Sunday, July 05, 2009

மீனாவுடன் மிக்சர் - 7 { கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்)

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

குறுகிய சந்நிதி தெருவில் நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , எப்படியோ நாலு கார்கள், அஞ்சு ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் ஒரு பத்து மாடுகளோடு போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.

---------------------------------

-மீனா சங்கரன்

6 comments:

  1. பீட்சா விளம்பரம் அருமை...

    காணாமல் போன விஷயங்களில் என் personal favorite is - பாவாடை, சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம்பெண் குழந்தைகள். எல்லா இடத்திலும் இப்படி சூடிதாரை சீருடை ஆக்கியவர்கள் மேல் ஏன் தமிழ்ப் பண்பாட்டு காவலர்கள் பாயவில்லை? படுபாவிகளா...

    ReplyDelete
  2. அவர்கள் அம்மாவை கேட்டால் வேலைக்கு போகும் நேரத்தில் பின்னி பூ வைத்து அனுப்ப எங்கே நேரம் என்று காரணம் சொல்வார்களோ? இந்த பாஸ்ட் புட் காலத்தில் (மாவு ஆட்டி புளிக்க வைத்து இருந்தாலும்) இட்லி அவிப்பதற்குள் பிஸ்சா ஆர்டர் பண்ணி வீட்டுக்கு டெலிவெரி செய்துவிடுவார்கள். இவையெல்லாம் காணாமல் போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது!

    ReplyDelete
  3. nice imagination. i dont know more about 10 years back chennai.But everywhere western culture is more dominating.kalachara sirkedu dhan

    ReplyDelete
  4. அருமை.. ரசிக்கும் படியாக தொலைந்த சென்னையை கண் முன் கொண்டு வந்த மீனாவுக்கு நன்றி.

    //பாவாடை, சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம்பெண் குழந்தைகள். எல்லா இடத்திலும் இப்படி சூடிதாரை சீருடை ஆக்கியவர்கள் மேல் ஏன் தமிழ்ப் பண்பாட்டு காவலர்கள் பாயவில்லை? படுபாவிகளா...//

    நாகு.. உங்களின் ஆதங்கம் புரியுது.. ஆனா தமிழ் பண்பாடுன்னா ஆண் பிள்ளைகள் பஞ்ச கஷ்டம், வேட்டி, முன்டாசுன்னு போகணும் என்று மாதர் சங்கம் கொடி பிடித்து வேற ஒரு பிரச்னை பண்ணிடுவங்கலோன்னு பயந்து சும்மா விட்டுட்டந்களோ?

    ReplyDelete
  5. வசந்தரே - ப்ஞ்சகச்சம், வேஷ்டி, முண்டாசு எல்லாம் காணாமப் போகலியே.

    என்னுடைய நிஜமான ஆதங்கம்: காணாமப் போன தாவணி. அப்ப எல்லாம் முன்னாடி போவறது யார்னு சுலபமா சொல்லிடலாம். இப்ப ஆறிலிருந்து அறுபது வரை எல்லாமே சூடிதார்தான். விடலப்பசங்க நிலைய நினைச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு...

    தாவணி இப்ப எல்லாம் (உங்க வீட்டு)போட்டோவுலதான் பாக்க முடியுது! :-)

    ReplyDelete
  6. வந்து பதிவிட்ட நாகு, ஜெயகாந்தன், ஜெயஸ்ரீ மற்றும் வசந்தத்துக்கு மிக்க நன்றி. :-).

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!