Saturday, April 09, 2011

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி

(இணையத்தில் பல தளங்களில் காணப்படும்  இதை எழுதியவர் இவரோ... - ஜன்லோக்பால் பற்றி ஒரு அறிமுகத்துக்காக இங்கே.. என்னுடைய கருத்துக்கள் கீழே... சற்றுமுன்: கோரிக்கைகளை அரசு ஏற்றதால் உண்ணாவிரதம் முடித்தார் அன்னா )

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் !


இந்தியாவிலும் வெடித்தது புரட்சி -  ஊழலுக்கு எதிராக -  ஒன்று திரள்வோம் வாரீர் !

ஊழலுக்கு எதிராக சமுதாய நல ஆர்வலர்
அன்னா ஹஜாரே (விவரங்கள்
கீழே)எழுப்பிய தீ  கொழுந்து விட்டு
எரிய ஆரம்பித்து விட்டது.

"முதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில்
கொண்டு வரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டன.
இது வரை 8 முறை மசோதாக்கள் கொண்டு
வந்தாகி விட்டது. ஆனால் ஒன்றும்
செயல்பாட்டிற்கு வரவில்லை. ஊழல் விஷம் போல்
பரவி விட்டது.எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்.

கடைசி எச்சரிக்கையாக இன்னும் ஒரு மாத
அவகாசம்  கொடுக்கிறோம்.
ஊழலுக்கு எதிரான "ஜன் லோக் பால்"மசோதாவை
மத்திய அரசாங்கம் உடனடியாக இயற்றாவிட்டால் –
ஏப்ரல் 5ஆம் தேதி முதல்,நான் சாகும் வரை
உண்ணாவிரத நோன்பு மேற்கொள்வேன்"
- என்கிற இவரது அறிவிப்பை முதலில்
துச்சமாக நினைத்த மத்திய அரசு இன்று
திகைத்து நிற்கிறது.

சட்டென்று செயலில் இறங்கி விட்டார் மனிதர் !
டில்லியில் இந்தியா கேட் அருகே நேற்று முதல்
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
மூட்டிய தீ  நாடெங்கும் பரபர வென்று பரவ
ஆரம்பித்து விட்டது.

காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி,
சட்டம் இயற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வெளி மனிதர்கள் அந்த வேலையில்
ஈடுபடத் தேவை இல்லை என்று
கூறியதற்கு, அன்னா பொங்கி எழுந்து பதில்
கொடுத்தது பிரமாதம்.

"யாரய்யா வெளி மனிதர்?
இந்த நாட்டு மக்கள் தான் இந்த அரசாங்கத்தின்
எஜமானர்கள். நீ அவர்களின் ஊழியன்.
வேலைக்காரன். அவர்களாகப் பார்த்து தான்
உன்னை உள்ளே வைத்திருக்கிறார்கள்.
- வேலைக்காரர் எஜமானரைப்
பார்த்து வெளியே போ என்பதா ?
மக்கள் விரும்பும் வரை தான் நீ அங்கே
இருக்க முடியும். மக்கள் நினைத்தால்
உன்னை வெளி ஆள்  ஆக்க எத்தனை
நேரம் பிடிக்கும் " என்கிறார்.

இந்தியாவெங்கும் மக்கள்,குறிப்பாக இளைஞர்களும்
நடு வயதினரும், முக்கிய நகரங்களில் -
அன்னாவுக்கும், அவர் எழுப்பிய கோரிக்கைக்கும்
ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில்
இறங்க ஆரம்பித்து விட்டனர்.
ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில்,
எமெர்ஜென்சியின் போது கிளம்பிய எழுச்சியை
இப்போது தான் மீண்டும் காண முடிகிறது.
மக்களின் பங்கெடுப்போடும்,
பேராதரவோடும், ஒரு மகத்தான போர் -
ஊழலுக்கு எதிரான போர் -துவங்கியுள்ளது.
நம் மக்களை ஒருங்கிணைக்கவும்,
லஞ்ச ஊழலைஅடியோடு ஒழித்துக் கட்டவும் -
ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்கவும் -
அருமையான ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.

உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
பேசும் பேச்சுக்கள் மக்களிடையே எழுச்சியை
உண்டு பண்ணுகின்றன.அவரது உரை
இந்தியில் இருப்பதால் தமிழ் மக்களை இன்னும்
சென்றடையவில்லை !
தமிழ் தொலைக்காட்சிகளோ வடிவேலு, குஷ்பு
பேச்சுக்களை காட்டுவதிலேயே குறியாக
இருக்கின்றன.

யார் இந்த அன்னா ஹஜாரே ?-
72 வயது காந்தீயவாதி.
மராட்டியர். மஹாராஷ்டிராவில் அற்புதமான
பல சமுதாயப் பணிகளில் ஈடுபட்டவர்.
நாம் அனைவரும் இன்று பயன்பெற்றுக்
கொண்டிருக்கும்  (RTI)
Right to Information
தகவல் பெறும் உரிமை -க்கான காரணகர்த்தா.
பத்மபூஷண் பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர்.

முக்கியமான விஷயம் -
இவர் ஒரு அரசியல்வாதி அல்ல.
எந்த கட்சியையும் சேர்ந்தவரும் அல்ல.
மரியாதைக்குரிய சமுதாய ஆர்வலர்.
"ஜன் லோக் பால்" என்றால் என்ன ?
(இந்தி பெயர் – பயமுறுத்துகின்றதோ ?)
ஊழலை நம் நாட்டிலிருந்து
வேரோடு அழிக்கவல்ல  அருமையான ஒரு
மாதிரி சட்ட வடிவம் தான் "ஜன் லோக் பால்"

இதன் சில முக்கிய அம்சங்கள் -
சமுதாய அக்கறையுள்ள சில முக்கிய மனிதர்கள்
(கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே,
பிரசாந்த் பூஷன் போன்ற இன்னும் சிலர் )
சேர்ந்து கலந்து ஆலோசித்து தயாரித்துள்ள -
ஊழலுக்கு எதிரான -சட்ட முன்வடிவம் இது.
மாநிலங்களிலும்(லோக் ஆயுக்தா),
மத்தியிலும்(லோக்பால்) செயல்பட தனித்தனி
அமைப்புகள்.

லஞ்சம்,ஊழல், மற்றும் குற்றச்செயல்களில்
ஈடுபடும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்,
நீதிபதிகள், உயர்அதிகாரிகள்,(போலீசார் உட்பட) –
ஆகியோர் மீது -
பொதுமக்கள் யார் வேண்டுமானாலும்
இந்த அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.
புகார் கிடைத்த ஒரு வருடத்திற்குள் இது குறித்த
சகல விவரங்களும் தனிபட்ட அமைப்பால்
விசாரிக்கப்பட்டு, சாட்சியங்களும் ஆவணங்களும்
திரட்டப்படும்.

முதல் வருடம் முடிவடைவதற்குள் வழக்கு
பதிவு செய்யப்பட்டாக வேண்டும்.
அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள்ளாக
வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டாக
வேண்டும். எத்தகைய ஒரு வழக்கும் இரண்டு
வருடங்களுக்குள் முடிக்கக்ப்பட்டே ஆக வேண்டும் !
இதன் மூலம் – எத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும்
நபரானாலும் சரி – அவர் மீதான ஊழல் வழக்கு
இரண்டு வருடங்களுக்குள் முடிவடைந்து
தீர்ப்பு/தண்டனை  அளிக்கப்பட்டாக வேண்டும்.
குற்றவாளி நிச்சயமாக 2 ஆண்டுகளுக்குள்
சிறையில் தள்ளப்பட வேண்டும்.


லஞ்ச ஊழல் வழக்குகளில் – தண்டனையோடு
நின்று விடாமல் – சம்பந்தப்பட்ட தொகை முழுதும்
குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட
வேண்டும்.

இந்த அமைப்புகள் எப்படி இயங்கும் என்று கேட்கலாம்.
தற்போதுள்ள, சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் போன்ற
அமைப்புகள் லோக்பாலுடன் இணைக்கப்பட்டு,
அவற்றின் அத்தனை செயல்பாடுகளும்,
சகல அதிகாரங்கள் கொண்ட
இந்த லோக்பால் அமைப்பின் கீழ் வந்து விடும்.
தேர்தல் கமிஷன் போல், சுப்ரீம் கோர்ட் போல் -
சுதந்திரமான அமைப்பாக இது இயங்கும்.

இந்த அமைப்பு எந்த விதத்திலும் மாநில அல்லது
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,நடுநிலையான,
சமூகப் பொறுப்புள்ள, சமுதாய
நல அமைப்புகள்  -ஆகியவை சேர்ந்து
இதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அமைப்பின் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்தின் எந்தவிதத்
தலையீடும் இருக்கக்கூடாது.
இன்று உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்.
நாட்கள் செல்ல செல்ல மத்திய அரசுக்கு
இதன் உக்கிரம் உரைக்க ஆரம்பிக்கும்.

இந்த "தீ" – ஊழலை ஒழிக்க உண்டாக்கப்பட்டிருக்கும் – இந்த தீ பரவட்டும். வேகமாகப் பரவட்டும் .

----------------------------------------------------------------------------------------------------
மேலே இருப்பது மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது.  நிறைய வலைப்பதிவுகளில் இதைப் பார்க்கலாம். இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

முதலாக - இந்த ஜன்லோக்பால் உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரி - சமுதாய நல அமைப்புகள்? நாளையே நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அப்படி ஒரு போர்ட் மாட்டிக் கொள்ளாதா?  மறுபடியும் திருடனே திருடனை நியமிக்கும் கதை நடக்கும்...

ஒரு ஆண்டுக்குள் விசாரணை ஆரம்பித்து, அடுத்த ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். நியாயமாக ஒழுங்காக நடக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு சட்டம் கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியா!

இருக்கும் அரசியல்வாதிகளை கொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சசசம்ம்ம்ம்  திருத்த எனக்கு இரண்டு யோசனைகள் தோன்றுகின்றன.  ஒன்று - பதவி உச்சவரம்பு.  அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி இரண்டு முறை மட்டும்தான் வகிக்கலாம்.  மாநில கவர்னர் பதவியும் இரண்டு முறை மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முதல்வராக இருப்பது நடக்காது. அவ்வளவு புத்திசாலிகள் நிறைந்த மேற்கு வங்காளத்திலும், தமிழகத்திலும் ஜோதிபாசுவையும், கலைஞரையும் தவிர ஆளுவதற்கு யாருக்கும் தெரியாதா? இது எந்த அரசியல்வாதிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்பழகனுக்கும்,  பன்னீர் செல்வத்திற்கும் மிகவும் பிடிக்கும் :-)

இரண்டாவது - அந்தந்த தொகுதியில் வசிக்கும் மக்கள்தான் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேண்டும். சிக்மகளூருக்கும் இந்திராவுக்கும், சீரங்கத்துக்கும் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் ரிஷிவந்தியத்துக்கும்  என்ன சம்மந்தம்? அந்தந்த ஊர் மக்களுக்குத்தானே அந்தந்த ஊர்களுக்கான தொகுதியில் நிற்க உரிமை இருக்கவேண்டும். அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை?  அரசாங்கத்தில் மக்களின் பிரதிநிதி அந்தந்த மக்களிடையே இருந்துதானே வரவேண்டும்?? பண்ருட்டியில் பாட்னாவில் வாழும் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் கேலிக்கூத்தாகத்தானே இருக்கும்.

அப்படி செய்தால் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மற்றொரு ஜனநாயக மோசடியையும் தவிர்க்கலாம். எப்படியும் கொள்ளையடிக்கிறார்கள்.  கொள்ளையில் பங்கு அந்தந்த தொகுதியைச் சேர்ந்த கொள்ளையருக்கு போவதுதானே உண்மையான ஜனநாயகக் கொள்ளை?

ஆனால் இந்த இரண்டும் சட்டங்களாகும் வாய்ப்பு?  எந்தப் பூனை அதுவே தானாக மணியைக் கட்டிக் கொள்ளும்??

மத்திய அரசு அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்று சற்றுமுன் வந்த செய்திகள் கூறுகின்றன. பார்ப்போம் என்ன ஆகிறதென்று.







----------------------------------------

Monday, April 04, 2011

பஹாமாஸ் விஜயம் - 4



புதன் கிழமை கார்த்தால நஸாவு துறைமுகத்துக்கு போயிடுவோம்னு ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளோட செவ்வாய்கிழமை ரூமுக்கு வந்தோம். முதல் நாள் பத்தி எழுதியிருந்த பதிவுல ஒரு விஷயம் சொல்லியிருந்தேன், ஞாபகம் இல்லைன்னா பரவாயில்லை ஒரு ஆள் கடை போட்டு நஸாவுல என்ன வாங்கனும்னு க்ளாஸ் எடுத்தான்:



ஏய் கைஸ்

ஏன் ஸார்,

எங்க போறோம்

நஸாவுக்கு

என்ன வாங்க

வைரம் வாங்க

என்ன வைரம்

சூப்பர் வைரம்

எங்க வாங்கனும்

நீ சொல்ற கடைல வாங்கனும்

அங்க ஏன் வாங்கனும்,

அதுதான் நல்ல கடை

எந்த கடை

…. வைரக்கடை

... இப்படி நம்மூர் கோபாலா ஏன் ஸார் மாதிரி சொல்லி சொல்லி உறு ஏத்தி ஏத்தி ஒரு 25$ க்கு புத்தகமும் வித்தான், அந்தப் புத்தகத்தில ஒரு விஷயம் இருக்கரத நம்ம வீட்டுல கண்டு பிடிச்சாங்க, அது வேற ஒன்னும் இல்லை எந்த கடைல எந்த கூப்பனைக் கொடுத்தா என்ன சமாசாரம் சும்மா கொடுக்கரான்னு. ராவோட ராவா அதுக்கு ஒரு ப்ளான் போட்டு, எந்தக் கடைக்கு யார் போரதுன்னு ஒரு முடிவு பண்ணி, தாங்க்ஸ் கிவிங் கருப்பு வெள்ளிக்கு எந்தக் கடைல சொர்க வாசல் எப்ப திறக்கராங்கன்னு பாத்து பரபரப்பா ஓடுவோமே அதுமாதிரி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு தூங்கப் போனோம்.

செவ்வாய் கிழமை கப்பல் சிப்பந்தி ஒருத்தர் வேற, நாளைக்கு நஸாவுல ராயல் கரீபியனோட 3 கப்பலும், நார்வேஜியனின் ரெண்டு கப்பலும் வருது அதுல ராயல் கரீபியனோட ஒரு கப்பல் இருக்கரதிலேயே ரொம்பப் பெருசு (16 மாடி) அதனால பஹாமாஸே ஆடப் போகுதுன்ற ரேஞ்சில கிளப்பி விட்டாரு. அதோட விடாம, குழந்தைங்க பத்திரம் அங்க கொஞ்சம் திருட்டுப் பசங்க ஜாஸ்தி கொஞ்சம் ஏமாந்தா, குழந்தைகளை தள்ளிட்டு போயிடுவானுங்கன்னு போற போக்கில ஒரு சின்ன பிட்டை போட்டுட்டு போயிட்டாரு. அது நிஜமா, பொய்யான்னு தெரியலை, நான் கேட்டதை உங்க பக்கம் தள்ளி விட்டுட்டேன். அப்பால உங்க பாடு, அம்புட்டுதேன்.

ராயல் கரீபியனின் 16 மாடி கப்பல்


விடிய காலை 5 – 5:30 இருக்கும் அப்போ, என்ன வண்டி ஸ்லோவா போவுது, ஒருவேளை பேசின் ப்ரிட்ஜ் வந்திடுச்சான்னு தோணிச்சு. சீ எங்க வந்து என்ன பேச்சு, நாம கரீபியன் தீவு பக்கத்தில இருக்கோம், இங்க ஏது பேசின் ப்ரிட்ஜ், அந்தக் கொடுப்பினை இவங்களுக்கெல்லாம் கெடயாதுன்னு கர்வமா எழுந்து பாலகனிக்கு வந்தா துறைமுகத்துக்கு வந்தாச்சு.

கப்பலில் இருந்து நஸாவு நகரம்.

ஒவ்வொரு அரை மணிக்கு ஒவ்வொரு கப்பலா வந்து சேர்ந்தது. மொத்தம் 5 கப்பல்களை ஒரே இடத்தில் பாக்கரது நல்லாத்தான் இருந்தது. ஒரு வழியா எங்கள் கப்பலில் இருக்கரவங்களுக்கு தீவுல இறங்க அனுமதி வாங்கிட்டு வந்து எங்களை வெளியில விட ஒரு 9 – 9:30 ஆயிடுச்சு.


நஸாவு துறைமுகத்தில் ஒரே சமயத்தில் 5 கப்பல்கள்அம்மா, மாதுரியை கெட்டியா பிடிச்சுக்கோ, மஹிமா, எங்கூடவே நட, எல்லோரும் என் கண்பார்வைலயே இருக்கனும்னு ஏகப் பட்ட கண்டிஷன் போட்டுட்டு கப்பல்ல இருந்து கிளம்பின அஞ்சு நிமிஷத்தில மஹிமா ஒரு பக்கம், மாதுரி ஒரு பக்கம், மாலதி ஒரு பக்கம்னு நடக்க, கடைசீல அவங்கள விட்டுட்டு நான் தொலைஞ்சு போகாம என்னை காப்பாத்திக வேண்டியிருந்தது.
கப்பல விட்டு வந்த்தும் இமிக்ரேஷன்னு சொல்லி ஒரு கூத்தடிக்கராங்க, அதுக்கு உங்க பாஸ்போர்ட் கைல இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு ஒரே அலப்பர. க்யூவில நின்னு அவங்க கிட்ட பாஸ்போர்டை கொடுத்தா, கைல கூட வாங்காம, ஹும் போங்கன்னு கழுத்தில கைய வெச்சு தள்ளாத குறைதான். இதெல்லாம் கடந்து வெளியில வந்தா பெரிய அதிர்ச்சி காத்திருந்த்து.
அதிர்ச்சின்னு கூட சொல்லக்கூடாது ஒரே ஏமாற்றம்தான். அது வேற ஒன்னுமில்லைங்க, குமட்டற நாத்தமில்லை, “ஜுஜுஜுடாண காப்ப்ப்ப்பி, காப்ப்ப்பி, டீயேய், மொறுமொறு பஜ்ஜீ” ன்னு கத்தி கத்தி விக்கர ஒரு அருமையான தாயகத்துக் குரலில்லை, “அம்மா, அய்யா, சாப்ப்பிட்டு பத்து நாளாச்சுய்யா, ப்ப்ப்ப்பாபாபாவம் பச்சை புள்ளை பசியால துடிக்குதிய்யா”ன்னு கேக்க ஆளில்லை. ஆனால், “வா சார், வா, இன்னா பாக்கனும், நான் வலிச்சிகினு போறேன்”ர ரேஞ்சில ஆங்கிலத்தில பேசர டை கட்டிய டாக்ஸிக்காரர்கள் கும்பல் கும்பலா சுத்தராங்க. ஜாக்கிரதை.
நஸாவுல பார்க்க வேண்டியது ரெண்டு இடம்தான்னு எங்க வீட்டுக்காரம்மா சொல்லிட்டாங்க. அதனால அதத் தாண்டி மூனாவது இடமிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க மத்தவங்களுக்கு உதவியா இருக்கும்.
முதல் இடம் ஒரு பே தெரு (Bay Street) என்ற சின்னத் தெரு, அங்கதான் அந்த கூப்பன் புக் பிச்சை எல்லாம் எடுக்கனும்.

பே தெருவில் ஒரு வைரக் கடை
இரண்டாவது இடம், அட்லாண்டிஸ் – இது ஒரு தீம் பார்க்குன்னு ஜல்லியடிக்கராங்க.

கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட அட்லாண்டிஸின் படம்

முதல்ல அந்த பே தெரு. அது நம்மூர் ரங்கநாதன் தெரு மாதிரிதான் இருக்கு அங்க ஒரு நாளைக்கு வியாபாரம் சுமாரா ஒரு 1-2 மில்லியன் அமெரிக்க டாலர்ன்னு கப்பல கடை போட்டு எங்களை படுத்தினவன் சொன்னது. சின்ன தெருதான், அதுல ரெண்டுபக்கமும் கார், பஸ் வருது, சைக்கிள் ஓட்டராங்க, கும்பல் கும்பலா எங்கள மாதிரி கப்பலில் வந்தவங்க வந்து பராக்கு பாக்கராங்க. முன்னாடி சொன்ன மாதிரி படக்கு படக்குன்னு ஒவ்வொரு கடையா அதாங்க பிச்சை போடர கடையா போய், அம்மா பிச்சேய், அய்யா பிச்செய்ன்னு அவன் போட்டதையெல்லாம் பொறுகிக்கிட்டு வர ஒரு 30 நிமிஷம் செலவு பண்ணினோம். அங்க நான் விரும்பி வாங்கினது ஒரு கடைல மூங்கில்ல பண்ணின டி. ஷர்ட் விக்கராங்க, அது குளிர் காலத்துக்கு சூப்பரா இருக்கும், வெயில் காலத்தில கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கும், வியர்வை நாத்தத்தை தடுக்கும், அப்படி இப்படின்னு சொல்லி ஒன்னு 45$க்கு வித்தாங்க, அது அவங்க சொன்ன படி இருக்கான்னு தெரியலை ஆனா போட்டுகிட்டா நல்லா இருக்குன்னு ஒன்னு வாங்கிட்டு வந்தேன். அதே கடைல ஒரு கூலிங் க்ளாஸ் விக்கராங்க, கண்ணாடி கலர் மாறுவதைத்தானே பார்த்திருப்பீர்கள் அவர்கள் விற்கும் கண்ணாடியை போட்டுகிட்டு வெயிலில் சில நிமிடங்கள் இருந்தால் போதும் ப்ரேமின் கலர் மாறுது. அது மட்டும் இல்லை, அது தொலைஞ்சு போனாலோ, உடைஞ்சு போனாலோ வாழ்நாள் முழுக்க இலவசமா இன்னொன்னு தராங்கலாம். அதனால அதை ஒன்னு வாங்கிட்டு வந்து பத்திரமா வெச்சிருக்கேன்.


இப்போ அட்லாண்டிஸ். இது கடல் பக்கத்தில இருக்கர ஒரு வாட்டர் பார்க், நிறைய நடக்கனும், ரொம்ப வெயில், அதுலயே நமக்கு காத்து போயிடும். இதுக்கு டிக்கெட் விலை ஒருத்தருக்கு 180$ க்கு பக்கம், எங்க வீடு மாதிரி நாலு பேர் போனா ஒரு $720 ஆகும், அதை ஒரு $300 - $350 க்குள்ள முடிக்கனும்னா அடுத்தப் பதிவை படிங்க அதுல என் பங்கிற்கு சில டிப்ஸ் தரப்போறேன், படிச்சு என்சாய் பண்ணுங்க.


நேரா அட்லாண்டிஸ் போய் ஒரு நாள் முழுக்க குட்டை குட்டையா ஊறிட்டு, சின்னச் சின்னதா ரைடு போயிட்டு, சந்தோஷமா வந்துகிட்டு இருந்தோம். அப்போ அங்க நம்மூர் கிங்ஸ் டொமினியன்ல இருக்கர மாதிரி லேசி ரிவர் மாதிரி ஒன்னு இருந்தது, சரி நமக்கு இதெல்லாம் ஜுஜூபின்னுட்டு போய் க்யூவில நின்னோம். இதை வெளியில இருந்து பார்த்ததுமே மாதுரி ஒரு தீர்க்கதரிசி மாதிரி இந்தக் கதையெல்லாம் வேண்டாம்னு அழ ஆரம்பிக்க, அவள சமாதானம்பண்ணி திரும்பி க்யூவில நின்னதும் “அம்மா சுச்சூ வர்தூ”ன்னு அவளோட மழைலைல திரும்பித் திரும்பி பிட்டு போட்டும் நாங்க காதுல விழாத மாதிரி ஒருவழியா அவளை இழுத்துப் பிடிச்சு அந்த ரைடுக்கு போனோம். போன 5 நிமிஷத்தில சடக்கு சடக்குன்னு திசை திரும்பி பல்ஸ் எகிற வெச்சுச்ச அந்த ரைடு, ஒரு சந்தர்ப்பத்தில மாதுரியும் மாலதியும் வந்த ட்யூபை குடைசாய்க்க, அதை நான் எதேச்சையா திரும்பிப் பார்த்துட்டு என்னடா மாதுரியைக் காணும்னுட்டு நானும் மஹிமாவும் போய்கிட்டிருந்த ட்யூபிலிருந்து குதித்து அவங்க கிட்ட போகரதுக்குள்ள, “ஓ மை பேபி ஓ மை பேபி” ன்னு மாலதி கத்திக்கிட்டிருந்தா, லைஃப் ஜாக்கெட் போட்டிருந்த மாதுரி தண்ணிக்குள்ள நல்லா ஒரு முங்கு முங்கிட்டு ஜிங்ன்னு வெளில வந்துட்டா, 6 அடி தண்ணீல நானும் மாலதியும் தான் ததுங்கிணத்தோம் போட்டு அந்த எடத்தை விட்டு வெளில வந்தோம். அந்த இடத்தில 15 அடிக்கு ஒரு லைஃப் கார்ட் இருந்தாங்க, ஆனா நான் ட்யூபில இருந்து குதிச்சதும், மஹிமாவை பத்திரமா கரையேத்தினதும், மாதுரியை காப்பாத்த ஒடி வந்ததும் எங்களை மாதிரி அந்த ரைடுல இருந்தவங்கதான், லைஃப் கார்ட் ஒரே ஒரு விஷயம்தான் செஞ்சாங்க அது விசிலடிச்சு எங்களை திரும்பியும் ட்யூபுக்கு உள்ள போய் உக்காந்துக்கங்ன்னு சொன்னதுதான். நல்ல பொழப்புடா. ரைட விட்டு வெளில வந்ததும்தான் தெரிஞ்சுது அது லேசி ரிவர் ரைடு இல்லையாம், ராபிட் ரிவர் ரைடாம். கொஞ்சம் எல்லோரும் நார்மலானதுக்கு அப்புறம் மாலதி கிட்ட கேட்டேன் “என்ன மை பேபின்னு கத்தினே”ன்னு அதுக்கு “ஏங்க கொஞ்சங்கூட புத்தியில்லாம இப்படி கேக்கரீங்க, இது என்ன மெட்ராஸா தமிழ்ல கத்தறதுக்கு, இங்க இங்லீஷ்ல கத்தினாதானே ஹெல்ஃப் பண்ணுவாங்க”ன்னு பதில் வந்ததுதான் சூப்பர்.


அதுக்கு அப்புறம் சொல்லும் படி ஒன்னும் செய்யாம சும்மா கடல் பக்கம் போய் ஒரு இடம் பிடிச்சு மண்ணுல விளையாடிட்டு வந்துட்டோம். ஞாபகம் வெச்சுக்கங்க அட்லாண்டிஸ் போனா அங்கயும் பெரிய ஹோட்டல் இருக்கு ஹொட்டல்ன்னா சும்மா ஒன்னு ரெண்டு இல்லைங்க ஒரு நகரமே ஹொட்டலா இருக்கு. கூகுளாண்டவர்கிட்ட கேளுங்க அவங்களப் பத்தி செய்தியா கொட்டுவார்.


நாங்க போயிருந்த புதன்கிழமை நல்ல சுபமுகூர்த்த தினம்ன்னு நினைக்கிறேன், பீச்சை ஒட்டி ஒரு 40-50 நாற்காலிகள் போட்டு எல்லோரும் உக்கார்ந்துண்டிருக்க நானும் மஹிமாவும் சும்மா ஒரு நடை நடக்கலாம்னு போன போது அங்க ஒரு திருமணம் நடந்ததை பார்த்துட்டு வந்தோம், ஆனா சுத்த நாகரீகம் தெரியாத பசங்க, என்னடா இப்படி ஒருத்தன் வந்து நம்ம கல்யாணத்தை பார்த்து ஆசீர்வதிக்கரானேனு, ஒரு ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்கன்னு சொல்லத் தெரியலை, அட அது கூட வேண்டாங்க ஒரு சின்னதா தேங்காய் பை கூட குடுக்கல, ஹூம் இதெல்லாம் வெளில சொன்னா நமக்குத்தான் கெட்ட பேர்.


அட்லாண்டிஸ்ல ஒரு அக்வேரியம் இருக்கு கண்டிப்பா பாக்க வேண்டிய ஒன்னு. வித விதமா மீன்கள் இருக்கு, குழந்தைகளை அங்கிருந்து கிளப்பரது ரொம்ப கஷ்டம்.


மாலை 6 மணிக்கு முன்னாடி அட்லாண்டிஸ்ல இருந்து கிளம்பினா போட் டாக்ஸி பிடிச்சு துறைமுகத்துக்கு வரலாம், நாங்க கிளம்பின 7 மணிக்கு தரை டாக்ஸி வந்ததே அதிர்ஷ்டம்தான்.


இப்படி மிக மிக எதிர்பார்ப்புகளோட காலையில் தொடங்கின எங்க நஸாவு பயணம் ராத்திரி 7:30 மணிக்கு முடிஞ்சுது. எல்லோரும் ரொம்ப டையர்டா ஆனதினால இன்னிக்கு ரெகுலரா சாப்பிடப் போகும் இடத்துக்குப் போகாம இன்னொரு இடத்துக்குப் போய் சாப்பிட்டுட்டு வந்துட்டோம்.


முந்தைய பதிவுகள்:





-முரளி இராமச்சந்திரன்.