Friday, June 08, 2007

கவிநயாவின் பரிசுப் பெற்ற காட்சிக்கவிதை

அன்புடன் கவிதைப் போட்டியில் கவிநயாவின் காட்சிக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. கவிநயாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!


அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
===========================================================

ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
காட்சி வடிவம் இறுதியில் தரப்பட்டுள்ளது

அருவி

உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா

3 comments:

  1. வாழ்த்துக்கள் கவிநயா! அன்புடனின் சுட்டியை இயன்றால் பதிவில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிலாவுடைய பதிவின் சுட்டி அல்லது நிலாச்சாரலின் சுட்டியும் வேண்டுமானால் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  2. சேதுக்கரசி - நீங்கள் சொன்னபடியே சுட்டிகளைச் சேர்த்துவிட்டேன். நிலாச்சாரல் தளத்திற்கு போகமுடியவில்லை. ஆனால் nilacharal.comதான் என இருக்கும் என (whois nilacharal.com அவரைத்தான் காட்டுகிறது) அந்த தளத்திற்கு சுட்டி போட்டிருக்கிறேன். பிழையிருந்தால் சரியான சுட்டியை தாங்கள்.

    ReplyDelete
  3. nilacharal.com சரிதான். நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!