Sunday, April 22, 2007

பனி

வாராயோ என்றிருந்து வந்துவிட்டாய் நாள்கடந்து
பாராயோ என்னும்படி பாந்தமுடன் -- சீராக
இரவிலே புல்தரைப் போர்வையா யெங்கும்
பரவி விழுந்தாய் பனி

வெண் தொப்பி வாகனங்கள் விரையும்
வெண் தண்டவாளத் தார்ச்சாலை -- கண்படும்
வெண் பஞ்சுப் புல்தரை உச்சிமர
வெண் கிளைகளாய்ப் பனி

துள்ளி யோடுஞ் சிறார் கைநிறைய
அள்ளி யெடுத் தெறிய -- முள்ளைத்
தள்ளி விரையும் மாந்தர்மேல் விழும்
புள்ளி புள்ளியாய்ப் பனி

குஷியாகக் குழந்தைகளும் களமிறங்கிக் கவனமாய்
வீசியடித்த வெண் குவியல் -- பேசியே
பூசிமுடித்த பனிமனிதன் சூரியன் வரவாலே
கசிந்தோடிக் கரைந்த பனி

மீண்டும் எப்போது வருவாயோ சற்று
நீண்ட நாட்கள் உறைவாயோ -- என்றேங்கியே
உன்வரவு காணக் கண்விழித்துக் காத்திருப்பது
சின்னஞ் சிறாரின் பணி

-----

வெண்பா எழுதும் ஆசை என்னையும் தொற்றிக்கொண்டது, அதன் விளைவாய் எழுதியது, சற்று காலதாமதாய் வெளியிடுகிறேன். நிறையோ, குறையோ உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

10 comments:

  1. அழகாக வந்திருக்கிறது பனி. வெண்பாவின் தளை விவகாரங்களேல்லாம் மறந்துவிட்டது. ஆனால் கலிஃபோர்னியாவிலிருந்து இங்கு வீட்டை மாற்றி வந்து பனியை ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் என் நண்பனின் ஐந்து மகளிடம் இந்த கவிதையை படித்துக் காண்பிக்க தயக்கமாக இருக்கிறது :-)

    ( தளை தெரிந்தால்தானே மறப்பதற்கு என்கிறீர்களா, அதுவும் சரிதான். உமாபதி வாத்தியார் பிரம்பை தொடாத மனிதர். தொட்டிருந்தால் இன்றைக்கு தெரிந்திருக்குமோ என்னவோ)

    ReplyDelete
  2. எனக்குப் பிடிச்சது முதலும், கடைசியும். இரண்டாவது அழகான கற்பனை. எனக்கும் வெண்பா இலக்கணம் எல்லாம் தெரியாது. ஆனால் பனி படிக்கச் சுகம்.

    ReplyDelete
  3. சதாங்கா,

    அறுமையான கவிதை.

    நாகு, கவிநயா - என்னது வெண்பா தெரியாதா, சரி. நமக்கு தெரியலைன்னா என்ன,
    சதாங்காவுக்குத் தெரியுமே, அவுங்கள எழுதச் சொல்லி ரசிப்போம். நாமதான் (என்னைத்தான்
    கொஞ்சம் தன்னடக்கதுல பன்மைல சொல்லிகிட்டேன்) ரசிக்கரதுல கில்லாடி ஆச்சே.

    சதாங்கா: கடைசி வரி 'சின்னஞ் சிறாரின் பனி'-ல் 'பனி' சரியா அல்லது 'பணி' சரியா?

    நாகு - கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருக்கும் உங்கள் நண்பனின் ஐந்து மகளா, ஐந்து வயது மகளா?
    சரியா சொல்லுமையா, குடும்பத்தில கலகம் வந்திடப் போகுது. (அடடா,பத்த வெச்சுட்டியே பரட்டை).

    நிறைய எழுதுங்கள்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  4. முரளி,

    என் எழுதாத சொல் பிழை இருக்கட்டும். அந்த வீட்டுப் பக்கம் கொஞ்ச நாள் தலை காமிக்கமுடியாத மாதிரி பண்ணிட்டீரே...


    // அறுமையான கவிதை //

    அறு'வில் ஆரம்பிச்சதால வேற எதோ சொல்ல வந்த மாதிரி இருக்கு ;-)



    அவர்தான் சதங்கான்னு கூப்பிடுங்கப்பான்னு சதாய்ச்சாரே கவனிக்கலயா?

    தெலுங்கு பேபிகளை கவனித்துவிட்டு உமக்கு என்ன ஃபார்முலா போடுகிறார் என்று கவனிப்போம்.

    (அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு).

    ReplyDelete
  5. நன்றி கவிநயா. அழகாகப் பிரித்து வகைப்படுத்தி பாராட்டியமைக்கு.

    ReplyDelete
  6. நாகு,

    படைப்பாளிக்கு பக்க பலம் பாராட்டு. பாராட்டுதலுக்கு முதற்கண் நன்றி.

    சிறுசுகளுக்கு கவிதை எழுதத் தனித்தன்மை வேண்டும். எளிமையாய்த் தோன்றினாலும் அது கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ரொம்ப அப்படி இலக்கணம் தெரிஞ்ச மாதிரி வெண்பா எழுதி தப்பிச்சிக்கறது :)

    ReplyDelete
  7. நாகு,

    'று' போட்டதற்கு காரணம் எழுத்துப் பிழைதான். எனக்குதான் வெண்பா, தளை எதுவும் தெரியாது என்று உங்களுக்குத் தெரியுமே.

    சதாங்கா, உங்கள் பதிப்பில் இப்படி பின்னூட்ட வேடிக்கை செய்வதை கண்டு வருந்த வேண்டாம். பிடிக்கவில்லையெனில் முதலில் தமிழ் சங்கத் தலைவரை சாடி ஒரு பதிப்பு போட்டு விடுங்கள்.

    (நாகு: இது எப்படி இருக்கு)

    - அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  8. பத்த வச்ச பரட்டையின் பாராட்டுதலுக்கு நன்றி.

    பிழை சுட்டிக் காட்டிய
    முரளிக்கு மனமார்ந்த நன்றி.

    அது figuslip-னு சொல்லி நான் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை. எல்லாம் 'பனி' என்று முடியற மாதிரி வரவே, கவனக்குறைவால் செய்த தவறு.

    தொடருங்கள் உங்கள் பணியை ;-)

    ReplyDelete
  9. finger திரும்பவும் slip ஆயிடுச்சி. finguslip என்று வந்திருக்க வேண்டும்.

    முரளி, ஒரே பிடிவாதாமாய் இருக்கிறீர்களே. குறுக்கால் வரும் காலை எடுத்து சதங்கா என்று திருத்திக் கொண்டால் ரொம்ப சந்தோசமாய் இருக்கும்.

    ReplyDelete
  10. சதங்கா,

    என்னமோ போங்க, உங்க படைப்புகள்
    பாதிச்சமாதிரி உங்க பேர் பாதிக்கலை.
    (அப்பாடா இந்த முறை கீழ விழுந்ததில மீசைல மண் ஒட்டல, நாகு வந்து திரும்பவும் என் கால பிடுங்காம இருக்க செய்யனுமோ).

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!