Tuesday, September 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 11 {சரித்திர நாயகி நானா சாவித்திரியா?}

உலகத்தில் எல்லா மனைவிகளும் அவங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது கிடைக்குமான்னு ஏங்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்த போது நான் வேண்டாம்னு முகம் திருப்பிக்கிட்டேன்னு நினைச்சால் எனக்கே என்னை நினைத்து பெருமையா இருக்குங்க. என்னுடைய இந்த பெருந்தன்மையை பற்றி கேள்விப்பட்டாங்கன்னா நம்ம ஊரு 'அமர்சித்ர கதைகள்' கம்பெனிகாரங்க 'சத்தியவான் சாவித்ரி' கதையோடு சேர்த்து என் கதையையும் வெளியிட்டுருவாங்க. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகமா வெளி வந்து நம்மூர் நண்டு சிண்டெல்லாம் படிக்க நேர்ந்தால் கணவர் மனம் நோகுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.

மூணு வருஷத்துக்கு முன் நடந்த இது ஒரு உண்மை சம்பவம்.

---------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு கோடைகால விடுமுறைக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்தாச்சு. நாளை விடிந்தா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு விமானதளத்துக்கு போக வேண்டியது தான். இந்த நேரத்தில் நீங்களா இருந்தா என்ன செய்வீங்க? நிம்மதியா படுத்து தூங்கி கனவில் அபிமான நடிகர் 'ஹாரிசன் போர்ட்' கையை குலுக்கி விட்டு எழுந்து ஊருக்கு போய் சேருவீங்க. அதை செய்யாமல் விட்டு விட்டு பொழுது போகலைன்னு நான் வாசல் பக்கம் குழந்தைகளுடன் விளையாட போனதை விதின்னு சொல்லாமல் வேறெப்படி சொல்லறது?

முப்பது வயசில் மூணு வயசு குழந்தையின் ஆர்வத்தோட ஸ்கூட்டர் விட்டு விளையாடினால் என்ன நடக்குமோ அது தான் நடந்தது. தார் ரோட்டில் தலை குப்புற விழுந்து வலது கண் பக்கம் பயங்கர அடி. வீங்கிய முகத்துக்குள்ளே புதைஞ்சு போன கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்த போது எதிரில் கலங்கலாய் தெரிஞ்சது வீடு. ஒரு இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ போல் ரத்த சிவப்பான கண்களோடு ஆடிக்கொண்டே வீட்டுக்குள் வந்த என்னை பார்த்து பதறி போன என் கணவர் என்னை பக்கத்து ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து போக அங்கே ஆரம்பிச்சது அவருடைய கெட்ட நேரம்.

கரு ரத்தம் கட்டி போய் வீங்கியிருந்த என் முகத்தை பார்த்த நர்சுகளும் டாக்டர்களும் கோபத்தில் திரும்பி என் கணவரை பார்த்த பார்வையில் இருந்த உக்கிரத்தை பாண்டிய நாட்டு சபையில் நடந்த திருவிளையாடல் காட்சியில் சிவன் "நக்கீரா என்னை நன்றாக பார்" அப்படீன்னுதன் நெற்றிக்கண்ணை கோபத்தில் திறந்த போது கடைசியாக பார்த்த ஞாபகம். அவங்களோட கோவத்தின் காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்த என் கணவரை வெளியே உட்கார சொல்லி விட்டு ஸ்கேன் செய்யும் ரூமுக்கு என்னை அழைத்து போய் அனுதாபத்தோடு பார்த்த நர்சை கண்டு எனக்கும் குழப்பம் தான். ஆனால் மேலே யோசனை பண்ண முடியாமல் முகம் பத்து விசில் வந்த ப்ரெஸ்டீஜ் குக்கர் போல வலியில் தெறித்தது.

ஒரு வழியாக ஸ்கேன் முடிந்து டாக்டர் வந்து பார்த்து வலிக்கு மாத்திரை குடுத்து முடித்த போது தான் என் கணவர் கவலையோடு கதவுக்கு வெளியே நின்னு எட்டி பார்ப்பது தெரிந்தது. அவரை உள்ளே கூப்பிட சொல்லி நான் சொன்ன போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட டாக்டரும் நர்சும் மெதுவாக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏதும் பிரச்சனை என்றால் தைரியமாக சொல்லலாம். பயப்பட வேண்டாம். என்னை போல பெண்களுக்கு பல காப்பகங்கள் இருக்கு. கை நீட்டும் கணவருக்கு பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என் பக்கம் தான். இந்த ரீதியில் இன்னும் பல விஷயங்களை கனிவாக பொறுமையாக சொல்லி கொண்டே போனாங்க. ஒன்றும் புரியாமல் முதலில் விழித்த எனக்கு விஷயம் விளங்க ஆரம்பித்த போது அடி வயத்திலிருந்து பொங்கிய சிரிப்பை மீறி ஒரு விஷயம் உறைத்தது.

என் கணவரின் குடுமி அந்த ஒரு வினாடி என் கையில். என் ஒரு தலை அசைப்பில் பாவம் அவர் மாமியார் வீட்டு களியை ருசி பார்க்க வேண்டி இருக்கும். ஆஹா! எப்பேர்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! கோடானு கோடி மனைவிகள் உலகத்தில் தங்கள் வலது புருவத்தை வெட்டி கொடுக்க தயாராக இருக்கும் (மாசம் ரெண்டு தரம் அழகு நிலையம் சென்று தீட்டி விட்டு கொண்டும் வரும் அதே புருவத்தை தான் சொல்லறேன்) இந்த ஒரு வாய்ப்பு தேடாமல் கனிந்த பழம் போல என் மடியில் விழுந்த போது மனம் சஞ்சலப்படாமல் நெஞ்சில் உரமுடன் 'இவர் இதற்கு காரணமில்லை. இவர் நிரபராதி' ன்னு சொல்லி சட்டத்தின் கொடும் பிடியில் சிக்காமல் என் கணவரை மீட்டு கொண்டு வந்த நானா இல்லை சத்யவானின் சாவித்ரியா சரித்திர நாயகி?

-மீனா சங்கரன்

21 comments:

  1. நீங்கதான் உண்மையிலே சாவித்திரி :-))

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சரித்திர நாயகி நீங்களேதான். :)

    ReplyDelete
  3. ஆஹா...... ச்சான்ஸைக் 'கோட்டை' விட்டுட்டீங்களே.

    சரித்திர நாயகியேதான். அதான் கோட்டை.....ன்னு சொல்லி இருக்குல்லே:-)

    உண்மையானவே 'சம்பவம்' ஒன்னு நடந்தப்ப 'நாயகனை மீட்ட சாவித்ரி' நாந்தான். அதை பதிவுகளில் ஆவனப்படுத்தி இருக்கேன்.

    வரலாறு முக்கியம் பாருங்க!

    ReplyDelete
  4. செய்யாத தப்புக்கு தண்டனை வாங்கிய கணவருக்காக கண்ணகி நடத்திய போராட்டத்தை விட செய்யாத தப்புக்கு கணவருக்கு தண்டனை வாங்கி தராத உங்க "அக்கப்போர்"ராட்டம் தான் சிறந்தது.. நீங்களே தான் சரித்தர நாயகி!!

    ReplyDelete
  5. ஆஹா...

    கலியுக சாவித்திரி

    வாழ்க... வாழ்க...

    அண்ணணைக்காப்பாற்றிய

    அருந்தவப்புதல்வி...

    வாழ்க... வாழ்க...

    ReplyDelete
  6. நல்ல தமாஷ்!

    //இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ// மற்றும் திருவிளையாடல் காட்சியெல்லாம் பிரமாதம்.

    என் நண்பர்களிலேயே அமெரிக்க கம்பி எண்ண முதல் வாய்ப்பு கிடைத்ததை இப்படி கெடுத்து விட்டீர்களே? :-)

    //இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்//
    என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்? :-) நம்ம ஊர்லதான் யாரும் படிக்கறதில்லை. மத்தபடி நியூசிலாந்திலிருந்து நல்லமலை வரை நாம் மிக பிரபலம்!

    ReplyDelete
  7. meena missed that chance. romba nallaiku appram vandalum ful formla vandiruka

    ReplyDelete
  8. அந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு காயம் கூட ஆகாம பாத்துகிட்டரா இல்லையா. எங்க வீட்டம்மா இத இன்னும் படிக்கல, புதுசா ஐடியா கொடுத்து ரிச்மன்ட் பசங்ககிட்ட பீதிய கிளப்பிவிட்டுட்டீங்க.

    //இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல//
    இதை நான் வன்மையாக மறுக்கிறேன். கோபால் பல்பொடி விற்கும் எல்லா ஊரிலும் நம்ம ப்லோக் பேமஸ்!
    From Tracker: 10,031 visits came from 69 countries

    ReplyDelete
  9. Sankaranin Meenave

    Maduraikku rani mattumillamal sarithira nayaki endrume nee thaan, kannagi ellai endru nirubithuvittai.

    ReplyDelete
  10. நிகழ்காலம் மற்றும் சின்ன அம்மிணி,

    வந்து "சரித்திர நாயகி மீனா" சின்னத்துக்கு உங்க ஓட்டை போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. :-))

    ReplyDelete
  11. வாங்க துளசி டீச்சர்.

    "சரித்திர நாயகியேதான். அதான் கோட்டை.....ன்னு சொல்லி இருக்குல்லே:-)"

    உங்க வார்த்தை ஜாலம் படு சூப்பர். :-)

    ReplyDelete
  12. வாங்க புவனேஷ்,
    "செய்யாத தப்புக்கு கணவருக்கு தண்டனை வாங்கி தராத உங்க "அக்கப்போர்"ராட்டம் தான் சிறந்தது."
    அக்கப்போராட்டமா? ஹா ஹா.....நெத்தியடி போட்டீங்க போங்க. வந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி.

    அகல் விளக்கு,
    உங்க வாழ்த்து மடல் ஏதோ தி.மு.க./அ.தி.மு.க கட்சி மீட்டிங்க்ல போடற கரகோஷம் போல அட்டகாசமா இருக்குங்க. வந்து பின்னோட்டமிட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  13. "என் நண்பர்களிலேயே அமெரிக்க கம்பி எண்ண முதல் வாய்ப்பு கிடைத்ததை இப்படி கெடுத்து விட்டீர்களே? :-)"
    நாகு, வருத்தப்படாதீங்க. உங்க வீட்டுல இந்த கதையை படிச்சாங்கன்னா உங்களுக்கே கூட அந்த அரிய (கம்பி எண்ண தான்) வாய்ப்பு கிடைக்கலாம். என்ன சொல்லறீங்க? :-))))

    உங்க ரசனைக்கு எப்பவும் போல ஒரு சலாம்.

    ReplyDelete
  14. வா ஜெயஸ்ரீ. ரொம்ப நாளெல்லாம் ஆகலியே? பத்து நாளைக்கு ஒரு முறை எதையாவது எழுதிண்டு தான் இருக்கேன்.

    ReplyDelete
  15. "கோபால் பல்பொடி விற்கும் எல்லா ஊரிலும் நம்ம ப்லோக் பேமஸ்!"
    ஹா ஹா ஹா...சூப்பர்.

    நம்ம பிரபலமான ப்ளாகை இனி ஒரு முறை இப்படி பேச மாட்டேன் ஜெயகாந்தன். சரி தானா?

    ReplyDelete
  16. ஷான்,
    சாவித்திரியோட நிக்காமல் கண்ணகியையும் பக்கத்தில் நிக்க வச்சு எனக்கு ஒட்டு போட்டதுக்கு நன்றிங்கோ. :-))

    ReplyDelete
  17. 'நகைச்சுவை நாயகி' என்றும் சொல்லலாம் :)))

    உணர்வுபூர்வமான எழுத்துக்கு ஒரு சபாஷ்.

    இந்த முறையும் மிக்சர் கலக்கல்.

    ReplyDelete
  18. உங்க புது பட்டத்துக்கும் :-)) தட்டி கொடுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சதங்கா.

    ReplyDelete
  19. //இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.//

    பின்னூட்டமிடலைன்னா படிக்கலைன்னு பொருளில்லை, சரித்திர நாயகி அவர்களே! :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!