்னா ஹசாரே பற்றி அவர் எழுதிய பழைய பதிவு ஒன்று, எனக்குள்ளாற கேள்வியை எழுப்பியது. அதன் பிறகுத்தான் தெளிவு பிறந்தது. அன்னா ஹசாரேவின் தான்தோன்றிதனத்தை அவர் கண்டித்த பாங்கை படித்து, படிக்காத பாமரன்(அன்னா ஹசாரே) பின் நின்றேனேன்னு வெட்கபட்டேன்.

வாஷிங்டன்லயே செட்டில் ஆகலாமுன்னு முடிவுபண்ணி ஒரு 'foreclosure home' வாங்கி குடியேறினேன். 'foreclosure home' கிறது அமெரிக்காவின் ஊழல் கதைங்க. நான் முன்னாடி சொல்லல, மனுஷனாலே டகால்டி புத்தி உண்டுன்னு. கட்டுப்பாடு தளரும்போது எல்லாமே காத்துல்ல பறக்கும் போல. அப்புறம் அமெரிக்கா என்ன? இந்தியா என்ன? எல்லாம் ஒரே கருமம்தான். அதே சமயம் ஒரு சந்தேகமும் வந்திச்சுங்க. அப்ப அமெரிக்கா நல்ல பூமி இல்லையா? இங்கேயும் சில சாக்கடைகள் இருக்கும் போலிருக்கே? இந்தியாவில் இருக்கிற என் தாத்தாகிட்ட கேட்டா, எந்த பூமியா இருந்தாலும் சாக்கடை நீர் அதிகமாக சேர்ந்தால் சாக்கடைத்தானாரு பாருங்க! சாக்கடைகளை கட்டுபடுத்தினா எந்த பூமியிலயும் மாற்றம் வருமுன்னு வேற சொன்னாருங்க. சாக்கடையின்னு அவர் சொல்லுறது கொழுத்த அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளையும்மான்னு புரியலைங்க. அவர் கிடக்காரு விடுங்க. அன்னா ஹசாரே போல வயசான உலக நடப்பு புரியாத ஆளு.

வாஷிங்டன்ல பல நாட்டு நட்பு கிடைச்சுதுங்க. தமிழ்நாட்டுல உள்ள ஒரு 3,41,427 engineering கல்லூரில, ஒரு டப்பா டுபாக்கூர் கல்லூரில படிச்சிருந்தாலும், இப்ப எல்லாமே anna university என்பதால, என்னை கிண்டி எடுக்கும் கிண்டி கல்லூரி குழுமத்துல நம்ப முத்து சேத்துவிட்டாருங்க. கொடிகாத்த குமரனை போல் கொள்கை பிடிப்பான காந்தியவான் காளி, விஜயகாந்தே வெட்கப்படும் அளவிற்கு எண்களை சுழற்றும் புள்ளி விவர புலி நர்கி, எழுத்தின் காட்டத்தை பார்த்தால் சிங்கத்தின் சீற்றம் தூசு என்று எண்ணவைக்கும் சுதா,
தண்ணீர் குடிப்பதைப்போல் தமிழோடு விளையாடும் சத்தியா, அவர் phoneல அவரையே கூப்பிட்டு பேசும் முத்து, எதற்கும் complex equation தயாரிக்கும் ஐன்ஸ்டீனின் இந்நாள் பிரதிபலிப்பு algerbra (angry) அம்ரி, மேற்கத்திய ஏகாபத்தியத்தை தனி ஆளாய் நின்று கருவறுக்கும் secular சமா, அவ்வப்போது வந்து அணுகுண்டாய் வெடித்து முழங்கும் சீர்திருத்தச்செம்மல் சிவா, பட்டென்று சொன்னாலும் பொட்டில் தெரித்தாற்போல் சொல்லும் செல்லு, தெளிவாக குழப்புவதில் தேர்ச்சிபெற்ற சிங்கி, தென்றலாய் பல நேரமும் புயலாய் சில நேரமும் மாறும் அஷ்வின், வடைக்கு இடமில்லா விஷயத்தை பற்றி வருந்தி அழைத்தாலும் எழுதாத கனகு, சாரா பாலின் இல்லையென்றால் நான் சேர மாட்டேன் போடா எனும் GT, iPhoneனுடன் குடும்பம் நடத்தும் multi-processor ரமேஷ், தங்கத்தலைவன் ரஜினியின் அமெரிக்க அச்சு வெங்கி, ஆயிரம் mailக்கு ஒரு mail அனுப்பும் அல்கி மற்றும் mail-a அனுப்பாத பலருடைய கருத்துகளால் என் சிந்தை சுடர்விட ஆரம்பிச்சுதுங்க.

கிழவன் (அதாங்க அன்னா) விஷயத்தில் குழும கருத்துக்களால் நான் தெளிவடஞ்செங்க. இந்திய அரசியலமைப்பு எதிரா போராட்டம் பண்றது தப்புதானுங்களே. ஆட்சி அமைக்க குதிரை பேரம் பேசுறது, MPகளை விலைக்கு வாங்குறது, அழிச்சாட்டியம் பண்ணி வேணும்கிற துறையை மிரட்டி வாங்குறது, வழக்குகளில் இருந்து தப்ப ஆட்சிய கவுக்கிறது, சமய வெறியை தூண்டி குளிர் காயிறது, இப்படி பல விஷயங்கள் நெருடுதேன்னு தோணலாம். ஆனா, மக்கள் தேர்ந்தெடுத்தாச்சு. அப்புறம் என்னங்க தப்பு?

ஹிப்பி கிராப்போ, hypocrite ன்னு சொன்னாங்க. ஆங்.. இப்பத்தான் நியாபகம் வருது. ஒரு வேடிக்கையான character-a மறந்துட்டேங்க. நாகின்னு கனடா பக்கம் ஒரு ஆளு இருக்காராம். 2011ல அன்னாவ ஆதரிச்சாராம்.
"வேற எந்த விஷயத்துக்கு அன்னா போராடுனாரு?"ன்னு கிடுக்கிபிடி போட்டா, "பெரியார் ஜாதி வேறுப்பாட்ட களையதானே போராடுனாரு, பீகாருல பஸ்சு வரலைன்னு போராடுனாரா?"ன்னு கேட்டாராம்.

"இந்திய இறையாண்மைக்கு எதிரான போராட்டம்" ன்னு சொன்னா, "தனி நாடு வேண்டி போராட்டம், நக்சல் போராட்டம், சமய சண்டைக்கு போராட்டம், ஜாதி ஒதுக்கீடு வேண்டி போராட்டம், ஜாதி ஒதுக்கீடு வேண்டாமுன்னு போராட்டம், ஈராக், பாலஸ்தீன பிரச்சனைக்கு இங்கே போராட்டம், இப்படி பல போராட்டங்கள் மட்டும் இந்திய இறையாண்மைக்கு நல்லதா?"னாராம். "சுதந்திரத்துக்காக காந்தி நடத்திய போராட்டமும், பகுத்தறிவிற்காக பெரியார் நடத்திய போராட்டமும் அந்தந்த காலத்தில் இறையாண்மைக்கு உட்பட்டதா?"ன்னு வேற கேட்டாராம்.

"கீழிருந்து எல்லாரும் திருந்துனா, மேல தானா எல்லாம் மாறும்"ன்னு நிர்வாக படிப்பு படிச்சவங்க சொன்னா, "அதிகாரவர்க்கத்தையும் அரசியல்வாதிகளையும் கொஞ்சம் ஒழுங்குப்படுத்தினால் முன்னேற்றம் தெரியும், அது வரைக்கும் லஞ்சம் குடுக்கனும்னா குடுக்கத்தான் செய்வேன்!" என்றாராம்.

"சாமான்னிய மக்கள் உறுதியா இருந்தா போராட்டம் எதற்கு?"ன்னு கேட்டா, "உலகத்தில் நடந்துள்ள அனைத்து புரட்சிகளிலும் தலைவனில்லாமல் வென்ற போராட்டம் ஒன்றை சொல்லு?"ன்னு எதிர் கேள்வி போட்டாராம்.

"அன்னா கூட நிக்கிற சில பேர் காவி போட்டிருக்கானே? அறுந்த ராய் கூட ஆதரிக்கலையே?"ன்னு சந்தேகம் எழுப்பினா, "எல்லாத்துக்கும் ரிஷிமுலம் நதிமூலம் பார்த்தா, தப்பாத்தான் இருக்கும். கலர் கண்ணாடிய கழட்டிட்டு நல்லா பாரு, ஆர்ச் பிஷப்பும் அமீர்கானும் தான் ஆதரவளிச்சாங்க, அது கண்ணுக்கு தெரியல?"ன்னு மடக்கினாராம்.

"சரிய்யா, அன்னா போராட்டத்தால் எல்லாம் உடனே சரியாயிடுமா?"ன்னு கேட்டால், "இப்ப இருக்கிற சீரழிந்த நிலமைக்கு வர முப்பது நாப்பது வருஷம் ஆச்சு, சரியாகிறது மட்டும் ஒரே மாசத்துல நடக்குமா?"ன்னு திருப்பி கேட்டாராம்.
"நீ சொல்லுறது எல்லாம் ஒரு பேச்சுக்கு நம்புரோமுன்னே வசிக்கிக்க, ஆனா லோக்பால் committeeல வர்றவன் எல்லாம் கயவனா இருந்தா?"ன்னு மடுக்குனா, "election commission ஒழுங்கா செயல்படலையா? இவ்வளவு கட்டுப்பாட்டிலும் CBI மற்றும் பல துறையில நல்ல, நேர்மையான அதிகாரிகள் இல்லையா?" அப்படின்னு கேட்டுட்டு, "அதையும் மீறி இந்தியாவோட தலையெழுத்து அதுதான்னா யாரால என்ன பண்ண முடியும்?"ன்னு escape ஆயிட்டாராம்!
ரொம்ப லொள்ளு புடிச்ச ஆளு போல. குண்டக்க மண்டக்க பேசுறதுல சோவே சிதறி ஓடனும் போலிருக்கே! சந்தேகமே வேண்டாம். சுத்த ஹிப்பிகிராப்பு (hypocrite) தாங்க அந்த ஆளு. நல்லவேளை. இப்பலாம் அந்தாளு சத்தத்தையே காணோம்.

மொத்ததுல, எந்த அதிகாரமும் இல்லாத வர்க்கம் தானா மாறுனாதானே எல்லா அதிகாரமும் இருக்கிற வர்க்கம் பயந்து நடுங்கி திருந்தும்? சரிதானுங்களே?


அத விடுங்க, கீழிருந்து மேலன்னு சொன்னோனதான் நியாபகம் வருது. நாளைக்கு புது team க்கு leader ஆகுறேன். சுத்தமா உதவாத கூட்டமாம். ஒரு நாள் வேலைய ஒன்பது நாள் இழுத்தடிபானுங்களாம். ஆரம்பத்திலேயே strict-a இருந்தாதான் வழிக்கு கொண்டுவரமுடியும். நான் பாட்டுக்க 'bottms-up' theory-a அங்க முயற்சி பண்ணினா, என் 'bottom' ல ஆப்பு தான் இறங்கும். theory-a சோதிக்கிற தேவையில்லாத வேல எனக்கு எதுக்கு?

ஹோ.. ஏதோ flash நியூஸ் ndtvல. காவிநாயகன் கர்மாவீரன் ஜெயப்ரகாஷ் மாதிரி இருக்கு? அவரேதாங்க!!! இந்தியாவுக்கு குடும்பத்த அனுப்பிச்சிட்டு, 2011 ல அன்னாவுக்கு ஆதரவா bostonல கொடி பிடிச்சாரே. அவரேதான். இப்பவும் அன்னாவ தூக்குல போட கூடாதுன்னு இந்தியாவில போராடிகிட்டு இருக்கார்.

அட! விஷயமே தெரியாத உங்களுக்கு? 2011 ல அன்னா போராடுனத்துக்கு பணியிற மாதிரி போக்கு காட்டிட்டு, 2014ல ரூபாய் 525 ஊழல் பண்ணிடாருன்னு தூக்கு தண்டனை விதிச்சிடாங்க. இன்னும் பத்து நாளுல தூக்கு. spectrum ஊழல்ல அப்பழுக்கற்றவருன்னு வெளிவந்த புடம் போட்ட தங்கம், ஆ.ராசாவுக்கு, இன்னைக்கு பாரதரத்னா விருது குடுக்கிறாங்க. அதுக்காக இந்திய பிரதமர் ராகுல் பெருந்தன்மையோட நேரம் ஒதுக்கி கொலம்பியாவிலிருந்து வந்திருக்கார். இப்ப விட்டா எப்ப வருவாருன்னுதான், சந்தர்பத்தவிடாம கர்மாவீரன் ஜெய் கத்திகிட்டு இருக்காரு போல. அந்த stretcherல வர்றது யாருன்னு பாக்குறிங்களா? நம்ப கலைஞர் அய்யா தான். 92 வயசாவுது. கோமாவுல இருக்காரு. ரெண்டு மாவட்டம் மாயமா போன ஊழல்ல ஜெயாதான் மாட்டிகிட்டு முழிக்கிறாங்களே. ராஜபக்சவுக்கு வித்துட்டாங்கன்னு ரகசியமா பேசிகிறாங்க. மக்கள் அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டி என்ன ஏதுன்னு தெரியாம கொதிபாங்கலே? அது போல கொதிச்சு போயிருக்காங்க. அதனால கட்டாயமா அடுத்த முதல்வர் அய்யா தான்.

சரி அப்புறம் பார்போமுங்க. அடடா! இதுவரைக்கும் என் பேர நீங்க கேட்கவே இல்லீங்கலே. நான் அன்னியனுங்கோ. officeல A.N.ன்னு சொன்னதான் தெரியும். இங்க வரும்போது ஏதோ ஒரு பேரு இருந்திச்சு. இப்ப நியாபகம் இல்லீங்க. பெயர் காரணம் கேக்குரீங்களா? இந்த ஊரின் முன்னோடிகள் பார்த்து பார்த்து வகுத்த வழிமுறைகள் பெருமளவிற்கு நடைமுறைபடுத்துவதை, அலுங்காமல் குலுங்காமல் அனுபவிக்கும் அயல்நாட்டில் (இந்தியாவில்) பிறந்த அந்நியன் நான். நல்லாருக்காங்க பேரு?

கொஞ்சம் இருங்க. குழுமத்துக்கு ஒரு செய்தி வந்துருக்கு. நம்ப சத்தியாதான் அனுப்பியிருக்காரு. யாரோ இந்தியாவிலிருந்து வர்றானாம். அத பத்தி இங்க http://blog.richmondtamilsangam.org/2011/08/blog-post_25.html எழுதியிருக்காரு. அவன் பேருகூட உத்தமனாம்.

Saturday, August 27, 2011

ரிச்மண்ட் மகாத்மியம் - 1

ரிச்மண்டா? எங்கேயிருக்கிறது அது??

தொலைபேசியில் நடந்த வேலைக்கான தேர்வில் நான் கேட்ட முதல் கேள்வி. அதுவும் சற்று வடக்கே மேரிலண்ட் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு... அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு சிரிப்பு.

மேரிலண்டில் இருந்து தெற்கே எங்காவது போயிருக்கிறாயா?
போயிருக்கிறேனே. வட கரோலைனா சாபல் ஹில்லுக்கு.
அப்படியானால் நீ ரிச்மண்ட் வழியாகத்தான் போயிருப்பாய்.
மெய்யாலுமா?

அதுதான் ரிச்மண்ட், வர்ஜினியா குறித்து நான் முதலில் கேள்விப்பட்ட விதம். ரிச்மண்டில் இருக்கிறேன்  என்று சொன்னவுடன் மற்றவர்கள் கேட்டவை:

"அப்படியா. மைக்ரோசாப்டிலா வேலை உனக்கு".
"அது ரெட்மண்ட்யா, ரிச்மண்ட் இல்லை"

கொஞ்சம் விவரம் தெரிந்த கலிபோர்னியா வளைகுடா மக்கள்:
"பரவாயில்லையே, இங்க ஈஸ்ட் பே-ல தான் இருக்கியா இப்போ"
"இது ரிச்மண்ட், வர்ஜினியாப்பா, ரிச்மண்ட கலிபோர்னியா இல்லை"

ரிச்மண்ட்,வர்ஜினியா!

இந்த ஊரிலிருக்கும் இந்தியர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு தெரியாத ஊர். ஜனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அமெரிக்க பெரிய நகரங்கள் பட்டியலில் வராத ஊர்.  வேறு ஊரிலிருக்கும் நண்பர்களும், சுற்றமும் ஊரைச் சுற்றிப் பார்க்க வராத ஊர். வந்தால் எங்களைப் பார்க்கத்தான் வரவேண்டும். ஆனால் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கின்றன ரிச்மண்டும் அருகில் இருக்கும் இடங்களும்.

நான் ரிச்மண்ட் பற்றி ஒன்றும் கேள்விப்படாமல், எந்த மடமும் சொந்த மடம் என்று வாழ்ந்த நாட்களில் இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். வந்த சில நாட்களில் அலுவலகத்தில் சக ஊழியனுடன் பேச்சு இப்படி போனது.

என்னய்யா, இந்த ஊர்ல என்ன ஃபேமஸ்?

என்ன அப்படி கேட்டு விட்டாய்? இரண்டு போர்களிலும் ரிச்மண்ட் எரிந்தது தெரியுமா?

அப்படியா? முதல் போரைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டாவது போரில் இந்த நாட்டில் ஹவாயில் மட்டும்தானே குண்டு போட்டார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்குதே?

ஹவாயா? நீ எந்தப் போர்களைப் பற்றி சொல்கிறாய்?

உலகப்போர்களைத்தானே சொல்கிறாய் நீ?

இல்லையப்பா. சுதந்திரப் புரட்சிப் போர், உள்நாட்டுப் போர் (civil war) இரண்டையும் பற்றித்தான் நான் சொன்னேன்.

சுதந்திரப் போர், உள்நாட்டுப் போர் - யாரவர்?

நான் சமச்சீர் கல்வி வராத நாட்களில் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் படித்தவன். எனக்கு மூவேந்தர்களும்,  சாளுக்கியர்கள், அசோகர், ஹர்ஷர், மௌரியர்கள் தவிர வேறு எந்த சரித்திரமும் தெரியாது. அப்படியாக ஆரம்பித்தது எனது ரிச்மண்ட் வரலாறு குறித்த ஆர்வம்.

அப்படி இருந்தவனிடம் பாண்டிச்சேரியில் ஒரு முதியவர் கேட்டார்: ரிச்மண்டா - வர்ஜினியா டொபாக்கோ! என்னையும் என் பிள்ளைகளையும் அப்படித்தான் அழைக்கிறார் அவர் இன்றும். அமெரிக்க மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் மாநில சுயாட்சிகளை காற்றில் பறக்கவிட்டு லூசியானாவை வாங்கிய கதையெல்லாம் புட்டு புட்டு வைத்தார்.  வெட்கமாகப் போய்விட்டது.

மேலும் தொடரும் என்று போட ரொம்ப யோசனையாக இருக்கிறது. நம்முடைய பதிவுகளுக்கும் தொடர்களுக்கும் பொருத்தமில்லையே? :-)

சமீபத்தில் நடந்த தமிழ்ச் சங்க வனபோஜனத்தில்(அதாங்க பிக்னிக்) தலைவர் முத்து ரிச்மண்ட் குறித்து எழுதுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.  அதற்கான எனது ஆரம்பம் இது.  நான் மேலே எழுதுவதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். அனைவரையும் தங்கள் ரிச்மண்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இந்த ஊரைப் பற்றியோ, அருகில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியோ, இந்த ஊர் வாழ் தமிழர், இந்தியர் சமூக அனுபவங்களையோ எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.  வெளியே ஐரீன் அம்மா வெளுத்து வாங்குகிறார். உங்களுக்கு வேறு என்ன வேலை. எழுதுங்கள்.



பித்தனின் கிறுக்கல்கள் - 44

கண்றாவி அரசியல்


உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்கள் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கேட்ட முதல் கேள்வி, "அன்னா ஹசாரேவோட உண்ணாவிரதம் முடிவுக்கு வருமா?" அடுத்த கேள்விகள் "அவர் கேக்கரமாதிரி லோக்பால் மசோதாவை மத்திய அரசாங்கம் ஒத்துக்குமா? எப்படியாவது ஊழல் குறையுமா?" தான். இது எப்படி இருக்குன்னா சத்யா அவரோட உத்தமன் பதிவுல சொன்னது போல், நாம் எல்லோரும் சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி நம் காரியம் நடக்க தவறு செய்யவும் லஞ்சம் கொடுக்கவும் தயாரா இருக்கோம், ஆனால் யாராவது வந்து எல்லாத்தையும் நிறுத்தனும் என்று எதிர் பார்க்கிறோம்.


அன்னாவுக்கும் அவரை சுத்தியிருக்கரவங்களுக்கும், ஊழல் தப்பு, ஊழல்வாதிகளை லோக்பால், ஆவின் பால், ஆட்டுப் பால், மாட்டுப்பால்ன்னு ஏதாவது ஒன்னுல பிடிச்சு போடனும், அதுல இந்தியாவில இருக்கர எவனாயிருந்தாலும், ஊழல் பண்ணினா தண்டனை சீக்கிரம் தரப் படனும். இதுக்கு தமிழ்நாடு உட்பட ஆயிரக்கணக்கானவங்க சேர்ந்து குரல் கொடுக்கராங்க அதை பத்தி யாராவது எதாச்சும் எவனாவது சொன்னான் செத்தான். நம்ம சத்யா அதை காரசாரமா விமர்சிக்க, குயில், நாகுன்னு ஆளாளுக்கு தர்ம அடி போட, அவர் பாவம் காமெடியா ஒரு பதிவு போட்டு ஒப்பேத்தியிருக்கார். அதையும் தாண்டி இந்தப் பதிவுக்காக யார் எம்மைத் திட்டினாலும் எமக்குக் கவலையில்லை.


இப்படிப் பட்ட காமெடி இந்தியா முழுக்க நடைபெறும் அதே சமயம், இந்தியாவில தமிழ்நாட்டுல இந்தியாவோட முன்னால் ப்ரதமரையும் இன்னும் பல பேரையும் குண்டு வெச்சு கொன்னவங்களுக்கு உதவியா இருந்தவங்கன்னு பல பேரை கைது பண்ணி பல வருஷங்களா அவங்களை விசாரணை பண்ணி கோர்ட் தூக்கு தண்டனை கொடுத்து அது பலப் பல வருஷங்களா கிடப்புல இருந்து சமீபத்துல அந்த முக்கிய மூன்று குத்தவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேத்த முடிவு எடுத்ததுக்கு தமிழ்நாட்டுல இருக்கர அத்தனை பைத்தியங்களும் எதிர்க்க ஆரம்பிச்சுருக்குங்க. இதுனால தமிழ்நாட்டு பேர் கெட்டுப் போயிடும்ன்னு பயமா, இல்லை தமிழ்காரன் என்ன வேணா செய்யலாம் ஆனா அவனை தூக்குல போடக் கூடாதுன்ற லாஜிக்கான்னு தெரியலை. அவங்க மூனு பேரும் தப்பே செய்யலைன்னு யாரும் வாதாடலை, அவங்க தவறா கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு தண்டனைத் தரப் படுகின்றனர் என்று அந்த மூன்று பேரைத் தவிர யாரும் சொல்லவில்லை. சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு குற்றம் என்பது மிக மிக சீரியஸான ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இலங்கையில் பலப் பலத் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இந்த மூன்று பேரையும் தமிழ்நாட்டில் தூக்குல போடக் கூடாதாம். இதில் என்ன லாஜிக் என்று நாம் கேட்கப் போவதில்லை. லாஜிக் என்ற ஒன்றை எதிர்பார்த்தால் இப்படிப் பட்ட பைத்தியங்களை பேச விடுவோமா? நேற்று, முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களை 'மறப்போம் மன்னிப்போம்' ரீதியில் மன்னிப்பதுதான் மனிதாபிமானம் என்று உளறியிருக்கிறார். இந்த விஷயத்தில் இதுவரை உளறாமல் இருப்பது செல்வி ஜெயலலிதா மட்டுமே. பத்தாயிரம் பயித்தியங்களுக்கு நடுவில் இவர் மட்டும் எத்தனை நாள் தெளிவாக பேசிக்கொண்டிருக்க முடியும் என்பது தெரியவில்லை.


ஊழலைத் தடுக்கரது மட்டும்தான் அன்னாவுக்கு முக்கியம். அதே சமயம் குண்டு வெச்சு மக்களைக் கொலை செஞ்சா வெறும ஆயுள் தண்டனைதான் கொடுக்கனும். பாராளுமன்றத்தைத் தாக்கினால் மன்னிக்கனும், தீவிரவாதம் செஞ்சுகிட்டே இருக்கரவங்களை பார்த்து பரிதாபப் படனும் காரணம் இவங்களுக்கு வேலையில்லை வேலையிருந்தா இதச் செய்ய மாட்டாங்கன்னு சால்ஜாப்பு மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்வார், அதையும் மீறி மாநிலங்கள்ல தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் செஞ்சா அது அந்த மாநிலத்தோட பொறுப்புன்னு அவரே பொறுப்பில்லாம பதில் சொல்வார். மும்பய்-ல ஒரு ஹோட்டல்ல தீவிரவாதிகள் தாக்கி பல வெளிநாட்டவர்கள் உட்பட பலர் இறந்த பிறகு பிடிபட்ட ஒருவனுக்கு தினமும் 1-3 கோடி ரூபாய் செலவு செஞ்சு அவனைத் தூக்குல போடாம இருப்போம் இந்த விஷயத்துல மக்களுக்கு மனிதாபிமானம் வேணும். இப்படிப் பட்ட கேணத்தனமான டயலாக்கை கேக்கனும், அன்னாவுக்கும் ஜே போடனும், இந்த ரெண்டுல எதை கேள்வி கேட்டாலும் அடிப்பாங்க.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Thursday, August 25, 2011

ஊழலை ஒழிக்க விரும்பும் உத்தமன்


சார், என் பேரு உத்தமன். நல்லா படிச்சு இன்ஜினியரிங் காலேஜில படிச்சிட்டு சாப்ட்வேர்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கிறேன். தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்த ஊழல். ஆங்கிலத்துல corruption. இந்த அரசியல்வாதிகளும், போலீஸ்காரங்களும், அதிகாரிங்களும் ஊழல்ல எவ்வளவு தூரம் மோசமா இருக்காங்கன்னு நினச்சா என் ரத்தம் கொதிக்கும் சார். உங்களுக்கும் அப்படித்தானே?

காலையில வேலைக்குக் கிளம்பிகிட்டு இருக்கிறேன். முக்கியமான ஒரு onsite call இருக்கு. இன்னும் அரை மணி நேரத்துல போயாகணும். பைக்க எடுத்துட்டுக் கிளம்பினேன். இந்த எளவெடுத்த டிராபிக்ல சரியான நேரத்துக்குப் போக முடியுமா? சிக்னல்ல நின்னுகிட்டே இருக்கிறேன். தூரத்தில பார்த்தா, ஒரு டிராபிக் போலீஸ்காரன் ஒரு லாரி டிரைவர்கிட்ட ஓவர் லோடு கொண்டு வந்ததுக்காக வாதாடிகிட்டு இருக்கிறான். லாரி டிரைவர் ஒரு சின்ன புத்தகத்துல ரூபா நோட்டு வச்சு நைசா கையில குடுக்கிறான். அத வாங்கிட்டு அவன அந்த போலீஸ்காரன் சும்மா விட்டுருறான். பார்த்து இந்தியன் சினிமால வர்ற மாதிரி அவன் நரம்பிலேயே போடணும்னு தோணிச்சு. ஆத்திரத்த அடக்கிட்டு போயிகிட்டே இருந்தேன். அப்போதான் டைம் பார்த்தா இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்குது. ராயப்பேட்டை ஹை ரோடு பக்கத்துல ஒரு one way ரோடு இருக்கு, எதிர் பக்கம் தான், ஆனா போலீஸ் எப்பவாவதுதான் வருவான், அப்படியே பிடிச்சாலும் ஒரு 50 ரூபா விட்டெறிஞ்சா விட்டுருவான். ஒரு ரிஸ்க் எடுத்து போயிட்டேன். நல்ல வேளைக்கு, ஒருத்தனும் பாக்கல. ஒரு வழியா மீட்டிங் கரெக்ட் டயத்துக்குப் போயிட்டேன்.

ஒரு வழியா மீடிங்க முடிச்சுட்டு, லஞ்ச் பொன்னுசாமிக்கு ரெண்டு மூணு பேரோட கிளம்பினோம். ஒரு onsite ட்ரிப்புக்கு வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சதும் பசங்க ட்ரீட் கேட்டானுங்க. சரின்னு கண்டபடி ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். சாப்பிடும்போது அரசியல் ஊழல்தான் ஹாட் டாபிக். நேர்மைங்கிறது அரசியல்லயும், அரசாங்க உத்யோகத்திலையும், காவல் துறையிலயும் இல்லாம போனதுனாலதான் நம்ம நாடே குட்டிச் சுவராச்சுன்னு பேசிக்கிட்டோம். கடைசியில பில்லப் பார்த்தா, ரெண்டு சைடு ஐட்டத்தோட பில் மிஸ்ஸிங். நாங்க தீவிரமா யோசிச்சோம். நமக்கு எப்படியும் எம்பது ரூபா லாபம், அதனால சர்வருக்கு பத்து ரூபா எக்ஸ்ட்ரா டிப் குடுக்கலாம்னு தீர்மானிச்சோம். டிப்ப வாங்கும்போது சர்வரோட முகத்தில என்ன ஒரு சந்தோஷம்? எங்களுகெல்லாம் ரொம்ப திருப்தி சார்.

திரும்ப ஆபீஸ் போயிட்டு மத்தியானம் கொஞ்சம் வேல செஞ்சேன். பிறகு sanjose - ல இருக்கிற என் friend கிட்ட அமெரிக்கா போற விஷயமா பேசணும். onsite -ல மீட்டிங்குக்காக ஆபீஸ் போன்-ல ISD call ப்ரீ. அதனால அதில இருந்தே கூப்பிட்டுட்டேன். அனாவசியமா ஏன் செல் போன் பில்ல நிமிஷத்துக்கு 7 ரூபா 20 பைசா ஏத்தணும்?

வெள்ளிக் கிழமை வந்தாச்சு. கொண்டாட்டந்தான். முதல்ல படம். அப்புறம் ஒரு தண்ணி பார்ட்டி. சத்யம்ல பாக்கலாம்னு பிளான். நெட்ல டிக்கெட் புல். நேர தேட்டர்லயே வாங்கிரலாம்னு பிளானு. அம்பது ரூபா டிக்கெட் வெறும் முன்னூறு ரூபாக்கி கிடச்சுது. லபக்குனு நாலு டிக்கெட் ஆயிரம் ரூபான்னு பேரம் பேசி எரநூறு ரூபா மிச்சம் பண்ணிட்டோம். அடுத்து நண்பர்களோட பார்ட்டி. ஸ்காட்ச் விஸ்கி பப்ளிக்கா வாங்க முடியாது. பார்சன் காம்ப்ளக்ஸ்ல ஒரு இடத்துல ரகசியமா கிடக்கும். வாங்கிட்டு வந்து ஒரே கூத்து.

சனிக்கிழம காலையில எந்திச்சு இன்னிக்கு நகக்கட போகலாம்னு ஒரு ஐடியா. ஒரு நண்பனோட கல்யாணம் அடுத்த வாரம். மோதிரம் வாங்கணும். பாண்டி பஜார் போனேன். ஒரு பக்க ரோடு முழுவதும் பிளாக் பண்ணி கார் பார்க்கிங் ஏரியா செட் அப்பு பண்ணி இருக்கானுங்க இந்த ஏரியா பெருந்தலங்க. பணம் கொழுத்த பசங்க. ஆளுங்கட்சிக்கு லஞ்சம் குடுத்து ஒன்வே அனுமதி வாங்கிட்டானுங்க. இதனால பஸ்செல்லாம் சுத்திப் போகணும். கடையில நுழைஞ்சி ஒரு நல்ல ஐட்டம் செலக்ட் பண்ணினேன். கடைசியில estimate -ன்னு சொல்லி ஒரு சீட்டு காட்டுனானுங்க. வருமான வரி கட்டாம இருக்க என்னல்லாம் அயோக்கியத்தனம் பண்றானுங்க? மோதிரம் 15 ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்ட் நீட்டினேன். அப்ப அந்த ஆளு சொன்னான், சார், கிரெடிட் கார்டு குடுத்தா நாங்க சேல்ஸ் டாக்ஸ் 750 ரூபா சார்ஜ் பண்ணுவோம்னு, அது வேண்டாம்னா கேஷ் குடுங்கன்னு சொன்னான். நானும் பாத்தேன். 750 ரூபா சும்மா குடுக்க நான் என்ன இளிச்ச வாயனா? உள்ளயே வசதியா ATM வச்சிருக்கானுங்க. எடுத்துக் குடுத்து ஒரு வழியா வெளிய வந்தேன்.

கலிபோர்னியா நண்பன் மூலம் ஒரு H1 பண்ணி, அமெரிக்கா போறதுக்கு ஏற்பாடு பண்ணனும். டக்குனு போகணும்னா இப்ப இருக்கிற கம்பனில விட மாட்டனுங்க. ஏதாவது பொய் மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்துதான் ரிலீவிங் லெட்டர் வாங்கணும். முதல்ல பாஸ்போர்ட் வாங்கணும். அவசரமா போறதுனால தக்கல்லதான் வாங்கணும். அதுவும் தெரிஞ்சவங்க மூலம் போயி காசு கீசு குடுத்தாதான் உடனே வேலை நடக்கும். அங்க இருக்கிற ஆபீசர் எல்லாருமே பெரிய லஞ்சப் பேர்வழிங்க, நடுத் தெருல வச்சு சுடணும் சார். என் கூட வேலை பாக்கிற ஒருத்தனோட அப்பாவோட நண்பர் மூலமா கொஞ்ச காசு குடுத்து ஏற்ப்பாடு பண்ணியாச்சு. 2 வாரத்துல கிடச்சுரும்னு சொன்னாங்க.

வெளிநாடு போனா இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. என்கிட்டே லோக்கல் லைசென்சே கிடையாது. அத முதல்ல வாங்கணும். RTO ஆபீஸ் பக்கம் போனேன். உலக மகா திருட்டுப் பசங்க சார். எத எடுத்தாலும் ஒரு புரோக்கர் மூலம் லஞ்சம் குடுத்தாதான் காரியம் நடக்கும்னு சொன்னாங்க. சௌதி மாதிரி இவங்கள நாடு ரோட்டுல கட்டி வச்சு கல்லால அடிச்சாதான் சார் நாடு உருப்படும். அப்புறம் விசாரிச்சப்ப, பாரம் வாங்கி நாமளே பண்ணுனா மாசக் கணக்குல ஆகும், சில சமயம் கெடக்காமயே போயிடும்னு கேள்விப்பட்டேன். ஒரு ஆளப் புடிச்சேன். அப்பதான் தெரிஞ்சுது, நம்ம பேரு ரேஷன் கார்டு, சொந்த ஊருல இருக்குது, மெட்ராசுல வாங்க முடியாதுன்னு. அந்த புரோக்கர் கொஞ்சம் காசு கூட குடுத்தா போதும், எல்லாம் சமாளிச்சு டெஸ்டே பண்ணாம வாங்கிரலாம்னு சொன்னான். நானும் பாத்தேன், நமக்கு இருக்கிற அவசரத்துல உடனே கிடைச்சாதான் உபயோகம்னு. அவன் கேட்ட 5000 ரூபாயக் குடுத்து ஒரே வாரத்துல லைசென்ஸ் வாங்கியாச்சு, உண்மையிலயே பயங்கர ஆச்சரியம் சார்,.

வெளி நாட்டுக் கனவுகளோட ராத்திரி வெளியில சாப்பிடப் போனேன். அப்போ இந்த கையேந்தி பவன் வண்டிகள் பக்கத்துல போலீஸ் பாட்ரோல் வண்டி நிப்பாட்டி மாமூல் வாங்கிட்டுப் போறதா பாத்தேன். வெக்கங் கேட்ட பொழப்பு சார் இது, இப்படி கண் முன்னாடி கூசாம லஞ்சம் வாங்குறானுங்க.

மறுநாள் திடீர்னு ஊர்ல இருந்து போனு. பாஸ்போர்டுக்கு verification பண்ண வீட்டுக்குப் போலீஸ்காரர் வந்திருக்கார். நான் இல்லன்ன உடனே அவர வந்து பாக்கச் சொல்லிட்டுப் போயிட்டார். டக்குனு எப்படி ஊருக்குப் போகுறது? அப்ப பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு, போலீஸ்காரர பாத்து 250 ரூபா கொடுத்தா போதும், verification ரிப்போர்ட் குடுத்துருவாருன்னு. நானும் அப்பாக்கு போன் பண்ணி, நான் ஊருக்கு வந்தா ஆயிரம் ரூபா கிட்ட செலவாகும். பேசாம 250 ரூபா குடுத்து மேட்டர செட்டில் பண்ணிருங்கன்னு. ஒரு வழியா பாஸ்போர்ட் ரெண்டே வாரத்துல வந்துருச்சு. ஒரு பெரிய தலைவலி தீந்துது.

மெட்ராஸ்ல எங்க பாத்தாலும் ரியல் எஸ்டேட் டிமாண்ட் சார், எங்க பாத்தாலும் அரசியல் வாதிகளும் ரௌடிகளும் எடத்த வாங்கிப் போட்டுட்டு வேலைய ஏத்திட்டானுங்க. பல இடங்கள்ள இவனுங்களுக்குக் கமிஷன் குடுக்காம எடமே வாங்க முடியாது. கலி முத்திப் போச்சு, இவனுங்கள மாதிரி திருட்டுப் பசங்களால ஒலகமே கொஞ்ச நாள்ல அழிஞ்சாலும் ஆச்சரியப் படரதுக்கில்ல. மெட்ராஸ்ல மதுர வாயல் தாண்டி ஒரு ப்ளாட்டு வாங்கலாம்னு பிரெண்டு ஆலோசன சொன்னான். நானும் போய் பார்த்தேன். 2 கிரௌண்டு நிலம், எட்டு லட்ச ரூபாக்கி தரதா புரோக்கர் சொன்னான். ஓரளவுக்கு நல்லா ரேட்டுன்னு பட்டுச்சி. registrar ஆபீஸ்ல ஸ்டாம்பு பத்திரம் வாங்கும்போது வெறும் ரெண்டு லட்சத்துகே முடிச்சிட்டோம், இல்லாட்டி ஸ்டாம்பு செலவே இன்னும் 60000 ரூபா ஆயிருக்கும், அந்த புரோக்கர் ரொம்ப வெவரம் தெரிஞ்சவன் சார், எல்லாம் கரெக்டா பண்ணி நல்லா காசு மிச்சம் பண்ணிக் குடுத்தான், நானே அவனுக்குக் கமிஷன் மேல 5000 ரூபா போட்டுக் குடுத்தேன்னா பாத்துக்கோங்களேன்.

பேப்பர்ல எங்க பாத்தாலும் ஊழல் நியூஸ். 2G ஊழல்ல ஒரு லட்சம் கோடின்றாங்க, சுரங்கதுல 1500 கோடின்றாங்க. கோடிக்கேல்லாம் ஒரு மரியாதையே போச்சு. இந்த அரசியல் வாதிங்கள எதிர்க்க நாதியே இல்லையா சார்? டிவி பாக்கவே வெறுப்பா இருக்கு.

ஒரு வழியா அமெரிக்கா ப்ராஜெக்ட் confirm ஆயிடுச்சு. ஊருக்குப் போய் எல்லாம் ஏற்பாடு பண்ணனும். கிரெடிட் கார்டுல கண்ணா பின்னான்னு துணி பற்றும் பொருட்கள் வாங்குனேன். வெளி நாடு போயிட்டு மெதுவா அடச்சிக்கலாம். அப்படியே குடுக்காட்டி குடியா முழுகிரும்? திருட்டுப் பசங்க எவ்வளவு வட்டி வசூல் பண்ணி இருப்பானுங்க?

ஊருக்கு ட்ரைன்ல போகணும், தக்கல்ல கூட டிக்கெட் கிடக்கல. நேரா ரயில்வே ஸ்டேஷன் போய் என் நண்பனோட மாமா அங்க இருக்கார், போய் பார்த்தேன். emergency quota - ல உடனே வாங்கிக் குடுத்தார். தங்கமான மனுஷன். பணம் முன்ன பின்ன ஆனா என்ன சார், அவசரத்துக்கு ஊருக்குப் போக முடியறது எவ்வளவு பெரிய விஷயம். இந்த ரயில்வேஸ் ஆனா ரொம்ப மோசம் சார், இவ்வளவு பெரிய ஒரு நிர்வாகத்துல எவ்வளவு ஊழல்? இத்தன வருஷத்துல மெட்ராஸ் to மதுரை ரெண்டு வழிப் பாதை இன்னும் போடல. காச எல்லாம் என்னதான் பண்றானுங்க?

ஊருக்குப் போகறதுக்கு முன்னால இன்கோமே டாக்ஸ் file பண்ணனும். ஒரு Auditor - ஐப் பார்த்தேன். அவர் சொன்னாரு, நீங்க கவலை படாதீங்க தம்பி, deduction எல்லாம் ஏதாவது போட்டு டாக்ஸ் வராம பாத்துகிடுரேன்னு. பயங்கர புத்தி சாலி சார், என் நண்பர்கள் எல்லாருமே இவர் கிட்டதான் போவோம்.

ஊருக்குப் போக இன்னும் ஒரு மாசம் இருக்கு. இப்போ ஒரே பரபரப்பு, அன்னா ஹசாரே - ன்னு ஒரு பெரியவர் ஊழலுக்கு எதிராகப் போராடிகிட்டு இருக்கிறாருன்னு. கேட்ட உடனே எனக்குள்ள ஒரு உத்வேகம். இந்த அரசியல்வாதிகள் நாட எப்படியெல்லாம் ஊழல் பண்ணி சீரழிச்சு வச்சிருக்காங்கன்னு. ஜன லோக் பால ஆதரிச்சு, அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்த என் நண்பர்கள் எல்லாரும் ஒரு ஊர்வலமா போறாங்க சார், நானும் போறேன் சார். நீங்க?





Friday, August 19, 2011

தடியால் அடித்துப் பழுக்க வைக்க முயற்சிக்கும் அண்ணன் ஹசாரே

தடியால் அடித்துப் பழுக்க வைக்க முயற்சிக்கும் அண்ணன் ஹசாரே

இந்திய அரசியலை கிட்டத் தட்ட இந்திராவின் மறைவிற்குப் பின்னர் இருந்து பின் தொடர்ந்து வரும் நான் இந்த வருடத்திற்கு முன்பு இந்த அன்னா ஹசாரே என்ற மனிதரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. அதனால் யாரய்யா இந்த மனுஷர் என்று ஒரு வியப்பு. நம்முடைய அறிவின்மையா என்ற தவிப்பு.

விக்கிபீடியா உதவியோடு சில தகவல்களைப் படித்தேன். இவைதான் இவரது சரித்திரத்தின் சுருக்கம்
  • வயது 74
  • படிப்பு 7 - ஆம் வகுப்பு
  • உத்தியோகம் - 15 வருட ராணுவ சேவை - 38 வயது வரை
  • திருமணம் - இல்லை
  • முந்திய சாதனைகள்
    • ரலேகன் சித்தி என்ற இவரது வறண்ட கிராமத்தை ஒரு சொர்க்க பூமியாக மாற்றியது
      • நிலத்தடி நீர் சேமிப்பு
      • பால் உற்பத்தி
      • மதுவிற்கு எதிரான போராட்டம்
      • தானிய வங்கி
      • கல்யாணங்களை ஒன்று கூடி நடத்தி செலவு குறைத்தல்
      • கிராம சபா
    • ஊழல் ஒழிப்பு
      • 1991 - BVJA அமைப்பு மூலம் போராட்டம்
      • 1997 - மின் கைத்தறி ஊழலுக்கு எதிரே மகாராஷ்ட்ராவில் போராட்டம்
      • 2003 - காங்கிரஸ் மந்திரிகளுக்கு எதிராக உண்ணா விரதப் போராட்டம்.
2003 -க்குப் பின் ஊழல் எதிர்ப்பில் இவர் எதுவும் செய்ததாக ஒன்றும் தகவல்கள் இல்லை. "Rip van winkle " போல திடீரென்று எழுந்து கொண்டு 2011 -ல் இந்தியாவின் தலையாயப்(??) பிரச்சினையான ஊழலை ஒழித்தே தீர்வதென்று இவர் சபதம் எடுத்துக் கொண்டு அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார்.

இந்தியாவில் ஊழலின் அளவு காலத்திற்கு ஏற்றவாறு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த காலத்தில் 176000 கோடிகள் அடிக்க வாய்ப்பு இல்லை, இருந்திருந்தால் அப்போதும் அடித்திருப்பார்கள்.

லோக்பால் - இது இந்தியாவின் அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுமா? ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல், ராஜீவ் காந்தியின் போபோர்ஸ் ஊழல் அப்போதெல்லாம் இவர் எங்கிருந்தார்?

ஏன்? போன மாதம் 1500 கோடி ஊழல் செய்து கையும் களவுமாகப் பிடி பட்ட போதும் ராஜினாமா செய்ய மறுத்த பிஜேபி முதல்வர் எத்தியூரப்பவைக் கைது செய்யவோ டிஸ்மிஸ் செய்யவோ இவர் போராட்டம் நடத்தவில்லையே? மகராஷ்டிரா மட்டும்தான் இவரது குறிக்கோளா?

இந்தியாவை எதிர் நோக்கி இருக்கும் அண்டை நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியில் மீடியா உதவியோடு இந்திய அரசாங்கத்தின் உறுதியைக் குலைக்க இறங்கி இருக்கும் இவரது நோக்கங்களுக்குத் தெளிவான பின்னணிகள் இல்லை. இந்த ஆட்சி பொய் இன்னொருவர் வந்தாலும் இதே கதிதான்.

தடியால் அடித்துப் பழுக்க வைக்க முடியாது. லோக்பால் அமைத்தால் அந்த குழுவை குட்டிச் சுவராக்கும் வழிகளில் அரசியல்வாதிகள் இறங்குவார்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் படிப் படியாகவே செயல் படுத்த முடியும். எதை எடுத்தாலும் உண்ணாவிரதம் மூலம் பயமுறுத்தி சாதிக்க நினைக்கும் இந்த முயற்சி வெற்றி பெறப் போவதில்லை.

Monday, August 01, 2011

திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ்

திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ் - திரும்பிப் பார்ப்போம்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் திரு பாக்யராஜ் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை நிரந்தரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. நான் சிறு வயதில் இருந்தே - சுமார் 1980 இருக்கும், பாக்யராஜின் ரசிகன். அப்போது என்னை மிகவும் கவர்ந்தது அவரது பெரிய கண்ணாடியும், நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகள்தான்.. எனக்கு நண்பர்கள் அனுப்பும் பொங்கல் வாழ்த்துக்களில் பாக்யராஜ் படம் இடம் பெற்றிருக்கும். அது போக அந்த கால கட்டத்தில் கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கு மிகப்பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாகச் செய்தவர்கள் இவர் மற்றும் T .ராஜேந்தர் மட்டுமே. திரைக் கதையின் பிரம்மா மற்றும் ஜனரஞ்சக இயக்குனர் என்று அழைக்கப் பட்ட இவர், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற அடைமொழியையும் பெற்றார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகத் தொடங்கி, அவர் படங்களிலேயே கதை, வசனம் எழுதி நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். சிகப்பு ரோஜாக்களில் சர்வராக ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர், பதினாறு வயதிலே படத்தில் மஞ்ச குளிச்சு என்ற பாடலில் தலை காட்டி இருக்கிறார். புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் அந்த படத்தில் சொந்த குரலில் பேசாததால் இப்போது அந்தப் படத்தைப் பார்த்தால் சற்று ஏமாற்றமாக இருக்கும். புதிய வார்ப்புகளில் இவர் கையைத் தட்டிப் பாடும் வான் மேகங்களே பாட்டு, இன்றும் இனிமை. ராஜேஷ் மற்றும் வடிவுக்கரசி நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில், இவர் கதை வசனம் எழுதி வில்லனாக நடித்தார்.

சிறிய முடிச்சுக்களை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பிரதானமாக்கிப் படங்கள் எடுப்பதில் வல்லவர் இவர். நகைச்சுவையைப் படம் முழுவதும் இழைய விட்டிருப்பார். பெரும்பாலும் திரைக்கதை மற்றும் வசனங்களைப் படப்பிடிப்பு அன்று மாத்திரமே முடிவு செய்து காட்சிகளை எடுப்பார். உதாரணமாக அந்த ஏழு நாட்கள் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் தாழ்ப்பாள் இல்லாத குளியல் அறையில் வெளியே காஜா செரிப்பைக் காவலுக்கு நிறுத்தி விட்டு உள்ளே செல்வார். பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்திருப்பார். அதற்குரிய சாவு மேளங்கள் அப்போது தொடங்கும். இசையில் ஆர்வம் கொண்ட காஜா ஷெரிப் மேளம் கேட்டவுடன் ஆட்டம் போட்டுக்கொண்டே இழவு வீட்டுக்குப் போய் விடுவார். அப்போது அம்பிகா கதவைத் திறந்து பெரும் களேபரமாகி, பாக்யராஜ் கடுப்பின் உச்சக்கட்டத்தில் காஜா ஷெரிப்பை நடு ரோட்டில் வைத்துக் கும்முவார். இந்தக் காட்சி அமைத்த நாள் அன்று பாக்யராஜ் படபிடிப்புக்குப் போகும் வழியில் ஒரு சாவு மேளத்தைப் பார்த்திருக்கிறார். அந்த சூழ்நிலையில் உதித்த காட்சி இது.

தன்னுடைய படங்களில் தானே கதாநாயகனாக நடித்து அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதை இவரது வலிமையாக மாற்றினார் . சுமதி, சுலக்க்ஷனா, பிரவீணா, பூர்ணிமா ஜெயராம், ஊர்வசி, அம்பிகா போன்ற பல்வேறு நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குடும்ப சூழ்நிலைகளை அனுசரித்து உண்டாக்கிய, நகைச்சுவை கலந்த காதல் கதைகள் இவரது பெரும் பலமாக இருந்தது. பொய் சாட்சி, விடியும் வரை காத்திரு போன்ற படங்கள் சற்று மாறுபட்டிருந்தன. திரைக்கதை மற்றும் நகைச்சுவையை மாத்திரமே கொண்டு "இன்று போய் நாளை வா" திரைப்படத்தை வெளியிட்டார். மௌன கீதங்கள் மற்றும் முந்தானை முடிச்சு படங்களில் வந்த இரட்டை அர்த்த வசனம் மற்றும் முருங்கைக்காய் சமாசாரங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இவரது படங்களில் அவை தொடர்ந்து, தனி முத்திரை பெற்றார். (அதனால் இவர் படங்கள் பார்க்க வீட்டில் தடை விதிக்கப் பட்டது என்பது வேறு விஷயம். முந்தானை முடிச்சு படம் நாளை கடைசி என்று போஸ்டரில் ஒட்டிய பின், வீட்டில் அழுது புரண்டு படம் பார்க்க சம்மதம் வாங்கியது ஒரு பெரிய சாதனை)

முந்தானை முடிச்சின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு, அந்த அளவுக்கு எதிர்பார்ப்பைச் சமாளிப்பது பாக்யராஜ்க்குப் பெரும் சவாலாக அமைந்தது. அடுத்து வந்த தாவணிக்கனவுகள் அந்த அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. சின்ன வீடு படம் நகைச்சுவை இருந்தாலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன் பின் இந்தியில் சில முயற்சிகள் செய்தார். பின்பு 1987 -ல் வந்த எங்க சின்ன ராசா நன்றாக ஓடியது. இந்த சமயத்தில் MGR அபிமானியான இவர் சிறிது அரசியல் சாயம் பூசினார். அடுத்து வந்த இது நம்ம ஆளு படத்தில் ஜாதி வேறுபாட்டை மையமாக்கினார். இதன் பின்பு வந்த எந்தப் படமும் பரபரப்பாக பேசப்படவோ ஓடவோ இல்லை. இவரது வலிமை இவர் கதா நாயகனாக நடிக்கும் படங்களாகவே இருந்ததால், மற்ற நடிகர்களை வைத்து இவர் முயற்சி செய்யவே இல்லை. இவர் கதாநாயகனாக நடிப்பது சிரமம் மற்றும் மாறி வரும் ரசனை ஆகிய சூழ்நிலைகளில் இவரது திரைப்பட எதிர்காலம் கேள்விக்குறி ஆனது.

விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற திரைப்படத்தை நடிக்காமல் இயக்க மட்டும் செய்தார். படம் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றாலும், மாறி விட்ட ரசிகர்களின் மனதில் இது பழைய திரைப்படம் போல் நடிகர்/நடிகையர், திரைக்கதை, காட்சி அமைப்புகள் இருந்ததால் சரியாக ஓடவில்லை. தன் மகளை நாயகியாக வைத்து இயக்கிய "பாரி ஜாதம்" சுமாராக ஓடியது. பின்பு மகனைக் கதாநாயகனாக வைத்து வந்த சித்து+2 ஓடவில்லை.

இவரது படங்களில் காட்சிகளில் உள்ள நகைச்சுவை போக, இவரது நடனம் கூடுதல் நகைச்சுவையைத் தரும். இவரது நடன அசைவுகள் உடற் பயிற்சி ஆசிரியர்களை வெட்கப்பட வைக்கும். அழகிய விழிகளில், அந்தி வரும் நேரம் போன்ற பல பாடல்கள் இவரது நடனத் திறமைக்குச் சாட்சி.

பாக்யராஜின் திரைக்கதை எழுதும் திறமையும், அவரது நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகளும் அவருக்குத் தமிழ் திரை உலக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தை அளித்துள்ளன. இவரது உதவி இயக்குர்கள் பலர் திறமை வாய்ந்தவர்கள். பார்த்திபன், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் இவரது பள்ளியில் பயின்றவர்கள். இனி, அவர் இயக்கிய படங்களை வேகமாக ஒரு பார்வை பார்ப்போம். பாடல்களின் youtube இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளது..

இவர் முதலாவதாக இயக்கிய சுவரில்லாச் சித்திரங்கள் படத்தில் காஜா ஷெரிப் காஜா போடும் தையல் கடைச் சிறுவனாக வந்து காஜா என்ற அடை மொழியைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கவுண்டமணி மற்றும் கல்லா பெட்டி சிங்காரத்தின் நகைச் சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. காதல் வைபோகமே என்ற பாட்டு மலேசியா வாசுதேவனின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாக்யராஜ் சுதாகருடன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சுமதி அறிமுகமானார். பாமா ருக்மணியில் இரண்டு பெண்டாட்டி கதையில் நடித்து இயக்கினார்.. இதில் இவருடன் நடித்த நடிகை ப்ரவீனாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பாமா ருக்மணியில் வந்த "நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்" பாட்டு கேட்க இப்போதும் சுவை.

ஒரு கை ஓசை திரைப் படத்தில் ஊமையாக நடித்திருந்தார். இந்தப் படம் நன்றாக ஓடியதா என்ற விபரம் தெரியவில்லை. இதற்கு அடுத்து வந்த "இன்று போய் நாளை வா" ஒரு மறக்க முடியாத படம். முழு நீள நகைச்சுவைப் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு மட்டுமே சேரும். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே சில பக்கங்கள் எழுதலாம். இந்தப் படத்தில் இவரது நண்பர் வெங்கட்டாக நடித்த பழனிசாமி பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கல்லா பெட்டி சிங்காரம், இந்தி பண்டிட்டாக வரும் ஜான் அமிர்தராஜ், காந்திமதி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்து இப்படத்தில் வந்த சில காட்சிகள் இன்னும் நம் மனதை விட்டு அகலாது. இந்தி பண்டிட் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகதாதா" என்று சொல்லிக் கொடுக்கும் காட்சி அரங்கங்களை அதிர வைக்கும். வெங்கட் குஸ்தி கற்பது, பாக்யராஜ் கழுதையின் கயிறை விட்டு விட்டுத் துரத்துவது , ராஜேந்திரன் காந்திஜி உச்சரிக்க முடியாமல் தூணில் இடி வாங்குவது, கல்லா பெட்டி மற்றும் இந்தி பண்டிட் ராதிகா காதலை மறுத்தவுடன் அடி வாங்கி வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் இன்றும் வயிற்றைப் புண்ணாகும். சற்று இழுத்தடித்த இறுதிக் காட்சி காரணம், இந்தப் படம் எதிர் பார்த்த அளவுக்கு பரபரப்பாக ஓடாவிட்டாலும், ஒரு சிறிய கதையை மட்டும் வைத்துக் கொண்டு முழுவதும் திரைக்கதையை மட்டும் வைத்து எடுப்பதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

மௌன கீதங்கள் படம் வெளி வருவதற்கு முன்னால் குமுதத்தில் 1980 -ல் ஒரு தொடர் கதையாக வந்தது. இறுதிக் காட்சியை வெளியிடாமல் வெள்ளித் திரையில் காண்க என்று முடித்துத் தவிக்க வைத்து விட்டார். பின்பு நான் படம் பார்த்தது 2004 -ல் சன் டிவியில் ஒரு முறை வெளியிட்ட போதே. 24 வருடக் காத்திருந்தலுக்குப் பின் படத்தைப் பார்த்த போது கிடைத்த இன்பம் அளவிட முடியாதது. பழைய படம் என்ற எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்க முடிந்தது ஒரு ஆச்சர்யம். மூக்குத்திப் பூ மேலே பாட்டு ஒரு என்றும் இனிமையான பாடல். சிறுவன் சுரேஷின் நடிப்பு மிகவும் அருமை.

பின்பு வந்த விடியும் வரை காத்திரு ஒரு திகில் படமாக இருந்தது. இதில் வந்த நீங்காத எண்ணம் ஒன்று பாடல் குறிப்பிடத் தக்கது. இதன் பின்பு வந்த அந்த ஏழு நாட்கள் தமிழ்த் திரையுலகின் மைல் கற்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. ஆனந்த விகடனில் 65 மதிப்பெண்கள் பெற்ற படம் இது. பாக்யராஜ் மலையாளம் கலந்த தமிழில் பேசிக் கலக்கினார். காஜா ஷெரிப்பின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. சென்னைக்கு வந்து பாக்யராஜ் வெகுளியாகப் பேசி வீடு தேடுவதும், கல்லா பெட்டியிடம் திட்டு வாங்குவதும், காஜா ஷெரிப் அடிக்கடி பாக்யராஜின் காலை வாரி விடுவதும் குபீர் சிரிப்புகள். இந்தப் படத்தில் MSV இசையில் வந்த எல்லாப் பாடல்களுமே இனிமை. எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில், சப்த ஸ்வர தேவி உனது, எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. படத்தின் இறுதிக் காட்சி எல்லாத் தரப்பினரையும் நெகிழ வைத்தது. ராஜேஷ் மற்றும் தமிழில் அறிமுகமான அம்பிகா மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

பொய் சாட்சி திரைப் படத்தில் தன்னுடைய தவறால் ஒரு குடும்பமே நசித்து விட்டதை உணர்ந்து அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். ஓட்டலில் நன்றாக சாப்பிட்டு விட்டு செந்திலை பில் செலுத்த மாட்டி விட்டு நழுவும் காட்சி வயிறைக் குலுங்க வைக்கும்.

டார்லிங் டார்லிங் டார்லிங்கில் குழந்தைப் பருவத்தில் பிரிந்து சென்ற தோழிக்காகக் காத்திருக்கும் அப்பாவி இளைஞனாக நடித்திருந்தார். அப்பா கல்லா பெட்டி மற்றும் தங்கை இந்திராவுடன் இவர் அடிக்கும் லூட்டி மறக்க முடியாதது. ஊட்டி பங்களா வாட்ச்மேனாக வரும் கல்லா பெட்டி முதல் காட்சியில் முதலாளி தோரணையில் வருவதில் ஆரம்பித்து, பின்னர் பாக்யராஜை நம்பிக் கடன் வாங்கி ஈட்டிக்காரனின் பைக்கின் பின்னால் கயிறால் கட்டப்பட்டுப் புலம்பும் காட்சிகளில் கலக்கி இருப்பார். பூர்ணிமா ஜெயராம் வருகையை அறிந்தவுடன் இவர் பரபரப்பில் செய்யும் காரியங்கள் எல்லாமே சுவை. சங்கர் கணேஷ் இசையில் "ஓ நெஞ்சே நீ தான்" நெஞ்சை உருக்கும். பூர்ணிமாவுடன் இவர் பாடும் அழகிய விழிகளில் டூயட் இன்றும் கேட்கலாம். பிரவீணாவின் மரணத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் நாயகி பூர்ணிமாவைத் திருமணம் செய்தி கொண்டார்.,

தூறல் நின்னு போச்சில் பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை என்று தவறாக நினைக்கப்பட்ட நண்பனின் முகத்தில், அடுத்த முறை போகும்போது கரியைப் பூசிக் கூட்டிக் கொண்டு போவது நல்ல நகைச்சுவை. சுலக்க்ஷனா இந்தப் படத்தில் அறிமுகம் ஆனார். செந்தாமரை மற்றும் நம்பியார் நல்ல கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அற்புதமானவை. பூபாளம் இசைக்கும், தங்கச் சங்கிலி, ஏரிக்கரைப் பூங்காற்றே ஆகியவை அருமையான மெல்லிசைப் பாட்டுக்கள். என் சோகக் கதைய கேளு தாய் குலமே பாடல் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது.

முந்தானை முடிச்சு 1983 ஜூலை 22 -ஆம் தேதி வெளியானது. இந்த படம் அளவுக்கு பரபரப்பாகத் தமிழ் நாட்டில் எந்தப் படமும் அது வரை பேசப்படவில்லை. தமிழ் திரை உலக வரலாற்றில் முதன் முதலாக வெளியிட்ட அனைத்து அரங்கங்களிலும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அரங்கங்களில் தாய்க்குலங்களின் கூட்டம் காரணம் கடும் நெரிசல் ஏற்ப்பட்டது. அறிமுகமான ஊர்வசி பரபரப்பை ஏற்படுத்தினார். நகைச்சுவை, சென்டிமென்ட், பாடல்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என்று எல்லாத் தரப்பிலும் படம் கொடி கட்டிப் பறந்தது. தவக்களை மற்றும் மாஸ்டர் சுரேஷ் உட்பட சிறுவர்கள் படத்தில் கலகலப்பை ஏற்படுத்தினர். படத்தில் முருங்கைக்காய் சம்பந்தமான காட்சிகளும் வசனங்களும் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும் பரபரப்போடு மக்களின் வரவேற்பைப் பெற்றன. இவை பாக்யராஜின் பிற்காலப் படங்களைப் பெரிதும் பாதித்தன என்று கூறினால் அது மிகையாகாது. படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. துவக்கப் பாட்டான "விளக்கு வைக்கும் நேரத்துல", ஊர்வசி தன் எதிர்காலக் கணவனை நகைச்சுவையுடன் விவரிக்கும் "நான் புடிக்கும் மாப்பிளதான்", பாக்யராஜ், ஊர்வசியின் டூயட்டான "அந்தி வரும் நேரம்", தீபாவுடன் பாக்யராஜ் பாடும் டப்பாங்குத்தான "வா வா வாத்தியாரே வா", ஊர்வசியின் தவம் கலைக்கும் பாடான "கண்ண தொறக்கணும் சாமி" மற்றும் சென்டிமென்ட் பாட்டான "சின்னஞ்சிறு கிளியே" என்று அனைத்துப் பாடல்களும் பிரபலம் ஆயின.

முந்தானை முடிச்சின் பாதிப்பில் அவரது அடுத்த படமான தாவணிக் கனவுகள் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் ஆனதாகக் கருதப் படுகிறது. முந்தானை முடிச்சின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியாமல் திணறினாலும், இது ஓரளவுக்கு ஓடியது. சிவாஜி ஒரு அருமையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். செங்கமலம் சிரிக்குது என்ற அருமையான பாடல் இதில் உண்டு.

சின்னவீடு படத்தில் நகைச்சுவை படம் முழுவதும் இருந்தாலும் அதன் கரு மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்பைப் பெற்றது. "சிட்டுக்குருவி வெட்கப்படுது" என்ற பாடல் பிரபலமானது. நான் சிகப்பு மனிதன் என்ற ரஜினி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் துப்புத் துலக்கும் அதிகாரியாக நடித்தார்.

எங்க சின்ன ராசா படத்தில் அதிமுக கொடி நிறத்தில் துண்டு அணிந்து "எடுடா மேளம்" அன்று பாடுவார். எம்ஜியார் மறைவிற்குப் பின் பாக்யராஜும் அரசியலில் ஈடுபட முயன்ற போது வந்த படம் இது. பாக்யராஜ் எமமுக என்ற கட்சியை ஆரம்பித்த நேரம். இப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மண்ணாங்கட்டி என்பவர் எமமுக கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். அப்போது வாரமலர் துணுக்கு மூட்டையில் எமமுக செய்திகள் அன்று கிண்டலடித்து ஒரு தனிப் பகுதியே வந்தது. ராதாவுடன் இணைந்து முதன் முறையாக நடித்த படம். சங்கர் கணேஷ் இசை அமைத்த இந்தப் படத்தில் பாடல்கள் பிரபலமாயின. கொண்ட சேவல் கூவும் நேரம், மாமா உனக்கு ஒரு தூது விட்டேன், தென் பாண்டி சீம ஓரமா ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தன. இரட்டை வசனக் காட்சிகள் சற்றே தூக்கல்.

அடுத்து வந்த "இது நம்ம ஆளு" ஷோபனாவிற்குத் தமிழில் மறு வாழ்வு கொடுத்தது. பிழைப்பிற்காக ஐயர் வேடம் போடும் பாக்யராஜ், சோமராஜுலுவின் ஐயர் குடும்பத்தின் நன் மதிப்பை பெற்று ஷோபனாவின் காதலை வழியில்லாமல் ஏற்றுப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து அன்றே மாட்டிக்கொள்கிறார். பின்பு பல போராட்டங்களுக்கிடையில் சோமராஜுலு அவர்களை அங்கீகரிக்கிறார். ஜாதி வேறுபாட்டை எதிர்க்கும் கரு வெற்றியைக் கொடுத்தது. இசையும் இவரே. பாடல்கள் ஓரளவுக்குப் பிரபலமாயின. தலைப்புப் பாடலான பச்ச மலை சாமி ஒண்ணு இவரே பாடி இருக்கிறார். அம்மாடி இதுதான் காதலா நல்ல ஒரு மெல்லிசைப் பாடல். சர்ச்சைக்குரிய நான் ஆளான தாமரை, மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு இன்றும் பிரபலம். பத்து லட்சம் வாசகர்களுக்கு மேலே இதைப் பார்த்திருப்பது இதன் பிரசித்தி(?)க்கு சாட்சி.

பின்பு எடுக்கப்பட்ட அவசர போலீஸ் 100 பாதியில் நின்று போன MGR -இன் அண்ணா என் தெய்வம் என்ற படத்தின் தொடர்ச்சி. சிலுக்கு சுமிதா நாயகியாக நடித்த இந்த படம் ஓடவில்லை(?). அடுத்து வந்த ஆராரோ ஆரிராரோ சுமாராக ஓடியது. மன நிலை சரியில்லாதவர்களை மையமாக வைத்து வந்த படம். பானுப்ரியா நாயகி. கொஞ்சம் நகைச்சுவை இருந்தது. அதிர்ச்சிப் பைத்தியம் நல்ல நகைச்சுவை. பின்பு வந்த பவுனு பவுனுதான் ஒரு படு தோல்வி. ரோகினி கதாநாயகியாக நடித்திருந்தார். அளவுக்கதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் படத்தின் தோல்விக்கு வழி வகுத்தன.

பின்பு வந்த சுந்தரகாண்டம் நல்ல நகைச்சுவைப் படம். மீண்டும் பானுப்ரியா. அறிமுக நடிகை சிந்துஜா நல்ல துறுதுறுப்பு. அதுவும் பள்ளியில் நடக்கும் ஆரம்ப காட்சிகள் குபீர் சிரிப்பு. பாடகி என்று நம்பி மணந்த பானுப்ரியா முதலிரவில் பள்ளியின் காலை வணக்கப் பாடலான "தேவனே தேவனே" என்று பாடும்போது அரங்கமே அதிரும்.

குஷ்பூ முதலிடத்தில் இருக்கும்போது வந்த படம் அம்மா வந்தாச்சு. குழந்தை செண்டிமெண்டை வைத்து எடுத்த படம். நந்தினி ஓ நந்தினி பாடல் சுமாராகப் பேசப்பட்டது. பின்பு வந்த ராசுக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு மறு வாழ்வு தந்தது. ஹோலி ஹோலி என்ற பாடல் சுமார். வீட்ல விசேஷங்க நல்ல ஒரு நகைச்சுவைப் படம். காணாமல் போயிருந்த சுரேஷ் நடித்திருந்தார். பிரகதி/மோகனா என்ற புதுமுக நடிகைகள். பாடல்கள் சுவை. இந்த பஸ்ஸுதான் PTC ஒரு அதிரடி. கொஞ்சம் சங்கீதம் , மலரே தென்றல், பூங்குயில் ரெண்டு ஆகிய பாடல்களும் அருமை. கோழி கூவுது புகழ் விஜி ஒரு கவர்ச்சிப் பாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை உணர்வுள்ள மருத்துவராக ஜனகராஜ் கலக்கி இருப்பார்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படம் பாடல்களுக்காகவே பார்க்கலாம். வந்தாள் வந்தாள் ராஜ குமாரி, பாக்யராஜின் பிறந்த நாளைக் கொண்டாட மீனா ஏற்பாடு செய்யும் ராஜா ராஜாதான் ஆகிய பாடல்கள் இன்றும் கேட்கலாம். மீனா மற்றும் சார்லி அருமையாக நடித்திருந்தனர். இவரது பாட்டியாக வரும் அம்மையார் நன்றாக நடித்திருப்பார்.

பின்பு வந்த ஞானப் பழம் பற்றும் வேட்டிய மடிச்சுக்கட்டு ஆகியவை ஒன்றும் சொல்லும்படி இல்லை. சொக்கத் தங்கம் வெறும் இயக்கம் மட்டும். பாரிஜாதம் சுமாராக ஓடியது. சித்து பிளஸ் டூ ஓடவில்லை.

சமீப காலத்தில் சில படங்களில் மூத்த கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். (நினைத்தாலே இனிக்கும், சம்திங் சம்திங் போன்றவை)

நன்றி :)